Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு, தேர்தல் முடிவுகள் மே 2 வெளியீடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றங்களுக்கு வரும் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன.

இது தொடர்பாக டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரோ தலைமையில் தேர்தல் ஆணையத்தின் உயரதிகாரிகள் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 26) ஆலோசனை நடத்தினர். தேர்தல் நடத்தப்படும் மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள், காவல்துறை தலைமை இயக்குநர்கள், மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஆகியோரிடமும் அரசியல் கட்சிகளிடமும் கடந்த சில வாரங்களாக நடத்தப்பட்ட கலந்துரையாடல்கள் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அறிக்கை குறித்து இந்த கூட்டத்தில் தேர்தல் ஆணையர்கள் விவாதித்தனர்.

இதைத்தொடர்ந்து டெல்லியில் வெள்ளிக்கிழமை மாலையில் செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரோ, நான்கு மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேச சட்டப்பேரவை தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். அதன் விவரம்:

தமிழ்நாடு (234) மற்றும் புதுச்சேரி (30)

 

தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களில் உள்ள 234 தொகுதிகளில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும். தேர்தல் அறிவிக்கை மார்ச் 12, வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 19 , வேட்பு மனு பரிசீலனை மார்ச் 20, வேட்பு மனு திரும்பப் பெற கடைசி நாள் மார்ச் 22, வாக்குப்பதிவு ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறும். காலியாகவுள்ள கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு இதே அட்டவணையில் தேர்தல் நடத்தப்படும்.

அசாம் (126 தொகுதிகள்)

அசாமுக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடத்தப்படவுள்ளது. முதல் கட்டமாக 47 தொகுதிகளுக்கு மார்ச் 27ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. இரண்டாம் கட்டமாக 39 தொகுதிகளுக்கு ஏப்ரல் 1ஆம் தேதி நடத்தப்படும். மூன்றாம் கட்டமாக 40 தொகுதிகளுக்கு ஏப்ரல் 6ஆம் தேதி நடத்தப்படுகிறது.

கேரளா (140 தொகுதிகள்)

கேரளாவில் உள்ள 14 மாவட்டங்களில் உள்ள 140 தொகுகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. வாக்குப்பதிவு ஏப்ரல் 6ஆம் தேதி நடத்தப்படுகிறது. மல்லாபுரம் நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கும் இதே தேதியில் வாக்குப்பதிவு நடைபெறும்.

மேற்கு வங்கம் (294 தொகுதிகள்)

மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும். ஐந்து மாவட்டங்களில் உள்ள 30 தொகுதிகளுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு மார்ச் 27; 4 மாவட்டங்களில் உள்ள 30 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 1; 3 மாவட்டங்களில் உள்ள 31 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு, ஏப்ரல் 6; 5 மாவட்டங்களில் உள்ள 44 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு ஏப்ரல் 10; 6 மாவட்டங்களில் உள்ள 45 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு ஏப்ரல் 17; ஆறாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 22; 5 மாவட்டங்களில் உள்ள 36 தொகுதிகளுக்கு ஏழாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 26; 4 மாவட்டங்களில் உள்ள 35 தொகுதிகளுக்கு எட்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29ஆம் தேதியன்று நடத்தப்படும்.

அனைத்து மாநில சட்டப்பேரவைகளின் வாக்கு எண்ணிக்கை மே 2ஆம் தேதி நடத்தப்பட்டு முடிவுகள் அன்றே வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

294 தொகுதிகள் கொண்ட மேற்கு வங்கம், 234 தொகுதிகள் கொண்ட தமிழ்நாடு, 140 தொகுதிகள் கொண்ட கேரளா, 126 தொகுதிகள் கொண்ட அசாம், 30 தொகுதிகள் கொண்ட புதுச்சேரி என இந்த ஐந்து மாநில சட்டப்பேரவைகளுக்குமான 824 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள 18.68 கோடி வாக்காளர்கள் 2.7 வாக்குச்சாவடிகளில் வாக்களிப்பார்கள்.

வாக்குப்பதிவு, அரசியல் கட்சிகள் கட்டுப்பாடுகள்

கோவிட் - 19 பெருந்தொற்று கட்டுப்பாடுகள் மற்றும் பரவல் தடுப்பு நடவடிக்கையை கவனத்தில் கொண்டு அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கீழ்தளத்திலேயே வாக்குப்பதிவை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையை கருத்தில் கொண்டும், மத்திய உள்துறை அமைச்சகம், சுகாதாரத்துறை அமைச்சகம் ஆகியவை வெளியிடும் வழிகாட்டுதல்களின்படியும் இந்த தேர்தல் நடத்தப்படும்.

தேர்தல் செலவின வரம்புத்தொகை, புதுச்சேரியில் தொகுதிக்கு 22 லட்சம் எனவும் மற்ற மாநில சட்டமன்றங்களில் தொகுதிக்கு ரூ. 38 லட்சம் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு நேரம் 1 மணி நேரம் கூடுதலாக நீட்டிக்கப்படுகிறது. இதற்கான முடிவை மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரி எடுப்பார்.

வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிப்பவர்கள் ஐந்து பேருக்கு அதிகமாக இல்லாமல் இருக்க வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த மைதானங்களில் தேர்தல் பரப்புரைகளை நடத்தலாம் என்ற விவரத்தை சம்பந்தப்பட்ட மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகள் உள்ளூர் நாளிதழ் மற்றும் ஆங்கில நாளிதழில் வெளியிடுவார்கள்.

தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக பொதுமக்கள் பார்க்க நேர்ந்தாலும் அது பற்றிய தகவலை சி-விஜில் எனப்படும் செயலி வாயிலாக புகார் தெரிவிக்கலாம்.

சட்டமன்றங்களின் பதவிக்காலம் நிறைவு எப்போது?

தேர்தல் ஆணையம்

பட மூலாதாரம்,ECI

அசாம், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை பதவிக்காலம் வரும் மே, ஜூன் மாதங்களில் நிறைவு பெறவிருக்கிறது. இதில் தமிழ்நாட்டு சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் மே 24ஆம் தேதியும் புதுச்சேரி சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் ஜூன் 8ஆம் தேதியும் நிறைவு பெறுகிறது.

இதையொட்டி தேர்தல் நடைபெறவுள்ள ஐந்து மாநிலங்களில் தேர்தல் முன்னேற்பாடு நடவடிக்கைகளை கடந்த ஆண்டு இறுதியிலேயே தேர்தல் ஆணையம் தொடங்கியது. இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள், காவல்துறை தலைமை இயக்குநர், மாவட்ட ஆட்சியர், மாவட்ட கண்காணிப்பாளர்கள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் தேர்தல் ஆணையர்கள் காணொளி காட்சி மற்றும் நேரடியாக ஆலோசனை நடத்தினர்.

அரசியல் கட்சிகளின் கருத்துகளையும் அவர்கள் கடந்த வாரம் கேட்டறிந்தனர். இந்த நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவைகளுக்கான வாக்குப்பதிவு தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதிகாரிகள் இடமாற்றலுக்கு கட்டுப்பாடு

தேர்தல் காலங்களில் குறிப்பிட்ட தேர்தல் பணிகளை கவனிக்கும் அதிகாரிகள் அவரது வசிப்பிடம் அல்லது பூர்விக மாவட்டத்தில் நியமிக்கப்படக்கூடாது. அதே அதிகாரி கடந்த நான்கு ஆண்டுகளில் மே 31ஆம் தேதியன்றோ அதற்கு முன்னரோ, மூன்று ஆண்டுகள் பணி நிறைவை செய்யாதிருந்தால் அவரை இடமாற்றல் செய்யக்கூடாது.

ஒருவேளை கடந்த காலங்களில் குறிப்பிட்ட அதிகாரி, தேர்தல் பணி ஒழுங்கீனம் அல்லது அலட்சியமாக தேர்தல் பணியாற்றியதாக தேர்தல் ஆணையத்தால் அறியப்பட்டிருந்தாலோ அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்தாலோ, அடுத்த ஆறு மாதங்களில் பணியில் இருந்து ஓய்வு பெறவிருந்தாலோ அவர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

2017ஆம் ஆண்டில் நடந்த பொதுத்தேர்தல் அல்லது இடைத்தேர்தலின்போது அங்கு பணியில் இருந்த மாவட்ட தேர்தல் அதிகாரி, உதவி தேர்தல் அதிகாரி, காவல்துறை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் அல்லது அதற்கு மேல் உள்ள பதவியில் இருந்தவர்களை அங்கு தற்போதைய தேர்தலின்போது பணியமர்த்தாமல் இருக்க கவனம் செலுத்துமாறும் தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டிருக்கிறது. இந்த விதிகள், மாவட்ட தேர்தல் அதிகாரி, உதவி தேர்தல் அதிகாரி மட்டுமின்றி உதவி ஆட்சியர், சார் கோட்டாட்சியர், துணை ஆட்சியர், இணை ஆட்சியர், தாசில்தார், வட்டார வளர்ச்சி அதிகாரி, காவல்துறை தலைவர்கள், துணைத் தலைவர்கள், ஆயுதப்படை கமாண்டன்ட்டகள், முதுநிலை கண்காணிப்பாளர், கண்காணிப்பாளர், கூடுதல் கண்காணிப்பாளர்கள், துணை கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், தலைமைக் காவலர்கள் உள்ளிட்ட தேர்தல் பணி தொடர்புடையவர்களுக்குப் பொருந்தும் என்றும் தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியிருக்கிறது.

தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு, தேர்தல் முடிவுகள் மே 2 வெளியீடு - BBC News தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் தேதி அவசரமாக அறிவிப்பு: திமுகவுக்கு வைத்த ஆப்பு!

spacer.png

 

அதிர்ந்து போய்க்கிடக்கிறது தமிழக அரசியல் வட்டாரமே. ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என யாருமே எதிர்பாராத நாளில் திடீரென தேர்தல் தேதியை அறிவித்திருக்கிறது தேர்தல் ஆணையம். மார்ச் முதல் வாரத்தில்தான் தேர்தல் தேதி அறிவிக்கப்படுமென்றுதான் ஆளும்கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் எதிர்பார்த்திருந்தனர். அதற்கேற்ப தங்கள் திட்டங்களையும் வகுத்திருந்தனர். ஆனால் பிரதமர் மோடி தமிழகத்துக்கு வந்து சென்ற மறுநாளே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. சட்டசபை முடிந்த ஒரு மணி நேரத்திற்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை என்கிறார்கள். இதனால் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி இரு தரப்பும் பெரும் பதற்றத்தில் இருப்பது பளிச்சென்று தெரிகிறது.

இப்படி திடீரென அறிவிப்பு வரலாம் என்பது ஆளும்கட்சிக்கும் முன் கூட்டியே தெரிந்ததாகத் தெரியவில்லை. ஆனாலும் பிப்ரவரி 23 அன்றே இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்து விட்டனர். தனது சொந்த ஊருக்குச் சென்றிருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நேற்று காலையில்தான் சென்னை திரும்பினார். வழக்கம்போல சட்டசபை காலையில் கூடியது. ஏற்கெனவே எதிர்க்கட்சிகள் இந்த சட்டசபைக் கூட்டத்தொடர் முழுவதையும் புறக்கணித்திருந்ததால் பதற்றமின்றி ஆளும்கட்சி எம்எல்ஏக்கள் கூடிப்பேசிக் கொண்டிருந்தனர். ரிலாக்ஸ் ஆகவே எல்லோரும் காணப்பட்டனர்.

இன்று (நேற்று) மாலை பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளதாக நேற்று காலையில் தகவல் பரவியதும் எல்லோருக்குள்ளும் பதற்றம் பற்றிக்கொண்டது. அப்போதும் வேறு ஏதாவது அறிவிப்பு இருக்கவே வாய்ப்புண்டு; அடுத்த வாரம்தான் அறிவிப்பார்கள் என்றெல்லாம் ஆளும்கட்சி எம்எல்ஏக்கள் பேசிக்கொண்டதையும் கேட்க முடிந்தது. ஆனாலும் வேகவேகமாக கேள்வி நேரத்தை முடித்தார் சபாநாயகர். மதியம் 12 மணிக்குள் 110 விதியின் கீழ் முதல்வர் பல சலுகைகளை அறிவித்தார். தமிழகக் கூட்டுறவு வங்கிகளில் ஆறு சவரன் நகை வரையில் அடகு வைக்கப்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி, மகளிர் சுய உதவிக்குழுக்களின் கடன் தள்ளுபடி செய்யப்படுமென்றார்.

அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் எல்லோரும் மேசையைத் தட்டி ஆரவாரம் செய்தனர். அமைச்சர்களில் தங்கமணி, மணியன் இருவர் முதல்வருக்கு நன்றி தெரிவித்துப் பேசினர். மற்றவர்கள் பலரும் பேசுவதற்கு அனுமதி கோரியபோதும் அனுமதி தரப்படவில்லை. அறிவிப்புகளை முடித்துவிட்டு முதல்வர் வேகமாக தன் அறைக்குச் சென்றார். சபையில் இருந்த அமைச்சர்களும் தங்கள் அறைகளை நோக்கிச் சென்றனர். ஐஏஎஸ் அதிகாரிகளும், அவர்களுக்குக் கீழிருக்கின்ற உதவியாளர்களும் கோப்புகளைத் தூக்கிக் கொண்டு அங்குமிங்குமாக அலைய தலைமைச் செயலகமே தகதகவென பரபரப்பு பற்றிக்கொண்டது.

மதியம் மீண்டும் சட்டசபை கூடுவதற்கு முன்பே, முதல்வரை பாமக தலைவர் ஜி.கே.மணி சந்தித்துப் பேசிவிட்டுத் திரும்பினார். அப்போதே வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறப் போகிறது என்று தகவல் வெளியானது. அதன்படியே பட்ஜெட் உரை விவாதத்தில் பலரும் பேசி முடித்ததும் மசோதா நிறைவேற்றப்பட்டது. சட்டசபை முடிந்த ஒரு மணி நேரத்திற்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இன்று நடக்கவிருந்த அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன. தேர்தல் தேதி இவ்வளவு விரைவாக அறிவிக்கப்படுமென்று தெரியாததால்தான் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக ஆளும்கட்சி தரப்பில் விளக்கம் தருகின்றனர். ஆனால் இந்தத் தகவல் முதல்வருக்கு முந்தைய நாள் இரவே உளவுத்துறை மூலமாகத் தெரிந்து விட்டதை ஐ.பி.எஸ்., வட்டாரங்கள் உறுதி செய்கின்றன.

 

இன்னும் பல கோப்புகளில் அமைச்சர்கள் கையெழுத்திட வேண்டியிருந்த நிலையில், திடீரென இந்த அறிவிப்பு வந்ததில் அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் என பலரும் பதற்றமாகியுள்ளனர். முந்தைய தேதியிட்டு கையெழுத்திடுவதற்கு முயற்சி நடந்து, அது அதிகாரிகள் மூலமாக வெளியில் கசிந்து விடும் அபாயம் இருப்பதால் சில அமைச்சர்கள் நேற்று மிகமிகப் பரபரப்பாகக் காணப்பட்டனர். ஆனால் ஆளும்கட்சியை விட திமுகவுக்குதான் இதில் பேரதிர்ச்சி என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

‘‘தேர்தல் தேதிகள் அனைத்தும் பாரதிய ஜனதாவுக்கு விருப்பமான நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இருவருடைய விருப்பப்படியே இந்த தேதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன!’’ என்று மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் தமிழகத்தில் எந்தவொரு எதிர்க்கட்சியும் இதுவரை தேர்தல் ஆணையம் குறித்து எந்த குற்றச்சாட்டையும் முன் வைக்கவில்லை. இருப்பினும் இந்த அறிவிப்பு, தங்களைக் குறி வைத்து நடந்த தாக்குதல் என்றுதான் திமுக தலைமையும் நினைப்பதாகத் தெரிகிறது. அதேநேரத்தில் இதுபற்றி எந்தக் கருத்தையும் அக்கட்சியின் சார்பில் யாரும் வெளியிடவில்லை.

இவ்வளவு அவசரமாக தேர்தல் தேதி அறிவிப்பதற்கான காரணமென்ன என்று டெல்லியிலுள்ள தேர்தல் ஆணைய அதிகாரிகள் வட்டாரத்தில் விசாரித்தோம். தமிழகத்தைச் சேர்ந்த சில அதிகாரிகள் சில விஷயங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டனர்...

‘‘நான்கு மாநிலங்களுக்கும் சேர்த்து தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டாலும், இவ்வளவு குறுகிய காலத்தில் தேர்தல் தேதியை நிர்ணயித்ததற்குக் காரணம் தமிழகம்தான். பிரதமர் தமிழக விசிட்டை முடித்து விட்டு திரும்பியதுமே, தேர்தல் தேதியை அறிவிப்பதற்கு அங்கிருந்து சிக்னல் தரப்பட்டது. அதற்கு தமிழகத்தில் அவருக்குக் கிடைத்த உளவுத்துறை தகவல்கள் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. தேர்தலுக்கான செலவுகளுக்கு திமுக திணறிக்கொண்டிருக்கிறது. ஏற்கெனவே அந்தக் கட்சிக்குப் பணம் வரும் வழிகள் அனைத்தும் குறிப்பிட்ட சில ஐ.டி.ரெய்டுகளால் அடைக்கப்பட்டுவிட்டன. தேர்தல் தேதியை அறிவித்துவிட்டால் இனியும் பணம் வருவதைத் தடுத்துவிடலாம். பணம் தருவோரும் இனிமேல் கொடுப்பதற்குப் பயப்படுவர். முற்றிலுமாக பணம் வரும் வழிகளைத் தடுத்து விட்டால் திமுகவின் வெற்றியைப் பெருமளவில் தடுத்துவிடலாம் என்று பாரதிய ஜனதா தலைமை கணக்குப் போட்டிருக்கிறது. அதன் அடிப்படையில்தான் இவ்வளவு அவசரமாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது!’’ என்றார்கள்.

திமுக மாநில நிர்வாகி ஒருவரும் இதை ஒப்புக்கொண்டார். அவர் நம்மிடம் பேசுகையில், ‘‘அதிமுகவைப் பொருத்தவரை, சில மாதங்களுக்கு முன்பே, மாநிலம் முழுவதும் வாக்காளர்களுக்கான பணப்பட்டுவாடாவுக்குத் தேவையான பணத்தை உரிய இடங்களில் சேர்த்து விட்டார்கள். சில குறிப்பிட்ட நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களைக் குறி வைத்து ஐ.டி.ரெய்டுகளை நடத்தி திமுகவுக்கு பணம் வரவிடாமல் தடுத்துவிட்டனர். தேர்தல் செலவுக்கும், வாக்காளர்களுக்குத் தரவும் பணம் எதுவுமில்லை என்பதுதான் தற்போதைய நிலைமை. திடீரென தேர்தல் தேதி அறிவித்ததே, திமுகவின் வெற்றிக்கு ஆப்பு வைப்பதற்குத்தான். ஆனால் நாங்கள் அதையும் கடந்து மக்கள் ஆதரவோடு வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு நிறையவே இருக்கிறது!’’ என்றார்.

தேர்தல் ஆணையத்தின் ஆட்டம் இனிதான் ஆரம்பமாகப் போகிறது!
 

https://minnambalam.com/politics/2021/02/27/14/DMK-pegged-by-an-urgent-resolution-for-election

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.