Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சூகிக்காக வருந்துகிறீர்களா? இது இனவழிப்பை பற்றி கவலைப்பட வேண்டிய நேரம் – தமிழில் ஜெயந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சூகிக்காக வருந்துகிறீர்களா? இது இனவழிப்பை பற்றி கவலைப்பட வேண்டிய நேரம் – தமிழில் ஜெயந்திரன்

 
aung-san-suu-kyi-1.jpg
 5 Views

நூறு வகையான இனக்குழுமங்களைக் கொண்டதும் இந்தியா, பங்களாதேஷ், சீனா, லாவோஸ், தாய்லாந்து போன்ற நாடுகளுடன் எல்லைகளைப் பகிர்ந்துகொள்கின்ற ஒரு தென்கிழக்காசிய நாடுமான மியான்மாரில், அங்குள்ள அரசை இராணுவம் கைப்பற்றி விட்டது என்ற செய்தியோடு கடந்த வாரம் விடிந்தது. அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி (Aung San Suu Kyi) அவரது மிக நெருங்கிய சகாவும் மியான்மாரின் அதிபருமான வின் மியின்ற் (Win Myint) ) அவரது கட்சியின் உறுப்பினர்கள், தேசிய சனநாயக சபை (National League of Democracy – NLD)  போன்றோர் மியான்மார் இராணுவத்தால் சிறைப்பிடிக்கப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருக்கின்றனர். ஓராண்டு காலம் நீண்டு செல்லும் அவரசகாலச் சட்டத்தை அந்நாட்டு இராணுவம் உடனடியாகப் பிரகடனம் செய்திருக்கிறது.

மக்களால் தேர்தல் மூலமாகத் தேர்வுசெய்யப்பட்ட அரசுகளைக் கவிழ்க்கும் போது அந்த அரசுகள் ‘ஊழல்கள்” ‘மோசடிகள்” போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டதாகக் கூறியே அனைத்து ஆட்சிக் கவிழ்ப்புகளும் நிகழ்த்தப்படுகின்றன என்பது அனைவரும் அறிந்த அப்பட்டமான உண்மையாகும். ‘ரற்மடோ’ (Talmadaw) என்ற உத்தியோகபூர்வ பெயரைக் கொண்ட மியான்மார் இராணுவம் இதே குற்றச்சாட்டையே தாம் கவிழ்த்த அரசின் மீதும் சுமத்தியிருக்கிறது.

கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் 80 வீதமான வாக்குகளைப் பெற்று தேசிய சனநாயகக் கட்சி அமோக வெற்றி பெற்றிருந்தது. இராணுவம் பெற்ற வாக்குகளுடன் ஒப்பிடும் போது, 2019ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலை விட அதிக வித்தியாசத்தோடு ஆளுங்கட்சி வெற்றி பெற்றது. அவ்வேளையில் ஆங் சான் சூகியின் கட்சி, வாக்கு மோசடி செய்ததாக இராணுவம் குற்றஞ்சாட்டியிருந்தது,

சூகியின் என்எல்டி கட்சி நாடாளுமன்றத்திலுள்ள 476 ஆசனங்களில் 396 ஆசனங்களைப் கைப்பற்றிய அதேவேளை இராணுவத்துக்குச் சார்பான யூனியன் ஒற்றுமை மற்றும் அபிவிருத்திக்கட்சி (Union Solidarity and Development Partu – USDP) தேர்தலில் 33 ஆசனங்களை மட்டுமே பெற்றிருந்தது.

தேர்தல் நிறைவுபெற்று, அடுத்த அரசை அங்கீகரிப்பதன் மூலம் தேர்தல் முடிவுகளை நடைமுறைப்படுத்தும் நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு நடைபெற இருந்த நாளுக்கு முன்னைய நாள் அரசைக் கவிழ்க்கும் நிகழ்வு (Coup d’etat) அரங்கேற்றப்பட்டது.

மியான்மார் நாட்டின் அரசியலில் குறிப்பிடத்தக்க செல்வாக்கைச் செலுத்தி வருகின்றவரும், அந்நாட்டில் 2011ஆம் ஆண்டில் ஒரு ஆரம்பகட்ட சனநாய மாற்றம் தொடங்கப்பட்ட சூழலிலும் இராணுவத்தின் வலிமையை வெற்றிகரமாகத் தக்கவைத்து வந்தவருமான, பாதுகாப்பு சேவைகளின் உயர் கட்டளை அதிகாரியான (Commander-in-Chief) ) மீன் ஆங் ஹ்லேங் (Min Aung Hlaing) தற்போது நாட்டின் அதிபராக இருக்கிறார்.

இராணுவ ஆட்சிக்காலத்தில்

military-coup-in-myanmar-aung-san-suu-ky

ஜெனரல் ஆங் சானின் (Aung San) மகளே சூகி (Suu Kyi) ஆவார். பிரித்தானிய காலனீய ஆட்சியிலிருந்து 1948ஆம் ஆண்டில் மியான்மாரின் விடுதலையை வென்றெடுத்தவராக அவர் போற்றப்படுகிறார். அரசுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, சூகி 2010ஆம் ஆண்டு வரையும் ஏற்கனவே 15 ஆண்டுகளாக வீட்டுக்காவலில் தடுத்து வைக்கப்பட்டு உலகில் அதிகம் அறிமுகமான அரசியல் கைதி என அறியப்படுகிறார்.

வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த போது 1991ஆம் ஆண்டு சூகிக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டதுடன் ‘வலிமையற்றவர்களின் வலிமைக்கு எடுத்துக்காட்டானவர்” என்ற புகழாரமும் அவருக்குச் சூட்டப்பட்டது.

கடந்த முதலாம் திகதி திங்கட்கிழமை ஆட்சி கவிழ்க்கப்பட்ட நேரத்தில், மக்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த முன்வர வேண்டுமென்று சூகி அறைகூவல் விடுத்திருந்த போதிலும், வீதிகள் அனைத்தும் அங்கு அமைதியாகவே காட்சியளிக்கின்றன. அத்துடன் நகரங்கள் எல்லாவற்றிலும் இராணுவம் தமது ரோந்து நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதுடன் இரவுநேர ஊரடங்குச் சட்டமும் அங்கு அமுல் நடத்தப்படுகிறது.

ஒரு சில பொதுமக்கள் மட்டும் கறுப்புப் பட்டியைத் தங்கள் ஆடைகளில் அணிந்திருக்கும் அதே வேளை, சில மருத்துவப் பணியாளர்கள் அமைதிப் போராட்டம் என்பதைக் குறித்துக்காட்டும் சிவப்புப்பட்டிகளை அணிந்திருக்கிறார்கள். முன்னர் இராணுவ ஆட்சி நடைபெற்ற காலங்களில் இராணுவமயமாக்கலுக்குத் அமைதியான தமது எதிர்ப்பைப் பதிவு செய்வதற்காக வெவ்வேறு நிறப்பட்டிகளை அணியும் போராட்டம் முன்னர் கைக்கொள்ளப்பட்டிருந்தது.

கடந்த காலங்களில் நாட்டில் நிகழ்த்தப்பட்ட குருதி தோய்ந்த ஆட்சிக்கவிழ்ப்பு நிகழ்வுகளும் அவற்றைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆயிரக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வுகளின் நினைவுகளும் மக்கள் மனங்களில் இன்னும் பலமாக இருப்பதால் இன்றைய சூழ்நிலையில் பொதுமக்கள் தமது எதிர்ப்பைக் காட்டத் துணிந்து முன்வரமாட்டார்கள்.

முன்னர் பர்மா என்று அழைக்கப்பட்ட மியான்மாரில் 1962ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆட்சிக்கவிழ்ப்பின் பின்னர் தொடர்ந்து 12 வருடங்களாக நாட்டில் இராணுவ ஆட்சி நடைபெற்றது. இக்காலப் பகுதியில் தேசிய பொருண்மியம், அரசியல், அரச அதிகார நடைமுறை (state bureaucracy) போன்ற விடயங்களில் இராணுவத்தின் பங்கு மிகவும் பரவலாக்கப்பட்டது.

மீண்டும் ‘8888″ என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்ட நாடளாவிய மக்கள் எழுச்சிப் போராட்டத்தின் பின்னர், 1988ம் ஆண்டில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதோடு, 2013ஆம் ஆண்டு வரையும் அதாவது, 2011இல் தமக்குச் சார்பான கட்சியான யுஎஸ்டிபியிடம் ஆட்சியைக் கையளிக்கும் வரையும் 23 வருடங்களுக்கு இராணுவம் தமது ஆட்சியைத் தக்கவைத்திருந்தது.

இனமோதல்கள்

இராணுவ ஆட்சி மட்டுமன்றி, அங்கு நிகழ்கின்ற உள்நாட்டுப் பிரச்சினைகளும் அந்த நாட்டின் இன்னொரு முக்கிய பிரச்சினையாகும். பர்மாவின் தேசியவாதத்தையும் தேரவாத புத்த மறையையும் ஒருங்கிணைத்து, அரை நூற்றாண்டு காலமாக மியான்மாரை ஆட்சி செய்த இராணுவ அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட இராணுவ ஆட்சி, கிட்டத்தட்ட 100 இனக்குழுமங்கள் வாழ்கின்ற அந்த நாட்டில் சிறுபான்மை மக்களை அடக்கியாளும் ஒரு ஆட்சியாகவே இருந்திருக்கிறது.

அந்த நாட்டில் நடைபெற்றுவருகின்ற இன அடிப்படையிலான மோதல்களை நோக்கும் போது, அது ஏழு தசாப்தங்களுக்கு மேலாக நீண்டு செல்கின்ற, உலகில் மிக நீண்ட காலம் நீடிக்கின்ற இனமோதல் என்று சொல்வது மிகையாகாது.

மியான்மார் அரசும் அந்நாட்டு இராணுவமும் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்கும் 16 இனக்குழுமங்களுக்கு எதிராகப் போராடி வருகின்றன. இவற்றில் சில குழுக்கள் தமது சுயநிர்ணய உரிமைக்காகப் போராடிவருகின்ற அதே வேளை வேறு சில குழுக்கள் தமது சுதந்திரத்துக்காகவும் அதிகரிக்கப்பட்ட தன்னாட்சிக்காகவும் அல்லது அந்நாடு மாநில சுயாட்சிமுறையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துக்காகவும் போராடிவருகின்றன.

நிலைத்து நிற்கும் மோதல் தவிர்ப்பையும் நீடித்த அமைதியையும் ஏற்படுத்த பல முயற்சிகள் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட போதிலும் அவை எதுவுமே வெற்றிபெறவில்லை. 2015ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலைத் தொடர்ந்து, சூகியின் என்எல்டி கட்சி ஆட்சியைக் கைப்பற்றிய போது, இந்த மோதல்களை ஒரு முடிவுக்குக் கொண்டுவருகின்ற அமைதிப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதையே தனது ஆட்சியின் முக்கிய இலக்காக அவர் கொண்டிருந்தார்.

பன்னாட்டுச் சமூகத்தால் வரவேற்கப்பட்ட இந்த நகர்வே, சனநாயகத்தை நோக்கிய மியான்மாரின் பயணத்தின் ஒரு முக்கிய இலக்காக இருந்தது. அரசுக்கும் பல்வேறுபபட்ட ஆயுதப் போராட்ட குழுக்களுக்கும் முக்கியமாக கச்சின் மக்களுக்கான கச்சின் சுதந்திர அமைப்பு (Kachin Independence Organization – KIO)  காயா மாநிலத்தின் கரென்னி இராணுவம் (Karenni Army) ஷான் மக்களின் ஷான் மாநில இராணுவம் (Shan State Army) போன்ற குழுக்களுக்கிடையே பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன.

அது ஒரு இலகுவான பாதையாக இருக்கவில்லை என்பது மட்டுமன்றி அமைதியை நோக்கிய மியான்மார் நாட்டின் பயணமும் பலர் ஏற்கனவே அறிந்திருப்பது போன்று, தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் அதிகமாக இருப்பதன் காரணமாக, மென்மையான ஒன்றாகவும் இருக்கப் போவதில்லை. இப்போது இராணுவம் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி இருக்கின்ற காரணத்தினால் இந்த உள்நாட்டு மோதல்கள் மீண்டும் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருக்கின்றது.

ஹிலேங்கின் தலைமையில் இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆட்சிக்கவிழ்ப்பின் உண்மையான நோக்கம் எதுவென்று இன்னும் தெரியவில்லை. ஆனால் நாட்டின் அரசியல் செயற்பாடுகள் அனைத்திலும் இராணுவத்தின் முக்கிய பங்கைப் பேணிப்பாதுகாப்பதே அதன் முக்கிய நோக்கமாக இருக்கும் என ஊகிக்கலாம். அமெரிக்கா, ஏனைய மேற்குலக அரசுகள், துருக்கி ஆகியவை, நடத்தப்பட்ட ஆட்சிக்கவிழ்ப்பு தொடர்பாகத் தமது கண்டனத்தைப் பதிவுசெய்திருக்கின்றன. ஆனால் துரதிட்டவசமாக, ஐநா பாதுகாப்பு மன்றம் கொண்டுவந்த ஒரு கண்டனத் தீர்மானத்தை தனது வீட்டோ அதிகாரம் மூலம்; சீனா தடுத்திருக்கிறது.

உண்மையில் பேஜிங்குக்கும் (Beijing) ) சூகி, என்எல்டி கட்சி என்பவற்றுக்கும் இடையே நல்ல உறவே இதுவரை இருந்து வந்திருக்கிறது. ஆனால் மியான்மாரின் இராணுவத்தின் மீது முன்வைக்கப்படும் உலகளாவிய கண்டனம் நிலைமையை இன்னும் மோசமாக்க வழிசெய்யும் என்று சீனா எண்ணுவது இதற்குக் காரணமாக இருக்கலாம்.

ஆயுதப் போராட்டங்களை முன்னெடுக்கும் சில இனக்குழுமங்களுக்கு சீனா ஆதரவை வழங்கி வருகிறது என்று மியான்மாரின் இராணுவ அரசு அதன் மேல் முன்னர் குற்றம் சுமத்தி வந்திருக்கும் நிலையிலும், நீண்ட கால அடிப்படையில் மியான்மாரின் இராணுவ அரசும் சீனாவும் நல்லுறவைப் பேணுவதற்கான வாய்ப்புகளே அதிகமாகத் தென்படுகின்றன.

இன்னொரு வகையில் பார்த்தால், மியான்மார் நாட்டின் மேல் பன்னாட்டுச் சமூகத்தால் பிரயோகிக்கப்படும் அழுத்தம் குறிப்பிட்ட பிரதேசத்தில் சீனா கொண்டிருக்கும் நலன்களுக்குச் சாதகமாக அமையாது.

இது இப்படியிருக்க, 2021 ஜூலைக்கு முதல் ஹிலேங் ஓய்வுபெற இருக்கிறார் என்பதுடன் சீர்திருத்தத்தை மேற்கொள்ளக்கூடிய ஒருவர் கட்டளை அதிகாரியானால் இராணுவம் வைத்திருக்கும் நிகழ்ச்சி நிரலுக்கு அது சாதகமாக அமையப் போவதில்லை.

ஓய்வு பெற்ற பின்னர் ஹிலேங்கின் பலம் குறையக்கூடிய வாய்ப்பு இருக்கின்ற காரணத்தால் அவ்வகையில் ஹிலேங்குக்கு தனிப்பட்ட விதத்திலும் ஓர் ஆபத்து இருக்கிறது. உரோகிங்கியா மக்களுக்கு எதிராக இழைத்த குற்றங்களுக்காக பல பன்னாட்டு நீதிமன்றுகளில் அவர் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படுவார்.

ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்கும் குழுக்களோடு பேச்சுவார்த்தைகளை இராணுவ அதிகாரம் தொடர்ந்து முன்னெடுக்குமா அல்லது முன்னெடுப்பது போன்று காண்பிக்குமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் உரோகிங்கியா முஸ்லிம் மக்களது பிரச்சினையை மட்டும் இந்த இராணுவ அதிகாரம் கையிலெடுக்காது என்பதை உறுதிபடக் கூறமுடியும்.

https://www.ilakku.org/?p=42668

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆங் சான் சூகி மீது பரிதாபமா? இனவழிப்பை மறந்துவிட்டீர்களா? – தமிழில் ஜெயந்திரன் – பகுதி – 2

 
aung-san-suu-kyi-fans-join-vip-tours-for
 3 Views

உரோகிங்கியா மக்கள் மேல் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள்

சனநாயகத்தின் வடிவமாகப் பார்க்கப்பட்ட ஆங் சான் சூகியின் நிகழ்ச்சி நிரலில் உரோகிங்கியா மக்களின் விடயம் ஒருபோதுமே உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.

மேலும் உரோகிங்கியா மக்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என விடுக்கப்பட்ட அறைகூவல்கள் என்எல்டிக் கட்சியினால் மீண்டும் மீண்டும் கடுமையான முறையில் மறுக்கப்பட்டன. உண்மையில் மியான்மார் நாட்டை நீங்கள் தரிசிக்கச் செல்கின்ற போது, அங்குள்ள அரசியல்வாதிகளுடனோ அன்றேல் வீதிகளிலுள்ள பொதுமக்களுடனோ உரையாடல்களை மேற்கொள்ளும் போது ‘உரோகிங்கியா’ என்ற சொல் தவிர்க்கப்படும்   (taboo) ஒரு சொல்லாக இருப்பதைக் காணலாம். ‘உரோகிங்கியா’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதற்கு 2012ம் ஆண்டு அரசினால் தடைவிதிக்கப்பட்டது.

merlin_131498372_db5971f9-cadd-4388-8ae4

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் (Pope Francis) 2017ம் ஆண்டு மியான்மார் நாட்டைத் தரிசித்த தனது பயணத்தின் போது, உரோகிங்கியா முஸ்லிம்களை பகிரங்கமாகப் பெயர்சொல்லி அழைப்பதைத் தவிர்த்திருந்தார். ‘உரோகிங்கியா’ என்ற சொல்லை உச்சரிப்பதற்கு அருகிலுள்ள பங்களாதேஷ் நாட்டுக்குச் செல்லும் வரை அவர் காத்திருந்தார்.

அப்படிச் செய்வது ‘அவர்களின் முகத்தில் அடிப்பது போல இருந்திருக்கும்” என்று சொல்லி அவர் தனது முடிவை நியாயப்படுத்தியிருந்தார்.

அரசியல் ரீதியில் கவனமான தனது அணுகுமுறையின் காரணமாக உரோகிங்கியா மக்களுக்கு எதிராகக் குரூரமான பரப்புரைகளை மேற்கொண்டிருந்த அதிபர் ஹிலேங்குடன் ஒரு தனிப்பட்ட சந்திப்பை மேற்கொண்டு ‘கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரங்கள் மீண்டும் தொடரக்கூடாது” என்பதை அவரிடம் நேரில் தெரிவிக்க தனக்கு உதவியதாகத் திருத்தந்தை தெரிவித்திருந்தார்.

உரோகிங்கியா முஸ்லிம் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூரங்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகளில் முன்வைக்கப்பட்ட கண்டனங்களிலிருந்து மியான்மாரை எப்போதும் பாதுகாக்கின்ற நாடுகளாகவே சீனாவும் ரஷ்யாவும் இருந்து வந்திருக்கின்றன. ஆனால் தனது நாட்டில் உரோகிங்கியா முஸ்லிம் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகளை முற்று முழுதாக மறுத்ததன் காரணத்தினால், மனித உரிமைகளின் பாதுகாவலராகப் போற்றப்பட்ட ஆங் சான் சூகி உலகத்தின் நன்மதிப்பை இழக்க நேரிட்டது.

இதில் கவலை தரும் விடயம் எதுவென்றால், ஏனைய இனக்குழுமங்கள் அனைத்தும் இந்த முஸ்லிம் சிறுபான்மைச் சமூகத்தை எப்போதும் அலட்சியப்படுத்தியே வந்திருக்கின்றன. அப்படிப் பார்க்கும் போது முஸ்லிம் மக்கள் மேல் மியான்மார் நாட்டின் பொதுமக்கள் கொண்டிருந்த அபிப்பிராயத்தைப் பார்க்கும் போது, அரசு அவர்களைப் பற்றிக் கொண்டிருந்த அபிப்பிராயத்திலிருந்து அது பெரிதும் வேறுபடவில்லை என்பதே உண்மையாகும்.

முன்னர் ‘அறக்கன்’ (Arakan) என அழைக்கப்பட்டு தற்போது ‘றக்கைன்’ (Rakhine) என அழைக்கப்படும் பிரதேசத்தில் 18ம் நூற்றாண்டிலிருந்து உரோகிங்கியா முஸ்லிம் மக்கள் வசித்து வருகிறார்கள். ஆனால் 1982ம் ஆண்டில் அவர்களுக்குக் குடியுரிமை மறுக்கப்பட்டது. ‘சட்டவிரோதக் குடியேறிகள்’ என்று மியான்மார் அரசு அவர்களை இன்றும் அழைக்கிறது.

ஓர் குறிப்பிட்ட இனத்தையும் ஓர் குறிப்பிட்ட மறையையும் சார்ந்திருப்பதன் காரணத்தினால் கடுமையான துன்புறுத்தல்களையும் கடுமையான இனவாதத்தையும் தொடர்ந்து அதிகரித்துச்செல்கின்ற வன்முறைகளையும் உரோகிங்கியா முஸ்லிம் மக்கள் இன்றுவரை சந்தித்து வந்திருக்கிறார்கள். காரணமின்றிக் கைதுசெய்யப்படல், சித்திரவதைகள், அடிமை வேலை, கிராமங்கள் எரிக்கப்படல், பாலியல் வன்புணர்வுகள் போன்ற அநீதிகளுக்கு அவர்கள் ஆளாகியிருக்கிறார்கள்.

மியான்மாரிலிருந்து ஹொங்கொங் நாட்டுக்கு 2009 இல் வந்த ஒரு தூதுவர், ‘அவலட்சணமான அரக்கர்கள்’ ((ugly ogres) என்று உரோகிங்கியா முஸ்லிம் மக்களை பகிரங்கமாகவே அழைத்திருந்தார். உரோகிங்கியா மக்களை சாதாரண மனிதர்களாவே கருதாத பலரை மியான்மார் நாட்டில் நீங்கள் சந்திக்கலாம்.

இனச்சுத்திகரிப்பு

உலகிலே மிக நீண்ட காலமாகவே அதிக துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி வருகின்றவர்கள் என்பதுடன் எவராலும் மதிக்கப்படாதவர்கள் என்று கருதப்படும் உரோகிங்கியா மக்களுக்குப் பௌத்த மறையைப் பெரும்பான்மை மறையாகக் கொண்ட நாட்டில் எந்தவித சட்டபூர்வ உரிமையையும் இல்லை என்பது நோக்கத்தக்கதாகும்.

இராணுவம் இந்த மக்கள் மேல் வன்முறைத் தாக்குதல்களை மேற்கொள்கின்றது என்பதற்கப்பால், உரோகிங்கியா மக்களுக்கு எதிரான உணர்வுகளைக் கிளறி, றக்கைன் பிரதேசத்தில் மேற்குறிப்பிட்ட மக்கள் மீது வன்முறைக்கும்பல்கள் தாக்குதல்களைத் தொடுப்பதற்கு பௌத்த மறை சார்ந்த துறவிகள் காரணமாக இருந்திருக்கின்றனர்.

40279627_101.jpg

எடுத்துக்காட்டாக, பௌத்த தேசியவாதத்தை முன்னெடுக்கும் 969 இயக்கம், இச்சிறுபான்மை மக்கள் அழித்தொழிக்கப்பட வேண்டும் என மீண்டும் மீண்டும் அறைகூவல் விடுத்திருக்கிறது. முஸ்லிம் மக்களுக்கு எதிரான வெறுப்பூட்டும் பேச்சுகளும் காலத்துக்குக் காலம் மேற்கொள்ளப்பட்ட திட்டமிடப்பட்ட பரப்புரைகளும் இம் மக்கள் குழுமத்தின் மீது மிக மோசமான வன்முறைத் தாக்குதல்களைத் தூண்டி, ஆயிரக்கணக்கான உரோகிங்கியா சமூகங்களை அழித்து, 750,000க்கு மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்து செல்லக் காரணமாக அமைந்திருக்கின்றன.

மியான்மாரில் முஸ்லிம் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் வன்முறைகளை ‘இனச்சுத்திகரிப்பு’ என்று மனித உரிமை ஆர்வலர்கள் பெயரிட்டு அழைக்கிறார்கள்.

உரோகிங்கியா மக்களுக்கு எதிராக மனித குலத்துக்கெதிரான குற்றங்கள் இழைக்கப்பட்டிருக்கின்றன என ‘ஐக்கிய நாடுகள்’ ஏற்றுக்கொண்டிருக்கிறது. உரோகிங்கியா முஸ்லிம் மக்களுக்கு எதிராக மியான்மாரில் மேற்கொள்ளப்பட்டவை, ‘இனவழிப்பு’ என்ற வரைவிலக்கணத்துக்குள் உள்ளடக்கப்படக்கூடியவை என்றும் உரோகிங்கியா மக்கள் நடத்தப்பட்ட முறை இனவழிப்பைச் சுட்டிநிற்கிறது என்றும் அமெரிக்காவிலுள்ள யூத மக்களுக்கு எதிரான இனவழிப்பு தொடர்பான அருங்காட்சியகம் சார்ந்த ஆய்வாளர்கள் அண்மையில் தெரிவித்திருந்தார்கள்.

பன்னாட்டுச் சமூகத்தின் அழுத்தம் கணிசமாக அதிகரித்ததன் காரணமாக, 2017ம் ஆண்டில் பல்லாயிரக்கணக்கான உரோகிங்கியா ஏதிலிகளை, கொக்ஸ் பஸார் (Cox Bazaar) என்னும் இடத்தில் அமைந்துள்ள அகதி முகாம்களில் வைத்துப் பராமரிக்கின்ற அண்டைய நாடான பங்களாதேசுடன் மேற்படி ஏதிலிகள் மீண்டும் மியான்மாரில் குடியமர்த்தப்படுவார்கள் என்று பெருவிருப்பின்றியே ஒப்பமிட்ட இருதரப்பு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த தாம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக என்எல்டிக் கட்சி கடந்த வருடம் தெரிவித்திருந்தது.

ஒரு ஊடகவியலாளர் என்ற வகையில் பல போர்கள் தொடர்பான செய்திகளை நான் சேகரித்திருக்கிறேன். மோதல்கள் நடைபெறும் இடங்களிலிருந்து போர்க்குற்றங்கள் தொடர்பாக நேரடியாகவே தகவல்களைத் திரட்டியிருக்கிறேன். பாலியல் வன்புணர்வுகள், வன்முறைகள், சித்திரவதைகள் போன்ற பல்வேறு விதமான துஷ்பிரயோகங்களுக்கு முகம் கொடுத்தவர்களையும் சந்தித்திருக்கிறேன். ஆனால் உரோகிங்கியா முஸ்லிம் மக்கள் பட்ட துன்பங்களை மட்டும் வேறு எவரது துன்பங்களுடனும் ஒப்பிட முடியாது.

இந்த மக்களுக்கு நாடு என்று எதுவும் இல்லை. அண்டைய நாடுகளில் ஏதிலிகளாக இவர்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் இவர்களைப் வைத்துப் பராமரிப்பதற்கு இந்த நாடுகள் விரும்பவில்லை. அவர்களுக்கு உறைவிடங்கள் இல்லை. உணவையும் தூய குடிநீரையும் பெறுவதற்கே இவர்கள் நாளாந்தம் போராட வேண்டியிருக்கிறது.

இவர்களிடம் ஆடைகளோ காலணிகளோ இல்லை, இவர்கள் வாழ்ந்த இல்லங்களும் கிராமங்களும் அழிக்கப்பட்டுவிட்டன. இம்மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் காரணமாக இவர்களில் பெரும்பாலானோர் தமது குடும்ப உறவுகளையும் இழந்திருக்கிறார்கள். அரிவாட்களால் தாம் படுகொலை செய்யப்படுவதைத் தவிர்ப்பதற்காக இவர்கள் தப்பியோடுகிறார்கள். அவர்களுக்கு மிஞ்சியது எல்லாம் வறுமையும் துன்பமும் வேதனையும் அதிர்ச்சியான நிகழ்வுகளின் நினைவுகளும் கண்ணீரும் தான்.

மியான்மார் இராணுவம் அண்மையில் மேற்கொண்ட ஆட்சிக்கவிழ்ப்பின் காரணமாக அந்த நாட்டில் வாழும் அனைத்து மக்களும் ஆழமாகப் பாதிக்ப்படப்போகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த விடயமாகும். இருப்பினும் இவ்வாட்சிக் கவிழ்ப்பின் காரணமாக வார்த்தைகளால் விபரிக்க முடியாத மிகப்பயங்கரமான சூழலைச் சந்திக்கப் போவது உரோகிங்கியா முஸ்லிம் மக்களே என்பது மறுக்கப்படமுடியாத உண்மையாகும். இந்த மக்களுக்கு ஆண்டவனின் துணை கிடைக்கட்டும்!

நன்றி: டெய்லிசபா.கொம் (dailysabah.com)

முற்றும்.

 

https://www.ilakku.org/?p=43172

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.