Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, இளவரசி சிறைக்கு வெளியே சென்று திரும்பியதற்கான புதிய வீடியோ ஆதாரம்: கர்நாடக ஊழல் தடுப்பு பிரிவு போலீஸிடம் டிஐஜி ரூபா அளித்தார்

Featured Replies

பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, இளவரசி சிறைக்கு வெளியே சென்று திரும்பியதற்கான புதிய வீடியோ ஆதாரம்: கர்நாடக ஊழல் தடுப்பு பிரிவு போலீஸிடம் டிஐஜி ரூபா அளித்தார்

 

 
jailjpg

அதிமுக பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா மற்றும் அவரது உறவினர் இளவரசி ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையின் பிரதான வாயிலில் கையில் பைகளுடன் நுழையும் வீடியோ பதிவை கர்நாடக ஊழல் தடுப்பு பிரிவு போலீஸிடம், ஐபிஎஸ் அதிகாரி ரூபா அளித்துள்ளார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா அவரது உறவினர் இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும், போலி முத்திரைத் தாள் மோசடியில் கைது செய்யப்பட்ட அப்துல் கரீம் தெல்கிக்கும் விதிகளை மீறி அதிக சலுகைகள் வழங்கப்பட்டுள்ள தகவல் சிறைத்துறை டிஐஜியாக இருந்த ரூபாவின் ஆய்வில் தெரியவந்தது.

இதுதொடர்பான அறிக்கை மற்றும் 74 ஆதாரங்களையும் அப்போது சிறைத்துறை டிஜிபியாக இருந்த எச்.என்.சத்தியநாராயண ராவிடம் வழங்கினார். இது தொடர்பாக தொலைக்காட்சிகளில் தகவல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, ரூபா பெங்களூரு போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

இந்த விவகாரம் குறித்து ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய் குமார் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை, கர்நாடக ஊழல் தடுப்பு பிரிவிடம், புதிய வீடியோ ஆதாரம் ஒன்றை ரூபா அளித்துள்ளார்.

சிறையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியில், மத்திய சிறை வளாகத்தில் இருந்து உயர் அதிகாரிகளின் உதவியுடன், சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் வெளியில் சென்று திரும்பும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

 

புகைப்படம், வீடியோ

இது தொடர்பாக போலீஸ் வட்டாரங்கள் கூறும்போது, ‘சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயணா ஓய்வு பெற்ற ஜூலை 31-ம் தேதி ரூபாவுக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி ஊழல் தடுப்பு பிரிவு சம்மன் அனுப்பியிருந்தது. அவர் விசாரணைக்கு ஆஜராகி விளக்கமளித்த சில நாட்களுக்குப் பின், அவரிடம் சில கேள்விகளுக்கு விளக்கம் கோரினர். கடந்த சனிக்கிழமை கேள்விகளுக்கு விளக்கம் மற்றும் சில புகைப்படம், வீடியோ ஆதாரங்களையும் அவர் அளித்தார்.

இதுதொடர்பாக, ரூபாவை ‘தி இந்து’ வில் இருந்து தொடர்பு கொண்டபோது, அவர் சனிக்கிழமை ஆதாரங்களை அளித்ததை ஒப்புக்கொண்டார். மேலும், அந்த வீடியோ ஆதாரத்தில், சசிகலா, இளவரசி ஆகியோர் சில பைகளுடன், சிறையின் பிரதான வாயிலில் ஆண் காவலர்கள் முன்னிலையில் நுழைகின்றனர். அப்போது பெண்கள் சிறையின் கண்காணிப்பாளர் அவர்களுக்கு பாதுகாப்பாக உடன் செல்லும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

இது தொடர்பாக ரூபா கூறும்போது, ‘ஆண் காவலர்கள் பெண்கள் சிறை வளாகத்துக்குள் செல்ல அனுமதியில்லை. அவர்கள் பெண்கள் சிறையின் வெளியில் பிரதான வாயிலில் மட்டுமே பணியமர்த்தப்படுவார்கள். எங்கிருந்து சசிகலா வந்தார். அவரை யார் அனுமதித்தார்கள் என்பது விசாரிக்கப்பட வேண்டும்’ என்றார்.

 

பண ஆதாயம்

தற்போது விசாரணை ஆணையத்தின் தலைவரான வினய்குமாருக்கு இந்த வீடியோ விவகாரம் தெரியுமா என்ற கேள்விக்கு, ‘சிறைத்துறையின் தரவு தளத்தில் அனைத்து ஆதாரங்களும் உள்ளன. பண ஆதாயத்துக்காக குற்றவாளிகளுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டது குறித்து அதன் மூலம் தெளிவாகும். இது அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழல் தடுப்புச் சட்டப்படி குற்றமுமாகும். பெண்கள் சிறையின் உள்ளும், வெளியிலும் ஆண் காவலர்கள் இல்லை. எனவே, வெளியில் உள்ள சாலையில் இருந்து சிறைக்குள் நுழையும் பிரதான வாயில் வழியாகத்தான் இவர்கள் வந்துள்ளனர்.

இது தொடர்பாக நான் அந்த அறிக்கையில் குறிப்பிட்டு, வீடியோ ஆதாரத்தை ஆய்வு செய்து, எந்த கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் எவ்வாறு வெளியில் சென்று வந்தனர் என்பதை விசாரிக்கும்படி ஊழல் தடுப்பு பிரிவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளேன்’என்று ரூபா தெரிவித்துள்ளார்.

 

சிறப்பு சலுகை

ரூபா அளித்துள்ள 12 பக்க அறிக்கையில், மற்ற கைதிகள் கம்பி வலைகளுக்கு இடையில் தங்களை காண வரும் பார்வையாளர்களைச் சந்தித்து வந்த நிலையில், சசிகலாவுக்கு பார்வையாளர்களை சந்திக்கும்போது சிறப்பு தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது குறித்தும் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக ரூபா கூறும்போது, ‘கைதிகள் பார்வையாளர்களை சந்திக்கும் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில், சசிகலா எந்த ஒரு பார்வையாளரையும் சந்தித்த பதிவை காண முடியாது. எனவே, நான் சசிகலாவை சந்திக்க வந்த பார்வையாளர்களையும் விசாரிக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளேன்’ என்று தெரிவித்தார்.

மேலும், வினய் குமார் தலைமையிலான விசாரணை குழுவிடம், விதி மீறல்களைவிட ஊழல் நடந்துள்ள கோணத்தில் விசாரிப்பதற்கான ஆதாரத்தையும் அவர் கொடுத்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. தற்போதைய நிலவரப்படி வினய்குமார் தனது விசாரணை தொடர்பான இடைக்கால அறிக்கையை கர்நாடக முதல்வரிடம் தாக்கல் செய்துள்ளதாகவும், இறுதி அறிக்கை அளிக்க கால அவகாசம் கோரியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வீடியோ ஆதாரம் வெளியானதால் கர்நாடக சிறைத்துறை வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

http://tamil.thehindu.com/india/article19532835.ece?homepage=true

  • தொடங்கியவர்

சிறைக்கு வெளியே ஷாப்பிங்! - சசிகலாவின் அடுத்த அதிர்ச்சி வீடியோ

 

பெங்களூரு சிறையிலிருந்து சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் வெளியில் சென்று திரும்பியதற்கான புதிய வீடியோ ஆதாரம் வெளியிடப்பட்டுள்ளது. 

சசிகலா மற்றும் இளவரசி


சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில், சசிகலா மற்றும் இளவரசி ஆகியோருக்கு கூடுதல் வசதிகள் செய்துதரப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து கர்நாடக சிறைத்துறை முன்னாள் டி.ஐ.ஜி ரூபா, பரப்பன அக்ரஹாரா சிறையில் ஆய்வு மேற்கொண்டு, அதுகுறித்த ஆய்வறிக்கையை டி.ஜி.பி சத்தியநாராயணாவுக்கு அனுப்பினார். அதில், சசிகலாவுக்கு சிறையில் தனியாக சமையலறை அமைக்கப்பட்டிருப்பதாகவும் தொலைக்காட்சி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்துதரப்பட்டதாகவும் ரூபா குற்றம் சாட்டியிருந்தார்.

கர்நாடகா மட்டுமல்லாது, தேசிய அளவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக, வினய்குமார் என்ற ஐ.பி.எஸ் அதிகாரி தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை எழுப்பிய டி.ஜி.பி ரூபா, போக்குவரத்துத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். சசிகலா, சிறையிலிருந்து வெளியில் சென்று திரும்பியதாக ஒரு வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில், விசாரணைக் குழு முன்பாக ஆஜரான முன்னாள் டி.ஐ.ஜி ரூபா, சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர், சிறைச்சாலையை விட்டு வெளியே சென்று திரும்பியது போன்ற இரண்டாவது வீடியோவை சமர்ப்பித்துள்ளார். அந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில், சசிகலா, இளவரசி இருவரும் பைகளுடன் சிறைச்சாலையின் வெளியிலிருந்து நுழைவு வாயில் வழியாகத் திரும்புவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

ஏற்கெனவே வெளியான வீடியோவில், சசிகலா அணிந்திருந்த அதே உடையுடன் இந்த வீடியோவிலும் அவர் காட்சியளிக்கிறார். மேலும், சசிகலா சிறை வளாகத்துக்குள் நுழைவது போன்ற அந்த வீடியோவில், ஆண் காவலர்கள் இடம்பெற்றுள்ளதும் கேள்விகளை எழுப்பியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து சசிகலா தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு, உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர இருக்கும் நிலையில், இந்த வீடியோ வெளியாகியிருக்கிறது.  

 

http://www.vikatan.com/news/tamilnadu/99754-d-roopa-alleges-sasikala-entering-jail-in-civilian-clothes-in-presence-of-male-guards-cctv-footages.html

  • தொடங்கியவர்

சசிகலாவுக்கு எதிராக 74 ஆதாரங்கள்!

 

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு அளிக்கப்பட்ட சலுகைகள் தொடர்பாக விசாரணைக் குழுவிடம் சிறைத்துறை முன்னாள் டி.ஐ.ஜி ரூபா 74 ஆதாரங்களை அளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ரூபா - சசிகலா

 


சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு சிறைத்துறை விதிகளை மீறி சசிகலாவுக்கு பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டதாக டி.ஐ.ஜி ரூபா குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக பரப்பன அக்ரஹாரா சிறையில் அதிரடியாகச் சோதனைகள் மேற்கொண்ட ரூபா, சசிகலாவுக்குத் தனியாகச் சமையலறை, பார்வையாளர்களைச் சந்திக்கத் தனியாக அறை எனப் பல்வேறு வசதிகள் இருந்ததாக, டி.ஜி.பி சத்யநாராயணாவுக்கு எழுதியிருந்தக் கடிதத்தில் ரூபா கூறியிருந்தார். அதற்காக, சிறைத்துறை அதிகாரிகளுக்கு 2 கோடி ரூபாய் அளவுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும் ரூபா வெளிப்படையாகப் புகார் கூறினார். இந்த விவகாரம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், டி.ஜி.பி சத்யநாராயண ராவ் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

டி.ஐ.ஜி ரூபா போக்குவரத்துத் துறைக்கு மாற்றப்பட்டார். சிறையில் சசிகலாவுக்கு அளிக்கப்பட்ட சலுகைகள் தொடர்பாக விசாரணை நடத்த ஐ.பி.எஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில் விசாரணைக் குழுவும் அமைக்கப்பட்டது. இந்தக் குழு முன்பாக ஆஜரான ரூபா, சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் சிறையிலிருந்து வெளியில் சென்று வந்ததற்கான வீடியோ ஆதாரம் உள்பட 74 ஆதாரங்களை அளித்துள்ளார். மேலும், சிறை நுழைவு வாயிலில் இருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளையும் ஆய்வுசெய்ய வேண்டும் என்று விசாரணைக் குழுவிடம் ரூபா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. வினய்குமார் தலைமையிலான விசாரணைக் குழுவினர் ஒரு மாதத்தில் விசாரணை அறிக்கையை கர்நாடக அரசிடம் தாக்கல் செய்யவுள்ளனர். இந்த விவகாரத்தில் சசிகலா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவருக்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

http://www.vikatan.com/news/tamilnadu/99767-former-dig-rupa-gives-74-proofs-to-acb-aganist-sasikala.html

  • தொடங்கியவர்

சசிகலா சிறையில் இருந்து வெளியே சென்றாரா? - வீடியோ குறித்து அதிகாரிகளிடம் விசாரணை: உயர்நிலை விசாரணைக் குழு தகவல்

 
22CHSKOSASIKALA

சசிகலா   -  PTI

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, சிறையில் இருந்து வெளியில் சென்றுவிட்டு வந்தாரா என்பது குறித்து அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்படும் என ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையிலான உயர்நிலை விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.

சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள அதிமுக (அம்மா) பொதுச் செயலாளர் சசிகலா, இளவரசி ஆகியோர் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம் சிறைத் துறை டிஐஜியாக இருந்த டி.ரூபா சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்படுவதாக புகார் தெரிவித்தார்.

இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து ரூபா பெங்களூரு மாநகர போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். சசிகலாவின் சிறை முறைகேடு தொடர்பாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையிலான உயர்நிலை விசாரணைக் குழு விசாரித்து வருகிறது. இந்த குழு பரப்பன அக்ரஹாரா சிறை அதிகாரிகள், கைதிகள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.

இந்நிலையில் ரூபா கடந்த சனிக்கிழமை வினய்குமார் தலைமையிலான உயர்நிலை விசாரணை குழுவுக்கு, 12 பக்க அறிக்கையும், புகைப்பட, வீடியோ உள்ளிட்ட 74 ஆதாரங்களை அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையில், “வண்ண உடை அணிந்துள்ள சசிகலா, இளவரசி ஆகியோர் அதிகாரிகளின் உதவியுடன் சிறை விதிமுறைகளை மீறியுள்ளனர். சிறையில் இருந்து வெளியே சென்று பைகளுடன் திரும்பும் காட்சிகள் பதிவாகியுள்ளன. பிரதான நுழைவாயில் அருகே எடுக்கப்பட்ட இந்த காட்சிகளில் ஆண் காவலர்களும், ஆண் கைதிகளும் இடம்பெற்றுள்ளனர்” என குறிப்பிட்டுள்ளார்.

 

உரிய விசாரணை தேவை

இந்த செய்தி நேற்று ‘தி இந்து’ வில் வெளியாகியதை தொடர்ந்து கர்நாடக அரசியல் வட்டாரத்திலும், காவல் துறையிலும் பரபரப்பு ஏற்பட்டது. பாஜக முன்னாள் துணை முதல்வர் அசோக், ‘‘இந்த வீடியோ தொடர்பாக விசாரித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். குற்றவாளியான சசிகலாவுக்கு சலுகை காட்டிய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் அமைச்சர்களுக்கு தொடர்பு உள்ளதா என வினய்குமார் தலைமையிலான விசாரணைக் குழு விசாரிக்க வேண்டும் ''என்றார்.

சிறைத்துறை டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ள ஏ.எஸ்.மேக்ரிக் நேற்று சிறைக்கு சென்று அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். அப்போது சசிகலா, தெல்கி ஆகியோருக்கு சிறப்பு சலுகை காட்டப்படுகிறதா? விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என கேள்வி எழுப்பினார். எக் காரணம் கொண்டும் அதிகாரிகள் சிறை விதிமுறைகளை மீறக்கூடாது என எச்சரித்ததாக தெரி கிறது.

இந்நிலையில் வினய்குமார் தலைமையிலான விசாரணை குழு, “முன்னாள் டிஐஜி ரூபா கொடுத்துள்ள 74 ஆதாரங்கள் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். இதில் கோடிக் கணக்கில் ஊழல் நடந்துள்ளதா என்பது விசாரணையில் தெரிய வரும். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தப்படும். அனைத்து கட்ட விசாரணையும் நிறைவடைந்த பிறகு முதல்வர் சித்தராமையாவிடம் எங்களது இறுதி அறிக்கையை அளிப் போம்” என்றனர்.

http://tamil.thehindu.com/india/article19538352.ece?homepage=true

  • தொடங்கியவர்
சசிகலாவுக்கு வசதிகள் கிடைத்தது எப்படி?
உதவியவர் பெயரை வெளியிட்டார் ரூபா
 
 
 

புதுடில்லி, :சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு சலுகைகள் கிடைப்பதற்கு உதவியவரின் பெயரை, கர்நாடகாவின் முன்னாள் சிறைத் துறை, டி.ஐ.ஜி., ரூபா வெளியிட்டார்.

 

சசிகலாவுக்கு வசதிகள் கிடைத்தது எப்படி?   உதவியவர் பெயரை வெளியிட்டார் ரூபா


தமிழக முன்னாள் முதல்வர், மறைந்த ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, சொத்து குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டு சிறை தண்டனை பெற்று, கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
'சிறைத் துறை அதிகாரிகளுக்கு, இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்து, சிறையில் சசிகலா, சொகுசு வசதிகளை பெற்றுள்ளார்' என, கர்நாடக சிறைத் துறை, டி.ஐ.ஜி.,யாக இருந்த, ரூபா புகார் கூறியிருந்தார்.
 

அறிக்கை



இது தொடர்பாக, சிறைத் துறை உயரதிகாரிகளுக்கு, ஆதாரங்களுடன் அவர் அறிக்கை அனுப்பியிருந்தார். இதற்கிடையே, அவர் வேறு பணிக்கு மாற்றப்பட்டார்.

சிறையில் நடந்துள்ள முறைகேடு குறித்து, கர்நாடக ஊழல் தடுப்பு அமைப்பு விசாரிக்கிறது.
இந்த அமைப்பின் விசாரணையின் போது, பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் உள்ளிட்ட ஆதாரங்களுடன், தன் அறிக்கையை, ரூபா அளித்துள்ளார்.
அந்தஅறிக்கையில், புதிய தகவல்களை அவர் வெளியிட்டு உள்ளார்.
அதன் விபரம்:
வி.எஸ்.பிரகாஷ் எனப்படும், ஆஸ்திரேலியா பிரகாஷ் என்பவரை, சிறையில் இருந்த போது, சசிகலா சந்தித்துள்ளார். பிரகாஷ் மூலம், மல்லிகார்ஜுனா என்பவரின் அறிமுகம் கிடைத்துள்ளது.

இவர்கள் இணைந்து தான், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, சசிகலாவுக்கு சிறையில் சொகுசு வசதிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
 

தீவிர விசாரணை



இது தொடர்பான ஆதாரங்களை அளித்துள்ளேன். தீவிர விசாரணை நடத்தினால்,
மேலும் பல உண்மைகள் தெரிய வரும்.சசிகலா அடைக்கப்பட்டிருந்த சிறை அறைக்கு அருகிலுள்ள, அறைகளையும் சேர்த்து, நீண்ட வராண்டாவில் தடுப்புபோடப்பட்டிருந்தது; இந்த ஐந்து அறைகளையும், சசிகலா பயன்படுத்தி உள்ளார்.
சிறை விதிகளை மீறி, பல பார்வையாளர்களை அவர் சந்தித்துள்ளார் . நீண்ட நேரம் இந்த சந்திப்புகள் நடந்துள்ளன. லஞ்சம் கொடுத்து, பல சலுகைகளை சசிகலா அனுபவித்து உள்ளார்

 

.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதற்கிடையே, சிறையில், பையுடன் சசிகலாவும், இளவரசியும் உலா வரும், 'வீடியோ' காட்சிகள் நேற்று முன்தினம் வெளியாகின.இதையடுத்து, அன்று இரவே, சிறையின் தலைமை கண்காணிப்பாளர், நிக்காம் பிரகாஷ் அம்ரித், அதிரடியாக, கர்நாடக ரிசர்வ் போலீஸ் பட்டாலியனுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
 

நியமிக்கவில்லை



இவரது இடத்துக்கு, நேற்று மாலை வரை, யாரையும் நியமிக்கவில்லை.ஐ.பி.எஸ்., அதிகாரி ரூபாவின் சிறை முறைகேடு குற்றச்சாட்டுக்கு பின், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையின் தலைமை கண்காணிப்பாளரை, 40 நாட்களில், ஆறு முறை மாற்றியுள்ளது, பெரும் சந்தேகத்தை எழுப்பி உள்ளதாக, கர்நாடக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி உள்ளன.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1839431

  • தொடங்கியவர்

சிறையில் இருந்த சசிகலா, ஓசூர் எம்.எல்.ஏ வீட்டுக்குச் சென்றதாக டி.ஐ.ஜி ரூபா குற்றச்சாட்டு!

 
 

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, ஓசூர் எம்.எல்.ஏ வீட்டுக்குச் சென்று வந்ததாக, டி.ஐ.ஜி ரூபா குற்றம் சாட்டியுள்ளார்.

நீதிமன்றத்தில் குற்றவாளி

கடந்த சனிக்கிழமை ரூபா, லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அளித்துள்ள அறிக்கையில், சசிகலா சிறையிலிருந்து ஓசூர் எம்.எல்.ஏ-வின் வீட்டுக்குச் சென்று வந்துள்ளார். பரப்பன அக்ரஹாரா சிறையில் ஒன்று மற்றும் இரண்டாவது வாசல்களில் பொருத்தப்பட்ட சி.சி.டி.வி கேமராக்களில், அவர் சிறையிலிருந்து வெளியேறிய காட்சிகள் பதிவாகியிருக்கின்றன' எனக் குறிப்பிட்டுள்ளார். 'ஓசூர் எம்.எல்.ஏ வீட்டுக்குச் சென்று வந்தார் என்பதற்கான  நம்பிக்கையான தகவல்கள் கிடைத்துள்ளன' எனவும் அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார். 

'பரப்பன அக்ரஹாரா சிறைத்துறை அதிகாரிகள், கர்நாடக உள்துறை அமைச்சர், உள்துறைச் செயலாளர் ஆகியோர் சசிகலாவுக்கு செய்துகொடுத்த வசதிகளை மறைத்து, தவறாக வழிகாட்டுகின்றனர்' என்று தன் அறிக்கையில் ரூபா குறிப்பிட்டுள்ளார்.

 

'சசிகலா, தனிப்பட்ட முறையில் சிறையின் நடத்தைகளையும் விதிமுறைகளையும் மீறியுள்ளார். சிறை விதிகளின்படி சசிகலாவை முதல் வகுப்பு சிறைக் கைதியாகக் கருத முடியாது. ஆனால், சசிகலா நீதிமன்றத்தின் உத்தரவுக்கு முரணாக சிறையில் முதல்வகுப்புக் கைதி போல வாழ்ந்தார். நீதிமன்ற உத்தரவு இல்லாமல் எந்த சிறைக் கைதிக்கும் கூடுதல் வசதிகள் செய்துகொடுத்தாலும் அது நீதிமன்ற அவமதிப்பு மற்றும் அரசியல் சாசனத்துக்கு எதிரானது' என சிறைத்துறை டி.ஐ.ஜி-யாக இருந்தபோது அளித்த அறிக்கையில் ரூபா குறிப்பிட்டிருந்தார். 

http://www.vikatan.com/news/tamilnadu/100055-sasikala-visited-mla’s-house-in-hosur-roopa-report-says.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.