Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அபிவிருத்தி அரசியலும் உரிமை அரசியலும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அபிவிருத்தி அரசியலும் உரிமை அரசியலும்

 
 
 
 
ranil-sampanthan-300x167.jpg
ஸ்ரீலங்கா அரசியலில் 52 நாட்களாக இடம்பெற்ற குழப்பம் முடிவுக்கு வந்து ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐ.தே.மு. அரசாங்கம் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கிறது. மூன்றரை வருடமாகத் தொடர்ந்த மைத்திரி – ரணில் தலைமையிலான “நல்லாட்சி” அக்டோபர் 26 இல் முடிவுக்கு வந்தது. மகிந்த ராஜபக்‌ஷவின் பதவியேற்பு அந்த நல்லாட்சிக்கு முடிவு கட்டியது. இப்போது எதிர்க்கட்சித் தலைவர் பதவி தனக்குத்தான் உரியது என சம்பந்தன் என்னதான் முரண்டு பிடித்தாலும் கூட ரணில் அரசாங்கத்தில் அவர் ஒரு “பகிரங்கப்படுத்தாத பங்காளி”யாக தான் இருக்கிறார். கூட்டமைப்பின் தலைமை சொல்லக்கூடிய விஷயங்களை செவிமடுத்து செயல்படுத்தும் நிலைமையில்தான் ரணில் இருக்கின்றார். இந்த நிலைமை அடுத்த ஒரு வருட காலத்திற்கு நீடிக்கலாம். இந்தக் காலத்தில் என்ன நடைபெறும் என்பது தொடர்பில் சில கருத்துகளை முன்வைப்பதுதான் இந்த பகுதியின் நோக்கம்.
மஹிந்த ராஜபக்‌ஷவும், மைத்திரிபால சிறிசேனவும் இணைந்து முன்னெடுத்த ‘அரசியல் சதி’ முறியடிக்கப்பட்ட நிலையில், ரணில் மீண்டும் பிரதமராகப் பதவி ஏற்றுக்கொண்டார். அவருடன் 28 உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவையும் பதவியேற்றுள்ளது. இந்த அமைச்சர்கள் நியமனத்தில் மைத்திரிக்கும் ரணிலுக்கும் இடையிலான முரண்பாடுகள் செய்தியாக வெளிவந்தது. அமைச்சரவை நியமனத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் செல்வாக்கைச் செலுத்தி இருந்தது என்பது இரகசியமான ஒன்றல்ல. சுவாமிநாதனுக்கு மீள்குடியேற்ற அமைச்சு கொடுக்கப்படாது என கூட்டமைப்பு கொடுத்த அழுத்தத்தையடுத்தே அந்த பதவியிலிருந்து அவர் ஓரங்கட்டப்பட்டார். மாற்றுக் கட்சி ஒன்றில் இருக்கக்கூடிய தமிழர் ஒருவர் அமைச்சராக இருந்து வடக்கில் செல்வாக்கு பெறுவதை ரசிக்கும் நிலைமையில் கூட்டமைப்பின் தலைமை இல்லை. அதனால்தான் சுவாமிநாதனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கக் கூடாது என்பதில் கூட்டமைப்பு உறுதியாக இருந்தது.
அதேவேளையில் மற்றொரு முக்கியமான அம்சமாக புனர்வாழ்வு புனருத்தாரணம் வடக்கு அபிவிருத்தி அமைச்சுப் பதவியை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தன்வசமாக்கியிருக்கின்றார். இது ரணில் தானாகவே எடுத்த முடிவா அல்லது சுமந்திரனுடன் கலந்தாலோசித்து எடுத்த முடிவா என்பதையிட்டு நாம் இந்த இடத்தில் ஆராயவில்லை. வாசகர்களே இது குறித்து ஊகித்துக்கொள்வார்கள். அமைச்சரவை பதவியேற்பு இடம்பெற்ற மறுநாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி.க்களை ரணில் சந்தித்துப் பேசினார். இதன்போது தன்வசம் வந்துள்ள புனர்வாழ்வு, புனருத்தாரணம், வடக்கு அபிவிருத்தி அமைச்சை எவ்வாறு கையாள்வதற்கு தான் திட்டமிட்டுள்ளார் என்பது தொடர்பில் கூட்டமைப்பு எம்பிக்களுடன் அவர் கருத்துக்களை பரிமாறினார்.
வடக்கு கிழக்கு எம்பிக்களின் கருத்துகளை அறிந்து கொண்டே அந்த மாகாணங்களுக்கான திட்டங்கள் தன்னால் செயற்படுத்தப்படும் என்பதையும், அவற்றை செயற்படுத்துவது தொடர்பில் கூட்டமைப்பு எம்பிக்களை உள்ளடக்கிய குழு ஒன்று அமைக்கப்படும் எனவும் இதன்போது ரணில் தெரிவித்திருக்கின்றார். அதாவது வடக்கு அபிவிருத்தி, புனர்வாழ்வு, புனரமைப்பு போன்றவற்றில் கூட்டமைப்பு எம்பிக்கள் பங்களிப்பு அதிக அளவுக்கு இருக்கப்போகின்றது என்பது இதன் அர்த்தம்.
அமைச்சர் பதவிகளை எடுப்பதில்லை என்பதில் கூட்டமைப்பு உறுதியாக இருந்தது. இன நெருக்கடிக்கு நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வை காண்பதற்கு முன்பாக அமைச்சர் பதவிகளை பெற்றுக் கொள்வது மக்கள் மத்தியில் அதிருப்தியை அதிகரிக்கும் என்பது கூட்டமைப்பு தலைமைக்கு தெரியும். அதனை தமது எதிர் தரப்பினரும் பயன்படுத்திக் கொள்வார்கள் என்ற அச்சமும் கூட்டமைப்பு தலைமைக்கு இருக்கின்றது. அதனால் அமைச்சர் பதவிகளைப் பெற்றுக் கொள்வதில்லை என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கின்றார்கள்.
இப்போது முக்கியமான தேர்தல்கள் எதிர்கொள்ளப்படும் நிலைமையில் வடக்கு கிழக்கில் கூட்டமைப்பு பெரும் சவாலை எதிர்நோக்கி இருக்கின்றது. குறிப்பாக வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் தலைமையில் உருவாகியிருக்கும் ‘தமிழ் மக்கள் கூட்டணி’ மாகாணசபைத் தேர்தல்களில் மட்டுமன்றி பொதுத் தேர்தலில் கூட கூட்டமைப்புக்கு அச்சுறுத்தலை கொடுக்கக் கூடிய நிலையில் இருக்கின்றது. கூட்டமைப்பின் தலைமையுடன் ஏற்பட்ட கொள்கை ரீதியான முரண்பாடுகள் காரணமாகவே விக்னேஸ்வரன் அதிலிருந்து வெளியே வந்து தனியான கட்சி ஒன்றை அமைத்தார். உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் கட்சிகளுடன் இணைந்து எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதுதான் அவருடைய இலக்கு.
விக்னேஸ்வரனை எதிர்கொள்வதற்கான வியூகங்களை வகுக்க வேண்டிய அவசரம் கூட்டமைப்புக்கு இதனால்தான் ஏற்பட்டது. கடந்த மூன்றரை வருட காலத்தில் புதிய அரசியலமைப்பு ஒன்று வரும் என்ற நம்பிக்கையுடன் கூட்டமைப்பு காய் நகர்த்தியது. ஆனால் தற்போதைய அரசியல் நிலைமைகள் அரசியலமைப்பு வரப்போவதில்லை என்பதை தெளிவாக்கியிருக்கின்றது. அரசியலமைப்பு வந்தாலும் அது தமிழர்களின் அபிலாசைகளை தீர்க்கக்கூடிய தீர்வைத் தரக்கூடியதாக இருக்காது.
இந்தப் பின்னணியில் விக்னேஸ்வரன் போன்ற உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் அரசியல் தலைவர்களை எதிர்கொண்டு வரப்போகும் தேர்தலில் வெற்றி பெற வேண்டுமானால் அபிவிருத்தி அரசியலை முன்னெடுக்க வேண்டிய தேவை கூட்டமைப்பு தலைமைக்கு ஏற்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்‌ஷவின் காலத்தில் அமைச்சராக இருந்து கொண்டு டக்ளஸ் தேவானந்தா எதனை செய்தாரோ அதனையே செய்ய வேண்டிய நிர்பந்தம் கூட்டமைப்புக்கு இப்போது ஏற்படுள்ளது. டக்ளஸ் தேவானந்தாவை விமர்சித்தவர்கள் இன்று அதே பணியை எதிர்க்கட்சித் தலைமைப் பதவியை வைத்துக் கொண்டு செய்கின்றார்கள்.
புனரமைப்பு, புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி அமைச்சை ரணில் தன்வசம் எடுத்துக் கொண்டது கூட்டமைப்பு தலைமைக்கு நன்றி கடனாகத்தான் என அரசியல் வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன. பிரதமர் பதவியை ரணில் மீண்டும் பெறுவதற்கு கூட்டமைப்புதான் காரணமாக இருந்தது. அதனைவிட கூட்டமைப்பிடமுள்ள 14 வாக்ககளை நம்பித்தான் ரணில் காலத்தை ஓட்டவேண்டியவராக உள்ளார்.
அமைச்சராக ரணில் இருந்தாலும்கூட சுமந்திரன் தான் வடக்கில் அவரின் பணிகளை முன்னெடுப்பார் என்பது கொழும்பு அரசியலை நன்கு அறிந்த அனைவருக்கும் தெரியும். இதில் இரண்டு விதமான நலன்களை ரணில் எதிர்பார்க்கின்றார். முதலாவது – வடக்கில் தன்னுடைய செல்வாக்கை அதிகரித்துக் கொள்வதற்கு இது உதவும். இதன் மூலம் நாடு முழுவதிலும் இருக்கக்கூடிய தமிழ் வாக்குகளை வளைத்துப் போட்டு விட முடியும் என்பது அவருடைய கணக்கு. இரண்டாவது – வடக்கில் தீவிர தேசியவாத அரசியலை முன்னெடுக்க கூடிய விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்களை இரண்டாம் இடத்திற்கு தள்ளிவிட்டு கூட்டமைப்பை முன்னணிக்கு கொண்டு வருவதற்கு இது உதவும் என அவர் நினைக்கிறார். ஏனென்றால் வடக்கு அபிவிருத்திக்கான திட்டங்கள் அனைத்தும் கூட்டமைப்பினராலேயே முன்னெடுக்கப்படும்.
அடுத்த வருடத்தில் மூன்று தேர்தல்கள் நடைபெறும். மாகாண சபை தேர்தல் அடுத்த வருட ஆரம்பத்தில் இடம்பெறும். வருட இறுதிக்குள் ஜனாதிபதித் தேர்தலும் பொதுத் தேர்தலும் இடம்பெறும். புதிய அரசியலமைப்பின் மூலமாக தமிழர்களுடைய உரிமைகளை கொடுக்காமல் அவர்களுடைய வாக்குகளை வசப்படுத்த வேண்டுமானால் அபிவிருத்தி அரசியலை முன் நகர்த்த வேண்டும் என்பது ரணில்லின் கணிப்பு. கூட்டமைப்பின் கணக்கும் இதுதான். புதிய அரசியலமைப்பை கொண்டு வருமாறு ரணிலுக்கு அழுத்தம் கொடுப்பது தென்பகுதி சிங்களவர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தும் என்பது கூட்டமைப்புக்குத் தெரியும். ரணிலை சங்கடப்படுத்த கூட்டமைப்பு விரும்பாது.
அதேவேளை மனித உரிமைகள், பொறுப்புக்கூறல், ஜெனிவாவில் உடன்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்தல் போன்றவற்றிலிருந்து தமிழ் மக்களின் கவனத்தை சிதறடிக்க வேண்டுமானால் வடக்கு கிழக்கு அபிவிருத்தியில் கூடிய கவனம் செலுத்த வேண்டும். அதற்காக கூட்டமைப்பும் ரணிலும் இணைந்து தயாரித்த உபாயங்களில் ஒன்றாகவே வடக்கு அபிவிருத்தி உட்பட புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சு பொறுப்புகள் ரணிலின் வசம் எடுத்துக்கொண்டமையைக் குறிப்பிடலாம்.
அதாவது “அபிவிருத்தி அரசியல்” என்ற கருத்தை முன்னெடுப்பதன் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் காணப்படும் “உரிமை அரசியல்” என்ற கோஷத்தை ஒடுக்குவதற்கு ரணில் – சுமந்திரன் வகுத்துள்ள திட்டங்களில் ஒன்றாகவே இதனைக் கருதலாம். ஒரு காலத்தில் “சோறா சுதந்திரா?” என்ற கோஷம் வடக்கில் எதிரொலித்ததை யாரும் மறந்திருக்கமாட்டார்கள். தமிழ் மக்கள் அபிவிருத்திக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால், அபிவிருத்தி என்ற மாயைக்குள் உரிமைக் கோஷம் புதைக்கப்பட்டுவிடக்கூடாது. “உரிமைகள் இல்லாத அபிவிருத்தி நிரந்தரமானதாக இருக்காது” என வடமாகாண முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் ஒரு தடவை குறிப்பிட்டிருந்தமையும் இங்கு கவனிக்கத்தக்கது.
அடுத்ததாக வரப்போகும் ஒரு வருட காலத்தில் அபிவிருத்தி என்ற பெயரில் வடக்கில் என்ன என்ன நடக்கப் போகின்றது என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த அபிவிருத்தி என்ற கோசத்தில் மயங்கி விடாமல் எங்களுடைய உரிமை அரசியலையும் பொறுப்புக்கூறலையும், ஜெனீவா உறுதிமொழிகளையும் உயிர்த்துடிப்புடன் வைத்துக் கொள்வதற்கு நாம் என்ன செய்யவேண்டும் என்பதையிட்டு கவனத்தில் கொள்வது தமிழ் தேசிய சக்திகளின் பணியாக இருக்க வேண்டும். ஏனெனில், அபிவிருத்தி என்ற மாயைக் காட்டி இவற்றையெல்லாம் புதைத்துவிடுவதுதான் கொழும்பின் திட்டம். அதற்கு கூட்டமைப்பின் துணையும் அவர்களுக்குத் தேவை. கொழும்பு எதிர்பார்பதைவிட வேகமாகக் கூட்டமைப்பின் தலைமை செயற்படுவதுதான் ரணிலுக்குக் கிடைத்துள்ள வரப்பிரசாதம்!

https://www.thaarakam.com/2018/12/23/அபிவிருத்தி-அரசியலும்-உர/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.