Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு எக்ஸ்பிரஸ் வண்டியில் - பொன்மலை பரிமளம்

Featured Replies

ஒரு எக்ஸ்பிரஸ் வண்டியில் - பொன்மலை பரிமளம்

 

 
express_s

திருச்சிராப்பள்ளி ரயில்வே சந்திப்பு. இரவு எட்டு மணி ‘அப்பர் கிளாஸ் வெயிட்டிங் ரூமில்’ ஒரு பெண் தனியாகச் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு ஓர் ஆங்கில வார இதழைப் படித்துக் கொண்டிருந்தாள். அவளுக்குப் பக்கத்தில் கறுப்பு நிறத்தில் ஒரு சூட்கேஸ் இருந்தது.

பிளாட்பாரத்தில் சென்று கொண்டிருந்த ஜம்பு, வெயிட்டிங் ரூமிலிருக்கும் அந்தப் பெண் யாரென்பதை வாசலுக்கு எதிரே நின்று கொண்டு சிகரெட் பற்ற வைப்பது போல் ஓரக் கண்ணால் பார்த்தான். அவள் அவனைக் கவனிக்கிறாள் என்று தெரிந்ததும் மெதுவாக நகர்ந்தான்.

‘டிக்கெட் வாங்கிட்டேன் பாப்பா…..வா, போகலாம்’ என்று ஒரு தாடிக் கிழவன் அந்தப்பெண்ணை அழைத்தான். கிழவன் ஸூட்கேஸை எடுத்துக் கொள்ள அவள் ஒய்யாரமாக அந்த வாரப் பத்திரிகையைச் சுருட்டிப் பிடித்துக் கொண்டு பிளாட்பாரத்தில் நடந்தாள்.

சென்னை செல்லும் தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் வந்தது. இரண்டாவது வகுப்புப் பெட்டியைத் தேடிக் கிழவனும் அவளும் சென்றார்கள். சனிக்கிழமையானதால் வண்டியில் கூட்டம் அதிகமாகவே இருந்தது.

அவள் இரண்டாவது வகுப்புப் பெட்டியில் ஏறி அமர்ந்து கொண்டாள். உட்காரும் அளவிற்கு இடம் இருந்தது. சிறிது நேரத்தில் ஒரு வாலிபனும் அதே பெட்டியில் ஏறினான். அவனை ஏற இறங்கப் பார்த்தாள் அவள்.

ஒழுங்காக வாரப்பட்ட கிராப். வட்டமான முகம். அலட்சியமான பார்வை. அரும்பு மீசை. டெர்லின் ஸ்லாக், டெரிகாட்டன் பேண்ட், காலில் கான்பூர்க் காலணி, கையில் கடிகாரம், சட்டைப் பாக்கெட்டிற்குள் ஒரு பத்து ரூபாய் நோட்டும் ரயில்வே டிக்கெட்டும் நன்றாகத் தெரிந்தன.

அவன் கொண்டு வந்த சூட்கேசைப் பார்த்ததும் தன்னுடைய சூட்கேசைப் பார்த்தான். இரண்டின் நிறமும் கறுப்பு. அவள் தனக்குள் சிரித்துக் கொண்டாள்.

அவன் தனது சூட்கேசை, ‘சாமான்களுக்கு மட்டும்’ என்ற இடத்தில் வைத்தான். அந்த இடத்தை யாரும் ஆக்ரமிக்காத அளவிற்கு அங்கு சில சாமான்கள் அடைத்துக் கொண்டிருந்தன.

அவளுக்கு எதிரிலிருந்த ஆசனத்தில் உட்கார்ந்திருந்த அவன், அவளைப் பார்த்தான். அவள், தன் பார்வையைப் புத்தகத்தின் பக்கம் திருப்பினாள்.

அன்று மலர்ந்த ரோஜா நிறமேனி, சிரித்த முகம், சுழலும் கண்கள், அமைதியான பார்வை. செம்மை படர்ந்த கன்னக் கதுப்புகள்; மெல்லிய டிவின்கிள் நீலநிற சாரியின் பளபளப்பு. சாரிக்கு மேட்சான அதே நிறத்தில் இறுக்கமான ப்ளவுஸ்; அவள் பருவத்தின் பூரிப்பு கவர்ச்சியை எடுத்துக் காட்டியது. அழகே உருவான அவள் வார இதழைப்படித்துக் கொண்டிருந்தாள்.

அவன் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கவனித்த அவள் தன் பக்கத்திலிருக்கும் சூட்கேஸைப் பார்த்தாள் எங்கே வைப்பதென்று யோசித்தாள். அவன் சொன்னான்.

‘சூட்கேஸைக் கீழேயே வைத்திருக்கிறீர்களே? இப்படி மேலே வைத்தால் உங்களுக்குச் செளகரியமாக இருக்குமே?’

‘ஆமாம். எப்படி வைப்பது என்று தான்….’

‘ஓ! கனமாக இருக்கிறதா?’ என்று சூட்கேசை எடுத்து தன் சூட்கேஸ் மேல் வைத்தான்.

‘அடேயப்பா மிகவும் கனமாக இருக்கிறதே! உள்ளே ஏதாவது தங்கக் கட்டிகள் இருக்கின்றனவா?’ என்றான் சிரித்துக் கொண்டே.

‘அதெல்லாம் ஒன்றுமில்லை. எல்லாம் எனது டிரஸ்கள் நிரைய இருக்கின்றன. அத்துடன்…’ என்று ஏதோ சொல்ல வந்தவள் ‘டக்’என்றூ நிறுத்திக் கொண்டு தன் சூட்கேஸைப் பார்த்தாள்.

‘என்ன பெட்டியை அப்படிப் பார்க்கிறீர்கள்? என் பெட்டி மேல் தான் உங்கள் பெட்டியிருக்கிறது. ஒன்றும் கெட்டுவிடாது’ என்றான்.

‘அதற்கில்லை, பெட்டி மேலே இருப்பதால், யாராவது எடுத்து விட்டால்…’ என்று சொன்னவள் ‘இப்படித்தான் போன சனிக்கிழமை யாரோ ஒருவன் பெட்டியை எடுத்துக் கொண்டு போய்விட்டானாம்! பேப்பரில் பார்த்தேன்’ என்றாள்.

‘ஆமாம்….ஆமாம்…நானும் பார்த்தேன். பெட்டியை மாற்றியவர்கள் அவன் விட்டுச் சென்ற பெட்டியில் ஏதோ பழைய நியூஸ் பேப்பர் தான் இருந்ததாம்! எதற்கும் நாம் கவனமுடன் இருக்க வேண்டும்’ என்றான்.

‘இந்தாம்மா பால்’ என்று தாடிக்காரக் கிழவன் உள்ளே வந்து அவளிடம் ஒரு பால் புட்டியைக் கொடுத்தான். அவள் நாசுக்காக பாலைப் பருகி விட்டுக் கிழவனிடம் பாட்டிலைக் கொடுத்தாள்.

‘ஜாக்கிரதை அம்மா. நாளைக் காலையில் மெட்ராஸ் சென்றதும், அப்பா சொன்னது போல் பணத்தை அவரிடம் கொடுத்து விடுங்கள். பாவம், அவர் வீடு கட்டிக் கொண்டிருக்கிறாம்’ என்றவன் ‘சார் எதுவரையிலும்?’ என்றான் கிழவன்.

‘நானா? விழுப்புரம் வரையில் போகிறேன்’

‘ஓகோ! சாருக்கு அங்குதான் ஜோலியோ?’ கிழவன் அவனைத் துளைத்து எடுக்க ஆரம்பித்தான்.

‘இவன் யாரடா, ரதி பூஜையில் விதி வந்து குறுக்கிட்டது போல்’ என்று நினைத்த அவன் ‘ஆமாம் ஆபிஸ் விஷயமாகப் போகிறேன்’ என்றான் சலிப்புடன்.

‘என்னவோ சார், பாப்பாவை நீங்கள் விழுப்புரம் போகும் வரையில் பார்த்துக் கொள்ளுங்கள்.’ என்று இருபது வயதை விழுங்கிக் கொண்டிருக்கும் அந்தப் பாப்பாவைப் பற்றி சொல்லிக் கொண்டிருக்கையில் மணி அடிக்கும் ஓசை கேட்கவே, ‘நான் வர்றேன்மா வண்டி புறப்படப்போகுது போல இருக்கு…போனதும், கடுதாசி போடம்மா. ஜாக்கிரதையம்மா…பெட்டியிலே ஐயாயிரம் இருக்கு. ஜாக்கிரதை….உம்…என்று எச்சரித்துவிட்டுக் கீழே இறங்கினான் கிழவன்.

ரயில் பிளாட்பாரத்திலிருந்து மெதுவாக நகர்ந்தது.

‘அடேயப்பா, உங்கள் பெட்டியில் ஐயாயிரம் இருப்பதற்உ இப்படி எச்சரிக்கிறாரே, என் பெட்டியில் பத்தாயிரம் இருக்கிறது. நான் கவலையாபடுகிறேன்?’ என்றான் டெர்லின் சர்ட் பெருமையாக.

‘நீங்கள் ஆன் பிள்ளை!’ என்று சிரித்தாள் டிவிங்கிள் நைலான்.

அவள் கையில் வைத்திருந்த ஆங்கில வாரப் பத்திரிகையின் நடுவே ஒரு புகைப்படத்தை வைத்திருந்தாள். அந்தப் புகைப்படத்தைப் பார்த்துக் கொண்டே எதிரே உட்கார்ந்திருப்பவன் தன்னைப் பார்க்கிறானா என்று சாடையாகக் கவனித்தாள். அவன் அவளையே வெறித்துப் பார்ப்பதைப் பார்த்ததும், புத்தகத்தை மூடிவிட்டுக் கண்களை மூடினாள்.

ரயில் ஓடிக் கொண்டிருந்தது.

இரவு ஒரு மணிக்கு மேலிருக்கும். வண்டி குலுங்குவது போலிருந்தது. கண் விழித்தாள். வண்டி நின்றிருந்தது. சன்னல் வழியாகப் பார்த்தாள். விழுப்புரத்தில் ரயில் நின்றிருந்தது. எதிரே இருந்தவனைப் பார்த்தாள். அவனைக் காணவில்லை. ஒரே ஒரு பெட்டி மட்டும் இருந்தது. சிரித்துக் கொண்டாள்.

வண்டியிலிருந்த அவன், அவள் இடத்தில் சொல்லிக் கொள்ளாமல் இறங்கிப்போய்விட்டான். ஒரு வேலை அவள் அசந்து தூங்குவதாலா? இல்லை ரயில் சிநேகிதமே இப்படித்தானோ?

விழுப்புரத்தில் இறங்கிய அவன் நேராக ஒரு லாட்ஜிற்குச் சென்று ரூம் எடுத்தான். கட்டிலில் சூட்கேசை வைத்தவன் குளிர்ந்த காற்று அடிக்கவே கதவை நன்றாக மூடிவிட்டு அதைத் திறந்தான்.

அவன் முகம் விகாரமாக மாறியது. உள்ளே உடைகளைக் காணவில்லை. பணத்தையும் காணவில்லை. அதற்குப் பதில் காகிதத்தில் சுருட்டி வைக்கப்பட்ட அரைச் செங்கற்கள் இருந்தன. ஆகா பெட்டி மாறிவிட்டது. அவள் மாற்றீ விட்டாளா?

கடிகாரத்தைப் பார்த்தான். மணி மூன்று. வண்டி இந்நேரம் புறப்பட்டுப் போயிருக்குமே? உம் இப்பொழுது என்ன செய்வது? யோசித்தான். ஏமாற்றத்தின் சாயல் அவன் முகத்தில் தெரிந்தது.

அப்பொழுது கதவு தட்டப்படும் சத்தம் கேட்க, பீதியோடு பெட்டியை மூடிவிட்டு கதவைத் திறந்தவன் திடுக்கிட்டு நின்றான். அவன் எதிரில் அவனுடன் பிரயாணம் செய்து கொண்டிருந்த ‘அவள்’ கையில் சூட்கேசுடன் நின்று கொண்டிருந்தாள். அவளிடம் என்ன சொல்வது என்ன கேட்பது? என்று தெரியாமல் அவன் விழித்துக் கொண்டிருக்கையில் தாடிக்காரக் கிழவனுடன் போலீஸ் அதிகாரிகள் அங்கு வருவதைக் கண்டு பிரமித்தான்.

‘மிஸ்டர்! கையை நீட்டுகிறீர்களா?’ என்று விலங்கை எடுத்தார் போலீஸ் இன்ஸ்பெக்டர்.

‘ஏன்?’ என்றான் டெர்லின் சர்ட் பதற்றத்துடன்.

‘ஏனா?’

தாடிக்காரக் கிழவன் சொன்னான் ‘கடந்த மூன்று மாதங்களாகப் பெரிய மனிதன் போல் வேடம் போட்டு யார் என்ன பெட்டி கொண்டு வருகிறார்களோ, அதே போல் பெட்டியை வாங்கிக் கொண்டு, அவர்கள் ஏறும் ரயில் பெட்டியில் ஏறி, நடுவில் பெட்டியை மாற்றிக் கொண்டுச் செல்லும் ஆசாமியைப் பற்றிப் புகார்கள் வந்தன. அந்த பலே ஆசாமியைத் தேடினோம் கிடைக்கவில்லை. அந்தத் திருட்டு நடப்பது சனிக்கிழமை இரவில் மட்டும் தான். அதுவும் திருச்சிக்கும் சென்னைக்கும் இடையில் தான் நடக்கிறது.

கடைசியாக பெட்டியை மாற்றியது அதாவது திருடியது ஓர் ஆர்ட் டைரக்டரிடம். அவர் சந்தேகத்தின் பேரில் ஓர் உருவத்தை வரைந்து கொடுத்தார். அது நீயாக இருக்கிறார். அதன் பேரில் உன்னை இன்று சந்தேகப்பட்டுப் பின் தொடர்ந்தோம். வசமாகக் கையும் களவுமாகச் சிக்கிக் கொண்டாய். மாற்றி வைத்துச் சென்றாயே ஒரு சூட்கேஸ் அதில் என்ன இருக்கிறதோ அதே தான் இன்றூ இந்த பெட்டியிலும் இருக்கிறது! பாவம்! ஏமாந்து விட்டாய்! என்ன இவளை அப்படிப் பார்க்கிறாய்? இவள் என் மகள் லீலா’ சொல்லிக் கொண்டே தாடிக்காரக் கிழவன் தன் வேடத்தைக் களைந்தான்.

அவர் ஒரு சி.ஐ.டி ஆபிஸர் என்பது அப்பொழுதுதான் அந்த டெர்லின் சர்ட்டுக்குப் புரிந்தது.

தினமணி கதிர் 20.3.1970

http://www.dinamani.com/

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.