Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சகல அரசியல் கைதிகளையும் உடன் விடுதலை செய்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
 
MERUKLondonProtest.jpg
 
கடந்த செப்டம்பர் மாதம் 14ம் திகதி அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள 8 அரசியல் கைதிகள் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த கையோடு அரசியல் கைதிகள் சம்பந்தமான பிரச்சினை மீண்டும் தலைதூக்கியுள்ளது. தற்போது மேலும் இரண்டு கைதிகள் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளனர். இதோடு உண்ணாவிரதத்தில் ஈடுபடும் கைதிகளின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. அந்த பத்து பேரும் மருத்துவ சிகிச்சையை மறுத்துள்ளதனால் அவர்கள் உயிராபத்தை எதிர்நோக்கியுள்ளனர். ஆனால், இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் அரசாங்கம் இதுவரை தலையிடவில்லை. தம்மை விடுதலை செய்யுமாறும் அல்லது புனர்வாழ்விற்கு அனுப்புமாறும் தான் உண்ணாவிரத்த்தில் ஈடுபட்டுள்ள கைதிகள் கேட்கின்றனர். இதற்கு முன்பும் சில சந்தர்ப்பங்களில் உண்ணாவிரதம் மேற்கொண்டு தம்மை விடுதலை செய்யுமாறும் அல்லது தம் மீது வழக்கு தொடுக்குமாறும், தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளை துரிதமாக நடத்துமாறும், அல்லது தம்மை விடுதலை செய்யுமாறும் கேட்டிருந்தனர்.
 
இதுவரை இலங்கையின் 13 சிறைச்சாலைகளில் 106 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் வழக்கு முடிவடைந்து நீதிமன்றத்தால் குற்றவாளிகளாக்கப்பட்டு, தண்டனை விதிக்கப்பட்ட 35 பேர் உள்ளனர். தவிரவும் தண்டனை விதிக்கப்பட்ட ஆனால் மேன்முறையீடு செய்து விசாரிக்கப்பட்டுவரும் 17 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பொதுவாக மேன்முறையீட்டு விசாரணை நடைபெறும் காலத்தில் பிணை வழங்க முடியும். என்றாலும் அரசியல் காரணங்களால் அவர்களுக்கு பிணை வழங்கப்படுவதில்லை.
 
தடுப்புக்காவலிலுள்ள 42 பேர் மீது வழக்கு விசாரணை தொடங்கப்பட்டுள்ள போதிலும் அந்த வழக்கு விசாரணைகள் நீண்டு கொண்டே போகின்றன. இவர்களில் சில கைதிகள் 10 - 15 வருட காலமாக விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு சென்ற போதிலும் அந்த வழக்குகள் முடிந்தபாடாக இல்லை. உதாரணமாக 18 வயதில் கைது செய்யப்பட்டு 38 வயதாகிய நிலையிலும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள ஒரு கைதியும் உள்ளார். அவரது வழக்கு இன்னும் முடியவில்லை. சட்டத்தின்படி பிணை வழங்கக் கூடிய குற்றங்களுக்கான வழக்குகள் உள்ளவர்களுக்கும் பிணை வழங்கப்படுவதில்லை. அது மட்டுமல்ல, எந்தவித வழக்கும் இல்லாமலும், குற்றம் சுமத்தப்படாமலும் தடுப்புக்காவல் உத்தரவின் மீது தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 12 பேர் உள்ளனர். அவர்கள் மீது வழக்கு தொடுப்பதற்கான குற்றங்கள் இல்லாத போதிலும் அவர்களை விடுதலை செய்வதில்லை. உதாரணமாக தீபன் மற்றும் கபிலன் ஆகிய இரு கைதிகளும் வழக்கு தொடுக்கப்படாமல் 2009 லிருந்து 9 வருடமாக சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இது பாரதூரமான அநீதி என்பது தெளிவாகின்றது.
 
இந்த அரசாங்கம் அதிகாரத்திற்கு வருவதற்காக தேர்தல் பரப்புரையின் போது அரசியல் கைதிகளை பயன்படுத்தியது. அரசியல் கைதிகளை விடுதலை செய்வது தான் தேர்தலில் முக்கிய வாக்குறுதியாக இருந்தது. ஆனால் அதிகாரத்திற்கு வந்த பின்பு குற்றச்செயல்களுக்காக கைது செய்யப்பட்டவர்களைத் தவிர அரசியல் கைதிகள் யாரும் கிடையாதென ஜனாதிபதியும் பிரதமரும் சொல்கிறார்கள். இது அடிப்படையற்ற கூற்றாகும்.
அவர்கள் செய்ததாகக் கூறப்படும் குற்றங்களை பொதுவாக எடுத்துக் கொண்டால், தமதோ அல்லது ஒரு குழுவினதோ தனி விருப்பத்திற்காக செய்யப்பட்டவையல்ல என்பது எந்த ஒரு நபரும் ஏற்றுக் கொள்ளும் விடயமாகும். பொதுவாக ஒரு குற்றவாளியை எந்தவொரு அரசாங்கமும், எந்தவொரு சட்டபூர்வ நிறுவனமும் பயங்கரவாதி என்று சொல்வதில்லை. பயங்கரவாத நடவடிக்கைகளில் எவ்வளவுதான் ஈடுபட்டாலும் அவர் குற்றவாளி என்றே அழைக்கப்படுவார். ஒருவரை பயங்கரவாதி என்று அழைத்த மாத்திரத்தில் அவர் அரசியல் நோக்கத்திற்காக அப்படியான செயல்களில் ஈடுபட்டதாகத்தான் கருதப்படும். ஆகவே அவர்கள் ஏனைய சிறைக்கைதிகளிலிருந்து வேறுபடுகிறார்கள். அவர்கள் அப்படியான அரசியலுக்கு தூண்டப்பட்டது நடைமுறையிலுள்ள அரசியல் முறைமையின் பிரச்சினையின் மீதுதான் என்பது வெளிப்படை.
 
ஆகவே, அரசியல் நோக்கங்களுக்காக நடைமுறை சட்டங்களை மீறியமைக்காக கைது செய்யப்பட்டு சிறையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் அரசியல் கைதிகளென அழைக்கப்பட வேண்டும். அரசியல் கைதிகள் என்று ஒரு பிரிவு கிடையாதென ஆட்சியாளர்கள் கூறினாலும், அவர்கள் சம்பந்தமாக பொது சட்டத்திற்குப் பதிலாக விசேட சட்டங்கள் செயற்படுகின்றன. தற்போது இலங்கையில் மக்கள் பாதுகாப்பு சட்டமூலம் சாதாரண சட்டமல்ல, அரசியல் “குற்றவியல்” சட்டமாகும். பயங்கரவாத தடுப்புச்சட்டம் சாதாரண குற்றவியல் சட்டமல்ல. அரசியல் “குற்றவியல்” சட்டமாகும். இந்த சட்டங்களைக் கொண்டுதான் அரசியல் கைதிகள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள். எனவே, அவர்களை அரசியல் கைதிகளாக ஏற்று அவர்கள் விடயத்தில் அரசியல் தீர்மானத்தையே எடுக்க வேண்டும்.
 
அரசியல் ரீதியில் முக்கிய விடயமாக இருப்பது முப்பது வருட யுத்தத்திற்கு அவர்கள் இரையாகியமைதான். யுத்தம் என்பது வரலாற்றுப் பயணத்தில் தர்க்க ரீதியான விளைவுகளேயல்லாது, ஒருவரது தனிப்பட்ட குற்ற நோக்கத்தின், அதிகாரப் போட்டியின் விளைவு அல்ல.
 
யுத்தம் தொடங்குவதற்கு முன்பு 1947 குடிமக்கள் சட்டமூலம், 1958 ‘சிறீ’ எழுத்தின் இனவாத மோதல், 1972 கல்வி தரப்படுத்தல், 1981 அபிவிருத்திச்சபை தேர்தல் வன்முறை, 1983 கறுப்பு ஜூலை, 6 வது அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின் ஊடாக வடபுல நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரட்டப்பட்டமை, யாழ். நூலகம் தீயிடப்பட்டமை உட்பட நூற்றுக் கணக்கான சம்பவங்கள் நடந்ததை மறக்க முடியாது.
 
யுத்தம் ஏற்பட்டமைக்கு சமூகம் என்ற வகையில் நாம் அனைவரும் பொறுப்பு கூற வேண்டியதோடு, நாட்டை ஆண்ட ஆட்சியாளர்களுக்கும் விசேட பொறுப்பு உண்டு. ஆகவே, அதற்கான பொறுப்பை இந்த 106 கைதிகள் மீதும் சுமத்தி விட்டு ஒதுங்கி நிற்க முடியாது. யுத்தத்திற்கு பொறுப்பு கூற வேண்டியது அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல கே.பி., கருணா, பிள்ளையான் போன்ற எல்.டீ.டீ.ஈ. தலைவர்களும் அதற்கு பொறுப்பாளிகள். அவர்கள் சுதந்திரமாக இருக்கும்போது, அந்த இயக்கத்தின் அடிமட்ட உறுப்பினர்களை இவ்வாறு தடுப்புக்காவலில் வைத்திருப்பதன் நோக்கம் என்ன? அதேபோன்று, முன்பு எல்.ரி.ரி.ஈ.யுடன் சம்பந்தப்பட்டிருந்த 12,000 பேருக்கு புனர்வாழ்வளித்து அவர்களை விடுதலை செய்ய அரசாங்கங்களுக்கு பிரச்சினை இல்லையெனில், சரியான முறையில் நிரூபிக்க முடியாத குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளவர்கள் உட்பட இந்த 106 பேரையும் தடுத்து வைத்திருக்கும் நோக்கம் என்ன? 
 
இந்த தடுப்புக்காவல் கைதிகளை விடுதலை செய்யாதிருப்பதற்கு எந்தவித அரசியல் தர்க்கமும் கிடையாது. யுத்தத்திற்குப் பின்பு மீண்டுமொரு யுத்தம் ஏற்படுவதை தடுக்கும் அரசியலாக கருதுவதாயின், இவர்களை சிறைபடுத்தாமல் விடுதலை செய்ய வேண்டும். அப்படி செய்யாதிருப்பதற்கான ராணுவமய தர்க்கமும் இல்லை. யுத்தத்தின் தலைவர்கள் கூட சுதந்திரமாக நடமாடும் நிலையில் இந்த நூறு பேரால் யுத்தமொன்றை தொடங்க முடியாதென்பது எவராலும் மறுக்க முடியாத உண்மையாகும்.
 
மற்றது, நாட்டின் வரி வருமானத்தில் மூன்றில் ஒரு பகுதியை பாதுகாப்பு செலவீனங்களுக்காக ஒதுக்கும் நாட்டில் அவ்வாறு தர்க்கிப்பது கூட கேலிக்கூத்தாகும். உண்மையிலேயே இந்த அரசியல் கைதிகளை விடுதலை செய்யாதிருப்பது இனவாத அரசியல்வாதிகளின் நெருக்குதல் காரணமாகவும் மற்றும் இனவாதத்தை முன்னெடுக்கும் தேவைக்காகவுமேயன்றி வேறு எந்த காரணமும் கிடையாது.
 
இந்த இனவாத கறைபடிந்த அரசியல்தான் சமூகத்தை முப்பது வருட யுத்தத்தில் தள்ளியது. அதற்கு மீண்டும் இடமளிப்பது என்பது இன்னொரு யுத்தத்திற்கு வழி சமைப்பதாக இருக்கும். ஆகவே, இந்த இனவாத திட்டத்தை தோற்கடித்து சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்து கொள்ள அனைவரும் ஒன்று சேர வேண்டும். அதற்கு பரவலான மக்கள் சக்தியை மற்றும் வலுவான மக்கள் கருத்தை கட்டியெழுப்ப வேண்டும். அரசியல் கைதிகள் தொடர்பான பிரச்சினையை வடக்கு பிரச்சினையோடு சுருக்கி விடாமல் தெற்கு சமூகத்தை, விசேடமாக சிங்கள மக்களை இந்த கோசத்தின் கீழ் அணி திரளச் செய்ய வேண்டும். அதற்காகவே சம உரிமை இயக்கம் தோற்றி நிற்கின்றது. சம உரிமை இயக்கம் எடுக்கும் நடவடிக்கைகள் மற்றும் ஏனைய அமைப்புகளுடன் சேர்ந்து எடுக்கும் நடவடிக்கைகளின் அடிப்படை அதுதான். அதற்காக இணையுமாறு சகல முற்போக்கு பிரிவுகளிடமும் வேண்டிக் கொள்கின்றோம்.
 
சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்!
 
மேலும் அடக்குமுறை சட்டங்கள் வேண்டாம். – பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை உடன் ரத்து செய்!
 
சம உரிமை இயக்கம் 
01-10-2018
IMG-bd1b84d3c35d0fda73ad0eb7f2bc4304-V.jpg
 
 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.