Jump to content

பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் தாயகம்

 Tamil Eelam in 2022 : r/imaginarymaps

தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய தீர்வில் உள்ளடக்கப்பட வேண்டிய இரண்டாவது அடிப்படை அம்சம்  எதுவென்பதைத் தமிழர் தரப்பு முன்வைத்தது. தமிழ் மக்கள் இலங்கையில் தம்மை ஒரு தனியான தேசமாக உணர்ந்து, தமது இருப்பினைப் பாதுகாத்துக்கொள்வதற்கு, அவர்கள் சரித்திர காலம் முதல் வாழ்ந்துவரும் நிலப்பகுதியின் எல்லைகள் வரையறுக்கப்பட்டு, அப்பகுதி தமிழர்களின் பூர்வீகத் தாயகம் என்று அங்கீகரிக்கப்படவேண்டும் என்று கோரினர். இலங்கையில் தமிழர்களுக்கென்று தாயகம் ஒன்று இருக்கின்றது என்பது அரசால் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் என்று அவர்கள் வாதாடினர். தமிழர்களின் தாயகம் என்பது யதார்த்த ரீதியில், சரித்திர ரீதியில், நிர்வாக ரீதியில், நடைமுறையில் இயங்குவதாக அவர்கள் மேலும் எடுத்துக் கூறினர்.

large.Threekingdoms.JPG.02e4da745c32b108f9923beda2ec61ca.JPG

சரித்திர ரீதியில் தமிழர்களும் சிங்களவர்களும் தத்தமது பூர்வீகத் தாயகங்களிலேயே வாழ்ந்துவருவதாக அவர்கள் கூறினர். இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்கள் சரித்திர ரீதியில் வாழ்ந்துவருகையில், சிங்களவர்கள் நாட்டின் ஏனைய பகுதிகளில் வாழ்ந்துவருவதாக அவர்கள் எடுத்துரைத்தனர். 16 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் போர்த்துக்கேயர் இலங்கையினை ஆக்கிரமித்தபோது வடக்குக் கிழக்கினை யாழ்ப்பாண இராஜ்ஜியம் ஆண்டு வந்ததாகவும், இலங்கையில் கரையோரப் பகுதிகளான மேற்கையும், தெற்கையும் கோட்டே இராஜதானி ஆண்டுவந்ததாகவும், நாட்டின் மத்திய மலைப்பகுதியினை கண்டி இராஜ்ஜியம் ஆண்டுவந்ததாகவும் அவர்கள் சான்றுகளுடன் வெளிப்படுத்தினர். 

What is the Jaffna Kingdom?

யாழ்ப்பாண இராஜ்ஜியம்

 

அந்நியரின் ஆதிக்கத்தின் கீழ் கோட்டே இராஜ்ஜியமே முதன் முதலாக கொண்டுவரப்பட்டதுடன், அதன் ஆட்சியாளர்கள் சுயவிருப்பத்தின் அடிப்படையில் தமது இராஜ்ஜியத்தின் இறையாண்மையினை போர்த்துக்கேய மன்னனிடம் தாரைவார்த்தனர். யாழ்ப்பாண இராஜ்ஜியம் 1621 ஆம் ஆண்டு போர்த்துக்கேய ஆக்கிரமிப்பாளர்களினால் வெற்றிக்கொள்ளப்பட்டதுடன், கண்டி இராஜ்ஜியம் 1815 இல் ஆங்கிலேய ஆக்கிரமிப்பாளர்களால் கைப்பற்றப்பட்டது. காலணித்துவ ஆக்கிரமிப்பாளர்களால் கைப்பற்றப்பட்ட யாழ்ப்பாண இராஜ்ஜியத்தின் இறையாண்மை, இலங்கை சுதந்திரம் அடைந்த தருணத்தில் தமிழ் மக்களிடத்திலேயே கொடுக்கப்பட்டிருத்தல் அவசியமாகும்.

நிர்வாக ரீதியில், தமிழரின் பூர்வீகத் தாயகமான வடக்கும் கிழக்கும் போர்த்துக்கேய ஆக்கிரமிப்பாளர்களால் தனியாகவே நிர்வகிக்கப்பட்டு வந்தது. 1621 ஆம் ஆண்டிலிருந்து 1815 வரையான இரு நூற்றாண்டுக் காலப்பகுதியில் போர்த்துக்கேயரை ஒல்லாந்தர் வெற்றிகொள்ள, பிற்காலத்தில் ஒல்லாந்தரை ஆங்கிலேயர்கள் வெற்றிகொண்டிருந்தனர். 1833 ஆம் ஆண்டு முழு இலங்கையினையும் ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டுவந்த ஆங்கிலேயர்கள் கொழும்பிலிருந்தே மாகாணங்களை ஆண்டுவந்தனர். அப்படியிருந்தபோதிலும், வடக்குக் கிழக்கு மாகாணங்கள் தனி அலகாகக் கருதப்பட்டு, நாட்டின் ஏனைய பகுதிகளைக் காட்டிலும் வேறாகவே நிர்வகிக்கப்பட்டு வந்தது. அதே நிர்வாக நடைமுறைகள் இன்றும் கடைப்பிடிக்கப்பட்டே வருகின்றன.

சிங்கள அரசுகள் தமது அரசியல் தீர்வுப் பொதிகள் ஊடாக, சட்டங்கள் ஊடாக, அரசியல் யாப்புக்களூடாக வடக்குக் கிழக்கு மாகாணங்களை தமிழரின் தாயகமென்றே ஏற்றுக்கொண்டிருக்கின்றன. 1958 ஆம் ஆண்டு செல்வநாயகத்துடன் பண்டாரநாயக்க செய்துகொண்ட ஒப்பந்தத்தில் வடக்குக் கிழக்கில் பிராந்திய சபைகளை ஏற்படுத்துவதென்றும், அப்பிராந்தியங்களில் வாழும் மக்கள் விரும்பினால் வடக்கும் கிழக்கும் இணைந்துகொள்ளமுடியும் என்றும், அப்பிராந்தியங்களில் தமிழ் உத்தியோகபூர்வ மொழியாக இருக்கும் என்றும் ஒத்துக்கொண்டிருந்தார். இவ்வொப்பந்தத்தில், "உத்தியோகபூர்வ மொழியான சிங்களத்திற்கு இடையூறு விளைவிக்காத வகையில் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மொழி நிர்வாக மொழியாக இருக்கும்" என்று ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. மேலும், 1958 ஆம் ஆண்டு பண்டாரநாயக்கவினால் நிறைவேற்றப்பட்ட  சட்டத்தின்படி வடக்குக் கிழக்கு மாகாணங்களின் நிர்வாக மொழியாக தமிழ் மொழி இருக்கும் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனை 1965 இல் செய்துகொள்ளப்பட்ட செல்வா டட்லி ஒப்பந்தம் மேலும் மெருகூட்டியிருந்தது. தமிழ் மொழியினை ஆவணங்களை உருவாக்கும் மொழியாக ஏற்றுக்கொள்ளவும் டட்லி அரசு இணங்கியிருந்தது.  1966 ஆம் ஆண்டு தை மாதம் 8 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட சட்டத்தில் தமிழ் மொழி ஆவண உருவாக்கல் மொழியாக பிரகடணப்படுத்தப்பட்டது.

1972 ஆம் ஆண்டு மற்றும் 1978 ஆம் ஆண்டின் அரசியலமைப்புச் சட்டங்கள் வடக்குக் கிழக்கு மாகாணங்களை தமிழரின் தாயகம் என்று ஏற்றுக்கொண்டிருக்கின்றன. 1972 ஆம் ஆண்டின் யாப்பு, தமிழ் மொழியினை வடக்குக் கிழக்கில் நிர்வாக மொழியாக பாவிக்க அனுமதி வழங்கியிருந்தது. 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டம் தமிழ் மொழியினை தேசிய மொழியாக ஏற்றுக்கொண்டதுடன் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் தேசிய மொழியான தமிழ் மொழியினை நிர்வாகத்திற்குப் பாவிக்கவும்  ஏற்றுக்கொண்டிருந்தது.

இவற்றுள் மிகவும் தீர்க்கமான வாதமாக முன்வைக்கப்பட்டது மூன்றாவதாகும். சிங்கள அரசுகளும், சிங்கள மக்களும் வடக்குக் கிழக்கு மாகாணங்களை தமிழரின் தாயகமாகவே கருதிவருகின்றனர் என்பதே அந்த வாதமாகும். 1950 களின்போது தமிழர்கள் தமது மொழிக்கான அந்தஸ்த்துக் கோரி கூக்குரலிட்டபோது, "உங்களின் தாயகத்திற்கே ஓடுங்கள்" என்று கூறியே சிங்களவர்கள் அவர்களை அடித்து விரட்டினர். உங்களின் தாயகம் என்று அவர்கள் குறிப்பிட்டது வடக்குக் கிழக்கினையே. மேலும், 1958, 1977, 1981 மற்றும் 1983 ஆம் ஆண்டுகளில் தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட படுகொலைகளின்போது, ஆட்சியில் இருந்த ஒவ்வொரு சிங்கள அரசுகளும், தமிழர்களின் பாதுகாப்புக் கருதி, அவர்களைப் பாதுகாப்பாக அவர்களின் தாயகமான வடக்குக் கிழக்கிற்கு ரயில்களிலும், கப்பல்களிலும்  அனுப்பி வைத்தன.

தமிழர் தரப்புப் பிரதிநிதியாகக் கலந்துகொண்டவர் ஒருவர் பின்வருமாறு உணர்வுபொங்கக் கேட்டார், "இலங்கையின் தெற்கில் நாம் தமிழர்கள் என்கிற காரணத்திற்காகத் தாக்கப்படும்போது எமது பாதுகாப்பிற்காக நாம் எங்கு செல்வோம்? கொழும்பில் எமக்கெதிரான படுகொலைகள் நடைபெறும்பொழுது சிங்கள அரசாங்கங்கள் எம்மை எங்கே அனுப்பிவைத்தன? நாம் வடக்குக் கிழக்கிலேயே தஞ்சமடைந்தோம், ஏனென்றால் அதுவே எங்களின் தாயகம்".

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • Replies 581
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ரஞ்சித்

பிரபாகரன் தமிழ்த் தேசிய அரசியலினைப் பின் தொடர்ந்து பல தாசாப்த்தங்களாக ஆய்வுகளையும் கட்டுரைகளையும் வெளியிட்டுவந்த மூத்த பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான த. சபாரட்ணம் அவர்கள் எமது தேசியத் தலை

ரஞ்சித்

அறிமுகம் 1950 களின் பாராளுமன்றத்தில் தமிழருக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய ஆசனங்களின் எண்ணிக்கைக்கான கோரிக்கையிலிருந்து ஆரம்பித்து இன்று நிகழ்ந்துவரும் உள்நாட்டு யுத்தம் வரையான தமிழர்களின் நீதிக்க

ரஞ்சித்

உள்நாட்டிலும், இந்தியாவிலும் தனது இனவாத நடவடிக்கைகளுக்காக எழுந்துவந்த எதிர்ப்பினைச் சமாளிப்பதற்காக இருவேறு கைங்கரியங்களை டி எஸ் சேனநாயக்கா கைக்கொண்டிருந்தார். ஒருங்கிணைந்த தமிழ் எதிர்ப்பினைச் சிதைப்பத

  • கருத்துக்கள உறவுகள்

சுய நிர்ணய உரிமை

 தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வில் உள்ளடக்கப்படவேண்டிய முக்கிய நான்குவிடயங்கள் என்று தமிழர் தரப்பால் முன்வைக்கப்பட்டவற்றில் மூன்றாவது சுய நிர்ணய உரிமையாகும். இதுகுறித்துப் பேசும்போது அரசதரப்பு குழுவின் தலைவரான ஹெக்டர் தெரிவித்திருந்த கருத்தான, "காலணித்துவ ஆட்சியின் கீழ் இருக்கும் இனங்க‌ள் மட்டுமே சுய நிர்ணய உரிமைக்கான அந்தஸ்த்தினைப் பெறுவார்கள்" என்பதனை மேற்கோள் காட்டிப் பேசினர். தமிழர்களும் அந்நியர்களின் ஆட்சியின் கீழேயே வாழ்கிறார்கள் என்றும், சிங்களவர்களால் ஒடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் தமிழர்கள் வாதாடினர்.

சிங்கள அரசுகளால் தமிழர்கள் மீது திணிக்கப்பட்டுவரும் ஒட்டுக்குமுறைகள் குறித்த விரிவான தகவல்களை தமிழர் தரப்பு முன்வைத்தது. இந்திய வம்சாவளித்தமிழர்களுக்கான பிரஜாவுரிமை மறுப்பு, தமிழர் தாயகத்தில் அரசினால் முன்னெடுக்கப்பட்டுவரும் சிங்களக் குடியேற்றங்களினால் ஏற்பட்டுவரும் தமிழரின் தாயக இழப்பு, தனிச் சிங்களச் சட்டத்தின் மூலம் தமிழர்கள் தமது தாய்மொழியினை உத்தியோகபூர்வ மொழியாகப் பாவிப்பதில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் தடைகள், தமிழ் மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதியில் ஏற்படுத்தப்பட்ட தடைகள், தமிழர்களின் வாழ்வையும், சொத்துக்களையும் நாசமாக்குவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள், தமிழர்களின் இருப்பை முற்றாக அழித்துவிடும் நோக்கில் சிங்கள அரசுகளால் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் செயற்பாடுகள் ஆகியன உட்பட சிங்கள் தேசம் தமிழினம் மீது நடத்திவரும் ஒடுக்குமுறைகளினால், தமிழினம் சுய நிர்ணய உரிமைக்கான அனைத்து இலக்கணங்களையும் கொண்டிருப்பதாக அவர்கள் வாதிட்டனர். 

ஆனால், தமது நான்காவது கோரிக்கையான பிரஜாவுரிமை குறித்து அதிக அழுத்தங்களைக் கொடுப்பதை தமிழர் தரப்பு தவிர்த்துக்கொண்டது. 1984 ஆம் ஆண்டில் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் இந்திய வம்சாவளித் தமிழர்களின் பிரஜாவுரிமை குறித்து எடுத்துக்கொள்ளப்பட்ட தீர்மானத்தையடுத்து தமிழர் தரப்பு இதுகுறித்து விவாதிப்பதைத் தவிர்த்திருந்தது.

இவற்றிற்கு மேலதிகமாக, முன்வைக்கப்படும் தீர்வில் மனிதவுரிமைகளைக் காப்பதுகுறித்து அதிக கவனம் செலுத்தப்படவேண்டும் என்றும் தமிழர் தரப்பு கேட்டுக்கொண்டது.

ஆனால், தமிழர் தரப்பால் முன்வைக்கப்பட்ட நான்கம்சக் கோரிக்கை குறித்து விவாதிப்பதிலிருந்து சிங்களத் தரப்பு பின்வாங்கியிருந்தது. இதுகுறித்து என்னிடம் பேசிய தமிழர் தரப்புப் பிரதிநிதியொருவர், "நாம் கூறுவதை அவர்கள் கேட்டுக்கொண்டிருந்தார்கள், எதிர்த்து வாதிடுவதையோ, கேள்விகேட்பதையோ அவர்கள் தவிர்த்துவிட்டார்கள்" என்று கூறினார். தமிழர் தரப்பினரின் வாதத்தினையடுத்துப் பேசிய ஹெக்டர், காணிப்பிரச்சினை தொடர்பாக தமிழர் தரப்பு முன்வைத்த கோரிக்கை குறித்து தான் கருத்துத் தெரிவிக்க விரும்புவதாகக் கூறினார்.

திம்புவில் தமிழரின் பிரச்சினையினைத் தீர்த்துவைக்க நான்கம்சக் கோரிக்கையினை உள்ளடக்கிய தீர்வைக் கோரி தமிழர் தரப்பு விவாதித்து வருகையில், ஆவணி 14 ஆம் திகதி இராணுவம் மீண்டும் படுகொலைகளில் இறங்கியது. கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த தனியார் பேர்ருந்தினை மறித்து, அதிலிருந்த ஆறு தமிழ் இளைஞர்களை காட்டிற்குள் இழுத்துச் சென்ற இராணுவம் அவர்களை வாட்களால் வெட்டிக் கொன்றது. சித்திரை 10 ஆம் திகதி வவுனியாவிலும் திருகோணமலையிலும் இராணுவம் நடத்திய படுகொலைகளின் தொடர்ச்சியாகவே இப்படுகொலையும் நடத்தப்பட்டிருந்தது. 

தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் நிச்சயம திருப்பித் தாக்குவோம் என்று தாம் எச்சரித்ததன்படி, ஆறு தமிழ் இளைஞர்களின் படுகொலைகளுக்கான பதிலடியில் புலிகள் இறங்கினார்கள். தளபதி விக்டர் தலைமையிலான 40 புலிகள் மன்னார் மாவட்டத்தில் அமைந்திருந்த முருங்கன் இராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தினார்கள்.

சென்னையில் புலிகளின் அலுவலகம் விடுத்த அறிக்கையில், தமிழ் மக்கள் தாக்கப்பட்டால் இராணுவம் மீது தாக்குதல் நடத்துவோம் என்பதைக் காட்டவே முருங்கன் முகாம் மீது தாக்குதல் நடத்தியதாக கூறியிருந்தது. "தமிழர்கள் தாக்கப்பட்டால் திருப்பித் தாக்குவோம்" என்று அச்செய்தி கூறியது.

வன்முறைகள் ஆரம்பிப்பதை உணர்ந்துகொண்ட இந்தியா இரு தரப்பினரையும் பொறுமை காக்குமாறு வலியுறுத்தியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட தமிழர் தரப்புப் பிரதிநிதிகளின் 
சட்டபூர்வத் தன்மை பற்றிய கேள்வி

 ஆவணி 15 ஆம் திகதி, தமிழ் மக்கள் சார்பாகப் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்த தமிழர் தரப்புப் பிரதிநிதிகளின் சட்டபூர்வ தன்மை பற்றி அரசுதரப்பு எழுப்பிய கேள்வி குறித்த விளக்கத்தினை தமிழர் தரப்பு கோரியது. ஆவணி 12 ஆம் திகதிய ஆரம்ப அறிக்கையில் ஹெக்டர் , "இலங்கையில் வாழும் தமிழர்களின் குறித்த ஒரு குழுவினரைப் பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறிக்கொள்ளும் ஆறு ஆயுத அமைப்புக்கள்" என்று குறிப்பிட்டிருந்தார்.

தமிழர் தரப்பினர் விடுத்த ஒருங்கிணைந்த அறிக்கை கீழே, 

இலங்கை அரசாங்கம் எமக்குத் தரவிருப்பதாகக் கூறிக்கொள்ளும் தீர்வினை நீங்கள் முன்வைக்கும் முன்னர், இரு விடயங்கள் குறித்து தெளிவான விளக்கத்தை தமிழர் தரப்பு கோருகிறது. இதற்கான உங்களின் பதிலிலேயே நாம் இப்பேச்சுக்களில் தொடர்ந்தும் பங்கேற்பது தங்கியிருக்கிறது. ஆகவே, நான் கூறவிருக்கும் இவ்விடயங்களைக் கவனமாகச் செவிமடுத்து, அதற்கான பதிலை நன்கு ஆராய்ந்து, தீவிரத்தன்மையினை உணர்ந்து பதிலளிக்குமாறு கனவான்களான உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

முதலாவது விடயம், தமிழர்கள் சார்பாக பேச்சுக்களில் ஈடுபட்ட தமிழர் தரப்புப் பிரதிநிதிகளின் சட்டபூர்வத் தன்மை குறித்த இலங்கை அரசு தரப்பின் கேள்வி. ஆவணி 12 ஆம் திகதியில் தனது ஆரம்ப உரையினை ஆற்றிய ஹெக்டர் தமிழர் தரப்புப் பிரதிநிதிகளை "இலங்கையில் வாழும் தமிழர்களின் ஒரு பகுதியினரை பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறிக்கொள்ளும் ஆறு ஆயுத அமைப்புக்கள்" என்று விழித்ததன் மூலம் சிங்கள மக்களுக்கும் சர்வதேசத்திற்கும் சிங்கள அரசு, தமிழர் தரப்பினை எப்படிப் பார்க்கிறார்கள் எனும் செய்தியினைச் சொல்லியிருந்தார்.

 திம்புப் பேச்சுக்களில் ஈடுபட்டிருக்கும் தமிழர் தரப்புப் பிரதிநிதிகளான நாம், ஏதோ வாடிக்கையாளர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் பிரதிநிதிகள் அல்ல, மாறாக நாம் தமிழ் ஈழத்தைச் சேர்ந்த தமிழ் மக்களை உத்தியோகபூர்வமாக பிரதிநிதித்துவம் செய்யும் ஒரே விடுதலைப் போராளிகள் என்பதனை அழுத்தம் திருத்தமாகச் சொல்லிக்கொள்கிறோம்.  சுருக்கமாகச் சொல்வதானால், தமிழ்த் தேசத்தின் ஒரே பிரதிநிதிகள் நாங்கள்.

மேலும், ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பு வானில் இருந்து வீழ்வதல்ல, மாறாக அடக்குமுறைக்குத் தொடர்ச்சியாக முகம்கொடுத்து வரும் இனம் ஒன்றின் எதிர்வினையிலிருந்து உருவாவது, அம்மக்களின் ஆதரவினாலும், நம்பிக்கையினாலும் வளர்ந்துவருவது. எமது தேசத்தின் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் ஒடுக்குமுறைகளில் இருந்து அவர்களை விடுவிக்கும் இலட்சியத்துடன் ஆயுதம் ஏந்தி நிற்கும் விடுதலைப் போராளிகளே நாம் அன்றி ஆயுத மோகத்தினால் ஆட்கொள்ளப்பட்டவர்கள் இல்லையென்பதையும் கூறிக்கொள்கிறோம். தமிழ்த் தேசிய இனத்தின் பிரச்சினைகளுக்கான தீர்வுகோரி தமிழினம் சிங்கள‌ அரசுகளுடன் காலம் காலமாக ஜனநாயக வழிகளில் முயன்ற அனைத்துமே தோல்விகண்டதன் விளைவாகவே நாம் ஆயுதங்களை ஏந்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

எமது ஆயுதப் போராட்டம் விளைவித்த அழுத்தம் காரணமாகவே உங்களின் அரசாங்கம் எம்மை தமிழ் மக்களின் நியாயமான பிரதிநிதிகள் என்பதை நன்றாக உணர்ந்தே "ஆறு ஆயுத அமைப்புக்களுடன்" பேசவென்று உங்களை இங்கு அனுப்பி வைத்திருக்கிறது என்பதைக் கனவான்களான நீங்கள் நிச்சயம் அறிவீர்கள். 

ஆனால், இந்த யதார்த்தம் உங்களுக்கும், எங்களுக்கும் மட்டுமே புரிந்தால்ப் போதுமானது அல்ல. திம்புப் பேச்சுக்களின் ஊடாக இப்பிரச்சினைக்குச் சர்வதேச பரிமாணம் ஒன்று ஏற்படுத்தப்பட்டிருப்பதனால், இந்த யதார்த்தங்கள் பேச்சுவார்த்தைகளில் முற்றாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.  

மேலும்,  இதுகுறித்த இன்னொரு நடைமுறைச் சிக்கல் ஒன்று குறித்தும் பேசுவது அவசியம் என்று நான் கருதுகிறேன். இலங்கையில் வாழும் தமிழர்களையும், அவர்களின் தேசத்தையும் பிரதிநிதித்துவம் செய்யாது, ஒரு பகுதியை மட்டுமே பிரதிநிதித்துவம் செய்யும் ஆறு ஆயுத அமைப்புக்களுடன் உங்களின் அரசு பேச்சுக்களில் சமமாகப் பேச அமர்ந்திருப்பதனை உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் நீங்கள் எப்படி விளக்கப்போகிறீர்கள்? 

எம்மை, எமது மக்களின் சட்டபூர்வப் பிரதிநிதிகள் இல்லையென்று பிடிவாதம் செய்து, அகம்பாவத்துடன் எமக்கு முன்னால் பேச்சுவார்த்தை மேசையில் அமர்ந்திருக்கும் அரசு தரப்புடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டோம் என்பதை நாமும் தான் எமது மக்களிடம் எப்படிக் கூறப்போகிறோம்? திம்புப் பேச்சுக்கள் தொடரவேண்டுமானால் இந்த நடைமுறைச் சிக்கல் களையப்படவேண்டும் என்பதுடன், இதனைக் களைவதற்கான முழுப் பொறுப்பும் அரச தரப்பிடமே இருக்கிறதென்பதையும் நான் கூறிக்கொள்கிறேன், ஏனென்றால் இச்சிக்கலினை உருவாக்கியவர்களே நீங்கள்தான். 

எமது சட்டபூர்வத்தன்மை குறித்து கேள்வி கேட்பதற்கு, மக்களின் விருப்பிற்குப் பயந்தோடி, தேர்தலை இரத்துச் செய்து, சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்ட உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? ஆனால், மக்களின் விருப்பிற்கு மாறாக, அரசியலமைப்பில் திருத்தங்களைச் செய்து,  சர்வஜன வாக்கெடுப்புக்கள் மூலம் மக்களை அடக்கியாளும் உங்களைப் போன்ற, மக்களின் ஆதரவும் நம்பிக்கையும் அற்ற சர்வாதிகார அரசுகள் உலகில் காணப்படுவதால் அதுகுறித்து சர்ச்சையொன்றினை உருவாக்குவதை நாம் தவிர்த்துவிடுகிறோம்.

பேச்சுக்களைத் தொடர்வதற்கு முன்னர், நாம் முன்னர் குறிப்பிட்ட இரண்டாவது விடயம் குறித்துப் பேசலாம். அரசு தரப்புக் குழுவின் தலைவர் காணி தொடர்பாக தனது நிலைப்பாட்டினை சபையில் தெரிவிக்கவிருப்பதாகக் கூறினார். ஆனால், நாம் முன்னர் பல தடவைகள் கூறியது போல, அதிகாரப் பரவலாக்கத்திற்கான அலகு என்னவென்பது குறித்த தெளிவான முடிவொன்று எடுக்கபாடதவிடத்து, அதிகாரப் பரவலாக்கத்திற்காகக் கருத்தில் கொள்ளப்படும் விடயங்கள் குறித்து பேசுவதில் எந்தபயனும் இல்லையென்பதனால் அவை குறித்து நாம் பேசப்போவதில்லையென்பதை உறுதிபடத் தெரிவித்துக்கொள்கிறோம். தீர்விற்கான கட்டமைப்பு என்று உங்களால் முதலாம் கட்டப் பேச்சுக்களில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளை நாம் சரியான காரணங்களுடன் முற்றாக நிராகரித்திருக்கிறோம். ஆகவே, முன்னைய ஆலோசனைகளின் அடிப்படையில் புதிய ஆலோசனைகளை நீங்கள் முன்வைக்கப்போவதாகக் கூறுவது எம்மைக் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

ஆகவே, எமது கேள்விகளுக்காக நீங்கள் வழங்கப்போகும் பதில்களிலேயே இப்பேச்சுக்கள் தொடரப்படவேண்டுமா இல்லையா என்பது தீர்மானிக்கப்படவிருக்கிறது. 

தமிழர் தரப்பால் முன்வைக்கப்பட்ட இந்த ஒருங்கிணைந்த அறிக்கை, பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெறுவதற்கு அச்சுருத்தலாக இருக்கப்போகிறது என்கிற நிலை தோன்றியது. இலங்கையரசாங்கம் இதனால் கொதிப்படைந்தது. தமிழர் தரப்பின் சட்டபூர்வத் தன்மை குறித்த அரசாங்கத்தின் கேள்வியே தமிழர் தரப்பு பேச்சுக்களில் இருந்து விலகிச் செல்வதற்கான வழியினைத் திறந்துவிட்டிருப்பதை அரசு உணர்ந்துகொண்டது. திம்புவில் இருந்து தனது சகோதரரான ஜெயாருக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தினார் ஹெக்டர். தாமே உருவாக்கிய சிக்கலில் இருந்து வெளிவருவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அவர்கள் தீர்மானித்தனர்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாம் கட்டப் பேச்சுக்களில் இருந்து தமிழர்தரப்பை வெளியேற்ற புதிய ஆலோசனைகள் எனும்பெயரில் தந்திரங்களை முன்வைத்த இலங்கை அரசு

 

தமிழ்ப் பிரதிநிதிகளின் இணைந்த அறிக்கைக்குப் பதிலளித்த ஹெக்டர் பின்வரும் விடயங்களைக் கூறினார்.

 

1. இலங்கைத் தமிழர்கள், இந்திய வம்சாவளித் தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து இலங்கையர்களையும் இலங்கை அரசின் பேச்சுவார்த்தைக்குழு பிரதிநிதித்துவம் செய்கிறது. இலங்கையின் அமைச்சரவையில்க் கூட தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட தமிழ் அமைச்சர்கள் அவர்களின் பிரதிநிதிகளாக‌ இருக்கிறார்கள்.

2. இங்கு பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளும் தமிழ் அமைப்பினர் இலங்கையில் வாழும் அனைத்துத் தமிழர்களையும் பிரதிநிதித்துவம் செய்வதாகக் கோருகிறார்கள். ஆனால், யதார்த்தத்தில் இலங்கையரசாங்கமும் தமிழர்களை இங்கே பிரதிநிதித்துவம் செய்கிறது. இங்கு பிரசன்னமாகி இருக்கும் தமிழ் அமைப்பினர் தாமே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று கோருவதை எம்மால் ஏற்றுக்கொள்ள இயலாது. அதை விடவும், இலங்கையர்களால் நன்கு அறியப்பட்ட தமிழ் அரசியட்கட்சியான தமிழ்க் காங்கிரஸ் இங்கு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவில்லை. மேலும், சில ஆயுத அமைப்புக்களும் இப்பேச்சுக்களில் கலந்துகொள்ளவில்லை.

3. தமிழர்களுக்கு இருக்கும் பிரச்சினைகள் என்று அடையாளம் காணப்பட்டவற்றைத் தீர்த்துக்கொள்வதற்கான பேச்சுக்களில் ஈடுபடுவதற்கு இங்கு பிரசன்னமாகியிருக்கும் தமிழ் மக்களின் ஒரு பகுதியினரைப் பிரதிநிதித்துவம் செய்யும் குழு போதுமானது என்று நாம் ஏற்றுக்கொண்டிருக்கிறோம். அதன் அடிப்படையிலேயே இலங்கை அரசாங்கத்தின் பேச்சுக்குழு இப்பேச்சுக்களின் பிரசன்னமாகியிருக்கின்றது.

தமிழர் தரப்புப் பிரதிநிதிகளின் சட்டபூர்வத்தன்மை குறித்த ஹெக்டரின் விளக்கத்தினால் இரண்டாம் கட்டப் பேச்சுக்கள் அப்போதைக்குத் தோல்வியடைவதைத் தடுக்க உதவியது. அத்துடன், இலங்கை அரச பிரதிநிதிகள் தமது புதிய யோசனைகள் முன்வைக்கவும் இது சந்தர்ப்பத்தினை ஏற்படுத்திக் கொடுத்தது. உப தேசிய அலகுகளுக்கான கட்டமைப்பு எனும் பெயரில் இலங்கை அரசு  தனது புதிய ஆலோசனைகளை முன்வைத்தது. 

அரசின் புதிய ஆலோசனைகள் 12 பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தது.

அதன் முதலாவது பிரிவு, மக்கள் தமது பிரச்சினைகளையும், தேவைகளையும் கண்டறிந்து அவற்றிற்கான தீர்வுகளைத் தாமே உய்த்தறிந்துகொண்டு அவற்றினை நடைமுறைப்படுத்துவதற்கான அதிகாரங்களை உப தேசிய அலகுகள் ஊடாக பெற்றுக்கொடுப்பது.

இந்த உப தேசிய அலகுகள் நாட்டின் ஒற்றையாட்சித் தன்மையினை முற்றாக ஏற்றுக்கொண்டே நடைமுறைப்படுத்தப்படும். சர்வ வல்லமை பொருந்திய ஜனாதிபதியின் அதிகாரங்களுக்கும், சட்டவாக்கல் அதிகாரமுள்ள பாராளுமன்றத்திற்கும் இந்த உப தேசிய அலகுகள் முற்றாகக் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும்.

ஆலோசனைகளின் இரண்டாம் பிரிவு, உப தேசிய அலகுகள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டே இயங்கமுடியும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இவ்வாறான உப தேசிய அலகுகள் மூன்று அடுக்குகளைக் கொண்டிருக்கும், தேவையேற்படின் நாலாவது அடுக்கும் சேர்க்கப்படலாம். அந்த மூன்று உப தேசிய அலகுகளுமாவன : மாகாண சபைகள், மாவட்ட சபைகள், பிரதேச சபைகள் என்பனவாகும்.

ஒவ்வொரு மாகாணத்திற்கென்று மாகாணசபைகளும், ஒவ்வொரு மாவட்டத்திற்குமென்று மாவட்ட சபைகளும், ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிற்குமென்று பிரதேச சபைகளும் உருவாக்கப்படும். தேவையேற்படின் பிரதேசங்களுக்கான கூட்டமைப்பும் உருவாக்கப்படலாம்.

ஆனால், இதன்படி எந்தவொரு மாகாணமும் இன்னொரு மாகாணத்துடன் இணைக்கப்படுதல் முடியாது. தற்போது நடைமுறையிலிருக்கும் மாகாணங்களின் எல்லைகளைக்குள்ளேயே உத்தேச மாகாண சபைகளும் அடங்கியிருக்கும்.

ஒவ்வொரு மாகாணசபைக்கும் பிரதான நிறைவேற்று அதிகாரியொருவர் நியமிக்கப்படுவார். அந்த அதிகாரி பாராளுமன்ற உறுப்பினராகக் காணப்படுமிடத்து அவர் முதலமைச்சர் என்று அழைக்கப்படுவதுடன், பாராளுமன்ற உறுப்பினராக இல்லாதவிடத்து பொருத்தமான இன்னொரு பெயர் கொண்டு அவர் அழைக்கப்படுவார். ஒவ்வொரு மாகாணசபைக்குமான பிரதான நிறைவேற்று அதிகாரியை, அம்மாகாணங்களின் உறுப்பினர்களின் ஆதரவோடு ஜனாதிபதியே நியமிப்பார். தனது நிறைவேற்று அதிகாரம் கொண்ட மந்திரிகள் சபையினை முதலமைச்சர் அந்த மாகாணசபை உறுப்பினர்களிடமிருந்து தெரிவுசெய்துகொள்வார்.

பிரதம நிறைவேற்று அதிகாரிக்கான‌ அதிகாரங்கள் பாராளுமன்றத்தினாலேயே அவருக்கு வழங்கப்படும். முதலமைச்சர் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருக்குமிடத்து அவருக்கான நிறைவேற்று அதிகாரங்களை ஜனாதிபதியே நேரடியாக‌ வழங்குவார். அவர் பாராளுமன்ற உறுப்பினராக இல்லதவிடத்து, ஜனாதிபதியினால் சில அதிகாரங்கள பகிர்ந்தளிக்கப்படும். மாகாண நிறைவேற்று மந்திரிசபைக்கென்று அதிகாரங்கள் வழங்கப்பட மாட்டாது. தமக்கென்று தனியான நிறைவேற்று அதிகாரம் கொண்ட கட்டமைப்பினை எந்தவொரு மாகாண சபையும் கொண்டிருக்கக் கூடாது என்பதற்காகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஒரு மாகாணத்தின் எல்லைகளுக்குள், குறிப்பிட்ட சில விடயங்கள் தொடர்பில், தமக்கு வழங்கப்பட்டுள்ள மட்டுப்படுத்தப்பட்ட சட்டமியற்றும் அதிகாரங்களைக் கொண்டு, அந்த மாகாணசபை சில சட்டங்களை இயற்ற முடியும். ஆனால், இவ்வாறு இயற்றப்படும் உப சட்டங்களை ஏற்கவோ அல்லது நிராகரிக்கவோ ஜனாதிபதிக்கு பூரண அதிகாரம் இருக்கும். மேலும், மாகாண சபை ஒன்றி இயற்றும் உப சட்டங்கள் முதலில் பாராளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்படுதல் அவசியம். எவ்வாறான விடயங்கள் தொடர்பாக மாகாண சபைகள் உப சட்டங்களை உருவாக்கலாம் என்பது தொடர்பான விடயங்கள் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும்.   

அரசின் அடுத்த கட்ட நிர்வாக அலகாக மாவட்ட சபைகள் இருக்கும். ஒவ்வொரு மாவட்டத்திற்குமான பிரதம நிறைவேற்று அதிகாரி அந்தந்த மாவட்டத்திற்குப் பொறுப்பாக இருப்பார். அவர் பாராளுமன்ற உறுப்பினராக இருக்குமிடத்து அவர் மாவட்ட அமைச்சர் என்று அழைக்கப்படுவார். அவ்வாறு இல்லாதவிடத்து, அவர் அமைச்சர் என்று அழைக்கப்படுவார். மாவட்ட அமைச்சருக்கான நிறைவேற்று அதிகாரங்களை ஜனாதிபதியே இதுக்குவார். சாதாரண அமைச்சருக்கான அதிகாரங்கள் நேரடியாகவன்றி, பகிர்ந்தளிப்பு முறையில் வழங்கப்படும். அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதன்படி மாவட்ட சபைகள் தமது எல்லைக்குற்பட்ட விடயங்கள் தொடர்பாக உப சட்டங்களை இயற்றவியலும்.

மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்பொழுது, இந்த ஆலோசனைகள் தமிழரைப் பொறுத்தவரையில் ஓரளவிற்கு ஏற்றுக்கொள்ளக்கூடியவையாகத் தோன்றினாலும்கூட, அவை உண்மையிலேயே தமிழரின் பிரச்சினைகளைத் தீர்க்க எந்தவிதத்திலும் போதுமானவை அல்ல என்பது தெரியவரும். இந்த ஆலோசனைகளை ஆளமாகப் படிக்கும் எவருக்கும், அரசாங்கம் வழங்க ஆயத்தமாக இருக்கும் அதிகார அலகு மாவட்ட சபையே அன்றி மாகாண சபை அல்ல என்பது தெளிவாகத் தெரியும். மாவட்ட சபைகள் தாம் விரும்பினால் ஒன்றுடன் ஒன்று இணைந்து மாகாணசபையினை உருவாக்க முடியும் அல்லது தனித்து இயங்கமுடியும். மாவட்ட சபைகளுக்கான உறுப்பினர்களும் மக்களால் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களும், அந்த மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களும் மாவட்ட சபையில் உறுப்பினர்களாக இருப்பர். மேலும், இந்த மாவட்ட சபைகள் தனித்து இயங்குவதா அல்லது இன்னொரு மாவட்ட சபையினை இணைத்து மாகாண அளவில் இயங்குவதா என்பது குறித்து முடிவெடுக்க முடியும். புதிய ஆலோசனைகளில் முன்வைக்கப்பட்ட "மாவட்ட சபையாக தனித்தோ அல்லது இணைந்து மாகாண அளவிலோ இயங்க முடியும்" எனும் சரத்தினூடாக இதனை அரசு புகுத்தியிருந்தது.

"மாவட்ட சபையாகத் தனித்து இயங்குதல் அல்லது இணைந்து மாகாண அளவில் இயங்குதல்" எனும் சரத்தின் கீழ் பிரிவு 10 முதல் 12 வரையான மூன்று பிரிவுகளை புதிய ஆலோசனைகள் கொண்டிருந்தன. பிரிவு 10 மாகாண சபைகளுக்கான அரசியலமைப்புக் குறித்துப் பேசுகிறது. தற்போது இருக்கும் மாகாணங்களில் இயங்கும் மாவட்ட சபைகள் குறித்தும், இயங்காநிலையில் இருக்கும் மாவட்ட சபைகள் குறித்தும் இந்தப் பிரிவு பேசுகிறது. 

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைத் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் மாவட்ட சபைகள் இயங்கியே வருகின்றன. மாவட்ட சபைகள் இயங்கும் மாகாணங்களில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினைக் கொண்டு பல மாவட்ட சபைகள் இணைந்து மாகாண அளவில் இயங்க முடியும். அவ்வாறானதொரு முடிவு எடுக்கப்படாத பட்சத்தில் மாவட்ட சபைகள் தனித்தனியாக இயங்கும். மாவட்டங்கள் இணைந்து மாகாண சபைகள் உருவாகுமிடத்து அம்மாகாணத்திற்குள் இயங்கும் மாவட்ட சபைகளின் இயக்கம் முடிவிற்கு வரும். 

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாவட்ட சபைகள் இயங்கியிருக்கவில்லை. ஆகவே, இந்த மாகாணங்களில் இருக்கும் மாவட்ட சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்பட்டு, அவை உருவாக்கப்படுதல் அவசியம். பின்னர் அந்த மாகாணத்தில் இருக்கும் மாவட்டசபைகளில் மூன்றில் இரண்டு விரும்புமிடத்து, மிகக் குறைந்த பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்படும் பிரேரணை ஒன்றினூடாக தம்மை இணைத்து ஒரு மாகாணசபையாக உருவாகிக்கொள்ளுதல் முடியும். அவ்வாறு இணையும் முடிவு ஒன்று எடுக்கப்படாதவிடத்து, மாவட்ட சபைகள் தனித்தனியாக இயங்க முடியும்.

புதிய ஆலோசனைகளின் பிரிவு 11 மாகாணசபைகள் மற்றும் மாவட்ட சபைகளுக்கான உறுப்பினர்கள் பற்றிப் பேசுகிறது. ஒரு மாகாணத்திற்குள் அமைந்திருக்கும் மாவட்டங்களில் இருந்து தெரிவுசெய்யப்படும் உறுப்பினர்களும், அம்மாகாணங்களிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவுசெய்யப்பட்டவர்களும் மாகாண‌ சபை உறுப்பினர்களாக இருப்பர். அவ்வவறே, ஒவ்வொரு மாவட்டத்திலிருந்து தெரிவுசெய்யப்படும் உறுப்பினர்களும், அந்த மாவட்டத்திலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவுசெய்யப்பட்டவர்களும் மாவட்ட சபையில் உறுப்பினர்களாக இருப்பர். 

மாகாண சபைகள் எனும் அமைப்புத் தோற்கடிக்கப்படுவதை உறுதிப்படுத்தவே புதிய ஆலோசனைகளின் பிரிவு 12 சேர்க்கப்பட்டிருந்தது. ஒரு மாகாணத்தில் இயங்கும் மூன்றில் ஒரு மாவட்ட சபைகள் தாம் விரும்பினால் அந்த மாகாணசபையிலிருந்து விலகி தனித்து மாவட்ட சபையாக இயங்கமுடியும் என்பதே அந்தச் சரத்து.

அரசு முன்வைத்த புதிய யோசனைகளைப் படித்துவிட்டு தம்மால் சிரிப்பதைத் தவிர வேறு எதனையும் அப்போது செய்ய‌ முடியாது போய்விட்டது என்று பேச்சுக்களில் பங்கெடுத்த இரு தமிழ்ப் பிரதிநிதிகள் என்னிடம் தெரிவித்தனர். "சிலரோ கொதித்துப்போய் இருந்தனர், சத்தியேந்திரா அவர்களில் ஒருவர்" என்று ஒரு தமிழ்ப் பிரதிநிதி என்னிடம் கூறினார். 

தமிழர் தரப்பு பேச்சுக்களில் இருந்து வெளிநடப்புச் செய்வதனை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே புதிய ஆலோசனைகளை அரசு முன்வைத்திருந்தது. தமிழர் தரப்பிற்குத் தேவைப்பட்டதெல்லாம் தகுந்த சூழ்நிலை மட்டும்தான்.

"பிரச்சினை என்னவென்றால், இந்தியாவைப் புண்படுத்தா வண்ணம் நாம் பேச்சுக்களில் இருந்து விலக வேண்டும்" என்று பிரபாகரன் ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்களுடன் பேசும்போது தெரிவித்தார்.

 தமிழர் தரப்பு எதிர்பார்த்திருந்த சரியான சூழ்நிலையினை அன்றிர‌வே இலங்கை இராணுவம் அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தது . ஆவணி 16 ஆம் திகதி வவுனியாவிலும் திருகோணமலையிலும் சிங்கள இராணுவம் ஆடிய படுகொலைகள் தமிழர்களை வெகுவாகக் கோபங்கொள்ளச் செய்திருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோல்வியில் முடிவடைந்த திம்புப் பேச்சுக்கள் :  வவுனியாவிலும் திருகோணமலையிலும் இருநாட்களில் பலியிடப்பட்ட 220 தமிழர்கள்

http://www.tchr.net/his_riots_outcome.htm

தமிழர்களையும், இந்தியாவையும் தனது "புதிய யோசனைகள்" எனும் சதித் திட்டத்தினூடாக ஹெக்டர் ஜயவர்த்தன ஏமாற்றிய நாளான 1985 ஆம் ஆண்டு ஆவணி 16 ஆம் திகதி, வவுனியா -  யாழ்ப்பாணம் வீதியில் விமானப்படைக்குச் சொந்தமான ஜீப் வண்டியொன்றின்மீது போராளிகளால் தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால், கண்ணிவெடித் தாக்குதலில் ஜீப் வண்டி தப்பியதுடன், அதில் பயணம் செய்த விமானப்படையினருக்கும் சேதங்கள் ஏற்பட்டிருக்கவில்லை. ஆனாலும், தம்மீது தாக்குதல் நடத்தப்பட்டதனால் கொதிப்படைந்த விமானப்படையினர் பொதுமக்கள் மீது பழிவாங்கும் தாக்குதல்களைக் கட்டவிழ்த்து விட்டனர். வவுனியாவிலிருந்து வடக்கே செல்லும் வழியில் பதினைந்து தமிழர்களைச் சுட்டுக் கொன்ற விமானப்படையினர் வீதியின் இரு மருங்கிலும் இருந்த தமிழர்களின் வீடுகளுக்கும், கடைகளும் தீவைத்தனர். 

அன்றிரவு, சுமார் 400 பேர் அடங்கிய இராணுவத்தினரின் படைப்பிரிவொன்று தமிழர்களின் கிராமங்களான இரம்பைக்குளம், தோணிக்கல், கூழைப்பிள்ளையார் குளம், கூடம்குளம், மூன்றுமுறிப்பு ஆகிய பகுதிகளுக்கு  ஐம்பது வாகன‌ங்களில் வந்திறங்கியது. அக்கிராமங்கள் முற்றாகச் சுற்றி வளைக்கப்பட்டதுடன், நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு வீடுகளுக்கு வெளியே வந்தோரை கைகளை மேலே தூக்கி வருமாறு பணித்த இராணுவத்தினர், சனநடமாட்டம் அற்ற பகுதிக்கு அவர்களை இழுத்துச் சென்றனர். அக்கிராமங்களின் வீடுகளுக்குள் புகுந்த சில இராணுவத்தினர் அங்கிருந்த இளைஞர்களை அவர்களின் பெற்றோரின் முன்னிலையில் சுட்டுக் கொன்றனர். மீதிப்பேரைக் கைது செய்து , ஏனையோர் தடுத்துவைக்கப்படிருந்த  ஒதுக்குப்புறமான பகுதிக்கு இழுத்து வந்தனர்.

"ஒரு வயதான அதிகாரி அடித்தொண்டையில் கத்தினான், "நாற்பது வயதிற்குக் குறைந்த எல்லாப் பேய்களும் எனக்கு முன்னால் வந்து வரிசையில் நில்லுங்கள். மற்றையவர்கள் நிலத்தில் இருக்கலாம்" என்று அவன் கர்ஜித்தான். எனக்கோ 52 வயது. நான் நிலத்தில் இருந்துகொண்டேன். எனது இரு மகன்களும் இராணுவத்தினர் கட்டளையிட்டதன்படி வரிசையில் சென்று நின்றுகொண்டார்கள். எனது பிள்ளைகள் உட்பட சுமார் 50 இளைஞர்களை அவர்கள் வரிசையில் நிறுத்திச் சுட்டுக் கொன்றார்கள்" என்று சர்வதேச மன்னிப்புச் சபையிடம் தனது வாக்குமூலத்தைக் கொடுத்த இரு இளைஞர்களின் தந்தையான கந்தவனம் குமரன் கூறினார். 

29 வயது நிரம்பிய சிவகுமாரன் எனும் இளைஞரது மனைவியான சாந்தினி தனது வாக்குமூலத்தில் அன்றிரவு அப்பகுதியில் நடந்த அகோரமான படுகொலைகளைப்பற்றி இவ்வாறு சாட்சியமளித்தார். "அன்றிரவு எனது வீட்டிற்கு இராணுவத்தினர் வந்தபோது எனது கணவரை நான் ஒளித்திருக்கச் சொன்னேன். ஆனால், வீட்டினுள் வந்த இராணுவத்தினர் அவரைக் கண்டுவிட்டனர். அவரைக் கைகளை உயர்த்துமாறு கேட்டுக்கொண்டே நெற்றியில் சுட்டுக் கொன்றனர். அவரது தலை சிதறிப்போக, மூளைப்பகுதி நிலமெங்கும் சிந்தத் தொடங்கியது. எனது பெயரைச் சொல்லிக்கொண்டே அவர் எனது கைகளில் இறந்துபோனார்" என்று அவர் கூறினார்.

 அப்படுகொலைகள் இரண்டு நாட்களாகத் தொடர்ந்து நடைபெற்றன. வவுனியாவில் மொத்தமாக 120 தமிழர்களை சிங்கள இராணுவத்தினர் இரு நாட்களில் கொன்றனர். கொல்லப்பட்டவர்களில் 8 சிறுவர்களும் அடங்கும், அவர்கள் எவருமே 10 வயதைக் கடந்திருக்கவில்லை. அப்பகுதியின் சர்வோதய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், அவரது மனைவியும் கொல்லப்பட்டவர்களில் அடங்கும். தாம் கொன்றவர்களில் 40 பேரின் உடல்களை இழுத்துவந்த இராணுவம் வவுனியா வைத்தியசாலையில் போட்டுவிட்டுச் சென்றது. மீதி 80 பேரின் உடல்களும் படுகொலைகள் நடந்த இடத்திலேயே கிடந்தன.

 

தமிழர்களை வேரோடு பிடுங்கி எறிதல்

 இவ்விரு நாட்களிலும் தமிழர் தாயகத்தின் மற்றுமொரு பகுதியிலும் சிங்கள அரச படைகள் தமிழர்கள் மீதான படுகொலைகளைப் புரிந்திருந்தனர். திருகோணமலையில் இவ்விரு நாட்களிலும் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 100 தமிழர்களை இராணுவம் கொன்றது. பாரம்பரிய தமிழ்க் கிராமங்களான பன்குளம், இரணைக்கேணி, சாம்பல்த்தீவு ஆகியவற்றிற்குள் புகுந்த இராணுவத்தினர் அக்கிராமங்களில் இருந்து தமிழர்கள் எவரும் வெளியேற முடியாதவாறு சுற்றிவளைத்து நூறு பொதுமக்களைச் சுட்டுக் கொன்றனர். தமது உறவினர்கள் கொல்லப்பட்டதைக் கண்ணால்க் கண்ட சாட்சிகள் தமது சாட்சியங்களை சர்வதேச மன்னிப்புச்சபை உட்பட பல மனிதவுரிமை அமைப்புக்களுக்கு வழங்கியிருந்தனர். சாம்பல்த் தீவில் கைதுசெய்யப்பட்ட இளைஞர்களை வரிசையில் நிற்கவைத்த இராணுவம் அருகிலிருந்து சுட்டுக் கொன்றது. பன்குளம் பகுதியில் இராணுவத்தினருடன் இணைந்துகொண்ட சிங்கள ஊர்காவல்ப் படையினர் இக்கோரத் தாண்டவத்தில் ஈடுபட்டனர்.

Civil Security Department SL seal.png

சிங்கள ஊர்காவல்ப் படை

ஆனால், இத்தாக்குதல்கள் நன்கு திட்டமிட்ட வகையில், இராணுவத்தினருக்கான பாதுகாப்பு வலயம் ஒன்றைனை உருவாக்கும் நோக்கில் ஜெயவர்த்தனவின் அரசாங்கத்தினால் நடத்தப்பட்டிருந்தது. வடக்கு மாகாணத்திற்கும் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் இடையில் சூனிய வலயம் ஒன்றினை ஏற்படுத்துவதே தமது நோக்கம் என்று லலித் அதுலத் முதலி இத்தாக்குதல்கள் குறித்துப் பேசும்போது கூறினார். இத்திட்டத்தினை உருவாக்கும் ஆலோசனைகளை அக்காலத்தில் இலங்கையில் தங்கியிருந்த இஸ்ரேலிய இராணுவ ஆலோசகர்கள் வழங்கியிருந்தனர். "வடக்கிற்குள் பயங்கரவாதத்தை நாம் ஒடுக்கி விடுவோம்" என்று லலித் அதுலத் முதலி தொடர்ச்சியாகக் கூறிவந்தார்.

வவுனியாவிற்கு வடக்கே இராணுவத்தினருக்கான பாதுகாப்பு வலயம் ஒன்றினை உருவாக்கி அப்பகுதியில் தமிழர்களை நடமாட தடைசெய்தமையும், திருகோணமலை முதல் முல்லைத்தீவு வரையான கடற்பரப்பினை தடைசெய்யப்பட்ட பிரதேசமாக அறிவித்ததும் வடக்கையும் கிழக்கையும் முற்றாகத் துண்டித்துவிடும் நோக்கில்த்தான் என்பது வெளிப்படையானது. நிலம் வழியாக வடக்கிலிருந்து கிழக்கிற்கு போராளிகளும், ஆயுதங்களும் கொண்டுவரப்படுவதைத் தடுக்கும் நோக்கிலேயே வடக்கு மாகாணத்திற்கும், கிழக்கு மாகாணத்திற்கும் இடையிலான நிலத்தொடர்பினை இராணுவப் பாதுகாப்பு வலயங்களை உருவாக்குவதன் மூலம் அரசாங்கம் முற்றாகத் துண்டித்தது. அத்துடன், கடல்வழியாக போராளிகள் இந்த மாகாணங்களுக்கிடையில் பயணிப்பதைத் தடுக்க கடல்வலயத் தடையினையும் அரசு கொண்டுவந்திருந்தது.

See the source image

இலங்கையின் மாகாணங்கள்

 தெற்கில் காணியற்ற சிங்கள விவசாயிகளை தமிழர் தாயகத்திலிருந்து தமிழர்களை வேறோடு பிடுங்கியெறிந்த பகுதிகளில் உருவாக்கப்பட்டிருக்கும் இராணுவப் பாதுகாப்பு வலயங்களில் லலித் அதுலத் முதலி குடியேற்றத் தொடங்கினார். என்னுடன் பேசும்போது குறைந்தது 200,000 சிங்களவர்களையாவது குடியேற்றுவதே தனது திட்டம் என்று ஒருமுறை கூறியிருந்தார். மேற்கின் மன்னார்க் கரையிலிருந்து முல்லைத்தீவின் கிழக்கு எல்லைவரையான பகுதியில் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டு வந்த இராணுவப் பாதுகாப்பு வலயத்தில் இவர்கள் குடியேற்றப்பட்டு வந்தனர். மேலும், முல்லைத்தீவிலிருந்து திருகோணமலை வரையான கரையோரக் கிராமங்களில் தமிழர்களை விரட்டிவிட்டு சிங்கள மீனவர்களை குடியேற்றவும் லலித் அதுலத் முதலி திட்டமிட்டார். பெருமளவு இயற்கை வளங்கள் நிரம்பிய இப்பகுதிகளில் தமிழர்களின் பாரம்பரிய விவசாய மற்றும் மீன்பிடிக் கிராமங்கள் தொடர்ச்சியாகக் காணப்பட்டு வந்தன. வளம் நிறைந்த இக்கிராமங்களை இராணுவ ஆக்கிரமிப்பு ஒன்றின் ஊடாகக் கைப்பற்றி சிங்களவர்களைக் குடியேற்றுவதே ஜெயவர்த்தனவினதும் லலித் அதுலத் முதலியினதும் நோக்கமாக இருந்தது.

Lalith Athulathmudali Wikipedia | fluidotecnica.com

இப்பாரம்பரிய தமிழ்க் கிராமங்களில் இருந்து தமிழர்களை வேறோடு பிடுங்கியெறியும் திட்டம் லலித் அதுலத் முதலியினால் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டு வந்தது. 1984 ஆம் ஆண்டின் ஆரம்பத்துடன் இந்த நடவடிக்கைகளும் அவரால் முடுக்கிவிடப்பட்டன.கென்ட் மற்றும் டொலர் சிங்களக் குடியேற்றப் பண்ணைகள் மீதான புலிகளின் தாக்குதல்களையடுத்து,  1984 ஆம் ஆண்டின் இறுதியிலும், 1985 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலும் இம்முயற்சிகளை லலித் அதுலத் முதலி தீவிரப்படுத்தினார். இக்காலப்பகுதியில் தமிழர்கள்  முற்றாக அடித்து விரட்டப்பட்ட கிராமங்களாவன  கொக்கிளாய், கருநாற்றுக்கேணி, கொக்குத்தொடுவாய், நாயாறு, கென்ட் - டொலர் பண்ணைகள், ஆண்டான்குளம், கனுக்கேணி, உந்தராயன்குளம், உதங்கை, ஒதியாமலை, பெரியகுளம், தண்டுவன், குமுழமுனை கிழக்கு மற்றும் மேற்கு, தண்ணியூற்று, முள்ளியவளை, தண்ணிமுறிப்பு, செம்மலை மற்றும் அள‌ம்பில்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாரம்பரியத் தமிழ்க் கிராமமான திரியாயின் அழிப்பு 

Padavi_Sri_Pura_Pulmoaddai_Kokkulaay_border.jpg

தமிழ் மக்களை அவர்களின் பூர்வீகத் தாயகத்திலிருந்து வேரோடு பிடுங்கியெறியும் திட்டத்தின் இரண்டாம் பாகம் ஆனி 1985 இல் ஆரம்பிக்கப்பட்டது. திருகோணமலையில் அமைந்திருக்கும் தமிழ் விவசாயக் கிராமம் திரியாய். முல்லைத்தீவு மாவட்டத்தினையும் திருகோணமலை மாவட்டத்தினையும் இணைக்கும் நிலப்பகுதியில்  அமைந்திருக்கிறது இக்கிராமம். வடக்கு மாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் இணைக்கும்  இப்பூர்வீக‌ தமிழ்ச் சைவக் கிராமத்திலிருந்து தமிழர்களை முற்றாக வெளியேற்றுவதன் மூலம் இவ்விரு மாகாணங்களுக்கும் இடையில் இருக்கும் நிலத்தொடர்பை துண்டித்துவிடலாம் என்பதே ஜெயவர்த்தன அரசாங்கத்தின் திட்டமாகும். 1985 ஆம் ஆண்டு ஆவணி 18 ஆம் திகதி இங்கிலாந்தில் இருந்துவெளியாகும் பத்திரிக்கையான சண்டே டைம்ஸில் திரியா மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட அகோரம் குறித்து அதன் செய்தியாளரான சைமன் விஞ்செஸ்ட்டர் எழுதுகிறார்.

திருகோணமலையில் இங்கிலாந்து காலத்தின் கடற்படை முகாம் அமைந்திருந்த பகுதியிலிருந்து வடக்காக சில மைல்கள் தொலைவிலேயே திரியாய் கிராமம் அமைந்திருக்கிறது. சுதந்திரத்திற்குப் பின்னரான காலத்தில் இக்கிராமம் அமைதியாகக் காணப்பட்டதோடு, இப்பகுதியில் அமைந்திருக்கும் சந்தைக்கு உள்ளூர் விவசாயிகள் மரமுந்திரிகை உள்ளிட்ட தமது விளைச்சல்களையும், கால்நடைகளையும் கொண்டுவருவது வழமை. கிழக்கிலங்கையின் நிலப்பகுதி மிகவும் வரட்சியானதுடன், வெப்பநிலை அதிகமாகக் காணப்படும் பகுதியுமாகும். அதனால், இப்பகுதியில் அமைந்திருக்கும் விவசாய நிலங்களிலிருந்து அதிகளவு விளைச்சலினைப் பெற்றுக்கொள்ள முடியாமையினால், இப்பகுதியில் இக்கிராமத்தில் வசிக்கும் 2000 விவசாயிகளில் பெரும்பாலானவர்கள் ஏழ்மையானவர்ககளாகக் காணப்பட்டனர். ஆனால், எவரும் பட்டினியினால் இங்கு வாடுவதில்லை. எல்லோரும் ஏதோ ஒரு வழியில் தமது வாழ்க்கையினைக் கொண்டு நடத்துகிறார்கள். வறுமையாக இருந்தபோதும் இக்கிராம வாசிகள் அனைவருமே கெளரவத்துடனும், அமைதியுடனும் வாழ்ந்து வருபவர்கள். 

எப்போதாவது இருந்துவிட்டு இப்பகுதிக்கு உல்லாசப் பயணிகளை அழைத்துவரும் வாகன ஓட்டிகள் அவ்வபோது எதிர்ப்படும் கட்டாக்காலி யானைகளைக் கண்டு மிரள்வதுண்டு. ஆனால், இன்று திரியாயைப் பார்ப்பதற்கு எந்த உல்லாசப் பயணியும் வரபோவதில்லை. இன்று மட்டுமில்லாமல் இனி எப்போதுமே அவர்கள் இங்கு வரப்போவதில்லை.

கடந்த ஆனி 15 ஆம் திகதியிலிருந்து உல்லாசப் பயணிகள் மட்டுமல்லாமல், இந்தப் பகுதியில் காலம் காலமாக வாழ்ந்த தமிழர்களும் இன்று இங்கு இல்லை. அவர்களின் கிராமமான திரியாய் முற்றாக அழிக்கப்பட்டிருக்கிறது. கிராமத்திலிருந்த ஒவ்வொரு வீடும், கடைகளும், தோட்டங்களும், வயற்காணிகளும் முற்றாக எரிக்கப்பட்டிருக்கின்றன. வயல்களில் வெட்டிக் கொல்லப்பட்ட பசுக்களின் உடல்கள் இன்னமும் துர்நாற்றம் வீசிக்கொண்டிருக்கின்றன. சிலநாட்களுக்கு முன்னர்வரை இக்கிராமத்தில் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய மாட்டு வண்டிகள், மோட்டார்சைக்கிள்கள் என்பன உடைத்துச் சேதமாக்கப்பட்டு, புழுதி வாரியிறைக்கும் வீதியோரங்களில் துருப்பிடித்துக்கொண்டிருக்கின்றன. வயது முதிர்ந்த ஓரிரு பெண்கள், நடக்கமுடியாது படுக்கைகளில் குற்றுயிராய்க் கிடக்கும் வயோதிபர்களையும் சில சிறுவர்களையும் தவிர புதன் கிழமையன்று நடந்த கொடூரத்தினை நினைவில் வைத்திருக்க அங்கு வேறு எவரும் இருக்கவில்லை. 

See the source image

 அகோர நாளான அன்று காலை ஆண்கள் வயல்களுக்கு வேலைக்குச் சென்றுவிட, வீட்டில் பெண்கள் தமது அன்றாடக் கடமைகளில் ஈடுபடத் தொடங்கியிருந்தனர். திடீரென்று வானில் இரண்டு இராணுவத்தினரின் உலங்குவானூர்திகள் வட்டமடிக்கத் தொடங்கின. திரியாய்க் கிராமத்தின் மீது தாழ்வாகப் பறந்த அவை திடீரென்று மக்கள் மீது இயந்திரத் துப்பாக்கிகளால் சரமாரியாகச் சுடத் தொடங்கின. அச்சமும் அதிர்ச்சியுமடைந்த மக்கள் அப்பகுதியில் காணப்பட்ட குட்டையான பற்றைக்காடுகளுக்குள்ளும் அவற்றிற்கு பின்னால் காணப்பட்ட காடுகளுக்குள்ளும் உயிரைக் காத்துக்கொள்ள ஓடத் தொடங்கினர். ஆனால், அவர்கள் அவ்வாறு ஓடி ஒளிய முனையும்போது குச்சவெளியிலிருந்து கடற்கரை வீதி வழியாக இராணுவத்தினர் பஸ்களிலும், ட்ரக் வண்டிகளிலும் அப்பகுதி நோக்கி வரத் தொடங்கினர். சாதாரண நாட்களில் இப்பகுதிக்கு வரும் ஜேர்மன் நாட்டு உல்லாசப் பயணிகளை ஏற்றிச்செல்ல இந்த வீதியினை சாரதிகள் பாவிப்பதுண்டு. ஆனால், அண்மைக்காலமாக உல்லாசப் பயணிகளின் வருகையும் வற்றிப்போக, இப்பகுதியில் மிகப்பெரிய இராணுவ முகாமொன்றும் அமைக்கப்பட்டு விட்டது.

முற்றான ஆயுதம் தரித்த இராணுவத்தினர் போர்க்களம் ஒன்றிற்குள் செல்வதுபோன்ற தயாரிப்புக்களுடன் பஸ்களிலிருந்து இறங்கினார்கள். அவர்கள் பலரிடம் மண்ணெண்ணை நிரம்பிய கான்களும், பற்றவைக்கும் தீ ஜோதிகளும் (Flame Throwers) காணப்பட்டன. வரிசையாக ஒவ்வொரு வீட்டிற்கும் சென்ற இராணுவத்தினர் ஓலைகளால் வேயப்பட்ட வீட்டுக் கூரையின்மீது தாம் கொண்டுவந்த எண்ணையினை ஊற்றிப் பற்றவைத்துக்கொண்டே சென்றனர். எந்தவீடும் மிஞ்சவில்லை. வீடுகளில் கட்டிவைக்கப்பட்டிருந்த கால்நடைகளை அவிழ்த்துவிட்ட இராணுவத்தினர் அவற்றைச் சுட்டுக் கொன்றனர். பின்னர் அப்பகுதியில் காணப்பட்ட சிறிய நூலகத்திற்குச் சென்ற அவர்கள், உள்ளேயிருந்த சிறிய தொகுதிப் புத்தகங்களை வெளியே எடுத்து வந்து தீமூட்டினர். அப்பகுதியில் காணப்பட்ட வயல்களில் விவசாயிகளால் பாவிக்கப்பட்டு வந்த உழ‌வு இயந்திரங்களை ஒன்றாக இழுத்துவந்து தீமூட்டியதுடன், அவற்றின் பெட்டிகளையும்  கொழுத்தினர்.

thiriyai_5_120602.jpg

திரியாய்க் காடு

தமது வீடுகளும், உபகரணங்களும், கால்நடைகளும் அழிக்கப்படுவதை அருகிலிருந்த காடுகளுக்குள் இருந்து அச்சம் உடல் முழுதையும் ஆக்கிரமித்து நிற்க அவதானித்துக்கொண்டிருந்தனர் அக்கிராமத்தவர்கள். அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் தமது கிராமத்திலிருந்து உயிரைத் தக்கவைத்துக்கொள்ள பலர் காடுகளுக்குள் நீண்டதூரம் ஓடினர். அப்படி ஓடியவர்களில் பலரை இன்றுவரை காணவில்லை. சுமார் 2000 பேர் கொண்ட அக்கிராமத்திலிருந்து காடுகளுக்குள் உயிர்காக்க ஓடி ஒளித்தவர்களில் வெறும் நூறு பேர் மட்டுமே இராணுவப் பேய்கள் கிராமத்திலிருந்து கிளம்பிச் சென்றபின்னர் எரிந்துபோய் மீதமாய்க் கிடந்தவற்றில் எதையாவது பாதுகாக்கலாம் என்கிற நப்பாசையில் இருட்டோடு இருட்டாக கிராமத்தினுள் சென்றனர். ஆனால், அங்கு எதுவுமே மீதியாக இருக்கவில்லை. எல்லாமே எரிந்து சாம்பலாகப் போயிருந்தது. ஒரு சில நெற்சாக்குகளைத்தவிர வேறு எவையுமே தீயின் நாக்குகளில் இருந்து தப்பியிருக்கவில்லை. பகுதியாக எரிந்துபோய்க்கிடந்த வீடுகளில் ஒரு சிலவற்றில் மக்கள் தங்கக் கூடிய அளவில்  சில பகுதிகள் காணப்பட்டன. ஆனால், பாடசாலையும், தபால் அலுவலகமும் முற்றாக அவர்களால் எரிக்கப்பட்டிருந்தது. கிராமத்திலிருந்த இரு கடைகளும் முற்றாகச் சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டிருந்தது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக, அங்கிருந்த சிவபெருமானினதும் விஷ்ணுவினதும் கோயில் முற்றாக அழிக்கப்பட்டு விக்கிரங்களும் துண்டுகளாகச் சிதறடிக்கப்பட்டிருந்தன. 

928.ht3_.jpg

திருகோணமலைக்கு வடக்காக அமைந்திருக்கும் கடற்கரையோரம்

 

திரியாயில் இருந்து உயிர் தப்பக் காடுகளுக்குள் ஓடி ஒளித்த பல தமிழர்கள் முள்ளியவளையினை நடந்தே வந்தடைந்தனர், அவர்களுள் சிலர் யாழ்ப்பாணத்திற்குச் சென்றார்கள். இன்னும் சிலர் அகதிகளாக தமிழ்நாட்டிற்குச் சென்றார்கள். ஆனால், சிலர் மீண்டும் தமது பூர்வீகக் கிராமத்திற்குத் திரும்பிச் சென்றனர். 1990 ஆம் ஆண்டு இரண்டாம் ஈழப்போர் ஆரம்பித்தபோது திரியாயில் 1475 தமிழ்க் குடும்பங்கள் இருந்ததாகப் பதிவுசெய்யப்பட்டிருந்தது. ஆனால், 1990 இல் இக்கிராமம் மீண்டும் அரச இராணுவத்தால் முற்றாக அழிக்கப்பட்டு விட்டது.

thiriyai_1_120602.jpg

இராணுவத்தினருடன் வாதிடும் சம்பந்தன்

2002 ஆம் ஆண்டு ஆனி மாதத்தில், யுத்த நிறுத்த அமுல்ப்படுத்தப்பட்டதையடுத்து திரியாயிலிருந்து தப்பியோடிய 25 குடும்பங்களைச் சேர்ந்த தமிழ் மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.சம்பந்தன் தலைமையில் முற்றாக அழிக்கப்பட்டிருந்த இக்கிராமத்தினைப் பார்வையிடச் சென்றனர். கிராமத்தின் வாயிலில் இயங்கிவந்த பாடசாலையான தமிழ் மகா வித்தியாலயத்தில் அமைந்திருந்த கடற்படை முகாமிற்கு அவர்கள் முதலில் சென்றனர். கிராமத்தினுள் சென்று பார்ப்பதற்கு அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால், இக்கிராமத்திலிருந்து துரத்தப்பட்ட மக்களே தமது இடங்களைப் பார்வையிட வந்திருக்கிறார்கள், ஆகவே அனுமதி தரவேண்டும் என்று சம்பந்தன் தொடர்ச்சியாக வலியுறுத்தவே, சம்பந்தனையும் இன்னும் இருவரையும் முகாமினுள் அழைத்துச் சென்ற கடற்படையினர், முகாமின் பிற்பகுதியில் காணப்பட்ட மேடான இடத்திற்கு அழைத்துச் சென்று அங்கிருந்து கிராமம் அமைந்திருந்த திசைநோக்கிப் பார்க்குமாறு கூறினர்.  மீதிப்பேரை அருகிலிருந்த, இன்னும் முற்றாக அழிக்கப்படாமல் விட்டு வைக்கப்பட்டிருந்த  வரலாற்றுப் பெருமைமிக்க வரத விநாயகர் கோயிலில் சென்று காத்திருக்குமாறு கடற்படை பணித்தது. முகாமினுள் சென்று தமது கிராமத்தைப் பார்வையிடச் சென்றவர்களைப் பெருஞ்சோகம் பற்றிக்கொண்டது.

thiriyai_2_120602.jpg

அழிக்கப்பட்ட திரியாய்க் கிராமத்தில் பற்றைகளுக்குள் அழிந்துபோன நிலையில் காணப்படும் தமிழர்களின் வீடு ஒன்று

முகாமினுள் சென்றுவிட்டு வெளியே திரும்பி வந்த சம்பந்தனும் ஏனைய இருவரும், வெளியே தமக்காகக் காத்து நின்றவர்களிடம், "திரியாய் எனும் கிராமம் முற்றாக இல்லாது அழிக்கப்பட்டிருக்கிறது, அங்கு எதுவுமே இல்லை என்று கூறினர். அங்கு எதுவுமே இல்லை, வீடுகள் இல்லை, எமது முத்துமாரி அம்மன் கோயிலுமில்லை. பிள்ளையார் கோயிலின் சிலை மட்டும் தனியே நிற்கிறது. புத்தரின் படம் ஒன்றினை பிள்ளையாரின் உருவத்தின் மீது ஒட்டி வைத்திருக்கிறார்கள். அப்பெரிய கிராமத்தில் நிற்கும் ஒரே கட்டிடம் தமிழ் மகா வித்தியாலயம் மட்டும்தான். அதுகூட, கடற்படையினர் முகாமாக ஆக்கிரமித்து வைத்திருப்பதனால்த்தான் இன்னமும் இருக்கிறது"  என்று கூறினர்.

thiriyai_3_120602.jpg

thiriyai_4_120602.jpg

அழிக்கப்பட்ட தமது கிராமத்தைக் கண்ணுற்றபோது வருந்திய தமிழ் மக்கள்

பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தன், தான் அங்கு கண்டவற்றை விவரிக்கும்போது, மக்கள் திரும்பி அக்கிராமத்தினுள் வருவதைத் தடுப்பதற்காக அக்கிராமத்தை முற்றாக அழித்திருக்கிறர்கள் என்று கூறினார். 2000 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் வாழ்ந்த பூர்வீகத் தமிழ்க் கிராமம் திட்டமிட்ட முறையில் அரசினால் முற்றாக அழிக்கப்பட்டுக் கிடக்கிறது. 2004 ஆம் ஆண்டளவில் ஒரு சில தமிழர்கள் திரியாயின் அருகில் அமைந்திருக்கும் பகுதிகளில் குடியேறியிருந்தார்கள். 

thiriyai_refugees_120602.jpg

வேறு பகுதிகளில் இடம்பெயர்ந்து வாழும் திரியாய் மக்கள்

1985 ஆம் ஆண்டு ஆனி 18 ஆம் திகதி திம்புப் பேச்சுக்களுக்கு ஏதுவாக யுத்த நிறுத்தம் அமுலுக்கு வந்ததில் இருந்து தமிழ்க் கிராமங்களை அழிக்கும் தனது செயற்பாடுகளை அரசாங்கம் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. ஆனால், ஆவணி 16 ஆம் திகதி ஹெக்டர் ஜெயவர்த்தன தனது சதியினை "புதிய ஆலோசனைகள்" எனும் பெயரில் திம்புவில் முன்வைத்தபோது, தமிழ்க் கிராமங்களின் முற்றான அழிப்பு மீண்டும் ஜெயாரினால் ஆரம்பிக்கப்பட்டது. அதேநேரத்தில் தமிழ்த் தரப்பும் ஹெக்டரினால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளைத் தாம் முற்றாக நிராகரிப்பதாக அறிவித்திருந்தது. அரசாங்கத்தின் புதிய ஆலோசனைகள், "புதிய போத்தலில் ஊற்றப்பட்ட பழைய கள்ளு" என்று விமர்சித்திருந்தார் அமிர்தலிங்கம். தனது கட்சியினர் 1984 ஆம் ஆண்டு சர்வகட்சி மாநாட்டில் நிராகரித்த அதே ஆலோசனைகளையே அரசாங்கம் மீளவும் கொண்டுவந்து காட்டுகிறது என்றும் அவர் கூறினார். 

தமிழர்களை அடிபணிய வைக்கும் முகமாக மிகக் கொடூரமான வன்முறைகளை தனது இராணுவத்தினரைக் கொண்டு தமிழர்கள் மீது ஏவினார் ஜெயவர்த்தன. திம்புவில் தன்னால் மும்வைக்கப்பட்ட ஆலோசனைகளை தமிழர்கள் ஏற்றுக்கொள்ள வைக்க வன்முறைகளைப் பாவிப்பதென்று அவர் உறுதிபூண்டார். ஆனால், 1977 ஆம் ஆண்டில் தான் தெரிவுசெய்யப்பட்ட நாளில் இருந்தே அவர் இதனைத்தான் செய்துவருகிறார். தமிழர்களை மட்டுமல்லாமல், தன்னை எதிர்த்த சிங்களவர்களையும் வன்முறைகள் மூலம் அடிபணியவைக்க முடியும் என்று அவர் நம்பினார்.

 

https://www.oaklandinstitute.org/sites/oaklandinstitute.org/files/endless-war-web.pdf

https://telibrary.com/en/thiriyai-massacre-08-06-1985/

https://www.colombotelegraph.com/index.php/june-1985-may-1986-the-final-assault-on-trincomalee-and-the-trappings-of-a-colonial-war/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களால் நிராகரிக்கப்பட்ட அரசின் ஆலோசனைகள்

 அரசால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளை நிராகரிப்பதென்று ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் சென்னையில் கூட்டாக முடிவெடுத்தனர். தமிழர் தரப்பில் பேச்சுக்களில் கலந்துகொண்டவர்களை இணைந்து, அரசின் ஆலோசனைகளை நிராகரிப்பதாக அறிக்கை ஒன்றினை வெளியிடுமாறு பாலசிங்கத்தினூடாகப் போராளிகளின் தலைவர்கள் கேட்டுக்கொண்டார்கள். சத்தியேந்ந்திரா, ஏனைய போராளிகள், தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் ஆகியோர் இணைந்து ஆலோசனைகளை நிராகரிக்கும் தமது அறிக்கையினை திம்பு விடுதியில் தயாரித்துக்கொண்டிருந்த அதேவேளை பேச்சுக்கள் தோல்வியடையவிருப்பதை ரொமேஷ் பண்டாரிக்கும் அவர்கள் தெரியப்படுத்தினார்கள். ஆவணி 17 ஆம் திகதி காலை திம்புவிற்குப் பயணமான ரொமேஷ் பண்டாரி அங்கு தமிழ்த் தரப்பினரைச் சந்தித்தார். அச்சந்திப்பு சுமூகமானதாக அமையவில்லை. தமிழ்த்தரப்பினர் தமது யோசனைகளை முன்வைக்க வேண்டும் என்று அவர் வற்புறுத்தினார். ஆனால், தமிழர்களுக்கான தனிநாட்டிற்குப் பிரதியீடான தீர்வொன்றை முன்வைப்பது அரசாங்கத்தின் கடமையென்பதால், அரசே ஆலோசனைகளை முன்வைக்கவேண்டும் என்று தமிழ்த் தரப்பினர் வலியுறுத்தினர். இதனையடுத்து கடும் கோபம் கொண்ட பண்டாரி, தமிழ்த் தரப்பினரை உறுதியான நிலைப்பாட்டில் இருக்கமுடியாதவர்கள் என்றும், நெகிழ்ச்சித்தன்மையற்றவர்கள் என்றும் கடிந்துகொண்டார்.  "உங்களுடைய தேறாத கொள்கைகளைக் கொண்டு என்ன செய்யப்போகிறீர்கள்?" என்று அவர்களை நோக்கி ஆவேசமாகக் கேட்டார் அவர். 

பண்டாரியின் ஆவேசமான பேச்சு நடேசன் சத்தியேந்திராவைச் சினங்கொள்ள வைத்தது. பண்டாரி பாவித்த சொற்கள் ஒரு இராஜதந்திரி பாவிக்கமுடியாதவை என்று அவர் சுட்டிக் காட்டினார். மேலும், தமிழர்களின் உண்மையான பிரச்சினைகள் குறித்து பண்டாரி கவலைப்படவில்லை என்றும் அவரைப் பார்த்துக் கூறினார் சத்தியேந்திரா. தமிழர்களை அடிமைகளைப் போல் பாவித்தே பண்டாரி பேசுவதாகவும் அவர் மேலும் கூறினார்.  இதனையடுத்து தமிழர்களைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக தான் அப்படிப் பேசவில்லை என்று பண்டாரி கூறினாலும், அன்றைய நிகழ்வு தமிழர் தரப்பினருக்கும் பண்டாரிக்கும் இடையே விரிசலை ஏற்படுத்தியிருந்தது.

928.ht4_.jpg

திம்பு

 அன்று அரச தரப்பினரையும் பண்டாரி தனியாகச் சந்தித்தார். ஹெக்டர் ஜெயவர்த்தனவுடன் பேசிய பண்டாரிஇலங்கை அரசாங்கம் முன்வைத்திருக்கும் புதிய யோசனைகள் தமிழர்களின் அபிலாஷைகளையோ, இந்தியாவின் எதிர்பார்ப்புக்களையோ பூர்த்திசெய்யப் போதுமானவை அல்ல என்று கூறியதுடன், ஆலோசனைகளை மேம்படுத்துமாறு  கேட்டுக்கொண்டார். ஆனால், சென்னையில் ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் வெளியிட்ட அறிக்கையில் இலங்கை அரசாங்கத்தின் யோசனைகள் ஒரு படி பின்னோக்கிச் சென்றிருக்கின்றன என்று கூறி தாம் அவற்றை நிராகரிப்பதாக கூறியிருந்தனர். 

 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்திய மீனவர்களின் தாக்குதலில் கடற்படை சிப்பாய் உயிரிழப்பு adminJune 25, 2024 யாழ்ப்பாணத்தில் , இந்திய மீனவர்களின் தாக்குதலுக்கு இலக்கான கடற்படை சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.  காங்கேசன்துறை கடற்படை முகாமில் கடமையாற்றும் ரத்நாயக்க எனும் கடற்படை வீரரே உயிரிழந்துள்ளார். காங்கேசன்துறை கடற்படை முகாமை சேர்ந்த கடற்படையினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை கடலில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அதன் போது நெடுந்தீவு கடற்பரப்பை அண்டிய பகுதியில் படகொன்றில் அத்துமீறி நுழைந்து இந்திய மீனவர்கள் கடற்தொழிலில் ஈடுபட்டுள்ளதை , அவதானித்து , அவர்களை கைது செய்ய முயன்றுள்ளனர். அதன் போது கடற்படை படகில் இருந்து , மீனவர்களின் படகுக்கு சென்ற கடற்படை வீரர் மீது மீனவர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். அதில் அவர் உயிரிழந்துள்ளார் அதனை அடுத்து மேலதிக கடற்படையினர் , மீனவர்களின் படகுக்கு சென்று , படகில் இருந்த 10 மீனவர்களையும் கைது செய்து கடற்படை படகில் ஏற்றினர். கைது செய்யப்பட்ட 10 மீனவர்களும், அவர்களின் படகும், காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்டு , தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்த கடற்படை வீரரின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் உடற்கூற்று பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கடற்படையினரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில் , காவல்துறையினருரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.   https://globaltamilnews.net/2024/204643/
    • இந்தியாவை இங்கிலாந்து வெல்ல நிறைய  வாய்ப்பு இருக்கு!
    • இனி இங்கிலாந்தை நம்பித்தான் காலத்தை ஓட்டோணும்!! அவங்களும் கைவிட்டால் கோவிந்தாதான்!!
    • அதெண்டால்  உண்மைதான். ஆண்கள் கூட 40,50 பவுணில்… கழுத்து சங்கிலி, கை சங்கிலி, மோதிரம் என்று போட்டுக் கொண்டு இருந்தார்கள். 🙂
    • புடின். விளையாட்டை தடை செய்யவில்லை,.அதாவது எதிர்க்கவில்லை அனுமதி வழங்கி உள்ளார்  மற்றும் உக்ரேன்   யூரோப்பியாவில். இருக்கிறது 
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.