Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீன கப்பல் இலங்கைக்கு வந்தால் இந்தியாவுடனான உறவு பாதிக்குமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
  • யூ.எல். மப்றூக்
  • பிபிசி தமிழுக்காக

சீனாவின் 'யுவான் வாங் 5' (Yuan Wang 5) எனும் கப்பல் - இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வர திட்டமிட்டுள்ள செய்தி, இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, இந்த கப்பலின் வருகைக்கு இந்தியா கடும் எதிர்ப்பை வெளியிட்டிருக்கிறது. இது விண்வெளி ஆய்வில் ஈடுபடும் கப்பல் எனக் கூறப்படுகின்ற போதும், இதை ஓர் உளவுக் கப்பலாகவே இந்தியா பார்க்கிறது.

இந்தக் கப்பலில் இருந்தவாறு 750 கிலோ மீட்டர் தூரம் வரையிலான இடங்களை கண்காணிக்க முடியும் என கூறப்படுகிறது. அப்படியென்றால் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்தபடியே, இந்தியாவின் மிக முக்கியமான கேந்திர நிலையங்களை இந்த கப்பல் உளவு பார்க்கும் என்பது இந்தியாவின் புகாராக உள்ளது.

எதிர்வரும் 11ஆம் தேதி இந்த கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்து, அங்கு ஒரு வாரம் தங்கியிருந்து பின்னர் ஆகஸ்ட் 17ஆம் தேதி புறப்படும் என முன்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த துறைமுகம் 2017ஆம் ஆண்டு சீனாவுக்கு 99 வருட குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், யுவான் வாங் 5 கப்பல் - ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வருவதை தள்ளிவைக்குமாறு, கொழும்பிலுள்ள சீன தூதரகத்திடம் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சு ஆகஸ்ட் 5ஆம் தேதி எழுத்து மூலம் கோரிக்கை விடுத்ததது.

இந்த விடயம் தொடர்பாக மேலதிக ஆலோசனைகள் நடைபெறும் வரையில், மேற்படி கப்பலின் வருகையை தள்ளிப்போடுமாறு இலங்கை அதில் கேட்டுள்ளது.

சீனா எதிர்வினை

இந்த நிலையில் பெய்ஜிங்கில் சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின், திங்களன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, "இலங்கை ஒரு இறையாண்மை கொண்ட நாடு. சொந்த வளர்ச்சியின் நன்மைக்காக மற்ற நாடுகளுடன் உறவுகளை வளர்க்க அதற்கு உரிமை உள்ளது. சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பானது இரு நாடுகளாலும் சுயாதீனமாகத் தெரிவுசெய்யப்பட்டு பொதுவான நலன்களைப் பூர்த்தி செய்கிறது. அது எந்த மூன்றாம் தரப்பினரையும் குறிவைக்கவில்லை. பாதுகாப்பு பிரச்னைகளை மேற்கோள் காட்டி இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுப்பது அர்த்தமற்றது" என்று வாங் கூறினார்."சீனாவின் விஞ்ஞான ஆய்வுகளை நியாயமான மற்றும் விவேகமான வழியில் பார்க்கவும், சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இயல்பான பரிமாற்றத்தை சீர்குலைப்பதை நிறுத்தவும் சீனா சம்பந்தப்பட்ட தரப்பினரை வலியுறுத்துகிறது" என்றும் வாங் தெரிவித்தார்.

பாதுகாப்பு பிரச்சினைகளை மேற்கோள் காட்டி இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பது அர்த்தமற்றது என்று வாங் கூறினார், இலங்கையின் இந்த நடவடிக்கை இந்தியாவால் வெளிப்படுத்தப்பட்ட கவலைகளுக்கு காரணம் என்று அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

இலங்கைக்கு தற்போதைய நிலையில் அதிக கடன் வழங்கியுள்ள நாடாக சீனா உள்ளது. இலங்கை தனது மொத்த வெளிநாட்டுக் கடனில் 10 வீதத்துக்கும் அதிமான தொகையினை சீனாவுக்குச் செலுத்த வேண்டியுள்ளது. அவ்வாறு சீனாவிடமிருந்து பெறப்பட்ட கடன் தொகையில் கணிசமானவை ஹம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணம், மத்தள விமான நிலைய உருவாக்கம், கொழும்பிலுள்ள தாமரைக் கோபுர கட்டுமானம் ஆகியவற்றுக்கு செலவிடப்பட்டுள்ள போதும், அவற்றிலிருந்து சொல்லிக் கொள்ளும்படியாக வருமானங்கள் எவையும் இதுவரை கிடைக்கவில்லை என்பது ஒருபுறம்.

மறுபுறமாக, இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் அண்டை நாடான இந்தியா - எரிபொருள், மருந்துகள் மற்றும் உணவு உள்ளிட்டவற்றைக் கொள்வனவு செய்வதற்காக மிகவும் தேவையான நேரத்தில் சுமார் 3.5 பில்லியன் டாலர் கடனை வழங்கியுள்ளதோடு, அரிசி மற்றும் பால் மா போன்றவற்றினை அன்பளிப்பாகவும் கொடுத்து உதவியுள்ளது.

இந்தப் பின்னணியில், ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்குள் சீனாவின் யுவான் வாங் 5 கப்பல் அனுமதிக்கப்பட்டால், அது இலங்கை - இந்திய உறவில் பல்வேறு வகையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது. அவை தொடர்பில் ஆராய்கிறது இந்தக் கட்டுரை.

உறவை இந்தியா கைகழுவி விடாது

"சீனக் கப்பல் இலங்கைக்கு வருவதில் இந்தியாவுக்கு ராணுவ ரீதியான நெருக்கடிகள் உள்ளன," என்கிறார் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் துறைத் தலைவர் பேராசிரியர் கே.ரி. கணேசலிங்கம்.

 
பேராசிரியர் கே.ரி. கணேசலிங்கம்
 
படக்குறிப்பு,

பேராசிரியர் கே.ரி. கணேசலிங்கம்

இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுடனான இலங்கையின் வெளியுறவு என்பது தனித்துவமாகப் பார்க்கப்படுகிறது எனக் கூறும் அவர், "தற்போதைய நெருக்கடியில் பாரிய அளவு பொருளாதார உதவிகளைச் செய்த இந்தியாவுக்கு எதிரான அனுகுமுறையை இலங்கை மேற்கொள்கிறது எனும் அவதானிப்பு எல்லோரிடமும் உள்ளது" எனவும் குறிப்பிடுகின்றார்.

பிபிசி தமிழுடன் பேசிய கணேசலிங்கம்; "சீனாவின் பக்கம், தான் சாய்ந்து கொள்ளப் போவதாக காண்பிப்பதன் ஊடாக, இதுவரையில் இந்தியா மற்றும் அமெரிக்க அரசுகளை இலங்கை எவ்வாறு கையாண்டதோ, அதே போன்றதொரு தளத்தைத்தான் - சீனக் கப்பலின் வருகை திறந்து விடக்கூடிய வாய்ப்பு உள்ளது" என தெரிவிக்கின்றார்.

"சீனாவுடன் தனக்குள்ள உறவை முன்னிறுத்திக் கொண்டு, தன்னுடைய அரசியலை கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேல், வெற்றிகரமாக இலங்கை நகர்த்திக் கொண்டு வருகிறது. எனவே, சீனக் கப்பலின் இந்த வருகை இலங்கைக்கு நல்லதொரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையிலும் அமைந்து விடலாம்" எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

 
ரணில் விக்ரமசிங்க

பட மூலாதாரம்,PMD

 
படக்குறிப்பு,

ரணில் விக்ரமசிங்க

இந்தியாவின் புகார்கள் மற்றும் எதிர்ப்புகளையெல்லாம் மீறி, சீனக் கப்பலை ஹம்பாந்தோட்ட துறைமுகத்துக்குள் நுழைய இலங்கை அனுமதிப்பது, இந்தியாவுக்கு கோபத்தை ஏற்படுத்தினாலும், இலங்கையுடனான உறவை ஒட்டுமொத்தமாக கைகழுவி விடும் வேலையை இந்தியா மேற்கொள்ளாது எனவும் பேராசிரியர் கணேசலிங்கம் கூறுகின்றார்.

"இலங்கையை முற்றாக நிராகரிக்கும் தீர்மானமொன்றுக்கு இந்தியா செல்லும் என நான் நினைக்கவில்லை. இலங்கையுடன் முரண்பட்ட நிலையை இந்தியா வைத்துக் கொள்ளாது. அதாவது இலங்கையுடன் பகைத்துக் கொண்டு இலங்கைத் தூதுவர்களை இந்தியாவிலிருந்து வெளியேற்றுவது போன்ற நடவடிக்கைகளை எல்லாம் இந்தியா செய்யாது".

"இலங்கை அமைந்துள்ள பிராந்தியத்தை தொடர்ச்சியாக தனது செல்வாக்கினுள் வைத்திருக்க வேண்டும் எனும் அடிப்படையிலும், இலங்கையுடன் உறவை வைத்திருக்க வேண்டும் எனும் எண்ணத்திலும் இந்தியா இருக்கிறது. இந்தியாவின் பாதுகாப்பு சூழலுக்குள் இலங்கையின் எல்லைப் பகுதிகள் இருக்கின்றன. அதனால் இலங்கையுடன் நெருக்கடிகளை இந்தியா ஏற்படுத்திக் கொள்ளாது".

"இன்னொருபுறம் இந்தியா பகைத்துக் கொள்ளுமளவுக்கு - இலங்கை என்பது ரஷ்யா அல்லது சீனா போன்ற வலுமிக்கதொரு தேசமும் கிடையாது," என்றும் அவர் விவரி்த்தார்.

பகைமையை ஏற்படுத்தும் வகையில் ரணில் நடந்து கொள்ள மாட்டார்

இதன்போது, இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ராஜதந்திர அனுகுமுறைகள் குறித்த, தனது அவதானங்களையும் பேராசிரியர் வெளியிட்டார்.

"இலங்கையின் தற்போதைய நெருக்கடியில், ஏனைய நாடுகளைப் பகைத்துக் கொள்ளும் வகையிலான சூழ்நிலையை - இலங்கை ஆட்சியாளரொருவர் உருவாக்கிக் கொள்ள மாட்டார். அதுவும் இலங்கையின் மற்றைய ஜனாதிபதிகளுடன் ஒப்பிடும் போது, ரணில் விக்ரமசிங்க அவ்வாறு பிரச்னைகளை ஏற்படுத்தவே மாட்டார். அவர் ராஜதந்திரியாகவும் தலைவராகவும் லிபரல் (தாரண்மை) முகம் கொண்ட ஒருவராகவும் கடந்த காலங்களிலும் அறியப்பட்டுள்ளார். எனவே, மேற்கினையும் இந்தியாவையும் பகைக்கும் வகையில் - சீனக் கப்பல் விவகாரத்தை அவர் பயன்படுத்த மாட்டார்" என, நம்பிக்கை வெளியிடுகின்றார் பேராசிரியர் கணேசலிங்கம்.

ஹம்பாந்தோட்ட துறைமுகம் 99 வருடக் குத்தகைக்கு சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளமையை நினைவுபடுத்திய பேராசிரியர், "அந்த உடன்படிக்கையின் பிரகாரம் சீனக் கப்பல் - ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வருவதைத் தடுத்து நிறுத்துவற்கான வாய்ப்புகள் இல்லை" என்கிறார். ஒரு துறைமுகத்தைக் குத்தகைக்கு எடுக்கும் உடன்படிக்கை என்பது, அங்குள்ள கடற் பகுதியை தனது செல்வாக்கினுள் குத்தகைக்குப் பெறும் நாடு வைத்துக் கொள்வதற்கான அனைத்து உரிமைகளையும் கொண்டதாகவே கருதப்படும் எனவும் குறிப்பிடுகின்றார்.

 
ரணில் விக்ரமசிங்க

பட மூலாதாரம்,RANIL

 
படக்குறிப்பு,

ரணில் விக்ரமசிங்க

இதேவேளை, இப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2017ஆம் ஆண்டு பிரதமராகப் பதவி வகித்த அரசாங்கக் காலத்தில்தான் - ஹம்பாந்தோட்டை துறைமுகம் குத்தகை அடிப்படையில் சீனாவுக்கு வழங்கப்பட்டமையினையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

2014ஆம் ஆண்டு சீன ஜனாதிபதி இலங்கைக்கு வந்தபோது, சீன நீர்மூழ்கிக் கப்பலொன்று இலங்கைக்கு வந்தமையினை நினைவுபடுத்திய பேராசிரியர் கணேசலிங்கம்; அப்போதும் இந்திய எதிர்ப்புக் கிளம்பியதாகவும் அச்சமயம், எதிர்காலத்தில் இவ்வாறு நடைபெறாது என அப்போதைய இலங்கை ஆட்சியாளர்கள் கூறியிருந்தனர் எனவும் குறிப்பிட்டார்.

"கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை இடைமறிக்கும் செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக சீனா மூன்று இடங்களைத் தேர்ந்தெடுத்திருக்கின்றது என புலனாய்வு ஊடகங்கள் கூறுகின்றன. அவை, ஹம்பாந்தோட்டை துறைமுகம், கம்போடியா துறைமுகம், மியன்மார் சிட்வே துறைமுகம் ஆகியவையாகும். அந்த திட்டத்தை சீனா நடைமுறைப்படுத்துகிறதென்றால், அதற்காகவும் யுவான் வாங் 5 கப்பலின் வருகை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நோக்கி அமைந்திருக்கக் கூடும். அந்த வகையிலும், இந்தக் கப்பலின் வருகை இந்தியாவுக்கும் அமெரிக்காவும் நெருக்கடியை ஏற்படுத்தும் விடயமாகவே உள்ளது"..

"ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வருவதற்கான அனுமதியை சீனாவின் இந்தக் கப்பலுக்கு இலங்கை வழங்குவதென்பது கத்திமுனையில் நடப்பதற்கு ஒப்பான விடயம்தான். இதில் நெருக்கடிகள் ஏற்படுமாக இருந்தால் அது இலங்கைக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும்".

"இவ்வாறான நெருக்கடிகள் ஏற்படும் போது - தமிழர் தொடர்பானதும், வடக்கு கிழக்கு பிரச்னைகளையும் இந்தியா தூக்கிப் பிடிப்பது வழமையாகும். அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளிடமும் இந்தப் பழக்கம் உள்ளது. அப்படிச் செய்து இலங்கையை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அந்த நாடுகள் முயற்சிக்கும்" எனவும் பேராசிரியர் கணேசலிங்கம் கூறுகின்றார்.

ரணில் வஞ்சம் தீர்க்கிறார்

இது இவ்வாறிருக்க, யுவான் வாங் 5 சீனக் கப்பல் விவகாரத்தில், இந்தியாவை வஞ்சம் தீர்க்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செயற்படுகிறார் என்று, 'தமிழன்' பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான ஆர். சிவராஜா தெரிவிக்கின்றார்

 
ஆர். சிவராஜா
 
படக்குறிப்பு,

ஆர். சிவராஜா

"ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவாகுவதை இந்தியா விரும்பவில்லை. சஜித் பிரேமதாஸவுக்கு தமது ஆதரவை வழங்கப் போவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்தமையின் பின்னணியில் இந்தியா இருந்தது. அதனை மனதில் வைத்துக் கொண்டுதான் இந்தியாவை வஞ்சம் தீர்க்கும் வகையில், சீனக் கப்பல் விவகாரத்தில் ரணில் நடந்து கொள்கிறார்" எனவும் பிபிசியிடம் பேசிபோது சிவராஜா கூறினார்.

"சர்ச்சைக்குரிய சீனக் கப்பல் இலங்கை வந்தால், ரணிலை இந்தியா முழுமையாகவே நம்பாத நிலைமையொன்று உருவாகும். மறுபுறமாக சீனாவுடனான இலங்கை உறவு புதுப்பிக்கப்படும். இதனையடுத்து இலங்கைக்கு சீனா உதவிகளைச் செய்யும்" எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

யுவான் வாங் 5 கப்பலின் இலங்கை வருகையானது, இலங்கை - இந்திய உறவில் விரிசலினை உருவாக்கும் என்றும், ஆனால் இந்தியா அதனைக் காட்டிக் கொள்ளாது எனவும் கூறுகின்ற சிரேஷ்ட பத்திரிகையாளர் சிவராஜா; "அடுத்த தேர்தலில் தமக்கு ஆதரவானவர் எனக் கருதும் ஒருவரை ஆட்சிக்குக் கொண்டுவருவதற்கு இந்தியா முயற்சிக்கும்" என்கிறார். இருந்தாலும் தனது பதவிக் காலத்துக்குள் இந்தியாவுக்கு ஆதரவாக ரணில் செயற்பட்டால் நிலைமை மாறக் கூடும் எனவும் அவர் கூறுகிறார்.

சீன சார்பு - விமல் அணியை வளைப்பதற்கான தந்திரம்

இதேவேளை, ராஜபக்ஷ அரசாங்கத்திலிருந்து பிரிந்து சென்று சுயாதீனமாக நாடாளுமன்றில் செயற்படுவதாகக் கூறிக் கொள்ளும் விமல் வீரவன்ச அணியினரை தனது பக்கம் வளைத்துப் போடுவதற்காகவே, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் பக்கமாக தான் சாய்ந்து கொண்டுள்ளதாக ரணில் விக்ரமசிங்க காட்டிக் கொள்கிறார்" எனவும் சிவராஜா தெரிவிக்கின்றார்.

மேலும், "விமல் அணியினர் சீனா மற்றும் ரஷ்யா சார்பானவர்கள் எனவும், சீனா சில விடயங்களை ரணில் விக்ரமசிங்கவுக்கு விமல் தரப்பு ஊடாகவே கூறியுள்ளது" என்றும் சிவராஜா குறிப்பிடுகின்றார்.

அத்துடன், "விமல் அணியினரை தனது பக்கம் ரணில் விக்ரமசிங்க உள்வாங்கிக் கொண்டால், சிங்கள மேலாதிக்க சக்திகள் ரணிலுக்கு எதிராக கிளம்பாது. ரணிலின் ரஷ்ய மற்றும் சீன சார்பு என்பது, விமல் அணியினரை அரசாங்கத்தின் உள்ளே எடுக்கும் வரையில்தான் இருக்கும். அதன் பிறகு ரணில் தனது விருப்பப்படி வேலைகளைச் செய்யத் தொடங்கி விடுவார்" எனவும் சிரேஷ்ட ஊடகவியலாளர் சிவராஜா கூறுகிறார்.

சீன கப்பல் இலங்கைக்கு வந்தால் இந்தியாவுடனான உறவு பாதிக்குமா? - BBC News தமிழ்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.