Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மீண்டும் வலுக்கிறதா சீன ஆதிக்கம் ?

Featured Replies

ஹரிகரன்

இலங்கையுடன் மிக நெருங்கிய தொடர்புகளை வைத்துள்ள உறவினர், நண்பர் என்ற உறவுகளைக் கொண்டுள்ள, இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இப்போது கொழும்பில் நிரந்தரமான தூதுவர்கள் இல்லை.

இலங்கைக்கான இந்திய தூதுவராக இருந்த தரன்ஜித் சிங் சந்து, கடந்த ஜனவரி மாதம், புதுடெல்லிக்கு அழைக்கப்பட்டு, அமெரிக்காவுக்கான தூதுவராக மறு மாதமே நியமிக்கப்பட்டு விட்டார்.

Embassy_china_india.jpg


அதற்குப் பின்னர், பதில் தூதுவராக வினோத் கே. ஜேக்கப் கடந்த மூன்று மாதங்களாகப் பணியில் இருக்கிறார்.

அதுபோலவே, இலங்கையில் சீன தூதுவராக இருந்த செங் ஷியுவான், கடந்த பெப்ரவரி மாதம், சீன வெளிவிவகார அமைச்சில் உயர் பதவியை ஏற்பதற்காக கொழும்பில் இருந்து புறப்பட்டுச் சென்று விட்டார்.

அவர் நாடு திரும்பிய பின்னர், கொழும்புக்கான தூதுவர் பதவிக்கு இன்னமும் யாரும் நியமிக்கப்படவில்லை. சீன தூதரகத்தில் இராஜதந்திர விவகாரங்களுக்குப் பொறுப்பாக இருக்கும், ஹூ வெய் இப்போது பதில் தூதுவராக இருக்கிறார்.

இலங்கைக்கு மிக நெருக்கமான- எந்த நேரத்தில் கூப்பிட்டாலும் ஓடி வந்து உதவக் கூடிய இரண்டு நாடுகளுக்குமே, ஒரே நேரத்தில் கொழும்பில் தூதுவர்கள் இல்லாமல் இருப்பது ஆச்சரியமான ஒன்று தான்.

அதுவும், இலங்கை உள்ளிட்ட உலகின் பெரும்பாலான நாடுகள் கொரோனா நெருக்கடியால் முடங்கிப் போயிருக்கின்ற சூழலில் -இவ்வாறானதொரு இராஜதந்திர முடக்க நிலையும் காணப்படுகிறது.

நிரந்தர தூதுவர் இல்லாவிடினும், பொதுவாகவே அடுத்த நிலை அதிகாரிகளைக் கொண்டு நிலைமைகள் சமாளிக்கப்படும். அதற்கான ஒழுங்குகள் இராஜதந்திர மட்டங்களில் இருப்பது வழக்கம். ஆனாலும், பதில் தூதுவர் ஒருவரால், நிரந்தரத் தூதுவர் ஒருவரைப் போல செயற்பட முடியாது. அவரது இடத்தை நிரப்ப முடியாது.

ஆனாலும், கொழும்பில் உள்ள இந்திய, சீன தூதரகங்களின், கடந்த இரண்டு மூன்று மாத செயற்பாடுகளை உற்று நோக்கினால், பெரும் வேறுபாடுகளை அவதானிக்கலாம்.

உலகத்துக்கு சீனாவே கொரோனாவைக் கொடுத்தது என்ற குற்றச்சாட்டுகள் நிறைந்திருந்த சூழலில், இலங்கையில் சீனர்களை வெறுத்து ஒதுக்கும் நிலை தீவிரமடைந்திருந்த சூழலில், இந்த ஆண்டின் தொடக்கம் அமைந்திருந்தாலும், தனது தற்காலிக பதில் தூதுவரைக் கொண்டு கொழும்புடனான நெருக்கத்தை வலுப்படுத்திக் கொள்வதில் சீனா ஒப்பீட்டளவில் வெற்றியைப் பெற்றிருக்கிறது என்றே கூறலாம்.

கொரோனா விவகாரத்தில் இலங்கையில் நெருக்கடியை எதிர்கொண்ட போது, கிட்டத்தட்ட ஒரு குற்றவாளிக் கூண்டில் இருந்து கொண்டு தான் நிரபராதி என்று போராடும் சூழலுக்குள் இருந்த சீனா, இப்போது, இலங்கைக்கு கைகொடுத்து உதவுகின்ற வழக்கமான நண்பனாகவே மாறிவிட்டது.
இரண்டு விமானங்களில் மருத்துவ உதவிப் பொருட்களை அனுப்பிய சீனா, தொடர்ச்சியாக கொரோனா தடுப்புக்கு தேவையான பொருட்களையும், கருவிகளையும் வழங்கி வருகிறது.

சீனாவின் அளவுக்கு நெருக்கத்தை ஏற்படுத்துவதற்கு இந்தியத் தரப்பில் இருந்து முயற்சிகள் எடுக்கப்பட்டதும் குறைவு, இலங்கைக்கு அளிக்கப்பட்ட உதவிகளும் குறைவு.

இவ்வாறானதொரு பின்னணியில், கடந்த புதன்கிழமை சீனாவின் பதில் தூதுவர் ஹூ வெய் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.

இதன்போது கொரோனா நெருக்கடியை சமாளிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதை விட, கொரோனாவுக்குப் பிந்திய சூழல் பற்றியே அதிகம் பேச்சப்பட்டிருக்கிறது.

கொரோனாவுக்குப் பின்னரான காலம், இலங்கைக்கு கடுமையான நெருக்கடி மிக்கதாக இருக்கப் போகிறது என்பதே பொதுவான கணிப்பாக இருக்கிறது,

ஏனென்றால், இலங்கைக்கு கிடைத்து வரும் வருமானங்கள் தடைப்பட்டுப் போகும் சூழலை கொரோனா ஏற்படுத்தியிருக்கிறது,

இலங்கையின் முக்கியமான இரண்டு வருமான மூலங்களான ஆடை ஏற்றுமதியும், சுற்றுலாத்துறையும் பயங்கரமான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதால், வெளிநாட்டு நாணயக் கையிருப்பு தேய்ந்து போய்க் கொண்டிருக்கிறது என்பதை இந்தச் சந்திப்பின்போது ஜனாதிபதியே சுட்டிக்காட்டியிருக்கிறார்.
இந்த நிலைமை அடுத்தடுத்த மாதங்களில் இன்னும் மோசமடையும். சுற்றுலாத் தொழில்துறை கிட்டத்தட்ட பூச்சிய நிலையை எட்டும் சூழலுக்குள் தள்ளப்பட்டிருக்கிறது.

உலகம் இயல்பு நிலைக்குத் திரும்பி, விமானங்கள் வழக்கமான சேவைகளை ஆரம்பிக்கவே பல மாதங்களாகும் என்று கருதப்படுகிறது.
அவ்வாறு சேவைகள் ஆரம்பிக்கப்பட்டாலும், கொரோனா பற்றிய பயம் குறையும் வரை சுற்றுலாப் பயணிகளை வெளிநாடுகளில் இருந்து ஈர்க்க முடியாது.

ஆக, மொத்தத்தில் இந்த ஆண்டின் கடைசியில் கூட, சுற்றுலாத் துறை வழக்கமான நிலைக்குத் திரும்பும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
கடந்த ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களால் இலங்கையின் பொருளாதாரத்தை நிலைகுலையச் செய்தது, சுற்றுலாத் துறை தான்.
சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வர அஞ்சினார்கள். வந்திருந்தவர்கள் கூட, கிடைத்த விமானத்தில் ஓடித் தப்பினார்கள்.

அப்போது கூட, இனி இப்போதைக்கு சுற்றுலாத் தொழில்துறையால் நிமிர முடியாது என்றே கருதப்பட்டது. அந்தச் சூழலில், குண்டுவெடித்த சில நாட்களிலேயே, ரஷ்யா தனது நாட்டில் இருந்து சுற்றுலாப் பயணிகளை விமானத்தில் அனுப்பி வைத்தது.

அத்துடன், வழக்கத்துக்கு மாறாக, ரஷ்யாவில் இருந்து அதிகளவு சுற்றுலாப் பயணிகள் கொழும்பு வர ஆரம்பித்தார்கள். இதனால் ஓரளவுக்கு சுற்றுலாத் துறை நிமிர ஆரம்பித்தது.

ஆனால், இப்போது முற்றாகவே வீழ்ந்து கிடக்கும் சற்றுலாத் துறையை ரஷ்யா நினைத்தாலும் சரி, சீனா நினைத்தாலும் சரி, இந்தியா நினைத்தாலும் சரி இலகுவாக நிமிர்த்த முடியாது.

ஏனென்றால், இவையெல்லாமே கொரோனா ஆபத்து மிக்க நாடுகளாக இருக்கின்றன. எனவே இந்த நாடுகள் சுற்றுலாப் பயணிகளை அனுப்ப தயாரானால் கூட, வேண்டாம் என்று மறுக்கின்ற நிலையில் தான் இலங்கை இருக்கப் போகிறது.

இவ்வாறான நிலையில் தான், இலங்கையில் முதலீடுகளை செய்து உற்பத்தி பொருளாதாரத்தை வளர்த்துக் கொள்வதற்கு சீனாவின் உதவியை நாடியிருக்கிறார் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச.

வெளிநாடுகளிடம் கொடைகளையோ, கடனையோ எதிர்பார்க்கவில்லை என்றும், முதலீடுகளையே எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளதானது கவனிக்க வேண்டிய விடயம்.

தற்போதைய நிலையில், வெளிநாட்டு முதலீடுகள் முக்கியமானவை. ஏனென்றால், உள்நாட்டு உற்பத்திகளுக்கு அது அவசியம்.
வெளிநாடுகளில் பணியாற்றிக் கொண்டிருந்தவர்கள் கூட, நாடு திரும்பி விட்டார்கள். கொரோனா பீதி தணியும் வரை இனி வெளிநாடுகளுக்கும் யாரும் செல்ல முனையமாட்டார்கள். அவர்களுக்கு உள்நாட்டிலேயே வேலை கொடுக்க வேண்டும். அதற்கு வெளிநாட்டு முதலீடுகள் அவசியம்.

அதனால் தான் உள்நாட்டு உற்பத்தி பொருளாதாரத்தை முன்னிறுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது.

இந்த நிலையில், கொரோனாவுக்குப் பின்னர் இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு சீனா உதவும் என்ற உறுதிமொழியைக் கொடுத்திருக்கிறார் பதில் தூதுவர் ஹூ வெய்.

இந்த உறுதிமொழி மிக முக்கியமானது. அதுவும் மிக முக்கியமானதொரு தருணத்தில் இலங்கைக்குக் கிடைத்திருக்கிறது. போருக்குப் பின்னர் இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதில் சீனாவின் பங்கு கணிசமானதாக இருந்தது.

அது இலங்கையைக் கடன்பொறிக்குள் தள்ளினாலும், இலங்கையில் பொருளாதார மாற்றங்களுக்கு சீனாவின் அந்த உதவி கணிசமான பங்களிப்பை வழங்கியிருக்கிறது.

இந்த நிலையில் கொரோனாவுக்குப் பிந்திய சூழலில் இலங்கையின் பொருளாதாரத்தை நிமிர்த்துவதற்கும், சீனா கைகொடுக்கும் என்ற உத்தரவாதம் கிடைத்திருக்கிறது.

இந்த உத்தரவாதம், சீனாவின் பதில் தூதுவரால் கொடுக்கப்பட்டது எந்தளவுக்கு காத்திரமானதாக இருக்கும் என்ற கேள்வி எழலாம். அதில் நியாயங்களும் உள்ளது.

உயர்மட்ட பயணங்கள், பேச்சுக்களுக்கான வாய்ப்புகள் இப்போது இல்லாத சூழலில், பதில் தூதுவர் போன்ற இராஜதந்திரிகள் ஊடாகவே சீனா தனது நகர்வுகளை கையாளுகிறது.

எனவே இத்தகைய தருணத்தில் இத்தகைய வாக்குறுதிகளை குறைத்து மதிப்பிட்டு விட முடியாது.

கொரோனாவுக்குப் பின்னாரான காலகட்டத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் முதல் பயணத் தெரிவாக சீனாவே இருக்கப் போகிறது.
அவர் ஆட்சிக்கு வந்த பின்னர், இன்னமும் சீனாவுக்கு பயணத்தை மேற்கொள்ளாத நிலையில், அந்தப் பயணத்தின் மூலம் பெரும் வாய்ப்புகளை அவரால் தேடிக் கொள்ள முடியும் போலவே தோன்றுகிறது.

இந்த விடயத்தை இந்தியா எப்படி அணுகப் போகிறது? எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது? பொறுத்திருந்து பார்க்கலாம்.

https://www.virakesari.lk/article/81277

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.