Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெருக்கடியான காலத்தில் கல்வி தொடர்பாகச் சிந்தித்தல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நெருக்கடியான காலத்தில் கல்வி தொடர்பாகச் சிந்தித்தல்

98-1.jpegசகவாழ்வுக்கான யாழ்ப்பாண மக்களின் ஒன்றியத்தினரின் இணைய வழியிலான இரண்டு சந்திப்புக்களிலே பகிரப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் அந்த ஒன்றியத்தின் சில உறுப்பினர்களால் இந்தப் பதிவு எழுதப்பட்டது. இந்தப் பத்தி ஒன்றியத்தின் எல்லா உறுப்பினர்களின் கருத்துக்களையும் பிரதிபலிப்பதாக அமையாது.

கொரொணாத் தொற்றினை அடுத்து நாட்டின் கல்வி மற்றும் உயர்கல்விக் கட்டமைப்புக்கள் முன்னெப்போதும் இல்லாத பல சவால்களினை முகம்கொள்கின்றன‌. பாடசாலைகளும், பல்கலைக்கழகங்களும், ஏனைய உயர் கல்வி நிறுவனங்களும் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து மூடப்பட்டிருக்கின்றன. நோய்த் தொற்று இன்னும் கட்டுப்பாட்டினுள் வராத நிலையிலே, கல்வி நிலையங்கள் எப்போது மீளவும் திறக்கப்படும் என்பது தொடர்பிலே தொடர்ந்தும் நிச்சயமற்ற நிலைமையே அவதானிக்கப்படுகிறது.

மாற்று வழிகளிலே மாணவர்கள் தமது கல்வியினைத் தொடர்வது எவ்வாறு என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவும், கல்வி அதிகாரிகளும், பாடசாலை நிருவாகிகளும், ஆசிரியர்களும், பல்கலைக்கழக ஆசிரியர்களும், பெற்றோரும், மாணவர்களும் தமது கரிசனைகளையும், எண்ணங்களையும் வெளியிட்டு வருகின்றனர். இணையவழியிலான கற்பித்தல் முறையினை ஆரம்பிப்பது குறித்து பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இணைய வழிக் கற்றல், கற்பித்தல் செயன்முறைகள்

பாரம்பரிய வகுப்பறைக் கல்விக்குப் பதிலாக, நெருக்கடியான சூழல்களில் எவ்வாறான மாற்றுக்களை முன்வைக்கலாம் என்பது தொடர்பிலே கல்வி சமூகத்தினர் மத்தியில் போதியளவு உரையாடல்கள் இடம்பெறாத நிலையே அவதானிக்கப்படுகிறது. உயர் அதிகாரிகளும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் இந்த விடயம் தொடர்பாகப் போதிய அளவுக்கு கல்வி மற்றும் உயர் கல்வித் துறைகளிலே நேரடியாக சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் இருக்கும் வேறுபட்ட‌ அபிப்பிராயங்களுக்கு முக்கியத்துவம் வழங்குவதாகத் தெரியவில்லை.

தொலைக் கல்வியினைத் தபால் மூலம் மேற்கொள்ளுவது பொருத்தமானதா? இணைய வழியிலே மேற்கொள்வது பொருத்தமானதா? தொலைக்காட்சி மற்றும் வானொலிச் சேவைகளை எந்த அளவிலே பயன்படுத்தப்படலாம்? போன்ற கேள்விகள் இங்கு ஆராயப்பட வேண்டியவை. இந்த எல்லா வழிமுறைகளும் இன்று உபயோகத்தில் உள்ளன. ஆனால், இந்தக் கேள்விகளுக்கு மேலும் பொருத்தமான பதில்களை நாம் கண்டறிய வேண்டுமாயின், கூடியளவு ஜனநாயக முறையிலான திட்டமிடல் இன்றியமையாதது.

இணைய வழியான கல்வியாயின், நேரடியான ஆசிரியர் மாணவர் ஊடாட்டங்கள் இடம்பெறக் கூடிய ஸ்கைப், சூம் போன்ற தொழினுட்பங்களைப் பயன்படுத்துவதா அல்லது கல்வி சார் விடயங்களை ஆவண வடிவிலே அல்லது காணொளி வடிவிலே தரவேற்றம் செய்வதா? ஒவ்வொரு பாடத்திற்கும், அல்லது கற்கை அலகுக்கும் எவ்வளவு நேரத்தினை இணையவழிக் கல்விக்காக ஒதுக்குவது? உதாரணத்துக்கு ஒரு கற்கை அலகு பாரம்பரிய வகுப்பறையில் வாராந்தம் மூன்று மணித்தியாலங்களுக்குக் கற்பிக்கப்படுகிறதாயின், இணைய வழியிலும் மூன்று மணித்தியாலங்களுக்குக் கற்பிக்கப்பட வேண்டுமா? மாணவர்களின் வரவு மற்றும் பங்குபற்றல் பற்றி எவ்வாறான கொள்கைகள் பொருத்தமானவை? போன்ற கேள்விகள் பற்றி பரந்துபட்ட உரையாடல்கள் கல்விக் கொள்கைகளை வகுப்போரினால் உரிய அளவுக்கு முன்னெடுக்கப்படவில்லை என்றே தெரிகிறது.

சமூக அசமத்துவங்களும் கற்றல், கற்பித்தல் செயன்முறைகளும்

அடுத்து எம்முன் இருக்கும் முக்கியமான கேள்வி, நாட்டின் எல்லாப் பிராந்தியங்களையும், சமூகத்தின் எல்லாப் பிரிவுகளையும் சேர்ந்த மாணவர்கள் இணைய வழிக் கல்வியினை மேற்கொள்ளுவதற்கான வசதிகளைக் கொண்டிருக்கிறார்களா என்பது. இணைய வழிக் கல்விக்கு இணைய இணைப்பு, மடிக்கணணி அல்லது குறைந்த பட்சம் ஒரு ஸ்மார்ட் தொலைபேசியாவது மாணவர்களிடம் இருக்க வேண்டும். இலங்கையில் அமுலிலே இருக்கும் இலவசக் கல்வி, பாடசாலைகளுக்கு இடையில் அவதானிக்கப்படும் உட்கட்டுமாண சமத்துவமின்மைகளுக்கு மத்தியிலும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கு அப்பால், ஓரளவுக்காயினும் எல்லா மாணவர்களும் ஒரே மாதிரியான வகுப்பறைச் சூழலில் இருந்து கற்றலினை மேற்கொள்ள வாய்ப்பளித்தது.

 

ஆனால் இணையவழிக் கல்வி வகுப்பறையினை மாணவர்களின் வீட்டுக்கு மாற்றி விடுகிறது. ஸ்மார்ட் தொலைபேசி, இணைய இணைப்பு அற்ற பல பெற்றோரும், மாணவர்களும் எமது கல்வி சமூகத்தின் அங்கங்களாக‌ இருக்கின்றனர். நாட்டின் பல பகுதிகளிலே இன்னமும் கையடக்கத் தொலைபேசி அலைவரிசைகள் சீரான முறையில் செயற்படுவதில்லை. பல குடும்பங்களிலே பிள்ளைகள் சுயாதீனமாக, ஏனைய குடும்ப உறுப்பினர்களின் இடையூறுகள் இல்லாது கல்வி கற்பதற்கான கட்டடச் சூழல் இல்லை.

எனவே இணைய வழிக் கல்வியானது வகுப்பறைக் கல்வியினைக் காட்டிலும் கூடிய‌ அசமத்துவமான சூழலிலேயே இடம்பெற வேண்டி இருக்கிறது. இது சமூகத்தின் வறிய, ஒடுக்கப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களையும், தொலைத் தொடர்பாடல் வசதிகளில் பின்தங்கிய நிலையில் இருக்கும் பிரதேசங்களினைச் சேர்ந்த மாணவர்களையும் கடுமையாகப் பாதிக்கும். எனவே பாரம்பரிய வகுப்பறைக் கல்விக்கான மாற்றுக்களை முன்வைக்கும் போது, இணையவழிக் கல்வியில் எதிர்நோக்கப்படும் இவ்வாறான அசமத்துவங்களை எவ்வாறு களைவது என்பது பற்றி சிந்திக்கப்படுவது மிகவும் அவசியம். இணையவழிக் கல்விக்காக பொருளாதார ரீதியில் சவால்களை எதிர்கொள்ளும் மாணவர்களின் குடும்பங்களுக்கு சில விசேட கொடுப்பனவுகளை வழங்க அரசு முன்வரவேண்டும்.

இன்று நிலவும் நெருக்கடியான சூழலிலே பொருளாதார ரீதியிலே பின் தங்கிய‌ குடும்பங்களிலே நாளாந்த உணவு மற்றும் மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குக் கூடப் பண வசதியற்ற சூழல் நிலவுகிறது. மாணவர்கள் பட்டினியால் வாடுவார்களாயின், அதனால் ஏற்படும் தாக்கங்களை இணையவழிக் கல்வியினால் தீர்த்து வைக்க முடியாது. நோய்த் தொற்றும், அதனை அடுத்து ஏற்பட்டிருக்கும் பொருளாதாரப் பிரச்சினைகளும், சமூகத் தனிமைப்படுத்தல் செயன்முறைகளும் உளவியல் ரீதியிலான பிரச்சினைகளையும் ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியிலே தொற்றுவித்துள்ளது. கொரொணாத் தொற்றின் பின் ஏற்பட்டிருக்கும் இவ்வாறான மாற்றங்களைக் கவனத்தில் எடுக்காது, அவற்றுக்கான தீர்வுகளை முன்வைக்காது, மாற்றுக் கல்விக்கான மார்க்கங்களைச் சிந்திக்க முடியாது.

கொரொணாத் தொற்றின் தாக்கம் முடிவுற்ற பின்னர் பாடசாலைகளும், பல்கலைக்கழகங்களும் மீளத் திறக்கும் போது, மாணவர்கள் தமது கல்வியினைத் தொடருவதிலே பொருளாதார ரீதியிலும், ஆரோக்கிய ரீதியிலும் பல சவால்களை எதிர்கொள்ளக் கூடும். இந்தச் சவால்களைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் இலவச உணவு வழங்கல், மகாபொல உதவித் தொகையினை அதிகரித்தல் போன்ற செயன்முறைகளிலே இறங்க வேண்டிய நிலை ஏற்படும். கல்விக்காக அரசு செலவிடும் பணத்தினை அதிகரிக்க வேண்டியது எதிர்காலத்தில் மிகவும் அவசியமானது. இதனை ஒரு கோரிக்கையாகக் கல்விச் சமூகத்தினைச் சேர்ந்தோர் இப்போது தொடக்கம் வலியுறுத்துவது முக்கியம்.

எவ்வாறான கல்வியினை நாம் வழங்குவது?

கொரொணாத் தொற்றின் பின்னர் உலகம் முழுவதுமே முன்னெப்போதும் இல்லாத பல சமூக, பொருளாதார, அரசியல் ரீதியிலான சவால்களை எதிர்கொண்டு வருகிறது. இந்தச் சவால்களை நாம் கல்விச் சமூகமாக எவ்வாறு விளங்கிக் கொள்ளப் போகிறோம், எவ்வாறான உரையாடல்களை மாணவர்கள், ஆசிரியர்கள் என்ற வகையிலே நாம் மேற்கொள்ளப் போகிறோம்? இந்தச் சவால்களுக்கான பதில்களையும், தீர்வுகளையும் நாம் எவ்வாறு உருவாக்கப் போகிறோம்? போன்ற கேள்விகளும் இன்று எம்முன் எழுந்திருக்கின்றன.

சமூக, அரசியல் விடுதலையினை நோக்கி எம்மை இட்டுச் செல்லக் கூடிய ஒரு கல்வி முறையிலே, எமது சமூகங்களிலும், எமது நாளாந்த வாழ்க்கையிலும் நாம் எதிர்கொள்ளும் சவால்கள், நெருக்கடிகள், பிரச்சினைகள், அசமத்துவங்கள் குறித்துச் சிந்திப்பதற்கும், பேசுவதற்கும் சந்தர்ப்பங்கள் இருக்க வேண்டும். இந்த நிலையிலே நாம் ஒரு நெருக்கடியான நிலையில் இருந்து கல்வியினைத் தொடர்கையிலே, தனியே பல வருடங்களுக்கு முன்னர் வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டத்தினை மாத்திரம் மையப்படுத்துவது பொருத்தமற்றது. அல்லது பாடசாலைகளும், பல்கலைக்கழகங்களும் மூடப் படும் போது எந்த அலகினைக் கற்பித்தோமோ, அந்த அலகில் இருந்து, இந்த இடைப்பட்ட காலத்திலே எதுவுமே நடைபெறவில்லை என்ற தோரணையில், எமது கற்றல், கற்பித்தல் செயன்முறைகளைத் தொடருவது ஒரு செயற்கையான, நாளாந்த வாழ்வுடன் தொடர்பற்ற கல்வி முறையாகவே அமையும். எனவே நாம் மேற்கொள்ளவிருக்கும் மாற்று கல்விச் செயற்பாடுகளிலே, நாம் இன்று எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்கும் ஒரு குறிப்பிடத்தக்க இடம் வழங்கப்படுவது அவசியம்.

ஒரு மாதத்துக்கு மேலாக எமது மாணவர்கள் வீடுகளிலே அடைபட்டுப் போயிருக்கிறார்கள். ஆடல், பாடல், ஓவியம் வரைதல், உடற்பயிற்சி போன்ற பல்வேறு புத்தாக்கச் செயற்பாடுகளிலே தம்மை ஈடுபடுத்தி வந்த மாணவர்கள், இன்று தமது நண்பர்களைக் கூடச் சந்திக்க முடியாத துரதிர்ஷ்ட வசமான நிலைமை ஏற்பட்டிருக்கிறது. மாணவர்கள் மத்தியில் இந்த நிலைமை மிகவும் மனச் சோர்வினை ஏற்படுத்தக் கூடும். எனவே மாணவர்களைச் சிந்தனை ரீதியிலும், செயற்பாட்டு ரீதியிலும் எம்மால் முடிந்த வரையில் உற்சாகமாக வைத்திருப்பது அவசியம்.

ஆனால் இதற்கான வழிகளாக ஏற்கனவே இருக்கும் கல்வி முறையின் குறைபாடுகளாக அமையும் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் முறைகள், பரீட்சையினை மையமாகக் கொண்ட வினா விடை அடிப்படையிலான கற்றற் செயற்பாடுகள், சமூக நிலைமைகளையும், சமூக நீதியினையும் கருத்திலெடுக்காத பாடத்திட்டம் போன்றன ஒரு போதும் இருக்கப் போவதில்லை.

நெருக்கடியான காலத்திலே மாற்றுக் கல்வி பற்றி நாம் சிந்திக்கையிலே, மாணவர்களிடையே வாசிப்புத் திறமையினையும், விமர்சன ரீதியிலான சிந்திக்கும் திறனையும், புத்தாக்கத் திறன்களையும், சமூகம் பற்றிய விழிப்புணர்வினையும் எவ்வாறு மேம்படுத்தப் போகிறோம் என்பதற்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மாணவர்கள் பிரச்சினைகளை அவை எழுகின்ற சமூகப் பொருளாதாரச் சூழல்களின் பின்னணியில் வைத்து விளங்குவதற்கு வழி செய்கின்ற, அப்பிரச்சினைகளுக்கு மற்றவர்களுடன் இணைந்து தீர்வுகளைத் தேடுவதற்கு முயற்சிப்பதனை ஊக்குவிக்கின்ற ஒரு கல்வி முறையே இன்றைய காலத்தின் தேவை.கல்வித் துறையுடன் சம்பந்தப்பட்ட எல்லாத் தரப்பினரும் இந்த விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துச் செயற்பட வேண்டிய ஒரு காலத்திலே இருக்கிறோம்.

 

http://thinakkural.lk/article/40060

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.