Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனா முன் அமெரிக்கா தோல்வி! 15 நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் – இந்தியா விலகல்; இலங்கைக்கு அடித்தது அதிஷ்டம்

Featured Replies

சீனா முன் அமெரிக்கா தோல்வி! 15 நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் – இந்தியா விலகல்; இலங்கைக்கு அடித்தது அதிஷ்டம்

  • அ.நிக்ஸன்

மெரிக்காவில் ஜோ பைடன் ஜனாதிபதியாக ஜனவரி மாதம் பதவியேற்கவுள்ள நிலையில், ஆசியான் நாடுகளை உள்ளடக்கிய பிராந்தியப் பொருளாதார ஒத்துழைப்பு கூட்டமைப்பு (Regional Comprehensive Economic Partnership) (RCEP) ஒப்பந்தத்தில் 15 நாடுகள் கைச்சாத்திட்டுள்ளன. உலகின் 39சதவீத பொருளாதார கட்டமைப்புகளை இந்த நாடுகள் உள்ளடக்கியுள்ளதால் உலகின் மிகப் பெரிய வர்த்தக ஒப்பந்தமாக மலேமெயில் என்ற மலேசிய ஊடகம் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளது.

01-8-7.jpgஆசியான் அமைப்பில் அங்கம் வகிக்கும் பத்து தென்கிழக்கு ஆசிய நாடுகளையும் தென் கொரியா, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளையும் உள்ளடக்கியே இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. உலகளாவிய மக்கள் தொகையில் ஏறத்தாள மூன்றில் ஒரு பகுதியையும் அதன் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 30சதவீதத்தை இந்த ஒப்பந்தம் உள்ளடக்கியுள்ளது.

இந்த ஒப்பந்தம் வர்த்தக ஊக்குவிப்பு என்ற போர்வையில், படிப்படியாக கட்டணங்களை குறைக்கும், இந்தோ- பசுபிக் பிராந்தியப் பாதுகாப்பு வாதத்தை எதிர்த்து முதலீட்டை அதிகரிக்கும், பிராந்தியத்திற்குள் பொருட்களின் சுதந்திரமான இயக்கத்தை அனுமதிப்பது போன்ற செயற்பாடுகளே இந்த ஒப்பந்தத்தின் பிரதான நோக்கமென நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

2011 ஆண்டு ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டின் பொருளாதார அமைச்சர்கள் சீன மற்றும் ஜப்பானிய கூட்டுத் தொடர்பான பொருளாதார வழிமுறைகள் குறித்த விரிவான பேச்சு ஒன்றைத் தொடக்கி வைத்தனர். அதன் தொடர்ச்சியாகவே 2012ஆம் ஆண்டு கம்போடியாவில் நடைபெற்ற ஆசியான் உச்சி மாநாட்டில் RCEP எனப்படும் பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு கூட்டமைப்பு ஒப்பந்தத்திற்கான முதற்கட்ட பேச்சுகள் ஆரம்பிக்கப்பட்டன. எட்டு ஆண்டுகளின் பின்னர் நேற்று ஞாயிற்றுக்கிழமை 15 நாடுகளும் கைச்சாத்திட்டுள்ளன.

கோவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக வியட்னாம் தலைநகரில் வீடியோவில் நடத்தப்பட்ட மாநாட்டின் மூலமாக (Video Conference) இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. 15 நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள், செயலாளர்கள் உள்ளிட்ட துறைசார்ந்த நிபுணர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர். 2012ஆம் ஆண்டில் இருந்து 29 கூட்டங்கள் நடத்தப்பட்டு, இந்த ஒப்பந்தம் குறித்து விவாதிக்கப்பட்டிருந்தது. 29ஆவது கூட்டமே கோவிட் 19 நோய் பரவல் காரணமாக வீடியோ மாநாடாக நடைபெற்றது.

சென்ற ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை வீடியோ மாநாடாக நடைபெற்றது. பின்னர் மே மாதம் 15ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை வீடியோ மாநாடாக நடைபெற்றது. இதன் போது உடன்பட்டுக் கொண்ட விடயங்கள் அறிக்கைகளாகத் தயரிக்கப்பட்டு 15 நாடுகளும் இணக்கம் தெரிவித்த பின்னர், மீண்டும் யூன் மாதம் ஒப்பந்தம் பற்றிய மதிப்பீட்டு மாநாடு நடத்தப்பட்டது. ஓகஸ்ட் 27ஆம் திகதியும் மற்றுமொரு மீளாய்வு வீடியோ மாநாடு நடத்தப்பட்டது. அதன் பின்னரே நேற்று 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை 15 நாடுகளும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.

ஆனால் இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கைச்சாத்திடவில்லை. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தாய்லாந்தில் நடைபெற்ற இந்த ஒப்பந்தம் தொடர்பான 28ஆவது கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திரமோடி, இந்தியா தொடர்பாக முக்கியமான சில கோரிக்கைகளை முன்வைத்திருந்தார். ஆனால் அது பரிசீலிக்கப்படவில்லை. இதனாலேயே இந்த ஒப்பந்த்தில் கைச்சாத்திட முடியாதென இந்திய உட்துறை அமைச்சர் அமீத் ஷா தெரிவித்தார்.

இந்த ஒப்பந்தம் அதன் உண்மை நோக்கத்தைப் பிரதிபலிக்கவில்லை, இதன் விளைவு நியாயமானதாகவோ அல்லது சீரானதாகவோ இல்லை. இதில் இறக்குமதி உயர்வுக்கு எதிரான போதிய பாதுகாப்பு, சீனாவுடனான போதிய வேறுபாடு, அடிப்படை விதிகளை மீறுதல், சந்தையை அணுகுதல் மற்றும் கட்டணமில்லா தடைகள் குறித்து நம்பகமான உத்தரவாதங்கள் இல்லாதது போன்ற முக்கிய பிரச்னைகள் இருப்பதாக அமீத் ஷா புதுடில்லியில் நேற்று ஞாயிற்றுகிழமை மாலை செய்தியாளரிடம் கூறியுள்ளார்.

ஆனால் இந்தக் கூட்டமைப்பு ஒப்பந்தத்தில் இணைய இந்தியாவுக்காகக் கதவுகள் திறந்தே இருப்பதாக சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RCEP-Free-Trade-Agreement-1024x569.jpgஆனால் இந்த ஒப்பந்தத்தில் இணைவது குறித்து பரிசீலிக்கவே முடியாதென இந்திய உள்துறை அமைச்சர் அமீத் ஷா புதுடில்லியில் செய்தியாளர்களிடம் வலியுறுத்தியுள்ளார். இந்த ஒப்பந்தம் தொடர்பான ஐந்தாவது மாநாடு புதுடில்லியில் நடைபெற்றபோதே இந்திய நிலைப்பாடுகள் குறித்தும், சீனாவிடம் இருந்து வரக்கூடிய பாதுகாப்பற்ற தன்மைகள் பற்றியும் விளக்கமளிக்கப்பட்டதென்றும், ஆனாலும் இதில் அங்கம் வகிக்கும் நாடுகள் அதற்கு உரிய பதில் தரவில்லை என்றும், அவர் கவலை வெளியிட்டார்.

உலகப் பொருளாதாரத்தில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியை உள்ளடக்கிய பதினைந்து நாடுகள் உலகின் மிகப்பெரிய வர்த்தக முகாமை ஒன்றை உருவாக்கியுள்ளன. இந்த ஒப்பந்தம் பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கின் விரிவாக்கமாகக் கருதப்படுகிறது. டொனால்ட் ட்ரம், அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் 2017ஆம் ஆண்டு 12 நாடுகளை உள்ளட்கிய ஆசிய -பசுபிக் கூட்டாண்மை வர்த்தக ஒப்பந்ததில் இருந்து அமெரிக்காவை விலக்கினார். ஆனால் பராக் ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது, இந்த ஒப்பந்தத்தில் இணைந்து அதன் மூலமாக சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்று நம்பியிருந்தார்.

எனினும் டொனால்ட் ட்ரம் அந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகியதால், ஆசிய- பசுபிக் கூட்டாண்மை வர்த்தக ஒப்பந்தத்தில் சீனா கூடுதலாக ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது.

இந்தவொரு நிலையிலேயே 15 நாடுகள் உள்ளிட்ட பிராந்தியப் பொருளாதார ஒத்துழைப்பு கூட்டமைப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளமை, இந்தோ- பசுபிக் பிரந்தியத்தில், பொருளாதார ரீதியாக சீனாவின் பலம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவே அவதானிகள் கருதுகின்றனர்.

இந்த ஒப்பந்தம் கைச்சாத்தானமை, மேகங்களுக்கு மத்தியில் ஒளியையும் நம்பிக்கையையும் தருவதாக அமைந்துள்ளதென சீனப் பிரதமர் லி கெக்கியாங் கூறினார். திரு லி இந்த ஒப்பந்தத்தை பலதரப்பு மற்றும் சுதந்திர வர்த்தகத்தின் வெற்றி என்றும் வர்ணிக்கிறார்.

ஆரம்பத்தில் இந்தியாவும் இந்த ஒப்பந்தத்தில் இணைவதற்கான பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றியிருந்தது. ஆனால் ஒப்பந்தத்தின் பிரகாரம் குறைந்த கட்டணங்கள் உள்ளூர் உற்பத்தியாளர்களை பாதிக்கக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாகவே இந்தியா வெளியேறியிருக்க வேண்டும். ஆனால் இந்திய முதலீட்டாளர்கள், வர்த்தகர்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு வெளியிட்டதன் காரணமாகவே, ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாமல் வெளியேறியதாக இந்திய உள்துறை அமைச்சு காரணம் கற்பிக்கின்றது.

இருந்தாலும் இந்தியாவின் காரணத்தை ஜப்பான், அவுஸ்திரேலியா போன்ற நாடுகளே ஏற்கவில்லையென என்பிசி செய்திச் சேவை கூறுகின்றது. உலக பொருளாதாரத்தில் 49.5 டிரில்லியன் டாலர் இந்த ஒப்பந்த்தில் கைச்சாத்திட்ட 15 நாடுகளிடம் இருப்பதால், மிகப்பெரும் சக்தி வாய்ந்த குழுவாக RCEP எனப்படும் பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு கூட்டமைப்பு செயற்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆனால் இந்தியா இதில் இணைந்தால் மாத்திரமே அது சாத்தியமாகுனெ ஏபி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேவேளை அவுஸ்திரேலியா இந்த ஒப்பந்தத்தில் இணைந்து கொண்டதை சீனா வரவேற்றுள்ளது. 15 நாடுகளுக்கிடையிலான ஆசிய- பசிபிக் வர்த்தக ஒப்பந்தம் சீனாவோடு உறவை வலுப்படுத்த உதவும் என அவுஸ்ரேலியாவின் வர்த்தக அமைச்சர் சைமன் பர்மிங்கம் தெரிவித்துள்ளார். ஆசியான் எனப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கம் கையெழுத்திட்டுள்ள சீனா ஆதரவு பிராந்திய பொருளாதார கூட்டமைப்பு ஒப்பந்தம் என்று சீன ஊடகங்கள் வர்ணித்துள்ளன.

உலகின் மிகப்பெரிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தமாக இது மாறக்கூடும் எனவும் சீன ஊடகங்கள் விபரித்துள்ளன.

RCEP எனப்டும் பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு கூட்டமைப்பு ஒப்பந்தத்துடன் ஒப்பிடும்போது தற்போதுள்ள நாடுகளுக்கிடையேயான சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை (Free Trade Agreement) (FTA) எப்படிப் பாதுகாப்பது என்பது குறித்து ஆசிய வர்த்தக மையத்தைச் சேர்ந்த டெபோரா எல்ம்ஸ் கவலை வெளியிட்டுள்ளார்.

உலகளாவிய விநியோகச் சங்கிலிகளைக் கொண்ட வணிகங்கள் ஒரு FTA க்குள் கூட கட்டணங்களை எதிர்கொள்ளக்கூடும், ஏனெனில் அவற்றின் தயாரிப்புகளில் வேறு இடங்களில் தயாரிக்கப்படும் கூறுகள் உள்ளன. உதாரணமாக, இந்தோனேசியாவில் தயாரிக்கப்பட்ட ஒரு தயாரிப்புக்குப் பதிலாக , ஆஸ்திரேலிய பாகங்கள் உள்ளன, ஆசிய சுதந்திர வர்த்தக வலயத்தில் வேறு எங்கும் கட்டணங்களை எதிர்கொள்ளக்கூடும். RCEP எனப்படும் ஒப்பந்தத்தின் கீழ், எந்தவொரு உறுப்பு நாடுகளிடமிருந்தும் பாகங்கள் சமமாகவே கருதப்படும். ஆகவே இவை சிக்கலானது என்று அவர் வாதிடுகிறார். இந்தியா கைச்சாத்திட மறுத்தமைக்கான காரணத்தை அவர் நியாயப்படுத்துகின்றார் போலும்.

இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் சீன ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த குவாட் எனப்படும் வலையமைப்புக்குள் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், அவுஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளும் இணைந்து கூட்டுக் கடற்படை பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில், குவாட்டில் அங்கம் வகிக்கும் அவுஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள், இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டமை அமெரிக்க இந்திய நலன்களுக்குப் பாதகமானதென்றே கருதப்படுகின்றது. குறிப்பாக அமெரிக்க இராஜதந்திரத்திற்கு இது ஏமாற்றமாகவே அவதானிக்கப்படுகிறது.

அதேவேளை, இந்தோ-பசுபிக் பிராந்தியத்தை மையப்படுத்திய சீனாவின் பட்டுப்பாதைத் திட்டத்திற்கும் இது வலு சேர்க்கிறது. இந்த இடத்தில் அமெரிக்காவோடு சேர்ந்து நிற்கும் இந்தியா, ஜோ பைடன் நிர்வாகம் வர்த்தக ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. இந்தியத் தொழில் அதிபர்கள் இந்தக் கோரிக்கையை முன் வைத்துள்ளனர். இந்த நகர்வுகள் எல்லாமே இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் செல்லப்பிள்ளை போன்று இருக்கும் இலங்கைக்கு எந்தப் பக்கம் திருப்பினாலும் சிவீப் ரிக்கற் விழுந்ததுபோன்ற உணர்வுதான்.

 

https://thinakkural.lk/article/89516

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவின் மிகப் பலமான, மலிவான உற்பத்திக் கட்டமைப்புடன் போட்டிபோட முடியாமை காரணமாகவே இந்தியா இதில் சேரப் பின்னடித்தது.

மறைந்த இந்தியாவின் முன்னாள் சனாதிபதி அப்துல் கலாமின் கனவு என்றென்றைக்கும்/இப்போதைக்குச்  சாத்தியமில்லை என்பது தெளிவு.

😀

  • கருத்துக்கள உறவுகள்

சீன வர்த்தக ஒப்பந்தம் ஈழத் தமிழர்களுக்கு ஆபத்தானதா?

 
  • இந்தோ- பசுபிக் பிராந்தியக் கொதிநிலைக்குள் சுழியோட வேண்டிய தமிழ்த்தரப்பு, தேர்தல் அரசியலில் மாத்திரமே கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறது

– அ.நிக்ஸன்

சீனாவை மையப்படுத்தி 15 நாடுகளை உள்ளடக்கிய பிராந்திய பொருளாதார ஒத்துழைப்புக் கட்டமைப்பு ஒப்பந்தம் (Regional Comprehensive Economic Partnership) (RCEP) சென்ற சனிக்கிழமை கைச்சாத்திடப்பட்டுள்ள நிலையில், சென்ற புதன்கிழமை இந்தோ- பசுபிக் பிராந்திய பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட குவாட் கடற்படைப் பயிற்சியின் இரண்டாவது தொடர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

169881.pngஅமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய நான்கு நாடுகளும் இணைந்து மேற்கொண்டு வரும் இந்தப் பயிற்சியும் பாதுகாப்பு முன்னேற்பாடுகளும் சீனாவின் கடல் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்துவதே பிரதான நோக்கமாகும்.

ஆனால் RCEP எனப்படும் ஒப்பந்தத்தில் அவுஸ்திரேலியாவும் ஜப்பானும் கைச்சாத்திட்டுள்ள நிலையில், குவாட் பயிற்சியின் பிரதான நோக்கம் எவ்வாறு அமையும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இந்தோ- பசுபிக் பிராந்தியப் பாதுகாப்பு விவகாரங்களில் அவுஸ்திரேலியாவும் ஜப்பானும் தொடர்ந்தும் ஒத்துழைக்குமென இந்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்க புதுடில்லியில் செய்தியாளர்களிடம் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஆனாலும் அமெரிக்கா விலகியதையடுத்து ஆசிய பசுபிக் கூட்டாண்மை ஒப்பந்தம் (Trans Pacific Partnership) (TPP) 2017ஆம் ஆண்டு செயலிழந்தால், அவுஸ்திரேலியா மீது ஆத்திரமடைந்த சீனா, அவுஸ்திரேலியக் கப்பல்களுக்குத் தடைவித்தது. மறைமுகமாக பொருளாதாரத் தடைகளையும் ஏற்படுத்தியது. இந்தவொரு நிலையிலேயே சீனாவை மையப்படுத்திய, RCEP எனப்படும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள அவுஸ்திரேலியா, எந்தளவு தூரம் குவாட் கடற்படைப் படைப் பயிற்சியிலும் அதன் பின்னரான இந்தோ- பசுபிக் பாதுகாப்புச் செயற்பாடுகளிலும் அமெரிக்காவுடன் ஒத்துழைக்கும் என்ற கேள்விகள் எழாமலில்லை.

ஆனால் இந்த ஒப்பந்தத்தின் மூலம் தனித்துச் சீனா மாத்திரம் அனைத்து லாபங்ளையும் பெற்றுவிடக்கூடாது என்ற நோக்கில் அல்லது, பிராந்தியத்தில் சீனாவின் வர்த்தக நகர்வுகளை அவதானிப்பதற்காகவே அவுஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகளை ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுமாறு அமெரிக்கா வலியுறுத்திருக்கலாம் என்ற அவதானிப்புகளும் உண்டு. அப்படிப் பார்த்தால், சீனாவின் வர்த்தக நகர்வை அவதானிப்பதற்காக TPP எனப்படும் ஆசிய பசுபிக் கூட்டாண்மை ஒப்பந்தத்திற்குள் நுழைந்த அமெரிக்கா பின்னர் ஏன் விலகியது என்ற கேள்வியும் உண்டு.

அவ்வாறு விலகியமை டொனால்ட் ட்ரம்ப்பின் தனிப்பட்ட முயற்சியாக இருக்கலாம். ஏனெனில் பராக் ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது செய்யப்பட்ட ஒப்பந்தம் என்பதால், டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவை அந்த ஒப்பந்தத்தில் இருந்து வலிக்கியிருக்கலாம். ஆகவே ஜனவரி மாதம் ஜோ பைடன் நிர்வாகம் பதவியேற்றதும் அமெரிக்க அணுகுமுறைகளில் மாற்றங்கள் ஏற்பட்டுப் பொருளாதார ரீதியான செயற்பாடுகளில் மாத்திரம் சீனாவை மையப்படுத்திய கூட்டு ஒப்பந்தங்களில் தனது நட்பு நாடுகள் இணைவதற்கு சம்மதிக்கக் கூடிய வாய்ப்புகள் வரலாம்.

அப்படியானால் RCEP எனப்படும் பிராந்திய பொருளாதார ஒத்துழைப்புக் கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட மறுத்த இந்தியா இணையக்கூடிய வாய்ப்புகள் உருவாகலாம். இந்தியா இணையும் என்று உறுப்பு நாடுகள் எதிர்ப்பார்ப்பதாக மலேமெயில் என்ற மலேசிய ஊடகம் தெரிவித்துள்ளது.

ஆகவே இந்தோ- பசுபிக் பிராந்திய பொருளாதாரச் செயற்பாடுகளில் சீனாவின் நகர்வுகளுக்கு முன்னால் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளுக்கும், இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கும் நின்று பிடிக்க முடியாதவொரு நிலமையைத்தான் RCEP எனப்படும் ஒப்பந்தம் வெளிப்படுத்தியிருக்கிறதென வாதிடலாம்.

வாதத்தின்படி இதுதான் உண்மைக் காரணம் என்றால், இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இலங்கையின் கொழும்புத் துறைமுகக் கிழக்கு முனையக் கொள்கலன் இறங்குதுறையை அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்தம் ஒன்றிலும் இந்தியா, ஜப்பான், ஆகிய நாடுகள் இலங்கையுடன் இணைந்து கைச்சாத்திட்டதன் எதிர்காலப் பயன்பாடு என்ன என்று மற்றுமொரு கேள்வியும் எழுகின்றது.

ஏனெனில் சீனாவை மையப்படுத்திய RCEP எனப்படும் இந்த ஒப்பந்தம் பற்றிய உரையாடல் 2012ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுத் தொடர்ச்சியாக 2020ஆம் நவம்பர் மாதம் 15ஆம் திகதி கைச்சாத்திடப்படும் வரை நடைபெற்றிருக்கிறது. இந்தக்காலப் பகுதிலேதான், 2012ஆம் TPP எனப்படும் ஆசிய பசுபிக் கூட்டாண்மை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 2017இல் செயலிழந்திருக்கிறது. கொழும்புத் துறைமுகத்தின் கிழக்குக் முனைய அபிவிருத்தி குறித்த ஒப்பந்தம் 2018ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்டிருக்கிறது.

ஆகவே இந்தோ- பசுபிக் பிராந்திய பாதுகாப்பு மற்றும் பொருளாதார, அரசியல் நலன்சார் விடயத்தில் அமெரிக்காவுடன் இணைந்து செயலாற்றிய அவுஸ்திரேலியா, ஜப்பான், மாலைதீவு ஆகிய நாடுகள் RCEP எனப்படும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டமை என்பது அமெரிக்க இராஜதந்திரத்திரப் பலவீனம் என்ற முடிவுக்கு நேரடியாகவே வந்துவிடலாம்.

இப்படிப் பலவீனமானவொரு நிலையிலும் இந்தோ- பசுபிக் விவகாரத்தில் பொருளாதாரச் செயற்பாடுகள் தவிர்த்துப் பாதுகாப்பு விடயங்களில் அவுஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா போன்ற நாடுகள் தம்முடன் நிற்க வேண்டுமென்ற அமெரிக்க அணுகுமுறை என்பது, இலங்கை போன்ற இன அழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நாடுகளுக்கு வாய்ப்பாகவே இருக்குமென அவதானிகள் கருதுகின்றனர்.

ஏனெனில் ரோகின்யா முஸ்லிம்களை இன அழிப்புச் செய்து வரும் மியன்மார் அரசும் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருக்கிறது. இந்தியா இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகியிருந்தாலும், மியன்மார் அரசுடன் நரேந்திரமோடி அரசு உறவைப் பேணி வருகின்றது. நீர்முழ்கிக் கப்பல் ஒன்றையும் இந்தியா மியன்மாருக்கு வழங்கியுள்ளது.

ஆகவே அமெரிக்க, இந்திய அரசுகளின் இவ்வாறான அணுகுமுறைகள் அரசியல் விடுதலை வேண்டி நிற்கும் ஈழத்தமிழர்களுக்குப் பாதுகாப்பற்றதொரு நிலையை உருவாக்கியிருக்கிறது. ஒருபுறத்தில் அமெரிக்காவோடு நட்பாக இருக்கும் நாடுகள் சீனாவுடன் மேற்படி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட, மறுபுறத்தில் இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்க நலன்சார்ந்து நிற்கும் இந்தியா, இனப்படுகொலையில் ஈடுபட்ட மியன்மார் அரசுடன் உறவைப் பேணி வருகின்றது.

சீனாவைப் பிரதானப்படுத்திய RCEP எனப்படும் ஒப்பந்தத்தில் இலங்கை இல்லாவிட்டாலும், இந்த நகர்வுகள் இலங்கைக்கு அரசியல், பொருளாதார ரீதியில் பெரும் வாய்ப்பாகவே அமைந்துள்ளது. குறிப்பாக சீனாவுடன் ஏற்கனவே செய்துகொண்ட பொருளாதார ரீதியான ஒப்பந்தங்கள், அபிவிருத்தித் திட்டங்களைத் தொடர்ந்து மேற்கொண்டு, இந்தோ- பசுபிக் பாதுகாப்பு விவகாரங்களில் மாத்திரம் அமெரிக்க, இந்திய அரசுகளுடன் நின்றுவிடலாம் என்ற மகிழ்ச்சியானதொரு செய்தி இலங்கை ஒற்றையாட்சி அரசுக்குக் கிடைத்திருக்கின்றது.

பாதுகாப்பு விடயத்தில் ஒத்துழைப்பு வழங்குவதன் ஊடாக, ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக் கோரிக்கையை முற்றாகவே அடக்கிவிடலாமென இலங்கை கருதுகின்றது. அது ஒன்றுதான் இல்ங்கையின் பிரதான நோக்கமாகவும் உள்ளது. அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இலங்கையின் இந்த அணுகுமுறை புரியாதல்ல. ஆனால் தமது நலன்சார் விவகாரங்களுக்காக இலங்கை விட்டுக் கொடுக்கும் நிலையில், ஈழத்தமிழர்கள் தொடர்பாகக் கவனம் செலுத்த வேண்டியதொரு தேவையில்லை என்றே அமெரிக்காவும் இந்தியாவும் கருதுகின்றது.

ஏனெனில் தமிழ்த்தேசியக் கட்சிகள், 2009ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் அதாவது 2010இல் சரத் பொன்சோகாவுடனும் 2015இல் மைத்திரி- ரணில் விக்கிரமசிங்கவுடனும் இணைந்து பயணித்திருக்கின்றன. இது இலங்கை ஒற்றையாட்சி அரசுடன் தமிழ்மக்களும் இணைந்து வாழமுடியும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியிருக்கிறன.

2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்றபோது இலங்கை அரசு போரை நிறுத்தும் என்றொரு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் ஈழப்போர் அழிக்கப்பட்டால் மாத்திரமே இந்தோ- பசுபிக் பாதுகாப்பு உள்ளிடட அரசியல். பொருளாதார நலனில் சாதகமானதொரு நிலையை உருவாக்கலாமென ஒபாமா அரசாங்கமும் மன்மோகன் சிங் அரசாங்களும் அப்போது நம்பியிருந்தன. இருந்தாலும் 2009ஆம் ஆண்டு மே மாதததின் பின்னரான சூழலிலேதான் இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் சீன அதிக்கம் வலுப்பெற்றிருக்கிறது.

2013இல் கொழும்பு போட் சிற்றி எனப்படும் சர்வதேச நிதி நகரத் திட்டத்திற்கான ஒப்பந்தம், அம்போந்தோட்டைத் துறைமுக அபிவிருத்தி மற்றும் மத்தள விமான நிலைய ஒப்பந்தம், 2014இல் முழு ஆசியவையும் கண்காணிக்கக் கூடிய கொழும்பு மருதானை தாமரைக் கோபுரத் திட்டம், 2020இல் அம்பாந்தோட்டைத் துறைமுக நேரடி முதலிட்டு ஒப்பந்தம். உள்ளிட்ட பல்வேறு பொருளாதாரத் திட்டங்கள் அதற்கான ஒப்பந்தங்களை இலங்கையோடு சீனா கைச்சாத்திட்டிருக்கிறது.

இன்று அமெரிக்காவின் இந்தோ- பசுபிப் பாதுகாப்புத் திட்டத்தைத் தகர்த்தெறியும் வகையில் RCEP எனப்படும் வர்த்தக ஒப்பந்தத்தில் சீனா 15 நாடுகளோடு கைச்சாத்திட்டுள்ளது. இதன் வலியைத் தற்போது அமெரிக்க இந்திய அரசுகளும் இதனை உணர ஆரம்பித்திருக்கின்றன. ஆனால் இந்த இடத்திலே சுழியோடவேண்டிய தமிழ்த்தரப்பு, தேர்தல் அரசியலில் மாத்திரமே கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறது.

 

https://thinakkural.lk/article/91636

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.