Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் வாக்கு மோசடிக்கு முயற்சியா? வெளிக்கிளம்பும் குற்றச்சாட்டுக்களும் அதற்கான வலுவான காரணங்களும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் வாக்கு மோசடிக்கு முயற்சியா? வெளிக்கிளம்பும் குற்றச்சாட்டுக்களும் அதற்கான வலுவான காரணங்களும்

August 2, 2020
  • தாயகன்

லங்கையின் 16 ஆவது பாராளுமன்றத்துக்கான தேர்தல் நடைபெற இன்னும் இரண்டு தினங்களே உள்ளன. கடந்த ஒரு மாத காலமாக மக்களின் வாக்குகளையும் பாராளுமன்றக் கதிரைகளையும் இலக்கு வைத்து நடத்தப்பட்ட இனவாத,மதவாத,கீழ்த்தரமான, அருவருக்கத்தக்க பிரசாரங்கள் இன்றுடன் முடிவுக்கு வந்துவிட்டன. இந்த ஒருமாதமும் வேட்பாளர்களால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் ,எதிர்காலத் திட்டங்கள்,மக்கள்சேவைகள், தொடர்பில் நன்றாக சிந்தித்து தமது வாக்கை யாருக்கு வழங்குவது என்பது தொடர்பில் முடிவெடுக்கவே வாக்காளர்களாகிய மக்களுக்கு இந்த இருநாள் இடைவெளி வழங்கப்பட்டுள்ளது.

000-2-1024x640.jpgஆனால் தமது வாக்குகள் யாருக்கு என்பதை மக்கள் தீர்மானித்தாலும் வேட்பாளர்களின் வெற்றியை தீர்மானிக்கும் வகையிலான ”மறைமுக கரங்கள்” குறிப்பாக வடக்கு,கிழக்கில் அதிலும் குறிப்பாக வடக்கில் அதிகார சக்தியினால் களமிறக்கப்பட்டுள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தமிழர் பகுதியின் தேர்தல் முடிவுகளில் எதிர்பாராத,விரும்பப்படாத, நியாயத்துக்கு முரணான, மக்கள் விரோதமான வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கான அல்லது வெற்றி பெற வைப்பதற்கான சூழலை கட்டியம் கூறி நிற்கின்றன.

 

2015 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலை போன்று இம்முறை தேர்தலிலும் மோசடியான, பிழையான சம்பவங்கள் நடைபெறலாம் என்று வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமாக க.வி.விக்னேஸ்வரனே முதலில் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டார். இந்த குழறுபடிக்காகவே அன்று மோசடியான,பிழையான சம்பவங்களுக்கு துணைபோனதாகக் குற்றஞ்சாட்டப்படும் அப்போது பிரதித்தேர்தல் ஆணை யாளராகவிருந்த மொகமட் தற்போது இளைப்பாறிய நிலையில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு யாழ்.தேர்தல் மாவட்டத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார் என்று அவர் தனது எச்சரிக்கைக்கு காரணம் கூறியிருந்தார்.

 

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமான விக்னேஸ்வரன் தெரிவித்த 2015 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் வாக்கு மோசடி சம்பவம் பொய்யானதல்லவென்றே பல தமிழ் அரசியல்வாதிகளினாலும் அப்போதும் இப்போதும் தெரிவிக்கப்படுகின்றது. 2015 ஆம் ஆண்டு யாழ்.தேர்தல் மாவட்டத்தில் நடந்த பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் சில பிரச்சினைகள் ஏற்பட்டன. தோல்வியடைந்த ஒரு வேட்பாளர் அப்போது அதிகாரத்திலிருந்து அரசின் தேவைக்காக மோசடியான முறையில் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டதாக அப்போது எதிர்ப்புக்கள் வெளிக்கிளம்பின. முக்கியமாக தேர்தல் முடிவுகள் முழுநாளும் தாமதித்து மறுநாள் பிற்பகலே வெளியிடப்பட்டதுடன் பின்தங்கிய வெற்றி நிலையிலிருந்த குறிப்பிட்ட வேட்பாளர் திடீரென முன்னிலைக்கு கொண்டுவரப்பட்டு அரசின் தேவைக்காகவும் கட்சித்தலைமையின் தேவைக்காகவும் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன. சம்பந்தப்பட்ட வேட்பாளரின் கட்சியிலிருந்து கூட இந்தத் தகவல்களும் எதிர்ப்புக்களும் வெளிப்படுத்தப்பட்டன .

 

இவ்வாறான வாக்கு எண்ணிக்கை மோசடியில் அந்த நேரத்தில் தேர்தல்கள் பிரதி ஆணையாளராகவிருந்த மொகமட் என்பவர் மீதே பல தரப்பினராலும் விரல் நீட்டப்பட்டது.ஏனெனில் அந்த தேர்தலின் போது தேர்தல்கள் பிரதி ஆணை யாளராகவிருந்த மொகமட் விசேடமாக யாழ்ப்பாணத்துக்கு அரசினால் அனுப்பி வைக்கப்பட்டிருந்தார். வழக்கமாக தேர்தல்கள் ஆணையாளரோ பிரதி ஆணையாளரோ அவ்வாறு எந்த இடத்துக்கும் செல்வதில்லை. எனினும் வாக்கு எண்ணிக்கையில் அரசின் ஆதரவோடு, வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் தோல்விகண்ட வேட்பாளர் ஒருவர் வெற்றி பெற வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டபோதும் இந்த மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள் எவரும் நீதிமன்றத்தை நாடாததால் குற்றச்சாட்டுக்கள் உறுதிப்படுத்தப்படவில்லை. இது தொடர்பில் அரசும் அக்கறை காட்டவில்லை.

 

இவ்வாறான நிலையில்தான் இந்த மோசடியுடன் தொடர்புபட்டவராக சில தரப்புக்களினால் குற்றம் சாட்டப்படும் மொகமட் தற்போது ஓய்வு பெற்றுவிட்ட நிலையில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு தேர்தல் பணிகளுக்காக யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையிலேயே வடக்கில் மீண்டும் மோசடியான ஒரு தெரிவுக்கு அரசு முயற்சிக்கின்றதென்ற கடும் எதிர்ப்புக்கள் வெளிக்கிளம்பின. 2015 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தேர்தலில் மோசடி நடைபெற்றதற்கு முக்கியமாக இருந்த நபரான மொகமட்டை திரும்பவும் இங்கு அனுப்ப வேண்டிய அவசியம் என்ன? அதுவும் அவர் இளைப்பாறிய பின்னர் அவரை தேர்ந்தெடுத்ததன் காரணம் என்ன? தேர்தல் திணைக்களத்தில் உள்ள யாராவது ஒரு சிரேஸ்ட தமிழ் அதிகாரியை இங்கு அனுப்பாமல் மொகமட்டை இங்கு அனுப்ப வேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்விகளும் எழுப்பப்பட்டன.

அத்துடன் யாழ்ப்பாணத்திற்கு மட்டும்தான் இவ்வாறு அதிகாரி ஒருவரை அனுப்ப முயற்சிக்கின்றனர். ஏனைய மாவட்டங்களுக்கு இது போன்ற அதிகாரிகள் எவரையும் தேர்தல் ஆணைக்குழு அனுப்பவில்லை.எனவே இதற்கு பின்னால் அரசாங்கம் எவ்வகையான எண்ணங்களை வைத்திருக்கின்றது என்பது தொடர்பில் சந்தேகங்கள் எழுந்துள்ளன. ஜனநாயகத்திற்கு எதிரான ஒரு செயற்பாட்டில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் நடந்த வாக்கு எண்ணிக்கை மோசடியைப் போன்று இம்முறை தேர்தலிலும் மோசடி சம்பவங்கள் நடைபெறலாம் என்ற சந்தேகங்கள் வடக்கு அரசியல் கட்சிகளினாலும் அரசியல் தலைவர்களினாலும் அண்மையில் முன்வைக்கப்பட்டன.

இது ஒருபுறமிருக்க ஏ 9 வீதியிலே சுமார் 20 வீதித் தடைகள் இராணுவத்தினரால் போடப்பட்டிருப்பது எதற்காக என்று விளங்கவில்லை. கொரோனாவைக் காட்டி இவ்வாறான செயற்பாடுகளில் அரசாங்கம் ஈடுபடுவது வரும் தேர்தல் காலத்தில் மக்களை அச்சுறுத்தி தேர்தல் வாக்களிப்பு நிலையங்களுக்கு போகாமல் வைப்பதற்காகவா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகின்றதென்ற கருத்துக்களும் வடக்கில் முன்வைக்கப்படுகின்றன.

பாதுகாப்பை ஒட்டி தேர்தல் காலத்திலே இராணுவத்தினரை வெளிக் கொண்டு வருவது ஜனநாயகத்திற்கு எதிரான ஒரு செயல் . இம் முறை 5 ஆம் திகதி தேர்தலை நடத்தி 6ஆம் திகதியே வாக்கெண்ணுதல் நடைபெறவிருக்கின்றது. இரு நாட்களுக்கும் இடையில் இரவிலே வாக்குப் பெட்டிகளுக்கு என்ன நடக்குமோ என்று ஒரு சந்தேக நிலை எழுந்துள்ளது. இவற்றிற்கு இராணுவத்தினரைப் பாதுகாப்புக்கு அழைத்தால் கட்டாயம் ஜனநாயகத்திற்கு எதிரான நடவடிக்கைகள் நடைபெறும் என்று எண்ண இடமுண்டு. ஆகவே ஒரு காரணமும் இல்லாமல் வடக்கு மாகாணத்தில் மட்டும் இராணுவத்தினரை இறக்கியிருப்பது எதற்காக ?

இராணுவத்தினரை வட மாகாணத்திற்குள் இதுவரை அழைத்திருப்பது கொரோனா காரணமாக என்று கூறப்பட்டாலும் இராணுவத்தினர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. கொரோனாவைக் காட்டி இவ்வாறான செயற்பாடுகளில் அரசாங்கம் ஈடுபடுவது வரும் தேர்தல் காலத்தில் மக்களை அச்சுறுத்தி தேர்தலுக்குப் போகாமல் வைத்துவிட்டு பின்னர் கொரோனாவிற்குப் பயந்தே மக்கள் வாக்களிக்க செல்லவில்லையென்ற காரணம் கூறப்படலாமெனவும் சந்தேகங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன.

மைத்திரி -ரணில் அரசின்போது அவர்கள் வடக்கு வேட்பாளர் ஒருவரின் வெற்றியை விரும்பியிருக்கலாம் .ஆனால் தற்போது ராஜபக்சக்கள் தலைமையிலான அரசு அமையும் சூழல் உள்ள நிலையில் அவ்வாறு வடக்கிலிருந்து தமக்கு தேவையான ஒரு வேட்பாளரை தெரிவு செய்ய வேண்டிய தேவை ராஜபக்சக்கள் அரசுக்கு ஏன் எழுகின்றது என்ற கேள்வி எழுவது நியாயமானது. ஆனால் 2015ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் மைத்திரி -ரணில் அரசுக்கிருந்த அதே தேவை தற்போது அமையுமென எதிர்பார்க்கப்படும் ராஜபக்சக்கள் அரசுக்கும் இருக்கின்றது என்பதே உண்மை.

2015 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலின்போது மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகவும் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகவும் இருந்தனர். அப்போது அவர்கள் தமக்கு தேவையான ஒருவரை, சர்வதேசத்திடமிருந்து தமது அரசை பாதுகாக்கக்கூடிய ஒருவரை தமிழ் மக்களை பிரதிநிதிதித்துவப்படுத்தும் கட்சி ஒன்றிலிருந்து தெரிவு செய்ய விரும்பியிருந்தனர். அவ்வாறு தெரிவு செய்யப்பட்டவர் மைத்திரி -ரணில் விரும்பியதைப்போலவே சர்வதேசத்திடம் அவர்களின் அரசை பிணை எடுத்ததுடன் மைத்திரி -ரணில் மோதலின்போது ரணிலின் பிரதமர் பதவியையும் அரசையும் பாதுகாத்துக்கொடுத்து தனது நன்றிக்கடனை தீர்த்திருந்தார். அதே தேவைக்காவே ராஜபக்சக்கள் அரசும் குறிப்பிட்ட அந்த தமிழ் அரசியல் கட்சியின் வேட்பாளர் வெற்றிபெற வேண்டுமென விரும்புகின்றது . எதிர்காலத்தில் ராஜபக்சக்கள் அரசாங்கம் சர்வதேச பொறியில் சிக்குவதற்கான வாய்ப்புள்ளது.

நல்லாட்சி அரசாங்கம் சர்வதேச பொறியிலிருந்த தப்பிக்க, அந்த தமிழ் கட்சி வழங்கிய ஒத்துழைப்பும் அந்த உறுப்பினர் காட்டிய அர்ப்பணிப்பும் உதவியதைப் போல, எதிர்காலத்தில் ராஜபக்சக்கள் அரசும் ,அவரது கட்சியினரும் கூட்டமைப்பின் உதவியை பெற்றுக்கொள்ள விரும்புவதாலேயே வாக்கு மோசடிகளுக்கு வடக்கில் குறிப்பாக யாழ் மாவட்டத்தில் அதிக வாய்ப்புக்கள் இருப்பதாகக் கூறப்படுகின்றது.

இலங்கையின் பங்குபற்றுதல் இல்லாமல் இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை நடக்கவிருந்த நிலையில், பொருளாதார தடைகள், பயணத்தடைகள் விதிக்கப்படவிருந்த நிலையில், நல்லாட்சி அரசாங்கம் எப்படி இலங்கையை பாதுகாத்தது என்பதை பற்றி அப்போதைய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அண்மையில் பத்திரிகை பேட்டியில் தெரிவித்திருந்தார்.குறிப்பிட்ட அந்த தமிழ் கட்சியின் ஒத்துழைப்பில்லாமல் சர்வதேச நெருக்கடிகளிலிருந்து நல்லாட்சி அரசு தப்பித்திருக்கவே முடியாது என்பதை அந்த பேட்டியிலிருந்து அறிந்து கொள்ள முடியும் .எனவே , ராஜபக்சக்கள் அரசும் சர்வதேச நெருக்கடியிருந்து தப்பிக்க , அந்தக் கட்சியினதும் அந்த வேட்பாளரினதும் வெற்றி அவசியமாக உள்ளது. அதனாலேயே மொகமட் போன்றவர்கள் மீண்டும் தேர்தல் பணிக்கு தெரிவு செய்யப்படுகின்றனர் எனவும் கூறப்படுகின்றது.

இதனை உறுதிப்படுத்தப்பும் விதமாகவே ”கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது 2 தடவைகள் ஆதரவு கோரி ராஜபக்சக்கள் என்னை தொடர்பு கொண்டனர். நான் கொடுத்த பதிலின் மூலம் அவர்கள் என்னை அறிந்திருப்பார்கள்.அதனால்தான் குறிப்பிட்ட அந்த தமிழ் கட்சியுடன் இணைந்து அரசாங்கம் செயற்படவுள்ளது. அந்த தமிழ் கட்சிக்கு அமைச்சு பதவியை கொடுத்து தம்முடன் வைத்திருக்க பெரமுன விரும்புகிறது. அதன் எதிரொலிதான் அண்மையில் அந்த தமிழ் கட்சியை சேர்ந்த முக்கியஸ்தர் அமைச்சு பதவியை பற்றி தெரிவித்த கருத்து” என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசியக்கூட்டணியின் தலைவருமான விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 5ஆம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்றத்துக்கான தேர்தலில் வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ்-கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் வாக்களிப்பில் குழப்பங்கள், தடைகள், வாக்கு எண்ணிக்கை மோசடிகள் இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக இருப்பதாகக் கருதப்படுகின்றது. இவ்வாறான சந்தேகங்களும் குற்றச்சாட்டுக்களும் வெளிக்கிளம்பியுள்ள நிலையில்தான் 2015 ஆம் ஆண்டில் பிரதித்தேர்தல் ஆணை யாளராகவிருந்து ஓய்வு பெற்ற மொகமட் தற்போது மீண்டும் பணிக்கு அழைக்கப்பட்ட நிலையில் அவர் அதனை ஏற்பதற்கு பின்னடிப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. எனினும் அவரை மீண்டும் இணைத்து யாழ் மாவட்டத்துக்கு அனுப்ப சிலர் தீவிரம் காட்டி வருவதாகவும் தெரிய வருகின்றது.

வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை யாழ்-கிளிநொச்சி இணைந்த தேர்தல் மாவட்டம்,வன்னி தேர்தல் மாவட்டம் என இரண்டு தேர்தல் மாவட்டங்களே உள்ளன. இதில் யாழ்-கிளிநொச்சி மாவட்டத்தில் 7 ஆசனங்களுக்காக 19 அரசியல் கட்சிகள் , 14 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 330 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த மாவட்டத்தில் 571,848 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.வன்னி மாவட்டத்தில் 6 ஆசனங்களுக்காக 17 அரசியல் கட்சிகள் , 28 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 405 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த மாவட்டத்தில் 287,024 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.இந்த இரு மாவட்டங்களுக்குமான 13 ஆசனங்களை தமதாக்கிக் கொள்வதற்காகவே 735 வேட்பாளர்கள், 858872 வாக்காளர்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காக தமது பிரசாரங்களை முடித்துள்ள நிலையிலேயே தற்போது வாக்களிப்பு குழப்ப நிலை, வாக்கு எண்ணிக்கை மோசடிகள் இடம்பெறலாமென்ற குற்றச்சாட்டுக்களும் சந்தேகங்களும் வெளிக்கிளம்பியுள்ளன.

எதிர்வரும் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத்துக்கான தேர்தலின்போது வெளிநாட்டுக்கண்காணிப்பாளர்கள் பணியில் ஈடுபடமாட்டார்கள் என்பதும் இந்த மோசடிகளுக்கு அதிக வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்து விடுமெனவும் அச்சம் தெரிவிக்கப்படுகின்றது.அத்துடன் தேர்தல் வன்முறைகளை வடக்கில் அதிகம் இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாகவும் உள்ளூர் கண்காணிப்பாளர்களால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனினும் தேர்தலில் எந்தவித மோசடிகளுக்கும் குழப்ப நிலைகளுக்கும் ஒருபோதும் இடமளிக்கப்படாது என தேர்தல்கள் ஆணைக்குழு உறுதியளித்துள்ளது. எனவே வழக்கம்போலவே இம்முறையும் வடக்கு மாகாண தேர்தல் களம் அனைவரினதும் கவனத்தையும் ஈர்க்கப் போகின்றது.
 

http://thinakkural.lk/article/59511

  • கருத்துக்கள உறவுகள்

மோசடிகளின் மூலம் தமது பங்காளிகளை இம்முறை உள்ளீர்க முயற்சி நடக்கும். மூன்று நான்காக வாக்குகள் பிரிபட்டு ஒரு புறமும் சுயேட்சைகள் ஊடாக மறுபுறமும்  கூத்தமைப்புக்குத் தேய்வுநிலை ஏற்பட்டு பறிபோனால் என்ன செய்வது எனவே எதிர்பார்க்கக்கூடியதே. 

  • கருத்துக்கள உறவுகள்

போன தேர்தலில்... கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர்,
75 கள்ள வாக்கு போட்டதாக, அண்மையில் தெரிவித்து இருந்தார்.
இந்த முறை எப்படியும்,  அவர் தனிய... 150 போடுவார் என்று எதிர் பார்க்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

கிராமங்கள் தோறும் ராணுவம்.மக்கள் என்ன தான் செய்வார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.