Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பு விக்னேஸ்வரனை வெளித்தள்ளுமா?

Featured Replies

கூட்டமைப்பு விக்னேஸ்வரனை வெளித்தள்ளுமா?

 
Sri-Lanka_Elections.jpg

கடந்த 24ம் திகதி காலைக்கதிர் பத்திரிகையில் வெளியான தலைப்புச் செய்தியில் சம்பந்தரும், விக்னேஸ்வரனும் சந்திக்கவிருப்பதாக கூறப்பட்டிருந்தது. அதனைப் பின்னர் சம்பந்தரும் உறுதிப்படுத்தினார். அப்படியொரு சந்திப்பு இடம்பெறவிருந்த ஒரு பின்னணியில் விக்னேஸ்வரன் சில நாட்களுக்கு முன்பு சம்பந்தருக்கு ஒரு கடிதத்தை அனுப்பியிருக்கிறார்.

அக்கடிதத்தில் அவர் அரசுத் தலைவரின் அபிவிருத்திக்கான செயலணியில் கூட்டமைப்பின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்குபற்றக் கூடாது என்று கேட்டிருக்கிறார். இக்கடிதத்திற்கான கூட்டமைப்பின் எதிர்வினையானது முன்பு எதிர்பார்க்கப்பட்ட விக்கி – சம்பந்தர் சந்திப்பைக் கேள்விக்குள்ளாக்கி விட்டது. ஒரு புறம் சந்திப்புக்கு நாள் கேட்டுவிட்டு இன்னொருபுறம் சந்திப்பை சாத்தியமற்றதாக்கும் ஒரு கடிதத்தை ஏன் விக்னேஸ்வரன் எழுதினார்?

சந்திப்புக்குத் தயார் என்று அறிவித்ததன் மூலம் அவர் தானாகக் கூட்டமைப்பை விட்டு வெளியில் வரமாட்டார் என்பதனைத் தெரியப்படுத்தியுள்ளார். அதே சமயம் சந்திப்புக்கு நிபந்தனை விதிப்பதைப் போல சந்திப்புக்கிடையில் ஒரு கடிதத்தை எழுதியதன் மூலம் வீட்டுச் சின்னத்தின் கீழான இணக்க அரசியலுக்கு தான் தயாரில்லை என்பதனையும் தெரியப்படுத்தியுள்ளார்.

இதன் மூலம் இணக்க அரசியல் என்ற அடிப்படையில் கூட்டமைப்பின் தலைமை முடிவெடுத்தால் விக்னேஸ்வரன் அதற்குள் நிற்கமாட்டார் என்பது தெளிவாகக் காட்டப்பட்டிருக்கிறது. இப்பொழுது பந்து கூட்டமைப்பின் பக்கம் வீசப்பட்டிருக்கிறது.

காலைக்கதிரில் வந்த செய்தி மற்றும் தினக்குரலில் வந்த செய்தி போன்றவற்றின் அடிப்படையில் விக்கிக்கும் சம்பந்தருக்குமிடையில் ஏதோ ஒரு நெருக்கம் நிலவுவதாகவே ஊகிக்கப்பட்டது. இந்த ஊகத்தின் அடிப்படையில் அடுத்த மாகாணசபைத் தேர்தலில் விக்கி எந்த முடிவை எடுக்கக்கூடும் என்பது பலருக்கும் குழப்பமாக இருந்தது. சில சமயம் சம்பந்தர் அவரை மறுபடியும் முதல்வருக்கான வேட்பாளராக நியமித்தால் அவர் என்ன முடிவை எடுப்பார் என்பது தொடர்பாகவும் ஒருவித குழப்பமான நிலமை காணப்பட்டது.

கடந்த சில ஆண்டுகளாக தமிழ் மக்கள் பேரவையைக் கட்டியெழுப்பி அதன் மூலம் அவர் சேகரித்து வைத்திருக்கும் உறவுகள் பெயர் பிம்பம் எல்லாவற்றையும் கைவிட்டு விட்டு அவர் தனியனாகவே சம்பந்தரோடு போய் ஒட்ட வேண்டியிருக்குமென்று ஒரு மூத்த அரசியல் விமர்சகர் தெரிவித்தார். அப்படிப்போய் ஒட்டினாலும் தமிழரசுக்கட்சிக்குள் அவரை இணக்கமாகப் பார்க்கும் ஆட்கள் பெருமளவிற்கு இல்லையென்பதும் ஒரு பொதுவான அபிப்பிராயமாகும்.

கடந்த வாரம் அமைச்சர் ராஜித யாழ்ப்பாணத்தில் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் விக்கி உரையாற்றினார். அப்பொழுது அவருக்கு எதிரான ஒரு கூட்டமைப்புப் பிரமுகர் ‘இப்படியெல்லாம் பேசிவிட்டு இவர் இன்னுமொரு மாதத்தில் வீட்டை போகப் போறவர்தானே’ என்ற தொனிப்பட அருகிலிருந்த மற்றொரு கூட்டமைப்புப் பிரமுகரிடம் கூறியிருக்கிறார். அதாவது கூட்டமைப்பால் வெளித்தள்ளப்படுமிடத்து ஒன்றில் அவர் மாற்று அணியைக் கட்டியெழுப்ப வேண்டும். அல்லது அரசியலை விட்டு ஒதுங்கி வீட்டிற்குப் போக வேண்டும் என்று பொருள்.

ஆனால் ஜனாதிபதியின் செயலணி குறித்து அவர் எடுத்த முடிவு அவர் அப்படியெல்லாம் அரசியலை விட்டு ஒதுங்கி வீட்டிற்குப் போய்விடுவார் என்று நம்பத்தக்கதாக இல்லை. சம்பந்தருக்கு அவர் முதலில் எழுதிய கடிதமும் அதற்கு கூட்டமைப்பினர் எதிர்வினையாற்றியபின் அவர் வெளியிட்ட கேள்வி பதிற் குறிப்பும் அதைத்தான் காட்டுகின்றன. அதாவது விக்னேஸ்வரன் ஒரு தெளிவான பிரிகோட்டை வரைந்திருக்கிறார். அபிவிருத்தி மைய அரசியல் அல்லது தீர்வுமைய அரசியல் என்ற இரண்டு தெரிவுகளை அவர் கூட்டமைப்பின் முன் வைத்திருக்கிறார். இதன் மூலம் இணக்க அரசியலா இல்லையா என்று கூட்டமைப்பே முடிவெடுத்து விட்டு விக்னேஸ்வரனை வெளித்தள்ளலாம்.

அவ்வாறு வெளித்தள்ளப்படுமிடத்து அவர் தன்னுடைய அடுத்த கட்டத்தைப் பற்றிச் சிந்திக்க வேண்டியிருக்கும். மாகாண சபையின் காலம் முடிவதற்கு மிகக்குறுகிய காலமே இருக்கும் ஒரு பின்னணியில் கூட்டமைப்பின் முன்பு ஒரு முக்கியமான கேள்வி வீசப்பட்டிருக்கிறது. அரசியல் தீர்வொன்றை உருவாக்குவதற்காக கடந்த சில ஆண்டுகளாக சம்பந்தர் வழங்கி வந்த வாக்குறுதிகள் காலக்கெடுக்கள் போன்றவற்றின் பின்னணியில் ஓர் அரசியல் தீர்வைப் புறந்தள்ளிவிட்டு அபிவிருத்தி அரசியலுக்குள் மூழ்கிவிட முடியாது என்று விக்னேஸ்வரன் கருதுகிறார். தீர்வற்ற வெற்றிடத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தியானது ஒரு மாயைதான். இதை அதன் பிரயோக வடிவத்தில் சொன்னால் வலி நிவாரணியே நோய் நிவாரணி ஆகிவிடாது.

கடந்த சில மாதங்களாக வடக்கு – கிழக்கிற்கு அரசுத்தலைவரும் பிரதமரும், அமைச்சர்களும் வரிசைகட்டி வருகிறார்கள். புதிது புதிதாக கட்டடங்கள் திறக்கப்படுகின்றன. அல்லது புதிய கட்டடங்களுக்குரிய அடிக்கற்கள் நாட்டப்படுகின்றன. இவை தவிர மேலும் புதிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடக்கி வைக்கப்படுகின்றன. இந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலம் முடிவதற்கு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் இருக்கும் ஒரு பின்னணியில் அபிவிருத்தியை முடுக்கிவிடுவது என்பது வடக்கு கிழக்கில் மட்டுமல்ல தெற்கிலும் அரசாங்கத்தின் வாக்கு வங்கியைப் பலப்படுத்தும்.

தெற்கில் ஒரு தேர்தலை வைத்தால் பெரும்பாலும் அது மகிந்தவுடனான பலப்பரீட்சைக்களமாகவே அமையும். உள்ளுராட்சி சபைத் தேர்தல்களில் நடந்தது போல மகிந்தவின் பலத்தை நிரூபிக்கத்தக்க தேர்தல்களை தெற்கில் நடாத்துவதற்கு அரசாங்கம் தயங்கும். ஆனால் மகிந்தவின் செல்வாக்கு வலயத்திற்கு வெளியே வரும் வடக்கு கிழக்கில் அப்படிப் பயப்படத் தேவையில்லை. கிழக்கில் மகிந்த சிறிதளவிற்குத் தலையைக் காட்டலாம்.

ஆனால் வடக்கில் அதுவும் கடினம். எனவே மகிந்தவின் செல்வாக்கு வலயத்திற்கு வெளியே தேர்தல்களை நடத்திப் பார்க்கலாம் என்று அரசாங்கம் சிந்தித்தால் வட – கிழக்கு மாகாணசபைத் தேர்தல்களுக்கான வாய்ப்புக்கள் உண்டு. அத் தேர்தல் களத்தைக் குறிவைத்தே அரசாங்கம் அபிவிருத்தி அரசியலை முடுக்கிவிட்டுள்ளது. உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் தென்னிலங்கைமையக் கட்சிகளுக்கு கிடைத்த வாக்குகள் அரசாங்கத்திற்கு உற்சாகமூட்டக்கூடியவை.

இவ்வாறாகக் தீர்வைக் கொண்டு வராமல் அபிவிருத்தியைக் கொண்டு வரும் ஒரு நிகழ்ச்சி நிரலுக்கு கூட்டமைப்பு பங்காளியாகக் கூடாது என்று விக்னேஸ்வரன் கேட்கிறார். ஆயின், அதை எதிர்த்து கூட்டமைப்பு அபிவிருத்தி அரசியலின் பங்காளிகளாக மாறினால் அதற்கு எதிராண அணி ஒரு புதிய கூட்டை உருவாக்க வேண்டியிருக்குமா?

விக்னேஸ்வரனுக்கு வெளியே மாற்றுத்தரப்பாகக் காணப்படுகிறவர்கள் ஒரு பெருந்திரள் வெகுசன அரசியலை முன்னெடுக்கத்தக்கவர்களாக தங்களை இன்றளவும் நிரூபித்திருக்கவில்லை. இப்பொழுதும் யாழ் பேருந்து நிலையத்தில் சில பத்துப்பேர் கூடி சுலோக அட்டைகளுடன் எதிர்ப்பைக் காட்டும் போராட்டங்களே நடந்து வருகின்றன.

அண்மையில் யாழ் கோட்டைக்குள் மறுபடியும் படைமுகாம் வருவதை எதிர்த்து நடந்த ஆர்ப்பாட்டத்திலும் பெருந்திரள் மக்களைக் காண முடியவில்லை. அதன்பின் கடந்த கிழமை நடந்த திருமுருகன் காந்திக்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்திலும் பெருந்திரளைக் காண முடியவில்லை.

தம்மைத் தூய்மைவாதிகளாகவும் கொள்கைப் பிடிப்புள்ளவர்களாகவும் கருதும் கட்சிகளின் ஆர்ப்பாட்டங்கள் சிறுதிரள் நிகழ்வுகளாகவே சுருங்கிக் காணப்படுகின்றன. அவை ஏன் பெருந்திரள் வளர்ச்சியைப்பெற முடியவில்லை? இப்படிப்பட்ட சிறுதிரள் போராட்டங்கள் எதிர்த்தரப்புக்கு எப்படிப்பட்ட செய்தியைக் கொடுக்கும்? கொள்கைப்பிடிப்புள்ள அரசியல்வாதிகள் தமது அரசியலை பெருந்திரள் அரசியலுக்கு மாற்றவில்லையென்றால் அவர்களுடைய கொள்கைகளும் தோற்கடிக்கப்பட்டு விடும். கொள்கைகளை விற்பவர்கள் என்று இவர்களால் குற்றஞ்சாட்டப்படும் அரசியல்வாதிகளே பெருந்திரள் வாக்குகளை அள்ளிச் செல்வார்கள்.

எனவே ஒரு மாற்று அணியாகத் தம்மைக் கருதும் தரப்புக்கள் புதிய அணித்திரட்சிக்கு போக வேண்டியுள்ளது. ஆனால் கஜேந்திரகுமாரும் சுரேசும் ஒரே அணியில் திரட்சியுற்றதற்கான வாய்ப்புக்களே இன்னமும் உருவாகவில்லை. அப்படியொரு அணித்திரட்சி தேவையா என்று கேட்பவர்களும் உண்டு.

இதற்கிடையில் சிவன் பவுண்டேசன் எனப்படும் ஓர் அறக்கொடை நிறுவனத்தின் இயக்குனர் கணேஸ் வேலாயுதம் ஒரு புதிய மாற்றுத்தரப்பைக் கட்டியெழுப்ப முயற்சிப்பதாகத் தெரிகிறது. டக்ளஸ் தேவானந்தாவின் சட்ட ஆலோசகராக இருந்தவரும் படுகொலை செய்யப்பட்டவருமாகிய மகேஸ்வரி வேலாயுதத்தின் சகோதரர் இவர். இவருடைய மற்றொரு சகோதரர் ரெலோவில் உறுப்பினராக இருந்தவர். தானும் முன்பு ரெலோவின் போராளியாக இருந்தவர் என்று கணேஸ் கூறிவருகிறார்.

புலம்பெயர்ந்து சென்ற கணேஸ் தொண்டு நடவடிக்கைகள் மூலம் வட, கிழக்கில் வேரூன்றி இப்பொழுது புதிய அணித்திரட்சி ஒன்றிற்கான முன்முயற்சிகளில் ஈடுபடுவதாகத் தெரிகிறது. ரெலோவின் மீது விமர்சனங்களை முன்வைக்கும் இவர் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள முக்கியஸ்தர்கள், பிரபலஸ்தர்கள், புத்திஜீவிகளைக் கொண்ட ஓர் அமைப்பைக் கட்டியெழுப்புவது பற்றி சிந்திப்பதாகத் தெரிகிறது. விக்கி அணி, கஜேந்திரகுமார் அணி இரண்டுக்கும் வெளியில் இந்த அமைப்பை அவர் உருவாக்கப்பார்க்கிறார்.

ஏற்கெனவே முழுத்திரட்சியுறாத ஒரு மாற்று அணி. இந்த லட்சணத்தில் ஒரு புதிய அணி? இவையெல்லாம் யாருடைய வெற்றி வாய்ப்புக்களை அதிகப்படுத்தும்?

http://athavannews.com/category/weekly/அரசியல்-கட்டுரைகள்/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.