Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தீவிரமடையும் தான்தோன்றித்தனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தீவிரமடையும் தான்தோன்றித்தனம்

By DIGITAL DESK 5

09 OCT, 2022 | 03:31 PM
image

என்.கண்ணன்

பொருளாதார நெருக்கடியும், அரசியல் உறுதியின்மையும், நாட்டின் நிர்வாக கட்டமைப்பில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.

அரசாங்கத்தினால் சட்டத்தின் அடிப்படையில் நாட்டை நிர்வகிக்கும் திறன் குறைந்து போயிருக்கிறது. தன்னிச்சைப்படி வர்த்தகர்களும், நிறுவனங்களும், தீர்மானங்களை எடுக்கின்ற நிலை தோன்றியிருக்கிறது.

சிறப்பு மருத்துவ நிபுணர் ஒருவரால் பரிந்துரைக்கப்பட்ட மருந்து ஒன்றைப் பயன்படுத்திய ஒருவர், தாம் பயன்படுத்திய இரு வேறு நிறுவனங்களின் மருந்துகளுக்கிடையில் வித்தியாசம் இருப்பதை உணர்ந்தார்.

இதனை அந்த மருத்துவ நிபுணரிடம் கூறிய போது, மருந்தின் இரசாயனப் பெயர் ஒன்றாக இருந்தாலும், இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் என்று பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துப் பொருட்களின் தரம் வேறுபடுவதாகவும், தரக்கட்டுப்பாடு நாட்டில் பேணப்படுவதில்லை என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

பாணின் தரம் வெதுப்பகங்களுக்கு வெதுப்பகம்  வேறுபடுவது போலத் தான் இதுவும் என்று அவர் விளக்கமளித்திருந்தார்.

நோயாளிகளுக்கான மருந்துப் பொருட்கள் இன்று வர்த்தக நிறுவனங்களுக்கு விளையாட்டுப் பொருளாக மாறிவிட்டது.

பொருளாதார நெருக்கடி, டொலர் தட்டுப்பாடு போன்றவற்றினால், எங்கிருந்தாவது கடன் அடிப்படையில் மருந்து கிடைத்தால் போதும் என்று அரசாங்கமும், இறக்குமதி நிறுவனங்களும், நினைக்கின்றனவே தவிர, அவற்றின் தரம் குறித்து சிந்திப்பதில்லை.

தரத்தில் மாத்திரமன்றி, விலையிலும் கூட பெரியளவில் வேறுபாடுகள் உள்ளன. காரணம் விலைக் கட்டுப்பாடுகளையும் அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதில்லை.

உணவுப் பொருட்கள் தொடக்கம், மருந்து, எரிபொருள், என்று எல்லாப் பொருட்களினதும் தரம் மற்றும் விலை கட்டுப்பாடுகள் எதையும் பேண முடியாத நிலையில் அரசாங்கம் இருக்கிறது.

இறக்குமதியாளர்களும் வர்த்தகர்களுமே இன்று விலைகளைத் தீர்மானிக்கிறார்கள். 

அரசாங்கம் சமூக பாதுகாப்பு வரியை அமுல்படுத்திய பின்னர், கடந்தவாரம் தொலைத் தொடர்பு நிறுவனங்கள், கட்டணங்களை அதிகரித்தன.

ஆனால், கட்டண அதிகரிப்புக்கு தங்களிடம் அனுமதி பெறப்பட்டவில்லை என்று, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு கூறுகிறது.

கட்டணங்களை அதிகரிப்பதற்கு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களிடம் கோரிக்கை விடுக்கவேயில்லை என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தொலைத்தொடர்பு நிறுவனங்கள், குறித்த ஆணைக்குழுவை மதிக்காமல் செயற்படத் தொடங்கி விட்டன.

அரசின் கட்டுப்பாடுகளைத் தாண்டி தம் விருப்பப்படி அவை செயற்படுகின்றன. இதே நிலை எல்லா மட்டங்களிலும் உருவாகி உள்ளது. 

நுகர்வோர் நலனுக்காக உருவாக்கப்பட்ட நுகர்வோர் விவகார அதிகார சபை இப்போது, விலைக் கட்டுப்பாடு குறித்தோ, தரக்கட்டுப்பாடு குறித்தோ கவனம் செலுத்துவதில்லை.

குறித்த அரச நிறுவனம் முறையாகச் செயற்பட்டிருந்தால், கறுப்புச் சந்தையையும், விலை அதிகரிப்பையும் கட்டுப்படுத்தியிருக்க முடியும்.

அரச நிறுவனங்களில் காணப்படும் வினைத்திறனின்மையும், ஊழலும், இந்த நிலையை மேலும் தீவிரமடையச் செய்திருக்கிறது.

நிலக்கரி இறக்குமதியில் ஊழல் நடந்திருப்பதாகவும், தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. இதையடுத்து, புதிதாக கொள்வனவு கட்டளைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

தரமற்ற மசகு எண்ணெய் கொள்வனவு செய்யப்பட்ட்டதால், அதன் மூலம் சுத்திகரிக்கப்பட்ட உலை எண்ணெயில் அதிகளவு சல்பர் இருப்பதாகவும், அதனை மின்சார உற்பத்திக்குப் பயன்படுத்த முடியாமல் உள்ளது என்றும் அண்மையில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க கூறியிருந்தார்.

இதையடுத்து, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, பெற்றோலியக் கூட்டுத்தாபனம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் என்று அறிவித்திருக்கிறார்.

இது அரச நிறுவனங்களுக்கிடையில் நிலவுகின்ற மோதல்களை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காண்பித்தது.

எரிபொருள் கொள்வனவு, எரிவாயு கொள்வனவு போன்றவற்றில் தரக் குறைபாடுகள், குறித்த முறைப்பாடுகள் நிறையவே உள்ளன.

வாகனங்களுக்கு தற்போது பயன்படுத்தப்படும் எரிபொருள் தரமற்றதாக இருப்பதையும், குறைந்தளவு தூரத்துக்கே பயன்படுத்த முடிவதையும், நுகர்வோரினால் உணர முடிகிறது.

ஆனால் அரசாங்கம் அதனை ஏற்கத் தயாராக இல்லை. குற்றம்சாட்டுபவர்களை சட்ட நடவடிக்கை எடுப்போம் என்று மிரட்டுகிறது.

இவ்வாறான நிலையில், கடந்த புதன்கிழமை நடத்திய செய்தியாளர் சந்திப்பில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான தயாசிறி ஜயசேகர பரப்பரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.

கடந்த காலங்களில் தரமற்ற எரிபொருளை இறக்குமதி செய்ததன் மூலம், அது தொடர்பான நிறுவனங்களின் முகவர்களும் அவர்களுடன் இணைந்து செயற்படும் அரசியல்வாதிகளும் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாக சம்பாதித்துள்ளனர் என்று அவர் குண்டு ஒன்றை போட்டிருக்கிறார்.

தற்போதைய எரிசக்தி அமைச்சர் பதவிக்கு வந்த பின்னர், புதியதொரு விநியோக நிறுவனம் பதிவு செய்யப்பட்டு, அதன் ஊடாகவே கொள்வனவுகள் இடம்பெறுவதாகவும் அவர் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்.

இன்று நாட்டில் மக்களை மோசமாக நெருக்கடிக்குள் தள்ளியிருப்பவை, மின்சக்தி மற்றும் எரிசக்தி நிறுவனங்கள் தான்.

மின்சார சபை கட்டணத்தை உச்சத்துக்கு கொண்டு போய் விட்டுள்ளது. எரிபொருள் விலைகளும், மிகமோசமாக அதிகரிக்கப்பட்டுள்ளன.

இந்த இரண்டும் குறையுமாக இருந்தால், உற்பத்தி செலவினங்கள், விநியோக செலவினங்கள், நிர்வாக செலவினங்கள் குறைந்து பொருட்கள், சேவைகளின் விலைகள், கட்டணங்கள் குறையும்.

ஆனால் இந்த நிறுவனங்களில் காணப்படும் குறைபாடுகள், ஒட்டுமொத்த மக்களின் மீதும் பெரும் சுமையை ஏற்படுத்தியிருக்கிறது.

நாட்டில் உள்ள இருவேறு எரிவாயு விநியோக நிறுவனங்களின் சிலிண்டர்களின் விற்பனை விலைகளுக்கிடையில், ஆயிரம் ரூபா வேறுபடுகிறது.  

இது எந்த வகையில் நியாயப்படுத்தக் கூடியது?

கடந்த பலமாதங்களாக நீடிக்கும் இந்த விலை வேறுபாட்டை சரிப்படுத்த அரசாங்கத்தினால் முடியவில்லை.

அண்மையில் தரமற்ற – மனித நுகர்வுக்கு பயன்படுத்த முடியாத – நச்சு  அரிசி வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக அமைச்சர் மஹிந்த அமரவீர குற்றம்சாட்டியிருந்தார்.

ஒரு அமைச்சராக இருந்து கொண்டு அவ்வாறான குற்றச்சாட்டை வெட்கமின்றி முன்வைத்திருந்தார்.

இவ்வாறான அரசாங்கத்தில் பதவி வகிக்க முடியாது என்று விலகியிருந்தால், அது அவரது பொறுப்பை வெளிப்படுத்தியிருக்கும்.

ஆனால் அவர் செய்தியாளர் சந்திப்பில் பரபரப்பை ஏற்படுத்தி விட்டுப் போவதில் தான் குறியாக இருந்தார்.

பொருளாதார நெருக்கடியை சாட்டாக வைத்துக் கொண்டு இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகளை தாறுமாறாக அதிகரித்து மக்களின் தலையில் கட்டிவிடுகின்ற போக்கே இன்று காணப்படுகிறது.

இந்த விடயத்தில் வர்த்தகர்கள், இறக்குமதியாளர்கள், அமைச்சர்கள், அரசாங்கம் என்ற வேறுபாடு இல்லை.

எல்லாத் தரப்பினரும், ஒரே மாதிரியாகவே செயற்படுகின்றனர். நுகர்வோரின் நிலையை, அவர்களின் துன்பங்களை புரிந்து கொள்வதில்லை.

பொருளாதார நெருக்குவாரங்கள் அதிகரிக்க அதிகரிக்க அரசாங்கம், வர்த்தகர்களையும், நிறுவனங்களையும் அவர்கள் போக்கில் செயற்பட விட்டது, கடிவாளமற்ற குதிரையாக அவர்கள் தம்போக்கில் ஓடுவதற்கு காரணமாகி விட்டது.

இப்போது அரசாங்கம் இறுக்கிப் பிடிக்க நினைத்தாலும் அவர்கள் பிடி கொடுக்காமல் நழுவத் தொடங்குகிறார்கள். அல்லது அரசாங்கத்தை மிரட்டுகிறார்கள்.

உறுதியற்ற அரசாங்கமாக இருப்பதால், தட்டுப்பாடு, வரிசை நிலை, வந்து விடக்கூடாது என்பதற்காக வணிக நிறுவனங்களின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணியும் நிலை காணப்படுகிறது.

அது தவிர, அரசியல்வாதிகளும், ஆட்சியில் உள்ளவர்களும் ஏதோ ஒரு வர்த்தக நிறுவனங்களை நடத்துகிறார்கள் அல்லது அவற்றின் பின்னணியில் இருக்கிறார்கள்.

அவர்கள் தங்களின் அனுகூலங்களுக்கு அமையவே முடிவுகளை எடுக்க முனைகிறார்கள்.

இந்த நிலையை மாற்றியமைக்க வேண்டுமானால், உறுதியான அரசாங்கமும், பொருளாதார உறுதிப்பாடும் அவசியம்.

அவையிரண்டும் இல்லாமல், தரம் மற்றும் விலை  போன்றவற்றைக் கொண்டு, நிறுவனங்களும் வர்த்தகர்களும் மக்களை நசுக்குகின்ற நிலையை மாற்ற முடியாது.

https://www.virakesari.lk/article/137303

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.