Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சொல்லும் செயலும் தமிழரசியலும் ? நிலாந்தன்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லும் செயலும் தமிழரசியலும் ? நிலாந்தன்!

December 20, 2020

Politics.jpg

ஈழவேந்தன் இப்பொழுது கனடாவில் இருக்கிறார். அவர் முன்பு நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருந்த பொழுது கிளிநொச்சியில் ஒரு சர்ச்சை எழுந்தது. ஈழவேந்தன் நாடாளுமன்றத்தில் ஆவேசமாக எதிர் தரப்பைச் சாடுவார். ஆனால் நாடாளுமன்ற கன்ரீனில் யாரை எதிர்த்து பேசினாரோ அவரோடு உட்கார்ந்திருந்து தேநீர் அருந்துவாராம். இது தொடர்பில் கிளிநொச்சிக்கு யாரோ முறைப்பாடு செய்திருக்கிறார்கள். இக்காலகட்டத்தில் ஈழவேந்தன் என்னை சந்தித்த பொழுது நான் அவரிடம் சொன்னேன் “மிதவாத அரசியல் என்றால் அப்படித்தான். ஆயுதப் போராட்டம் எதிரியின் இருப்பை அழிக்க நினைக்கும். ஆனால் மிதவாத அரசியல் அப்படியல்ல. எதிரியின் இருப்பை ஏற்றுக் கொள்ளும். பல்வகைமையின் மீது கட்டியெழுப்பப்படுவதே ஜனநாயக அரசியல். எனவே இதில் அரசியல் எதிரியோடு அமர்ந்து தேனீர் அருந்துவதை சபை நாகரீகமாக ஏற்றுக் கொள்ள முடியும்  ” என்று.  

ஆனால் அரசியல் எதிரிகளோடு தேநீர் அருந்துவது வேறு வாக்கெடுப்பின் போது எதிர்த்து வாக்களிப்பது வேறு. வரவு செலவுத் திட்டத்தை எதிர்த்து ஆவேசமாக உரையாற்றி விட்டு அந்த வரவு செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிக்காமல் விடுவது வேறு. ஏனெனில் நாடாளுமன்ற அரசியலில் உரைகளுக்கும் முக்கியத்துவம் உண்டு. அதைவிட முக்கியத்துவம் வாக்கெடுப்புக்கு உண்டு. வாக்கெடுப்பில் யார் பக்கம் நிற்கிறோம் யாரை ஆதரிக்கிறோம் யாரை எதிர்த்து வாக்களிக்கிறோம் என்பதில் குறிப்பிட்ட கட்சியின் கொள்கை நிலைப்பாடு தெளிவாக வெளிப்படுத்தப்படும்.

இந்த அடிப்படையில் சிந்தித்தால் நடந்து முடிந்த வரவு-செலவுத் திட்ட வாக்கெடுப்பில் கூட்டமைப்பும் விக்னேஸ்வரனும் வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் விட்டது ஒரு அகமுரண். இது தொடர்பில் கூட்டமைப்பு பின்வருமாறு விளக்கம். கூறுகிறது “ கோட்டாபய அரசின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் மிக மோசமானது என்பதை அது சபையில் சமர்ப்பிக்கப்பட்ட அன்றே நாம் ஊடகங்களுக்குத் தெரிவித்து விட்டோம்.அதன் பின்னர் சபையில் நடைபெற்ற இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் போதும், அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தின்போதும் அதை எதிர்த்து நாம் உரையாற்றினோம். கோட்டாபய அரசின் மிக மோசமான வரவு – செலவுத் திட்டத்தால் எந்தப் பயனும் தமிழருக்கு இல்லை. அதேவேளை, அது சபையில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேறியே தீரும் என்பதும் எங்களுக்கு ஏற்கனவே தெரியும். இந்தநிலையில், வாக்கெடுப்பில் நாம் பங்கேற்று அதை எதிர்ப்பதால் எதுவும் நடக்கபோவதும் இல்லை. அதனால்தான் வரவு – செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பின்போதும் நாம் பங்கேற்கவில்லை…” இது  கூட்டமைப்பின் கருத்து.

விக்னேஸ்வரன் அவருடைய கூட்டுக்குள் அவர் இது தொடர்பில் கலந்து பேசி முடிவெடுக்கவில்லை என்றே தெரிகிறது. அவர் புதன் கிழமை வெளியிட்ட அறிக்கையை விடாமலே விட்டிருக்கலாம். அவர் பேசிய பேச்சுக்களின் புனிதத்தை அவரே கெடுத்துக் கொண்டார். அவர் பேசிய பேச்சுக்களை அவரே தோற்கடித்து விட்டார். அப்படித்தான் கூட்டமைப்பினரும்.கூட்டமைப்பினர் கடந்த 10 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் ஏகபோகம் வகித்த காலகட்டத்தில் ஆற்றிய உரைகளோடு ஒப்பிடுகையில் விக்னேஸ்வரனும் கஜேந்திரகுமாரும் கூர்மையாகவும் ஆழமாகவும் பேசினார்கள்.இதனால் தூண்டப்பட்டு ஸ்ரீதரன் சாணக்கியன் உட்பட ஏனையவர்களும் மாற்று அணியை சேர்ந்தவர்களின் பாணியிலேயே உரத்துப் பேச வேண்டிய தேவை ஏற்பட்டது.

குறிப்பாக சாணக்கியனின் பேச்சு ஆயிரக்கணக்கானவர்களால் பார்க்கப்பட்டிருக்கிறது; பாராட்டப்பட்டிருக்கிறது. மும்மொழிப் புலமை மிக்க ஒரு இளம் தலைவர் உருவாக்கிவிட்டார் என்று பலரும் கொண்டாடினார்கள். சாணக்கியனின் மும்மொழிப் புலமை பலரையும் கவர்ந்தது. சிங்கள மக்களுக்கு சிங்களத்தில் கூறிய பதில் பரவலாக பாராட்டப்பட்டது. ஆனால் சாணக்கியனும் சிறீதரனும் ஏனையவர்களும் ஆற்றிய உரைகளின் புனிதம் அவர்களுடைய கட்சி எடுத்த நிலைப்பாட்டால் கெடுக்கப்பட்டு விட்டது. அவர்களும் அவர்களுடைய உரைகளைத் தோற்கடித்து விட்டார்கள். கடந்த நாடாளுமன்றத்திலும் சிறிதரன் இவ்வாறு ஒரு வரவு செலவுத் திட்டத்தில் வாக்களித்துவிட்டு மனச்சாட்சியை இழந்து வாக்களித்தோம் என்ற தொனிப்பட விளக்கம் கூறியிருந்தார். இப்பொழுதும் அதே விளக்கந்தானா? இது விடயத்தில் கூட்டமைப்பு பங்காளிக் கட்சிகளோடு கலந்து பேசி முடிவெடுக்கவில்லை என்று ஒரு குற்றச்சாட்டும் உண்டு.டெலோ இயக்கம் பாதுகாப்பு அமைச்சு மீதான வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களித்தது.

வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை என்றால் அதன் அர்த்தம் அதை எதிர்க்கவும் விரும்பவில்லை ஆதரிக்கவும் விரும்பவில்லை என்பதே. அதாவது இரண்டுங்கெட்டான். மேலும் வரவுசெலவுத் திட்டம் நிறைவேற்றப் பட்டபின் நடந்த உத்தியோகபூர்வ விருந்துபசாரத்தில் சம்பந்தர் மட்டும் கலந்து கொண்டிருக்கிறார். இதன் மூலம் கூட்டமைப்பு தனது வாக்காளர்களுக்கு வெளிப்படுத்தும் செய்தி என்ன?

அரசாங்கத்தை எதிர்ப்பதால் ஒரு பயனும் இல்லை அவர்கள் மூன்றிலிரண்டு பெரும்பான்மையால் வரவுசெலவுத் திட்டத்தை எப்படியும் நிறைவேற்றியே தீருவார்கள் என்று கூட்டமைப்பும் விக்னேஸ்வரனும்  கூறுகின்றார்கள்.எதிர்ப்பதால் பலனில்லை என்றால் எதிர்த்துப் பேசி மட்டும் என்ன பலன்? அடுத்த நாள் ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக வருவதா? அல்லது வாக்கு வங்கியைப் பாதுகாப்பதா? ஆவேசமாக எதிர்த்து உரை நிகழ்த்தியபின் வாக்கெடுப்பில் எதிர்க்கவில்லை என்பது குழப்பமான  நிலைப்பாடே.

இதுவிடயத்தில் கூட்டமைப்பை விடவும் விக்னேஸ்வரனுக்கே பொறுப்பு அதிகம். தனது அரசியல் அடித்தளத்தை அதிக பட்சம் அறநெறிகளின் மீது கட்டியெழுப்பியிருக்கும் அவர் கூட்டமைப்பின் நேர்மைக் குறைவைச் சுட்டிக்காட்டியே அக்கட்சியிலிருந்து விலகினார். எனவே இந்த விடயத்தில் அவர் தன்னுடைய நிலைப்பாட்டை தன்னுடைய பேச்சுக்கு முரண்பாடு இல்லாத விதத்தில் வெளிப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை.இது கஜேந்திரகுமார் அணி அவருக்கு எதிராக வைக்கும்  குற்றச்சாட்டுகளுக்களை நிரூபிப்பதாக அமைந்து விடுமா?

 இது விடயத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஒன்றுதான் சொல்லுக்கும் செயலுக்கும் இடையே வேறுபாடு இல்லாத ஒரு முடிவை எடுத்து எதிர்த்து வாக்களித்தது. எனவே அது பேசிய பேச்சுக்கள் இப்பொழுதும் அவற்றின் புனிதத்தை இழக்கவில்லை.அதேசமயம் கூட்டமைப்பு மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோரின் பேச்சுக்கும் செயலுக்கும் இடையில் இருக்கும் முரண்பாடு பின்வரும் அடிப்படைக் கேள்விகளை  எழுப்புகின்றது.

முதலாவது கேள்வி- இவ்வாறு சொல்லுக்கும் செயலுக்கும் இடையில் வேறுபாடு உள்ள ஓர் அரசியற் சூழ்நிலையில் கொள்கை அடிப்படையிலான கூட்டுக்களை உடனடிக்குக் கற்பனை செய்ய முடியுமா ?

கேள்வி இரண்டு- கொள்கை அடிப்படையில் ஐக்கியத்தைக் கட்டியெழுப்ப முடியாது என்பது கடந்த பத்தாண்டுகளில் நிரூபிக்கப்பட்ட ஒன்று. எனவே குறைந்தபட்சம் விவகார மையக் கூட்டுக்களையாவது உருவாக்கலாம் என்று சிந்திக்கும் ஒரு பின்னணியில் அதற்குரிய வாய்ப்புகளும் குறைவா?

ஆம். வரவுசெலவுத் திட்டத்தின் மீதான வாக்கெடுப்பில் தமிழ் கட்சிகள் நடந்துகொண்ட விதம் கொள்கை ரீதியாகத் தமிழ் ஐக்கியத்தைக் கட்டியெழுப்புவதில் இருக்கக்கூடிய சவால்களின் பருமனைக் காட்டுகிறது. மட்டுமல்ல விவகாரங்களை மையப்படுத்தி தந்திரோபாயக் கூட்டுக்களை அல்லது சமயோசிதக் கூட்டுக்களை உருவாக்குவதில் இருக்கக்கூடிய வரையறைகளையும் அது உணர்த்துகிறது.

எனினும் இப்பொழுதுதான் விவகார மையக் கூட்டுக்களைக் கட்டியெழுப்புவதர்கான தேவை அதிகரித்திருக்கிறது எனலாம். ஏனெனில் வழுவழுக்கும் கட்சிகளை ஏதாவது ஒரு பொறுப்புக் கூறும் பொறிமுறைக்குள் கட்டிபோட வேண்டிய தேவை முன்னரை விட அதிகரிப்பதை இது உணர்த்துகிறதா?

புதிய யாப்புருவாக்கம்; ஐ.நாவை எதிர் கொள்ளல் உள்ளிட்ட வெளிவிவகார நடவடிக்கைகள் எல்லாவற்றுக்கும் ஒரு பொதுக் கட்டமைப்பும் பொதுப் பொறிமுறையும் அவசியம்.விக்னேஸ்வரன் தனது அறிக்கையில் கூறுவது போல அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கும் அவ்வாறு ஒரு பொதுப் பொறிமுறை அவசியம்.அரசாங்கத்தை எதிர்த்து வாக்களிக்காமல் விடுவதால் அரசாங்கம் அரசியல் கைதிகளை விடுவித்துவிடும் என்று நம்புவது அரசியல் அப்பாவித்தனம்.

அரசாங்கம் ஒரு புதிய யாப்பை கொண்டு வரப்போவதாக ஒரு தோற்றத்தைக் காட்டுகிறது. இந்த யாப்பில் இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளடக்கப்பட வேண்டும். ஆனால் அதுவிடயத்தில் தமிழ்த்தரப்பு ஒருமித்த நிலைப்பாட்டோடு இல்லை. எனவே தீர்வு விடயத்திலும் வெளிவிவகாரக் கட்டமைப்பும் உட்பட முக்கிய விவகாரங்கள் பொறுத்தும் விவகார மையக்  கூட்டுக்களை உருவாக்க வேண்டும். அதன் மூலம் தனியோட்டம் ஓடக்கூடிய கட்சிகளை பொறுப்புக்கூற வைக்க வேண்டும். இல்லையென்றால் ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு தீர்வை முன்வைக்கும். ஒவ்வொரு கட்சியும் வருகிற வெளிநாட்டு தூதுவரோடு ஒவ்வொரு விதமாகக் கதைக்கும். வரும் மார்ச் மாதம் நடக்கவிருக்கும் ஜெனிவாக் கூட்டத்தொடரிலும் தமிழ்த் தரப்பு தனித் தனி நிலைப்பாட்டோடு அங்கு போய் நிற்கும்.இது தமிழ் மக்கள் ஒரு தேசமாக இல்லை என்ற செய்தியை வெளித் தரப்புக்கு கொடுக்கும். அதுமட்டுமல்ல அதிக தொகை பிரதிநிதிகளைக் கொண்ட கூட்டமைப்பு தனியோட்டம் ஓடித் தமிழ் மக்களையும் தோற்கடித்து தன்னையும் தோற்கடித்து விடும்.

எனவே வரவுசெலவுத் திட்டத்தின் மீதான வாக்கெடுப்பு என்பது ஒருபுறம் தமிழ் ஐக்கியம் குறித்த சந்தேகங்களை அவநம்பிக்கைகளை அதிகப்படுத்தி யிருந்தாலும்கூட இன்னொருபுறம் குறைந்தபட்சம் விவகார மையக்  கூட்டுக்களையாவது உடனடிக்கு உருவாக்க வேண்டிய கட்டாயத்தை நமக்கு உணர்த்தியிருக்கிறது என்பதே சரி.  #விக்னேஸ்வரன் #மிழ் தேசிய மக்கள் முன்னணி #கூட்டமைப்பு

 

https://globaltamilnews.net/2020/154590/

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்


 

ஏன் இந்த திடீர் மாற்றம்?

-கபில் -

விக்னேஸ்வரன் கறுப்பும் இல்லை வெள்ளையும் இல்லை, இரண்டுக்கும் நடுவே உள்ள சாம்பல் நிற அரசியலை செய்ய முனைகிறார். கடந்த ஆட்சியில் அரசுக்கு ஆதரவு அளித்த கூட்டமைப்பு, எதிர்க்கட்சி என்றால் எதிர்க்க வேண்டும் என்றில்லை யெனக் கூறிய நியாயத்தை, அப்போது, விக்னேஸ்வரன் ஏற்கத் தயாராக இருக்கவில்லை. இப்போது அவரும் அதே போர்வைக்குள் மறைந்து கொள்ள முனைந்திருக்கிறார்.

வரவு, செலவுத் திட்ட வாக்கெடுப்புகளில் பங்கேற்காமல் ஒதுங்கியது ஏன் என்பதை விளக்கி, பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன், வழக்கம்போல, கேள்வி- பதில் வடிவிலான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

spacer.png

இந்த அறிக்கையில், தான் வாக்களிக்காமல் தவிர்த்துக் கொண்டதற்கான காரணங்களை அவர் விளக்கியிருக்கிறார்.  அந்த முடிவை எடுத்தமைக்காக அவர் கூறியிருக்கின்ற காரணங்கள் பல, பூமராங் போல, அவருக்கு எதிராகவே திரும்பக் கூடியவை. அவர், சில தர்க்க நியாயங்களை முன்வைத்தே, தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கிறார். கூடவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும்  இழுத்து வந்து, விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வரவுசெலவுத் திட்ட வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. அவர்கள் தங்கள் முடிவுக்கான காரணத்தை இன்னமும் அதிகாரபூர்வமாக வெளிப்படுத்தவில்லை.

ஆனாலும், விக்னேஸ்வரன், கூட்டமைப்பை அல்லது எம்.ஏ.சுமந்திரன் என்ற அளவுகோலை வைத்தே, தனது நிலைப்பாடு உயர்வானது என்று காட்டிக் கொள்ள முனைந்திருக்கிறார். சி.வி.விக்னேஸ்வரன் முன்வைத்திருக்கின்ற நியாயப்பாடுகளை இவ்வாறாக வரிசைப்படுத்தலாம்.

1. இணக்க அரசியலும் இல்லை, எதிர்ப்பு அரசியலும் இல்லை.

2. போர்களை வென்ற தமிழ்த் தலைமைகள் யுத்தத்தின் தோற்று விட்டன.

3. எல்லாவற்றையும் எதிர்ப்பதால் பலனில்லை, விளைவுகளை ஏற்படுத்தாத செயலோ, பேச்சோ அர்த்தமற்றது.

4. எதிர்க்கட்சி என்பதால் எல்லா நேரங்களிலும் எதிர்க்க வேண்டும் என்றில்லை.

5. இந்த அரசுடன் பேச வேண்டியுள்ள தேவைகள் உள்ளன.

இந்த ஐந்து விடயங்களையும் முன்னிறுத்தியே விக்னேஸ்வரன் தனது நியாயப்பாட்டை முன்வைத்திருக்கிறார். இந்த அறிக்கையில் அவர் சிலவேளைகளில் தன் மீதான தாக்குதலுக்கும் வழியை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். இணக்க அரசியல் செய்தும் பயன்கிட்டவில்லை, எதிர்ப்பு அரசியல் செய்தும் பயனில்லை என்ற சலித்துப் போனவராக, வாதத்தை முன்வைத்திருக்கிறார் விக்னேஸ்வரன்.

முன்னைய அரசாங்க காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணக்க அரசியலை முன்னெடுத்தது.  அதனால் எந்தப் பயனும் கிட்டவில்லை என்றும், இணக்க அரசியல் செய்தவர்கள் தமது நலன்களைப் பூர்த்தி செய்ததே அவர்கள் பெற்ற பலன் என்றும் விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

அதற்கு முன்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பு அரசியலை முன்னெடுத்தும், எந்தப் பயனும் கிட்டவில்லை என்றும் விக்னேஸ்வரன் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

அதனால் தான், இரண்டுக்கும் நடுவே பொதுவான ஒரு வழியைப் பற்றி அவர் பேச முனைந்திருக்கிறார். வரவு,செலவுத் திட்டத்தின் போது தாராளமாக எதிர்த்துப் பேசி விட்டதாகவும், அதனால் எதிர்த்து வாக்களிப்பேன் என்று பலரும் நம்பிவிட்டனர் எனக் கூறியுள்ள, விக்னேஸ்வரன், தான் அவ்வாறு இருக்கப் போவதில்லை என்ற புதியதொரு சமிக்ஞையையும் காண்பித்திருக்க்கிறார்.

இப்போது விக்னேஸ்வரன், கறுப்பும் இல்லை வெள்ளையும் இல்லை, இரண்டுக்கும் நடுவே உள்ள சாம்பல் நிற அரசியலை செய்ய முனைகிறார்.

அவரைப் பொறுத்தவரை இது முதல் முறையல்ல.

2013 மாகாணசபைத் தேர்தலில் வெற்றி பெற்றதும் விக்னேஸ்வரன் இணக்க அரசியலும் இல்லாத- எதிர்ப்பு அரசியலும் இல்லாத, அணுகுமுறையைத் தான் கையாள முனைந்தார். அதற்காக அப்போது கடும் எதிர்ப்பு அரசியலை முன்னெடுத்த கூட்டமைப்பின் விருப்பத்துக்கு மாறாக, ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷவின் முன்பாக பதவிப்பிரமாணமும் செய்து கொண்டிருந்தார்.

ஆனால், அவர் எதிர்பார்த்தது போல, எதிர்ப்பும் இல்லாத இணக்கமும் இல்லாத- நடுநிலை அரசியலை முன்னெடுக்க முடியாது போனது. ஏனென்றால், அவருக்கு அத்தகையதொரு வழியை மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் விட்டு வைக்கவில்லை.

விக்னேஸ்வரனை எதிரியாகவே கையாள முனைந்தது. ஆளுநராக இருந்த சந்திரசிறியைக் கொண்டு, அவரை நசுக்கவே முனைந்தது. அதனால் வேறுவழியின்றி அவரும் எதிர்ப்பு அரசியலுக்குள் மூழ்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். 

ஒரு கட்டத்தில் அவர் கூட்டமைப்பை விடவும் தானே, தீவிரமான எதிர்ப்பு அரசியலை முன்னெடுப்பவர் போலவும் காட்டிக் கொண்டார். பொதுத்தேர்தல் வரைக்கும் அவர் அதே நிலைப்பாட்டைத்தான் வெளிப்படுத்தினார். இப்போது திடீரென எதிர்ப்பும் இல்லை- இணக்கமும் இல்லை என்று, தனக்கு மிகவும் வசதியான, பாதுகாப்பாக வலயத்துக்குள் இருக்க முனைகிறார்.

கறுப்புக்கும் வெள்ளைக்கும் நடுவே இருப்பதன் மூலம், அவர், அரசாங்கத்துடன் பேசவும், இணக்கம் காணவும் தயாராக இருப்பதான சமிக்ஞையை வெளிப்படுத்தியிருக்கிறார். அரசுடன் பேசுவது தவிர்க்க முடியாதது. அரசுடன் பேசாமல் பிரச்சினையை தீர்க்கவும் முடியாது. அதற்கான சூழலும் இல்லை.

ஆனால், விக்னேஸ்வரன் எதிர்பார்ப்பது போல, பேசுவதற்கு அரசாங்கம் இடமளிக்குமா – வாய்ப்புக் கொடுக்குமா என்பது தான் பிரச்சினைக்குரிய விவகாரம். வடக்கு மாகாணசபையில் அவரை செயற்பட விடாமல் ஆளுநரைக் கொண்டு அடக்கிய நிர்வாகம் தான், இப்போது ஆட்சியில் இருக்கிறது.

அவர்களுடன், அரசியல் கைதிகள் தொடர்பாக அரசியல் தீர்வு தொடர்பாக, மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக பேச வேண்டும்.  ஆனால் விக்னேஸ்வரன் எதிர்பார்ப்பது போன்று, அவருடன் பேசக்கூடிய நிலையில் அரச தரப்பு இல்லையே. குறைந்தபட்சம் மக்களின் பிரச்சினைகளை ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லும் போது கூட, அதற்குப் பதிலளிக்கின்ற சம்பிரதாயத்தையாவது கடைப்பிடிக்கக் கூடிய அரசாங்கமாக இருக்க வேண்டும்.

அந்த சம்பிரதாயத்தைக் கூட தற்போதைய அரசாங்கம் கடைப்பிடிப்பதில்லை. இவ்வாறான அரசாங்கத்துடன் அரசியல் கைதிகள் குறித்து, அரசியலமைப்பு குறித்து, அரசியல் தீர்வு குறித்துப் பேசி தீர்வு காண்பதென்பது குதிரைக் கொம்பு என்பது இன்னமும் விக்னேஸ்வரனக்குத் தெரியாமல் இருந்தால், அவர் அரசியலில் பாலர் வகுப்பில் தான் இன்னமும் இருக்கிறார் என்றே கருத வேண்டும்.

தான் வாக்களித்தோ வாக்களிக்காமல் விடுவதாலோ எந்த விளைவும் ஏற்படாது என்ற கூறிய விக்னேஸ்வரனுக்கு,  இவருடன் பேசியென்ன, பேசாமல் விட்டென்ன என்ற மனோநிலை தான் அரசாங்கத்திடம் இருக்கிறது என்ற உண்மை தெரியாமல் போய் விட்டது. ஏனென்றால், அவர்களிடம் போதிய பலம் இருக்கிறது. எனவே, இந்த அரசாங்கத்துடன் எந்த அரசியலை முன்னெடுத்தாலும், விக்னேஸ்வரனாலோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினாலோ, பேசித் தீர்க்க முடியாது.

கடந்த அரசாங்கத்துக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லாத போதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவிலேயே அது காலத்தைக் கடத்தியது. அப்போதைய அரசாங்கத்துடன் சரியாக பேரம் பேசவில்லை என்றும், சந்தர்ப்பத்தை நழுவ விட்டு விட்டது என்றும் கூட்டமைப்பை குற்றம்சாட்டியவர்கள் ஏராளம். அவர்களில் விக்னேஸ்வரனும் விதிவிலக்கல்ல.

இப்போது அவர் எந்த நியாயத்தை கூறி தப்பிக்க முனைகிறாரோ, அதே நியாயம் தான் அப்போது கூட்டமைப்புக்கும் பொருத்தமானதாக இருந்தது. அதாவது கூட்டமைப்பு ஆதரவு கொடுக்காமல் போனாலும். முஸ்லிம் கட்சிகளின் ஆதரவுடன் நம்பிக்கை வாக்கெடுப்புகளையும், வரவு,செலவுத் திட்ட வாக்கெடுப்புகளையும் வெற்றி கொள்ளக் கூடிய நிலையில் ரணில் விக் கிரமசிங்க அரசாங்கம் இருந்தது.

எனவே, ஒரு கட்டத்துக்கு மேல் பேரம் பேசக்கூடிய நிலையில், கூட்டமைப்புக்கு வாய்ப்பும் இருக்கவில்லை. சூழலும் வாய்க்கவில்லை. ஆனாலும் விக்னேஸ்வரன் உள்ளிட்டவர்கள் கூட்டமைப்பை மிகக்டுமையாக விமர்சித்தனர். இணக்க அரசியல் செய்வதாக சோரம் போனதாக குற்றம் சாட்டினர்.

அரசுக்கு ஆதரவு அளித்த கூட்டமைப்பு, எதிர்க்கட்சி என்றால் எதிர்க்க வேண்டும் என்றில்லை என கூறிய நியாயத்தை, அப்போது, விக்னேஸ்வரன் ஏற்கத் தயாராக இருக்கவில்லை. இப்போது அவரும் அதே போர்வைக்குள் மறைந்து கொள்ள முனைந்திருக்கிறார். இது அவரது அப்பட்டமான அரசியல் குத்துக்கரணம் எனலாம்.

எதிர்ப்பதால் எந்த விளைவையும் ஏற்படுத்த முடியாது என்று தெரிந்து கொண்ட பின்னர், எதிர்க்காமல் விடுவதும், எதிர்ப்பதும் ஒன்றுதான் என்று அவர் கூறியிருக்கிறார். அரசாங்கம் தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வை வழங்கும் என்ற நம்பிக்கை, எந்தவொரு தமிழ்த் தலைவரிடமும் கிடையாது. ஆனாலும் அவர்கள் ஒன்றில் எதிர்க்கிறார்கள் அல்லது ஆதரிக்கிறார்கள்.

விக்னேஸ்வரனும் எதையோ ஒன்றைச் செய்ய முனைகிறார். அதன் மூலமும் விளைவுகளை ஏற்படுத்த முடியாது என்பது அவருக்குத் தெரியும். ஆனாலும் அவர் தனது அரசியலை விட்டு ஒதுங்கவில்லை. அது எவ்வாறு நியாயமானதோ, அதுபோல, தோல்வியா வெற்றியா என்பதை விட போராடுவது தான் முக்கியமானது.

விக்னேஸ்வரனின் பாதை வெற்றி என்றால் மட்டும் போராடுவது போன்றது. அவர் ஏன் திடீரென இவ்வாறு மாறினார் என்ற கேள்வி எழுகிறது. கடந்தவாரம் ஆங்கில வாரஇதழ் ஒன்று ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது. அதில், இந்தியாவின் ஆலோசனைப்படி தான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்கெடுப்பில் பங்கேற்காமல் விட்டது என்று கூறப்பட்டிருந்தது.

தனது நலன்களை உறுதிப்படுத்திக் கொள்ள முடியாத போது, இலங்கையைக் கையாளுவதற்கு தமிழ் அரசியல்வாதிகளை இந்தியா பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறது என்றும், இது இந்தியாவின் பழைய உத்தி என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அவ்வாறாயின், விக்னேஸ்வரனும் கூட, சாம்பல் நிற அரசியலை தெரிவு செய்திருப்பதற்குப் பின்னால் இந்தியா தான் இருக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது.

https://www.virakesari.lk/article/96901

 

  • கருத்துக்கள உறவுகள்

விக்கியையும்,கூட்டமைப்பையும் வழிநடத்தும் ஒரு சக்தி இருக்கிறது. அது இந்தியா.முக்கியமான தருணங்களில் அது அவர்களை அறியாமலே வெளிப்படுத்தப்படும். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போதும் மாணவர்களின் முயற்சியால் தயாரிக்கப்பட்ட 13 அம்சத் திட்டததை தயாரித்த போது முன்னணியை வெளியேற்றுவதில் விக்கினேஸ்வரன் கூட்டமைப்போடு சேர்ந்து நின்றார். உள்ளுராட்சித் தேர்தலின் போதும் கஜனுடன் கூட்டுச் சேர இருந்த சுரேஸ் திடீரென்று பல்டியடித்து ஆனந்த சங்கரியுடன் இணைந்தார். விக்கி கூட்டமைபபை விட்டு வெளியேறும் போது ஏற்கனவே கூட்டமைப்பிலிருந்து வெளியேறி கூட்டமைப்புக்கு எதராக அரசியல் செய்த கஜேந்திரகுமாருடன் சேர்ந்து ஒரு வலுவான கட்சியாக ஒருவாக்காமல் புதிதாக ஒரு கட்சியை உருவாக்கினார். ரெலோவில் இருந்து பிரிந்தவர்களும்இஅனந்தியும் புதிதாக கட்சிகளை உருவாக்கி விக்கியுடன் இணைந்தனர். எல்லாவற்றிற்கும் பின்னணி இந்தியா.இந்தியாவால் இலகுவில் கையாள முடியாதவராக கஜேந்திரகுமார் இருக்கிறார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.