Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிஜ Never Ever Give Up ஹீரோ தோனி!

Featured Replies

நிஜ Never Ever Give Up ஹீரோ தோனி!

 
`வயதாகிவிட்டது. இனி கிரிக்கெட் ஆட முடியாது. இளைய சமுதாயத்துக்கு வழியைவிட்டு அவர் ஒதுங்கவேண்டியதுதானே?' இதுபோன்ற கேள்விகளுக்கு, தனக்கே உரிய பாணியில் கூலாக பதில் சொல்லிக்கொண்டிருக்கிறார் தோனி. இலங்கையில் தற்போது இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருகிறது. முதலில் ஆடிய டெஸ்ட் போட்டிகளில் 3 -௦ என்ற கணக்கில் அபார வெற்றிபெற்றது. தற்போது  ஐந்து போட்டிகள்கொண்ட  ஒருநாள் தொடரையும் 3 -௦ எனக் கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது.
 
தோனி
 
ஒருநாள் தொடர் தொடங்கும் முன், பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய கேப்டன்  கோலி, ``இதுபோன்ற தொடர் மூலம் 2019-ம் ஆண்டு நடக்க உள்ள 50 ஓவர் உலகக்கோப்பைக்கு,  மையமான அணியைத் தேர்வுசெய்ய பயன்படுத்திக்கொள்வோம்'' என்றார். இந்தியாவின் முன்னாள் நட்சத்திர வீரர் ராகுல் டிராவிட் பேசுகையில், ``இந்தியாவின் மூத்த வீரர்களான தோனி மற்றும் யுவராஜின் கிரிக்கெட் எதிர்காலத்தை பி.சி.சி.ஐ-தான் முடிவுசெய்ய வேண்டும்'' என்றார்.
 
இந்திய அணியின் தலைமைத் தேர்வாளர் MSK பிரசாத், அணி தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அளித்த பேட்டியில், ``இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனது பங்களிப்பை அணிக்கு அளிக்காவிட்டால், அவருக்கு மாற்று வீரர் தேர்வுசெய்யப்படும்" என்றார்.
 
முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கம்பிர், ``தோனி, தான் நினைக்கும் வரையெல்லாம் விளையாட முடியாது. கடந்தகால சாதனைகளை வைத்து அணியில் நீடிக்க முடியாது" எனச் சாடினார்..
 
இவ்வாறு பல்வேறு நபர்களிடமிருந்து வெவ்வேறு கோணங்களில்  விமர்சனங்கள் வந்தபோதிலும், அந்த அனைத்து கேள்விகளுக்கும் தனக்கே உரிய பாணியில் பதில் அளித்துவருகிறார் தோனி.
தோனி
 
இலங்கைக்கு எதிரான இந்தத் தொடர், அவரது கிரிக்கெட் எதிர்காலத்துக்கு ஒரு முக்கிய நிகழ்வாகும். முதல் ஒருநாள் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றதால் தோனி பேட்டிங்கில் தனது பங்களிப்பைத் தர வாய்ப்பு கிடைக்கவில்லை.
ஆனால், இரண்டாம் ஒருநாள் போட்டியோ இந்திய அணிக்கு பெரிய பாடத்தைக் கற்பித்தது. டி.எல்.எஸ் முறையில் 231 ரன்கள் தேவை என ஆடிய இந்திய அணி, 109/0 என்ற நிலையிலிருந்து 131/7 எனத் தடுமாறியது. அப்போது புவனேஷ் குமாருடன் ஜோடி சேர்ந்த தோனி, தனது அனுபவத்தையும் பொறுமையையும் ஒருசேர வெளிப்படுத்தினார்.  அடுத்து விக்கெட்  இழப்பின்றி இந்திய அணியை வெற்றிப் பாதைக்குக் கொண்டுசென்றது அந்த ஜோடி. போட்டி முடிந்த பிறகு பேசிய புவனேஷ் குமார், ``தோனி என்னிடம் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தச் சொன்னார். `நாம் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தாலே வெற்றி நம் பக்கம். நீ டெஸ்ட் ஆடுவதுபோல் பொறுமையாக விளையாடு. உன்னை நீயே நெருக்கடிக்கு உள்ளாக்கிக்கொள்ளாதே' என்று தோனி என்னிடம் கூறினார்’’ என்றார். இதுபோன்ற சூழ்நிலைகளில் `பேட்ஸ்மேன்  தோனி'யைவிட  `அணியின் வீரர் தோனி'யே தேவைப்படுகிறார் என்பதே பல கிரிக்கெட் விமர்சகர்களின் கருத்து.
 
விமர்சகர் ஹர்ஷா போக்ளே, ``இந்திய அணியில் தோனியின் இருப்புதான்  பெரிய பலமாக உள்ளது" என்று கூறியுள்ளார் . இதை, நேற்று நடந்த  மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் தோனி நிரூபித்துள்ளார். 218 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணி, 61/4 எனத் திணறியது. அப்போது ரோஹித் ஷர்மாவுடன் ஜோடி சேர்ந்த தோனி, தனது  65-வது அரை சதம் அடித்ததுடன் இந்திய அணி தொடரை வெல்லவும் வழிவகுத்தார். இந்தப் போட்டியில் சிறப்பாக ஆடிய ரோஹித் சர்மா, இலங்கை மண்ணில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்தார்.
 
தோனி
இந்தத் தொடரின் மூலம் தோனி பல சாதனைகளைப் புரிந்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 99 ஸ்டம்ப்பிங் செய்து சங்ககாராவின் உலக சாதனையை சமன்செய்துள்ளார். ரன் சேஸிங்கில் அதிகமுறை (40 முறை ) அவுட் ஆகாமல் களத்தில் இருந்த வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். தன் 65 அரை சதத்தில் இலங்கை அணியிடம் மட்டும் 18 அரை சதம் அடித்துள்ளார். ஒரே அணியிடம் அடிக்கப்பட்ட அதிக அரை சதம் என்ற சாதனையை சமன்செய்துள்ளார். இதே சாதனையை, சங்ககாரா இந்தியாவிடம் நிகழ்த்தியுள்ளார். நேற்றைய போட்டியின் மூலம் `இந்திய  வீரர்களில் 4-வது  அதிக ரன்களை (9,434 ரன்கள் ) அடித்த வீரர்' என்ற பெருமையைப் பெற்றுள்ளார். அஷாருதீன் சாதனையை முறியடித்து, தோனி நேற்று 4-வது இடத்துக்கு ஏறினார். சச்சின், கங்குலி, டிராவிட் முறையே முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.
 
முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் கூறுகையில், ``இந்திய அணியில் 2019-ம்  ஆண்டு உலகக்கோப்பை வரை தோனிக்கு மாற்று வீரரே கிடையாது. அவர் உடல் தகுதியுடன் இருக்க வேண்டும் எனப் பிரார்த்தனை மேற்கொள்வதுதான் சரியாக இருக்கும்'' என்று கூறியுள்ளார்.

தோனி

தோனி ஓய்வுபெற வேண்டும் என்று சிலர் கூறிவரும் நேரத்தில், புதுப்புது சாதனைகளை நிகழ்த்தி, அவ்வாறு கூறியவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்திவருகிறார் தோனி. ``வேட்டைமன்னன் தோனி களத்தில் நுழைந்தால், பெளலர்களுக்கு கண்கலங்கும் நிலை தற்போது இல்லை என்பது உண்மையே என்றாலும், இன்னும் தன்னிடம் மீதமுள்ள கிரிக்கெட்டை இந்திய அணிக்கு அளிக்கும் வரை எவ்வளவு இன்னல்கள் வந்தாலும் பீனிக்ஸ்  பறவையைப்போல மீண்டும் மீண்டும் தோனி எழுந்துவருவார்" என ரசிகர்கள் பெருமிதம்கொள்கின்றனர்.

http://www.vikatan.com/news/tamilnadu/100541-ms-dhonis-comeback-story.html

  • தொடங்கியவர்

‘பாகிஸ்தானுக்கு எதிராக என்றால் ஒரு காலில் கூட ஆடுவேன்’- தோனியின் உறுதி; எம்.எஸ்.கே. பிரசாத் நெகிழ்ச்சிப் பதிவு

dhoni-prasad

எம்.எஸ்.கே.பிரசாத், தோனி.   -  படம். | பிடிஐ.

கடந்த ஆண்டு ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் முக்கியமான போட்டி ஒன்றில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆட வேண்டிய நிலையில் காயமடைந்து நடக்கக் கூட முடியாத நிலையிலும் தோனி ஆடுவேன் என்று உறுதியாக இருந்த ஒரு நிகழ்வை நெகிழ்ச்சியுடன் கூறினார் தற்போதைய அணித்தேர்வுக் குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத்.

தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் ஜர்னலிஸ்ட்கள் கூட்டமைப்பு நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட எம்.எஸ்.கே. பிரசாத் அப்போது தனக்கும் தோனிக்கும் இடையே நடந்த உரையாடலை அப்படியே தெரிவித்தார்.

அப்போது தோனி கேப்டன் என்பதும் குறிப்பிடத்தக்கது. இனி எம்.எஸ்.கே.பிரசாத்...

“இந்த முக்கியப் போட்டிக்கு 2 நாட்கள் முன்பாக ஜிம்மில் வலுதூக்கும் பயிற்சியில் ஈடுபட்ட தோனி திடீர் முதுகுத் தசைப் பிடிப்பினால் அவதியுற்றார். வலுதூக்கும் கருவியுடன் கீழேயே விழுந்து விட்டார். உடனே மருத்துவ உதவி வரவழைக்கப்பட்டது. அவர் ஸ்ட்ரெச்சரில் அனுப்பி வைக்கப்பட்டார்.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி மிகவும் முக்கியமானது. அது வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான களமாகவும் இருந்தது. உடனே நான் தோனியின் அறைக்குச் சென்று என்னதான் ஆயிற்று என்று பார்க்கச் சென்றேன். அவர் என்னிடம், ‘கவலை வேண்டாம் எம்.எஸ்.கே பாய்” என்றார்.

மாற்று வீரர் வரவழைக்கலாமா என்றேன், அதற்கும் தோனி, ‘டோன்ட் ஒரி’ என்றார். ஆனால் எனக்கு திருப்தியளிக்கவில்லை, நான் தலைமைத் தேர்வாளர் சந்தீப் பாட்டிலிடம் தெரிவிக்க அவர் பார்த்திவ் படேலை அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தார். அன்று மாலையே பார்த்திவ் படேல் அணியுடன் இணைந்தார்.

ஆசியக் கோப்பை விதிமுறைகளின் படி நாம் 24 மணி நேரம் முன்னதாக அணி வீரர்களை அறிவிக்க வேண்டும். நான் தோனி நிலை என்னவென்று மீண்டும் பார்க்கச் சென்றேன். அப்போதும் தான் விளையாடுவதாகவே அவர் கூறினார். அப்படி தோனி கூறும்போது தோனியினால் நடக்கக் கூட முடியவில்லை என்பதே எதார்த்த நிலை.

மீண்டும் இரவு 11 மணிக்கு தோனியின் அறைக்குச் சென்றேன், அவர் அங்கு இல்லை. நான் விடுதியின் டாப் புளோருக்குச் சென்றேன், அங்கு அவர் நீச்சல் குளம் நோக்கி நடக்க முடியாமல் நடந்து சென்று கொண்டிருந்தார். நடக்கக் கூட முடியாத நிலையில் எப்படி விளையாட முடியும் என்று கூறுகிறார் என்று நான் ஆச்சரியமடைந்தேன்.

அப்போது தோனி என்னிடம் கூறினார், “கவலை வேண்டாம், என்னிடம் கூறாமலேயே பார்த்திவ்வை அழைத்து விட்டீர்கள். எனவே நீங்கள் பாதுகாப்பு அடைந்து விட்டீர்கள்” என்றார்.

ஆட்டம் ஆட வேண்டிய நாளில் தோனி சீருடையுடன் ஆடத் தயாராக இருந்தார். அப்போது என்னை அவர் தன் அறைக்கு அழைத்து, ஏன் இவ்வளவு கவலை அடைந்து விட்டீர்கள்? என்றார். பிறகு கூறினார், பாகிஸ்தானுக்கு எதிராகவென்றால் நான் ஒரு காலுடன் கூட ஆடிவிடுவேன். தோனி ஆடினார், இந்தியாவை வெற்றிக்கு அன்று இரவு இட்டுச் சென்றார்.

இதுதான் தோனி!

தோனி வசதி வாய்ப்புகள் இல்லாத ஒரு காலக்கட்டத்தில் கிரிக்கெட்டுக்குள் வந்தவர். வசதி வாய்ப்புகள் இல்லாத நிலையிலும் ஒருவரது உள் ஆற்றல் அடுத்தக் கட்டத்துக்கு ஒருவரை அழைத்துச்செல்லும்”

இவ்வாறு கூறினார் பிரசாத்.

http://tamil.thehindu.com/sports/article19575703.ece

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.