Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சோதனைகளை தாண்டி சாதனை படைக்கும் யாழ். ஹார்ட்லியின் மெய்வல்லுனர்கள்

Featured Replies

சோதனைகளை தாண்டி சாதனை படைக்கும் யாழ். ஹார்ட்லியின் மெய்வல்லுனர்கள்

Hardly-college-Athletics-2017-696x464.jp
 

33 வருடகால வரலாற்றைக் கொண்ட அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் வட பகுதியைச் சேர்ந்த பாடசாலைகள் யுத்த சூழ்நிலை காரணமாக ஆரம்ப காலத்தில் பங்கேற்கவில்லை. எனினும், கடந்த 10 வருடங்களில் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில பாடசாலைகள் இப்போட்டித் தொடரில் பங்கேற்று வெற்றிகளைப் பதிவுசெய்து வருவதுடன், தேசிய மட்டத்தில் சாதனைகளையும் நிகழ்த்தி வருகின்றனர்.

இந்நிலையில், அண்மையில் நிறைவுக்கு வந்த 33ஆவது அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் 158 புள்ளிகளைப் பெற்ற வடக்கு மாகாணம், தேசிய மெய்வல்லுனர் அரங்கில் முன்னிலை வகிக்கின்ற வட மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களை பின்தள்ளி 6ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

அத்துடன், பாடசாலை விளையாட்டு விழாவில் அண்மைக்காலமாக ஆதிக்கத்தைச் செலுத்தி வருகின்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பாடசாலைகள், இம்முறை போட்டித் தொடரிலும் கோலூன்றிப் பாய்தல், ஈட்டி எறிதல், தட்டெறிதல் (Disc) மற்றும் ஈட்டி எறிதல் போட்டிகளில் 14, 16, 18 மற்றும் 20 ஆகிய வயதுப்பிரிவுகளில் வெற்றிகளைப் பதிவு செய்திருந்தன.

இதில் மெய்வல்லுனர் போட்டிகளில் யாழ்.சாவகச்சேரி இந்துக் கல்லூரி 2 தங்கம், ஒரு வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களையும், யாழ்.அளவெட்டி அருணோதயா கல்லூரி 2 தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும், யாழ். மகாஜனா கல்லூரி 2 தங்கம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்தையும், வென்றிருந்ததுடன், யாழ். பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரி ஒரு வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களையும் சுவீகரித்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், யாழ். உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் ஆண்கள் கல்லூரி தங்கப் பதக்கமொன்றையும், யாழ். இமயனன் அரசினர் தமிழ் பாடசாலை வெள்ளிப் பதக்கமொன்றையும் வென்றிருந்தன.

இந்நிலையில், அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழா வரலாற்றில் அதிகளவு பதக்கங்களை வென்ற பாடசாலைகளில் ஒன்றாக விளங்குகின்ற யாழ். பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரி, இம்முறை அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவின் மெய்வல்லுனர் போட்டிகளில் ஒரு வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை வென்று எறிதல் போட்டிகளில் தொடர்ச்சியாக தமது ஆதிக்கத்தை செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

இம்முறை அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவுக்கு ஹார்ட்லி கல்லூரியிலிருந்து 14 மாணவர்கள் கலந்துகொண்டனர். இதில் 14 வயதுக்குட்பட்ட 100 மீற்றர் அஞ்சலோட்டம் (Relay) அணியொன்றும், 100 மற்றும் 200 மீற்றர் ஓட்டப்போட்டியில் வீரரொருவரும் பங்குபற்றியிருந்ததுடன், ஏனைய வீரர்கள் மைதான நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலை மெய்வல்லுனரில் ஹார்ட்லியின் சாதனைகள்

அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் ஹார்ட்லி கல்லூரிக்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்தவர்தான், 2013 முதல் தற்போது வரை அக்கல்லூரியின் எறிதல் நிகழ்ச்சிகளின் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வருகின்ற அக்கல்லூரியின் பழைய மாணவரான ஹரிஹரன். 2007ஆம் ஆண்டு நடைபெற்ற அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் தட்டெறிதலில் வெள்ளிப் பதக்கத்தையும், 2009இல் தங்கப் பதக்கத்தையும், இல் தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர், ஜோர்ன் டார்பட் போட்டி நிகழ்வுகளில் பதக்கங்களை வென்ற ஒருவராவார்.

அவர், அதேவருடம் (2010) நடைபெற்ற தேசிய இளைஞர் விளையாட்டு விழாவில் புதிய சாதனையுடன் தங்கப் பதக்கத்தையும் வென்றார். ஜோர்ன் டார்பட் மெய்வல்லுனர், லங்கா லயன்ஸ் சம்பியன்ஷிப், அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழா உள்ளிட்ட போட்டிகளில் 6 தங்கப் பதக்கங்களை வென்ற இவர், 2010ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவிலும் வெள்ளிப் பதக்கம் வென்றார். அத்துடன் 2010 கனிஷ்ட மற்றும் 2011இல் சிரேஷ்ட மெய்வல்லுனர் குழாமிலும் அவர் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

அத்துடன், அக்கல்லூரிக்காக வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்த மற்றுமொரு வீரரான டி. பாலகுமார், 2010இல் நடைபெற்ற அகில இலங்கை விளையாட்டு விழாவில் கோலூன்றிப் பாய்தலில் தங்கப் பதக்கத்தையும், 2011இல் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றிருந்தார்.

 

 

ஹார்ட்லி கல்லூரி, 2014ஆம் ஆண்டு முதல் ஹரிஹரன் ஆசிரியரின் பயிற்றுவிப்பின் கீழ் மீண்டும் பதக்கங்களைப் பெற்றுவந்தன. அதிலும் குறிப்பாக மற்றொரு பாடசாலையில் கல்வி கற்று பின்னர் ஹார்ட்லி கல்லூரியில் இணைந்த பாலகுமார் என்ற வீரர் அந்தக் காலப்பகுதியில் தேசிய மட்டத்தில் ஒரு சில வெற்றிகளைப் பெற்றிருந்தார்.

இந்நிலையில், 2014ஆம் ஆண்டு முதல் தேசிய மட்டப் போட்டிகளில் பங்கேற்று வருகின்ற ஆனந்தன், 2014இல் கனிஷ்ட ஜோன் டார்பட் மெய்வல்லுனர் தொடரில் 14 வயதுக்குட்பட்ட பிரிவில் புதிய போட்டி சாதனை நிகழ்த்தியதுடன், 2015ஆம் ஆண்டு நடைபெற்ற கனிஷ்ட ஜோன் டார்பட் மெய்வல்லுனர் மற்றும் அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழா என்பவற்றில் தங்கப் பதக்கத்தையும் வென்றார்.

அத்துடன், அவ்வருடம் நடைபெற்ற கனிஷ்ட ஜோன் டார்பட் மெய்வல்லுனர் போட்டித் தொடரின் சிறந்த வீரராகவும் தெரிவாகியிருந்த அவர், கடந்த வருடம் நடைபெற்ற கனிஷ்ட ஜோன் டார்பட் மெய்வல்லுனர் தொடரின் ஒலிம்பிக் தீபத்தையும் ஆனந்தன் ஏற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும், அவருடைய அப்பாவுக்கு அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சை காரணமாக இவ்வருடம் நடைபெற்ற எந்தவொரு தேசிய மட்டப் போட்டிகளிலும் அவர் பங்கேற்கவில்லை.  

இவ்வாறான நீண்ட சரித்திரம் கொண்ட யாழ். ஹார்ட்லியைச் சேர்ந்த 3 கனிஷ்ட மாணவர்கள், அண்மையில் நிறைவுக்கு வந்த 33ஆவது அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் கலந்துகொண்டு ஒரு வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை வென்றிருந்தனர்.

தட்டெறிதலில் பிரகாஷ்ராஜுக்கு இரண்டாவது பதக்கம்

அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதலில் யாழ். ஹார்ட்லி கல்லூரியைச் சேர்ந்த எஸ். பிரகாஷ்ராஜ் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

குறித்த போட்டியில் அவர், 40.35 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்து வெள்ளிப் பதக்கத்தை வென்றதுடன், புதிய பாடசாலை வர்ண சாதனையும் நிகழ்த்தினார்

 

 

2015ஆம் ஆண்டு நடைபெற்ற அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் முதற்தடவையாகக் கலந்துகொண்ட பிரகாஷ்ராஜ், தட்டெறிதலில் 7ஆவது இடத்துடன் வர்ண சாதனையும், 2016இல் நடைபெற்ற சிரேஷ்ட ஜோன் டார்பட் மெய்வல்லுனரில் 3ஆவது இடத்தையும் வென்றார். அத்துடன் அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் 6ஆவது இடத்தைப் பெற்று வர்ண சாதனையும் படைத்தார்.

pragash-raj-2-300x200.jpg எஸ். பிரகாசராஜ்

இதனையடுத்து இவ்வருட முற்பகுதியில் நடைபெற்ற தேசிய கனிஷ்ட மெய்வல்லுனரில் சம்மட்டி எறிதலில் தங்கப் பதக்கத்தையும், தட்டெறிதலில் வெள்ளிப் பதக்கத்தையும் அவர் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் சிரேஷ்ட ஜோன் டார்பட் மெய்வல்லுனரில் தட்டெறிதலில் வெள்ளிப் பதக்கத்தை வென்றதுடன், அண்மையில் அநுராதபுரத்தில் நடைபெற்ற தேசிய இளைஞர் சேவைகள் மன்ற விளையாட்டு விழாவிலும் தங்கம் வென்றிருந்தார்.

மிதுனுக்கு ஈட்டி எறிதலில் வெண்கலம்

16 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் கலந்துகொண்ட எஸ்.மிதுன் ராஜ், 53.65 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்து வெண்கலப்பதக்கம் வென்றார்.

mithunraj-225x300.jpg எஸ்.மிதுன் ராஜ்

எனினும், 16 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான குண்டு போடுதலில் கலந்துகொண்ட மிதுன் ராஜ், 13.64 மீற்றர் தூரத்தை எறிந்து 4ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

கடந்த வருடம் நடைபெற்ற கனிஷ்ட ஜோன் டார்பட் மெய்வல்லுனரில் முதற்தடவையாகக் கலந்துகொண்டு உயரம் பாய்தலில் தங்கப் பதக்கத்தை வென்ற மிதுன், அக்கல்லூரிக்காக தேசிய மட்டத்தில் உயரம் பாய்தல் போட்டியில் முதல் பதக்கத்தை வென்று கொடுத்த வீரராகவும் தனது பெயரைப் பதிவுசெய்துகொண்டார். எனினும், குறித்த தொடரில் தட்டெறிதலில் 5ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

தட்டெறிதலில் அபிஷாந்த்துக்கு வெண்கலம்

இக்கல்லூரியின் மற்றொரு மாணவரான டி. அபிஷாந்த் 18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் கலந்துகொண்டு வெண்கலப் பதக்கம் வென்றார். அவர் குறித்த போட்டியில் 39.59 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜோன் டார்பட் மெய்வல்லுனரில் முதற்தடவையாகக் கலந்துகொண்ட அபிஷாந்த், தட்டெறிதலில் 3ஆவது இடத்தையும், 2016இல் நடைபெற்ற கனிஷ்ட மெய்வல்லுனரில் தங்கப் பதக்கத்தையும் வென்றார். எனினும், கடந்த வருடம் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் வர்ண சாதனையுடன் 4ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

மெய்வல்லுனரில் ஹார்ட்லிக்கு உதவிகள் கிடைப்பதில்லை என்கிறார் பயிற்சியாளர் ஹரிஹரன்

கரவெட்டி பிரதேச விளையாட்டுத்துறை அதிகாரியாகக் கடமையாற்றி வருகின்ற ஹரிஹரன், கடந்த வருடம் சர்வதேச மெய்வல்லுனர் சம்மேளனத்தின் பயிற்றுவிப்பாளர்களுக்கான முதல் நிலை பரீட்சையிலும் தோற்றியிருந்தார்.

 

 

இவர் ஹார்ட்லி கல்லூரிக்காக தன்னார்வத்துடன் முன்வந்து எந்தவொரு கொடுப்பனவையும் பெற்றுக்கொள்ளாமல் எறிதல் நிகழ்ச்சிகளின் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வருகின்றார். ஹரிஹரனின் கீழ் 10 வீரர்கள் பயிற்சிகளை தற்போது பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஹரிஹரன் ஆசிரியர் தியகம மைதானத்தில் இருந்து ThePapare.com இற்கு வழங்கிய விசேட செவ்வியில்,

”நான் படிக்கின்ற காலத்தில், அதாவது 2007ஆம் ஆண்டு நடைபெற்ற அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் முதற்தடவையாக பதக்கமொன்றை ஹார்ட்லி கல்லூரி பெற்றேன். அது போன்றே கடந்த சில வருடங்களாக நடைபெற்றுவருகின்ற ஜோன் டார்பட், தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் மற்றும் அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாக்களில் பங்கேற்று எமது பாடசாலை மாணவர்கள் பதக்கங்களை வென்று வருகின்றமை மகிழ்ச்சியளிக்கிறது.

இதுவரை காலமும் கால்பந்து மற்றும் கிரிக்கெட் விளையாட்டுகளுக்கு மாத்திரமே முன்னுரிமை கொடுத்து வந்த யாழ். ஹார்ட்லி கல்லூரியின் பழைய மாணவர் சங்கம், மெய்வல்லுனர் போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில் தொடர்ந்தும் பொடு போக்காக இருந்து வருகின்றமை கவலையளிக்கிறது.

எனினும், கடந்த வருடம் நவம்பர் மாதம் உலகின் அனைத்து பாகங்களிலும் வாழ்ந்து வருகின்ற ஹார்ட்லி கல்லூரியின் பழைய மாணவர்களின் பங்குபற்றலுடன் இடம்பெற்ற குளோபல் ஹார்ட்லி தின ஒன்றுகூடலின் பிறகு மெய்வல்லுனர் போட்டிகளுக்கு வழங்கப்படுகின்ற முன்னுரிமையில் சிறியதொரு முன்னேற்றம் காணப்பட்டது. ஆனால் அதுவும் பெரியளவில் வெற்றியைக் கொடுக்கவில்லை.

எனவே, தேசிய மட்டத்தில் பதக்கங்களை வென்று வருகின்ற எமது வீரர்களின் திறமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு செல்வதால் அதற்கு தேவையான வசதிகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களைப் பெற்றுக்கொள்ள பழைய மாணவர்களின் உதவி இன்னும் இன்னும் தேவைப்படுகின்றன. பொதுவாக, கோலூன்றிப் பாய்தலுக்காக கோல் ஒன்றை வாங்குவதற்கு சுமார் ஒன்றரை இலட்சம் ரூபா தேவைப்படுகின்றது. எமது பாடசாலையில் கோலூன்றிப் பாய்தலுக்கு திறமையான மாணவர்கள் இருந்தாலும், அதற்கான கோல்களைப் வாங்குவதற்கான வசதிகள் எமது மாணவர்களுக்கு இல்லை.

அதிலும் குறிப்பாக, அருணோதயா, மகாஜனா மற்றும் சாவகச்சேரி இந்து போன்ற பாடசாலைகளில் கோலூன்றிப் பாய்தல் போட்டிகளுக்காக அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதுடன், அந்தந்த பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கங்கள் ஊடாக மாணவர்களுக்கு கோல்கள் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களும் வெளிநாடுகளில் இருந்து வாங்கிக் கொடுக்கப்படுகின்றன.

 

 

ஆனால் எமது பழைய மாணவர் சங்கம் அவ்வாறான உதவிகளை செய்வதற்கு முன்வராத காரணத்தால் திறமையான மாணவர்கள் மற்றும் வளங்கள் இருந்தும் கோலூன்றிப் பாய்தலில் எமது பாடசாலை தொடர்ந்தும் பின்தங்கிய நிலையில் உள்ளமை கவலையளிக்கிறது.

உதாரணமாக தற்போது ஒரு சாதாரண தட்டொன்றை வாங்குவதற்கு 3 ஆயிரம் ரூபா செலவாகின்றது. ஆனால் சர்வதேச தரத்தைக் கொண்ட தட்டொன்றை வாங்குவதற்கு 20 ஆயிரம் ரூபா பணம் தேவையாகின்றது. நான் விளையாடி காலத்திலும் இதே நிலைதான் காணப்பட்டது. அதிலும் குறிப்பாக எறிதல் போட்டிகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்ற சப்பாத்தொன்றின் விலை 60 ஆயிரம் ரூபாவாகும். ஆனால் அவ்வாறு சப்பாத்துக்களை வாங்குவதற்கு இம்மாணவர்களுக்கு வசதிகள் கிடையாது. ஆனால் இந்த மாதிரியான உதவிகள் ஏனைய பாடசாலைகளுக்கு கிடைத்து வந்தாலும், அதை உடனடியாக வாங்க முடியாத இக்கட்டான சூழ்நிலையில்தான் நாம் தற்போது உள்ளோம்.

அவ்வாறான நிலைமையிலும் எமது மாணவர்கள் தேசிய மட்டத்தில் பதக்கங்களை வென்று வருவது பெருமையாக உள்ளது. எனினும், இக்கல்லூரியின் பழைய மாணவனாக, மாணவர்களுக்குத் தேவையான விளையாட்டு உபகரணங்களைப் பெற்றுக்கொடுக்க 100 சதவீதம் முயற்சி செய்து வருகின்றேன்” என்று அவர் தெரிவித்தார்.

எனவே எமது மாணவர்கள் மெய்வல்லுனர் விளையாட்டிலும் தொடர்ந்து திறமைகளை வெளிப்படுத்தி இக்கல்லூரிக்கு மாத்திரமல்லாது வட மாகாணத்திற்கும், இந்நாட்டிற்கும் பெருமையை தேடிக்கொடுக்கின்ற சிறந்த நட்சத்திர வீரர்களாக வரவேண்டிய கனவு எனக்கு உள்ளது. அந்த கனவை நனவாக்குவதற்கு எமது வீரர்களுக்குத் தேவையாகவுள்ள தட்டெறிதல், ஈட்டி எறிதல் மற்றும் கோலூன்றிப் பாய்தல் போட்டிகளுக்கான உபகரணங்களைப் பெற்றுக்கொடுக்க ஹார்ட்லி கல்லூரியின் பழைய மாணவர் சங்கம், நலன் விரும்பிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் விளையாட்டுத்துறையுடன் தொடர்புடைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுப்பதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

கண் துடைப்பாகும் ஹார்ட்லியின் மெய்வல்லுனர்

33 வருட கால வரலாற்றைக் கொண்ட அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் ஹார்ட்லி கல்லூரிக்கு 2007ஆம் ஆண்டு பொற்காலம் என்று அழைக்கலாம். அதிலும் குறிப்பாக அந்த ஆண்டு நடைபெற்ற அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் வட மாகாணம் 2 பதக்கங்களை வென்றிருந்தன. இதில் ஹார்ட்லி கல்லூரி, அளவெட்டி அருணோதயா கல்லூரி ஆகியன தலா ஒவ்வொரு பதக்கங்களை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், யுத்தம் நிறைவுக்கு வந்தபிறகு விளையாட்டுத்துறையில் காலூன்றத் தொடங்கிய வட மாகாணம், பாடசாலை விளையாட்டிலும் முன்னேற்றம் கண்டு வந்தன.

 

 

அந்த வரிசையில் பருத்தித்துறை ஹார்ட்லி மற்றும் அளவெட்டி அருணோதயாவின் வரிசையில் தெல்லிப்பளை மகாஜனா, சாவகச்சேரி இந்து உள்ளிட்ட பாடசாலைகளும் தேசிய மட்டத்தில் வெற்றிகளைப் பதிவுசெய்ய ஆரம்பித்தன.

எனினும், தேசிய மட்டப் போட்டிகளில் அதிக தடவைகள் பங்கேற்ற பெருமையைக் கொண்ட யாழ். ஹார்ட்லி கல்லூரி, 2014இல் ஒரு பதக்கம், 2015இல் 5 பதக்கங்கள், 2016இல் 7 பதக்கங்களையும் வென்றதுடன், இவ்வருடம் நடைபெற்ற இதுவரையான போட்டிகளில் 9 பதக்கங்களையும் வென்று வட மகாணம் சார்பாக தேசிய மட்டப் போட்டிகளில் முன்னிலை வகிக்கின்ற பாடசாலையாக வலம் வருகின்றமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதன்படி, 2007 முதல் அகில இலங்கை மட்டத்தில் பதக்கங்களை வென்று வந்த அக்கல்லூரி, இதுவரை நடைபெற்ற தேசிய மட்டப் போட்டிகளில் 25 பதக்கங்களை வென்று சாதனை படைத்தாலும், அப்பாடசாலை சார்பாக இதுவரை காலமும் மெய்வல்லுனர் விளையாட்டில் ஈடுபட்டு வருகின்ற வீரர்கள் எந்தவொரு வசதிகளும் இல்லாமல் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் இவ்வெற்றிகளை பெற்று வருகின்றமை மறுக்க முடியாத உண்மையாகும்.

அதிலும் குறிப்பாக பாடசாலை மாணவர்களின் அர்ப்பணிப்பும், பெற்றோர்களின் ஊக்குவிப்பும்தான் இதுவரை காலமும் அப்பாடசாலை தேசிய மட்டத்தில் பெற்ற வெற்றிகளுக்கு முக்கிய காரணம் எனலாம்.

 

இதேவேளை, பாடசாலை மட்டத்தில் அண்மைக்காலமாக பல வெற்றிகளைப் பெற்று வருகின்ற அருணோதயா, மகாஜனா மற்றும் சாவகச்சேரி இந்து ஆகிய பாடசாலைகளின் விளையாட்டுத்துறை முன்னேற்றத்துக்கு பழைய மாணவர் சங்கங்களினால் தாராளமாக அனுசரணை வழங்கப்பட்டு வருகின்றன.

இதில், அருணோதயா, மாகாஜனாவுக்கு மெய்வல்லுனர் விளையாட்டுக்காக கிடைக்கின்ற நிதி உதவிகள் போன்று ஹார்ட்லிக்கு கிடைப்பதில்லை. அந்தப் பாடசாலைகளுக்காக வருடாந்தம் 15 இலட்சம் ரூபா பணத்தை பழைய மாணவர்கள் சங்கம் செலவிடுவதுடன், மெய்வல்லுனர் போட்டிகளுக்காக மட்டும் பிரத்தியேகமாக போஷாக்கு உணவுகளையும் வழங்கி வருகின்றனர். அத்துடன் கோலூன்றிப் பாய்தலை செய்கின்ற பாடசாலைகளில் வருடமொன்றுக்கு குறைந்தது 4 கோல்கள் உடைவதுடன், அதற்கு 4 அல்லது 5 இலட்சம் ரூபா பணத்தையும் செலவிடுகின்றனர்.

எனவே கால்பந்து மற்றும் கிரிக்கெட் போட்டிகளுக்கு ஹார்ட்லி கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் மற்றும் பாடசாலை சமூகம் ஆகியன அளிக்கின்ற முக்கியத்துவத்தை ஏன் மெய்வல்லுனர் விளையாட்டுக்கு அளிப்பதில்லை?

இதுவரை காலமும் எந்தவொரு வசதிகளுமின்றி தேசிய மட்டத்தில் வெற்றிகளைப் பதிவுசெய்து வருகின்ற ஹார்ட்லி கல்லூரி மாணவர்களுக்கு தேவையான வசதிகளை எப்போது பெற்றுக்கொடுப்பார்கள். கண்துடைப்பாக இருந்து வருகின்ற மெய்வல்லுனர் விளையாட்டின் முன்னேற்றத்துக்கு பழைய மாணவர்கள் எப்போது செவி சாய்ப்பார்கள்?  

எனவே, இனிமேலும் காலத்தை வீணடிக்காமல் மாணவர்களின் எதிர்காலத்தையும், பாடசாலையின் கௌரவத்தையும் கருத்திற்கொண்டு மெய்வல்லுனர் விளையாட்டின் முன்னேற்றத்துக்காக அனைத்து விதமான ஒத்துழைப்புக்களையும் வழங்கி எதிர்காலத்தில் சிறந்த வீரர்களை உருவாக்குவதற்கு அனைவரும் முன்வர வேண்டும் என்பதே விளையாட்டை நேசிக்கும் அனைவரது எதிர்பார்ப்பாகும்.  

http://www.thepapare.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.