Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வேலைக்காரன் திரை விமர்சனம்

Featured Replies

வேலைக்காரன் திரை விமர்சனம்

வேலைக்காரன் திரை விமர்சனம்

 
 

வேலைக்காரன் திரை விமர்சனம்

 

தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர்கள் படங்கள் வந்தாலே திரையரங்க உரிமையாளர் முதல் தியேட்டருக்கு வெளியே டீக்கடை போட்டு இருப்பவர் வரை திருப்திப்படுத்தும். அப்படி தொடர்ந்து 9 படங்கள் ஹிட் கொடுத்த சிவகார்த்திகேயன் 10வது படமான வேலைக்காரனிலும் ஹிட் அடித்தாரா? பார்ப்போம்.

கதைக்களம்

சென்னையில் உள்ள கொலைக்கார குப்பத்தில் வாழ்பவர் சிவகார்த்திகேயன். அந்த இடத்தில் எல்லோரும் பிரகாஷ் ராஜின் கண்ட்ரோலில் அடிதடி என வேலைப்பார்த்து வர, இது சிவகார்த்திகேயனுக்கு கோபத்தை ஏற்படுத்துகின்றது.

நம் கண்முன்னே ஒரு சமுதாயம் கெட்டு போவதை பார்க்கும் அவர், ஒரு ரேடியோ ஐடியா மூலம் ஒரு சில வேலைகளை பார்க்கின்றார். ஆனால், அது பிரகாஷ்ராஜுக்கு கோபத்தை ஏற்படுத்த அந்த ஐடியாவை இழுத்து மூடி ஒரு சேல்ஸ் வேலைக்கு செல்கின்றார்.

அந்த கம்பெனியில் சிவகார்த்திகேயன் வளர்ச்சிக்கு பஹத் பாசில் பல விதங்களில் உதவுகின்றார். HardWork தேவையில்லை, ஸ்மார்ட் Work தான் முக்கியம் என்று சிவகார்த்திகேயன் புரிந்து வேலை செய்ய, ஒரு கட்டத்தில் தன்னால் இந்த சமுதாயம் எத்தனை பெரிய பிரச்சனையை சந்திக்கவிருக்கின்றது என்பதை உணர்கின்றார்.

அதை தொடர்ந்து ஒருவன் HardWork, ஸ்மார்ட் Work என எதுவும் செய்ய தேவையில்லை, Good Work செய்தால் போதும் என்பதை சிவகார்த்திகேயன் பல முதலாளிகளுக்கு எடுத்துக்காட்டுவதே இந்த வேலைக்காரன்.

படத்தை பற்றிய அலசல்

சிவகார்த்திகேயன் முதன் முதலாக தன் எல்லையை மீறி இறங்கி அடித்துள்ளார். தான் நினைத்தால் இரண்டு காமெடி, மூன்று பாட்டிற்கு டான்ஸ் ஆடி படத்தை ஓட்டி விடலாம் என்றில்லாமல், மக்களுக்கு தேவையான ஒரு கதைக்களத்தை எடுத்து கலக்கியுள்ளார், காமெடி என்றில்லாமல் சீரியஸ் காட்சிகளில் பல இடங்களில் அசத்தியுள்ளார், அதிலும் தன் வீட்டிலேயே பொருளை விற்க வரும் மார்கெட்டிங் பாய் அப்துலிடம் பேசும் காட்சிகள் எல்லாம் சூப்பர் சிவா.

பஹத் பாசிலும் தமிழ் சினிமாவிற்கு நல்ல வரவேற்பு, கடைசி வரை சட்டை கூட அழுக்கு ஆகாமல் அலட்டிக்கொள்ளாமல் நடித்துள்ளார். இவர்களை தவிர படத்தில் மினி கோடம்பாக்கமே இருக்கின்றது, ஆனால், சார்லி, ரோகினி, விஜய் வசந்த் தவிர பெரிதும் யாரும் மனதில் பதியவில்லை.

படத்தின் கதைக்களம் இன்றைய மக்களின் அடிப்படை தேவைகள் அதிலும் ஒரு மிடில் க்ளாஸ் மக்களை எப்படி ஒரு மார்க்கெட்டிங் செய்து தங்கள் பொருட்களை பெரிய கம்பெனிகளை வாங்க வைக்கின்றார்கள் என்பதை க்ளாஸ் எடுத்துள்ளார் மோகன்ராஜா. அதிலும் பஹத் பாசில் ஒரு காட்சியில் சூப்பர் மார்க்கெட்டில் எந்த பொருள் எங்கே இருக்க வேண்டும் என்பதை விளக்கும் காட்சி ஒரு நொடி புருவம் உயர்த்த வைக்கின்றது.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள், சாப்பிடும் திண்பண்டங்கள் என அனைத்திலும் இத்தனை அரசியல் உள்ளதா? என்பதை நம்மையே அச்சப்படுத்துகின்றது. அதற்கு படத்தின் வசனமும் மிகப்பெரிய பலம், அத்தனை பவர்புல்லாக இருக்கின்றது.

முன்பு நாம் தவறு என்று பயந்து செய்த விஷயத்தை இந்த தலைமுறை மிக சந்தோஷமாக கொண்டாடி செய்கின்றது. வேலைக்காரன் என்னைக்கும் முதலாளியை நம்புகிறான், ஆனால், முதலாளி தான் நம்மை நம்பாமல் கேமரா வைத்து நம்மை நோட்டமிடுகின்றான் என்ற வசனம் எல்லாம் விசில் பறக்கின்றது. அதே சமயம் வசனத்திற்கு கொடுத்த முக்கியத்துவத்தை கொஞ்சம் தனி ஒருவன் போல் திரைக்கதையிலும் காட்டியிருக்கலாம்.

அனிருத்தின் இசையில் கருத்தவெல்லாம் கலீஜா தாண்டி எதுவும் மனதில் நிற்கவில்லை. பின்னணியிலும் கொஞ்சம் தடுமாறியுள்ளார், ராம்ஜியின் ஒளிப்பதிவில் செட் போட்டு எடுத்து குப்பம் கூட ரியலாக தெரிகின்றது.

க்ளாப்ஸ்

படத்தின் கதைக்களம் மற்றும் வசனங்கள்.

சிவகார்த்திகேயன், பஹத் பாசிலின் நடிப்பு, ராம்ஜி ஒளிப்பதிவு, ஆர்ட் Work பற்றி சொல்லியே ஆகவேண்டும், ஒரு இடத்தில் கூட செட் என்று தெரியவில்லை.

பல்ப்ஸ்

இத்தனை வலுவாக கதைக்களம், வசனம், நடிகர்கள் அமைந்தும் திரைக்கதையில் கொஞ்சம் விறுவிறுப்பு குறைவு.

நயன்தாரா மற்றும் பல முன்னணி நடிகர்கள் படத்தில் எதற்காக இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

மொத்தத்தில் வேலைக்காரன் இனி ஒரு பொருள் வாங்கும் முன் ஒரு நொடி எல்லோரையும் யோசிக்க வைத்து விடுவான்.

http://www.cineulagam.com/films/05/100898?ref=home-top-trending

  • தொடங்கியவர்

சினிமா விமர்சனம்: வேலைக்காரன்

படம்படத்தின் காப்புரிமை24AM STUDIOS/VELAIKKARAN
   
நடிகர்கள் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ஃபகத் ஃபாசில், பிரகாஷ் ராஜ், சரத் லோகித்ஸ்வா , சினேகா தம்பி ராமைய்யா, சதீஷ், மன்சூர் அலிகான், முனீஸ்காந்த், விஜய் வசந்த்
   
இசை அனிருத்
   
இயக்கம் ஜெயம் ராஜா

தொடர்ந்து வெற்றிகரமான படங்களைக் கொடுத்துக்கொண்டிருக்கும் சிவகார்த்திகேயனை கதாநாயகனாக வைத்து, பெரும் பொருட் செலவில் உருவாக்கப்பட்டிருக்கும் படம். படத்தின் இயக்குனர் மோகன் ராஜாவும் ஒரு கமர்ஷியல் இயக்குனர் என்பதால் பெரும் எதிர்பார்ப்பை இந்தப் படம் ஏற்படுத்தியிருந்தது.

கொலைகாரக் குப்பத்தில் வசிக்கும் அறிவு (சிவகார்த்திகேயன்) தங்கள் பகுதியில் ஒரு சமூக வானொலி ஒன்றை நடத்திவருகிறார். அதே குப்பத்தைச் சேர்ந்த காசி (பிரகாஷ் ராஜ்) அடிதடி, காசுக்காக கொலைசெய்வது என செயல்படுவதால், அந்தப் பகுதி இளைஞர்களும் அவரிடம் சேர்ந்து வேலைபார்க்கிறார்கள்.

தன் வானொலி மூலம் அந்த இளைஞர்களை மீட்க நினைக்கிறார் அறிவு. ஆனால், காசியால் அந்த வானொலி மூடப்பட, மிகப் பெரிய உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பணியில் சேர்கிறார். ஆனால், அங்கு தயாரிக்கப்படும் உணவுகள் புற்றுநோய் உள்ளிட்ட நோய்களை ஏற்படுத்துகின்றன என்று தெரிந்ததும், அறிவு எடுக்கும் நடவடிக்கைகள்தான் மீதிப் படம்.

படம்படத்தின் காப்புரிமை24AM STUDIOS/VELAIKKARAN

அதிகம் விற்பனையாகும் பாக்கெட் உணவுப் பொருட்களின் விற்பனைக்குப் பின்னால் உள்ள அரசியல், உடல்நலக் கேடு ஆகியவற்றை பின்னணியாக வைத்து ஒரு திரைப்படத்தை எடுப்பதே ஒரு துணிச்சலான முயற்சிதான். அதிலும் படம் நெடுக, அந்தப் பொருட்கள் ஏற்படுத்தக்கூடிய அபாயத்தைப் பற்றிப் பேசுவதும் இந்தப் படத்தின் மிக முக்கியமான அம்சம். ஆனால், ஒரு சினிமா என்ற வகையில், இந்தப் படம் முழுமையாக இல்லை.

படத்தின் துவக்கத்தில் சிவகார்த்திகேயன், ஒரு சமூக வானொலி ஒன்றைத் துவங்கி தன் குப்பத்து மக்களைத் திருத்துவதற்காகப் பேச ஆரம்பிக்கிறார். பிறகு, தொழிற்சாலை ஒன்றில் சேர்ந்து அங்கிருக்கும் தொழிலாளர்களிடம் பேசுகிறார். பிறகு, நண்பர்களிடமும் நயன்தாராவிடமும் பேசுகிறார். பிறகு, படம் பார்ப்பவர்களிடம் பேசுகிறார், பேசிக்கொண்டே இருக்கிறார்.

படம்படத்தின் காப்புரிமை24AM STUDIOS/VELAIKKARAN

சமூக வானொலியை ஆரம்பிப்பது, அதன் மூலமாக பிரகாஷ் ராஜுடன் மோதல் வெடிப்பது என முற்பாதியில் சிறிதளவுக்கு சுவாரஸ்யமாக நகர்கிறது படம்.

ஆனால், இரண்டாம் பாதியில் ஒரு மிகப் பெரிய உணவுப் பொருள் தயாரிக்கும் நிறுவனத்தில் தன் பேச்சின் மூலமாக தொழிலாளர்கள் மனதை மாற்றி இரண்டு நாளைக்கு அபாயமில்லாத வகையில் பொருளைத் தயாரிப்பது, பிறகு சந்தையில் இருக்கும் எல்லா நிறுவனங்களிலும் தன் பேச்சின் மூலமாக அதேபோல பொருட்களைத் தயாரிக்க வைக்க முயற்சிப்பது என நம்பமுடியாத, குழப்பமான காட்சிகளோடு நகர்கிறது படம்.

ஒரு நிறுவனத்தில் இரண்டு நாட்களுக்கு தரமாகப் பொருட்களைத் தயாரிக்க வைத்துவிட்டு, அதை வைத்து பிற நிறுவனங்களின் உரிமையாளர்களையே மிரட்டுவதாக வரும் காட்சிகள் படத்தின் மிக மோசமான பகுதிகளில் ஒன்று. இதைவைத்து, வில்லன் எல்லா நிறுவனங்களின் பங்குகளையும் வாங்கிவிடுகிறாராம். அதற்குப் பிறகு, சிவகார்த்திகேயன் செய்யும் எல்லாவற்றையும் வெறுமனே பக்கத்தில் இருந்து வேடிக்கை பார்க்கிறார்.

பிறகு, தரமாக தயாரிக்கப்பட்ட பொருட்களை தீயை வைத்து கொளுத்துகிறார். முடிவில் எல்லோரும் இரவில் 12 மணிக்கு தங்கள் வீட்டில் விளக்கேற்றுங்கள் என்கிறார் சிவகார்த்திகேயன். அதேபோல எல்லோரும் விளக்கை ஏற்றுகிறார்கள். பிறகு, சிவப்புக் கொடியேந்தி பாடுகிறார்கள். அதோடு படம் முடிகிறது.

படம்படத்தின் காப்புரிமை24AM STUDIOS/VELAIKKARAN

தொடர்ச்சியாக நகைச்சுவை கலந்த படங்களிலேயே நடித்துவந்த சிவகார்த்திகேயன், இந்தப் படத்தில் வேறொரு தளத்திற்கு நகர முயற்சித்திருக்கிறார். ஆனால், திரைக்கதை அதற்கு ஒத்துழைக்கவில்லை. இந்தப் படத்தில் நயன்தாராவுக்கு சுத்தமாக வேலையில்லை. ஒரே ஒரு பாடலில் மட்டும் வந்துபோகிறார்.

மற்ற காட்சிகள் எல்லாம் துண்டுதுண்டாக வந்துபோகின்றன. அவர் வரும் காட்சிகளை நீக்கிவிட்டாலும் படத்தில் எந்த பாதிப்பும் இருக்காது என்கிற வகையில் இருக்கிறது அவரது பாத்திரம்.

மலையாள நடிகரான ஃபகத் ஃபாஸிலுக்கு இந்தப் படத்தில் வில்லன் பாத்திரம். ஆரம்பத்தில் வசீகரிக்கிறார். பிறகு, சிரித்துக்கொண்டே ஏதோ பெரிதாகச் செய்யப்போகிறார் என்று பார்த்தால் கடைசிவரை எதுவுமே செய்யாமல் போகிறார்.

கதாநாயகியாக வரும் நயன்தாராவைவிட சினேகாவுக்கு அழுத்தமான பாத்திரம். அதைச் சிறப்பாகச் செய்திருக்கிறார் அவர்.

படம்படத்தின் காப்புரிமை24AM STUDIOS/VELAIKKARAN

இவர்கள் தவிர, தம்பி ராமைய்யா, மன்சூர் அலிகான், முனீஸ் காந்த், சதீஷ், காளி வெங்கட் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் சின்னச் சின்ன பாத்திரங்களில் தலைகாட்டிவிட்டுப் போகிறார்கள்.

அனிருத்தின் இசை, ஒளிப்பதிவு, சிறப்பான கலை இயக்கம் எல்லாம், படம் முழுக்க பேசப்படும் அறிவுரைகளுக்கும் குழப்பமான திரைக்கதைக்கும் நடுவில் எடுபடாமலேயே போகின்றன.

இந்தப் படத்தின் முக்கியமான பஞ்ச் வசனம், "சிறந்த சொல், செயல்" என்பது. ஆனால், படத்தில் வெறும் சொற்கள் மட்டுமே கொட்டிக்கொண்டேயிருக்கின்றன.

http://www.bbc.com/tamil/arts-and-culture-42454456

  • தொடங்கியவர்

நீங்கள் வேலைக்காரனா... நுகர்வோரா... இரண்டுமா..?! - 'வேலைக்காரன்' விமர்சனம்

 

முதலாளிகள் செய்யும் விதிமீறல்களை, அதிகார துஷ்பிரயோகங்களை, லாபவெறி வேட்டைகளை ஆபீஸர் எதிர்த்து கேட்கமாட்டான், அத்தாரிட்டியும் கேட்காது. ஆனால், ஒர்க்கர் கேட்பான். இந்த `வேலைக்காரனு'ம் கேட்கிறான்.

வேலைக்காரன் விமர்சனம்

 

சென்னையிலுள்ள `கொலைகார' குப்பத்தில் பிறந்து வளர்ந்தவர் சிவகார்த்திகேயன். ஆங்கிலேயர் காலத்தில் கூலிக்கார குப்பமாக இருந்து, நாளடைவில் கொலைகார குப்பமாக திரிந்துவிட்ட அந்தக் குப்பத்தில் `கம்யூனிட்டி ரேடியோ' நடத்தி வருகிறார். அந்தக் குப்பத்து மக்களின் வறுமையைப் பயன்படுத்தி வன்முறைக்குள் அவர்களை தள்ளிவிடுகிறார் பிரகாஷ்ராஜ். அவரின் அசல் முகத்தை தோலுரித்துக் காட்ட, தனது  `குப்பம் எஃப் எம்' மூலம் முயற்சி செய்கிறார் சிவகார்த்திகேயன். அதேநேரம், கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றில் மார்கெட்டிங் பணியில் சேருபவர், அங்கே மார்க்கெட்டிங் கில்லாடி ஃபஹத் ஃபாசிலை சந்திக்கிறார். எப்படியாவது பொருளாதார ரீதியாக நல்ல நிலைமையை அடைந்து தன் குப்பத்து இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக வேண்டுமென கடுமையாக உழைக்கிறார் சிவகார்த்திகேயன். ஒருகட்டத்தில், எப்படி தன் குப்பத்து மக்களை பிரகாஷ்ராஜ் சுயநலத்திற்காக மோசமாய் பயன்படுத்தி ஏமாற்றுகிறாரோ, அதேபோல்தான் கார்ப்பரேட் நிறுவனங்களும் சுயநலத்திற்காக தொழிலாளர்களையும் நுகர்வோர்களையும் மோசமாய் பயன்படுத்தி ஏமாற்றிவருகின்றன என்பது புரியவருகிறது சிவாவுக்கு. கார்ப்பரேட் எனும் சிலந்தி வலையில் சிக்கிக்கொண்ட அவர், எப்படி அதிலிருந்து தப்பிக்கிறார், தப்பித்தபின் என்ன செய்கிறார் என்பதே மீதிக்கதை.

அறிவு எனும் அறிவாளி இளைஞனாக சிவகார்த்திகேயன். வழக்கமான ரைமிங், டைமிங் காமெடிகள், குறும்பு உடல்மொழிகள் இல்லாத சிவகார்த்திகேயன். படத்தில் அவருக்கு பக்கம் பக்கமாக வசனங்கள், சென்னை வழக்கில் அச்சு பிசகாமல் பேசி பிச்சு உதறியிருக்கிறார். ஆனால், பேசிக் கொண்டே மட்டும் இருக்கிறார். அதனாலேயே இது அவருக்கு கிட்டத்தட்ட அக்னிபரீட்சை. காமெடி, நடனம் என வழக்கமான பாதையிலிருது டைவர்ஷன் எடுத்து, முழுக்க சீரியஸ் ஆகியிருக்கிறார். பொருத்தம்தான் என்றாலும் சிவா ஸ்பெஷல் விஷயங்கள் மிஸ் ஆகவும் செய்கிறது. ஒரு மாஸ் படம் என்றான பின்னும் ஃபஹதின் நிழலிலே முக்கால்வாசி படம் நகர வேண்டியிருப்பதால் ஹீரோயிசமும் சறுக்குகிறது. ஆனால், தன்னால் எல்லா உணர்ச்சிகளையும் கையாள முடியும் என அழுத்தமாக பதிவு செய்த விதத்தில் 'செம சிவா'.

வேலைக்காரன் விமர்சனம்

நாயகி மிருனாளினியாக நயன்தாரா, சிவாவே எல்லா வசனங்களையும் பேசிவிடுவதால் அவர் எதிரில் நின்று அமைதியாக/வருத்தமாக/கோபமாக/காதலாக/அதிர்ச்சியாக/ஆவேசமாக/இன்னபிறவுமாக கேட்டுக் கொண்டே இருக்கிறார். ’தனி ஒருத்தி’யை இப்படி க்ளிஷே கதாநாயகி ஆக்கியிருக்க வேண்டாம் ராஜா. ஃபஹத் ஃபாசில், அடக்கி வாசித்தே மிரட்டியிருக்கிறார். அந்த ஒரு ஆச்சர்ய ட்விஸ்ட்டுக்குப் பிறகு ஸ்கோர் பண்ண பெரிய விஷயமில்லாமல் பார்வை/ரியாக்‌ஷன்களிலேயே பின்னியெடுக்கிறார். நல்வரவு பாஸ்! பிரகாஷ்ராஜ், சினேகா, சார்லி, ரோகினி, சதீஷ், ரோபோ சங்கர், ஆர்ஜே பாலாஜி, காளி வெங்கட், ராமதாஸ், மன்சூர் அலிகான், தம்பி ராமைய்யா, வினோதினி எனப் படத்தில் அத்தனை நட்சத்திரங்கள். ஆனால், ’பாக்யா’ விஜய் வசந்த் மட்டும் கவனிக்க வைக்கிறார். 

கம்யூனிஸம், கன்ஸ்யூமரிஸம் எல்லாத்தையும் கலந்துகட்டி அடித்திருக்கிறார் மோகன்ராஜா. தேவைக்கு அதிகமாக நுகரும் பொருள்மய வாழ்க்கை, தொழிலாளர்களுக்கும் நுகர்வோருக்கும் இடையிலான உறவு, கொள்ளை லாபத்திற்காக கலக்கப்படும் விஷம் எனப் பல விஷயங்களை தொட்டிருக்கிறார். ‘நாம பார்க்குற வேலைக்குதான் விஸ்வாசமா இருக்கணும், முதலாளிக்கு இல்ல’, `நாம பொருளை விக்கலை, பொய்யை விக்குறோம்', `தீவுன்னு நினைச்சு திமிங்கலம் முதுகுல நின்னுட்டுருக்கோம்' என இடையிடையே ஷார்ப் வசனங்கள் கலவர நிலவரத்தை பொளேரென சொல்கிறது. ’8 மணி நேரம்தான் வேலைக்காரன்.... மீதி நேரமெல்லாம் நுகர்வோர்’, ‘மாசக் கடைசில அத்தியாவசிய பொருளைக் கூட வாங்க மாட்டான்... ஆனா, மாச ஆரம்பத்துல தேவையில்லாத பொருளைக் கூட வாங்கிடுவாங்க மிடில் கிளாஸ்’, ‘அத்தியாவசிய பொருளை எவனும் விக்க மாட்டான்.... ஆனா, ஆடம்பர பொருளைத் தேடித் தேடி வந்து விப்பாங்க!’ எனப் பல வசனங்கள் சுளீர். அதேபோல, கூலிப்படை/ கார்ப்பரேட் படை சம்பவங்களையும் ஒப்பிட்டது.... வாரே வாவ்!   

படத்தின் மூலம் நல்ல மெசேஜ்களை சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் மோகன்ராஜா. ஹீரோ வில்லன் இருவருக்குமான மோதலை மார்கெட்டிங் தந்திரம் கொண்டே வடிவமைத்திருந்த ஐடியா நச். ஆனால், அதற்காக அதில் அத்தனை லாஜிக் ஓட்டையா!? ஒற்றை ஆளாய் இருந்துகொண்டு மொத்த கார்ப்பரேட் சாம்ராஜ்யத்தையுமே ஆட்டிப்படைப்பதெல்லாம்... நடுராத்திரி லைட் அடிச்சாக் கூட சாத்தியமா என்று தெரியவில்லை. ஜங்க் ஃபுட் என்பது எப்படிச் சாப்பிட்டாலும் கெடுதிதானே. ஆனால், 6 மூட்டைக்குப் பதில் 3 மூட்டை மூலப் பொருள் போட்டால் அவையெல்லாம் நல்லதாகிவிடுமா?! அருகிலேயே விளையும் உணவுப் பொருள்களை பதப்படுத்தாமல் சாப்பிட வேண்டும் என்பதுதானே தீர்வாக இருக்கும். படத்தின் அபார வியூகங்கள் காட்சிகளாக நகர்வதைவிட வசனங்களாக நகர்வது பெரும் மைனஸ். பெரியார், அம்பேத்கர், கம்யூனிஸம் பற்றியெல்லாம் போகிறபோக்கில் ‘தொட்டுக்கோ’வாக பேசியிருக்கிறார்கள். 

வேலைக்காரன் விமர்சனம்

ரிச் விஷுவல்களை தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராம்ஜி. அனிருத் இசையில் பாடல்கள் ஆல்பமாக ஹிட் அடித்தாலும், படத்தில் சம்பந்தமில்லாத இடங்களில் வருவதால் அலுப்பு தட்டுகிறது. ஃபகத் ஃபாசிலின் தீம், அனிருத் டச்.  படத்திலேயே செமத்தியான வேலைக்காரன் கலை இயக்குநர் முத்துராஜ்தான். அவரும் ராம்ஜியும் கொலைகார குப்பம் ஒரு செட் என்பதையே மறக்க வைக்குமளவிற்கு புகுந்து விளையாடியிருக்கிறார்கள். 3 மணி நேரம் தாண்ட வேண்டிய அளவு கதை. சரியாக எடிட் செய்ததில் தெரிகிறது எடிட்டரின் அனுபவம். இத்தனை இருந்தாலும், இரண்டாம் பாதியில் பொதுக்கூட்டத்துக்குப் போன எஃபெக்ட். பேசிக்கொண்டேடேடேடேடே இருக்கிறார்கள்.

 

நம் ஒவ்வொருவர் பையிலுமிருந்து 100 ரூபாய் எடுக்கிறார்கள் என்று அழுத்தமாகப் பதிய வைத்தவர்கள், அதற்கான தீர்வு என்று பின்பாதியில் செயல்படுத்தும் சம்பவங்களில் அத்தனை அழுத்தத்தைக் காட்டவில்லை. பக்கம் பக்கமான வசனங்களை குறைத்து காட்சிகளால் கதையை நகர்த்தியிருந்தால் எடுத்துக் கொண்டே வேலையை கச்சிதமாக முடித்திருப்பான். ஆனாலும், ‘குப்பம் எஃப்.எம்’ தொடங்குமுன் வேலைக்காரன் அடிக்கும் மணி, நுகர்வோர்/உழைப்பாளிகள் அனைவருக்குமான மணிதான்!

https://cinema.vikatan.com/movie-review/111564-velaikkaran-movie-review.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.