Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தவறான போக்கு

Featured Replies

தவறான போக்கு

 

தேர்தல் என்பது மாற்றங்களுக்குரிய நம்பிக்கையை ஏற்படுத்துவது. அல்லது நிலவுகின்ற நன்மையான நிலைமையைத் தொடர்ந்து பேணுவதற்கு வழிசமைப்பதாக அமையும் என்பதே பொதுவான எதிர்பார்ப்பாகும். ஆனால், குட்டித் தேர்தல் என்று வர்ணிக்கப்படுகின்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அத்தகைய எதிர்பார்ப்பைக் கடந்து ஓர் அரசியல் வியூகத்தில் கால் பதிக்க முற்பட்டிருக்கின்றது. இதனால் விரலுக்கு ஏற்ற வீக்கம் என்ற நிலையைக் கடந்து, அடுத்த கட்ட அரசியல் நிலைமைகள் என்ன ஆகும் என்ற கவலை தோய்ந்த  கேள்வியை எழுப்பியிருக்கின்றது. 

அடிமட்டத்தில் மக்களின் அடிப்படைத் தேவைகளான குடியிருப்பு, கிராமிய போக்குவரத்து, குழந்தைகளுக்கான ஆரம்பக் கல்வி, சுகாதாரம் மற்றும் பொது வசதிகள் என்பவற்றில் அபிவிருத்திப் பணிகளை வினைத்திறன் மிக்க வகையில் முன்னெடுப்பதே உள்ளூராட்சி சபைகளின் தலையாய கடமையாகும். இந்த சபைகளை வலுவான முறையில் செயற்படுத்த வல்ல பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான ஒரு களமே உள்ளூராட்சிக்கான தேர்தலாகும். 

ஆனால், இந்தத் தேர்தல் அந்த எல்லையைக் கடந்து அரசியல் ரீதியாக விசுவரூபமெடுத்துள்ளது. உள்ளூர் நிர்வாகம், அடிமட்ட அடிப்படை வசதிகள் சார்ந்த அபிவிருத்தி என்ற நிலைமைக்கு அப்பால், தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. கோட்பாட்டு ரீதியான எல்லையைக் கடந்து கூட்டு அரசாங்கம் என்ற வகையில் அரசாங்கக் கட்சிகளும், எதிர்க்கட்சிகளும், தத்தமது கொள்கைகளின் அடிப்படையிலான செல்நெறிகளை நிலைப்படுத்துவதற்கும், நியாயப்படுத்துவதற்குமான ஒரு களமாகப் பயன்படுத்துவதற்கு வழி வகுத்துள்ளது. 

யுத்தம் முடிவடைந்து ஆறு வருடங்களின் பின்னர் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் மூலம் அதிகாரத்துக்கு வந்துள்ள நல்லாட்சி அரசாங்கம் இரண்டு வருடங்கள் கடந்த நிலையில் இந்தத் தேர்தலை எதிர்கொண்டிருக்கின்றது. இந்தத் தேர்தலுக்காக ஏற்கனவே இருந்த கூட்டமைப்புகள் பிளவுபட்டிருக்கின்றன. அதேவேளை, புதிய கூட்டு அணிகள் உருவாகியிருக்கின்றன. அரசியல்வாதிகள் கொள்கைக்காக மட்டுமல்லாமல், சுய அரசியல் இலாபத்திற்காகவும் ஒரு கட்சியில் இருந்து இன்னுமொரு கட்சிக்குத் தாவிச் செல்வதற்கான வாய்ப்பை பலருக்கு எற்படுத்திக் கொடுத்திருக்கின்றது. அது மட்டுமல்லாமல், முக்கியமாக அடிமட்டத்தில் உள்ள தனி மனிதர்களான பலரையும் கட்சி ரீதியாகவும், சுயேச்சையாகவும் அரசியலில் ஈடுபடுவதற்குத் தூண்டியிருக்கின்றது.

விசேடமாக தேர்தல் முறைமையில் செய்யப்பட்டுள்ள மாற்றத்தின் அடிப்படையில் பெண்களும் இளைஞர்களும் விகிதாசார முறையில் வேட்பாளர் பட்டியலில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற கண்டிப்பான நிபந்தனை காரணமாக புதியவர்கள் அரசியலில் பிரவேசிப்பதற்கான சந்தர்ப்பம் உருவாகியிருக்கின்றது. 

இளைஞர்களுக்குக் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தேர்தலில் வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்ற நடைமுறையில் உள்ள நிபந்தனைக்கு மேலதிகமாக 25 வீதமான பெண்களுக்கும் வேட்பாளர்கள் தெரிவில் இடமளிக்கப்பட வேண்டும் என்ற கட்டாயம் வலியுறுத்தப்பட்டிருக்கின்றது. இதன் மூலம் கூடிய அளவில் பெண்கள் இந்தத் தேர்தலில் பங்கேற்பதற்கும் அடிமட்டத்தில் தமது பிரதேசத்தின் அபிவிருத்தி உட்பட்ட செயற்பாடுகளில் பங்களிப்பு செய்வதற்கும் வழியேற்படுத்தப்பட்டிருக்கின்றது. 

பரந்துபட்ட அளவில் ஜனநாயக உரிமைகளையும், ஜனநாயக ரீதியிலான பங்களிப்புகளையும் மேற்கொள்ளும் நோக்கத்தை இது கொண்டிருந்த போதிலும், அந்த நோக்கம் எந்த அளவுக்கு நிறைவேறப் போகின்றது என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது.

யுத்தத்தில் வெற்றி பெற்ற முன்னைய அரசாங்கத்தின் எதேச்சதிகாரப் போக்கிற்கும், குறுநில மன்னரைப் போன்று குடும்ப ஆட்சியை ஏற்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்ட முயற்சிக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்துடன் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய தூணாகத் திகழ்ந்த மைத்திரிபால சிறிசேன அந்தக்கட்சியில் இருந்து பிரிந்து, ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டிணைந்து ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராகக் களம் இறங்கினார். இது நல்லாட்சி அரசாங்கத்தின் தோற்றத்திற்கான முதலாவது கட்சித் தாவல் அல்லது கட்சியில் ஏற்பட்ட பிளவாகும். அதனைத் தொடர்ந்து உள்ளூராட்சிமன்றத் தேர்தலையொட்டி கட்சிப் பிளவுகள் இடம்பெற்றிருக்கின்றன.  

இந்த நிலைமையில் கட்சிகளும் அரசியல்வாதிகளும் மக்களுக்கு நன்மைபயக்கத் தக்க வகையில் இந்தத் தேர்தலுக்குப் பின்னர் செயற்படுவார்களா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளதைக் காண முடிகின்றது. 

மக்கள் எதிர்பார்ப்பும் அரசியல்  கட்சிகளின் நிலைப்பாடும் 

பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள மக்கள் தமது அடிமட்டப் பிரச்சினைகளுக்குத் தீர்வு வேண்டும், அபிவிருத்திப் பணிகள் ஊழலற்ற முறையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால், உள்ளூராட்சி சபைகளின் அடிப்படை நிலைமைகளைக் கடந்து அரசியல் ரீதியான கோட்பாடுகளுக்கும், நிலைப்பாடுக்கும் மக்களின் கருத்தை அறிவதற்கான ஒரு தேர்தலாக இந்தத் தேர்தலைப் பயன்படுத்துவதற்கு அரசியல் கட்சிகளும் அரசாங்கமும் முற்பட்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது. 

குறிப்பாக புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் மூலம் இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. அந்த வகையில் நாட்டில் எத்தகைய அடிப்படையிலான ஆட்சி முறை உருவாக வேண்டும் என்பதைக் கோடி காட்டுவதற்காக வெளியிடப்பட்ட இடைக்கால அறிக்கை தேசிய அளவில் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கின்றது. 

ஒற்றையாட்சி, பௌத்தத்திற்கு முன்னுரிமை என்று பெரும்பான்மை இன மக்களின் நலன்களை விசேட கவனத்திற் கொண்டுள்ள அம்சங்களைக் கொண்டதாகவே அரசியல் தீர்வுக்கான அடிப்படையை, இடைக்கால அறிக்கையின் மூலம் அரசாங்கம் வெளிப்படுத்தியிருக்கின்றது.

மீளப் பெற முடியாத, நிலையான அதிகாரப் பகிர்வையே அரசியல் தீர்வு உள்ளடக்கியிருக்க வேண்டும் என்பது சிறுபான்மை தேசிய இனமாகிய தமிழ் மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பாகும். ஆனால், அதிகாரப் பகிர்வு என்பதில் சிங்கள பௌத்த தேசியத்தை அடிப்படையாகக் கொண்ட ஆளும் தரப்பினருக்கு ஆர்வமில்லை. அதிகாரங்கள் அனைத்தும் மத்திய அரசாங்கத்திடமே இருக்க வேண்டும். முக்கியத்துவம் இல்லாத சில சில விடயங்களில் வேண்டுமானால் அதிகாரங்களை வழங்கலாம். ஆயினும் வேண்டிய நேரத்தில் அரசாங்கம் அதனை மீளப்பெற்றுக்கொள்ளும் அதிகாரங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்பது அவர்களுடைய நிலைப்பாடாகும். 

இந்த வகையிலேயே மறைமுகமான அர்த்தம் பொதிந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி ஒற்றையாட்சியை நிலைநிறுத்துவதற்கு அரசாங்கமும், பேரின அரசியல்வாதிகளும் முனைந்திருக்கின்றார்கள். ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஒற்றையாட்சியில் மாற்றம் இருக்காது. தமிழர்கள் விரும்புகின்ற சமஷ்டி ஆட்சி முறைக்கு இடமே இல்லை. பௌத்தர்களான சிங்களவர்களுக்கே முதலிடம் என்ற நிலைப்பாட்டில் பௌத்தத்திற்கே முதலிடம் என்றும் ஏனைய மதங்களுக்கு உரிய அந்தஸ்து வழங்கப்படும் என்ற அம்சங்களை இடைக்கால அறிக்கை வெளிப்படுத்தியிருக்கின்றது.

இனப்பிரச்சினைக்கு இதுவே சரியான தீர்வாக அமையும் என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமைக்கட்சியாகிய தமிழரசுக்கட்சி ஏற்று அதற்கான ஆதரவை வழங்கியிருக்கின்றது. அரசியல் தீர்வுக்கான இடைக்கால அறிக்கையில் சில அம்சங்கள் பேசித் தீர்க்கப்பட வேண்டியவை என கூறினாலும்கூட, அந்த விடயங்கள் தொடர்பாக அரசாங்கத்துடன் அல்லது அரசியலமைப்பு உருவாக்கத்திற்கான வழிநடத்தல் குழுவில் எத்தகைய நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன அல்லது எத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன என்பது பற்றிய தகவல்களை அந்தக் கட்சி மக்களுக்கு வெளிப்படுத்தவில்லை. மொத்தத்தில் அரசியல் தீர்வை உள்ளடக்கிய புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமையும், தமிழரசுக்கட்சியும் உரிய வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலைமையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இடைக்கால அறிக்கைக்கு மக்கள் ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்ற மறைமுக அரசியல் நிகழ்ச்சி நிரலையே, அரசாங்கத் தரப்பும், அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கிவருகின்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைமையும் தலைமைக்கட்சியாகிய தமிழரசுக்கட்சியும் கருத்தூன்றியிருக்கின்றன. இதற்கான கருத்துக் கணிப்பாகவே இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலை அவைகள் கருதுகின்றன. 

தவறான போக்கு 

மக்கள் நலன்சார்ந்து அல்லது மக்கள் நலன்சார்ந்ததாகக் கூறி முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் குறித்து, மக்களுடைய கருத்தை அறிவதற்கு அரசாங்கத்திற்கு உரிமை இருக்கின்றது. அதனைத் தவறான நடவடிக்கை என்று கூற முடியாது. அவ்வாறு கருத்தறிவதாக இருந்தால், அதனை வெளிப்படையான கருத்தறியும் நேரடி நடவடிக்கையாக மேற்கொள்வதே நேர்மையான அரசியல் செயற்பாடாக அமைய முடியும். 

ஆனால் அரசியல் கலப்பற்ற, அரசியலுக்கு அப்பாற்பட்டது என்று குறிப்பிடத்தக்க, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை அரசியல் சார்ந்த கருத்துக் கணிப்புக்காகப் பயன்படுத்துவதை, நியாயமான ஜனநாயகச் செயற்பாடாகக் கொள்ள முடியாது. இது கருத்தறியும் சுதந்திரத்தையும், கருத்துச் சுதந்திரத்தையும் பிழையான முறையில் வழிநடத்துகின்ற ஒரு செயற்பாடாகவே கருத வேண்டும். 

இனப்பிரச்சினைக்கு முடிவு காண்பதற்கான அரசியல் தீர்வு  என்பது ஒரு நீண்டகாலப் பிரச்சினையாகும். கிட்டத்தட்ட ஆறு தசாப்தங்களாகத் தீர்க்கப்படாமல் பின்போடப்பட்டதனால் அது இன்று புரையோடியுள்ளது. பல்வேறு பிரச்சினைகள் அதிலிருந்து கிளைவிட்டு பரவி பெரும் விருட்சமாக உயர்ந்து நிற்கின்றது. அதற்குத் தீர்வு காணும் முயற்சி முழுமையானதாகவும் தனியானதாகவும் அமைந்திருக்க வேண்டும். 

ஆட்சி அதிகாரத்தை நிலைநிறுத்து வதற்கு அல்லது ஆட்சியில் தொடர்ந்து நிலைத்திருப்பதற்காக இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் நடவடிக்கையைக் குழப்பியடித்து சாம்பாராக்கக் கூடாது. இத்தகைய அரசியல் நகர்வுகள் அல்லது நடவடிக்கைகள் மக்களைக் குழப்பியடிக்கவும் அரசியல் ரீதியாக, அவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தவுமே வழி வகுக்கும்.   

ஏனெனில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் அடிமட்டத்திலான அபிவிருத்தி சார்ந்த கொள்கைகளுக்காகவே மக்கள் வாக்களிப்பார்கள். தங்களுக்காகச் செயற்படத்தக்கவர்களையும், அதற்கான கொள்கைத் திட்டங்களை முன்வைப்பவர்களையுமே மக்கள் தெரிவு செய்வதற்கு எத்தனிப்பார்கள். இங்கு பிரதேச அபிவிருத்தியும் அது சார்ந்த செயற்பாடுகளும், பிரச்சினைகளுமே முதன்மை பெற்றிருக்கும். அரசியல் ரீதியான விடயங்கள் அங்கு முக்கியத்துவம் பெற்றிருப்பதில்லை. 

ஏனெனில், அது, அரசியல் ரீதியான செயற்பாடுகளுக்கான தேர்தல் களமல்ல. வட்டாரங்கள், மாநகர சபைகள் மற்றும் பிரதேச சபைகள் என்பவற்றின் குறுகிய இடப்பரப்பை எல்லைகளைக் கொண்ட பிரதேசம் சார்ந்த பிரச்சினைகளுடன் சம்பந்தப்பட்டது. அதனை தேசிய மட்டத்திலான அல்லது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளுடனோ நடவடிக்கைகளுடனோ தொடர்புபடுத்தி கருத்தறிய முற்படுவது முறையான நடவடிக்கையாகாது. 

மறுபக்கத்தில் ஜனாதிபதி தேர்தலைப் போன்று இந்தத் தேர்தல் முழுநாட்டையும் ஒரே தேர்தல் தொகுதியாகக் கொண்டதல்ல. அத்துடன் பாராளுமன்றத் தேர்தலைப் போன்று பரந்து விரிந்த எல்லைகளைக் கொண்ட தேர்தல் மாவட்டங்களை அல்லது தேர்தல் தொகுதிகளைக் கொண்டதுமல்ல. நாடெங்கிலும் உள்ள 341 உள்ளூராட்சி சபைகளுக்கான எண்ணாயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இது. 

 

பரந்துபட்ட அளவில் இது முழு நாட்டையும் உள்ளடக்கியதாகவும், நாட்டின் அனைத்துப் பிரதேசங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாக அமைந் 

துள்ள போதிலும், அது மட்டுப்படுத்தப் பட்ட அரசியல் அந்தஸ்தையே  கொண்டி ருக்கின்றது. எனவே மட்டுப்படுத்தப்பட்ட அரசியல் அந்தஸ்தைக் கொண்ட உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் பரந்துவிரிந்த அரசியல் தன்மையைக் கொண்ட ஒரு பிரச்சினைக்கான நிலைப்பாட்டில் மக்கள் கருத்தறியும் செயற்பாடானது தவறான நடவடிக்கையாகவே அமையும். 

உள்ளூராட்சி சபைகளுக்கான  வேட்பாளர்கள் 

நெருக்கடியான சூழல் நிலவிய யுத்த காலப்பகுதியில் ஜனநாயகத்திற்குப் பெரும் அச்சுறுத்தல் நிலவியது. அப் போது நடைபெற்ற தேர்தல்களில் போட்டியி டுவதற்கான வேட்பாளர்களைத் தேடிக் கண்டு பிடிப்பது குதிரைக் கொம் பாகவே இருந்தது. இதனால், அக்காலப் பகுதியில் துணிச்சல் மிக்கவர்களாகக் கருதப்பட்டவர்களே வேட்பாளர்களாகத் தெரிவானார்கள். அல்லது வேட்பாளர்களாக கடும் பிரயத்தனத்தின் மத்தியில் தெரிவு செய்யப்பட்டார்கள். 

ஆனால், யுத்தம் முடிவடைந்ததையடுத்து, குறிப்பாக வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள ஒரு ஜனநாயக வெளியையும், ஜனநாயகச் செயற்பாடுகளுக்கான சுதந்திரத்தையும் பயன்படுத்தி பல்வேறு தரப்பினரும் தேர்தலில் போட்டியிடுவதற்கு முண்டியடிக்கின்றார்கள். இதனால் போர்க்காலத்தில் வேட்பாளர்களைக் கண்டுபிடிப்பதில் நிலவிய கஸ்டமான நிலைமை இப்போது இல்லை. ஆனால், தேர்தலில் போட்டியிடுவதற்காகப் புற்றீசலைப் போல வருகின்றவர்களில் யார் யாரை வேட்பாளர்களாகத் தெரிவு செய்வது என்பதில் அரசியல் கட்சிகளுக்குப் பெரும் கஸ்டம் ஏற்பட்டிருந்தது.

வேட்பாளர்களாக கட்சி சார்ந்தவர்கள், கட்சிகளின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டிருப்பவர்கள் என்பதற்கு அப்பால், அரசியல் கட்சி சார்ந்த கொள்கை பற்றிய அடையாளம் இல்லாதவர்களையும் வேட்பாளர்களாகத் தெரிவு செய்ய வேண்டிய கட்டாய நிலைமை கட்சிகளுக்கு இம்முறை ஏற்பட்டிருந்தது. 

தென்னிலங்கையில் இருந்து வந்து வடக்கிலும் கிழக்கிலும் போட்டியிடுகின்ற கட்சிகளுக்கு வழமைபோலவே ஆள்பிடித்துக் கொடுப்பதில் அந்தக் கட்சிகளின் ஆதரவாளர்கள் இம்முறையும் சிரமப்பட நேர்ந்திருந்தது. இந்த நிலைமை பெரும்பாலும் சிறிய கட்சிகளுக்கே ஏற்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பெரிய கட்சிகளைப் பொறுத்தமட்டில் தம்மை நாடி வருபவர்களில் யாரை எந்த அடிப்படையில் தெரிவு செய்வது என்ற சிக்கல் ஏற்பட்டிருந்தது. 

அநேகமான கட்சிகளில் வேட்பாளர்களாகத் தெரிவு செய்யப்பட்டு, வேட்பு மனுக்களில் கையெழுத்திட்டதன் பின்னர், அவர்கள் வேறு கட்சிகளில் போய் இணைந்து வேட்பாளர்களாகியிருக்கின்றார்கள் என்ற தகவல் அறிந்து அந்த வேட்பு மனுக்களைக் கிழித்தெறிந்துவிட்டு, புதிய ஆட்களை உள்வாங்கி புதிதாக வேட்பு மனுக்களைத் தயார் செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டிருந்தது. இதனால் சரியான வேட்பாளர்களைத் தெரிவு செய்வதிலும் உரிய முறையில் வேட்பு மனுக்களைத் தயார் செய்வதிலும் கட்சித் தலைவர்களும், கட்சிகளின் பொறுப்பாளர்களும் மிகுந்த கஷ்டமடைய நேர்ந்திருந்தது.

இதன் காரணமாகவே, இறுதி நாளன்று பெரும் எண்ணிக்கையில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் அரசியல் கட்சிகள் மட்டுமல்லாமல் சுயேச்சை குழுக்களுக்கும் ஏற்பட்டிருந்தது. போதிய கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த போதிலும், வேட்பு மனு தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் தாமதமாகவும் மந்த கதியிலும் இருந்ததன் காரணமாகவே வேளைக்கே வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் திணைக்களம் வலிந்து அரசியல் கட்சிகளிடம் வலியுறுத்த நேர்ந்திருந்தது. 

எதிலும் அரசியல், எங்கும் அரசியல் என்று, நாட்டில் எல்லாவற்றிலும் அரசியல் வியாபித்திருப்பதனாலும், நாட்டில் நிலவுகின்ற ஜனநாயக வெளி காரணமாகவும் பலரும் அரசியலில் ஈடுபடுவதற்காக இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆர்வம் கொண்டிருக்கின்றனர். இதனால் வேட்பாளர்களுக்கென வரையறுக்கப்பட்டிருந்த விதிமுறைகளை உள்ளடக்காத வகையில் வேட்பு மனுக்கள் தயார் செய்யப்பட்ட நிலைமை பற்றியும் தகவல் வெளியாகியிருக்கின்றது. 

குறிப்பாக தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் உரிய முறையில் தாக்கல் செய்யப்பட்டிருந்த போதிலும், வேட்பாளர்களுக்குரிய ஆவணங்கள் சரியான முறையில் சமர்ப்பிக்கப்படாத காரணத்தினால், குறிப்பிட்ட வட்டாரங்களில் அந்த வேட்பாளர்கள்  போட்டியிட முடியாதவாறு நிராகரிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 

மொத்தத்தில் காலந்தாழ்ந்த நிலையில் சிக்கலான அரசியல் நிலைமைகளில் நடைபெறவுள்ள இந்த உள்ளூராட்சித் தேர்தலில் மக்கள் எவ்வாறு வாக்களிக்கப் போகின்றார்கள் என்பதும், அந்த வாக்களிப்பு என்னென்ன வகையில் மக்களுடைய ஆணையாகவும் தீர்ப்பாகவும் அரசியல் கட்சிகளினால் பயன்படுத்தப்படப் போகின்றது என்பதும் தெரியவில்லை.   


பி.மாணிக்கவாசகம்

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-12-23#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.