Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனாவின் கடன் பொறியில் சிதைந்த ‘கொழும்பு’

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவின் கடன் பொறியில் சிதைந்த ‘கொழும்பு’

புருஜோத்தமன் தங்கமயில் 

கொழும்புத் துறைமுக நகர ஆணைக்குழுச் சட்டம், கடந்த வாரம் நடைமுறைக்கு வந்தது.  

தெற்காசியாவின் பிரதான துறைமுகங்களில் ஒன்றான, கொழும்புத் துறைமுகத்தோடு இணைந்த கடற்பகுதிக்குள் மணலை நிரப்பி, புதிய துறைமுக நகர் உருவாக்கப்பட்டு இருக்கின்றது. 

கொழும்பு மாவட்டத்தின் ஒரு பகுதியாக துறைமுக நகர், கடந்த நல்லாட்சிக் காலத்தில் இணைக்கப்பட்டாலும், அதன் ஆட்சியுரிமை என்பது, துறைமுக நகர ஆணைக்குழுச் சட்டத்தின் ஊடாக, சீனாவிடம் வழங்கப்பட்டு இருக்கின்றது.  

நாட்டின் இறைமை, ஒருமைப்பாடு பற்றியெல்லாம், தென் இலங்கையில் கடந்த காலங்களில் பேசிக் கொண்டிருந்த தரப்புகள் எல்லாமும், துறைமுக நகர் விடயத்தில் கிட்டத்தட்ட பேசாமடைந்தைகளாக மாறிவிட்டன.   

இலங்கை, பௌத்த சிங்களவர்களுக்கானது என்று, மதவாத பேரினவாத சிந்தனைகளைக் கடந்த காலங்களில் கொண்டு சுமந்தவர்கள் எல்லோரும், கொழும்புத் துறைமுக நகர் விடயத்தில், மூச்சைக்கூட விடவில்லை. தமிழ் மக்களின் சமஷ்டிக் கோரிக்கைகளைக்கூட, பிரிவினைவாதமாக முன்னிறுத்தி, அயோக்கியத்தனம் புரிந்தவர்கள், இன்றைக்குத் தனி நாடு ஒன்றுக்கான அதிகாரத்தை, துறைமுக நகருக்கு வழங்கும் போது, வாய்மூடி மௌனிகளாகி விட்டனர். அவர்களின் வாய்களை, எத்தனை மில்லியன் ‘யுவான்’கள் நிறைத்தன என்பது இப்போதைய கேள்வி.  

பிரித்தானியர்களின் ஆட்சிக் காலத்தில், கொழும்புத் துறைமுகம் மிகவும் திட்டமிட்ட முறையில், தெற்காசியாவின் முதன்மைத் துறைமுகமாக உருவாக்கப்பட்டது. பம்பாய், கொல்கத்தா துறைமுகங்கள் போல, கொழும்புத் துறைமுகத்தின் உட்புற - வெளிப்புற கட்டமைப்புகளும் முதலிடத்தில் பேணப்பட்டன.  

இன்றைக்கும் கொழும்புத் துறைமுகத்தின் கட்டமைப்பு, பிரித்தானியர்களின் ஆட்சிக் காலத்திலிருந்து பெரியளவில் மாறிவிடவில்லை. கொழும்புத் துறைமுகம், பம்பாய், கொல்கத்தா துறைமுகங்களை விட, அதன் அமைவிடத்தால், எப்போதுமே முதன்மையாக விளங்கி வந்திருக்கின்றது.   

அதாவது, உலகம் பூராவும் பயணிக்கும் கப்பல்களில், மூன்றில் ஒரு மடங்கு கப்பல்கள் பயணிக்கும் வழித்தடத்தில், கொழும்புத் துறைமுகம் அமைந்திருக்கின்றது. சரக்குகளை ஏற்றி இறக்குதல் மாத்திரமின்றி, கப்பல்களுக்கான எரிபொருள் நிரப்புதல், உணவுக் கொள்வனவு தொடங்கி இன்னோரன்ன தேவைகளுக்காகவும் ஒரு தரிப்பிட மையமாகவும் கொழும்புத் துறைமுகம் விளங்கி வருகின்றது.  

சிங்கப்பூர் தன்னுடைய பொருளாதாரத்தைப் பல வழிகளில் பெருக்கிக் கொண்டது. ஆனால், அதில் துறைமுகத்தைக் கொண்டு உருவாக்கிய பரிவர்த்தனை மிக முக்கியமானது. கடந்த 50 ஆண்டுகளில், சிங்கப்பூரின் வளர்ச்சியானது அதன் துறைமுகக் கட்டமைப்பில் பெருமளவு தங்கியிருக்கின்றது.   

பசிபிக் - இந்து சமுத்திர கப்பல் வழித்தடங்களில் கொழும்புத் துறைமுகத்தை மீறி, சிங்கப்பூர் துறைமுகம் தன்னைப் பல மடங்கு வளர்த்துக் கொண்டது. ஆனாலும் கூட, இன்றைக்கும் இந்தியத் துறைமுகங்களை விட வெளிநாட்டுக் கப்பல்களின் போக்குவரத்து என்பது, கொழும்புத் துறைமுகத்துடனே பேணப்பட்டு வருகின்றது.   

அப்படியான நிலையில், கொழும்புத் துறைமுகத்தின் தேவை என்பது பிராந்திய வல்லரசுகளுக்கு அவசியப்படுவது இயல்பானதுதான். அதாவது, ‘நலிந்தவனிடம் இருக்கும் அனைத்துமே, வலியவனுக்கு உரியது’ என்பது அதர்மத்தின் விதி.   

அந்த விதியின் தளத்தில் நின்றுகொண்டுதான், சீனாவும் இந்தியாவும் மல்லுக்கட்டின. கொழும்புத் துறைமுகத்தைப் பகுதி பகுதியாகக் கூறுபோடும் வேலைகளைச் செய்தன. அதில், சீனா கிட்டத்தட்ட முழுமையான வெற்றியைப் பெற்றுவிட்டது.  

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியா கோரிய போது, நல்லாட்சி அரசாங்கம் அதற்கு ஒத்துழைத்தது. ஆனால், அதற்கு எதிராக தென் இலங்கையின் பௌத்த சிங்கள அடிப்படைவாதத் தரப்புகள் தொடங்கி, பல்வேறு தரப்புகளும் பெரும் போராட்டங்களை முன்னெடுத்தன.   

கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்குவதில்லை என்ற முடிவுக்கு அரசாங்கம் வந்தது. வேணுமென்றால் மேற்கு முனையத்தை இந்தியா பெற்றுக் கொள்ளலாம் என்றவாறாக முன்வைப்புச் செய்யப்பட்டது. 

கிழக்கு முனையம் விவகாரத்தில் பெரும் போராட்டங்களை முன்னெடுத்த தரப்புகளின் பின்னால், சீனா இருந்தமைக்கான சந்தேகம் வெளியிடப்பட்டது. ஏனெனில், அந்தச் சக்திகள், கொழும்புத் துறைமுக நகர் விடயத்தில் அமைதியாவிட்டன.  

கொழும்புத் துறைமுக நகருக்கு வழங்கப்பட்டிருக்கின்ற அதிகாரங்கள், கிட்டத்தட்ட தனி நாட்டுக்கு ஒப்பானவை. அப்படியான நிலையில், அங்கு ஆட்சி செலுத்தும் தரப்புகள், தங்களது நலன்களுக்காக அனைத்து வகை ஏற்பாடுகளையும் அங்கு செய்யும். அத்தோடு, தன்னைச் சுற்றியுள்ள கட்டமைப்புகளை உடைப்பது முதல், உளவு பார்ப்பது வரையில் செயற்படும்.   

இலங்கையின் ஆட்சி நிர்வாகக் கட்டமைப்பு என்பது, கொழும்புக்கு உள்ளேயே சுருக்கப்பட்டிருக்கின்ற நிலையில், அதைக் கண்காணிப்பது, துறைமுக நகரின் ஆட்சித் தரப்புகளுக்கு இலகுவானது. அத்தோடு, கொழும்புத் துறைமுகத்தின் இயக்கத்தை, முழுவதுமாகக் கண்காணித்து, எதிர்காலத்தில் கட்டுப்படுத்தும் தளத்துக்கும் தன்னை முன்னிறுத்தும்.  

சீனாவின் கடன்பொறிக்குள் இலங்கை முழுவதுமாக விழுந்துவிட்டது. அதிலிருந்து மீள்வது என்பது, அவ்வளவு இலகுவானதல்ல. ஏனெனில், வறிய ஆபிரிக்க நாடுகள் பலவற்றுக்கு, சீனா வழங்கிய கடன்கள் மீளப்பெறும் நோக்கோடு வழங்கப்பட்டவை அல்ல.   

மாறாக, அந்தக் கடன்களுக்காக அந்த நாடுகளின் வளங்களைச் சுரண்டுவதற்கான முழுமையான அனுமதியைப் பெறும் நோக்கில் வழங்கப்பட்டவை. எத்தியோப்பியா, நைஜீரியா, சம்பியா, அங்கோலா தொடங்கி, பல ஆபிரிக்க நாடுகளிலும் ஆட்சிகள் மாறினாலும், சீனாவின் வளச்சுரண்டலுக்கான அனுமதியில் யாரும் தலையிடுவதில்லை.   

ஏனெனில், அந்த நாடுகள் சீனாவின் கடன்பொறிக்குள் முழுவதுமாகச் சிக்கிவிட்டவை. கேள்விகளைக் கேட்க முடியாது என்ற நிலையை, சீனா அங்கு பெற்றுவிட்டது. அப்படியான நிலையையே, இலங்கையிலும் சீனா இன்றைக்குச் செய்து கொண்டிருக்கின்றது.  

கொழும்புத் துறைமுக நகருக்கான தங்கு தடையின்றிய அனுமதியை, ஆணைக்குழு சட்டத்தை நிறைவேற்றிப் பெற்றுக்கொண்டதோடு, கொழும்பின் பிரதான பகுதிகளிலுள்ள அரச நிலங்களையும் கொள்வனவு செய்யும் முனைப்போடு சீனா இயங்கிக் கொண்டிருக்கின்றது. 

பொலிஸ் தலைமையகம் அமைந்திருக்கின்ற கொழும்பின் மையப்பகுதி தொடங்கி, காலி முகத்திடலை அண்மித்த பல பகுதிகளையும் சீனாவுக்கு 99 வருட குத்தகைக்கு வழங்க அரசாங்கம் முயல்வாக, எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன.  

 ராஜபக்‌ஷர்களின் முதல் ஆட்சிக் காலத்தில், காலி முகத்திடலுக்கு முன்னால் அமைந்திருந்த இராணுவத் தலைமையகம், அங்கிருந்து கொழும்பின் புற நகருக்கு மாற்றப்பட்டு, அந்தப் பகுதி, சீனாவின் முக்கிய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. இன்றைக்கு அந்தப் பகுதியில் பிரதான நட்சத்திர விடுதிகள், கடைத் தொகுதிகள் முளைத்திருக்கின்றன. அவ்வாறானதொரு நிலை, கொழும்பின் பல பகுதிகளுக்கும் எதிர்காலத்தில் நேரலாம் என்ற அச்சம் அதிகரித்திருக்கின்றது. இப்படியாக, இலங்கையைச் சீனா கூறுபோட்டுக் கொண்டிருக்கும் நிலையில், ‘அணிலை மரத்தில்  ஏறவிட்ட பூனை’யின் நிலைக்கு இந்தியா வந்திருக்கின்றது.   

ஒரு காலத்தில், இலங்கையைப் ‘பெரியண்ணன்’ நிலையில் இருந்து இந்தியா கையாண்டிருக்கின்றது. ஆனால், அந்த நிலை இன்று இல்லை. கொழும்பு நிலப்பகுதிகள் மாத்திரமல்ல, கொழும்பு ஆட்சிக் கட்டமைப்பும் சீனாவின் பிடிக்குள் சென்றுவிட்டது.   

அப்படியான நிலையில், அந்தக் கட்டமைப்புக்குள் ஆளுமை செலுத்துவது, இந்தியாவால் இனி முடியாத காரியம்.  

கொழும்பை முன்னிறுத்திய சர்வதேச ஆட்டத்தில், பெரும் நிதியைக் கொட்டி, சீனா வெற்றியீட்டி இருக்கின்றது. சீனாவின் வெற்றிக்கு, தென் இலங்கையின் ஆட்சியாளர்கள், பலமாக ஒத்துழைத்து இருக்கிறார்கள். அந்த ஒத்துழைப்பு என்பது, நாட்டின் எதிர்காலத்தைக் குறித்த சிந்தனையோடு வழங்கப்பட்டது அல்ல.

மாறாக, அவர்களின் தனிப்பட்ட குடும்ப ஆட்சி நலன்களை முன்னிறுத்தி வழங்கப்பட்டவை.  அது, நாட்டைத் தீராத கடன்களுக்குள் சிக்க வைத்துள்ளதுடன், நாட்டு மக்களை பெரும் பொருளாதார சுமைக்குள் தள்ளியிருக்கின்றது.    
 

 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/சீனாவின்-கடன்-பொறியில்-சிதைந்த-கொழும்பு/91-273461

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.