Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஸ்லீப்பர் செல்' தீபாவளி!

Featured Replies

ஸ்லீப்பர் செல்' தீபாவளி!
 
 
 
E_1507806278.jpeg
 

விடிந்தால் தீபாவளி; கையில், மொபைல் போனுடன், ஆழ்ந்த, 'ஸ்லீப்'பில் இருந்த தாண்டவராயனை, அதிரடியாக எழுப்பினாள், மனைவி அலமேலு...
''உங்களுக்கென்ன பெரிய, 'ஸ்லீப்பர் செல்'லுன்னு நெனைப்பா... கையில செல்லை பிடிச்சு, குறட்டை விட்டு தூங்கினுக்கிறீங்க... ராத்திரி, பிரேக்கிங் நியூஸ்ல, அந்த ரிசாட்காரங்களுக்கு ஒரு ஆளு குறையுதுன்னு சொன்னாங்கல்ல... பொழைக்கத் தெரிஞ்ச ஜன்மமாயிருந்தா, எப்படா விடியும்ன்னு தூங்காம காத்திருந்து, விடிஞ்சதும் ஓடிப் போய் ஆதரவு கொடுத்து, தலைவர் தர்றத வாங்கிக்கினு வரும்...'' என்று அர்ச்சித்தவள், ''சட்டுபுட்டுன்னு தலைக்கு ஊத்துகினு, தீபாவளி பலகாரம் சாப்பிட்டுட்டு, ரிசார்ட்டுக்கு ஓடப்பாருங்க. உங்களுக்கு முன் பக்கிரிசாமி போயிடப் போறாரு,'' ஊசி பட்டாசாக அலமேலு வெடிக்க, ராக்கெட் வேகத்தில் எழுந்தார், தாண்டவராயன்.


தனி ஒரு ஆசாமியாய் தானுண்டு, தன் கட்சி உண்டு என்று, தாண்டவராயன் சமூகத் தொண்டு புரிய வந்து, ஏழு ஆண்டுகளாகிறது. வேறு ஒரு பலமான கட்சி ஒதுக்கிய தொகுதியில், தனக்கென ஒரு சின்னம் வாங்கி வேஸ்ட் செய்யாமல், அந்த கட்சி சின்னத்திலேயே போட்டியிட்டதால், அரசியல் அந்தஸ்தை பெற்றிருந்தார்.
ஆனாலும், 'தொகுதி பக்கம் தலை வைத்து படுத்தாயா...' என்று யாரும் கேட்டுவிடாத வகையில், எந்நேரமும், எல்லார் பார்வையில் படும்படி சுற்றித் திரிந்தும், அவருடைய சுற்றங்களும், நட்புகளும், அவரை அரசியல்வாதியாக அங்கீகரிக்கவில்லை.


இது, அவரை விட, அவர் மனைவி அலுமேலுவை தான், பெரிதும் கவலைக்குள்ளாக்கியிருந்தது. அவளின் இந்த விசாரத்தைப் போக்கும் மருந்தாக, 'ரிசார்ட் அரசியல்' கலாசாரம் உருவெடுத்திருந்தது.
எதிர் கட்சிகளும், எதிர் அணியும் சமாதானம் ஆகிவிடுவரோ என்ற நிலையில், தங்களுக்கு பிடித்த சில தொகுதி தொண்டர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு மாதக்கணக்கில் ஓய்வும், உற்சாகமும் அளிக்கும், பொதுநல தொண்டாக, 'ரிசார்ட் அரசியலை' செய்து கொண்டிருந்தனர், சில தலைவர்கள்.


இப்படி ஒரு ஓய்வும், உற்சாகமும், தங்களுக்கு கிட்டவில்லையே என்று ஏங்கியவர்களில் தாண்டவராயனும் ஒருவர். ஆனால், இயல்பாகவே அவரிடமிருந்த அடக்க குணமும், அரசியலுக்கு தேவையான ஆர்பாட்டம், அலட்டலும் இல்லாததால், 'ஸ்லீப்பர் செல்' என்ற குறைந்தபட்ச அந்தஸ்து கூட, அவருக்கு கிட்டவில்லை.
இந்நிலையில், 'ரிசார்ட்' அரசியல் செய்யும் கட்சித் தலைவர், நேற்று இரவு, 'டிவி'யில் தோன்றி, பேட்டி அளித்தார்...
'அனைவருக்கும் என் தீபாவளி வாழ்த்துகள்; ஆட்சியை காப்பாற்றவும், எங்களோடு ரிசார்ட்டில் தீபாவளி கொண்டாடவும், ஒரே ஒருவர் தேவைப்படுகிறார். நாளை, எங்களோடு கை கோர்க்க வரும் அந்த நபருக்கு, தீபாவளி சிறப்பு பரிசாக, பெரிய அதிர்ஷ்டம் காத்திருக்கிறது. யார் முதலில் வருகிறாரோ, அவருக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும். இந்த அரிய வாய்ப்பை நழுவ விட வேண்டாம்...' என்று அறிவித்தார்.
அதைப் பார்த்த சம்பந்தப்பட்ட அனைவரின் வாயிலும், தீபாவளி அல்வா ஊறியது. அலமேலுவுக்கு, தன் கணவரை, 'ஸ்லீப்பர் செல்' ஆக்கிவிடலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.



அலமேலுவுக்கு பயந்து, 'மடமட'வென்று கங்கா ஸ்நானம், இத்யாதி சமாசாரங்களை முடித்தாலும், ரிசார்ட்டுக்கு போவதில் தாண்டவராயனுக்கு கொஞ்சம் பயமாய் இருந்தது. அதனால், சட்டென்று கிளம்பாமல், தயங்கி நின்றார்.
''ஏன் மிரண்டு போய் நிக்குறீங்க... உங்களுக்கு முன் பக்கிரிசாமி போயிடப்போறாரு... நம்ப நல்ல நேரம், இப்போ, அவங்க, நம்ம ஊர் ரிசார்ட்டுல இருக்காங்க. சீக்கிரம் கிளம்புங்க,'' என்று அவசரப்படுத்தினாள், அலமேலு.
''அலமேலு... நான் கொஞ்சம் மதிப்பா அரசியல்ல காலம் தள்ளிட்டிருக்கேன்; இப்போ, நான் ரிசார்ட் போறத யாராவது பாத்தா, கேவலமா நினைக்க மாட்டாங்களா...'' என்று கெஞ்சும் குரலில் கேட்டார்.


''யோவ்... என்ன பெரிசா மானம், அவமானம்ன்னு பேசுறே... பக்கிரிசாமி பொண்டாட்டி, என் கண் முன், ஆடி கார்ல வந்து இறங்கி, நகையும், நட்டுமா அள்ளிட்டு போறத பாத்தா, எனக்கும் தான் உன் பொண்டாட்டின்னு சொல்ல, மானம் போவுது. நேத்து அரசியலுக்கு வந்தவன் கூட, நாலு தலைமுறைக்கு சொத்து சேத்து வச்சுருக்கான். உனக்கு ஒரு துப்பு இல்ல; இப்போ, ஒரு, 'சான்ஸ்' வந்திருக்கு; அதையும் வுட்டுட்டு நிக்கப்போறயா...'' என்று அணுகுண்டு பட்டாசாக வெடித்தாள், அலமேலு.
''இல்ல... விடிஞ்சு போச்சு; யாராவது என்னை பாத்துடப் போறாங்களேன்னு தான்...'' என்று, பம்மினார்.
சில நொடிகள் யோசித்தவள், ''இந்த முகரக்கட்டைய யாரும் பாக்கக்கூடாதுன்னு தானே பயப்படுறே... இரு வர்றேன்...'' என்று சொல்லி, வேகமாக உள்ளே சென்றாள்.


பின், அதே வேகத்தில் திரும்பியவளின் கையில், கிண்ணத்தில், தீபாவளி லேகியம் இருந்தது.
''அலமேலு... நான், ஏற்கனவே லேகியம் சாப்பிட்டாச்சு...''என்றார், பரிதாபமாக!
அதை, காதில் வாங்காமல், லேகியத்தை கையில் வழித்தெடுத்தாள், அலமேலு.
''லேகியம் சாப்பிட்டா, தைரியம் வரும்ன்னு நேத்து,'டிவி'யில், 'தீபாவளி தின்பண்டம்' நிகழ்ச்சியில், சமையல் மாமி சொன்னத கேட்டு, இத்தனை லேகியத்தை எடுத்து உருட்டறயே... இவ்வளவையும் தின்னா, போற வழியில வயிறு கடமுடான்னு பேஜாராயிடும்...'' என்று, கூறி, ஒரு அடி பின்னால் நகர்ந்தார், தாண்டவராயன்.
''அடச்சீ... இது, நீ துண்றதுக்கு இல்ல... உன் மூஞ்சிய காட்டு,'' என்று கூறி, சுவற்றில் பசையை அப்புவது போல், தாண்டவராயனின் முகத்தில், லேகியத்தை அப்பினாள்.


இந்த திடீர் தாக்குதலை எதிர்பாராததால், ''எரியுதே... எரியுதே...'' என்று கத்தினார்.
''சும்மா கத்தாத... உன்னை மாதிரி அரசியல்ல நுழைஞ்சவ னெல்லாம், ஊர் பூரா சொத்து சேர்த்து வைச்சிருக்கிறதைப் பாத்தா, எனக்குக் கூடத் தான் வயிறு எரியுது; கொஞ்ச நேரமானா எரிச்சல் நின்னுடும். இப்ப, உன்னை எவனாலும் அடையாளம் கண்டுபிடிக்க முடியாது. அப்படியே, ரிசார்ட் போய், தலைவரை பாக்கறதுக்கு முன், மறக்காம கழுவிடு...''
போருக்கு செல்லும் கணவருக்கு, புறநானுாற்று வீரமங்கை, வீர திலகம் இட்டு அனுப்புவது போல், தாண்டவராயனுக்கு லேகிய பூச்சு பூசி அனுப்பினாள்,
அலமேலு.

நமுத்துப்போன பட்டாசு திரி மாதிரி, மெதுவாக ரிசார்ட்டை நோக்கி காரில் பயணித்தவரின் மனதில், அதுவரை, அவருக்கே தெரியாமல் பதுங்கியிருந்த அல்ப ஆசைகள், 'ஸ்லீப்பர் செல்'லாகத் தலைக்காட்ட துவங்கின. 'வருங்கால அரசியலில், அந்தஸ்தான இடம் கிடைப்பது, ஒரு பக்கமிருந்தாலும், அலமேலுவின் டார்ச்சரிலிருந்து தப்பிக்க, தலைவர் தரப்போகும் தீபாவளி சிறப்பு பரிசு தான், இப்போதைக்கு தேவை. ஊரெல்லாம் வதந்தி பேசுவது போல், அது, ஒரு அரை கிலோ தங்கமாக இருந்தால் கூட போதும்; அலமேலுவின் நச்சு இருக்காது...' என்று எண்ணியதும், அவருக்குள் உற்சாகம் ஊற்றெடுத்தது.

லேகியம் பூசிய முகத்துடன், ரிசார்ட்டில் நுழைந்தவர், ஆர்வக் கோளாறால், அலமேலு சொன்னதை மறந்து, முகத்தை கழுவாமல் தலைவரின் அறைக்கு ஓடினார்.
முதலில் வரப்போகும், 'ஸ்லீப்பர் செல்' யாராக இருக்கும் என்ற ஆவலுடன் உட்கார்ந்திருந்த தலைவரை நெருங்கி, தான் கொண்டு போன சால்வையை போர்த்த முற்பட்டார்.
''இதெல்லாம் எதுக்கு தம்பி... நாமதான், இத்தனை நாளா, ஒண்ணுக்குள்ள ஒண்ணா இங்கேயே கிடக்கோமே... ஏதோ புதுசா வந்தவர் போல, சால்வையெல்லாம் போத்த வர்றீங்க... நான் ஒரே ஒரு ஆசாமிக்காக காத்துட்டு இருக்கேன்; தயவு செஞ்சி, 'டிஸ்டர்ப்' செய்யாம, போய் அந்த பியூட்டி பார்லர்ல உட்காருங்க...'' என்று தலைவர் சொன்னதும், ''தலைவர் தான் சொல்றாரு இல்ல... வாங்க,'' என்று அடியாட்கள் இரண்டு பேர், அவரை அலேக்காக தூக்கி, அங்கிருந்த பெரிய பார்லரில் உள்ளே தள்ளி, கதவை சாத்தினர்.


அங்கே, நூற்றுக்கும் அதிகமானோர், முகத்தில் கருப்பு களிம்பை பூசியபடி, 'டிவி' பார்ப்பதும், பேசுவதுமாக உட்கார்ந்திருந்தனர். அவர்களை யார், எவர் என்று அடையாளம் காண முடியவில்லை. அதேபோன்று, அலமேலு இட்டு அனுப்பிய லேகியம், தாண்டவராயனையும், அவர்களுக்கு இனம் காட்ட முடியாதபடி செய்திருந்தது.
'திருதிரு'வென்று தாண்டவராயன் முழிப்பதை யாரும் கண்டுகொள்ளாமல், 'டிவி'யில் லைவ்வாக காட்டிய எதையோ ஆவலோடு பார்த்தபடி இருந்தனர்.
அடுத்த சில நொடிகளில், தடாலென்று, 'வெற்றி... நம் அணிக்கு மாபெரும் வெற்றி...' என்று கூவியபடியே, எல்லார் வாயிலும் லட்டை திணித்தனர், சிலர்.
சுதாரித்து, 'டிவி' யை பார்த்த தாண்டவராயன் திடுக்கிட்டார்.
பக்கிரிசாமி மிக பவ்யமாக, தலைவர் அறையில் நுழைவதையும், தலைவருக்கு, சால்வை போத்துவதையும், அவரை, தலைவர் ஆலிங்கனம் செய்வதையும், 'டிவி' திரை, பிரேக்கிங் நியூஸ் மியூசிக்குடன், திரும்பத் திரும்ப காட்டியது. அதைப் பார்த்த தாண்டவராயனுக்கு தலை சுற்றியது.


''ஆட்சியைக் காப்பாற்ற தேவையான ஒரே ஒருவரும், தீபாவளி பரிசாக வந்து விட்டார். இனி, யார் வந்தாலும், வராவிட்டாலும், கவலையில்லை. ஆட்சியை காப்பாற்ற வந்த தங்கமகனுக்கு, எத்தனை தங்கம் கொடுத்தாலும் தகும்,'' என்று, பூடகமாக தலைவரின் பாராட்டுகள் பாதாளம் வரை பாய்ந்தன.
எப்படியும், இந்த தீபாவளி திருநாளில், யாரோ ஒரு, 'ஸ்லீப்பர் செல்' தங்கள் அணிக்கு வந்து சேர்ந்து விடுவர் என்ற நம்பிக்கையோடு, அப்படி சேர்ந்தால், அன்றே வெற்றி விழா கொண்டாட திட்டம் போட்டிருந்தார், தலைவர்.


அதன் காரணமாக, மாதக்கணக்காக ரிசார்ட்டில் இருக்கும், 'ஸ்லீப்பர் செல்'களின் முகம் பிரகாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக, எல்லாருக்கும் பேஷியல் செய்துவிட நினைத்தது தலைவரின் பிசகல்ல. அதேநேரம், பேசியல் களிம்புகளோடு அனைவரும் இருக்கும் போது, தாண்டவராயனும் லேகிய முகத்துடன், ரிசார்ட் வந்தது தான், விதியின் விளையாட்டு!


நூறோடு நூற்று ஒன்றாக, தாண்டவராயனை இந்தக்கூட்டத்தில் சேர்த்து விட்டு, பக்கிரிசாமி பரிசை தட்டிச் சென்றதும், விதியின் செயலே!
இந்நிகழ்ச்சியை, வீட்டில், 'லைவ்'வாக பார்த்துக் கொண்டிருந்த அலமேலு, ஒன்றும் புரியாமல், மயங்கி விழுந்ததும், விதி செய்த சதியே!

http://www.dinamalar.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.