Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குரல் கொடுக்க வந்தவர்கள் விலைப்போகும் அவலம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குரல் கொடுக்க வந்தவர்கள் விலைப்போகும் அவலம்

 

 

-எம்.எஸ்.எம். ஐயூப்  

நாட்டில் இன ரீதியான அரசியல் கட்சிகளுக்கு எதிராக, கடந்த காலத்தில் எழுந்த எதிர்ப்பை, சிறுபான்மையினர் எதிர்த்து வந்தனர். ஆயினும், முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலரின் போக்கால், முஸ்லிம்களிலும் சிலர், இன ரீதியான கட்சிகளை விரைவில் எதிர்க்கக் கூடும் போல் தான் தெரிகிறது.  

இன ரீதியான கட்சிகளை, பெரும்பான்மை மக்களே பொதுவாக எதிர்க்கிறார்கள். ஆனால், சிங்கள இனத்தைக் குறிக்கும் பெயரிலான கட்சிகளை, அவர்கள் எதிர்க்கவில்லை. தமிழ், முஸ்லிம் இனங்களைக் குறிக்கும் பெயருடைய கட்சிகளையே அவர்கள் எதிர்க்கிறார்கள்.   

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி, உயிர்த்த ஞாயிறு தினத்தன்று முஸ்லிம் பெயருடைய பயங்கரவாதிகள் சிலர், மூன்று கிறிஸ்தவ தேவாலயங்களையும் மூன்று உல்லாசப் பிரயாண ஹோட்டல்களையும் தாக்கி, 250க்கும் மேற்பட்டோரைக் கொன்றனர். 

இதையடுத்து, நாட்டில் முஸ்லிம் தீவிரவாதம் வளர்வதற்கான காரணங்களில் ஒன்றாக, முஸ்லிம்கள் அரசியல் ரீதியாகப் பிரிந்து செயற்படுவதைப் பலரும் சுட்டிக் காட்டினர். இதைத் தொடர்ந்து, இன ரீதியான அரசியல் கட்சிகளுக்கு எதிரானவர்களின் குறி, முஸ்லிம் கட்சிகளாகவே இருந்து வருகிறது.  

முஸ்லிம்கள் பொதுவாக, இந்த எதிர்ப்பை எதிர்த்து வந்த போதிலும், அண்மைக் காலமாக சில முஸ்லிம்களும், “இனி மேலும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் தேவையா” என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர். கலாநிதி அமீர் அலி, அண்மையில் எழுதியிருந்த கட்டுரையொன்றில், ‘முஸ்லிம் அரசியல் கட்சிகளைக் கலைத்துவிட வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.  

கடந்த ஒக்டோபர் 22ஆம் திகதி, அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை ஆதரித்து, ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் போட்டியிட்டு, நாடாளுமன்றத்துக்குத் தெரிவான ஆறு முஸ்லிம் எம்.பிக்கள் வாக்களித்ததை அடுத்து, முஸ்லிம் அரசியல் கட்சிகள் தேவையா என்ற கேள்வி மீண்டும் எழுகிறது. 

20ஆவது திருத்தச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதா, இல்லையா என்பதை விட, இந்த ஆறு எம்.பிக்களும் ‘விலைபோனார்களோ’ என்ற ஆதங்கமே, முஸ்லிம் அரசியல் கட்சிகளே வேண்டாம் என்ற நிலைக்கு, சிலரைத் தள்ளிவிட்டுள்ளது.  

கட்சி தாவலும் மக்களின் ஆணைக்குத் துரோகம் செய்தலும் குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் இலட்சணமல்ல. குறித்த 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை மட்டும் எடுத்துக் கொண்டாலும், தம்மைத் தெரிவு செய்த மக்களின் விருப்பத்துக்கு மாறாக, ஒரு சிங்களவரும் ஒரு தமிழரும் ஆறு முஸ்லிம்களும் என, நாட்டின் மூன்று பிரதான இனங்களையும் சேர்ந்த எம்.பிக்கள், அதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். ஆனால், முஸ்லிம்கள் என்றால் ‘தொப்பி பிரட்டிகள்’ என்றதொரு கருத்து, நீண்ட காலமாகப் பெரும்பான்மை இனத்தவர்கள் மத்தியில் இருக்கிறது. அதைத்தான், இப்போது அவர்கள் தூக்கிப்பிடிக்கிறார்கள்.   

முஸ்லிம் அரசியல்வாதிகள், சமயத்தை முன்நிறுத்தியே அரசியலில் ஈடுபடுகிறார்கள். அவ்வாறு இருக்க, பணத்துக்கோ பதவிகளுக்கோ ஆசைப்பட்டு அல்லது, அச்சுறுத்தல்களுக்கு அடிபணிந்து, தமக்கு வாக்களித்த மக்களின் விருப்பத்துக்கு மாறாகச் செயற்படுவதை, எவ்வாறு நியாயப்படுத்தப் போகிறார்கள்?  

ஏனைய இனத்தவர்கள் கட்சி மாறுவதும் மாறி மாறி பிரதான கட்சிகளுடன் சேர்வதும் இதற்கு முன்னர் இடம்பெற்றுள்ளன. ஆனால், முஸ்லிம் கட்சிகளும் மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸூம் கூட்டணி அமைத்து, ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்தி இருப்பதால், அக்கட்சிகள் பெரும்பான்மை மக்கள் மத்தியில் பேசு பொருளாகியுள்ளன. அவ்வாறு, பேசு பொருளாகும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும், அக்கட்சிகள் அம்மக்களால் கேவலமாகப் பேசப்படுகின்றனவே அல்லாமல், ஒரு போதும் பாராட்டப்படுவதில்லை.   

முஸ்லிம் கட்சிகள், மாறி மாறி பிரதான கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதை, முஸ்லிம்கள் முன்னர் குற்றமாகக் கருதியதில்லை. ஏனெனில், அவ்வாறு கூட்டணி அமைக்கும் முஸ்லிம் கட்சிகளுக்கும் அமைச்சுப் பதவிகள் கிடைக்கின்றன. முஸ்லிம்கள் அமைச்சர்களாக நியமிக்கப்படுவதை, அவர்கள் வரவேற்றார்கள். 

ஆனால், மஹிந்த ராஜபக்‌ஷவின் கடந்த ஆட்சிக்குப் பின்னர், இந்த நிலை மாறியிருக்கிறது. இப்போது, ராஜபக்‌ஷக்களின் ஆட்சியில், முஸ்லிம் கட்சிகள் அமைச்சுப் பதவிகளை ஏற்பதை, பெரும்பாலான முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.   

மஹிந்த ராஜபக்‌ஷவின் கடந்த ஆட்சியில், பேரினவாதக் குழுக்கள் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, முஸ்லிம்களை இம்சித்தும் அவமானப்படுத்தியும் ஆத்திரமூட்டியும் வந்தமையும் ராஜபக்‌ஷர்கள் அந்தக் குழுக்களுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தமையுமே அதற்குக் காரணமாகும். 

இத்தகைய அவமானங்களையும் இம்சைகளையும், பொது பல சேனா அமைப்பே 2012ஆம் ஆண்டு முதலில் ஆரம்பித்தது. அக்காலத்தில், அவ்வமைப்பு காலியில் ஓர் அலுவலகத்தைத் திறந்தபோது, அவ்வைபவத்தின் பிரதம அதிதியாக கோட்டாபய ராஜபக்‌ஷவே கலந்து கொண்டார்.   

ஆயினும், முஸ்லிம்களுக்கும் ராஜபக்‌ஷர்களுக்கும் இடையிலான விரிசல், கடந்த அரசாங்க காலத்தில் படிப்படியாக மறக்கப்பட்டு வந்தது. அந்த நிலையில், 2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றியீட்டியது. இதையடுத்து, முஸ்லிம்கள் பழையவற்றை மறந்து, ராஜபக்‌ஷர்கள் பக்கம் சாயும் போக்குக் காணப்பட்டது. 

எனினும், அடுத்த மாதமே கண்டி, திகனப் பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்கள் ஆரம்பிக்கப்பட்டன. அவற்றில், அமித் வீரசிங்க போன்ற பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள், வெளிப்படையாகக் கலந்து கொண்டனர்.   

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து, முஸ்லிம்களுக்கு எதிராக மிக மோசமான பிரசாரப் போரொன்று முடுக்கிவிடப்பட்டது. அதில், முன்னின்று செயற்பட்டவர்கள் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல்வாதிகளும் அப்பெரமுனவை ஆதரிக்கும் ஊடகங்களும் ஆகும். எனவேதான், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை நெருங்கவும் முஸ்லிம்கள் தயங்குகிறார்கள்.   

போதாக்குறைக்கு, கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்யாது, தகனம் செய்வதற்கு அரசாங்கம் எடுத்த முடிவும், அரசியல் நோக்கம் கொண்டது என்பது எல்லோருக்கும் விளங்கும் விடயமாக இருக்கிறது. 

இந்தப் பின்னணியில், ஆறு முஸ்லிம் எம்.பிக்கள் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய குறிக்கோளான அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை ஆதரித்து வாக்களித்தமையை, முஸ்லிம்கள் எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதை, எவரும் ஊகிக்க முடிகிறது. எனவே தான், தொடர்ந்தும் முஸ்லிம் கட்சிகள் தேவையா என்று, சிலர் கேட்கின்றனர்.  

தனி நாடு, பலமான அதிகாரப் பரவலாக்கல் போன்ற அரசியல் கோரிக்கைகள், முஸ்லிம்களின் அரசியல் நிகழ்ச்சி நிரலில் இல்லை. வடக்கு, கிழக்கு பிரிக்கப்பட்டதை அடுத்தும், அம்மாகாணங்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை, இந்தியா கைவிட்டதை அடுத்தும், கிழக்கு முஸ்லிம்களிடம் இப்போது அரசியல் கோரிக்கைகளே இல்லை. முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தேவை, அருகிப் போக இதுவும் ஒரு காரணமாகும்.   

போர்க் கால சூழலிலேயே, முஸ்லிம் கட்சிகளின் தேவை ஏற்பட்டது. போரில் ஈடுபட்ட இரு சாராரிடமிருந்தும் அடி வாங்கும் நிலையிலேயே, தமக்கென்ற ஒரு குரல் முஸ்லிம்களுக்கு அவசியமாகியது. இப்போது அவ்வாறானதொரு நிலை இல்லை; எனவே, அன்றைய தேவை இன்றில்லை.   

ஆனால், தமக்கான ஒரு குரலின் அவசியத்தை, முஸ்லிம்களுக்குத் தொடர்ந்து வலியுறுத்தி வரும் ஒரு காரணி, இன்னமும் இருக்கிறது. பெரும்பான்மை இனத்தவர்கள் தலைமை தாங்கும் கட்சிகள், முஸ்லிம்களைப் பூரணமாக உள்ளீர்க்காமையும் முஸ்லிம்கள் ஒரு சமூகமாகப் பாதிக்கப்படும் போது, குறைந்த பட்சம் நியாயத்தை எடுத்துரைக்கவாவது அக்கட்சிகள் முன்வராதமையும் அந்தக் காரணியாகும். சிலவேளைகளில், பிரதான கட்சிகளின் பிரதிநிதிகளாக இருக்கும் முஸ்லிம்கள் வாய் திறந்தாலும், அக்கட்சிகள் முஸ்லிம்களுக்காக வாய் திறப்பதில்லை.   

உதாரணமாக, 2012-13ஆம் ஆண்டுகளில் ஹலால் சர்ச்சையை, பொது பல சேனா அமைப்பு தூண்டிவிட்ட போது, ஆளும் கட்சியில் இருந்த சம்பிக்க ரணவக்க, உதய கம்மன்பில போன்றோர், பொது பல சேனாவோடு இணைந்து, முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரப் போரைத் தொடுத்தனர். 

உலக வர்த்தகத்தைப் பற்றியும் அதில் ஹலால் இலட்சினை வகிக்கும் பங்கையும் நன்கறிந்த ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையிலான ஐ.தே.க வாய் திறக்கவில்லை. முஸ்லிம்களுக்காக, முஸ்லிம்களே குரல் கொடுக்க வேண்டும் என்ற நிலை உருவாகியது.  

உயிர்த் ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து, முழு முஸ்லிம் சமூகமும் பயங்கரவாதிகளாகச் சித்திரிக்கப்பட்டனர். அந்தப் பிரசாரப் போரில், முன்னின்றவர்கள்  பொதுஜன பெரமுனவினரே. அப்போதும், முஸ்லிம்களுக்காக முஸ்லிம்களே குரல் கொடுக்க வேண்டும் என்ற நிலையே இருந்தது.  

இன்றைய பிரச்சினை என்னவென்றால், அரசியல் களத்தில், முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்க, முஸ்லிம் பிரதிநிதிகளே இருக்க வேண்டும் என்ற நிலை இருக்கிறது. ஆனால், முஸ்லிம்களால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகள், பணத்துக்கும் பதவிகளுக்கும் விலைபோய்விடுகிறார்கள். அல்லது, அச்சுறுத்தல்களுக்கு அடிபணிந்து விடுகிறார்கள். இதை, யாருக்குச் சொல்வது?  

Tamilmirror Online || குரல் கொடுக்க வந்தவர்கள் விலைப்போகும் அவலம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.