Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுக்ரேன் Vs ரஷ்யா: புதின் ராணுவத்தின் மிகப்பெரிய தவறுகள் என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யுக்ரேன் Vs ரஷ்யா: புதின் ராணுவத்தின் மிகப்பெரிய தவறுகள் என்ன?

  • ஜோனாத்தன் பீல்
  • பாதுகாப்பு செய்தியாளர்
6 மணி நேரங்களுக்கு முன்னர்
 

கைவிடப்பட்ட பீரங்கி டாங்கிகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ரஷ்யா உலகின் மிகப்பெரிய மற்றும் சக்திவாய்ந்த ராணுவ பலத்தைக் கொண்ட நாடுகளில் ஒன்றாகும், ஆனால் யுக்ரேன் மீதான அதன் ஆரம்பகால படையெடுப்பு நடவடிக்கையின்போது அது வெளிப்படையாக இருக்கவில்லை. மேற்கு நாடுகளில் உள்ள பல ராணுவ ஆய்வாளர்கள் போர்க்களத்தில் ரஷ்யாவின் செயல்திறனைக் கண்டு ஆச்சரியமடைந்துள்ளனர். அவர்களில் ஒருவர் அதை "மோசமான நடவடிக்கை" என்று அழைக்கிறார்.

யுக்ரேனுக்குள் ரஷ்ய ராணுவத்தின் முன்னேற்றங்கள் பெரும்பாலும் முடங்கி விட்டதாகவே தோன்றுகிறது, மேலும் சிலர் ரஷ்யா இப்போது சந்தித்த இழப்புகளிலிருந்து மீள முடியுமா என்று கேள்வி எழுப்புகின்றனர்.

இந்த வாரம், ஒரு மூத்த நேட்டோ ராணுவ அதிகாரி பிபிசியிடம் பேசுகையில், "ரஷ்யர்கள் தெளிவாக தங்கள் இலக்குகளை அடையவில்லை, அநேகமாக கடைசியல் கூட அவர்கள் இலக்கை அடைய மாட்டார்கள்," என்று கூறினார். இதையடுத்து யுக்ரேன் மீதான ராணுவ நடவடிக்கையின்போது ரஷ்யா செய்த தவறுகள் என்ன என்பது குறித்து மூத்த மேற்கத்திய ராணுவ அதிகாரிகள் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் சிலரிடம் பேசினேன்.

தவறான அனுமானங்கள்

ரஷ்யாவின் முதல் தவறு, எதிர்ப்பின் வலிமையையும் யுக்ரேனின் சிறியது ஆனால் சொந்த ஆயுதப் படைகளின் திறன்களையும் குறைத்து மதிப்பிட்டதாகும். ரஷ்யாவின் ஆண்டு பாதுகாப்பு பட்ஜெட் 60 பில்லியன் டாலர்களை விட அதிகம். யுக்ரேனின் பாதுகாப்பு செலவினமோ 4 பில்லியன் டாலருக்கும் சற்றே அதிகமானது.

இதேவேளை, ரஷ்யாவும் வேறு சில நாடுகளும் தங்களின் சொந்த ராணுவ படை பலத்தை மிகை மதிப்பீடு செய்து விட்டதாகத் தோன்றுகிறது. அதிபர் புதின் தனது ராணுவத்திற்கான லட்சியம் மிகுந்த நவீனமயமாக்கல் திட்டத்தைத் தொடங்கினார், அவரும் அது பற்றிய தமது சொந்த பிம்பத்தை நம்பியிருக்கலாம்.

 

ஆக்கிரமிப்புக்கு முன்பு ரஷ்யா, யுக்ரேன் இடையிலான படை பலத்தை காட்டும் வரைபடம்

 

1px transparent line

ஒரு மூத்த பிரிட்டிஷ் ராணுவ அதிகாரி, ரஷ்யாவின் முதலீட்டில் பெரும்பகுதி அதன் மிகப்பெரிய அணு ஆயுதங்கள் மற்றும் அவை தொடர்பான சோதனைகளுக்கே செலவிடப்பட்டுள்ளது என்று கூறுகிறார். இதில் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் போன்ற புதிய ஆயுதங்களை உருவாக்குவது அடங்கும்.

உலகின் அதிநவீன டாங்கியான டி-14 அர்மாட்டாவை ரஷ்யா தயாரித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் இது மாஸ்கோவின் வெற்றி தின கொண்டாட்டத்தின் அங்கமாக செஞ்சதுக்கத்தில் காணப்பட்ட இந்த ரக டாங்கியை, போர்க்களத்தில் எங்கும் காண முடியவில்லை.

ரஷ்யா களமிறக்கிய டாங்கிகளில் பெரும்பாலானவை பழைய டி-72 ரக டாங்கிகள், படை வீரர்களை ஏற்றிச் செல்லும் கவச வாகனங்கள், பீரங்கிகள் மற்றும் ராக்கெட் லாஞ்சர்கள்.

யுக்ரேன் மீதான படையெடுப்பின் தொடக்கத்தில், ரஷ்யா வான் தாக்குதல் நடத்தியது. அது அந்நாட்டுக்கு தெளிவான வாய்ப்பாக அமைந்தது. யுக்ரேன் எல்லை அருகே இந்த போர் விமானங்கள் குவிக்கப்பட்டன. யுக்ரேனிடம் ஒரு போர் விமானம் இருக்கும் இடத்தில் ரஷ்யாவிடம் மூன்றுக்கும் அதிகமான போர் விமானங்கள் இருந்தன. இதனால் ஆக்கிரமிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே வான் பகுதியில் ரஷ்ய படைகள் ஆதிக்கம் செலுத்தும் என்று பாதுகாப்பு நிபுணர்கள் கருதினர். ஆனால், அப்படி நடக்கவில்லை.

யுக்ரேனிய விமானப்படையினர் இப்போதும் தங்களுடைய திறமையை நிரூபித்து வருகின்றனர். தங்கள் வான் பரப்பில் ரஷ்ய விமானங்கள் வட்டமடிப்பதை அவர்களால் கட்டுப்படுத்த முடிகிறது.

ரஷ்யாவுக்கு இப்போது அதன் சிறப்புப் படைகளே களத்தில் முக்கிய பங்கை ஆற்றும் என்று கருதியிருக்கலாம். அந்தப் படை துரிதமாகவும் தீர்க்கமானதாகவும் தாக்குதலை நடத்துவதில் பெயர் பெற்றது.

ஒரு மூத்த மேற்கத்திய உளவுத்துறை அதிகாரி பிபிசியிடம் பேசும்போது, "குறைந்த எண்ணிக்கையிலான விடிவி பாராட்ரூப்பர்களையும் ஸ்பெட்ஸ்நாட்ஸ் போன்ற ஆயுதம் தாங்கிய வீரர்களையும் அனுப்பி தன்னை எதிர்க்க வருபவர்களை அழிக்கலாம் என ரஷ்யா கருதியிருக்கலாம். ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு கீயவ் விமான நிலையத்துக்கு வெளியே ஹெலிகாப்டர் தாக்குதல் நடத்த ரஷ்ய படையினர் முயன்றபோது அதை யுக்ரேனிய படையினர் திருப்பித் தாக்கினர். இதனால் வான் வழியாக தமது படையினரையும் ஆயுதங்களையும் யுக்ரேனுக்குள் அழைத்து வருவது கட்டுப்படுத்தப்பட்டது," என்றார்.

 

யுக்ரேன் ரஷ்யா கைவிடப்பட்ட டாங்கிகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

டி14 அர்மாடா பீரங்கி டாங்கி - இது போர்க்களம் அல்ல, அணிவகுப்புக் களம்

மேலும், அந்த அதிகாரி, "வான் வழியாக தளவாடங்களை கொண்டு செல்லும் வாய்ப்பு கைகொடுக்காததால் ரஷ்யா தனது பொருட்களை பெரும்பாலும் சாலை வழியாகவே கொண்டு செல்ல நேர்ந்தது. இது போக்குவரத்து நெரிசல்கள் மற்றும் தாமதத்தை ஏற்படுத்தியதால் அவை யுக்ரேனிய படைகளுக்கு பதுங்கியிருந்து எளிதாகத் தாக்கும் சூழலை சாதகமாக்கியது. சில கனரக கவச வாகனங்கள் வரும் வழியில் சேற்றில் சிக்கின. இது "சிக்கலாக" மாறிய ராணுவத்தின் பிம்பத்தை வலுப்படுத்தியது," என்று கூறினார்.

இதற்கிடையில், ரஷ்யாவில் இருந்து வடக்கு நோக்கிப் புறப்பட்ட நீண்ட நெடிய ராணுவ தளவாடங்களின் அணிவகுப்பு செயற்கைக்கோள்களால் படம்பிடிக்கப்பட்ட போதும், அவற்றால் இன்னும் தலைநகர் கீயவை சுற்றி வளைக்க முடியவில்லை. மிகவும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் தெற்குத் திசையில் இருந்தே நடந்துள்ளன. அங்கு அது தனது படைகளை அனுப்ப ரயில் பாதைகள் அந்நாட்டுக்கு கைகொடுத்துள்ளன.

பிரிட்டன் பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ் பிபிசியிடம் பேசும்போது, ரஷ்ய அதிபர் புதினின் படைகள் "வேகத்தை இழந்துவிட்டன" என்று கூறினார். "ரஷ்ய படையினர் சிக்கிக்கொண்டனர். அவர்கள் மெதுவாக ஆனால் நிச்சயமாக குறிப்பிடத்தக்க இழப்பை எதிர்கொள்கிறார்கள்," என்று அவர் தெரிவித்தார்.

இழப்புகளும் குலையும் மன உறுதியும்

இந்த படையெடுப்பிற்காக ரஷ்யா சுமார் ஒரு லட்சத்து தொண்ணூறாயிரம் துருப்புக்களைக் குவித்திருந்தது. அவர்களில் பெரும்பாலானோர் ஏற்கெனவே போரில் ஈடுபட்டுள்ளனர். அந்த வீரர்கள் தங்களுடைய சக்தியில் ஏற்கெனவே சுமார் 10 சதவீதத்தை இழந்துள்ளதாக யுக்ரேன் கோருகிறது. அமெரிக்காவோ அந்த எண்ணிக்கையில் பாதியளவை ரஷ்யா இழந்துள்ளதாக மதிப்பிடுகிறது.

இதேவேளை களத்தில் உள்ள ரஷ்ய வீரர்களின் மன உறுதி குறைந்து வருவதற்கான சான்றுகள் இருப்பதாக மேற்கு நாடுகளின் அதிகாரிகள் கூறுகிறார்கள்.

அதில் ஒருவர், வீரர்களிடையே மன உறுதி "மிக மிகக் குறைவாக உள்ளது" என்றும் மற்றொருவர், படையினர் "குளிர், சோர்வு மற்றும் பசியுடன்" வாரக்கணக்கில் காத்திருக்கும் வீரர்கள் ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கான உத்தரவுக்காக பெலாரூஸ் மற்றும் ரஷ்ய எல்லையில் காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

ஏற்கனவே துருப்புகளின் இழப்புகளை ஈடுசெய்ய மேலதிக துருப்புக்களைத் தேட வேண்டிய கட்டாயத்தில் ரஷ்யா உள்ளது, நாட்டின் கிழக்கு மற்றும் ஆர்மீனியா போன்ற தொலைதூர பகுதிகளில் இருந்து இருப்பு பல பிரிவுகளாக இடம்பெயர்வது உட்பட பலரும் இந்த நடவடிக்கைக்காகப் பயன்படுத்தப்படலாம்.

சிரியாவில் இருந்து வெளிநாட்டு போராளிகளும் அதன் ரகசிய வாக்னர் குழுவின் (அதிபர் ஸெலென்ஸ்கியை கொல்ல நியமிக்கப்பட்ட ரகசிய கூலிப்படை) உறுப்பினர்களுடன் யுக்ரேனுக்கு அனுப்பி வைக்கப்பட "அதிக வாய்ப்பு" இருப்பதாக மேற்கு நாடுகளின் அதிகாரிகள் நம்புகின்றனர்.

நேட்டோவின் மூத்த ராணுவ அதிகாரி ஒருவர், இது "படை பலத்தின் கடைசி சக்தியைக் கூட ரஷ்ய பயன்படுத்துவதற்கான" அறிகுறியாகும் என்றார்.

பொருட்கள் மற்றும் தளவாடங்கள்

நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்கும்போது ரஷ்யா அடிப்படைகளுடன் போராடி வருவதாகத் தோன்றுகிறது.

தொழில் வல்லுநர்கள் தளவாடங்களைப் படிக்கும் வேளையில் கற்றுக்குட்டிகள் போர் தந்திரோபாயங்கள் பற்றிப் பேசுவார்கள் என்று ஒரு பழைய ராணுவ பழமொழி உண்டு. அந்தக் கூற்றை ரஷ்யா போதுமான அளவு பரிசீலிக்கவில்லை என்பதற்கான சான்றுகள் உள்ளன.

யுக்ரேனை நோக்கிச் சென்ற கவச வாகனங்களில் பல வழியிலேயே எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளன. படை வீரர்களுக்கான உணவு மற்றும் அவர்கள் கைவசம் இருந்த வெடிமருந்துகள் கூட தீர்ந்துவிட்டன. வாகனங்கள் பல கைவிடப்பட்டுள்ளன. அவை யுக்ரேனிய டிராக்டர்களால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளன.

இத்தகைய சூழலில் மேற்கு நாடுகளின் அதிகாரிகள், ரஷ்யா இப்போது வெடிமருந்துகள் தட்டுப்பாட்டை சந்திக்கக் கூடும் என்று நம்புகிறார்கள். ஏற்கெனவே 850 மற்றும் 900 தொலைதூர துல்லிய தாக்குதல் குண்டுகளை ரஷ்யா பயன்படுத்தி விட்டது. இதில் க்ரூஸ் ஏவுகணைகளும் அடங்கும். ரஷ்யா தனது சில பற்றாக்குறைகளை ஈடு செய்ய சீனாவை அணுகியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

 

யுக்ரேன் ரஷ்யா கைவிடப்பட்ட டாங்கிகள்

பட மூலாதாரம்,ALAMY

 

படக்குறிப்பு,

யுக்ரேனுக்கு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் சாதனங்களில் ஸ்விட்ச் பிளேட் கமிக்ளேஸ் ட்ரோனும் ஒன்று.

மறுபுறம், யுக்ரேனுக்குள் மேற்கத்திய நாடுகளால் வழங்கப்பட்ட ஆயுதங்கள் தடையின்றி பயன்பாட்டில் உள்ளன. இது அதன் மன உறுதிக்கு ஊக்கமளிக்கிறது. பாதுகாப்பு உதவிக்காக கூடுதலாக 800 மில்லியன் டாலர்களை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

டாங்கி எதிர்ப்பு மற்றும் விமான எதிர்ப்பு ஏவுகணைகள், ஸ்விட்ச்ப்ளேட் ட்ரோன் சாதனங்களும் இதில் அடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ட்ரோன் ஒரு சிறிய வடிவிலானது. இது அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட, "காமிகேஸ்" (Kamikaze) ட்ரோன் ரகத்தைச் சேர்ந்தது. இதில் ஒரு சிறிய வெடிபொருளை சுமக்கச் செய்து இலக்குகளுக்கு அனுப்பி வைக்க முடியும்.

இந்த நிலையில், ரஷ்ய அதிபர் புதின் "மிகவும் அதிக அளவில் தமது தாக்குதல் பாணியை இரட்டிப்பாக்கலாம்" என்று மேற்கு அதிகாரிகள் சிலர் எச்சரிக்கிறார்கள். யுக்ரேனிய நகரங்களில் "கணிசமான காலத்திற்கு" குண்டுவீசுவதற்குப் போதுமான தளவாட சக்தி ரஷ்யாவிடம் இருப்பதாக அந்த அதிகாரிகள் கூறுகிறார்கள்.

பின்னடைவுகள் இருந்தபோதிலும், எந்த சூழலிலும் புதின் பின்வாங்க மாட்டார் என்றும் அவரது தாக்குதல் நடவடிக்கை தீவிரமாகலாமே தவிர குறையாது என்றும் உளவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கிறார்.

யுக்ரேனிய படைகள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினாலும், தற்போது கிடைத்து வரும் ஆயுதங்கள் தீர்ந்துபோய் ஆயுத மறுவிநியோகம் தடைபட்டால் யுக்ரேனியர்களும் ஆயுதங்கள் மற்றும் உயிர் சேதத்தை எதிர்கொள்ளலாம் என அந்த உளவுத்துறை அதிகாரி எச்சரிக்கிறார். யுக்ரேன் மீதான ரஷ்ய போர் முதன்முதலில் தொடங்கியதை விட களத்தில் தற்போதுள்ள முரண்பாடுகள் யுக்ரேனுக்கு சாதகமாக இருக்கலாம், அவை திடீரென யுக்ரேனுக்கு எதிராகவும் திரும்பக்கூடும் என்பதை மறந்து விடக்கூடாது.

https://www.bbc.com/tamil/global-60804119

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.