Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என் தோழமை - சுப. சோமசுந்தரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

                                                             என்   தோழமை

                                                (My Comradery or Camaraderie)

                                                                                                            - சுப. சோமசுந்தரம்

 

            எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து திராவிட இயக்கச் சிந்தனையாளர்களால் பகுத்தறிவு எனும் உளி கொண்டு மொழியுணர்வு எனும் மெருகேற்றி செதுக்கப்பட்டேன் என்று நான் மார்தட்டிக் கொள்ளலாம். நான் சிறுவனாயிருந்த போதே என் இல்லத்தில் நிலவிய ஜனநாயகச் சூழலால் பெரியாரும் அண்ணாவும் என் உயிரிலும் உணர்விலும் கலந்தமை நான் பெற்ற பேறு. அவ்வயதிலேயே எல்லோர்க்கும் இது வாய்ப்பதில்லை. அதன்பின் திராவிட இயக்கத்தில் வந்தவர்களை பெரியாரோடும் அண்ணாவோடும் ஒப்பிட ஒருபோதும் மனம் ஒப்பவில்லை.

 

            பிற்காலத்தில் இடதுசாரிச் சிந்தனையாளர்களுடன் 'உடம்பொடு உயிரிடையென்ன' நட்பு ஏற்படினும் , அஃது 'முந்தையிருந்து நட்டல்' என மார்தட்டிக் கொள்ள வாய்ப்பில்லை. தோழர் பொன்னுராஜ் போன்ற ஆளுமைகளால் நான் ஈர்க்கப்பட்டதன் விளைவே மார்க்சீயத்தை நோக்கிய என் நகர்தல். என் போன்ற பாமரர்கள் முதலில் தத்துவத்தால் ஈர்க்கப்பட்டுப் பின்னர் ஆளுமைகளைப் பார்ப்பதில்லை. கொண்ட கொள்கையுடன் வாழ்வியலைப் பின்னிய ஆன்றோர் பிற்காலத்திய சந்ததிகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்த இயலும், கொள்கையின்பால் ஈர்க்க இயலும் என்பதற்கு என் போன்றோர் சான்றுகள். சான்றாண்மை மிக்க தொ.பரமசிவன் அவர்களால் மற்றுப் பற்றில்லாத மக்கட் பற்றாளர் தோழர் ஆர்.நல்லகண்ணு, மாமனிதர் தோழர் ஜீவா, ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாடு, அச்சுதானந்தன், ஜோதிபாசு போன்ற நல்லோர் பலரை அறியப் பெற்றேன். இடதுசாரித் தோழமைக்கு நான் ஒரு தாமத வரவு. எனினும் தகர்க்க முடியாத உறவு. இவர்களிடம் படித்தது, கேட்டது, உணர்ந்ததன் அடிப்படையில் எனது முதல் கண்டுபிடிப்பு - நான் முதலில் பார்த்த மார்க்சிஸ்டுகள் பெரியாரும் அண்ணாவும் என்பதே; அதன்பின் சாஸ்திரி, காமராசர், கக்கன் என்று பெரிய பட்டியல். இது எனக்கு மட்டும். எனது இடதுசாரித் தோழர்கள் சிலர்/பலர் இப்பட்டியலை முழுமையாக ஏற்க மாட்டார்கள் என நினைக்கிறேன். ஏற்க வேண்டிய அவசியம் நிச்சயமாய் அவர்களுக்கில்லை. அவர்கள் அதனை ஏற்க வேண்டிய அவசியம் எனக்குமில்லை என்பதுவும் அவர்களிடமே நான் படித்த பாடம். ஒரு கால கட்டத்திற்கு மேல் என் சிந்தனையைச் செதுக்கியவர்களும் தோழர்கள்தானே ! அண்ணாவைத் தெரிந்த பின்தான் எனக்கு தம்பிகளைத் தெரியும். ஆனால் தோழர்கள் மூலமாகத்தான் எனக்கு காரல் மார்க்ஸையே தெரியும். இப்போதும் எப்போதும் திராவிட இயக்கமும் பொதுவுடைமையும் கலந்த கலவையாகவே என்னை வரித்துக் கொள்ள விரும்புகிறேன். எதையும் முழுமையாகச் செய்வதில்லை என்றும் எடுத்துக் கொள்ளலாம்.

 

            இதுவரை படர்க்கையில் வந்த தோழர்கள் இனி முன்னிலையிலோ படர்க்கையிலோ இடத்திற்கேற்றாற் போல். இங்கு நான் குறிப்பிட வேண்டிய விடயம் ஒன்றுண்டு. இந்திய கம்யூனிஸ்ட், இந்திய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட், மார்க்ஸிஸ்ட்-லெனினிஸ்ட் போன்ற தீவிர கம்யூனிஸ்ட்கள் (முன்னவர்கள் கணிப்பின்படி ultra left) என்ற சாதி பேதம் நான் பார்ப்பதில்லை. ஏனெனில் எனக்குத் தெரியாது. தெரிந்து கொள்ள முயற்சி செய்ய மாட்டேன் என்று முரண்டு பிடிப்பவன் நான். இவ்விடயத்தில் எனக்கு அறியாமையே வரமாய் அமைந்ததில் உங்களுக்கு என்ன பிரச்சனை, தோழர்? என்னைப் பொறுத்த மட்டில் 'தன் பெண்டு, தன் பிள்ளை' என மட்டுமே வாழ்ந்து மடியும் கூட்டத்திலிருந்து நீங்கள் அனைவரும் வேறுபட்டவர்கள். இப்பண்பே உங்களிடத்தில் எனக்கான ஈர்ப்பின் ஆணிவேர். ஆழ்ந்த வாசிப்பினால் உற்று நோக்கி தத்துவார்த்தமாகப் பார்த்தால்தான் அந்த அரசியல் எல்லாம் எனக்குப் புரியும்  என்று நீங்கள் சொல்லலாம். "அட போங்க, தோழர் ! உங்களுக்கு வேற வேலையில்லை. உங்களைப் போல் ஆழத்தில் மூழ்கி முத்தெடுக்காமல், வாழும் மட்டும் பொதுவுடைமைக் குரவையில் (கடலில்) நீந்தி, கரைந்து முடிந்து போகிறேனே !" என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

 

            மேலும் நான் என்ன பெரிய செயல்வீரனா? எனக்குப் பெரிய பணப்பிரச்சனை இல்லாததால் சிறிய அளவில் இயக்கங்களுக்கும் போராட்டங்களுக்கும் அவ்வப்போது பொருளுதவி செய்கிறேன். உள்ளூரில் இருக்கும் பட்சத்தில் நீங்கள் நடத்தும் ஆர்ப்பாட்டங்களில் கோஷம் போட வருகிறேன். மற்றபடி உங்கள் ஈடுபாட்டின் முன் எனது இருப்பு எம்மாத்திரம் ? நான் ஒரு அரசாங்க அடிமை என்பதால் நீங்களும் என்னை எல்லை தாண்ட விடுவதில்லை. இது தனிப்பட்ட முறையிலும் இயக்கம் சார்ந்தும் நீங்கள் என் மீது கொண்ட அக்கறை.

 

            'பெயக் கண்டும் நஞ்சுண்டமையும்' வலுவான தோழமை என்னிடம் கொண்ட உங்களிடம் நான் கொண்டது

                        "குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்

                          மிகை நாடி மிக்க கொளல்"

என்ற வலிமை குறைந்த தோழமையே. அவ்வகையில் நான் சிறிது நன்றி மறந்தவன். உதாரணமாக, என் நிறுவனத்தில் அதிகார வர்க்கத்தின் நியாயமற்ற ஒரு நிலைப்பாட்டிற்கு அத்தனைப் பேரும் அடிபணிந்து செல்கையில் நானும் என்னுடன் தோழர் ஒருவரும் உறுதியாக எதிர்த்து நிற்பதற்குக் காரணம் எங்கள் தோள் வலிமையல்ல. 'MUTA' என்ற இயக்கப் பெயரில் உங்கள் தோழமை தரும் வலிமையே. எனக்கு அமைந்த சிறப்புகள் பல தோழர்களாலேயே அமைந்தது எனும் உணர்வு எனக்கு உண்டு. குணம் நாடியதைப் போல் தோழர்களின் குற்றமும் நாடியதுண்டு. ஈழத்தமிழர் விவகாரத்திலும் கூடங்குளம் அணுமின் நிலைய விவகாரம் போன்றவற்றிலும் இந்திய கம்யூனிஸ்ட், இந்திய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுடன் பெரிதும் மாறுபாடு எனக்கு உண்டு. கூடங்குளம் (ரஷிய) அணுமின் நிலையத்தை வளர்ச்சி என்ற பெயரில் ஆதரித்த இடதுசாரிகள் ஜைதாப்பூர் (பிரெஞ்சு) அணுமின் நிலையத்தை எதிர்த்தது வெட்கக்கேடு எனக் கருதுபவன் நான். கட்சியின் பொலிட்பியூரோ முடிவை எடுத்த பின் அதற்கான நியாயங்களைத் தேடுவதில் என் தோழர்கள் கை தேர்ந்தவர்கள். அந்த நியாயங்களை அவர்களிடம் கேட்பதை விட அவர்களது பத்திரிக்கைகளில் தேடிக் கொள்ளலாம். கட்சியை இராணுவக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் கிண்டல் பண்ண நமக்கு என்ன தகுதி இருக்கிறது? மற்றக் கட்சிகளைப் போல் சொந்தக் கருத்துக்களை நட்பு வட்டத்தில் கூட வெளிப்படுத்தாத மனத்தடையோ கட்சிக் கட்டுப்பாடோ இடதுசாரிகளுக்கு அவசியந்தானா? மார்க்ஸியம் ஒரு சித்தாந்தம்; அடுத்து அது ஒரு வாழ்வியல், அவ்வளவுதானே ! ஏதோ நம் துரதிருஷ்டம். நாமும் ஓட்டுக்காக மக்களிடம் கையேந்தும் அவலம்.

 

            சுதந்திரப் போர், மொழிப் போர், ஜல்லிக்கட்டு, ஸ்டெர்லைட் என மக்களின் பெரும் போராட்டங்களில் எல்லாம் முக்கிய இரண்டு பொதுவுடைமைக் கட்சியினர் காணாமல் போனதை அல்லது அடக்கி வாசித்ததை யாரிடம் சொல்லி அழுவது தோழர் ? காணாமல் போனதோ அல்லது அடக்கி வாசித்ததோ எண்ணிக்கையில் நம் பலம் குறைந்தமையால் என்று கூட எடுத்துக் கொள்ளலாம். பலம் குறைந்தமையால் அடக்கி வாசித்தோமா அல்லது அடக்கி வாசித்ததால் பலம் குறைந்தோமா? மேலும், இந்தியப் பொதுவுடைமைக் கதிர் சீன, ரஷிய மண்ணிலும் , தமிழ்ப் பொதுவுடைமைக் கதிர் கொல்கத்தா மண்ணிலும் விளையுமா என்ன ? பொதுவுடைமை பொதுத்தன்மை கொண்டதல்ல என்பது உங்களை விட வேறு யாருக்கு விளங்கப் போகிறது? மற்ற ஓட்டுக் கட்சிகளிடம் இவற்றையெல்லாம் நான் கேட்பதில்லை. ஏனெனில் அவர்கள் எனக்கு அந்நியர். அந்நியர்களிடம் உங்களை விட்டுத் தரவும் என்னால் இயலாது, தோழர் !

 

            அப்படியென்ன தோழமை? உலகில் தோன்றிய தலைசிறந்த பொதுவுடைமைவாதிகளில் ஒருவனான வள்ளுவன் சொன்ன 'மிகை நாடி மிக்க கொளலே' அத்தோழமை. நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை. நீ என்னைக் கைவிடுவதுமில்லை. 'குறையொன்றுமில்லை' என்பதற்குப் பதிலாக 'குறைகளையெல்லாம் மீறி மக்களுக்காகக் கரையும் உன்னில் கரைந்து போவதே பேரின்ப நிலை' என்பதே எனக்கான ஆன்மீகம்.

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, சுப.சோமசுந்தரம் said:

என்னைப் பொறுத்த மட்டில் 'தன் பெண்டு, தன் பிள்ளை' என மட்டுமே வாழ்ந்து மடியும் கூட்டத்திலிருந்து நீங்கள் அனைவரும் வேறுபட்டவர்கள். இப்பண்பே உங்களிடத்தில் எனக்கான ஈர்ப்பின் ஆணிவேர்.

சமூகத்தின் மீது அக்கறையுள்ளவர்கள் இடதுசாரிச் சிந்தனையுள்ளவர்களாக இருப்பார்கள். எனினும் குடும்பமாகிவரும்போது அதே பொதுநல நோக்கோடு இருப்பவர்கள் ஒரு சிலரே.

இடதுசாரிக் கட்சிகளும் தாம் காணாமல்போகாமல் இருப்பதற்காக சமசரங்களை இடையிடையே செய்துகொள்வார்கள். அப்படிச் செய்யாத தீவிர இடதுசாரிகளின் குரலை எவரும் சட்டைசெய்வதில்லை!

"தோழமை"யின் சொற்கள் அனைத்தும் "நாலும் இரண்டும்" போன்று நட்புக்கும், நாட்டுக்கும் உறுதியாக இருப்பதால், அன்னபோஜராஜன் ஆக ஆசை. (அட்சர லட்சம் தந்த அன்ன போஜராஜனைப் போல், 'தோழமை'யின் ஒவ்வொரு எழுத்துக்கும்  லட்சம்  பொன் வழங்க ஆசை.).

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.