Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆங்கில – பாரம்பரிய மருத்துவம் இணைந்து செயலாற்ற வேண்டும் : ஆயுஷ் விருது வழங்கும் விழாவில் தமிழிசை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கில – பாரம்பரிய மருத்துவம் இணைந்து செயலாற்ற வேண்டும் : ஆயுஷ் விருது வழங்கும் விழாவில் தமிழிசை

 

6-1024x682.jpegகொரோனா பேரிடர் காலத்தில் மாற்று மருத்துவத்தில் முக்கிய பங்காற்றிய பாரம்பரிய மருத்துவர்களை கவுரவிக்கும் விதமாக உலகில் முதல் முறையாக AYUSH EXCELLENCE விருது வழங்கப்பட்டது. இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை எக்மோரில் உள்ளஅம்பாசிடர் பல்லவா ஓட்டலில் டிசம்பர் 05 ம் தேதி மாலை நடைபெற்றது.

உலகத் தமிழ் வர்த்த சங்கத்தின் தலைவர் செல்வக்குமார் வந்திருந்தவர்களை வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக தெலுங்கானா மாநில கவர்வர் திருமதி.தமிழிசை சவுந்தரராஜனும், சிறப்பு விருந்தினராக தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கலந்து கொண்டனர். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், தமிழக சுகாதாரத்துறை தலைமை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், தமிழக ஹோமியோபதி துறை மற்றும் இந்திய மருத்துவத்துறை இயக்குனர் கணேஷ் ஐஏஎஸ் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் ஊடகப்பிரிவு தலைவர் ஜான் தன்ராஜ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

நிகழ்ச்சியின் துவக்கத்தில் பாரம்பரிய மருத்துவமான ஆயுஷ் தொடர்பான காணொளி காட்சிப்படுத்தப்பட்டது. தொடர்ந்து சிறப்பு விருந்தினர்களுக்கு , உலகத் தமிழ் வர்த்தக சங்கத்தின் தலைவர் செல்வகுமார் நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார். செல்வக்குமார் தனது வரவேற்புரையில், விருது கொடுக்க வேண்டுமானால் கொரோனா பேரிடர் காலத்தில் பணியாற்றிய அனைத்து மருத்துவர்களுக்கும் இந்த விருது கொடுக்க வேண்டும். அது இயலாத காரணத்தினால் இந்த விருந்திற்காக விண்ணப்பித்த அனைத்து மருத்துவர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் தபால் மூலம் தமிழக அரசுடன் இணைந்து அனுப்பி வைக்கப்படும். உலக தமிழ் வர்த்தக சங்கம் மற்றும் உலக தமிழ் வம்சாவளி அமைப்பின் சார்பில் உலகம் முழுவதும் 150 நாடுகளில் உள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை ஒன்றிணைந்து உலக தமிழ் பாராளுமன்றம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு, அதன் முதல் ஆலோசனை கூட்டம் இணைய வழியில் நடத்தப்பட்டுள்ளது. அதன் 2வது ஆலோசனை கூட்டத்தை ஜனவரி 15 அன்று இணைய வழியில் நடத்த உள்ளோம். இதே போன்று சித்த மருத்துவர்களையம் வெளிநாட்டு வாழ் தமிழ் அலோபதி டாக்டர்களையும் ஒன்றிணைத்து பணியாற்ற ஆயுஷ் அமைப்பு ஒன்றை உருவாக்க தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம் என்றார்.

கணேஷ் ஐஏஎஸ் தனது உரையில், கொரோனா காலத்தில் 28,000 நோயாளிகளை சித்த மருத்துவம் மூலம் குணப்படுத்தி உள்ளோம். தமிழகத்தில் உள்ள ஆயுஷ் செயல்பாடு சிறப்பாக உள்ளதாக இந்திய மருத்துவ கழகம் பாராட்டி உள்ளது. உலகமே நெருக்கடி நிலையில் இருக்கும் போது நமது சித்த மருத்துவர்கள் ஓய்வின்றி உழைத்து, பலரை குணப்படுத்தி உள்ளனர். கபசுர குடிநீரில் 15 மூலிகைகள் உள்ளன. இதில் 8 மூலிகைகள் கோவிட் 19 வைரசை கட்டுப்படுத்தக்கூடியது என கண்டறியப்பட்டுள்ளது. 3 கோடி நபர்களுக்கு மேல் வழங்கி உள்ளோம். மற்ற மருந்துகள் தயாரிப்பை நிறுத்தி விட்டு, கோவிட் 19 மருந்துகளை தயாரிக்க முன்னுரிமை அளித்து, மக்கள் நலத்துறை அமைச்சர் நிதி வழங்கி சிறப்பாக செயலாற்றி உள்ளார். ஒவ்வொரு வாரமும் சுகாதாரத்துறை செயலாளர் ஆய்வு மேற்கொண்டு, உத்வேகம் அளித்தார் என்றார்.

ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் தனது உரையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா டெங்கு பரவிய காலத்தில் நிலவேம்பு கசாயத்தை உணவில் அறிமுகப்படுத்தும் அரசாணையை வெளியிட்டார். தற்போதைய முதல்வரும் கபசுர குடிநீரை பயன்படுத்தும் அரசாணையை கொண்டு வந்தார். தமிழகத்தில் மட்டும் தான் பாரம்பரிய மருந்து குறித்து ஆய்வு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மக்களிடம் பாரம்பரிய மருத்துகளை கொண்டு சென்று, இறப்பு விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இல்லாவிட்டால் 2000 பேர் அதிகம் இறந்திருப்பார்கள். தடுப்பு மருந்து வந்தாலும் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, திருமணம், இறப்பு போன்ற நிகழ்வுகளில் அதிகம் பேர் கூடாமல் இருப்பது போன்றவற்றை கடைபிடித்தால் அடுத்த அலை வராமல் நம்மால் தடுக்க முடியும். பழக்க வழக்கங்களை மாற்ற வேண்டும். விழிப்புணர்வு மட்டும் போதாது. கொரோனா மருத்துவர்களை ஊக்குவிக்க தொடர்ந்து இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வரும் செல்வகுமாருக்கு நன்றி என்றார்.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது உரையில், மருத்துவர்களை உற்சாகப்படுத்தும் விதமாகவும், ஊக்குவிக்கும் விதமாகவும் இந்த நிழக்ச்சியை ஏற்பாடு செய்துள்ளனர். இந்த பாராட்டு விழாவில் பொருந்தமான தலைவர்களை ஒருங்கிணைத்திருப்பது பாராட்டுக்குரியது. தெலுங்கானா சென்றாலும் தமிழகம் மீதும், தமிழக மக்கள் மீதும் பாசம் கொண்டுள்ளவர் தமிழிசை. களத்திற்கே சென்ற கவர்னர். தெலுங்கானாவில் மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று மருத்துவர்களையும், செவிலியர்களையும் ஊக்குவித்தவர். பன்முகத்தன்மை வாய்ந்தவர். தமிழ் மண்ணிற்கு பெருமை சேர்த்துக் கொண்டிருப்பவர்.

கொரோனா பேரிடர் காலத்தில் அனைவரும் வியக்கும் அளவிற்கு தமிழகம் முன்மாதிரியாக திகழ உடனடியாக அரசாணை வெளியிட்டு பணியாற்றினோம். ஆயுஷ் துறை மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழந்தைகள் நல மருத்துவர், தமிழிசை. துணை முதல்வரும் ஆயுஷ் மருத்துவத்தை கடைபிடிப்பதுடன் தொடர்ந்து யோகா பயிற்சி செய்பவர் என்பதை குறிப்பிட வேண்டும். இதுபோன்ற பேரிடர் இனி வர கூடாது. வந்தாலும் அதை எதிர்க்கொள்ளும் நம்பிக்கையை இந்த நிகழ்வு கொடுத்துள்ளது. பொருத்தமானவர்களை வைத்து, பொருத்துவமான நேரத்தில் இந்த நிகழ்வு நடத்தப்படுகிறது என்றார்.

தொடர்ந்து கொரோனா நெருக்கடி காலத்தில் சிறப்பாக பணியாற்றிய சித்த மருத்துவர்கள் மற்றும் பாரம்பரிய மருத்துவ அமைப்புக்களின் தலைவர்கள் ஆகியோருக்கு தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனும், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து ஆயுஷ் விருதுகளை வழங்கி கவுரவித்தனர். மொத்தம் 29 மருத்துவர்களுக்கு ஆயுஷ் விருதுகளும், 5 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது சிறப்புரையில், உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா காலத்தில், கொரோனா வைரசை எதிர்த்து போராடிய மருத்துவர்களை பாராட்டும் வகையிலும், நமது பாரம்பரிய மருத்துவத்தை உலகம் உணரும் வகையிலும், பக்க விளைவற்ற சித்த மருத்துவத்தை மக்கள் பயன்படுத்தும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ்விழா மிகவும் பாராட்டுக்குரியது. பழங்காலத்தில் வாழ்ந்த யோக அறிஞர்கள் இந்த உலகிற்கு பரிசாக பல மருத்துவ முறைகளை அளித்து சென்றுள்ளனர். தனித்திருந்தும், விழித்திருந்தும், விலகி இருந்தும் ஆற்றல் பெற்ற சித்தர்களின் மன அமைதி, ஞானம், பேரின்பம் ஆகியவற்றை அந்த தமிழ் ஞானிகள் தாங்கள் கற்ற அனுபவங்கள், பெற்ற இன்பங்களை, “யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் ” என்பதற்கு ஏற்ப இந்த மானிட சமுதாயம் பயன்பெற மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுத்தனர். கலை நுணுக்கங்கள் தமிழ் சமுகத்தின் அறிய பொக்கிஷங்களாக விளங்கிக் கொண்டிருக்கின்றன. தலைசிறந்த கலையாக விளங்கும் மருத்துவ கலை, உடலின் பிணியகற்றி உலகிற்கே வழிகாட்டி தொன்மை வாய்ந்தாக அமைகிறது.

2000 ஆண்டுகளுக்கு முன்பே திருக்குறளில் மருந்து என்ற தலைப்பில் திருவள்ளுவர் தனி அதிகாரமே படைத்துள்ளார். அலோபதி மருத்துவர்களுடன் இணைந்து நமது பாரம்பரிய மருத்துவர்கள் இடைவிடாது பணியாற்றி, கொரோனாவை கட்டுக்கள் கொண்டு வர பாரம்பரிய மருத்துவம் துணையாக இருந்ததை இந்தியாவே பாராட்டுகிறது. உலக தமிழ் வர்த்தக சங்கம், உலக தமிழ் வம்வாளி அமைப்பு இணைந்து கொரோனா காலத்தில் பணியாற்றிய பாரம்பரிய மருத்துவர்களுக்கு விருது கொடுப்பது பாராட்டுக்குரியது. அவர்களுக்கு நன்றி சொல்ல கடமைபட்டுள்ளோம். ஆயுஷ் விருது , மத்திய சித்த ஆராய்ச்சி கவுன்சில், தேசிய மருத்துவ கவுன்சிலால் தேர்வு செய்யப்பட்டு அளிக்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. பாரம்பரிய மருத்துவர்களை பாராட்டி வழங்கப்படும் இந்த விருது மற்ற மருத்துவர்களுக்கு மேலும் சிறப்பாக பணியாற்ற உத்வேகம் அளிக்கும். அதிலும் அலோபதி மருத்துவரான தமிழிசை கரங்களால் இந்த விருதுகள் வழங்கப்பட்டது மேலும் தனிச்சிறப்பு. நம்மில் ஒருவர் கவர்னராக இருப்பது தமிழகத்திற்கே பெருமை.தேசிய பேரிடர் காலத்தில் பணியாற்றிய அத்தனை மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்களுக்கு விருது வழங்கியதற்கு நன்றி என்றார்.

பிறகு பேசிய தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தனது சிறப்புரையில், ஆயுஷ் விருதுகளை வழங்கும் செல்வகுமாருக்கு நன்றி. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகம் பின்பற்றிய பல நடைமுறைகளை கேட்டறிந்து தெலுங்கானாவிலும் நடைமுறைபடுத்தப்பட்டது. இதற்கு நான் ஒரு பாலமாக செயல்பட்டதில் மகிழ்ச்சி. நிறைய பரிசோதனைகள் நடத்தப்பட்டதால் தமிழகத்தில் நிறைய நோயாளிகள் கண்டறியப்பட்டனர். கொரோனாவை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்டதாக பிரதமரால் பாராட்டப்பட்டது தமிழக சுகாதாரத்துறை. தெலுங்கானாவில் நான் சென்ற பிறகு ஆயுஷ் முறைகளை பின்பற்ற முயற்சி மேற்கொண்டு வருகிறேன். தெலுங்கானாவில் வழங்கப்படும், கேசிஆர் கிட் தமிழகத்தில் உள்ள அம்மா பரிசுப் பெட்டகத்தை பின்பற்றியது. மருத்துவமனைகளில் நடைபெறும் பிரசவத்திற்கு மட்டும் கேசிஆர் கிட் வழங்கப்படுவதால் 50 சதவீதம் மருத்துவமனை பிரசவம் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் பின்பற்றப்படும் நல்லவைகள் தெலுங்கானாவிலும், தெலுங்கானாவில் பின்பற்றப்படும் நல்ல திட்டங்கள் தமிழகத்திலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. ஏலக்காய், சுக்கு, மிளகு போன்ற 6 பொருட்கள் சேர்ந்து நமது ஆயுளை அதிகப்படுத்துவதை ஏலாதி என்ற சங்க இலக்கிய நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இணைப்பு பாலமான மருத்துவத்தை நாம் பின்பற்ற வேண்டும். கபசுர குடிநீர் பற்றி தெலுங்கானாவில் கூறினேன். அங்கும் இது பற்றி ஆய்வு நடத்தப்பட்டது. எல்லாவற்றிற்கும் நமக்கு ஆயுர்வேதத்திலும் மருந்து இருக்கிறது. ஒரு மருத்துவ முறையை குறை கூறி ஒதுக்காமல், அவற்றுடன் கை கோர்த்து, நல்லவற்றை இணைத்து வழிகாட்ட வேண்டும். அலோபதி மருத்துவத்துடன், பாரம்பரிய மருத்துவத்தை இணைக்கும் இணைப்பாலத்தை ஏற்படுத்த வேண்டும் என செல்வகுமார் போன்றவர்கள் முயற்சித்திருக்கிறார்கள். இங்கு பரிசு பெற்ற அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். அதையும் அரசே தேர்வு செய்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

தமிழக சித்த மருத்துவ அதிகாரிகள் கழகத்தின் செயலாளர் தமிழ்கனி நன்றி உரை ஆற்றினார்.

 

 

https://thinakkural.lk/article/96736

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.