Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒக்ஸ்போர்ட் ஆராய்ச்சியாளர்கள் சாதனை -கொரோனா இறப்பை குறைக்கும் மருந்து கண்டுபிடிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒக்ஸ்போர்ட் ஆராய்ச்சியாளர்கள் சாதனை -கொரோனா இறப்பை குறைக்கும் மருந்து கண்டுபிடிப்பு

ஒக்ஸ்போர்ட் ஆராய்ச்சியாளர்கள் சாதனை -கொரோனா இறப்பை குறைக்கும் மருந்து கண்டுபிடிப்பு

 

உலகை உலுக்கி வரும் கொரோனாவால் நாளாந்தம் உயிரிழப்புக்கள் ஏற்பட்டு வருகின்றன. இதற்கு மருந்து கண்டு பிக்க்கும் முயற்சியில் உலக நாடுகள் பலவும் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில் இறப்பு விகிதத்தை குறைக்கும் வகையிலான மருந்தை இங்கிலாந்து ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

டெக்சாமெத்தசோன் எனப்படும் இந்த மருந்தை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எடுத்துக்கொண்டால் அவர்களது இறப்பு விகிதம் குறைகிறது.

பரிசோதனை முயற்சியாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட சுமார் 6 ஆயிரம் பேரில் 2 ஆயிரம் பேருக்கு டெக்சாமெத்தசோன் மருந்து கொடுக்கப்பட்டது. இந்த மருந்தை எடுத்துக்கொண்ட வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில்:

வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெறுபவர்களில் உயிரிழப்பு வாய்ப்பு 40 சதவிகிதத்தில் இருந்து 28 சதவிகிதமாக குறைந்துள்ளது.

ஒக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெறுபவர்களில் உயிரிழப்பு வாய்ப்பு 25 சதவிகிதத்தில் இருந்து 20 ஆக குறைந்துள்ளது.

இந்த மருந்து கொரோனாவால் ஏற்படும் இறப்பு விகித்தை வெகுவாக குறைத்துள்ளது என ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக தலைமை ஆராய்ச்சியாளர் பீட்டர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த டெக்சாமெத்தசோன் மருந்து குறித்து ஆராய்ச்சி மேற்கொண்ட மூத்த ஆராய்ச்சியாளர் மார்ட்டின் லேட்ரியின் ஆராய்ச்சியில்,

சராசரியாக வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவரும் 8 பேரில் ஒருவர் உயிர் இந்த மருந்தால் காப்பாற்றப்படுகிறது.

சராசரியாக ஒக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்றுவரும் 20 பேரில் ஒருவரது உயிர் இந்த மருந்தால் காப்பாற்றப்படுகிறது என்ற தகவலை கண்டுபிடித்துள்ளார்.

இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ள இந்த டெக்சாமெத்தசோன் மருந்து உலக அளவில் பெரும்பாலான நாடுகளிடம் உள்ளதாகவும், இந்த மருந்துக்கான செலவும் மிகவும் குறைவு

எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனாவால் ஏற்படும் இறப்பு விகிதத்தை குறைக்கும் வகையிலான டெக்சாமெத்தசோன் மருந்து நிச்சயம் பலன் அளிக்கும் என இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

https://www.ibctamil.com/uk/80/145331

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உயிர் காக்கும் கொரோனா வைரஸ் மருந்து கண்டுபிடிக்கப்பட்டது

Screenshot_20200616-192159_Chrome-720x450.jpg

ஒரு மருந்து கொரோனா வைரஸ் உயிர்வாழ்வை மேம்படுத்த முடியும் என்பதற்கான முதல் ஆதாரம் தங்களிடம் இருப்பதாக பிரித்தானியாவில் உள்ள ஒக்ஸ்பேர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

டெக்ஸாமெதாசோன் எனப்படும் மலிவான, பரவலாகக் கிடைக்கக்கூடிய ஸ்டீராய்டு கடுமையாக நோய்வாய்ப்பட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளில் இறப்புகளை மூன்றில் ஒரு பங்கு வரை குறைத்தது.

முடிவுகள் செவ்வாயன்று அறிவிக்கப்பட்டன, அவை விரைவில் வெளியிடப்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இந்த ஆய்வு ஒரு பெரிய, கடுமையான சோதனையாகும், இது 2,104 நோயாளிகளை தோராயமாக மருந்து பெற நியமித்தது மற்றும் 4,321 நோயாளிகளுக்கு வழக்கமான கவனிப்பை மட்டுமே அளிக்கிறது.

மருந்து வாய்வழியாகவோ அல்லது IV மூலமாகவோ வழங்கப்பட்டது. 28 நாட்களுக்குப் பின்னர் சுவாச இயந்திரங்களுடன் சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளில் இது இறப்புகளை 35% ஆகவும், கூடுதல் ஒக்ஸிஜன் தேவைப்படுபவர்களில் 20% ஆகவும் குறைந்துள்ளது. குறைவான நோய்வாய்ப்பட்ட நோயாளிகளுக்கு இது உதவவில்லை.

“இது மிகவும் வரவேற்கத்தக்க முடிவு” என்று ஒரு ஆய்வுத் தலைவர் ஒக்ஸ்பேர்ட் பல்கலைக்கழகத்தின் பீட்டர் ஹார்பி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“ஒக்ஸிஜன் சிகிச்சை தேவைப்படும் அளவுக்கு நோய்வாய்ப்பட்ட நோயாளிகளில் உயிர்வாழும் நன்மை தெளிவாகவும் பெரியதாகவும் உள்ளது, எனவே டெக்ஸாமெதாசோன் இப்போது இந்த நோயாளிகளின் பராமரிப்பின் தரமாக மாற வேண்டும். டெக்ஸாமெதாசோன் மலிவானது,  மேலும் உலகளவில் உயிர்களை காப்பாற்ற உடனடியாக பயன்படுத்தலாம்.

இந்த மருந்து கடுமையான சந்தர்ப்பங்களில் மட்டுமே உதவுகிறது என்றாலும், உலகளவில் எண்ணற்ற உயிர்கள் காப்பாற்றப்படும்இது மிகவும் மலிவு, எளிதானது, விரைவாக அளவிட முடியும் மற்றும் ஒரு சிறிய அளவு மட்டுமே தேவை” என கூறியுள்ளனர்.

ஸ்டீரோய்டு மருந்துகள் வீக்கத்தைக் குறைக்கின்றன, இது சில நேரங்களில் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதால் உருவாகிறது.

இந்த அதிகப்படியான செயல்பாடு ஆபத்தானது என்பதை நிரூபிக்க முடியும், எனவே மருத்துவர்கள் அத்தகைய நோயாளிகளுக்கு ஸ்டெராய்டுகள் மற்றும் பிற அழற்சி எதிர்ப்பு மருந்துகளை பரிசோதித்து வருகின்றனர்.

நோயின் போது முன்னதாக ஸ்டெராய்டுகளைப் பயன்படுத்துவதை எதிர்த்து உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்துகிறது, ஏனெனில் நோயாளிகள் வைரஸை அழிக்கும்வரை அவை நேரத்தை குறைக்கக்கூடும்.

இந்த மருந்து சுவாச இயந்திரங்களில் சிகிச்சையளிக்கப்படும் ஒவ்வொரு எட்டு நோயாளிகளுக்கும் ஒரு இறப்பையும், கூடுதல் ஒக்ஸிஜனில் மட்டும் 25 நோயாளிகளுக்கு ஒரு மரணத்தையும் தடுக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

இதே ஆய்வே இந்த மாத தொடக்கத்தில் மலேரியா மருந்து ஹைட்ராக்ஸி குளோரோகுயின் கொரோனா வைரஸுக்கு எதிராக செயல்படவில்லை என்பதைக் காட்டியது.

இந்த ஆய்வில் இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தில் 11,000 க்கும் மேற்பட்ட நோயாளிகள் சேர்க்கப்பட்டனர், அவர்களுக்கு தரமான பராமரிப்பு அல்லது பல சிகிச்சைகளில் ஒன்று வழங்கப்பட்டது.

 

http://athavannews.com/உயிர்-காக்கும்-கொரோனா-வை/

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா வைரஸ் பாதிப்புக்கான உயிர் காக்கும் மருந்தாக மலிவான ஸ்டீராய்டு கண்டுபிடிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்புக்கான உயிர் காக்கும் மருந்தாக மலிவான ஸ்டீராய்டு கண்டுபிடிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்புக்கான உயிர் காக்கும் மருந்தாக மலிவான ஸ்டீராய்டு கண்டுபிடிக்கபட்டு உள்ளது
பதிவு: ஜூன் 17,  2020 06:54 AM
லண்டன்:

கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் 81 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,40,390 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரையில் இந்த வைரஸுக்கு சிகிச்சையளிக்கும் மருந்து கண்டுபிடிக்க முடியாமல் மருத்துவ வல்லுநர்கள் திணறிவருகின்றனர்.


ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் டெக்ஸாமெதோசான் என்ற ஸ்டீராய்டு மருந்து கொரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நபர்களையும் குணப்படுத்துகிறது என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர். இது மலிவாகவும் கிடைக்கும் என கூறி உள்ளனர்.

கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பொதுவான ஸ்டீராய்டு மருந்து டெக்ஸாமெதாசோனின் குறைந்த அளவுகளை வழங்குவது, மிகக் கடுமையான தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் இறப்பு விகிதங்களை மூன்றில் ஒரு பங்காகக் குறைத்துள்ளதாக சோதனை முடிவுகள் தெரிவித்து உள்ளன.

ரெகவரி என அழைக்கப்படும் இங்கிலாந்து தலைமையிலான மருத்துவ பரிசோதனை குழு இந்த சோதனையை நடத்தி உள்ளது."ஒரு பெரிய முன்னேற்றம்" என்று விவரிக்கப்பட்டுள்ள இந்த முடிவுகள், தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு இந்த மருந்து உடனடியாக தரமான ஒரு மருந்தாக மாறும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

இந்த சோதனை குறித்து ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக பேராசிரியர் மார்ட்டின் லாண்ட்ரே கூறியதாவது:-

கொரோனா பாதிக்கப்பட்டு  வென்டிலேட்டர்களில் அல்லது ஆக்ஸிஜனில் இருக்கும் நோயாளிகளுக்கு டெக்ஸாமெதாசோன் வழங்கப்பட்டால், அது உயிர்களைக் காப்பாற்றும், மேலும் இதற்கு மிகக் குறைந்த செலவே ஆகும். இதுவரை கொரோனா நோயாளிகளின் இறப்பு விகிதத்தைக் குறைப்பதாக கண்டறியப்பட்ட மருந்து இது ஒன்றே. இது பெரிய அளவில் இறப்பைக் குறைக்கிறது. இது பெரிய முன்னேற்றம் என்று இந்த தெரிவித்துள்ளார்.

இது ஆபத்தான கட்டத்தில் உள்ள நோயாளிகளை காப்பாற்றுவதாக கூறப்படுகிறது. இது கொரோனா போராட்டத்தில் மிகப் பெரிய திருப்புமுனை என பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

அரசு அறிவியல் ஆலோசகர் சர் பேட்ரிக் வல்லான்ஸ் கூறுகையில்,இது மிகப் பெரிய அற்புதமான முன்னேற்றம், நமது விஞ்ஞானிகள் நல்லதொரு சிறந்த சிகிச்சையை கண்டுபிடித்துள்ளனர்.இம்மருந்து ஆரம்பித்திலேயே பயன்படுத்தப்பட்டிருந்தால் 5000 நோயாளிகள் மரணத்திலிருந்து காப்பாற்றப்பட்டிருப்பார்கள். இது விலை குறைந்த மருந்து. தயாரிப்பிலும் சிக்கல் இல்லாதது என அவர் கூறியுள்ளார்.

இது குறித்து தேசிய சுகாதார சேவையின் ஸ்டீபன் பவிஸ் கூறுகையில் இது நல்ல மாற்றம், கொரோனா நோயாளிகளை பிரித்தானியாவில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் காப்பாற்ற முடியும்.வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு இது சிறந்த மருந்தாக உள்ளது. பல ஆண்டுகளாகும் என்றும் இருந்த நிலையில் மிக விரைவாக நல்ல தீர்வு கிடைத்துள்ளது என அவர் கூறியுள்ளார்.

2 லட்சம் நோயாளிகளுக்கு தேவையான மருந்து இருப்பில் உள்ளது இது எதிர்கால தேவைக்கும் போதும் என கருதப்படுகிறது.டெக்ஸாமெதோசான்' எனப்படும் மருந்து சாதாரணமாக மூட்டுவலிக்கும், ஒவ்வாமைக்கும் பயன்படக் கூடியது. அதுவும் 6 பவுண்ட் செலவில் கொரோனாவை குணப்படுத்த முடியும் என்பதால் இதற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/17065445/A-Cheap-Steroid-Emerges-As-LifeSaving-Drug-For-COVID19.vpf

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கரோனா பரவல் கடும் அதிகரிப்பிலும் நம்பிக்கை ஒளி பாய்ச்சும் பழைய 'ஸ்டெராய்ட்’ மருந்து: பயன்படுத்த எச்சரிக்கையுடன் அனுமதி

a-drug-offers-hope-amid-spikes-in-coronavirus-infections  

உலக அளவில் கரோனா பாதிப்பு 82 லட்சத்து 57 ஆயிரத்து 885 ஆக அதிகரித்துள்ளது. மரண எண்ணிக்கை 445, 986 ஆக உயர்ந்துள்ளது. 43 லட்சத்து 6 ஆயிரத்து 749 பேர் குணமடைந்துள்ளனர்.

உலகம் முழுதும் இன்னமும் 35 லட்சத்து 5 ஆயிரத்து 150 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில் டெக்ஸாமெதாசோன் என்ற ஒரு பழைய மருந்தான செலவு அதிகம் இல்லாத ஸ்டெராய்ட் மாத்திரைகள் சுவாசக்கருவி உதவியுடன் இருக்கும் நோயாளிகளில் 35% பேரையும் கூடுதல் பிராணவாயு தேவைப்படும் கரோனா நோயாளிகளில் 20% பேர் மரணங்களைத் தடுத்துள்ளதாக இங்கிலாந்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்

ஆனால் இது கரோனா தீவிரமாக பீடிக்காத நோயாளிகளுக்கு அவ்வளவாக உதவுவதில்லை என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவில் இந்த டெக்ஸாமெதாசோன் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது, மிகவும் குறைந்த விலையில் இது கிடைத்து வருவது வெண்ட்டிலேட்டர் கரோனா நோயாளிகளைக் குணப்படுத்த எழுந்துள்ள ஒரு நல்வாய்ப்பு, நற்செய்தியாகப் பார்க்கப் படுகிறது.

அமெரிக்க தொற்று நோய் நிபுணர் டாக்டர் ஆண்டனி ஃபாஸி இது கரோனா சிகிச்சையில் கிடைக்கக் கூடிய மருந்துகளில் ஒரு குறிப்பிடத்தகுந்த கண்டுப்பிடிப்பாகும், முக்கியமானது என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் உலகச்சுகாதார அமைப்பை நிர்வாகம் புரியும் விஞ்ஞானிகள், பெரிய அளவில் உலகமகா கிளினிக்கல் பரிசோதனைகளை மேற்கொண்டனர். அதாவது மீண்டும் சில பழைய சுவாசக்குழாய் மருந்துகளை கோவிட்-19 சிகிச்சைக்காக கிளினிக்கல் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் டெக்ஸாமெதாசோன் மரண விகிதத்தை மூன்றில் ஒரு பங்கு குறைப்பதாக தெரியவந்துள்ளது. வெண்ட்டிலேட்டர் உதவி தேவைப்படும் கரோனா நோயாளிகளில் மூன்றில் ஒரு பங்கு மரணவிகித்தை டெக்ஸாமெதாசோன் கட்டுப்படுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது, ஆக்சிஜன் சிகிச்சை தேவைப்படும் கரோனா நோயாளிகளில் ஐந்தில் ஒரு பங்கு மரண விகிதம் கட்டுப்படுகிறது.

ஆனால் சுவாச உதவி தேவைப்படாத கரோனா நோயாளிகளுக்கு டெக்ஸாமெதாசோன் பயனளிக்கவில்லை என்பதும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

இதே சோதனையில்தான் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் கரோனாவுக்குப் பயன்படவில்லை என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு கழகம் இதன் பயன்பாட்டை முடிவுக்குக் கொண்டு வந்தது.

டெக்ஸாமெதாசோன் ஸ்டெராய்ட் என்பதால் தாறுமாறாக இதனைப் பயன்படுத்தினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்ற எச்சரிக்கையுடன் இந்திய மருத்துவர்கள் இதனை அனுமதித்துள்ளனர்.

https://www.hindutamil.in/news/corona-virus/559804-a-drug-offers-hope-amid-spikes-in-coronavirus-infections-1.html

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டெக்சாமெதாசோன் என்றால் என்ன? கரோனா நோயாளிகள் உயிரைக் காக்கிறதா? இந்தியச் சூழலுக்கு பொருந்துமா? என்ன சொல்கிறது ஐசிஎம்ஆர்? விரிவான அலசல்

covid-19-what-is-dexamethasone பிரதிநிதித்துவப்படம்


கரோனா வைரஸ்… குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உலகம் முழுவதையும் இன்று அச்சறுத்தும் ஒரே வார்த்தை.இந்த கட்டுரையைப் படித்துக்கொண்டிருக்கும் நொடிப்பொழுதுவரை கரோனா வைரஸ் பெருந்தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் மருந்தோ, தடுப்பு மருந்தோ அல்லது அழிக்கும் மருந்தோ கண்டுபிடிக்கப்படவில்லை.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸுக்கு இதுவரை உலகளவில் 85 லட்சம் மக்கள் பாதி்க்கப்பட்டுள்ளனர், 4.50 லட்சம் உயிர்கள் காவு வாங்கப்பட்டுள்ளன

கரோனா வைரஸுக்கு எதிரான போரில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல வல்லரசு நாடுகளும், நூற்றுக்கணக்கான தனியார் நிறுவனங்களும் தங்களின் முயற்சியை முடுக்கிவிட்டுள்ளார்கள்.

ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு படிநிலையில் தங்களது பரிசோதனையை, ஆய்வைக் கொண்டிருக்கிறார்கள். இருப்பினும் கரோனா அரக்கனை எதிர்கொள்ள வீரியமுள்ள மருந்தைக் கண்டுபிடித்து மக்களிடம் கொண்டுசேர்ப்பது எளிதில் சாத்தியமில்லை என்பது விஞ்ஞானிகள் மட்டுமே அறிந்தது.

ஏனென்றால் ஒவ்வொரு நாட்டின் காலச்சூழலுக்கு ஏற்ப கரோனா வைரஸ் தன்னை உருமாற்றிக்கொண்டே வருகிறது என்பது மருத்துவ வல்லுநர்களும், விஞ்ஞானிகளும் செய்துவரும் ஆய்வுகளில் இருந்து அவ்வப்போது தெரியவருகிறது

தடுப்பு மருந்து சாத்தியமா

பொதுவாக தடுப்பூசிகளில் இரு வகைகள் உண்டு. அவை உயிர் உள்ள நுண்ணுயிரிகளை கொண்டு தயாரிக்கப்படுபவை(Live attenuated Vaccines) கொல்லப்பட்ட நுண்ணுயிரிகள் மூலம் தயாரிக்கப்படுபவை(Killed Vaccines).

உயிருள்ள தடுப்பூசி என்பது ஒரு நோயினை ஏற்படுத்தும் நுண்ணுயிரிக்கு எதிராக அந்த நுண்னுயிரியின் நோய் உண்டாக்கக்கூடிய தன்மையினை(Pathogenecity) நீக்கிவிட்டு அதேசமயம் மனிதனுக்கு எதிர்ப்பு சக்தியினை தூண்டக்கூடிய தன்மையை(Immunogenecity) நிலை பெறச் செய்து அந்த நுண்ணுயிரியை தயார் செய்வதாகும்.

உயிரற்ற தடுப்பூசி(Killed Vaccines) என்பது நோய் உண்டாக்கக்கூடிய நுண்ணுயிரியை வெப்பத்தின் மூலமாகவோ அல்லது வேதிப்பொருள் மூலமாகவோ கொன்று முன்னதைப் போலவே அதனுடைய நோய் உண்டுபண்ணும் திறனை நீக்கிவிட்டு, நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் திறனை நிலைபெறச் செய்து தயாரிக்கப்படுபவையாகும்.

வீரியத்தின் அடிப்படையில்பார்த்தால் உயிருள்ள தடுப்பூசியோடு, உயிரற்ற தடுப்பூசியை ஒப்பிட்டால் சற்று குறைவுதான்.

1592536121756.jpg

பாக்டீரியா மற்றும் டி.என்.ஏ வை மரபுப்பொருளாக கொண்ட வைரஸ்கள்(DNA viruses), ஆர்.என்.ஏ (RNA Viruses)வைரஸ்களை தடுப்புமருந்தாக மாற்றப்பட்டு பயன்பாட்டிலும் உள்ளது. ஆனால் பெரும்பான்மையான ஆர்.என்.ஏ வைரஸ்களை தடுப்பு மருந்தாக பயன்படுத்துவது கடும் சவாலாகவே இன்றளவும் உள்ளது.

உதாரணமாக எய்ட்ஸ் நோயினை உண்டாக்கும் ஹெச்.ஐ.வி வைரஸ்(HIV virus), சாதாரன சளிக்கு காரணமான ரைனோ (Rhino viruses),நுரையீரல் நோய்த்தொற்றை ஏற்படுத்தும் கரோனா வைரஸ் (carona virus) .இவைகளுக்கிடையேயான தனிச்சிறப்பு என்னெவன்றால் ஆன்டிஜெனிக் மார்க்கர் (Antigenic marker) அதாவது, வைரஸ்களில் நோய் உண்டாக்கும் பகுதி நிலையான தன்மை கொண்டதல்ல அதை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருக்கும்.

நோய் உண்டாக்கும் பகுதி நிலை அடிக்கடி மாற்றுவதால் என்ன ஆகும் என்றால் இன்று உருவாகும் தடுப்பு மருந்தானது நாளை செயலற்றதாகிவாடும்.காரணம் நாளை அது தனது நோய் உண்டாக்கும் பகுதிநிலையை வேறொன்றாக மாற்றியிருக்கும்.

இதன் காரணமாகவே இன்றும் சார்ஸ்(SARS),எய்ட்ஸ்(AIDS), கரோனாவைரஸ் போன்ற வைரஸ்களுக்கு தடுப்பு மருந்தானது கண்டுபிடிக்கப்படாமல் இருக்கிறது .இதே ஆர்.என்.ஏ வைரஸ் வகையைச் சேர்ந்ததுதான் கரோனா வைரஸும், தனது தனது நோய் உண்டாக்கும் பகுதியை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருக்கும்.

ஆதலால் கரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது என்பது அவ்வளவு எளிதானது அல்ல என்பது புரிந்திருக்கும்.

இப்படிப்பட்ட சூழலில் கரோனா நோயாளிகளின் உயிரைக் காக்கும் வகையில் ஒரு மருந்து இருப்பதாக லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக மருத்துவர்கள் தங்கள் ஆய்வின் மூலம் தெரிவித்திருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சியாகத்தானே இருக்கும்.

ஆம், மருத்துவ உலகமே டெக்ஸாமெதாசோன் எனும் வார்த்தையைத்தான் இப்போது உச்சரித்து, அதை புகழ்ந்து வருகிறார்கள்.

டெக்ஸாமெதாசோன் என்றால் என்ன?

லண்டன் ஆக்ஸ்போர்ட் மருத்துவ வல்லுநர்கள் பரிந்துரைக்கும் டெக்ஸாமெதாசோன் மருந்து ஒன்றும் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டது அல்ல. கடந்த 1957-ம் ஆண்டு பிலிப் ஷோவால்டர் ஹென்ச் என்ற விஞ்ஞானியால் கண்டுபிடிக்கப்பட்டு 1961-ம் ஆண்டு முதல் மருத்துவ உலகில் மருத்துவர்களால் பயன்பாட்டில் இருந்து வருகிறது.

டெக்ஸாமெதாசோன் எனும் மருந்து ஸ்டீராய்ட் வகை மருந்தாகும்.

1592536147756.jpg

உலகளவில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகள் உற்பத்தியில் இந்திய நிறுவனங்கள் எந்த அளவுக்கு பெரும்பங்கு வகிக்கிறதோ அதேபோலத்தான் டெக்சாமெத்தாசோன் மருந்துகள் உற்பத்தியிலும் இந்திய நிறுவனங்கள் முன்னணியில் இருக்கின்றன. ஏறக்குறைய 20-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்த டெக்சாமெத்தோசோன் மருந்தை உற்பத்தி செய்து வருகின்றனர்.

ரெம்டெசிவிர் மருந்துபோன்று இது ஒன்றும் விலை அதிகம் இல்லை, 10 மாத்திரைகள் கொண்ட அட்டையே 3 ரூபாய்க்குள்ளாகாத்தான் இருக்கும். இவ்வளவு விலை மலிவான மருந்தா கரோனா நோயாளிகளின் உயிரைக் காக்கிறது என்று கேட்டால் இன்னும் ஆய்வில் முழுமையாக வெளிவரவில்லை என்பதுதான் அதற்கு நிதர்சனம்.

டெக்ஸாமெதாசோன் மருந்து எந்த நோய்களுக்குப் பயன்படுகிறது

முன்னரே கூறியதுபோல் டெக்ஸாமெதாசோன் என்பது ஒரு வகை ஸ்டீராய்டு மருந்தாகும். பல்வேறு விதமான வாத நோய்கள், தோல் நோய்கள், ஒவ்வாமை(அலர்ஜி), ஆஸ்துமா, நீண்டகால சுவாச நோய்கள், சுவாசக் குழாயில் ஏற்படும் ஒருவகை அலர்ஜியை போக்குதல், மூளை வீக்கம், கண் சிகிச்சை, கண் வீக்கம், கண் அறுவை சிகிச்சை ஆகியவற்றுக்கும் பயன்படுத்தலாம்.

1592536193756.jpg

காசநோய்க்கு நோய் எதிர்ப்புச் சக்தி மருந்துடன் சேர்த்து பயன்படுத்தப்படுகிறது. பெண்களுக்கு பிரசவ நேரத்தில் அதாவது குறைமாத பிரசவ நேரத்தில் குழந்தையை வெளியே எடுக்க மருத்துவர்களால் பயன்படுத்தப்படுகிறது. இந்த மருந்தை வாய்வழியாகவோ அல்லது ஐவி எனப்படும் நரம்புகள் மூலமோ நோயாளியின் தன்மைக்கு ஏற்றார்போல் மருத்துவர்கள் பயன்படுத்துகிறார்கள்.

லண்டன் மருத்துவர்கள் சொல்வது என்ன

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவ வல்லுநர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுவது என்னவென்றால், “டெக்ஸாமெதாசோன் என்ற மருந்து கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நபர்களையும் குணப்படுத்துகிறது. வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ள நோயாளிகளின் உயிரிழக்கும் வாய்ப்பை மூன்றில் ஒரு பங்கு இது குறைக்கிறது.

ஆக்ஸிஜன் செலுத்தப்படும் நிலையில் உள்ள நோயாளிகள் உயிரிழக்கும் வாய்ப்பை ஐந்தில் ஒரு பங்கு குறைக்கிறது. பிரிட்டனில் கொரோனா வைரஸ் தொற்று தொடங்கிய காலத்தில் இருந்தே இந்த மருந்தைப் பயன்படுத்தியிருந்தால் 5 ஆயிரம் உயிர்களைப் பாதுகாத்திருக்க முடியும்.

கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு இந்த மருந்து மிகவும் உதவும். இதுவரை கோவிட் நோயாளிகளின் இறப்பு விகிதத்தைக் குறைப்பதாக கண்டறியப்பட்ட மருந்து இது ஒன்றே. இது பெரிய அளவில் இறப்பைக் குறைக்கிறது. என்று வல்லுநர் குழு தெரிவித்துள்ளது.

ஆனால் இங்கு ஒரு விஷயத்தை நாம் கவனிக்க வேண்டியுள்ளது. இதற்கு முன், மலேரியா காய்ச்சலுக்கு வழங்கக்கூடிய ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரை கரோனா நோயாளிகள் உயிரைக் காக்கும் என்று அவசர கதியில் அதிபர் ட்ரம்ப் அறிவிக்க ஏராளமான நாடுகளும் அதை கரோனா நோயாளிக்களுக்கு பரிந்துரைத்தன.

ஆனால் முழுமையான ஆய்வு நடந்து முடியும் முன்பே இந்த ஆலோசனை முன்வைக்கப்பட்டு நோயாளிகளுக்கு பரிசோதிக்கப்பட்டது. ஆனால், ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளை கரோனா நோயாளிகளுக்கு வழங்கும் போது அவர்களுக்கு மாரடைப்பு நோய் ஏற்பட்டு உயிரிழப்பு இன்னும் தீவிரமாகும் ஆபத்தான சூழல் இருப்பதாக அமெரிக்க மருத்துவர்கள் எச்சரித்தபின் அதன் பயன்பாடு அமெரிக்காவில் குறைந்துள்ளது.

இந்தியாவில் கூட ஹைட்ராக்ஸ்குளோரோகுயின் மாத்திரைகளை பலரும் வாங்கி இருப்பு வைக்கத் தொடங்கினார். அவ்வாறு வாங்கி இருப்பு வைக்காதீர்கள், உண்மையில் அந்த மருந்து யாருக்கு கிடைக்கவேண்டுமோ அவர்களுக்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு பற்றாக்குறை ஏற்படும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதும் நினைவுகூரத்தக்கது.

அதேபோன்ற நிலைமைதான் இப்போது டெக்ஸாமெதாசோன் மருந்துக்கும் ஏற்படலாம். ஏனென்றால், லண்டன் மருத்துவர்கள் ஒரு குழு, ஒரு குறிப்பிட்ட நோயாளிகளுக்கு டெக்ஸாமெதாசோன் மருந்தை செலுத்திப் பார்த்ததில் அவர்களுக்கு பயன் அளித்துள்ளது. இறப்பு விகிதத்தை 41 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாகக் குறைந்துள்ளது.

1592536280756.png

லண்டன் மருத்துவர்கள் கூற்றில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், ஆக்ஸிஜன் தேவையில் இருக்கும் கரோனா நோயாளிகள், வென்டிலேட்டர் உதவியில் இருக்கும் ஆபத்தான கரோனா நோயாளிகளின் உயிரைக் காக்க டெக்ஸாமெதாசோன் பயன்பட்டுள்ளது. ஆனால், நோயாளிகளின் தன்மை, அவர்களின் உடல்நிலை, அவர்களுக்கு நீண்டகால நோய்கள்(கோமார்பிடிடிஸ்) இருக்கிறதா என்ற எந்த விவரமும் இதுவரை வெளியிடவில்லை.

ஆகவே, டெக்ஸாமெதாசோன் மருந்தை நாம் கண்ணை மூடிக்கொண்டு புகழ்வதும், அதை பயன்படுத்த பரிந்துரைப்பதும் ஆபத்தானதுதான். ஏனெனில் ஸ்டீராய்ட் மருந்துகளுக்கேயுரிய பக்க விளைவுகள் எப்போதும் உண்டு.

இந்த டெக்ஸாமெதாசோன் இந்திய சூழலுக்கு ஏற்றார்போல், இந்திய கரோனா நோயாளிகளுக்கு அப்படியே பரிந்துரைக்கவோ அல்லது கரோனா நோயாளிகள் உயிரைக்காக்கும் ஆபத்பாந்தவன் என்றோ வர்ணிக்க முடியாது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலும் டெக்ஸாமெதாசோன் மருந்தை இந்தியச் சூழலுக்கும், இந்திய கரோனா நோயாளிகளுக்கும் பரிந்துரைக்கும் போது மிகுந்த எச்சரிக்கையுடன், போதுமான ஆய்வுகள் இன்றி பரி்ந்துரைப்பது உகந்தது அல்ல என்று எச்சரி்க்கை செய்துள்ளது.

ஐசிஎம்ஆர் அமைப்பின் மூத்த மருத்துவ வல்லுநர் ஒருவர் கூறுகையில் “டெக்ஸாமெதாசோன் மருந்து என்பது ஸ்டீராய்டு வகை மருந்தாகும். லண்டன் மருத்துவர்கள் குழுவினர் பரிந்துரைப்பதை அப்படியே இந்திய சூழலுக்கு பொருத்திப்பார்க்க முடியாது.

டெக்ஸாமெதாசோன் மருந்தை இன்னும் கோமார்பிடிட்டிஸ் எனச் சொல்லப்படும் நீண்டகால நோய்கள் இருக்கும் ரத்தக்கொதிப்பு, நீரிழிவு நோய், நுரையீரல் சுவாசக் கோளாறு, குழந்தைகள் ஆகியோருக்கு செலுத்திப் பார்க்கவில்லை. அவ்வாறு செலுத்துவதும் சவாலானதுதான்.

முழுமையான ஆய்வுகள் தெரியாமல் அதைப் பற்றி நாம் கூறவதும் கடினம். குறிப்பாக லண்டன் மருத்துவர்கள் எந்தெந்த நோயாளிகளுக்கு இதைப் பயன்படுத்தினார்கள், அந்த நோயாளின் உடல்கூறு என்ன என்ற என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.

1592536328756.jpg

கோமார்பிடிட்டிஸ் நோயாளிகள் அதாவது தைராய்டு, அல்சர், மனஅழுத்தம், நீரிழவு, ரத்தஅழுத்தம், நுரையீரல் நோய், தசைக்கோளாறு போன்ற நோய்கள் இருக்கும் கரோனா நோயாளிகள் எத்தனை பேர் உயிரை டெக்சாமெத்தோசோன் மருந்து காக்கும் என்றெல்லாம் இப்போது கூற முடியாது.

இந்தியாவில் கரோனாவில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலும் கோ-மார்பிடிட்டிஸ் எனச் சொல்லப்படும் நீண்டகால நோய்கள் இருப்பவர்களே இறந்துள்ளார்கள். ஆதலால், டெக்ஸாமெதாசோன் மருந்தை உடனடியாக பரிந்துரைப்பதில் மிகுந்த எச்சரிக்கை தேவை” எனத் தெரிவித்தார்

சிஎஸ்ஐஆர் இயக்குநர் மருத்துவர் சேகர் மாண்டே கூறுகையில் “டெக்ஸாமெதாசோன் மருந்து மிகவும் பழமையான ஸ்டீராய்டு மருந்து. லண்டன் மருத்துவர்கள் குழுவினர் சொல்வதுபோல் கடைசிக்கட்டத்தில் இருக்கும் கரோனா நோயாளிகள் உயிரைக்காக்கும் என்பது இந்தியச் சூழலுக்கு பொருந்துமா என்பது தெரியாது. அந்த ஆய்வின் முழுமையான தகவல் வந்தபின்புதான் அதை பயன்படுத்துவது குறித்து பரிந்துரைக்கலாம். பல மருத்துவர்கள் உலகளவில் இதை கரோனா நோயாளிகளுக்கு இதை முன்பு பரிந்துரைத்துள்ளதாகக் கூறப்படுகிறது

இந்த டெக்ஸாமெதாசோன் மருந்து மிகவும் மலிவான மருந்து என்பதால், கரோனா நோயாளிகள் சுயமாக எடுத்துக்கொள்வது மிகவும் ஆபத்தானது. கண்டிப்பாக அவ்வாறு செய்வது கூடாது, மருத்துவர்களின் ஆலோசனையின்படி, நோயாளிகளின் உடல்நிலை அறிந்தபின் அவர்கள் பரி்ந்துரைத்தால் மட்டுமே எடுக்கலாம். இல்லாவிட்டால் சிலநேரத்தில் உயிருக்கே ஆபத்தாக மாறிவிடும்” எனத் தெரிவித்தார்

உலக சுகாதார அமைப்பும் கூட இதே கருத்தைத்தான் முன்மொழிந்துள்ளது. அந்த அமைப்பின் தலைமை மருத்துவர் மைக்கேல் ரேயான் கூறுகையில் “டெக்ஸாமெதாசோன் மருந்து கரோனா நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக இருக்கிறது என்ற செய்தி மகிழ்ச்சியளித்தாலும் அது குறித்த முழுமையான ஆய்வுகள் தேவைப்படுகிறது.

இப்போது கிடைத்திருப்பது முதன்மை விவரங்கள்தான், கரோனா நோயாளிகள் ழுழுமைக்கும் எந்த அளவுக்கு டெக்சாமெத்தோசோன் மருந்து தீவிரமான பயனை அளிக்கிறது என்பதற்கு நீண்ட ஆய்வு அவசியம். உலக சுகாதார அமைப்பின் மருத்துவ வல்லுநர்கள் குழுமுழுமையாக இதை ஆய்வு செய்து ஆலோசித்து, உலகநாடுகளுக்கு பரிந்துரைக்கும்” எனத் தெரிவித்தார்

1592536359756.jpg

டெக்சாமெத்தோசோன் மருந்தை உட்கொண்டால் வரும் பாதிப்பு?

டெக்ஸாமெதாசோன் ஸ்டீராய்ட் மருந்தை மருத்துவர்கள் ஆலோசனைப்படி இல்லாமல் சுயமாக எடுத்துக்கொண்டால் சிலரின் உடலுக்கு பெரும் தீங்கு ஏற்படும், உயிரிழப்பும் கூட ஏற்படும். உடல் பருமன், இன்சோம்னியா, மனஅழுத்தம், திடீர் ரத்த அழுத்தம் உயர்வு, தொற்றுநோய் அதிகரிப்பு, வாந்தி, குழப்பமான மனநிலை, தலைவலி உள்ளிட்ட பல உபாதைகள் நேரலாம்.

ஆதலால் டெக்ஸாமெதாசோன் மருந்து கரோனா நோயாளிகளின் உயிரைக் காக்கும் மருந்து என்று முழுமையாகக் கூறிவிடுதல் முடியாது. அதிலும் இந்தியாவில் உள்ள கரோனா நோயாளிகளுக்கு எந்த அளவுக்கு பயன் அளிக்கும் என்பதற்கு முழுமையான தரவுகள் இல்லை.

வறண்டிருக்கும் நிலத்தில் மழைத்துளி விழுந்ததுபோல், கரோனா பீதியில் இருக்கும் மக்களுக்கு டெக்ஸாமெதாசோன் மருந்தின் செய்தி ஆறுதலாக இருக்குமே தவிர தீர்வாக இருக்காது. இன்னும் ஆழமான ஆய்வுகளுக்குபின்புதான் மருத்துவர்கள் பரிந்துரைப்பதற்கு சாத்தியம் உண்டு

https://www.hindutamil.in/news/india/560101-covid-19-what-is-dexamethasone-13.html

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டெக்ஸாமெதாசோன் மாத்திரைகளை அதிகம் உற்பத்தி செய்ய வேண்டும் - உலக சுகாதார அமைப்பு

the-next-challenge-is-to-increase-production-and-rapidly-and-equitably-distribute-dexamethasone  

ஆபத்தான கட்டத்தில் உள்ள கரோனா நோயாளிகளின் உயிரை காப்பாற்றும் திறன் கொண்ட டெக்ஸாமெதாசோன் மாத்திரைகளை அதிகம் உற்பத்தி செய்ய வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 91,00,994 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 4 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். 49 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர். தொற்று மற்றும் இறப்பு எண்ணிக்கையில் தொடர்ந்து அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது

இந்நிலையில் டெக்ஸாமெதாசோன் ஸ்டெராய்ட் மாத்திரைகள் சுவாசக் கருவி உதவியுடன் இருக்கும் நோயாளிகளில் 35% பேரையும் கூடுதல் பிராணவாயு தேவைப்படும் கரோனா நோயாளிகளில் 20% பேர் மரணங்களைத் தடுத்துள்ளதாக இங்கிலாந்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் கூறியிருந்தனர்.

இந்த நிலையில் டெக்ஸாமெதாசோன் மாத்திரைகளின் உற்பத்தி அதிகரிக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கெப்ரியேசஸ் கூறும்போது, “ஸ்டெராய்ட் மாத்திரையான டெக்ஸாமெதாசோன் மாத்திரைகள் ஆபத்தான நிலையில் உள்ள கரோனா நோயாளிகளின் உயிரை காப்பாற்று திறன் கொண்டுள்ளது. இம்மாத்திரை அதிகம் உற்பத்தி செய்து உலக முழுவதும் கொண்டு செல்வதே நமது அடுத்தக் கட்ட சவாலாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கரோனா வைரஸ் வேகமாகப் பரவுகிறது என்றும், ஊரடங்குத் தளர்வுகளை உலக நாடுகள் கவனமாகக் கையாள வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தது.

கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக உலக நாடுகள் கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து விடுபட முடியாமல் திணறி வருகின்றன. இன்னும் பல நாடுகளில் ஊரடங்கு, எல்லை மூடல் ஆகியவை தொடர்கின்றன. இந்த நிலையில் கரோனா வைரஸுக்கு தடுப்பூசி இதுவரை கண்டுபிடிக்கப்படாததால் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவது உலக நாடுகளின் தலைவர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும் சவாலாக உள்ளது.

https://www.hindutamil.in/news/world/560768-the-next-challenge-is-to-increase-production-and-rapidly-and-equitably-distribute-dexamethasone-1.html

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.