Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அலோபதியும் புற்றுநோயும்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறப்புக் கட்டுரை: அலோபதியும் புற்றுநோயும்!

சிறப்புக் கட்டுரை: அலோபதியும் புற்றுநோயும்!

 

ஆர். அபிலாஷ்

 

என்னுடைய குடும்பம் புற்றுநோய்க் குடும்பம். என் பாட்டி, அத்தைகள், அத்தை ஒருவரின் கணவர், என் அப்பா என பலரும் புற்றுநோய்க்குப் பலியானதை, அந்நோய் உடலை மெல்ல மெல்ல சிதைக்கும் அவலத்தை, அது குடும்பத்தினருக்கு அளிக்கும் கடும் துயரத்தை, நேரடியாகக் கண்டிருக்கிறேன்; புற்றுநோய் ஏற்படுத்தும் பொருளாதாரப் பாதிப்பையும் அனுபவித்திருக்கிறேன்.

என் அப்பா தனக்குப் புற்றுநோய் உள்ளதாக அறிந்துகொண்டபோது அது ஓரளவு முற்றிப்போன நிலையில் இருந்தது. நான் அப்போது முதுகலைப் பட்டத்துக்காகப் படித்துக்கொண்டிருந்தேன். கடுமையான அலோபதி சிகிச்சைக்குப் பிறகு அவர் சில வருடங்கள் கூடுதலாய் வாழ்ந்தார். ஆனால், அதற்கு அவர் கொடுத்த விலை பெரிது. அவரது வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் இந்த சிகிச்சைக்காக இழந்தார். அவரது மறைவுக்குப் பிறகு அம்மாவின் எதிர்காலம் கேள்விக்குறியானது. ஒரே வீடு மட்டும் எஞ்சியிருந்தது; அதிலிருந்து வரும் வாடகையும் அதோடு அப்பாவின் மிகச் சொற்ப ஓய்வூதியமும் அவரைச் சற்றே காப்பாற்றின.

முதுகலைப் படிப்புக்குப் பின் ஆய்வுப் படிப்பையும் முடிக்க இயலாத நிலை எனக்கு ஏற்பட்டது; நான் எம்.பில் சேர்ந்த பின் அப்பாவின் நிலை அறிந்தபின் குற்றவுணர்வு என்னை வாட்டியது; குடும்பம் பணமின்றித் தவிக்கையில் நான் மட்டும் சொகுசாகப் படிப்பதா? என் பெற்றோர் படிக்க வேண்டாம் எனத் தடுக்கவில்லை; நான் படிப்பை விட்டுவிட்டு வேலைக்குச் செல்லவா என யோசித்தபோது அவர்கள் “வேண்டாம் படி” எனச் சொல்லவும் இல்லை. அந்தக் குழப்பமான நிலையில் நான் கவிஞர் யுவன் சந்திரசேகரிடம் சென்று என் மனத் தடுமாற்றத்தைப் பகிர்ந்து கொண்டேன். அக்கட்டத்தில் ஒரு தீர்க்கமான முடிவெடுக்க அவர் உதவினார். படிப்பைக் கைவிட்டு வேலைக்குச் செல்ல முடிவெடுத்தேன்.

விளைவாக எந்த வேலையிலும் என்னால் உறுதியாக நீடிக்க முடியவில்லை; என் விருப்பத்துக்குரிய வேலையை நான் அடைய எட்டு வருடங்கள் ஆயின. ஒருவேளை என் இளங்கலையின்போது அப்பாவைப் புற்றுநோய் தாக்கியிருந்தால் நான் கல்லூரிப் படிப்பைக்கூட முடிக்காமல் போயிருக்கலாம். இதுபோன்ற உருக்குலைவுகள் பலர் வாழ்க்கையிலும் நிகழ்ந்துள்ளதை அறிவேன்.

நோயும் பொருளாதாரமும்

இப்போதெல்லாம் முப்பது வயதில் சிலருக்குப் புற்றுநோய் வருகிறது. அவர்கள் மத்திய வர்க்கத்தினராக இருக்கலாம். அப்போது அவர்களுக்குச் சிறு குழந்தையும் வேலையில்லாத மனைவியும் இருக்கலாம். அத்தகைய குடும்பங்கள் நிராதரவாகத் தெருவுக்கு வரும். இதையெல்லாம் யோசிக்கையில், புற்றுநோய் ஏற்படுத்தும் கடும் பாதிப்புக்குக் காரணம் அந்நோய் மட்டுமல்ல; அது ஏற்படுத்தும் பொருளாதாரச் சரிவும்தான் எனப்படுகிறது.

அடையார் கேன்சர் இன்ஸ்டிட்யூட் போன்ற மையங்களில் சிகிச்சை பெற்றாலொழிய உங்கள் சேமிப்பு மொத்தமும் மாயமாகிவிடும். அது மட்டுமல்ல; சிகிச்சை முடிவில் நோயாளி ஜீவப்பிணமாக மாறியிருப்பார். ஆரம்ப நிலைப் புற்றுநோயாளிகள் மட்டுமே இதற்கு விதிவிலக்கு. ஆனால், எத்தனை பேருக்கு ஆரம்ப கட்டத்தில் நோயைக் கண்டுபிடிக்கிறார்கள்? மிக மிகச் சிலரே. இவர்களும் கர்ப்பைப் பை / மார்பகப் புற்று நோயாளிகளும் மட்டுமே நம் கண்முன் உள்ள புற்றுநோயை வெற்றி கண்டவர்கள். ஆனால், இவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். கணிசமானோர் புற்றுநோய் சிகிச்சையின்போதே இறந்துபோகிறார்கள்.

சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டால் டயாலிஸீஸ் செய்யலாம் / உறுப்பு மாற்று சிகிச்சை செய்யலாம். இந்த சிகிச்சைகளின் பக்கவிளைவுகளை நீங்கள் புற்றுநோய் பக்கவிளைவுகளுடன் ஒப்பிட இயலாது. நான் கடந்த கோடை விடுமுறையின்போது ஒரு என்ஜிஓவில் இணைந்து பெங்களூரில் உள்ள நிம்ஹான்ஸ் புற்றுநோய் மருத்துவமனையில் நோயாளிகளுடன் நேரம் செலவிட்டேன். புற்றுநோயால் தளர்ந்துபோன நிறைய குழந்தைகளைக் கண்டேன். இந்தப் பிள்ளைகள் நிச்சயம் பிழைப்பார்கள். ஆனால், இவர்களுக்குச் சகோதரர்கள் உண்டெனில் அவர்கள் சரியான கவனிப்பின்றி பாதிக்கப்படுவார்கள். இப்பிள்ளைகளின் பெற்றோரின் குடும்ப வாழ்க்கை, பொருளாதாரம், வேலை அனைத்தும் சீரழியும். ஆனால், குழந்தைகளுக்காய் நீங்கள் தியாகம் செய்யலாம். அவர்கள் மீளும் வாய்ப்பு 90%க்கு மேல். ஆனால், 50 வயதுக்கு மேலானோருக்கோ தப்பிக்கும் வாய்ப்பு 10%கூட இல்லை. அதுவும் மூன்றாம் நிலை தாண்டினோருக்கு 1%கூட இல்லை.

சிகிச்சை என்னும் வதை முகாம்

அலோபதி மருத்துவர்கள் பலரும் தம்மிடம் வரும் மூன்றாம் / நான்காம் நிலை நோயாளிகளிடம் உண்மையைச் சொல்வதில்லை. பரிசோதனை முயற்சி போல அவர்களை எடுத்துக்கொள்கிறார்கள். நோயுடன் ஒரு வருடம் வாழ வேண்டியவரை கீமோதெரபி / ரேடியேஷன் மூலம் முழுக்க உருக்குலைத்து ஒழுங்காய் சாப்பிடவோ, மூச்சுவிடவோ, தூங்கவோ, விழித்திருக்கவோ முடியாத நிலைக்குத் தள்ளி, கூடுதலாய் சில மாதங்கள் வாழ வைக்கிறார்கள். சில மாதங்கள் என்ன, சில நிமிடங்கள் கூடுதலாய் கிடைத்தாலே அது பேரதிர்ஷ்டம், மதிப்பிட முடியாததுதான். ஆனால், நோயாளிக்குக் கிடைக்கும் இந்தச் சொற்ப உபரி ஆயுள் எந்த மகிழ்ச்சியும் நிம்மதியும் அற்றதாய், கடும் துன்பத்தில் துடிப்பதாய் இருந்தால் அது எந்த வகையில் நல்லது உண்மையிலேயே, இந்தக் கூடுதல் ஆயுளினால் நோயாளிகளோ அல்லது அவரது குடும்பத்தினரோ பலனடைகிறார்களா எனும் கேள்வியை அலோபதி மருத்துவம் எழுப்ப வேண்டும்.

மரணம் ஒரு வருடத்தில் நிச்சயம் நிகழும் எனத் தெரிந்த பின்னரும் மருத்துவர்கள் கீமோதெரபி / ரேடியேஷனைப் பரிந்துரைப்பது ஏன்? குடும்பத்தினர், எப்படியாவது காப்பாற்றி விடலாம், கூடுதலாய் சில வருடங்களாவது வாழும்படி மீட்கலாம் எனும் மிகை நம்பிக்கையில் எத்தகைய கொடுமையான சிகிச்சைகளுக்கும் ஒப்புக்கொள்கிறார்கள். உங்கள் வாழ்நாள் சேமிப்பை முழுக்க மருத்துவமனைக்கு வழங்கி ஒரு வதை முகாமில் நோயாளியைச் சேர்ப்பது என்றல்லாமல் வேறெப்படியும் என்னால் இந்த முடிவைப் பார்க்க முடியவில்லை.

என் நண்பர் ஒருவரின் மனைவிக்குப் புற்றுநோய் உள்ளதாய் கண்டறியப்பட்டது. முற்றிய நிலை. அவர் மாற்று மருத்துவம் முயலலாம் என யோசிக்கையில் மனைவியின் குடும்பத்தினர் அலோபதி சிகிச்சை மேற்கொள்ளலாம் என நெருக்கடி அளிக்கிறார்கள். பல லட்சங்கள் செலவாகும் என்பதால் அவர் பெயரிலான சொத்தை விற்றுவிட உத்தேசம். அவருக்கு ஒரு மகள். மகளின் திருமணத்துக்காகும் செலவை அப்படியே இந்த சிகிச்சைக்காகச் செலவிடப்போகிறார்கள். யாருக்கும் நம்பிக்கை இல்லைதான். ஆனாலும் மருத்துவர் சொல்கிறார் என்பதற்காக உட்படுகிறார்கள். ஒருவேளை இவ்வளவு லட்சங்களை இறைத்தும் ஒரு வருடத்துக்கு மேல் அவர் தாக்குப்பிடிக்க மாட்டார் என்றால் நீங்கள் யாரிடமும் முறையிட முடியாது.

மூன்றாம் / நான்காம் நிலையில் உள்ள ஒரு புற்றுநோயாளியை தம்மால் குணப்படுத்த இயலும், அதற்குக் குறைந்தது 50% வாய்ப்பு உள்ளது என எந்த அலோபதி மருத்துவராவது உறுதியளிக்க இயலுமா? முடியாது. 1% குணமாக வாய்ப்பு. பிறகு ஏன் புற்றுநோய் அணுக்களுடன் சேர்த்து ஆரோக்கியமான அணுக்களையும் அழிக்கும் சுய-தாக்குதல் சிகிச்சை?

26b.jpg

மனித உடல் பற்றிய பார்வை

எனக்கு இந்த ஆவேசமான செயல்பாடுகளுக்கு ஒரே காரணமே தெரிகிறது: மனித உடல் குறித்த சிந்தனை. நாம் இன்று இந்த உடலை ஓர் எந்திரமாகப் பார்க்கிறோம். மிக விலை உயர்ந்த காரை வாங்குகிறீர்கள். கொஞ்ச நாட்களில் அதில் ஒரு கோளாறு. சரி செய்ய சில லட்சங்கள் செலவழித்து ஒரு பாகத்தை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து மாட்ட வேண்டும் என்றால் உடனே உடன்படுவோம்.

நம் உடலையும் இந்த காரைப் போலத்தான் காண்கிறோமோ எனத் தோன்றுகிறது. செலவு செய்தால் இந்த உடலை நீண்ட காலம் ஓடவைக்க முடியும் என நம்புகிறோம். ஆனால், அலோபதி மருத்துவம் எல்லா வியாதிகளையும் சுலபத்தில் சரி செய்யும் அளவுக்கு இன்னும் வளரவில்லை. உடல் கோளாறுகள் பலவற்றுக்கு அலோபதியில் தீர்வில்லை. ஆகையால், ஆயுளை மிகக் குறைவாக நீடிக்க, வலியைக் குறைக்க அவர்கள் முயல்கிறார்கள். ஆனால், காப்பாற்றவே முடியாது எனும் நிலையிலுள்ள நோயாளியைக்கூட நாங்கள் காப்பாற்றியே தீருவோம் என மருத்துவர்கள் கச்சை கட்டுவதே இங்கு முக்கியப் பிரச்சினை.

மனித உடல் என்பது எந்திரம் அல்ல. அது இயற்கையோடு, தான் இருக்கும் சூழலோடு இணைந்து இயங்கும் ஓர் உயிரியல் இருப்பு. தன்னளவில் ஒரு சிறிய பிரபஞ்சம். அதற்கென சில நியதிகள் உள்ளன; உடலின் சமநிலை குலையும்போதே வியாதி வருகிறது என ஆயுர்வேதம் கூறுகிறது. புற்றுநோயையும் அது அவ்வாறே காண்கிறது. புற்றுநோய்க்கான ஆயுர்வேத / சித்தா சிகிச்சைகளும் உடல் இழந்துவிட்ட சமநிலையை மீட்க முயல்கின்றன. எப்படி அறிவியலால் இயற்கைப் பேரழிவுகளைத் தடுக்கவோ முடியாதோ அவ்வாறே எல்லா உடல்நலக் கோளாறுகளையும் அலோபதியால் குணப்படுத்த இயலாது. அப்படி முடியாது எனத் தெரிகிறபோது அலோபதி நிபுணர்கள் ஆயுர்வேத மருத்துவர்களுடன் இணைந்து செயல்படத் தயாராக வேண்டும். சில சந்தர்ப்பங்களில் தாம் நம்பும் மாற்று மருத்துவர்களுக்குத் தம் நோயாளிகளைப் பரிந்துரைக்கவும் அவர்கள் தயாராக வேண்டும்.

மாற்று மருத்துவத்திடமும் உறுதியான தீர்வுகள் இல்லைதான். ஆனால், அலோபதி அளவுக்கு அது நோயாளிகளின் வாழ்வாதாரத்தையும், உடல்நலனையும் சீர்குலைப்பதில்லை. ஆகையால், அலோபதி மருத்துவர்கள் “நான் கடவுள்” பிம்பத்தைக் களைந்து மனிதாபிமானத்துடன் செயல்பட வேண்டும். இது எத்தனையோ ஆயிரம் குடும்பங்கள் சிதறிச் சின்னாபின்னமாகாமல் காப்பாற்றும்.

(கட்டுரையாளர் அபிலாஷ் சந்திரன் எழுத்தாளர். யுவபுரஸ்கார் விருதைப் பெற்றவர். இலக்கியம், உளவியல், கிரிக்கெட் முதலான பல விஷயங்களைப் பற்றித் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிவருகிறார். இவரைத் தொடர்புகொள்ள:abilashchandran70@gmail.com)

 

 

https://minnambalam.com/k/2018/10/25/26

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.