Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் இந்து அற நிலையத்துறை ஆய்வு செய்ய கோயில் நிர்வாகம் எதிர்ப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் இந்து அற நிலையத்துறை ஆய்வு செய்ய கோயில் நிர்வாகம் எதிர்ப்பு

1 ஜூன் 2022
 

நடராஜர் கோயில்

 

படக்குறிப்பு,

சிதம்பரம் நடராஜர் கோயில்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் இந்து அற நிலையத்துறை வரும் 7, 8 தேதிகளில் ஆய்வு செய்ய‌ இருப்பதாக அறிவித்துள்ளது. கோயிலை நிர்வகிக்கும் 'பொது தீட்சிதர்கள்' என்ற குழு இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறது.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் செயல் என்று தெரிவித்துள்ள இந்த அமைப்பு, இது தொடர்பாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாகவும் கோயிலை நிர்வகிக்கும் 'பொது தீட்சிதர்கள்' என்ற குழு தெரிவித்துள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயில் சிற்றம்பல மேடையில் ஏறி தரிசனம் செய்ய கடந்த 2 ஆண்டுகளாக பொது தீட்சிதர்கள் தடை விதித்திருந்தனர். இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் பரிந்துரையை ஏற்று சிற்றம்பல மேடையில் ஏறி தரிசனம் செய்ய இந்து சமய அறநிலையத்துறை அனுமதி வழங்கியுள்ளது.

குடியரசுத் தலைவர், பிரதமருக்கு கடிதம் எழுதிய தீட்சிதர்கள்

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பொது தீட்சிதர்கள், 'வெறுப்புப் பிரசாரத்தை' முன்னின்று நடத்தும் குழுக்கள், போராட்டங்கள் காரணமாக வாழ்வாதாரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளதாகக் கூறியும், பாதுகாப்பு கோரியும் பொது தீட்சிதர்கள் குழுவின் செயலாளர் ஹேம சதேஷ தீட்சிதர் குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர், தமிழ்நாடு ஆளுநர், முதல்வர், தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு கடந்த மே 22ஆம் தேதியன்று கடிதம் அனுப்பியிருந்தனர்.

அக்கடிதத்தில், உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி பொது தீட்சிதர் குழு கோவிலை நிர்வகித்து வருகிறது. மத உரிமைகள், நம்பிக்கைகள், நடைமுறைகள் அரசமைப்புச் சட்டத்தின் 26வது பிரிவின் மூலம் பாதுகாக்கப்படுகின்றன. மதச் செயல்பாடுகள், கடமைகள், நம்பிக்கைகள், நடைமுறைகள் பழங்காலத்திலிருந்தே கோயில் பாரம்பரிய பழக்க வழக்கங்களின்படி பொது தீட்சிதர்களால் செய்யப்பட்டு வருகின்றன. சமய விவகாரங்களை அரசமைப்புச் சட்டத்தின் 26வது பிரிவின்படி பொது தீட்சிதர்கள் மட்டுமே முடிவு செய்ய முடியும் என 2014 ஜனவரி 6ஆம் தேதியன்று வெளியான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு உறுதி செய்துள்ளது.

சிற்றம்பல மேடை மீது ஏற அனுமதியும் தீட்சிதர்கள் எதிர்ப்பும்

சிற்றம்பல மேடை மீது பக்தர்கள் ஏற அனுமதித்து, தமிழ்நாடு அரசு கடந்த மாதம் 17ஆம் தேதி ஆணை பிறப்பித்தது. இதற்கு நாங்கள் ஆட்சேபனை தெரிவித்து சட்ட நடவடிக்கைகளை தொடங்கியுள்ளோம். சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு அருகில் நடக்கும் போராட்டங்களைத் தடை செய்ய கோரி பொதுநல வழக்கு பக்தர்களால் தொடுக்கப்பட்டு நிலுவையில் உள்ளது. ஒரு சிலர் மத நம்பிக்கைகளில் தலையிட முயல்கின்றனர். இதனால் எங்கள் வாழ்க்கை, தனிப்பட்ட சுதந்திரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளது. எனவே அரசமைப்புச் சட்டப்படி பாதுகாக்கப்பட்ட மத மற்றும் நிர்வாக உரிமைகளுக்கு நாங்கள் பாதுகாப்பை நாடுவதாக அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை விசாரணை குழு அமைப்பு

இந்த சூழலில் தற்போது சிதம்பரம் நடராஜர் கோயிலில் பணிப் பிரிவு, கோயில் நிர்வாகம், சிற்றம்பலம் மீது ஏற அனுமதி மறுத்தது உள்ளிட்டவை தொடர்பாக ஆய்வு செய்ய இந்து சமய அறநிலையத்துறை விசாரணைக் குழு அமைந்துள்ளது.

 

சிதம்பரம்.

சிதம்பரம் சபாநாயகர் கோயில் நிர்வாகம் தொடர்பாக வரப்பெற்ற மனுக்கள் குறித்தும், மேற்கொண்ட கோயில் சட்டவிதிகளின்படி நிர்வகிக்கப்படுகிறதா என்பது குறித்தும், திருக்கோயிலை நேரடியாக ஆய்வு செய்து, விசாரணை மேற்கொண்டு ‌கோயில் நிர்வாகத்தைச் சீரமைப்பது குறித்து உரிய பரிந்துரைகள் வழங்கிட இந்து சமய அறநிலையத்துறை சட்டம் 1959ல் உள்ள சட்டப்பிரிவு 23 மற்றும் 33ன் கீழ் ஆணையருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி ஒரு குழுவை இந்து சமய அறநிலையத்துறை நியமித்து, அதன் ஒருங்கிணைப்பாளராக சி.ஜோதி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி சிதம்பரம் நடராஜர் கோயிலில் வரும் ஜூன் மாதம் 7 முதல் 8ஆம் தேதி வரை விசாரணைக் குழு நேரடியாக ஆய்வு செய்யவுள்ளது என்று இந்து அறநிலையத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வுக்கு ஆவணங்களை தயார் நிலையில் வைக்குமாறு கடிதம்

இந்த ஆய்வுக்காக கீழ்க்கண்ட ஆவணங்களைத் தயார் நிலையில் வைக்குமாறு விசாரணைக் குழு ஒருங்கிணைப்பாளர் கோயில் செயலாளருக்கு கடிதம் அனுப்பினர்.

அதில் குறிப்பிட்ட ஆவணங்கள் பின்வருமாறு:

1. 2014 முதலான வரவு-செலவு கணக்குகள்.

2. 2014 முதலான தணிக்கை கணக்குகள்.

3. 2014 முதலான திருக்கோயிலில் நடைபெற்ற திருப்பணிகள் குறித்தான விவரங்கள், அவற்றிற்கான தொல்லியல்துறை கருத்துரு, இந்து அறநிலையத்துறை அனுமதி விவரம், மதிப்பீடு விபரங்கள்.

4. திருக்கோயிலுக்கு சொந்தமான கட்டளைகள், கட்டளைகளுக்குச் சொந்தமான சொத்துகள், அவற்றிலிருந்து பெறப்படும் வருவாய் இனங்கள்.

5. மேற்கண்ட‌ சொத்துக்களின் தற்போதைய நிலை.

 

சிதம்பரம்.

6. இந்து சமய அறநிலையத்துறை சட்டவிதிகளின்படி அங்கீகரிக்கப்பட்ட சொத்துப்பதிவேடு, மரப்பதிவேடு, திட்டப்பதிவேடு மற்றும் காணிக்கை பதிவேடுகள்.

7. திருக்கோயிலுக்குச் சொந்தமான நகைகள் மற்றும் விலையுயர்ந்தவைகள் மதிப்பீட்டறிக்கை.

8. திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் மற்றும் அதன் குத்தகைக்காரர்கள் விபரம்.

9. கேட்பு வசூல் நிலுவை பதிவேடுகள்.

உள்ளிட்ட ஆவணங்களுடன் குழுவின் ஆய்வுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கும்படி அறிக்கையில் குறிப்பிட்டிருந்தனர்.

 

இந்து அறநிலையத்துறை

பட மூலாதாரம்,HR&CE

 

படக்குறிப்பு,

ஆய்வுக்காக அனுப்பிய கடிதம்.

 

இந்து அறநிலையத்துறை

 

படக்குறிப்பு,

ஆய்வுக்காக அனுப்பிய கடிதம்.

அரசின் முடிவுக்கு கோயில் நிர்வாகத்தினர் எதிர்ப்பு

இதைத் தொடர்ந்து சிதம்பரம் கோயில் பொது தீட்சிதர்கள் தரப்பில் மீண்டும் குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். குறிப்பாக தீட்சிதர்கள் கோயிலை நிர்வகித்து வரும் சூழ்நிலையில் தற்போது உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறும் வகையில் அரசு செயல்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/india-61661354

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆய்வை திரும்பப் பெற வேண்டும்: பொது தீட்சிதர்கள்

52 நிமிடங்களுக்கு முன்னர்
 

கோயில்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் அலுவல் ரீதியாக இந்து சமய அறநிலையத் துறை மேற்கொண்டு வரும் ஆய்வுக்குத் தீட்சிதர்கள் ஆட்சேபனை தெரிவித்த நிலையில், கோயில் வளாகத்தை சுற்றிலும் பார்வையிட்டு அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகம் தொடர்பாக வரப்பெற்ற மனுக்கள் குறித்தும், மேற்கொண்ட கோயில் சட்டவிதிகளின்படி நிர்வகிக்கப்படுகிறதா என்பது குறித்தும், கோயிலில் நேரடியாக ஆய்வு செய்ய இந்து சமய அறநிலையத்துறை விசாரணைக் குழுவை நியமித்தது.

அதன்படி இன்றும் நாளையும் (ஜூன் 7, 😎 சிதம்பரம் நடராஜர் கோயிலில் விசாரணைக் குழு ஆய்வு செய்கிறது. அதற்காக இன்று சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வந்த விசாரணைக் குழுவை தீட்சிதர்கள் வரவேற்று சாமி தரிசனத்திற்கு அழைத்துச் சென்றனர். மேலும் அவர்களுக்கு கோயில் சார்பில் தீட்சிதர்கள் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

 

கோயில்

பின்னர் ஆய்வு தொடர்பான ஆவணங்கள் மற்றும் தணிக்கை விவரங்களை அதிகாரிகள் கோயில் தீட்சிதர்களிடம் கேட்டனர். அப்போது தீட்சிதர்கள் குழு சார்பில் வழக்குரைஞர் சந்திரசேகர், 'சட்ட ரீதியான விதிமுறைகளை மேற்கொள் காட்டி, சட்ட ரீதியாக அனுமதி பெற்று ஆய்வு மேற்கொள்ளுமாறு' தெரிவித்தார்.

"தீட்சிதர்கள் தனி சமயப் பிரிவினர் என்றும், சமய விவகாரங்களை 26வது பிரிவின்படி பொது தீட்சிதர்கள் மட்டுமே முடிவு செய்ய முடியும் என்றும் 2014 ஜனவரி 6ஆம் தேதி உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு தனி சமய பிரிவினர் நிர்வாகம் செய்யும் கோயில்களில் இந்து அறநிலையத்துறை சட்டம் பிரிவு 107 பொருந்தாது. இதனை மேற்கோள்காட்டியே எங்களது ஆட்சேபனையை தெரிவித்தோம்.

 

கோயில்

இந்த ஆய்வுக் குழு எதன்‌ அடிப்படையில் ஆய்வு மேற்கொள்கிறது என்று உரிய விளக்கம் அளிக்கவில்லை. மேலும் உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி துணை ஆணையர் நேரடியாக, தன்னிச்சையாக எந்தவித பொது கோயில்களிலும் ஆய்வுக்குச் செல்ல இயலாது. மேலும் ஒரு புகார் வந்தால், எதன் அடிப்படையில் புகார் வந்தது என்பதைத் தெரிவிக்க வேண்டும். ஆனால் எந்தவித புகார் வந்தது என்று எங்களுக்குத் தெரிவிக்கவில்லை. இதற்கான சட்ட ரீதியான ஆட்சேபனையை நாங்கள் தெரிவித்துள்ளோம். எங்கள் சட்ட ரீதியான ஆட்சேபனைக்கு அவர்களால் எந்த விளக்கமும் தர இயலவில்லை. மேற்கோள் காட்டிய உச்சநீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற தீர்ப்புகளை அதிகாரிகளிடம் வழங்கியுள்ளோம்," என்று கோயில் நிர்வாக வழக்கறிஞர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

மேலும் நடராஜர் கோயில் நிலங்கள் மார்ச் 9ஆம் தேதியிட்ட அரசாணை எண்: 836-ன் படி தனி வட்டாட்சியர் கட்டுப்பாட்டில் உள்ளன. ஆகையால் நடராஜர் கோயில் நிலங்களைப் பற்றி தனி வட்டாட்சியரிடம்தான் கேட்க வேண்டும். தங்கள் துறை கட்டுப்பாட்டில் உள்ள கடந்த 40 வருடங்களாக நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்களில் ஆவணங்கள் இல்லை. நகைகள் பற்றிய விவரத்திற்கு, தாங்கள் 2005 வருடம் செய்த தணிக்கை அறிக்கை இதுவரை சிதம்பரம் கோயிலுக்குத் தரப்படவில்லை. கடைசியாக முடிக்கப்பட்ட தணிக்கை அறிக்கை இல்லாமல் புதிய தணிக்கை நடத்த இயலாது. 2021 ஜூன் 7ஆம் தேதியிட்ட சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி துறை தணிக்கை குழுவுக்கான விதிகள் சட்டப்படி செல்லாது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. சட்டப்படி உருவாக்கப்பட்ட ஆய்வுக் குழுவிற்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதே எங்கள் நோக்கம். எனவே இந்த ஆய்வை திரும்பப் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது," என்று கூறி அறநிலையத்துறை ஆய்வு குழுவிற்கு நேரில் விளக்கிய அனைத்தையும் கடிதம் மூலமாக கொடுத்தனர்.

 

கோயில்

தொடர்ந்து கோயில் வளாகத்தைச் சுற்றிப் பார்வையிட்டு வந்த ஆய்வு குழுவினர், கோயில் வளாகத்தில் அமர்ந்து ஆலோசனை மேற்கொண்டனர். ஆய்வு நிலவரம் குறித்து விசாரணைக் குழுவிடம் கேள்வி கேட்டபோது தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாகவும், இது குறித்து பிறகு தெரிவிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆய்வுக் குழுவில், பழனி திருக்கோயில் இணை ஆணையர் நடராஜன், வேலூர் மாவட்ட இணை ஆணையர் லட்சுமணன், பெரம்பலூர் உதவி ஆணையர் அரவிந்தன், திருநெல்வேலி மண்டல தணிக்கை அலுவலர் ராஜேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார் உட்பட 5 பேர் இந்த விசாரணைக் குழுவில் இடம் பெற்றுள்ளனர். இதன் ஒருங்கிணைப்பாளராகக் கடலூர் மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையர் சி.ஜோதி உடன் இருந்தார்.

ஆய்வு செய்ய உரிமை உள்ளது - அமைச்சர்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் இந்து அறநிலையத்துறை ஆய்விற்கு கோயில் தீட்சிதர்கள் குழு எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு சென்னையில் நடந்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

"சிதம்பரம் நடராஜர் கோயிலைப் பொறுத்தவரை அது பொதுக்கோயில் என்றுதான் உச்சநீதிமன்ற தீர்ப்பு கூறுகிறது. அப்படி பொதுக்கோயிலாக இருக்கின்ற கோயிலில் புகார் எழுகிறபோது இந்து சமய அறநிலையத் துறை சட்டம் 1959 பிரிவு 23, 28ன் படி அந்த திருக்கோயிலுக்கு சென்று புகாரின் மீது (துறைசார்பில்) ஆய்வு செய்து விசாரிக்கலாம்.

இந்த ஆய்வு தொடர்பாக கடந்த 1ஆம் தேதி இந்தக் கோயிலை நிர்வகிக்கும் தீட்சிதர்கள் ஆட்சேபனை தெரிவித்து கடிதம் அனுப்பியிருந்தனர். அந்த ஆட்சேபனைக்கு உரிய பதில், துறை சார்பில் 3ஆம் தேதி அனுப்பப்பட்டது. கோயிலை இந்து சமய அறநிலையத் துறை எடுக்கவேண்டும் என்பது குறிக்கோள் அல்ல. இதை தீட்சிதர்களுக்கு எதிரான செயல் என்றும் நினைக்கக்கூடாது. பக்தர்களிடம் இருந்து வருகின்ற புகார்களை விசாரிப்பதற்கான குழுதான் இது," என்றார்‌ அவர்.

"என்ன உண்மை இருக்கிறதோ அதனை அவர்களிடம் தெரிவியுங்கள். நிச்சயம் சட்டத்தை மீறி எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபட மாட்டோம் என உறுதியளித்த பிறகு, இன்றைக்கு (அவர்கள் ஒத்துழைக்க) மறுப்பதாகத் தெரிகிறது. சட்டப்படி ஆய்வு என்பதை, வருகிற புகார்கள் குறித்து விசாரிப்பது என்பதை இந்து சமய அறநிலையத் துறை, மேற்கொள்ளும் என்பதை உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறோம்," என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/india-61720622

  • கருத்துக்கள உறவுகள்

அரச ஊழியர்கள்... கோயிலை ஆய்வு செய்யக் கூடாது என்று,  தீட்சிதர்கள் தடுக்க முடியுமா?
சிலவேளை... கோவிலில் உள்ள நகைகளை, களவெடுத்துக் கொண்டு 
போய்விடுவார்கள் என்று பயப்பிடுகிறார்களோ...

முன்பு... பழனிமலை முருகன் கோவிலில் உள்ள தங்க வேலை... 
திராவிடக் கட்சி  ஒன்று களவெடுத்துக் கொண்டு  போய் விட்டதாம். 
அப்படி... என்றால், இவர்களை உள்ளே விடக் கூடாது.

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிதம்பரம் நடராஜர் கோவில்: அறநிலையத் துறை - தீட்சிதர்கள் மோதல் - வரலாற்று காரணம் என்ன?

  • முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பிபிசி தமிழ்
2 மணி நேரங்களுக்கு முன்னர்
 

சிதம்பரம் நடராஜர் கோவில்

 

படக்குறிப்பு,

கோப்புப்படம்

சிதம்பரம் நடராஜர் கோவிலின் கணக்குகள் குறித்து அறநிலையத் துறை அதிகாரிகள் ஆய்வுகளை நடத்த அங்குள்ள தீட்சிதர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். கோவில் மீது அறநிலையத் துறை கட்டுப்பாடுகளைச் செலுத்த முடியாது எனக் கூறுகின்றனர். தில்லை கோவிலுக்கும் அறநிலையத் துறைக்கும் இடையில் மோதல் தொடர்வது ஏன்?

சிதம்பரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற நடராஜர் கோவிலின் கணக்குகளை ஆய்வு செய்வதற்காக இந்து சமய அறநிலையத் துறையின் அதிகாரிகள் ஜூன் ஏழாம் தேதியன்று சென்றபோது, அவர்களுக்கு கணக்குகளைக் காட்டுவதற்கு அங்கிருந்த தீட்சிதர்கள் மறுத்துவிட்டனர். இருந்தபோதும், இரண்டாவது நாளாக ஜூன் எட்டாம் தேதியும் இந்த ஆய்வை மேற்கொள்ள அறநிலையத் துறை முயற்சித்தது. இருந்தபோதும் தீட்சிதர்கள் அதற்கு அனுமதிக்கவில்லை.

கண்டிப்பாக ஆய்வுகளை நடத்தியே தீருவோம் என்கிறது அறநிலையத் துறை. ஆனால், இந்தக் கோவில், தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்; இதில் ஆய்வு நடத்த அறநிலையத் துறைக்கு அதிகாரம் இல்லை என்கிறார்கள் தீட்சிதர்கள்.

வைணவர்கள் 'கோவில்' என்று குறிப்பிட்டால், அது திருவரங்கம் ரங்கநாதசுவாமி கோவிலைக் குறிப்பதைப்போல, சைவர்கள் 'கோவில்' என்று குறிப்பிட்டால் அது சிதம்பரம் நடராசர் கோவிலையே குறிக்கும். அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் என சைவ சமய குரவர்கள் நால்வராலும் பாடப்பட்ட கோவில் இது.

ஒரே தருணத்தில் கட்டப்படாமல், பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு அரசர்களால் கட்டப்பட்டு தற்போதைய நிலையை அடைந்துள்ளது இந்தக் கோவில். தேவாரப் பாடல்கள் இந்தக் கோவிலில்தான் பூட்டிவைக்கப்பட்டிருந்து, ராஜராஜ சோழன் காலத்தில் மீட்கப்பட்டதாக சொல்லப்படுவதுண்டு.

சிதம்பரம் கோவிலைப் பொறுத்தவரை, அந்தக் கோவிலின் கட்டுப்பாடு எப்போது தீட்சிதர்களின் கீழ் வந்தது என்பது குறித்து ஒவ்வொரு தரப்பும் ஒவ்வொரு காலகட்டத்தைச் சொல்கின்றனர். பக்தி இலக்கியங்களில் சொல்லப்படும் "தில்லை வாழ் அந்தணர்கள்" தீட்சிதர்களைக் குறிப்பதாகவே, தீட்சிதர்கள் ஆதரவு தரப்பு சொல்கிறது. ஆனால்,, "தீட்சிதர்கள்" என்ற சொல் திருமுறைகளிலோ, சங்க இலக்கியத்திலோ குறிப்பிடப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டும் சிலர், 'தில்லை வாழ் அந்தணர்கள்' என்போர், இந்தத் தீட்சிதர்களின் முன்னோர்கள் என்ற கருத்தை ஏற்க மறுக்கின்றனர்.

தவிர, கோவில் எப்போது தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் வந்தது என்பது குறித்தும் பல்வேறு தகவல்கள் முன்வைக்கப்படுகின்றன.

ஆனால், இந்தக் கோவில் மீதான தங்கள் அதிகாரம் குறித்து தீட்சிதர்கள் நீண்ட காலமாகவே வழக்குகளைத் தொடுத்து, வாதாடி, பல வழக்குகளில் வென்று வந்துள்ளனர். இது தொடர்பான சுருக்கமான வரலாற்றை இப்போது பார்க்கலாம்.

தில்லைக் கோவிலை நிர்வகிப்பது யார்? - தொடரும் மோதல்

 

சிதம்பரம் நடராஜர் கோவில்

 

படக்குறிப்பு,

ஜூன் 7 அன்று கோவிலில் ஆய்வு நடத்த வந்த அதிகாரிகள்

1920களில் இந்து சமய அறக்கட்டளைகள் தொடர்பாக சென்னை மாகாண பிரதமர் பனகல் ராஜா சட்டம் கொண்டுவந்தபோது தீட்சிதர்கள் அதை ஏற்கவில்லை. சென்னை மாகாணத்தின் ஆங்கிலேய ஆளுநரை அணுகிய அவர்கள், அந்தச் சட்டம் தங்களுக்குப் பொருந்தாது என அறிவிக்கும்படி கேட்டுக்கொண்டனர். ஆனால், இந்தக் கோரிக்கையை ஆங்கில அரசு முழுமையாக ஏற்கவில்லை. வரவு - செலவு கணக்குகளைச் சமர்ப்பித்தல், கோவிலை நிர்வகிப்பதற்கு திட்டம் தீட்டுதல் போன்ற பிரிவுகள் பொருந்தும் என்று கூறியது.

இதற்குப் பிறகு, கோவிலின் நிர்வாகத்தை நடத்த ஒரு திட்டம் (Scheme) வகுக்க வேண்டுமென சிலர் அறநிலைய வாரியத்திடம் கோரினர். இதன்படி அறநிலைய வாரியம் ஒரு திட்டத்தை வகுத்தது. ஆனால், தீட்சிதர்கள் அந்தத் திட்டத்தை ஏற்கவில்லை. தென்னார்க்காடு மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இதில் 1937ல் தீர்ப்பளித்த தென்னார்க்காடு நீதிமன்றம், அறநிலைய வாரியம் வகுத்த திட்டத்தை சில மாறுதல்களுடன் ஏற்கும்படி உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து தீட்சிதர்கள் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அந்த மேல் முறையீட்டில், இந்தக் கோவில் தனியார் கோவில் இல்லை என்றும் பொதுக் கோவில் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும், கோவில் நிர்வாகத்தில் எவ்வித முறைகேடும் இல்லை என்றாலும் நிர்வாகத்திற்கு திட்டம் அவசியம் எனத் தீர்ப்பளித்த நீதிமன்றம், முந்தைய திட்டத்தில் சில மாறுதல்களைச் செய்து, அதனை ஏற்கும்படி கூறியது.

இந்த வழக்கு நிலுவையில் இருந்தபோதே, அரசு கோவில் நிர்வாகத்தை கையில் எடுத்துக் கொண்டது. ஆனால், அதை நீதிமன்றம் ஏற்கவில்லை. மிக மோசமாக நிர்வாகம் இருந்தால் ஒழிய, அரசே நிர்வாகத்தை கையில் எடுக்கக்கூடாது என்று கூறி தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பு 1939ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வழங்கப்பட்டது. கோவிலை நிர்வகிப்பதற்கான விரிவான திட்டம் இந்தத் தீர்ப்பில் தரப்பட்டது.

தீட்சிதர்கள் தரப்பு வாதம் என்ன?

 

சிதம்பரம் நடராஜர் கோவில்

 

படக்குறிப்பு,

கோப்புப்படம்

இதற்குப் பிறகு 1951ல் புதிய இந்து சமய அறநிலையத் துறை சட்டம் அமலுக்கு வந்தது. இதையடுத்து, கோவில் நிர்வாகத்தை அரசு ஏற்றுக்கொள்வதற்கு புதிய அரசாணை அந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிறப்பிக்கப்பட்டது. புதிய செயல் அலுவலரையும் நியமிக்க அரசாணை வெளியிடப்பட்டது. இதனை எதிர்த்து தீட்சிதர்கள் தரப்பு நீதிமன்றத்தை அணுகியது.

"தீட்சிதர்கள் ஒரு தனி சமய குழுவினர். அவர்கள் ஸ்மார்த்த பிராமணர்கள். தீட்சிதர்கள் அல்லாத யாரும் நிர்வாகத்திலோ, பூஜையிலோ ஈடுபட முடியாது. தீட்சிதர்களின் இந்தத் தனிப்பட்ட உரிமை, பல நூற்றாண்டுகளாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. இந்த உரிமை செயல் அதிகாரியின் நியமனத்தால் பறிபோகிறது. ஒரு சமயக் குழுவினரின் சொத்தை அவர்களே நிர்வகிக்கும் உரிமை அரசியல் சட்டத்தால் பாதுகாக்கப்பட்டிருக்கிறது" என தீட்சிதர்கள் தரப்பு வாதிட்டது.

இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தீட்சிதர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது. 1951 டிசம்பர் மாதம் வழங்கப்பட்ட அந்தத் தீர்ப்பில், "சிதம்பரம் கோவிலுக்கு ஒரு செயல் அதிகாரியை நியமித்தது சரி அல்ல. ஏற்கெனவே கோவில் நிர்வாகத்திற்கென ஒரு திட்டம் உள்ளது. நீதிமன்றத்தாலும் அது இறுதி செய்யப்பட்டுள்ளது. கோவில் பொறுப்பாளர்களாக இருக்கும் அறங்காவலர்களை நீக்கும் அளவுக்கு நிர்வாகம் மோசமாக இருந்தால்தான் நிர்வாகத்திலிருந்து அவர்களை நீக்கும் முயற்சியில் இறங்க வேண்டும். எனவே, நிர்வாக அதிகாரியை நியமிக்கும் ஆணை ரத்துசெய்யப்பட வேண்டும்" என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதனை எதிர்த்து, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. ஆனால், திடீரென அந்த அரசாணை திரும்பப் பெறப்பட்டது. இதனால், அந்த முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது.

தீட்சிதர்கள் தனி சமய பிரிவினரா?

இதற்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு, 1982இல் அப்போதைய ஆணையர் யு. சுப்பிரமணியம் அந்தக் கோவிலில் பல்வேறு முறைகேடுகள் இருப்பதாகக் கூறி, ஏன் செயல் அலுவலரை நியமிக்கக்கூடாது என கேள்வியெழுப்பினார். இதனை எதிர்த்து, தீட்சிதர்கள் நீதிமன்றம் சென்றனர். 1987இல் ஜூலையில் புதிதாக நிர்வாக அதிகாரியும் நியமிக்கப்பட்டார்.

இதனை எதிர்த்து தீட்சிதர்கள் நீதிப் பேராணை மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர். ஆனால், இந்த விவகாரத்தில், துறையின் செயலரிடம் முறையிடும் வாய்ப்பிருந்தும் அதைச் செய்யாததால், வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்குப் பிறகு, 2004ஆம் ஆண்டில் துறையின் செயலரிடம் தீட்சிதர்கள் மேல் முறையீடு செய்தனர்.

இந்த முறையீடு 2006ஆம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்ட ஒரு அரசாணையின் மூலம் நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து தீட்சிதர்கள் உயர் நீதிமன்றத்தை நாடினர். அந்த மனுவை நீதிபதி பானுமதி 2009ல் தள்ளுபடி செய்தார். அந்தத் தீர்ப்பில், தீட்சிதர்கள் தனி சமயப் பிரிவினரா என்பது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.

ஆனால், இதனை தீட்சிதர்கள் ஏற்கவில்லை. 1951லேயே தாங்கள் தனி சமயப் பிரிவினர் என உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டுவிட்ட நிலையில், அந்த விவகாரம் குறித்து விவாதிக்க 'முன் தீர்ப்புத் தடை' (Res Judicata) இருக்கிறதெனக் கூறி, இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் மேல் முறையீடு செய்தனர். அந்த அமர்வும், தீட்சிதர்களுக்கு எதிராகத் தீர்ப்பளித்தது. அரசியல் சட்டப்பிரிவு 26ஐ ஆராய்ந்த நீதிபதிகள், வழிபாடு நடத்தத்தான் உரிமை உள்ளதே தவிர, சொத்துக்களை நிர்வகிப்பது சட்டப்படிதான் நடக்க வேண்டும் என்றனர். தீட்சிதர்களின் மேல் முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதற்கிடையில், கோவிலுக்கு செயல் அலுவலர் நியமிக்கப்பட்டார். கோவில் நிர்வாகம் செயல் அலுவலரின் கீழ் வந்தது. உயர் நீதிமன்றம் தங்கள் வழக்கைத் தள்ளுபடி செய்ததை எதிர்த்து மூன்று தரப்பினர் உச்ச நீதிமன்றத்தை நாடினர். தீட்சிதர் தரப்பு, தீட்சிதர்களுக்கு ஆதரவாக ஒருவர், பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி என மூன்று மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

 

உச்ச நீதிமன்றம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த மனுக்களை உச்ச நீதிமன்றம் ஒன்றாக விசாரித்தது. 2014ஆம் ஆண்டு ஜனவரி ஆறாம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. அந்தத் தீர்ப்பு தீட்சிதர்களுக்கு ஆதரவாக அமைந்தது. தீட்சிதர்கள் ஒரு தனி சமயப் பிரிவினர் என்பதை உச்ச நீதிமன்றம் 1951லேயே வரையறுத்துவிட்ட பிறகு, கீழமை நீதிமன்றமான உயர் நீதிமன்றம் அதனை விசாரிக்க முடியாது என்றது உச்ச நீதிமன்றம்.

"கோவில் நிர்வாகத்தில் தவறுகள் இருந்தால், அவற்றைச் சரிசெய்வதற்காக அரசு எடுத்துக் கொண்டால், தவறுகள் சரிசெய்யப்பட்ட பிறகு, அதனை உரியவர்களிடம் ஒப்படைத்துவிட வேண்டும். ஆனால், தற்போது செயல் அலுவலரை நியமிக்கும் அரசாணையில், அவருக்கான கால வரையறை இல்லாததால், அந்த உத்தரவு செல்லாது" என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த உத்தரவின் அடிப்படையிலேயே தற்போது தீட்சிதர்கள் கோவிலை நிர்வகித்து வருகின்றனர்.

மேலே கூறப்பட்ட 1951ஆம் ஆண்டின் தீர்ப்பு, 2014ஆம் ஆண்டின் உச்ச நீதின்றத் தீர்ப்பு ஆகியவற்றின் அடிப்படையிலேயே கோவிலில் அறநிலையத் துறை ஆய்வுசெய்யக்கூடாது என தீட்சிதர்கள் தரப்பு கூறுகிறது.

இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளை அனுமதிக்காதது குறித்து, தீட்சிதர்கள் தரப்பு வழக்கறிஞரான சந்திரசேகரிடம் கேட்டபோது, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி கோவிலில் ஆய்வு செய்ய அறநிலையத் துறைக்கு அனுமதி கிடையாது என்று தெரிவித்தார். "உச்ச நீதிமன்றம் 2014ஆம் ஆண்டு ஜனவரி ஆறாம் தேதி அளித்த தீர்ப்பின்படி, தீட்சிதர்கள் தனி சமயப் பிரிவு என அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். ஆகவே, அரசியல் சட்டத்தின் 26வது பிரிவின்படி, சமய ரீதியான அனைத்துப் பாதுகாப்பும் தீட்சிதர்களுக்கு உண்டு" என்றார்.

 

சிதம்பரம் நடராஜர் கோவில்

ஆனால், 2014ஆம் ஆண்டின் தீர்ப்பின்படி, தவறு நடப்பதாக தகவல் வந்தால், ஆய்வு நடத்த அறநிலையத் துறைக்கு அனுமதி உண்டுதானே என்று கேட்டபோது, "இது அந்தத் தீர்ப்பை புரிந்துகொள்லாமல் பேசும் பேச்சு. ஏன் அது பொருந்தாது என்பதை விளக்கி 14 பக்கத்திற்கு அவர்களுக்கு விளக்கம் கொடுத்திருக்கிறோம். இருந்தபோதும் அதை ஏற்காமல் ஆய்வுசெய்வேன் என்கிறார்கள். அமைச்சர் சொல்லிவிட்டார், ஆய்வு செய்தே தீருவோம் என்கிறார்கள்.

இப்படி ஆய்வுக்கு வருவதற்கு முன்பாகவே, அது குறித்து ஊடகங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது. தீட்சிதர்கள் குறித்த தவறான கருத்துகள் பரப்பப்படுகின்றன. கோவிலை கையகப்படுத்தமாட்டோம் என்கிறார்கள். அப்படியானால், அதை சட்டமன்றத்தில் தீர்மானமாக கொண்டுவர வேண்டியதுதானே.

கனக சபையில் நின்று பாடுவதற்கு பக்தர்களை அனுமதிக்க வேண்டுமென ஒரு அரசாணையை வெளியிட்டு, உடனடியாக அதனை செயல்படுத்த வேண்டுமென வற்புறுத்துகிறார்கள். தீட்சிதர்கள் மீது காழ்ப்புணர்ச்சியுடன் தவறான கருத்துகள் பரப்பப்படுகின்றன. இதனை அரசே ஊக்குவிக்கிறது. எங்களுக்கு ஒரு அச்ச உணர்வு ஏற்படுகிறது" என்கிறார் அவர்.

இது குறித்து இந்து சமய அறநிலையத் துறையின் இணை ஆணையர் அசோக்குமாரிடம் கேட்டபோது, "அவர்கள் கணக்குகளைக் காட்ட மறுக்கிறார்கள். அவர்கள் அப்படி மறுக்க முடியாது. இனி சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்" என்று தெரிவித்திருக்கிறார்.

தில்லை நடராஜர் கோவிலைப் பொறுத்தவரை, சர்ச்சைகளோ, வழக்குகளோ புதிதல்ல. இரு தரப்பும் தங்கள் நிலைப்பாட்டில் பிடிவாதமாக இருக்கும் நிலையில், இந்தப் பிரச்னை இப்போதைக்குத் தீர்வதைப் போல தெரியவில்லை.

https://www.bbc.com/tamil/india-61741533

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.