Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெயலலிதா பரிசளித்த பிரசார காரை நாஞ்சில் சம்பத் திருப்பி கொடுத்தார்

Featured Replies

ஜெயலலிதா பரிசளித்த பிரசார காரை நாஞ்சில் சம்பத் திருப்பி கொடுத்தார்

 

 
 

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பரிசளித்த இனோவா காரை நாஞ்சில் சம்பத் இன்று அ.தி.மு.க. தலைமை கழகத்தில் தனது நண்பர் மூலம் ஒப்படைத்துள்ளார்.

 
 
 
 
ஜெயலலிதா பரிசளித்த பிரசார காரை நாஞ்சில் சம்பத் திருப்பி கொடுத்தார்
 
சென்னை:

அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணை செயலாளராக இருப்பவர் நாஞ்சில் சம்பத். 2 ஆண்டுகளுக்கு முன்பு ம.தி.மு.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் சேர்ந்தவர்.

அப்போது அவரது பிரசார பயணத்துக்காக ஜெயலலிதா இனோவா காரை பரிசாக வழங்கினார்.

இந்த காரில் நாஞ்சில் சம்பத் அ.தி.மு.க. பிரசார கூட்டங்களுக்கு சென்று பிரசாரம் மேற்கொண்டார்.

ஜெயலலிதா மறைவை தொடர்ந்து நாஞ்சில் சம்பத் அ.தி.மு.க. கூட்டங்கள், நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் ஒதுங்கி இருக்கிறார். தி.மு.க. சேருவார் என்று பேசப்படுகிறது.

இந்த நிலையில் ஜெயலலிதா பரிசளித்த இனோவா காரை நாஞ்சில் சம்பத் இன்று அ.தி.மு.க. தலைமை கழகத்தில் ஒப்படைத்தார். தனது நண்பர் மூலம் காரை ஒப்படைத்துள்ளார்.

இதுபற்றி நாஞ்சில் சம்பத் ‘மாலைமலர்’ நிருபரிடம் கூறியதாவது:-

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அ.தி.மு.க. பிரசாரத்துக்காக எனக்கு இனோவா காரை வழங்கி இருந்தார். அதை கட்சி நிகழ்ச்சிகளுக்கு மட்டும் பயன்படுத்தினேன். எனது சொந்த உபயோகத்திற்கு எடுத்தது இல்லை.

கடந்த 8 மாதமாக பிரசாரம் எதுவும் இல்லை. அதனால் கார் சும்மா நின்று கொண்டு இருந்தது. இதனால் அந்த காரை இன்று நண்பர் மூலம் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் ஒப்படைத்து விட்டேன்.

கேள்வி:- அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்று உள்ளார். அடுத்து முதல்- அமைச்சராகவும் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று பலர் வற்புறுத்துகிறார்கள். இதுபற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:- அது அவர்களது நடவடிக்கையை பொறுத்து அமையும்.

கே:- சசிகலா செல்லும் பாதை நல்ல திசை நோக்கி செல்கிறதா?

ப:- தெரியவில்லை. இப்போது எதுவும் சொல்ல இயலாது.

ப:- தை பிறந்தால் வழி பிறக்கும்.

ப:- எந்த முடிவும் எடுக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/01/03114635/1059809/Nanjil-Sampath-Return-to-Jayalalithaa-gift-Innova.vpf

  • கருத்துக்கள உறவுகள்

இனோவா சம்பத் என்று அழைக்க பட்ட தாங்கள்.....
இனி பென்ஸ் சம்பத் என்று அன்போடு அழைக்கபடுவாய்..:cool:

  • தொடங்கியவர்

வான்கோழி ஒரே நாளில் மயில் ஆகிவிட்டதாம்...! சசிகலா தலைமைக்கு குட்பை சொன்ன நாஞ்சில் சம்பத்

சம்பத்

.தி.மு.க மேடைகளில் இதுவரை ஜெயலலிதா புராணம் பாடி வந்த நாஞ்சில் சம்பத்... இப்போது, 'சசிகலா புகழ்பாட தயாராக இல்லை' என்று வெளிப்படையாகவே அறிவித்துவிட்டார். அ.தி.மு.க-வுக்கு குட்பை சொன்ன அவர் இனி எங்கே செல்வார்?

 தி.மு.க மேடைகளில் முழங்கி வந்த நாஞ்சில் சம்பத், ம.தி.மு.க என்றொரு கட்சியை வைகோ தொடங்கியபோது அவரோடு சென்று அந்த கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக ஊர் ஊராகச் சுற்றி வந்தார். 19 ஆண்டுகள் வைகோவின் நிழலாக வலம் வந்து கொண்டு இருந்த நாஞ்சில் சம்பத், 2012-ம் ஆண்டு அந்த கட்சியில் இருந்து வெளியேறினார். 

அப்போது அ.தி.மு.க தரப்பில் இருந்து நாஞ்சில் சம்பத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தி.மு.க.விலும் பேசினார்கள். ‘அரசியல் மேடையே வேண்டாம். இலக்கியம் பேசி இனி இருக்கும் எஞ்சிய நாட்களை கழிக்கப்போகிறேன்’ என்று சொல்லிவிட்டு நிறைய பட்டிமன்ற கூட்டங்களில் பிஸியானார். ஆனால், ஆளும்கட்சியாக இருந்த அ.தி.மு.க அவருக்கு தூது மேல் தூதுவிட்டது. ஜெயலலிதாவே போன் போட்டு அவரை அழைத்தார். மறுப்பு சொல்ல முடியாமல் அந்தக் கட்சியில் சேர்ந்தார். கட்சியில் சேர்ந்த அன்றே அவருக்கு கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவி தரப்பட்டது.

அ.தி.மு.க வரலாற்றிலேயே இல்லாத வகையில், தமிழகம் முழுவதும் நாஞ்சில் சம்பத் கழகப்பணியாற்ற வசதியாக இனோவா கார் ஒன்றையும் கொடுத்தார் ஜெயலலிதா.  கூடவே, காருக்கான எரிபொருள் மற்றும் பராமரிப்புச் செலவையும் ஒவ்வொரு மாதமும் தலைமைக் கழகமே கொடுத்துவிட வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

nanjil_sambath_long_1_15273.jpghqdefault_%282%29_15474.jpg

இதையடுத்து மீண்டும் சுறுசுறுப்பானார் நாஞ்சில் சம்பத். அ.தி.மு.க மேடைகளில் முழங்கினார். ஜெயலலிதா புகழ்பாடினார். 2015-ம் ஆண்டு, ஜெயலலிதா கைதாகி விடுதலை ஆன பிறகு நடந்த பொதுக்குழு கூட்டம் குறித்து தனியார் டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘‘எறும்புகள் சாகிறதே என்று யானைகள் நடக்காமல் இருக்க முடியாது’’ என்று அவர் கூறியது விவாதப்பொருளானது. இதையடுத்து கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. அதன்பின்னர், சில மாதங்களில் கட்சியின் செய்தி தொடர்பாளர் பதவியை கொடுத்தார் ஜெயலலிதா. மீண்டும் மேடைகளில் அ.தி.மு.க பிரசார பீரங்கியாக வலம் வந்தார் சம்பத். 

ஜெயலலிதா மீது மிகுந்த மரியாதையும் மதிப்பும் வைத்திருந்த நாஞ்சில் சம்பத், ஜெ. இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் கறுப்பு சட்டை அணிந்து வந்து ஜெயலலிதா உடல் முன்பு விழுந்து வணங்கி கதறி அழுது தனது கண்ணீர் அஞ்சலியை செலுத்தினார். இறுதி ஊர்வலத்தின் போது கூட்டத்தோடு கூட்டமாக வாலாஜா சாலையில் நின்று ஜெயலலிதாவுக்கு விடைகொடுத்தார். 

இந்த நிலையில், ஜெயலலிதா நினைவிடத்தின் ஈரம் காய்வதற்குள்ளேயே மதுசூதனன், ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், சைதை துரைசாமி போன்றவர்கள் போயஸ் கார்டன் சென்று, கட்சிக்கு தலைமை ஏற்க வருமாறு சசிகலாவுக்கு அழைப்பு விடுத்தனர். அந்தக் கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் தலையைக் காணவில்லை. இதுகுறித்து அவரிடம் கேட்ட போது, ‘‘அ.தி.மு.க பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள சசிகலா அம்மையாருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். சசிகலாவுக்கு மட்டுமே தலைமை தாங்கத் தகுதி உள்ளது என்று முடிவெடுத்துவிட்டார்கள். அவரை ஏற்றுக் கொள்வதற்கான எந்த தகுதியும் எனக்கு இல்லை. விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்!’’ என்று கூறினார்.

தற்போது நாஞ்சில் சம்பத் அ.தி.மு.கவில் இருந்து வெளியேறிவிட்டார். ஜெயலலிதா கொடுத்த காரையும் திருப்பிக் கொடுத்துவிட்டார். இனி எங்கே செல்வார் நாஞ்சில் சம்பத்? தி.மு.க பொதுக்குழு ஜனவரி 4-ம் தேதி கூடுகிறது. அங்கே பார்க்கலாமா?

http://www.vikatan.com/news/politics/76729-nanjil-sampath-bids-goodbye-to-sasikala-led-admk.art

  • தொடங்கியவர்

“தவிடு நெல்லாகிவிட்டது... வான்கோழி மயிலாகிவிட்டது!”

மாற்றுப் பாதையில் நாஞ்சில் சம்பத்!

 

நாஞ்சில் சம்பத் தனது அடுத்த நகர்வைத் தொடங்கி விட்டார். அ.தி.மு.க-வில் இருந்து விலகும் முடிவுக்கு வந்துவிட்டார்.

ஜெயலலிதா மறைந்தபோது வந்து கதறி அழுத நாஞ்சில் சம்பத், அதன்பிறகு சொந்த ஊருக்குப் போய்விட்டார். சசிகலாதான் அடுத்து பொதுச்செயலாளர் ஆக வேண்டும், முதலமைச்சர் ஆக வேண்டும் என்று தினமும் நிர்வாகிகள் போயஸ் கார்டனுக்கு வந்து கோரிக்கை வைத்த கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் இல்லை. இந்த நிலையில், அவரை நாம் தொடர்புகொண்டு கேட்டபோது, சசிகலாவை ஏற்காத மனநிலையில் நாஞ்சில் சம்பத் பேசினார். 28.12.2016 தேதியிட்ட இதழில் அந்தப் பேட்டியை நாம் வெளியிட்டு இருந்தோம். ‘‘அம்மாவால் ஏற்பட்ட வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது” என்று சொல்லி இருந்தார். சசிகலாவை ஆதரிக்கும் நிலையில் அவர் இல்லை என்பது தெரிந்தது. ‘‘ஜெயலலிதா மரணத்தில் அவிழ்க்க முடியாத மர்மங்கள் இருக்கின்றன” என்றும் அந்தப் பேட்டியில் சம்பத் சொல்லி இருந்தார். இது சம்பந்தமான சசிகலா புஷ்பாவின் வழக்கால் உண்மை வெளிவர வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருந்த நாஞ்சில் சம்பத், ‘‘ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் பேட்டியில் முதிர்ச்சி இருக்கிறது’’ என்றும் சொல்லி இருந்தார். இவை அனைத்துமே சசிகலாவுக்கு எதிரான நிலைப்பாடுகள். இந்தப் பேட்டிக்குப் பிறகு அவரை தொடர்புகொள்ள அ.தி.மு.க தலைமைக் கழகம் துடித்தது.

p8a1.jpg

‘நடராசன் பேசணும்னார், தினகரன் பேசணும்னார்’ என்று பலரும் தொடர்புகொள்ள முயற்சித்தும் யாருக்கும் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில், தி.மு.க தரப்பும் அவரை தொடர்புகொள்ள முயற்சித்தது. அவர்களிடமும் சிக்கவில்லை. தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறாரா, மாறிவிட்டாரா, அ.தி.மு.க-வில்தான் இருக்கிறாரா, இல்லையா என்று தெரியாத மர்மம் நீடித்தது.

சசிகலா பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், மீண்டும் நாஞ்சில் சம்பத்தைத் தொடர்புகொண்டோம்.

‘‘எனது பதிலை எழுதி அனுப்புகிறேன்” என்று சொன்ன நாஞ்சில் சம்பத், அடுத்த அரைமணி நேரத்தில் அனுப்பியது அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. அந்த இரண்டு பக்கக் கடிதம் இதுதான்:

‘‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்று இருக்கின்ற சசிகலா அம்மையாருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்!

ஒன்றரைக் கோடி உறுப்பினர்கள், 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள், 135 சட்டப்பேரவை உறுப்பினர்கள், சபாநாயகர், அமைச்சர்கள், மேயர்கள் என அதிகாரத்தின் உச்சம் தொட்ட அனுபவசாலிகளைக்கொண்ட ஒரு பெரிய அமைப்பில் பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்க சசிகலாவுக்கு மட்டுமே தகுதி உண்டு என்று பொதுக்குழு உறுப்பினர்கள் முடிவெடுத்து இருப்பது 2016-ம் ஆண்டின் மிகப்பெரிய சோகம். இந்த சோகத்தில் நான் என்னைக் கரைத்துக்
கொள்ள விரும்பவில்லை. மனதைக் கல்லாக்கிக் கரைந்துகொள்ள என் மனம் கல்லாகிவிடவில்லை.

சசிகலாவை பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுத்துவிட்டார்கள் என்று என்னிடம் தகவல் சொன்ன நண்பன், ‘சசிகலாவின் ஜாதகம் நன்றாக இருக்கிறது’ என்றும் சொன்னான்.

‘அ.தி.மு.க-வின் ஜாதகம் சரியாக இல்லையே?’ என்று நான் சொன்னேன். எம்.ஜி.ஆர். ரசிகர்களின் கொள்ளிடமாக இருக்கின்ற ஓர் அமைப்புக்குத் தலைமை தாங்கும் தகுதி சசிகலாவுக்கு பத்து சதவிகிதம் அல்ல, ஒரு சதவிகித
மாவது இருந்திருக்க வேண்டாமா? வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் நாட்டை ஆளலாம் என்று எந்த நாடாளுமன்றம் தீர்மானம் போட்டுள்ளது?

சசிகலாவுக்கு மட்டுமே தலைமை தாங்கத் தகுதி உண்டென்று முடிவெடுத்துவிட்டார்கள். நிழல் நிஜமாகிவிட்டது. தாழ்வாரம் வீடாகிவிட்டது. தவிடு நெல்லாகிவிட்டது. பொல்லாச் சிறகுள்ள வான்கோழி ஒரேநாளில் தோகை மயிலாகிவிட்டது. தமிழ்நாட்டில்தான் இப்படி நடக்கும். அதுவும் அ.தி.மு.க-வில்தான் இப்படியெல்லாம் நடக்க முடியும்.

யார் உட்கார்ந்த நாற்காலியில் யார் உட்காருவது என்பதை நினைத்தாலே தூக்கம் வரவில்லை.

திரெளபதியை சூதாட்டத்துக்குப் பாண்டவர்கள் பணயமாக வைத்ததைப் பாடிய பாரதி எழுதியைத்தான் தமிழக மக்களுக்கு நினைவூட்டத் தோன்றுகிறது.

‘வேள்விப் பொருளினையே -புலைநாயின் முன்
மென்றிட வைப்பவர் போல்
நீள்விட்ட பொன்மாளிகை - கட்டிப்பேயினை
நேர்ந்துகுடியேற்றல் போல்
ஆள்விற்றுப் பொன் வாங்கியே - செய்த
பூணையோர்
ஆந்தைக்குப் பூட்டுதல் போல்’
-

என்று ஆவேசப்பட்டான் பாரதி. ‘செருப்புக்குத் தோல் வேண்டியே இங்குக் கொல்வரோ செல்வக் குழந்தையினை’ என்றும் கொந்தளித்தான் பாரதி. இந்தக் கொந்தளிப்பும் குமுறலும் எதையும் அனுபவித்து அறியாத அப்பாவித் தொண்டனிடம் இருப்பதை அடியேன் அறிவேன். நெஞ்சில் குடிகொண்டிருப்பதை நேரில் பார்த்தும் கேட்டும் தெரிந்துகொண்டேன்.

தரைதட்டி நிற்கிறது அ.தி.மு.க-வும், தமிழக ஆட்சி நிர்வாகமும். அதைப்பற்றிய எந்தக் கவலையும் யாருக்கும் இல்லை. அரசு நிர்வாகம் ஓர் அனாதைக் குழந்தையைப் போல பரிதவித்து நிற்கிறது. பேரறிஞர் அண்ணா ஏற்றிவைத்த மாநில சுயாட்சித் தீபம் அணைந்தேவிட்டது.

p8.jpg

மாண்புமிகு முதலமைச்சர் கோட்டையில் கொலுவீற்று இருக்கும்போதே துணை ராணுவத்தின் உதவியோடு தலைமைச் செயலாளரின் அறை சோதனை போடப்படுகிறது. எதையோ எடுத்துவிட்டு வெளியேறுகிறது வருமானவரித் துறை. இதைப் பற்றிய கூச்சமே ஆட்சிப் பொறுப்பில் இருப்பவருக்கும் இல்லை. கட்சிப் பொறுப்புக்கு வந்திருப்பவருக்கும் இல்லை. 1,700 மைல்களுக்கு அப்பால் கொல்கத்தாவில் இருந்து இதைக் கண்டித்து ஒரு குரல் வருகிறது. ஆனால், கோட்டையில் இருந்த முதலமைச்சர் வாய்திறக்க மறுக்கிறார்.

நரேந்திர மோடியின் பண மதிப்பு இழப்பு நடவடிக்கையால் வங்கிகளின் வாசலில் காத்துக்கிடக்கிறார்கள் பொதுமக்கள். பரிவர்த்தனைக்குப் பணம் வேண்டும் என்று அனைத்து மாநில முதல்வர்களும் பொங்கி எழுகிறார்கள். ஆனால், எல்லாப் பணமும் இங்கே ரெட்டி வீட்டிலும் ராவ் வீட்டிலும் கொட்டிக் கிடக்கின்றன. ஆசீர்வதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் ரெட்டியும் ராவும். பாவம் தொண்டர்கள். பரிதாபத்தின் மடியில் தமிழகம் தள்ளப்பட்டுவிட்டது.
இதையெல்லாம் பார்த்துக்கொண்டு பொறியற்ற விலங்காக இருக்க முடியவில்லை. இருந்தால் நான் மனிதனல்ல.

சசிகலாவுக்கு மட்டும்தான் பொதுச்செயலாளர் ஆவதற்கான தகுதி இருக்கிறது என்றால், அவரை பொதுச்செயலாளராக ஏற்றுக்கொள்வதற்கான எந்தத் தகுதியும் எனக்கு இல்லை. எனவே, அ.இ.அ.தி.மு.க-வில் இருந்து விடைபெறுகிறேன். விடைபெறுவதன் மூலமாக மனநிம்மதி அடைகிறேன்”

...என்று நாஞ்சில் சம்பத் நமக்கு எழுதி அனுப்பி இருந்தார்.

நாஞ்சில் சம்பத் விலக முடிவெடுத்துவிட்டது தெரிகிறது. அவர் தி.மு.க-வுக்குச் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ‘சம்பத்தை சேர்த்துக்கொள்வதில் நமக்கு எந்தப் பிரச்னையும் இல்லையே?’ என்று ஸ்டாலின் சொன்னதாகவும் சொல்லப்படுகிறது. ஜனவரி 4-ம் தேதி தி.மு.க பொதுக்குழு. அப்போது இணையவும் வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது.

http://www.vikatan.com/juniorvikatan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.