Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் பேசும் மக்களின் பேச்சுவழக்கில் கலந்துள்ள சிங்கள மொழிச் சொற்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பேசும் மக்களின் பேச்சுவழக்கில் கலந்துள்ள சிங்கள மொழிச் சொற்கள்!

[27 - April - 2007]

* மாத்தளை மாவட்டத்தில் கலேவெல பிரதேசத்தில் செய்யப்பட்ட ஆய்வு

பல்லின மக்கள் வாழும் பிரதேசங்களில் மொழிக்கலப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும். தமிழ் மொழியும இதற்கு விதிவிலக்கானதல்ல. எமது இலங்கை நாடானது சிங்கள மொழிக்குரிய நாடாக இருந்தாலும், முஸ்லிம் இன மக்களின் தாய்மொழியானது தமிழாகும்.

வடக்கு, கிழக்கு தவிர்ந்த தமிழை தாய் மொழியாகக் கொண்ட முஸ்லிம் கிராமங்களின் அமைவிடங்களை நோக்கும் போது, சிங்களக் கிராமங்களை அயற்கிராமங்களாகவும், சிங்களக் கிராமங்களால் சூழப்பட்டதாகவுமே அநேகமான முஸ்லிம் கிராமங்கள் அமைந்துள்ளன.

இவ்வாறான அமைவிடச் சூழலில் முஸ்லிம்கள் தாய்மொழியாக தமிழ் மொழியைக் கொண்டிருந்த போதிலும் பேச்சுவழக்கில் சிங்கள மொழிச் சொற்களின் கலப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.

எழுத்து வழக்கில் தமிழ் மொழியுடன் சிங்கள மொழிச் சொற்களின் கலப்பு தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும், பேச்சு வழக்கில் சிங்களச் சொற்களின் கலப்பை நாம் அவதானிக்க முடிகின்றது.

தனித்தமிழ் மொழிப் பிரதேசங்களில் இவ்வாறானதொரு பேச்சு வழக்கை நாம் காண முடியாது. ஆனால், சிங்கள மக்களுடன் இணைந்து முஸ்லிம் மக்களிடம் குறிப்பிட்டுக் காட்டக்கூடிய அளவிற்கு சிங்கள மொழிச் சொற்கள் கலந்துவிட்டது அதிசயமானதொன்றல்ல.

மாத்தளை மாவட்ட கலேவெலப் பிர தேசத்தில் தமிழ் மொழிப் பேச்சு வழக்கில் கலந்துள்ள சிங்கள சொற்களையே இங்கு ஆய்வுக்கு எடுத்துக் கொள்கின்றேன்.

சில சிங்களச் சொற்கள் எவ்வித மாற்றமும் இன்றி முழு வடிவமாகவே பேச்சு வழக்கில் வந்து கலந்துள்ளன.

`மாட்டு வண்டி' என்ற சொல்லை நாம் எடுத்துக் கொண்டால் வண்டி என்ற சொல்லுக்குப் பதிலாக `கரத்த' என்ற சிங்களச் சொல்லே பயன்பாட்டில் உள்ளது. மாட்டு வண்டி, தள்ளு வண்டி என்ற சொற்களை `மாட்டுக் கரத்த', `தள்ளுக் கரத்த' என்றே எமது பிரதேச மக்கள் பேசுகின்றனர்.

எழுத்து வழக்கில் தமிழ்ச் சொற்கள் உயிர்வாழ்ந்தாலும் பேச்சு வழக்கில் அவை மறைந்து நிற்பதையே நாம் காண முடிகின்றது. `கரத்த' என்ற சொல்லுக்குப் பதிலாக மீண்டும் `வண்டி' என்ற சொல்லை நடைமுறையில் கொண்டு வருவது என்பது சிரமமான ஒன்றாகும். `கரத்த' என்ற சொல்லே பேச்சு வழக்கில் ஆழ வேரூன்றியுள்ளது.

வண்டியுடன் தொடர்புடைய இன்னொரு சிங்களச் சொல்லை எடுத்துக் காட்டலாம். சில்லு அல்லது சக்கரம் என்ற சொல்லுக்குப் பதிலாக `ரோத' என்ற சொல்லே பயன்பாட்டில் உள்ளது. `கரத்த ரோத', `சைக்கிள் ரோத' என்று இப்பிரதேச வாசிகளால் பேசப்படுவது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

`கொய்யாப்பழம்' என்ற சொல்லை யாருடைய வாயிலிருந்தும் நாம் கேட்கவே முடியாது. அச்சொல் எழுத்து வழக்கில் புத்தகத்துக்கு மட்டுமே சொந்தமானது என்றே கூறவேண்டியுள்ளது. `பேர' என்ற சிங்களச் சொல்லுடன் காய் சேர்ந்து `பேரக்காய்' என்றே பேசப்படுகின்றது.

`பேரக்காய்' என்ற சொற்பிரயோகத்தில் இன்னுமொரு வேடிக்கையும் நாம் இனங்காண முடிகின்றது. `பழம்' என்பதைக் குறிக்க சிங்கள மொழியில் தனியான சொல் பயன்படுத்தப்படுவதில்லை. காய் என்ற கருத்தில் `கெடி' என்றே பழமும் அழைக்கப்படுகின்றது. `பேரகெடி' என்றே கொய்யாப்பழத்துக்குரிய சிங்கள சொற்பிரயோகம் பயன்படுத்தப்படுகின்றது. எனவே, இந்த சிங்கள மொழிச் சொல்லின் தாக்கமானது கொய்யாப்பழம், கொய்யாக்காய் என்ற வேறுபாட்டை காட்டாத நிலையில் `பேரக்காய்' என்றே தமிழ் மொழிப் பேச்சு வழக்கிலும் இடம் பெற்றுள்ளது.

`பேரப்பழம்' என மாற்றம் பெறாது, `பேரக்காய்' என அழைக்கப்படுவதால் இச் சொல்லில் `பழம்' என்ற சொல் மறைந்து போய்விட்டது. மாம்பழம் - `அம்பகெடி' என்றும், அன்னாசிப்பழம் - `அன்னாசிகெடி' என்றும், கொய்யாப்பழம் - `பேரகெடி' என்றும் சிங்கள மொழிப் பேச்சு வழக்கில் இடம் பெறுவதால் - அதன் தாக்கமே `பழம்' என்ற சொல் `பேரப்பழம்' என்பதில் வராமல் `பேரக்காய்' என்று இடம்பெற்றுள்ளது எனத் துணியலாம். இங்கு `பழம்' என்ற சொல்லின் மறக்கடிப்பானது ஏனைய பழங்களுக்குப் பொருந்தாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

உணவுப் பொருட்களில் `அப்பம்' என்ற சொல் அனேகமாகப் பயன்படுத்தப்படுவதில்லை. பதிலாக `ஆப்ப' என்ற சிங்களச் சொல்லே பயன்படுத்தப்படுகின்றது. மேலும் `மதில்' என்பது `தாப்ப' என்ற சொல்லாலும் அழைக்கப்படுகின்றது.

`வெண்டிக்காய்' என்ற சொல்லானது புத்தகங்களில் மட்டும் என்றாகி விட்டது. பேச்சுவழக்கில் இச் சொல்லின் பயன்பாடானது மிகமிக அரிது. பண்டக்காய் என்றே மக்கள் பேசிக் கொள்கின்றனர்.

"கடிகாரம்" என்ற சொல் பழக்கப்பட்ட சொல்லாக இருந்த போதிலும், `உருலோசு' என்ற சிங்களச் சொல்லே பேச்சில் செல்வாக்குப் பெற்றுள்ளது.

சில சிங்களச் சொற்கள் சிறுசிறு மாற்றங்களுக்கு உட்பட்டு தமிழ்ச் சொல்லாகி பேச்சு வழக்கில் பயன் படுத்தப்படுகின்றது.

பாடசாலைகளில் கூட சரியான தமிழ்ச் சொற்பிரயோகத்தை பேச்சில் கொண்டுவர முடியாத அளவுக்கு சில சிங்கள சொற்கள் தமிழ்மொழிப் பேச்சு வழக்கில் இடம் பிடித்துள்ளதை சுட்டிக் காட்டத்தான் வேண்டும்.

`கதிரை' என்ற சொல்லுக்குப் பதிலாக `புட்டுவ' என்ற சிங்களச் சொல்லானது "அம்" விகுதி பெற்று `புடுவம்' என்ற சிறுமாற்றத்துடன் பேசப்படுகின்றது. படித்தவர், படிக்காதவர் என்ற வித்தியாசமின்றி சகலரும் `புடுவம்' என்ற இச்சொல்லையே பயன்படுத்துவதை காணலாம்.

`இலவமரம்', `இலவம்பஞ்சு' என்ற சொற் பிரயோகம் இப்பிரதேசங்களில் இல்லை. இதற்குப் பதிலாக `கொட்டா மரம்', `கொட்டாப் பஞ்சு' என்ற சொற்களே வழக்கத்தில் உள்ளது.

தலையணையைக் குறிக்கும் சிங்களச் சொல் `கொட்ட' என்பதாகும். இச் சொல் நேரடியாக தலையணையைக் குறிக்கப் பயன்படுத்தப்படவில்லை. தலையணை மரம் - `கொட்டாமரம்' (இலவமரம்) என்ற வடிவிலும், தலையணைப்பஞ்சு - `கொட்டாப் பஞ்சு' (இலவம் பஞ்சு) என்ற வடிவிலும் காரணப்பெயர் என்ற இலக்கண அமைப்பில் `கொட்டாப் பஞ்சு', `கொட்டா மரம்' என்ற சொற்கள் பேச்சு வழக்கில் இடம் பெற்றுள்ளன.

வீட்டில் வாசல், ஜன்னல் என்பவற்குக்கான `நிலை'யைக் குறிக்கும் சிங்களச் சொல் `உலுவகு' என்பதாகும். இச் சொல் சிறுமாற்றத்துடன் தமிழ்மொழி பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படுகின்றது. `உலுவகு' என்ற சொல்லுடன் `வாசல்' என்ற சொல்லும் சேர்ந்து `உலுவாச' என்ற சொற்பிரயோகமே பயன்படுகின்றது. `ஜன்னல் உலுவாச', `வாசல் உலுவாச' என வாயல்நிலை, ஜன்னல் நிலை என்பதற்குப் பதிலாக பேசப்படுகின்றது.

`அரிவாள்' என்ற சொல்லுக்குப் பதிலாக `தேகெத்த' என்ற சிங்களச் சொல் `தேகத்தி' என விகாரப்பட்ட நிலையில் பயன்படுத்தப்படுகின்றது.

உயரம் குறைந்த பொருளைக் குறிக்க நாம் தமிழில் குட்டை, கட்டை என்ற சொற்களை பயன்படுத்ததுகின்றோம். அதேபோல் உயரம் குறைந்தவரைக் குள்ளன், கட்டையன் என அழைக்கின்றோம். மேற்சொன்ன பொருள் குறிக்கும் சிங்களச் சொல் `கொட' - கட்டை, `கொடயா' - குள்ளன் என்பதாகும். இங்கு `கொடயா' என்ற சிங்களச் சொல்லானது `அன்' விகுதி பெற்று `கொடயன்' என பேச்சு வழக்கில் இடம் பெற்றுள்ளது.

அதேபோன்று, மரக்குற்றியைக் குறிக்கவும் `கொட' என்ற சிங்களச் சொல் பயன்படுத்தப்படுகின்றது. குற்றி என்ற தமிழ்சொல் பேச்சு வழக்கில் மிகமிக அரிதாகவே உள்ளது.

`கொட' என்ற சிங்களச் சொல் தமிழ் மொழிக்குரிய சொல் என்ற நிலையிலேயே பயன்படுகின்றது. `பந்தயம்' என்ற சொல்லை எடுத்துக் கொண்டால் இச் சொல் பேசப்படுவதேயில்லை என்று கூறலாம். `ஒட்டு' என்ற சிங்களச் சொல்லே தமிழ்ச் சொல் போன்று பயன்படுகின்றது.

மேலும், அசிங்கம் - `ஜராவ' என்ற சிங்களச் சொல்லாலும், அபராதம் - `தட' என்ற சிங்களச் சொல்லாலும், நத்தை - `கொழுபல்லா' என்ற சிங்களச் சொல்லாலும், ஆந்தை - `பகமூனா' என்ற சிங்களச் சொல்லாலும் பேச்சு வழக்கில் மறக்கடிக்கப்பட்ட நிலையே காணப்படுகின்றது.

இன்னும் சில சிங்களச் சொற்களின் பட்டியல் வருமாறு:

சிங்களச் சொற்களில் சில தமிழ்ச் சொற்களின் பயன்பாட்பை மறக்கடிக்காத நிலையில் சிலசமயம் சிங்களச் சொல்லும் சில சமயம் தமிழ்ச் சொல்லும் வரிசை - போலிம, பரிசு - தேகி போன்ற சொற்களை உதாரணமாகக் காட்டலாம்.

இவ்வாறு பேச்சு வழக்கில் கலந்துள்ள சிங்களச் சொற்களானது, மண்வாசனை கொண்ட இலக்கியம் எனும் போது எழுத்து வழக்கிலும் இடம் பிடித்து விடலாம் என்றே எண்ணத் தோன்றுகின்றது. சிங்களமொழிப் பேச்சு வழக்கிலும், ஓரிரு தமிழ்ச்சொற்கள் கலந்து விட்டுள்ளதையும் நாம் இங்கு நினைவில் கொள்ள வேண்டும். `பைத்தியம் ', `நாடகம்', `பத்தினி' , `அந்திம' போன்ற சொற்களை இங்கு குறிப்பிடலாம். (இவை பொதுவானவையாகும். எமது பிர தேசத்துக்கு மட்டும் உரியவையல்ல).

இம்மொழிக்கலப்பானது பிரதேசத்துக்கு பிரதேசம் வேறுபட்டு அமையலாம், இங்கு நான் கலேவெல பிரதேசத்தில் செய்த இவ் ஆய்வானது - எமது மாத்தளை மாவட்ட ரீதியில் ஓரளவு மற்ற பிரதேசங்களுக்கும் பொருத்தமுடையதாக அமையலாம். பேச்சு வழக்கிலான இம் மொழிக்கலப்பு மேலும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியதொன்றாகும்.

கட்டுரையாளர்: எம்.ஆர்.எம். நசீர்தீன் (பீ.ஏ.) மமா/க/தேவஹூவ மு.ம.வி. தேவஹூவ.

தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.