Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் நெருக்கடியும் தமிழர்களும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் நெருக்கடியும் தமிழர்களும்

எம்.எஸ்.எம். ஐயூப் / 2018 டிசெம்பர் 12 புதன்கிழமை, மு.ப. 02:31 Comments - 0

தற்போதைய அரசியல்,  அரசமைப்பு நெருக்கடியால், தமிழ் அரசியலிலும் தமிழ் ஊடகத்துறையிலும் பாரியதொரு மாற்றம் ஏற்பட்டு இருப்பதை அவதானிக்க முடிகிறது.   

தமிழ் அரசியலும் ஊடகத்துறையும், இனப்பிரச்சினை என்ற கூண்டிலிருந்து வெளியே வந்து, தேசிய அரசியலைத் தமது பிரதான களமாக மாற்றிக் கொண்டு இருப்பதே, அந்த மாற்றமாகும்.   

உதாரணமாக, கடந்த வெள்ளிக்கிழமை வெளியான பிரதான இரண்டு தமிழ்ப் பத்திரிகைகளில், இனப்பிரச்சினை தொடர்பான இரண்டு செய்திகள் வீதம், நான்கு செய்திகள் மட்டுமே பிரசுரமாகியிருந்தன.  

 இந்த அரசியல் நெருக்கடிக்கு முன்னர், தமிழ்ப் பத்திரிகைகளில், தேசியச் செய்திகள் என்று அடையாளம் காணக்கூடிய இரண்டொரு செய்திகள் மட்டுமே, வெளியாகி வந்தன.  

தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினை, படையினரால் போர்க் காலத்தில் கைப்பற்றப்பட்ட வடக்கு, கிழக்கில் பொது மக்களின் காணிகள் தொடர்பான பிரச்சினை, காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினை, வடக்கு, கிழக்கு மக்களுக்காகவே மாகாண சபை முறை அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தும், அந்த இரண்டு மாகாணங்களிலும் மாகாண சபைகள் இயங்காமை போன்ற, தமிழ்,  முஸ்லிம் மக்களைப் பாதிக்கும் பிரச்சினைகள், இந்தத் தேசிய அரசியல் நெருக்கடியால் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.   

ஊடகங்களைப் போலவே, தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளும் இனத்துவ அரசியலைத் தற்காலிகமாகவேனும் மறந்துவிட்டார்கள் போலும். 

எவரும் இந்நாள்களில், இனப்பிரச்சினையை முதன்மைப்படுத்திப் பேசுவதாகத் தெரியவில்லை. அவர்கள், வெளிநாட்டுத் தூதுவர்களைச் சந்திக்கும் போதும், தேசிய அரசியல் நிலைமைகளையே முதன்மையாகக் கொண்டு கலந்துரையாடுகிறார்கள்.  

கடந்த வாரம், வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், கனேடிய தூதுவர் டேவிட் மகினொன்னைச் சந்தித்து உரையாடினார். அப்போது, நடைமுறைச் சாத்தியமில்லாவிட்டாலும், ஒரு பக்குவம்மிக்க அரசியல்வாதியால் முன்வைக்கப்படும் ஆலோசனையொன்றை முன்வைத்திருந்தார்.   

“தற்போது அரசியல் பிரச்சினைகளை விட, நாடு எதிர்நோக்கியிருக்கும் பொருளாதாரப் பிரச்சினைகளே முக்கியம் என்பதால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் புதிய தலைவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மற்றும் கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய மூவரும் இணைந்து, தேசிய அரசாங்கம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும், நாடு, பொருளாதார ரீதியாக ஓரளவு தேறிய பின், அரசியல் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள முடியும்” என்றும் அவர் கூறியிருந்தார்.  
நாம், கடந்த வாரம் கூறியதைப் போல், நாட்டைத் தற்போதைய அரசியல் சிக்கலில் இருந்து விடுவிக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே முடியும். இரு பிரதான கட்சிகளுக்கும், நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மை இல்லை; அவற்றில் எந்தக் கட்சியுடனாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்தால், அக்கட்சிக்கு அரசாங்கத்தை நிறுவ முடியும்.   

ஆனால், அவ்வாறு இணைந்து ஆட்சி நடத்த, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முற்பட்டால், தமிழ் மக்களின் போராட்டத்தை, கூட்டமைப்பு காட்டிக் கொடுத்ததாக, அதன் போட்டிக் கட்சிகள், தமிழ் மக்கள் மத்தியில் பிரசாரம் செய்யும். எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆசைப் பட்டாலும், ஆட்சியில் சேர முடியாது.  

தற்போதைய பிரச்சினைக்குத் தீர்வு, நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி, அறுதிப் பெரும்பான்மையுள்ள அரசாங்கம், உருவாக இடமளிப்பதேயாகும். அதற்காக, நாடாளுமன்றம் சட்டப்படி கலைக்கப்பட வேண்டும். சர்ச்சையற்ற முறையில், அதைச் செய்வதாக இருந்தால், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானம் ஒன்றின் மூலமாகவே, அதைச் செய்ய முடியும்.  

அவ்வாறு, நாடாளுமன்றத்தைக் கலைத்து நடத்தப்படும் தேர்தலில், மீண்டும் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மைப் பலத்தைப் பெறாத நிலை உருவாகலாம். ஆனால், இரண்டு பக்கத்திலுள்ள பலங்களின் அடிப்படையில் புதியதொரு சமநிலையை உருவாக்க முயற்சி செய்வதில் தவறில்லை. 

அதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இரு பிரதான கட்சிகளில் ஒன்றுடன் இணைந்து, தற்போதைய சிக்கலைத் தீர்க்கும் வகையில், தற்காலிகமாக அரசாங்கமொன்றைப் பதவிக்குக் கொண்டு வந்து, பின்னர் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் தீர்மானமொன்றை, நாடாளுமன்றத்திலேயே நிறைவேற்றிக் கொள்ளமுடியும். அதுதான் நோக்கமென்றால், மஹிந்த அணியினருடன் சேர்ந்தே, கூட்டமைப்பு தற்காலிக அரசாங்கத்தை உருவாக்க வேண்டும். ஏனெனில், அவர்கள்தான் பொதுத் தேர்தல் வேண்டும் எனத் துடிக்கிறார்கள்.   

ஆனால், நாட்டில் வாழும் கடும்போக்குவாத பேரினவாதிகளில், அநேகமான எல்லோரையும் உள்ளடக்கியுள்ள மஹிந்த அணியினருடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புச் சேர்வதானது, அரசியல் தற்கொலையேயன்றி வேறொன்றுமல்ல.   

ஏற்கெனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இந்தத் தேசிய நெருக்கடியின் போது, நியாயத்தின் பக்கம் நின்று, தமது பங்கையாற்றி வருகிறது. 

ஐ.தே.க ஆட்சி அமைக்க, அதற்குத் தாம் உதவி வழங்குவதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் மூலம், கூட்டமைப்பு அண்மையில் அறிவித்து இருந்தது. இதுவும் தமிழ்த் தலைவர்கள், தேசிய அரசியலை முதன்மையாகக் கொண்டு சிந்திப்பதையே காட்டுகிறது. 

ஆயினும், நீதிமன்றத் தீர்ப்பு சாதகமாக அமைந்து, அவ்வாறு கூட்டமைப்பின் உதவியுடன், ஐ.தே.க ஆட்சியை அமைத்ததன் பின்னர், ஐ.தே.க தலைவர்கள் நாடாளுமன்றத்தைக் கலைக்க விரும்பாவிட்டால், தமிழ்க் கூட்டமைப்பு, பெரும் அசௌகரியத்தை எதிர்நோக்க நேரிடும்.  

image_ed108dd14c.jpg

“நாம், புதிய அரசமைப்பைத் தருவோம்; அதற்காக எமக்கு ஆட்சியை அமைத்து, அதைத் தொடர இடமளியுங்கள்” என்று, ஐ.தே.க கோரலாம். ஆனால், தற்போதைய புதிய அரசியல் நிலைமையின் கீழ், புதிய அரசமைப்பொன்றை நிறைவேற்றத் தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தை, ஐ.தே.கவால் தேடிக் கொள்ள முடியாது.   

எனவே, அதை நம்பி ஐ.தே.கவுக்கு ஆட்சியைத் தொடரவிட்டால், கூட்டமைப்பு ஏமாந்துவிடுவது திண்ணம். எனவே, ஐ.தே.கவுக்கான, கூட்டமைப்பின் உதவி, நிபந்தனையுடனானதாக இருப்பதே நல்லது.  உண்மையிலேயே தற்போதைய நிலையில், கூட்டமைப்பு அவ்வாறானதொரு நடவடிக்கையை மட்டுமே எடுக்க முடியும். 

ஆட்சியைத் தொடர, ஐ.தே.கவுக்குக் கூட்டமைப்பு உதவி வழங்க முற்பட்டால், சிங்கள இனவாதிகள் ஐ.தே.கவையும் தமிழ் இனவாதிகள் கூட்டமைப்பையும் கொன்றே விடுவார்கள். ஏற்கெனவே, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் போன்றோர், கூட்டமைப்பை விமர்சித்து வருகிறார்கள்.  

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற ஒரு சம்பவத்தைப் பாவித்து, பேரினவாதிகள் சிங்கள இனவாதிகளும் ஐ.தே.கவுக்கு எதிராக, இனவாதத்தைத் தூண்டி வருகிறார்கள். 

பிரதமருக்கான நிதி ஒதுக்கீட்டை இடைநிறுத்துவதற்கான ஒரு தீர்மானம், அண்மையில் 122 பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. அதற்கான வாக்கெடுப்பு, இலத்திரனியல் முறையில் நடைபெற்று, வாக்களித்தவர்களின் பெயர்களுடன் பெறுபேறுகள் தெளிவாக இருக்கும் நிலையில், பெயர் குறிப்பிட்டு, வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என, முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கிரிஎல்லை, சபாநாயகரைக் கேட்டுக் கொண்டார். அப்போது உடனடியாக, அவர் அருகே ஓடோடிச் சென்ற கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன், சற்று வேகமாக அதைக் கண்டித்தார்.  

இதைப் பாவித்து, மஹிந்த அணியினர், சுமந்திரனே இப்போது, ஐ.தே.கவை வழிநடத்துகிறார் எனக் கூறித் திரிகின்றனர். இது மறுபுறம் நடந்திருந்தால், அதாவது, பெயர் கூறிப்பிட்டு வாக்கெடுப்பை நடத்த வேண்டும் எனச் சுமந்திரன் கேட்டு, கிரிஎல்ல அதற்காக, சுமந்திரனைக் கண்டித்திருந்தால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை, இப்போது கிரிஎல்லவே வழிநடத்துகிறார் என்று, மஹிந்த அணியினர் கூறுவார்களா? கூற மாட்டார்கள்.  

அதாவது, அவர்களது கண்ணோட்டத்தில், கிரிஎல்ல தமிழ்க் கூட்டமைப்பை வழிநடத்தலாம். ஆனால் சுமந்திரன், ஐ.தே.கவை வழிநடத்துவது மகா குற்றமாகும். 

ஏன்? சுமந்திரன் தமிழர்; கிரிஎல்ல பெரும்பான்மையினத்தைச் சேர்ந்தவர். தமிழர் ஒருவர், சிங்களவர்கள் பெரும்பான்மையாகக் கொண்ட கட்சியொன்றை வழிநடத்துவது, அவர்களது கண்ணோட்டத்தில் மகா கேவலமான விடயம்.  

 ஐ.தே.க சார்பில், 2002ஆம் ஆண்டு புலிகளுடன் சமஷ்டித் தீர்வுக்காக உடன்படிக்கை செய்து கொண்ட, படித்தவர் என்று கூறப்படும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸும், இவ்வாறு கருத்து வெளியிடுவது, எவ்வளவு கேவலமான விடயம்.   

இது இவ்வாறிருக்க, இவ்வாரம் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு வழக்குகளோடு, தற்போதைய அரசியல் நெருக்கடியோடு தொடர்புள்ள ஐந்து வழக்குகள், இப்போது நிலுவையில் உள்ளன. 

ஒன்று, கடந்த நவம்பர் ஒன்பதாம் திகதி, ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைத்ததை எதிர்த்து, சட்டமா அதிபருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 13 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான வழக்காகும்.  

இரண்டாவது, நாடாளுமன்றக் கலைப்புக்கு எதிராக, இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதன் பின்னர், சபாநாயகர் நாடாளுமன்றத்தைக் கூட்டியமைக்கு எதிராக, முன்னாள் சிவில் பாதுகாப்புப் படையின் கட்டளைத் தளபதியாக இருந்த, சரத் வீரசேகர தாக்கல் செய்துள்ள வழக்காகும்.  

இதற்கிடையில், பெரும்பான்மை பலம் இல்லாத நிலையில், மஹிந்தவுக்குப் பிரதமர் பதவியில் இருக்க முடியாது எனப் பிரகடனப்படுத்தும் வகையில், ‘குவோ வோரண்டோ’ கட்டளையொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி, பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்கவும் மஹிந்தவுக்கு எதிரான எம்.பிக்கள் 121 பேரும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளனர்.   

ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி, ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமர் பதவியில் இருந்து, ஜனாதிபதி நீக்கியமையையும் அன்றே மஹிந்த ராஜபக்‌ஷவைப் பிரதமராக நியமித்தையையும் எதிர்த்து, சிவில் சமூகச் செயற்பாட்டாளரான தம்பர அமில தேரர், இவ்வாரம் ஒரு வழக்கைத் தாக்கல் செய்தார்.   

அத்தோடு, நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர், அதற்கு எதிராக, இடைக்காலத் தடை உத்தரவொன்று பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்றத்தைக் கூட்டியதன் மூலம், சபாநாயகர் கரு ஜயசூரிய, நீதிமன்றத்தை அவமதித்துள்ளார் என்று, பிரகடனம் செய்யுமாறு கோரி, சட்டத்தரணி அருண லக்சிறி மற்றொரு வழக்கை, இவ்வாரம் தாக்கல் செய்தார்.   

இந்த நிலையில், நாடாளுமன்றத்தைக் கலைத்தமைக்கு எதிராக, நவம்பர் 13ஆம் திகதி, உயர்நீதிமன்றமும் மஹிந்தவின் பிரதமர் பதவிக்கும் அவரது 48 அமைச்சர்களின் பதவிகளுக்கும் எதிராக, டிசெம்பர் 03ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றமும், இடைக்காலத் தடை உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளன.  

அதன்படி வரும் நாள்களில், நான்கு நிலைமைகள் உருவாகலாம். 

ஒன்றில், கலைப்பும் மஹிந்தவின் பிரதமர் பதவியும் சட்டபூர்வமாகலாம்.அல்லது, கலைப்பு சட்டபூர்வமாகி, மஹிந்தவின் பிரதமர் பதவி சட்டவிரோதமாகலாம். அல்லது, கலைப்பு சட்ட விரோதமாகி, மஹிந்தவின் பிரதமர் பதவி சட்டபூர்வமாகலாம். அவ்வாறு, இல்லாவிட்டால் கலைப்பும் மஹிந்தவின் அரசாங்கமும் சட்டவிரோதமாகலாம்.  

முதல் நிலைமை உருவானால், மஹிந்தவின் தலைமையிலான காபந்து அரசாங்கமொன்றின் கீழ், உடனடியாகப் பொதுத் தேர்தல் நடைபெறும்.   

இரண்டாவது நிலைமை உருவானால், காபந்து அரசாங்கம் ஒன்று இல்லாமல், தேர்தலை நடத்த வேண்டிய நிலைமை உருவாகலாம்.  

 மூன்றாவது நிலைமை ஏற்பட்டால், பெரும்பான்மை பலம் இல்லாத மஹிந்த, குறைந்த பட்சம் 2020ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வரை, ஆட்சியை நடத்த வேண்டியிருக்கும். 

நான்காவது நிலைமையின் கீழ், புதிய பிரதமர் ஒருவரை, ஜனாதிபதி நியமிக்க நேரிடும்.  

தமது தலைமையிலான காபந்து அரசாங்கத்தின் கீழ், தேர்தலை நடத்தும் முதலாவது நிலைமையையே மஹிந்த விரும்புவார். 

புதிய பிரதமர் ஒருவரை நியமிக்க நேரிடும், கடைசி நிலைமையை ரணில் விரு ம்புவார். 

பெரும்பான்மை இல்லாத மஹிந்த அரசாங்கத்தை, நடத்த வேண்டிய மூன்றாவது நிலைமையையே மைத்திரிக்குக் கைகொடுக்கும். ஏனெனில், அப்போது குறைந்த பட்சம், 2020ஆம் ஆண்டு வரை, மைத்திரியின் சூழ்ச்சிகளின் உதவியிலேயே, மஹிந்த தங்கியிருக்க வேண்டியிருக்கும். அப்போது, மைத்திரியால் குறைந்த பட்சம், பாதுகாப்பாக ஓய்வு பெறவாவது முடியும். 

ஆனால், இரண்டாவது நிலைமையான காபந்து அரசாங்கம் இல்லாத நிலையில், தேர்தலை நடத்துவதே நடுநிலையான மக்களின் விருப்பத்துக்குப் பொருந்தும்.   

இந்த வாரம், நாடாளுமன்றக் கலைப்புத் தொடர்பான வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்த வாரம், இலங்கை அரசியல் வரலாற்றில் நிர்ணயகரமானதொரு வாரமாகும்.   

 

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அரசியல்-நெருக்கடியும்-தமிழர்களும்/91-226470

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.