Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உக்ரைன் விவகாரத்தில் மௌனம் அவமானம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைன் விவகாரத்தில் மௌனம் அவமானம்

ராமச்சந்திர குஹா

spacer.png

க்ரைனுக்குள் ரஷ்ய ராணுவ டேங்குகள் நுழைந்து தாக்குதல் நடத்துவதும் உக்ரைனிய நகரங்கள் கிராமங்கள் மீது ரஷ்யப் போர் விமானங்கள் குண்டு வீசி அழிப்பதும் ஆரம்பித்து ஐந்து மாதங்கள் ஆகின்றன. இது மிகவும் கொடூரமான, ரத்த பலி கேட்கும் போர். இதுவரை சண்டையில் 20,000 ரஷ்யப் போர் வீரர்களும் அவர்களைப் போல இரண்டு மடங்கு உக்ரைன் வீரர்களும் இறந்துவிட்டனர். உக்ரைனைச் சேர்ந்த சிவிலியன்கள் ஆயிரக்கணக்கில் இறந்துள்ளனர். லட்சக்கணக்கானவர்கள் பாதுகாப்பான இடம் தேடி தங்களுடைய நாட்டை விட்டே ஓடி பிற நாடுகளில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்துவிட்டனர். 

உக்ரைனின் பொருளாதாரம் நாசமாக்கப்படுகிறது. இந்த மோதல் முடிவுக்கு வந்தாலும்கூட, தன்னுடைய பழைய நிலைக்குத் திரும்ப உக்ரைனுக்கு இன்னும் பல பத்தாண்டுகள் தேவைப்படும். சாமானிய ரஷ்யர்களின் வாழ்க்கையும் அன்றாடப்பாடும்கூட துக்கப்படும் நிலைக்குச் சென்றுவிட்டன. மேற்கத்திய நாடுகள் எடுத்துவரும் பொருளாதாரத் தடை நடவடிக்கைகளாலும் அதிபர் புடினால் தொடங்கப்பட்ட போரின் விளைவாக ஏற்பட்டுள்ள வேலையிழப்பு, வருவாய் இழப்பு, அவசியப் பொருள்களுக்குத் தட்டுப்பாடு உள்ளிட்ட இன்ன பிற செயல்களாலும் ரஷ்யர்களும் துயரங்களில் ஆழ்ந்துள்ளனர். 

தொடரும் சித்திரவதை

ஒரு மனிதன் என்ற வகையில், ரஷ்ய ராணுவத்தின் காட்டுமிராண்டித்தனமான செயல்களை அறிந்து அதிர்ச்சியில் உறைந்துவிட்டேன். எல்லா உக்ரைனிய நகரங்களின் அடித்தளக் கட்டமைப்புகளையும் திட்டமிட்டு அழிக்கின்றனர். மருத்துவமனைகள், மக்கள் பாதுகாப்பாக இருக்கலாம் என்ற நம்பிக்கையில் தங்கியுள்ள நிலவறைகள் போன்றவற்றையும்கூட குண்டு வீசி தகர்க்கின்றனர். பெண்களைப் பாலியல் வல்லுறவு உள்பட எல்லா வகையிலான தாக்குதல்களுக்கும் சித்திரவதைகளுக்கும் உள்ளாக்குகின்றனர். 

இந்தியக் குடிமகன் என்ற வகையில், என்னுடைய அரசின் கோழைத்தனத்தைக் கண்டு திகைப்படைகிறேன். ரஷ்யாவின் படையெடுப்பைக் கண்டிக்காமலும் அவர்களுடைய அக்கிரமங்களைக் கண்டும் காணாமல் மௌனம் சாதிப்பதையும் கண்டு வருந்துகிறேன்.

கடந்த பிப்ரவரியில் உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தொடங்கிய மாதத்திலோ அல்லது அடுத்த மார்ச் மாதத்திலோ இந்தியா எந்த ஒரு முடிவையும் திட்டவட்டமாக எடுக்காமல், பொறுத்திருந்து பார்க்கலாம் என்று செயல்பட்டதை ஓரளவுக்கு அவசியம் என்றுகூட கருதலாம். இரு நாடுகளும் மோதலை விரைவிலேயே முடித்துக்கொண்டுவிடும் என்றுகூட பேசப்பட்டது. உக்ரைனில் மருத்துவம் படிக்கச் சென்ற ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்களைப் பாதுகாப்பாக மீட்டு இந்தியாவுக்குக் கூட்டி வருவதே அப்போது முன்னுரிமையாக இருந்தது. 

மார்ச், பிறகு ஏப்ரல், பிறகு மே என்று போகப்போக ரஷ்யாவின் குரூரமான தாக்குதல்கள் அதிகமாகின. இதற்குப் பிறகும் இந்தியா நடுநிலை வகிப்பதை ஏற்க முடியாது. மேற்கத்திய நாடுகளின் தூண்டுதலால்தான் ரஷ்யா பதிலடியாக உக்ரைன் மீது தாக்குதல் தொடுத்தது என்ற வாதம் மிகவும் குறுகிய அடிப்படையைக் கொண்டது, உண்மையல்ல அது என்பது வெகு விரைவிலேயே வெளிப்படத் தொடங்கியது. 

நேட்டோவில் உக்ரைன் சேர்ந்துவிடாமல் தடுக்க, இந்தத் தாக்குதலை புடின் எடுக்கவில்லை; மாறாக தன் எண்ணத்துக்கேற்ப அடங்க மறுத்ததற்காக உக்ரைனியர்களைக் கடுமையாகத் தண்டிக்கவே இந்நடவடிக்கையை அவர் தொடர்கிறார். ரஷ்ய அதிபருக்கு சர்வாதிகார வெறி பிடித்திருக்கிறது. தன்னை வரலாற்றின் இடைக்கால சக்ரவர்த்தியாக நினைத்துக்கொண்டு, தன்னுடைய பக்கத்து நாடுகளையெல்லாம் ரஷ்யாவுடன் சேர்த்துக்கொண்டு மிகப் பெரிய உலகத் தலைவராக உருவெடுக்க முயல்கிறார். 

புடினும் அவருடைய ராணுவமும் தங்களுடைய கற்பனையான கனவுகளை நினைவாக்க - உக்ரைனியர்களுக்கு அல்லது ரஷ்யர்களுக்கேகூட கடுமையான சேதம் ஏற்பட்டாலும் பரவாயில்லை - முயன்று பார்த்துவிடுவோம் என்று தாக்குதல்களைத் தீவிரப்படுத்திவருகின்றனர். (உக்ரைனிலிருந்து கோதுமையை ஏற்றுமதி செய்யலாம் என்ற உடன்படிக்கையில் கையெழுத்திட்டுவிட்டு ஒடசா பிரதேசத்தின் பெரிய துறைமுகத்தின் மீது குண்டுகளை வீசி, கடுமையாக சேதப்படுத்தியிருக்கிறது புடின் அரசு).

‘உக்ரைனியர்கள்’ என்பதே ரஷ்யர்களுக்கு இன்னொரு அடையாளம் என்று நம்புகிறார் புடின். எனவே, அவர்கள் அனைவரும் சொந்த தாய்நாட்டுடன்தான் இணைந்திருக்க வேண்டும் – அதற்காக ராணுவ பலத்தை முழுதாகப் பயன்படுத்துவதிலும் தவறில்லை என்று கருதுகிறார். இந்த ஐந்து மாதப் போர் எதையாவது உணர்த்தியிருக்கிறது என்றால் அது உக்ரைனியர்களுக்குள்ள தேசிய உணர்வு வலுவானது என்பதைத்தான். தாங்கள் வித்தியாசமானவர்கள், தனித்துவம் மிக்கவர்கள், தங்களுடைய தேசிய அடையாளம் மறைந்துவிடாமல் காக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறார்கள். 

இந்தத் தாக்குதலுக்கு முன்னால் ரஷ்யர்களுக்கும் தங்களுக்குமிருக்கும் கலாச்சார ஒற்றுமையையும் இரு நாட்டவர்களுக்குமுள்ள பரஸ்பர மொழிப் பழக்கத்தையும்கூட வெளிப்படையாகப் பேசிப் பெருமைப்பட்டனர். இப்போது அவையெல்லாம் பழங்கதையாகிவிட்டன. வீடுகளில் ரஷ்ய மொழியே பேசும் உக்ரைனியர்கள்கூட இனி ரஷ்யாவுடன் அரசியல்ரீதியாக இணைந்து வாழ்வதை நினைத்துக்கூடப் பார்க்கத் தயாரில்லை.

ரஷ்ய ஏகாதிபத்தியம்

ரஷ்ய ஏகாதிபத்தியத்துக்கு எதிராக உக்ரைனியர்கள் வெளிப்படுத்தும் தேசிய உணர்வு, ஒருகாலத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு அடிபணிய மறுத்த வியட்நாமியர்களின் தேசிய உணர்வை அப்படியே பிரதிபலிக்கிறது. ஏகாதிபத்தியத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்தி சுதந்திரம் பெற்ற இந்தியா, அமெரிக்காவை எதிர்த்த வியட்நாமைத்தான் ஆதரித்தது என்பதை இந்திய அரசு நினைவுகூர்வது புத்திசாலித்தனமாகக்கூட அமையும். வியட்நாமியர்கள் முதலில் பிரெஞ்சுக்காரர்களிடமிருந்தும் பிறகு அமெரிக்கர்களின் மேலாதிக்கத்திலிருந்தும் விடுதலைக்காகப் போராடினார்கள். 

அமெரிக்காவிடமிருந்து பொருளாதார – ராணுவ உதவிகளுக்காக அண்டியிருந்த 1960களில்கூட, ‘வியட்நாம் விவகாரத்தில் அமெரிக்கா செய்வது தார்மிகரீதியாக தவறு, அரசியல்ரீதியாக புத்திசாலித்தனமற்றது’ என்று சுட்டிக்காட்டத் தவறவில்லை இந்தியா. அமெரிக்காவிடமிருந்து கோதுமை, பால் பவுடர் உள்ளிட்ட பொருளாதார உதவியை மிகவும் நம்பியிருந்த அந்தக் காலத்தில்கூட அதன் தவறைச் சுட்டிக்காட்ட இந்தியா தயங்கவில்லை.

நம் நாட்டுடன் நேரடித் தொடர்புள்ள, இதே போன்ற இன்னொரு வரலாறும் நினைவுக்கு வருகிறது. 1970களில் மேற்கு பாகிஸ்தானால் பொருளாதாரரீதியாகச் சுரண்டப்படுவதையும், சமூகரீதியாக இரண்டாம்தர குடிமக்களாக நடத்தப்படுவதையும், அரசியல்ரீதியாக ஒடுக்கப்படுவதையும் விரும்பாத அன்றைய கிழக்குப் பாகிஸ்தானிய வங்காளிகள், தங்கள் மீது திணிக்கப்பட்ட இஸ்லாமிய அடையாளத்தை எதிர்த்தனர். தங்களுக்கென்று தனி நாடு வேண்டும் என்று தீவிரமாகச் சிந்தித்தனர்.

ஆனால், இஸ்லாமாபாதில் ஆட்சி செய்த ராணுவத் தலைமை, ‘உங்களுடைய ஒரே அடையாளம் பாகிஸ்தானியர் என்பதுதான், வங்காளிகள் என்பதெல்லாம் பிறகுதான்’ என்று மூர்க்கமாக மறுத்து ஒடுக்குமுறைகளைத் தீவிரப்படுத்தியது. தங்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த வங்காளிகளைக் கடுமையாக ஒடுக்க முற்பட்டது. இதனாலும், லட்சக்கணக்கான வங்காளிகள் உயிர் பிழைப்பதற்காக இந்திய எல்லை நோக்கி வரத் தொடங்கியதாலும் இந்தியா ராணுவ உதவியுடன் தலையிட நேர்ந்தது. அதற்குப் பிறகு வங்கதேசம் என்ற சுதந்திர நாடு உதயமானது.

ஒருகாலத்தில் பாகிஸ்தானியர்களுக்கு வங்காளிகள் எப்படியோ அப்படித்தான் இப்போது ரஷ்யர்களுக்கு உக்ரைனியர்கள். ஒரே அடையாளம் – ஒரே வரலாறு என்று ரஷ்யா தவறாகக் கூறுவதை உக்ரைனியர்களும் ஏற்கவில்லை. வலுமிக்க நாட்டின் பிடியிலிருந்து விடுதலைபெற உக்ரைன் இப்போது போராடுகிறது. 1970-71இல் காட்டுமிராண்டித்தனமான செயல்களுக்காக பாகிஸ்தான் ராணுவத்தை இந்தியா சரியாகவே தண்டித்தது. 

கிழக்கு பாகிஸ்தானிலிருந்து புகலிடம் தேடி வந்த லட்சக்கணக்கான மக்களுக்கு அடைக்கலம் தந்தது. தேவைப்பட்ட நேரத்தில் உரிய அளவு ராணுவ பலத்தையும் பயன்படுத்தியது. வங்கதேசம் நம்முடைய நாட்டுக்குப் பக்கத்திலேயே இருந்தது, உக்ரைன் வெகு தொலைவில் இருக்கிறது என்பதால் அப்படி உதவ வாய்ப்பில்லை. ஆனால், நாம் இப்போது நடந்துகொள்ளும் முறையைக் கைவிட்டு, நேர்மாறான நிலையை எடுக்க வேண்டும். 

இதுவரையில் நாம் உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த ஆக்கிரமிப்பைக் கண்டிக்காமலேயே இருக்கிறோம், அதன் காரணமாக உக்ரைனில் புடின் நிகழ்த்தும் அக்கிரமங்களுக்கு உடந்தையாக இருக்கிறோம் என்றுகூட கருதப்படும்.

இந்தியா எங்கே? 

உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நிலை குறித்து திருப்தியைத் தராத விளக்கங்கள் பல கூறப்படக்கூடும். ரஷ்யாவின் ஆயுதங்களையும் ராணுவ உதவிகளையும் பெருமளவுக்கு நம்பியிருப்பதால் அவர்களைக் கண்டிக்க முடியாமலிருக்கிறது என்று கூறப்படுகிறது. உக்ரைனியர்களுக்குத் தனி சுதந்திர நாடாக இருக்கும் உரிமை இருக்கிறது என்று நாம் சொன்னால், நாளையே காஷ்மீர் மக்களுக்கும் நாகாலாந்தின் நாகர்களுக்கும் அந்த உரிமை இருக்கிறது என்று மற்றவர்கள் கூறிவிடுவார்கள் என்று ஒன்றிய அரசை ஆளும் பாஜகவின் தலைவர்கள் சிந்திப்பதாகத் தெரிகிறது. 

இன்னும் சிலர், சர்வதேசச் சந்தையில் கச்சா பெட்ரோலியத்தின் விலை கடுமையாக உயர்வதால் இந்தியாவில் அவற்றின் விலை உயர்வதையும் பணவீக்கம் அதிகரிப்பதையும் கட்டுப்படுத்த ரஷ்யாவிடமிருந்து கச்சா பெட்ரோலிய எண்ணெயை வாங்க முடிகிறது என்பதால் இந்தியா கண்டிக்காமல் இருப்பதாகக் கூறுகின்றனர். சர்வதேச புவி அரசியலில் நல்ல அனுபவம் இல்லாததால் பிரதமர் மோடி தெளிவாக முடிவெடுக்க முடியாமல் குழம்புகிறார். எனவே, இந்தியாவால் இதில் சரியான முடிவை எடுக்க முடியாமல் இருக்கிறது.

காரணங்கள் எதுவாக இருந்தாலும், இந்திய அரசின் நிலை - அல்லது எந்த நிலையையும் எடுக்க முடியாத நிலை, தார்மிகரீதியாக ஏற்க முடியாததாக இருக்கிறது, அரசியல்ரீதியாக செயல்திறமற்றதாகத் தெரிகிறது. நம்முடைய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், கிருஷ்ண மேனனை அடியொற்றிப் பேசுகிறார். ரஷ்யாவிடம் இயற்கை எரிவாயுவைத் தொடர்ந்து வாங்கிக்கொண்டே, ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கலாமா என்று இந்தியாவைப் பார்த்து, ஐரோப்பிய நாடுகள் ஆஷாடபூதிகளைப் போல கேட்கின்றன என்று சாடுகிறார். 

ஐரோப்பிய நாடுகள் சந்தர்ப்பவாதம் பேசுவது செய்தியல்ல, நாடு சுதந்திரமடைந்த 75வது ஆண்டைப் பெரிய விழாவாகக் கொண்டாடிக்கொண்டு, அப்படிப்பட்ட சுதந்திரத்தை இழக்க விரும்பாத உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் ரஷ்யாவைக் கண்டிக்காத இந்திய நிலைதான் சந்தர்ப்பவாதம். சுதந்திரம் பெறுவதற்காக இந்தியா எதிர்த்த ஏகாதிபத்தியம் மறைந்துவிடவில்லை, இன்றைக்கு உக்ரைன் மீது தாக்குதல் தொடுத்த ரஷ்யாவின் வடிவில் அது வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

இழப்புகள் அதிகமாகிவரும் நிலையிலும் அடிபணிந்துவிடாமல் ரஷ்யாவைத் தொடர்ந்து எதிர்க்கும் உக்ரைனியர்களின் தீரத்தை ஆதரித்தாக வேண்டிய தார்மிக கடப்பாடு இந்திய அரசுக்கு இருக்கிறது. அரசியல்ரீதியிலும் இதற்குத் தேவையிருக்கிறது. நம்முடைய பொருளாதார வலிமை, மக்கள்தொகை, ராணுவத்தின் அளவு – ஆற்றல், இன்னும் பிற அம்சங்கள் காரணமாக உலக அரங்கில் இந்தியா சொல்வது கவனமுடன் கேட்கப்படுகிறது. 

புடின் செய்வதை சீனம் கள்ளத்தனமாக அங்கீகரிக்கும் நிலையில், நம்முடைய அரசு அந்த ஊடுருவலைக் கடுமையாகக் கண்டித்திருந்தால் புடினுக்கும் ரஷ்யாவுக்கும் அழுத்தம் அதிகமாகியிருக்கும். உக்ரைனை இந்தியா ஆதரித்திருந்தால், ரஷ்யாவுக்கு எதிர்மறையான அழுத்தம் அதிகமாகியிருக்கும், சமரசப் பேச்சுகளுக்கு ரஷ்யாவை அது வரவழைத்திருக்கும். அப்படி இந்தியா நடந்துகொண்டிருந்தால் உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பும் உயர்ந்திருக்கும். அத்துடன் உக்ரைன் மட்டுமல்ல - ஏராளமான நாடுகளின் துயரங்களுக்கும் முடிவு ஏற்பட்டிருக்கும்.
 

https://www.arunchol.com/ramachandra-guha-on-ukraine-russia-issue

 

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யாவிற்கு எதிரான இராணுவத் தாக்குதலுக்கு அமெரிக்காவும் நேட்டோவும் உக்ரேனை ஆயுதபாணியாக்குவது பாரிய மோதலின் விரிவாக்கத்தை அர்த்தப்படுத்துகிறது

  •  
  •  
  •  
  •  
  •  
  •  

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கேகாணலாம்

ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்காவும் நேட்டோவும் தொடுத்து வரும் உக்ரேன்போரின் ஏகாதிபத்திய தன்மை பெருகிய முறையில் தெளிவாகி வருகிறது.உக்ரேனிய அரசாங்கம், அமெரிக்கா மற்றும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளால் வழங்கப்பட்ட இராணுவ தளபாடங்களுடன் ஆயுதம் ஏந்திய நிலையில், போரின் முதல் ஆறு வாரங்களில் ஆரம்ப தந்திரோபாய வெற்றிகளை பெறத் தொடங்கியுள்ளது. அமெரிக்காவும் நேட்டோ சக்திகளும் இப்போது ரஷ்யாவை இராணுவ ரீதியாக தோற்கடித்து, ஒரு பாரிய அரசியல் நெருக்கடியைக் கொண்டு வந்து, மாஸ்கோவில் ஒரு ஆட்சி மாற்றத்தைத் தொடங்கும் நோக்கத்துடன் தாக்குதலை நடத்தி வருகின்றன.

'அமெரிக்காவின் ஆசீர்வாதத்துடன் எடுக்கப்பட்ட நடவடிக்கையான சோவியத் காலத்து S-300 வான் பாதுகாப்புப் பிரிவை உக்ரேனுக்கு வழங்க ஸ்லோவாக்கியா எடுத்த முடிவு, போரில் ஒரு புதிய கட்டத்தை பிரதிபலிக்கிறது' என நியூ யோர்க் டைம்ஸ் சனிக்கிழமை எழுதியது. 'பாதுகாப்பு பிரிவு' என்பது உண்மையில் ஒரு தரையிலிருந்து வானில் தாக்கும் அமைப்பாகும். இது ரஷ்ய விமானங்களை சுட்டு வீழ்த்த பயன்படும்.

பிரித்தானிய பிரதம மந்திரி போரிஸ் ஜோன்சன் வெள்ளியன்று உறுதியளித்த 130 மில்லியன் டாலர்கள் கூடுதல் ஆயுதங்களுக்கு மேல், 120 கவச வாகனங்கள் மற்றும் கப்பல் எதிர்ப்பு ஏவுகணை அமைப்புடன் உக்ரேனுக்கு அனுப்பவும் வார இறுதியில் பிரித்தானியா உறுதியளித்தது. இந்த கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் கருங்கடலின் உக்ரேனின் கடற்கரையில் ரஷ்ய போர்க்கப்பல்களை நேரடியாக குறிவைக்க உக்ரேனிய இராணுவத்தை அனுமதிக்கும். உக்ரேனிய அரசாங்கத்திற்கு வரம்பற்ற ஆதரவை உறுதியளிப்பதற்காக சனிக்கிழமையன்று ஜோன்சன் கியேவுக்கு முன்அறிவிக்கப்படாத பயணத்தை மேற்கொண்டபோது இந்த அறிவிப்பு வந்துள்ளது.

3ffa1789-3fae-4059-b8be-64385d553770?ren
2022ஏப்ரல் 7, வியாழன், ஒரு உக்ரேனிய சிப்பாய்,புச்சாவில் அழிக்கப்பட்ட ரஷ்யபோர் வாகனத்தின் மீது நடந்து செல்கிறார் (AP Photo/Vadim Ghirda)

உக்ரேனைமேலும் ஆயுதமயமாக்கல் ரஷ்ய மண்ணில் அதன் நேரடித் தாக்குதல்களை சாத்தியமாக்கும். 'ரஷ்ய இராணுவ விமான நிலையங்களை சேதப்படுத்துவது உக்ரேனின் மீதான புதுப்பிக்கப்பட்ட தாக்குதலை எதிர்க்கும் வாய்ப்புகளை மேம்படுத்தும் என சில நிபுணர்கள் கூறினாலும் இதுவரை, பைடென் நிர்வாகம் உக்ரேனை ரஷ்யாவிற்குள் ஊடுருவி தாக்க அனுமதிக்கும் ஆயுதங்களை வழங்க தயாராக இல்லை' என டைம்ஸ் எழுதியது.

'ஆழமான இலக்குகளைத் தாக்கும் திறன்' அதாவது ரஷ்யாவிற்குள் உள்ள இலக்குகளை தாக்குவது ஒரு 'முக்கியமான இடைவெளி' என்றும் அதை கடக்க வேண்டும் என்றும் ரஷ்யாவிற்கு எதிராக இன்னும் ஆக்ரோஷமான நடவடிக்கைக்கு அழுத்தம் கொடுக்கும் முக்கிய அமெரிக்க அதிகாரிகளில் ஒருவரான ஓய்வுபெற்ற இராணுவ லெப்டினன்ட் கேர்னல் அலெக்சாண்டர் விண்ட்மன் கூறியதாக செய்தித்தாள் மேற்கோளிட்டுள்ளது.

கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோவை இடைவிடாமல் விரிவாக்கம் செய்தல், உக்ரேனை நேட்டோ ஆயுதக் களஞ்சியமாகவும், ரஷ்யா மீதான தாக்குதல்களுக்கான அரங்கமாக மாற்றுதல்மற்றும் பாதுகாப்பு உத்தரவாதங்களுக்கான ரஷ்யாவின் கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த மறுத்ததன் மூலம் உக்ரேன் போர் ஏகாதிபத்திய சக்திகளால் தூண்டப்பட்டது.

அமெரிக்காவும் நேட்டோவும் போர் தொடர வேண்டும் என்று விரும்புகின்றன. பைடென் தனது வார்சோ உரையில் வெளிப்படுத்தியதைப் போல, இலக்கு ரஷ்யாவில் ஆட்சி மாற்றம் ஆகும். ரஷ்ய இராணுவத்திற்கு ஏற்பட்ட ஆரம்ப பின்னடைவுகள், நேட்டோ ஒரு பெரிய இராணுவத் தோல்வியை ஏற்படுத்தும் என பைடென் நிர்வாகத்தை நம்புவதற்கும், இது புட்டின் ஆட்சியை பேரழிவுதரும் முறையில் சீர்குலைத்து ரஷ்ய தன்னலக்குழுவிற்குள் நேட்டோ சார்பான சக்திகளின் தலைமையில் ஒரு ஆட்சிக்கவிழ்ப்பு சதியை நடாத்தலாம் எனவும் நம்பவைத்துள்ளது.

அதுதான் நடக்குமாய் இருந்தால், அதன் அரசியல் விளைவாக, ரஷ்யா அமெரிக்க கட்டுப்பாட்டில் உள்ள நம்பிக்கையாளர்களின் கீழ் வைக்கப்படும், நாடு உடைக்கப்படுவதற்கு வழி வகுத்து, அதன் பரந்த நிலப்பரப்பு அமெரிக்காவினதும் ஏனைய நேட்டோ சக்திகளினதும் தங்குதடையற்ற கட்டுப்பாட்டுக்கும் சுரண்டலுக்கும் திறக்கப்படும்.

நேட்டோவின் தீவிரமடைந்து வரும் மூலோபாய நோக்கங்கள், அதன் படைகளுக்கும் ரஷ்யாவிற்கும் இடையே ஒரு வெளிப்படையானஇராணுவ மோதலின் சாத்தியத்தை பெருமளவில் அதிகரிக்கின்றன. மோதல் விரிவாக்க போக்கானது அதன் சொந்த தர்க்கத்தைக் கொண்டுள்ளது. பினாமிப் போரை ஒரு முழு அளவிலான மோதலாக மாற்றும், அணுவாயுத பரிமாற்றத்தின் அளவிற்கு கூட பல காட்சிகளை கற்பனை செய்வது கடினம் அல்ல.

எடுத்துக்காட்டாக, உக்ரேன் நேட்டோ வழங்கிய நவீனஇராணுவ தளபாடங்களைப் பயன்படுத்தி ரஷ்ய துருப்புக்களிடையே பெரும் இழப்பை ஏற்படுத்தினால் மற்றும் ரஷ்யப் பகுதிக்கு எதிராக ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தினால், கொடிய ஆயுதங்களை விநியோகித்த அல்லது அதனை அங்கு கொண்டுசெல்ல உதவிய நேட்டோ நாடுகளை இலக்காகக் கொண்டு ரஷ்யா பதிலடி கொடுக்கும் வாய்ப்பு பெருமளவில் உள்ளது.

அணு ஆயுதப் போர் ஆபத்தை ஏற்படுத்துவதற்கான பைடென் நிர்வாகத்தின் விருப்பம், பாரிய குற்றம்மிக்க பொறுப்பற்ற தன்மையைக் காட்டிலும் குறைவானதல்ல. ஆனால் இது அதனால் கட்டுப்படுத்தமுடியாத பொருளாதார மற்றும் அரசியல் தேவைகளால் உந்தப்பட்ட ஒரு பொறுப்பற்ற தன்மையாகும். இரண்டாம் உலகப் போருக்கு முன்னதாக 1938 இல் லியோன் ட்ரொட்ஸ்கி பயன்படுத்திய சொற்றொடரை இரவல் பெற்றுக்கூறுவதானால், முதலாளித்துவ வர்க்கம் மீண்டும் கண்களை மூடிக்கொண்டு பேரழிவை நோக்கிச் சறுக்கிக்கொண்டிருக்கிறது.

அடிப்படை வரலாற்று நிகழ்ச்சிப்போக்குகளும் மற்றும் இன்றைய சமூக பொருளாதார நெருக்கடிகளும் ஒன்றுடன் ஒன்று இணைவது இந்த பேரழிவை நோக்கிய போக்கிற்கு அடித்தளத்தை அமைக்கின்றது. உலகப் பொருளாதாரத்தில் அதன் மேலாதிக்க நிலையைத் தக்க வைத்துக் கொள்ளத் தீர்மானித்து விரக்தியும் உறுதியும் கொண்ட அமெரிக்கா, சீனாவுடனான தவிர்க்க முடியாத மோதலுக்கான முக்கிய தயாரிப்பிற்கு ரஷ்யாவை ஒரு பிராந்திய மற்றும் புவிசார் அரசியல் தடையாக கருதுகிறது. அமெரிக்க ஏகாதிபத்தியம் முனையும் உலகின் புதிய பங்கீட்டு போக்கில், யூரேசிய நிலப்பரப்பின் பரந்த வளங்கள் அதன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட வேண்டியுள்ளது.

உலக மேலாதிக்கத்தின் இந்த அரை பைத்தியக்கார இலக்கை அடைவதற்கான உந்துதல் அமெரிக்காவின் தீவிர உள்நாட்டு நெருக்கடியால் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. பகுத்தறிவான தீர்வுகள் இல்லாத சமூக, பொருளாதார மற்றும் அரசியல் முரண்பாடுகளால் துண்டாடப்படும் ஒரு சமூகத்தை ஒன்றிணைக்கும் இரும்புக் கவசத்தை இந்த போர் வழங்கும் என அமெரிக்க ஆளும் வர்க்கம் தன்னைத்தானே நம்பிக் கொண்டுள்ளது.

ரஷ்யாவைப் பொறுத்தவரையில், அமெரிக்காவும் நேட்டோவும் அமைத்த வலையில் விழுந்து, போரைத் தொடங்குவதற்கான அதன் பேரழிவுகரமான முடிவு, 30 ஆண்டுகளுக்கு முன்பு சோவியத் ஒன்றியம் ஸ்ராலினிசத்தால் கலைக்கப்பட்டதில் வேரூன்றிய ஒரு தவறான கணக்கீடாகும்.ரஷ்யாவில் அதன் பேராசை, மூலோபாய குறுகிய பார்வை மற்றும் அரசியல் திவால்தன்மைக்கு மட்டுமே பொருந்தும் ஒரு ஊழல்மிக்க நிதியத்தன்னலக்குழுவின் தயவில் பெருந்திரளான தொழிலாளர்களை வைத்துள்ளது.

மேற்கின் அதிகப்படியான தலையீடு இல்லாமல் தன்னலக்குழு ஆட்சியின் பலன்களை கிரெம்ளின் அனுபவிக்க அனுமதிக்கும் பாதுகாப்பு உத்தரவாதங்களை ரஷ்யாவிற்கு வழங்குவதற்கு நேட்டோவை அழுத்தம் கொடுக்க முடியும் என புட்டின் நம்பினார். ஆனால்மார்க்சிசத்தினதும்அக்டோபர் 1917 புரட்சியினதும்தீவிர எதிர்ப்பாளரான புட்டின், உலக ஏகாதிபத்திய அமைப்பின் உந்து சக்திகள் பற்றிய முழுமையான புரிதல் இல்லாததை இதன் மூலம்வெளிப்படுத்தினார்.

போரைத் தொடங்கிய பின்னர், புட்டின் ஆட்சி மேலும் மேலும் அதன் இருத்தலுக்கான மோதலுக்கு போராட இழுக்கப்படுவதைக் காண்கிறது.

உலக சோசலிச வலைத் தளம் உக்ரேன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பை எதிர்த்தது, ரஷ்யா ஏகாதிபத்திய சுற்றிவளைப்பை எதிர்கொள்கிறது மற்றும் நவகாலனித்துவக் கட்டுக்குள் தள்ளப்படுகின்றது என்ற உண்மையை நாங்கள் மறைப்பதற்காக அல்ல, மாறாக ரஷ்ய தன்னலக்குழுவின் பிற்போக்குத்தனமான இராணுவ சாகசம் மற்றும் தேசிய பேரினவாதத்தின் மூலம் ஏகாதிபத்தியத்தை எதிர்க்க முடியாது என்பதாலாகும்.

வர்க்கப் போராட்டத்தை விரிவுபடுத்துவதன் மூலம் மட்டுமே, ரஷ்ய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கம் போரை முடித்து ஏகாதிபத்தியத்தை தோற்கடித்து அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கத்துடன் முதலாளித்துவ உயரடுக்குகளை அகற்றி, தேசிய-அரசு அமைப்பை ஒழித்து, உலக சோசலிச கூட்டமைப்பை உருவாக்க முடியும்.

மே 1, 2022, க்கு இன்னும் மூன்று வாரங்களே உள்ளன, இந்த ஆண்டு, உலக சோசலிசப் புரட்சியின் முன்னோக்கு மற்றும் வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு மற்றும் போருக்கு எதிரான சர்வதேச போராட்டத்திற்கான அழைப்புக்கு அர்ப்பணிக்கப்பட வேண்டும்.

அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளில் உள்ள தொழிலாளர்கள் பினாமிப்போரை கண்டிக்க வேண்டும் மற்றும் நேட்டோ மோதலைத் தூண்டுவதையும் அதன் உக்ரேனிய பினாமிகளுக்கு ஆயுதங்களை வழங்குவதையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கோர வேண்டும்.

ரஷ்ய தொழிலாள வர்க்கம், கிரெம்ளினின் படையெடுப்பை உறுதியாக நிராகரிக்க வேண்டும். நேட்டோ ஏகாதிபத்தியத்திற்கான எதிர்ப்பானது, ரஷ்யாவிலும் மற்றும் முன்னாள் சோவியத் ஒன்றியம் முழுவதும் அக்டோபர் புரட்சிக்கு உத்வேகம் அளித்த சோசலிச சர்வதேசிய லெனினிச-ட்ரொட்ஸ்கிச கொள்கைகளின் மறுமலர்ச்சியில் தங்கியுள்ளது.

உலக முதலாளித்துவத்தின் நெருக்கடி ஏகாதிபத்திய போருக்கு எதிரான சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் இயக்கத்திற்கு தேவையான அனைத்து புறநிலை நிலைமைகளையும் உருவாக்கியுள்ளது. கோவிட்-19 தொற்றுநோய்க்கு ஆளும் வர்க்கத்தின் பிரதிபலிப்பின் விளைவாக இரண்டு வருட பாரிய மரணம் மற்றும் சமூக இடப்பெயர்வு ஆகியவற்றை தொடர்ந்து போரின் நேரடித் தாக்கத்தினால் இப்போது வாழ்க்கைச் செலவு விரைவாக அதிகரித்து வருகின்றது.

உக்ரேன் மற்றும் ரஷ்யாவில் இருந்து உணவு மற்றும் உரங்களின் ஏற்றுமதி நிறுத்தப்பட்டிருப்பது ஏற்கனவே மத்திய கிழக்கு, ஆபிரிக்கா மற்றும் ஆசியா முழுவதும் பேரழிவு நிலைமைகளை உருவாக்கி வருகிறது. நான்கு தசாப்தங்களில் காணப்படாத பணவீக்க அளவை தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இது வளர்ந்து வரும் வேலைநிறுத்த இயக்கத்தை தூண்டுகிறது.

எவ்வாறாயினும், இந்த எதிர்ப்பு சோசலிசத்திற்கான ஒரு நனவான அரசியல் இயக்கமாக வளர்க்கப்பட வேண்டும். இதன் அர்த்தம் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவையும் அதனுடன் இணைந்த சோசலிச சமத்துவக் கட்சிகளையும் ஒவ்வொரு நாட்டிலும் கட்டியெழுப்புவது ஆகும்.

இந்த முன்னோக்கின் அடிப்படையில் தான் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு அதன் சர்வதேச மேதின இணையவழி பேரணியைநடத்துகிறது. இந்த பேரணியில் பதிவு செய்து கலந்து கொள்ளவும், சோசலிசத்திற்கான போராட்டத்தை முன்னெடுத்து ஏகாதிபத்தியம் மற்றும் போருக்கு எதிராக ஒரு உலகளாவிய இயக்கத்தை கட்டமைக்கவும் எங்கள் வாசகர்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள அனைத்து தொழிலாளர்களையும் நாங்கள் அழைக்கிறோம்.

https://www.wsws.org/ta/articles/2022/04/12/pers-a12.html

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் மீதான போர்களில் ரஷ்யா  இந்தியா பக்கமே நின்றதால் கண்ணை மூடிகொண்டு  ரஷ்ய நண்பனை  ஆதரிக்க  வேண்டும் என்ற போக்கு அங்கே உள்ளதாம் ஆனால்  இந்த  கட்டுரையாளர் ராமச்சந்திர குஹா நியாயமாக எழுதியிருக்கிறார்👍
Joseph Kishore, David North இவர்களால் எழுதபட்ட கட்டுரை ரஷ்ய ஏகாதிபத்தியத்தை ஆதரித்து அமெரிக்காவில்  இருந்து பிரசாரம் செய்யும் உலக சோஷலிஸ்ட் வெப்சைட்ரினுடையது  அதை பற்றி ரஞ்சித் அண்ணா இங்கே ஏற்கெனவே விளங்கபடுத்தியிருந்தார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.