Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வியர்வை சிந்தி நாகநதியை உயிர் பெறவைத்த வேலூர் பெண்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ்

தமிழகத்தில் வறட்சியின் கதைகளை கேட்ட நமக்கு புது நம்பிக்கையை தந்திருக்கிறார்கள் வேலூரைச் சேர்ந்த பெண்கள்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலூர் மாவட்டத்தில் 20,000-க்கும் மேற்பட்ட பெண்கள் குழுவாக இணைந்து 15 ஆண்டுகளுக்கு முன் வற்றிப்போன, நாகநதி ஆற்றின் பாதையில் கிணறுகள் தோண்டி, மழைநீரை தேக்கி, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தியுள்ளனர்.

நாகநதி செல்லும் பாதையில் 300க்கும் மேற்பட்ட நீர் செறிவூட்டும் கிணறுகளை அமைத்து, கற்களை அடுக்கி, 349 தடுப்பணைகளை கட்டியதில் பெரும்பங்கை வகித்தவர்கள் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தனை சுருக்கமாய் சொல்லிவிடும் கதைக்கு பின் கடப்பாரை, மண்வெட்டியை தூக்கிக்கொண்டு வியர்வை சிந்தி வேலை செய்த ஆயிரக்கணக்கான அசாத்திய பெண்களின் உழைப்பு உள்ளதை நேரில் பார்த்தோம்.

பாலாற்றின் கிளையாக உருவெடுத்து, வேலூர் மாவட்டத்தில் பாம்புபோல வளைந்து 14 கிலோமீட்டர் தூரம் பயணிக்கிறது நாகநதி.

வியர்வை சிந்தி நதியை உயிர்பெறவைத்த வேலூர் பெண்கள்

60க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பாசனத்திற்கு உதவிய நாகநதி, ஆலை கழிவுகள் தேங்குவது, விவசாயத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், ஆக்கிரமிப்புகள் என பல காரணங்களால் 15 ஆண்டுகளாக வற்றிக்கிடந்தது.

''100 நாள் வேலைத்திட்டத்தில் எடுக்கப்பட்ட முயற்சியால் பழையபடி மழை வந்ததும் பாய்ந்தோட தயாராகிவிட்டது நாகநதி. பெண்களின் முயற்சியால் பல கிராமங்களில் நான்கு முதல் ஏழு அடிவரை நீர்மட்டம் உயர்ந்துள்ளது,''என்கிறார் ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பி.பெரியசாமி.

இருபோகம் விளைச்சல் ஆரம்பம்

கொள்ளு, கேழ்வரகு விளைந்த நிலங்களில் தண்ணீர் அதிகம் தேவைப்படும் மஞ்சள், வாழை மரங்களும் விளைந்து நிற்பது பெண்களின் வெற்றிக்கு சான்றாக உள்ளது. விவசாயிகளின் வாழ்த்துக்களை பெற்ற ஆயிரக்கணக்கான பெண்களில் ஒரு பணியாளர் சரிதா(30). முன்னர் 80 அல்லது 100 அடியில் தண்ணீர் கிடைத்த ஊராக இருந்தது சரிதா வசிக்கும் கீழரசம்பட்டு கிராமம்.

''20 அடியில் நீங்கள் பார்ப்பது ஊற்று தண்ணீர்,'' என புன்னகையுடன் பேசினார் சரிதா.

''மழை வந்தால் ஒரே நாளில் ஆற்று தண்ணீர் காணாமல் போய்விடும் அல்லது சில இடங்களில் தேங்கி குட்டையாக இருக்கும். ஆனால் நாங்கள் தூர் வாரி, கிணறுகளை அமைத்ததால், இன்று நீர் சேமிக்கப்பட்டுள்ளது.ஒரு போகம் விளைச்சலுக்கு சிரமப்பட்ட விவசாயிகள், இரு போகம் அறுவடை செய்கிறார்கள். எங்களை வாழ்த்துகிறார்கள்,''என்கிறார் சரிதா.

குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு

வியர்வை சிந்தி நதியை உயிர்பெறவைத்த வேலூர் பெண்கள்

அடுத்ததாக நாம் சந்தித்த லட்சுமி அம்மா நாகநதி மீட்பு பணிகளால் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு கிடைத்தது என விவரித்தார்.

குடிநீருக்காக குடங்களை தூக்கிக்கொண்டு நடந்ததை நினைவுகூர்ந்த லட்சுமி, தற்போது தனது வீட்டருகே உள்ள குழாயில் தண்ணீர் வரத்தொடங்கியுள்ளது என்கிறார்.

''ஜல்லிக் கற்களை சுமந்து, கனமான சிமெண்ட் வளையங்களை இறக்கி கிணறு அமைத்தோம். காயம்பட்டு வலித்த அதே கைகளில், ஊற்று நீரை அள்ளிக் குடித்தபோது சந்தோசம் மட்டுமே மிச்சமாய் இருந்தது. வேலூர் என்றாலே அதிகமான வெயில், தண்ணீர் பஞ்சம் இருக்கும் மாவட்டம் என்பார்கள். நாகநதியை சுத்தப்படுத்தி, நிலத்தடி நீரை நாங்கள் சேமித்துள்ளதால், எங்கள் உழைப்பை பலரும் பாராட்டுகிறார்கள். பல ஊர்களில் இருந்தும் எங்களை சந்திக்க வருகிறார்கள், ''என்கிறார் லட்சுமி.

கடந்த முப்பது ஆண்டுகளில் பெய்த மழை அளவை கொண்டுபார்த்தால், ஒவ்வொரு ஆண்டும் நாகநதி சுமார் 1,000 மில்லிமீட்டர் மழை அளவை பெற்றுள்ளது என்கிறார்கள் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள். இனிவரும் காலங்களில் நதியின் பாதையில் நீர் தேங்கி, 1,000 மில்லிமீட்டர் மழைநீர் வீணாகாமல் பயன்படும் என்கிறார்கள்.

ஆறுகளை பாதுகாப்பது எப்படி?

வியர்வை சிந்தி நதியை உயிர்பெறவைத்த வேலூர் பெண்கள்

தமிழக ஆறுகள் குறித்த ஆய்வு கட்டுரைகள் மற்றும் புத்தகங்களை எழுதியுள்ள ஆய்வாளர் எஸ்.ஜனகராஜனிடம் நாகநதி மீட்டெடுப்பு குறித்து கேட்டோம்.

''மக்களால் நாகநதி தூர்வாரப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. தங்களது உழைப்பை செலுத்தி, கடுமையாக மக்கள் வேலைசெய்துள்ளார்கள் என்பதை பாராட்டியாகவேண்டும். அதேநேரம், நதியை முழுமையாக மீட்டெடுப்பது என்பது தூர்வாருவதோடு முடிவு பெறாது. இந்த ஆற்றின் மூலத்தை சரிப்படுத்தி,அது ஓடி வரும் பாதையில் ஆக்கிரமிப்புகள் இல்லாமல் பராமரிக்கவேண்டும். மேலும் மணல் தேக்கத்தை கவனிக்கவேண்டும். அந்த ஆற்றின் அகலம் எவ்வாறு இருந்தது, அந்த அகலத்திற்கு விரிவுபடுத்தவேண்டும்,''என்கிறார் ஜனகராஜன்.

நதியில் கழிவுகள் தேங்காமல் பாதுகாக்கவேண்டும், எத்தகைய கழிவுகளை நதி சுமந்துவருகிறது என்று பார்க்கவேண்டும், அந்த நதி தனது பாதையில் பாய்ந்தோட தடங்கல் இருந்தால் அவற்றைக் களையவேண்டும் என்றும் ஜனகராஜன் குறிப்பிடுகிறார்.

பாலாற்றின் கிளை நதியாக இருக்கும் நாகநதி சீராகியுள்ளது என்பத்தோடு இல்லாமல் பாலாற்றின் முக்கியத்துவத்தையும் அரசாங்கம் உணரவேண்டும் என்கிறார்.

உறவுகளை உருவாக்கிய நதி

நாகநதியை தங்களது உடமையாக கருதும் மக்களும் இருக்கிறார்கள். தூர்வாரும் பணிகளின்போது புதுசொந்தங்களை தேடிகொண்டவர்கள்தான் அந்த மக்கள்.

வியர்வை சிந்தி நதியை உயிர்பெறவைத்த வேலூர் பெண்கள்

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை செய்தபோது சாமிநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த 55 வயது மேனகா தமக்கு இளவயதில் நிறைய தோழிகள் கிடைத்துவிட்டதாக சொல்கிறார்.

''அரசாங்கத்தில் தினக்கூலியாக ரூ.229 கொடுக்கிறார்கள் என்பதால் வேலைக்கு வந்தேன். மூன்று வாரங்கள் தொடர்ந்து வேலைசெய்ததால் குழுவில் உள்ளவர்கள் தோழிகளாக மாறிவிட்டார்கள். எனக்கு வருமானம் கிடைத்தது. அதேசமயம் ஊருக்காக ஒரு வேலையை செய்தோம் என்ற மனநிறைவு கிடைத்தது. எங்களுக்கு தண்ணீர் கொடுக்கும் நதியை பாதுகாப்போம்,''என்கிறார் மேனகா.

தினமும் வேலையின்போது உற்சாகப்படுத்திக்கொள்ள பாட்டுப்பாடுவது, குடும்ப பிரச்சனைகளை பேசி தீர்வுகாண்பது, சேமிப்பு பற்றி பேசுவது என பெண்களுக்கு இடையில் உறவுப் பாலத்தை இந்த திட்டம் ஏற்படுத்தியது என்கிறார்கள் பணியாளர்கள்.

நாகநதியை போலவே பாலாற்றின் மற்ற கிளை நதிகளான மலட்டாறு, கௌடண்ய நதி, பொன்னையாறு உள்ளிட்ட நதிகளையும் சீரமைக்க திட்டங்களை வகுத்துவருவதாக வேலூர் மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். பாலாற்றின் பிற கிளை ஆறுகளின் பாதைகளில் சுமார் 2.200 நீர் செறிவூட்டும் கிணறுகள் அமைக்கப்பட்டுவிட்டன என்றும் அதிலும் பெண்களின் உழைப்புதான் அதிகமாக உள்ளது என்றும் தெரிவித்தனர்.

மேலும் நாகநதியில் கிணறுகளை அமைத்து பயன்பெற்ற மக்கள் நீர்நிலையை தூய்மையாக வைத்துக்கொள்வதில் அக்கறையுடன் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

https://www.bbc.com/tamil/india-49007106

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.