Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மக்கள் முன்னுள்ள இருவேறு தெரிவுகள்

Featured Replies

மக்கள் முன்னுள்ள இருவேறு தெரிவுகள்

அருஸ் (வேல்ஸ்)

பொருளாதாரமே இன்றைய உலகின் தலைவிதியை தீர்மானிக்கும் முக்கிய காரணி. மத்திய கிழக்கில் உள்ள எண்ணெய்வளங்களை தேடி அமெரிக்காவும், ஆபிரிக்க நாடுகளில் தனது சந்தை வாய்ப்பை தேடி சீனாவும் ஓடிக்கொண்டு இருக்கின்றன. உலகிலேயே அதிகளவு அணுகுண்டுகளைக் கொண்ட சோவியத்து ஒன்றியம் உடைந்து சிதறியதும் அதன் பொருளாதார கட்டமைப்பை பேணத் தவறியதனால் தான்.

போரின்போதுகூட ஒவ்வொரு நாட்டின் படையினரும் எதிரியின் இராணுவ இலக்குகளுக்கு நிகராக பொருளாதார இலக்குகளையும் தாக்கி அழிக்கத் தவறுவதில்லை. வான்குண்டு வீச்சுக்கள் உச்சம்பெற்ற இரண்டாம் உலகப்போரில் இருந்து 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற லெபனான் இஸ்ரேல் போர் வரைக்கும் வான்படையினர் தாக்கி அழித்தவற்றில் கணிசமானவை பொருளாதார மற்றும் நாட்டின் உட்கட்டுமான இலக்குகளே.

அதாவது ஒரு நாடு போரில் வெல்ல வேண்டும் என்றால் தனது பொருளாதார கட்டமைப்புக்களை சீராக பேணியவாறு எதிரியின் பொருளாதாரத்தை சிதைக்க வேண்டும். இது போரியலின் ஒரு தத்துவம்.

மார்க்ஸ் மற்றும் லெனினின் கருத்தும் அதுவே. படை பலமும் பொருளாதாரமும் ஒன்றை ஒன்று சார்ந்தவை. ஒரு நீண்ட போரின் வெற்றி நாட்டின் பொருளாதார வலுவில் தங்கியுள்ளது. அதாவது பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டுமெனில் சமரை விரைவாக முடிக்க வேண்டும். மாறாக, சமரை தொடர வேண்டுமாயின் நாட்டை வளமாக வைத்திருக்க வேண்டும்.

சீனப் போரியல் மேதை சன்சுவின் (ளுரn வுணர) வின் கருத்துக்களும் அதுவே. அதாவது 'நீ நிகழ்த்துவது வலிந்த போராக இருந்தாலும் சரி அல்லது தற்காப்புப் போராக இருந்தாலும் சரி அதற்கான விலைகளை செலுத்தியே ஆக வேண்டும்" போர் என்பது எப்படி எதிர்கொண்டாலும் செலவுகள் மிக்கவை என்பது அவரது கருத்து.

இந்த தத்துவத்தின் அடிப்படையில் தான் இலங்கையில் பதவியிலிருந்த அரசாங்கங்கள் தமது நடவடிக்கைகளை காலம் காலமாக மேற்கொண்டு வந்துள்ளன. புலிகளின் பொருளாதார வளங்களை முடக்குவதுடன் தமது படையினருக்கான நிதியையும் அதிகரிப்பதன் மூலம் போரை வென்றுவிடலாம் என கணக்குகள் வரையப்பட்டன.

ஆனால், விடுதலைப் புலிகளும் உலகின் படை பலமுள்ள பல நாடுகள் கடைப்பிடிக்கும் அதே உத்தியையே கையாண்டு வந்துள்ளனர். தென்னிலங்கையில் உள்ள அரசின் பொருளா தார இலக்குகள் தாக்கப்பட்டே வந்துள்ளன. உதாரணமாக, 1995 ஆம் ஆண்டு நடைபெற்ற கொலன்னாவ எண்ணெய்க் களஞ்சியங்கள் மீதான தாக்குதல் மற்றும் 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற கட்டுநாயக்க வான்படைத்தளத்தின் மீதான தாக்குதல், அண்மையில் கொலன்னாவ மற்றும் முத்துராஜவெல பகுதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதல் என்பவற்றை குறிப்பிடலாம்.

விடுதலைப்புலிகளின் வான் தாக்குதலானது புலிகளின் 'சிறப்புப் படை" நடவடிக்கை மற்றும் கரும்புலித் தாக்குதல்களை விட பல மடங்கு சேதங்களை உண்டுபண்ணக் கூடியது. ஏனெனில், விடுதலைப் புலிகளின் வான்படையின் தாக்குதலினால் ஏற்பட்ட இராணுவச் சேதங்களை விட பொருளாதாரத்தில் ஏற்பட்ட மற்றும் ஏற்படப்போகும் சேதங்கள் குறித்தே இன்று ஆய்வாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இந்த பொருளாதார சேதங்களை அவர்கள் இரு வகையாகக் கணிக்கின்றனர்.

ஒன்று விடுதலைப் புலிகளின் தாக்குதலின் விளைவாக ஏற்படப்போகும் பொருளாதார இழப்புக்கள். இரண்டாவது அதனை எதிர்கொள்வதற்கான செலவுகள் மூலம் இழக்கப்படும் பொருளாதாரம் என்பனவாகும். அதாவது, பாதுகாப்புச் செலவு, தொழிற்றுறை, வர்த்தகம் என்பவற்றில் ஏற்படும் இழப்புக்களின் சேர்க்கையாகவே வான் தாக்குதலின் விளைவுகள் கணிக்கப்படுகின்றன.

பாதுகாப்புச் செலவுகளைப் பொறுத்த வரையில் 1977 ஆம் ஆண்டு 750 மில்லியன் ரூபாவாக இருந்த தொகை பின்னர் 1992 ஆம் ஆண்டு 17.9 பில்லியன் ரூபாவாக உயர்ந்தது. இது 2001 ஆம் ஆண்டு 90.0 பில்லியன் ரூபா வாக உயர்ந்ததுடன் 2007 ஆம் ஆண்டிற்கான தொகை 139.5 பில்லியன் ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனினும் விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல் இதனை 200.0 பில்லியன் ரூபாவுக்கும் மேலாக உயர்த்தும் என தற்போது கணிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒவ்வொரு வருடமும் அதிகரித்துச் சென்ற பாதுகாப்புச் செலவுகள் போரை தீவிரமாக்கியதுடன் போர்நிறுத்தக் காலத்திலும் அது பெருமளவில் குறைவடையவில்லை என்பதே உண்மை. இதற்கு அதிகரித்த பாதுகாப்புப் படையினரின் எண்ணிக்கை, வாங்கிக் குவிக்கப்பட்ட நவீன ஆயுதங்களின் பராமரிப்பு என்பன முக்கிய காரணங்களாகும்.

உதாரணமாக 1980களில் ஏறத்தாழ ஒரு இலட்சம் அமெரிக்க டொலர் பெறுமதியான சியாமாச்செட்டி விமானத்தை பயன்படுத்திய இலங்கை வான்படை பின்னர் 2000 ஆம் ஆண்டு 2.0 மில்லியன் டொலர்கள் பெறுமதியான மிக்-27 ரக விமானங்களுக்கு தாவியிருந்தன. தற்போதைய அரசின் அவசர தேவையாக உள்ளது மிக்-29 விமானங்களாகும்.

1525 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான இந்த விமானங்களுக்கான செலவுகள் அதற்கான பராமரிப்புச் செலவு, வான் எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் ஏவுகணை எதிர்ப்பு சாதனங்கள் என்பவற்றுடன் 50 மில்லியன் டொலர்களை தொட்டுவிடும் என கணிக்கப்படுகின்றது.

'சுண்டங்காய் கால் பணம் சுமைகூலி முக்கால் பணம்" என்ற நிலை தான் இதற்கு பொருந்தும். அதாவது அவற்றை கொள்வனவு செய்வதை விட அதன் பராமரிப்புச் செலவுகள் தான் அதிகம். உதாரணமாக, அரபு நாடுகளிடம் அதிகளவு நவீன விமானங்கள் இருந்தும் அதன் சீரான பராமரிப்பு அற்ற தன்மையினால் அவற்றில் அரைப்பங்கிற்கும் மேலான விமானங்கள் போரில் பயன்படுத்த முடியாத நிலையிலேயே இருந்து வருகின்றன.

எண்ணெய் வளம் மிக்க அரபு நாடுகளுக்கே இந்த நிலைமை என்றால் இலங்கை நிலைமை எவ்வாறானது என்பது புரியும். இந்தியாவில் வீழ்ந்து நொருங்கிக் கொண்டிருக்கும் மிக் விமானங்களின் பின்னணியும் இது தான். சோவியத் ஒன்றியத்தில் இருந்து பிரிந்துபோன நாடுகளில் உக்ரைன் மிக அதிகளவான விமானங்களை கொண்டிருந்தது. எனினும் அவற்றை வைத்து பராமரிக்க முடியாத நிலையில் தான் அது விமானங்களையும் ஏனைய ஆயுதங்களையும் மலிவு விலையில் விற்பனை செய்து வருகின்றது.

பொருளாதாரத்தில் வலுக்குன்றிப்போன சோவியத்தினால் சரியாக பராமரிக்கப்படாத அதன் விமானங்கள் உலகெங்கும் அதிகளவில் வீழ்ந்து நொருங்கி வருவதும் அறிந்தவையே.

எனினும் தனது பொருளாதார நிலைமைகளை கருத்திற் கொண்டே இலங்கை அரசின் ஆயுதத் தெரிவுகள் அமைந்து வந்துள்ளன. அதனால்தான் சியாமாசெட்டி ரக மலிவான இலகுரக விமானங்களை கொள்வனவு செய்து குண்டு வீச்சு விமானமாக முன்னர் மாற்றியிருந்தது. பின்னர் சீனாவிடம் இருந்து மலிவாக எவ்-5, எவ்-7 ரக விமானங்களையும், ஆஜன்ரீனாவிடம் இருந்து புக்காரா குண்டு வீச்சு விமானங்களையும் கொள்வனவு செய்திருந்தது.

ஆனால் போரின் உக்கிரம், விடுதலைப் புலிகளால் அறிமுகப்படுத்தப்பட்ட நவீன ஆயுதங்கள், போர் உத்திகள் என்பன அதிக செலவு மிக்க ஆயுதங்களை தேட வேண்டிய நிலையை அரசுக்கு ஏற்படுத்தியிருந்தது. முதலில் கிபீர் ரக விமானங்களை கொள்வனவு செய்த அரசு பின்னர் மலிவான மிக்-27 ரக விமானங்களின் பக்கம் தனது பார்வையை திருப்பியது.

இலங்கை அரசு உக்ரைன் நாட்டில் இருந்து மிக்-27 ரக விமானங்களை மிகவும் மலிவாக புனரமைப்புச் செய்து 2000 ஆண்டில் பெற்றுக் கொண்டது. வாங்கிய விமானங்கள் 2000 - 3000 பறப்பு மணிநேரங்களையே கொண்டிருந்தன. எனினும் இந்த விமானங்கள் மற்றும் பல்குழல் உந்துகணை செலுத்திகள், கரையோர ரோந்துக்கப்பல்கள் என வாங்கப்பட்ட ஆயுதங்களுக்கே பாதுகாப்புச் செலவுகள் 100 பில்லியன் ரூபாவை எட்டிப்பிடித்து விட்டது.

ஆனால், இவற்றினால் போரில் அரசு சாதித்தது என்ன என்றால் அதற்கான விடை கேள்விக்குறிதான். எனினும் விடுதலைப் புலிகளின் விமானங்களின் பிரவேசம் நவீன ஆயுதங்களை வாங்கும் நிர்ப்பந்தத்தை அரசுக்கு ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் போரின் புதிய பரிணாமத்துக்கு தேவையான ஆயுதங்களின் செலவை அரசும், மக்களும் தாங்குவார்களா என்பதே தற்போதைய கேள்வி. மிக்-29 மட்டும் அவர்களுக்கு போதாது, ஏவுகணைகள், விமான எதிர்ப்பு பீரங்கிகள், நவீன ராடர்கள், அவற்றிற்கான தொழில்நுட்பவியலாளர்கள் என அதன் பட்டியல் மிக நீளமானது.

மேலும் பொருளாதாரத்தின் மீதான போரின் தாக்கம் வெறும் பாதுகாப்புச் செலவை சார்ந்தது அல்ல. அன்னிய முதலீடுகளின் முடக்கம், உல்லாசப் பயணத்துறையின் வீழ்ச்சி, பொருளாதார மையங்கள் மீதான தாக்குதல்கள் என்பனவும் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை. இவை நேரடியற்ற காரணிகளாக இருந்த போதும் இவற்றின் தாக்கம் சிலவேளைகளில் கணிப்பிட முடியாத மிகப்பெரும் தாக்கத்தை பொருளாதாரத்தில் ஏற்படுத்தக் கூடியன.

உதாரணமாக, கட்டுநாயக்க விமானப்படைத் தளம் மீதான தாக்குதலானது. 2001 ஆம் ஆண்டின் பொருளாதார வளர்ச்சியை 1.4 ஆக மாற்றி இருந்தது. மேலும் 2001 ஆம் ஆண்டிற்கான பாதுகாப்புச்செலவு 90.0 பில்லியன் ரூபாவாக இருந்த போதும் கட்டுநாயக்கவில் இழக்கப்பட்ட விமானங்களின் பெறுமதி மட்டும் 50 பில்லியன் ரூபாய். அதன் தொடர்ச்சியாக அன்னிய முதலீடு, உல்லாச பயணத்துறையும் அதை சார்ந்த தொழில்துறையினதும் இழப்பீடுகளும் மிகப்பாரியவை.

விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல்களை பொறுத்தவரையில் அது நேரடியாக இராணுவ பொருளாதார மையங்களில் ஏற்படுத்திய சேதங்களை விட மறைமுகமான சேதங்கள் தான் அதிகம். இது எல்லாத் துறைகளிளும் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தலைநகரத்தின் வான்பரப்பு பாதுகாப்பற்றது என்ற ஒரு சொல் பல சங்கிலித் தொடர் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.

தினமும் 70-80 வரையான விமானங்களை கையாண்டு வரும் அனைத்துலக விமான நிலையம் இரவில் மூடப்படுவதனால் அங்கு வந்து போகும் விமானங்களின் எண்ணிக்கையும் 40 வீதத்தால் வீழ்ச்சி கண்டுள்ளது. மேலும் கதே பசுபிக் போன்ற முன்னணி வானூர்தி நிறுவனங்கள் தமது சேவைகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.

இதனால் ஏற்படும் உல்லாசப்பயணத்துறையின் வீழ்ச்சியானது விமான நிறுவனங்கள், உயர்ரக விடுதி உரிமையாளர்கள் தொடக்கம் அதனை நம்பி தொழில் நடத்தும் முட்டை வியாபாரிகள், பொம்மை வியாபாரிகள் என பெருமளவான தொழில் துறைகளில் பாதிப்புக்களை ஏற்படுத்த வல்லது. அது மட்டுமல்லாது, உல்லாசப்பயணத் துறையில் ஏற்படும் பாதிப்பு இலங்கையில் நடைபெறும் போரின் கொடுமையை உலகெங்கும் பரப்புவதற்கான இலவசமான பிரசாரமாகவும் அமைந்துவிட்டது.

இதனிடையே போரின் விளைவாக எழுந்துள்ள மனித உரிமை மீறல்களினால் இலங்கைக்கு வழங்கப்பட்டு வரும் நிதி உதவிகளின் மீதான அழுத்தங்களும் அதிகரித்துள்ளன. அண்மையில் 3 மில்லியன் ஸ்ரேலிங்ஸ் பவுண்ஸ்களை நிறுத்திவைப்பதற்கு பிரித்தானியா எடுத்த முயற்சியும், மிலேனியம் சவால்களுக்கான நிதியம் தனது முடிவுகளை மீள்பரிசீலனை செய்ய முயன்றுள்ளதும் அரசுக்கு மிகவும் பெரும் நெருக்கடிகளை உண்டுபண்ணியுள்ளது.

பிரித்தானியாவின் இந்த முடிவை ஏனைய ஐரோப்பிய நாடுகளும் பின்பற்ற வேண்டும் என்ற குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. தாங்கள் ஜனநாயக நாடுகள் என்ற முகமூடியை போட்டுக் கொண்டுள்ள சில நாடுகள் தமது அந்த முகமூடியை தக்கவைப்பதற்காகவேனும் இலங்கை மீது அழுத்தங்களைபோட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதே இதன் வெளிப்பாடு. துணை இராணுவக் குழுக்கள், கடுமையான வான் தாக்குதல்கள், பொருளாதார அழுத்தங்கள், தொடர்ச்சியான படை நடவடிக்கை என்பன மூலம் விடுதலைப் ;புலிகளின் போரிடும் வலுவை உடைத்து விடலாம் என்ற தந்திரத்தில் வான்புலிகள் பூகம்பத்தை ஏற்படுத்தி விட்டனர்.

கடுமையான போரைப் புரிவதற்கு ஆதாரமான பொருளாதாரம் என்னும் ஆணிவேர் அசையத்தொடங்கியுள்ளது. இதையும் மீறி போர் தொடருமாக இருந்தால் 1970 களில் 35 சதமாக இருந்த ஒரு றாத்தல் பாண் தற்போது 25.00 ரூபாவாக உள்ளதே என ஏங்கும் மக்களுக்கு எதிர்வரும் காலத்தில் அது 100 ரூபாவாக உயர்ந்தாலும் ஆச்சரிமாகாது.

ஏனெனில் போரை நடத்துவதற்கான பணம் மக்களிடம் அறவிடப்படும் வரிகள், மற்றும் அவர்களின் அபிவிருத்திகளுக்காக அனைத்துலக சமூகத்தினால் வழங்கப்படும் கொடைகள், கடன்கள் போன்றவற்றில் இருந்தே செல்லப் போகின்றது.

ஆனால் கடன்களும் உதவிகளும் குறைக்கப்படும் சந்தர்ப்பத்தில் அது மக்களின் மீது தான் மேலதிக சுமையாக விழப்போகின்றது என்பது தான் கசப்பான உண்மை. உலகம் பொருளாதார வளர்ச்சியை நோக்கியே தற்போது ஓடிக்கொண்டிருக்கின்றது. அதில் இணைந்து கொள்ளும் நாடுகளின் மக்களுக்கே சுபீட்சமான வாழ்வு உண்டு. அது தான் உலகின் இன்றைய சமன்பாடு. எனவே தென்னிலங்கை மக்களின் முன் இரு தெரிவுகள் தான் தற்போது உள்ளன, வாழ்வின் சந்தோசங் களை தொலைக்கக் கூடிய வெல்லமுடியாத போரா அல்லது கௌரவமான அரசியல் தீர்வா என்பது தான் அவை.

  • கருத்துக்கள உறவுகள்

மேல் கட்டுரையில் கூறப்பட்டதை சிங்களம் உணர்ந்திருந்தால் இப் போர் 25 வருடங்களுக்கு முன் முடிந்திருக்கும்.என்றுமே இந்த முட்டாள்கள் உணரப்போவதில்லை.மாறாக நன்றாக வாங்கிக்கட்டிக்கொள்ளும்.மகி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.