Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த் தேசியக் கட்சிகள் - பொறுப்பின்மையின் உச்சமான நிலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொறுப்பின்மையின் உச்சமான நிலை

By Digital Desk 5

06 Nov, 2022 | 03:23 PM
image

சி.அ.யோதிலிங்கம்

அரசியல் யாப்பின் 22ஆவது திருத்தம் 21ஆவது திருத்தம் என்ற பெயரில் நிறைவேற்றப்பட்டுவிட்டது. எதிர்க்கட்சிகளும் , மொட்டுக் கட்சியின் பெரும்பான்மையும் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளன. தமிழ்த் தேசியக் கட்சிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெரும்பான்மை ஆதரவாக வாக்களித்துள்ளது. 

ஆதரவு அல்லது எதிர்ப்பு என்ற நிலையைத் தான் பாராளுமன்றத்தில் எடுக்க முடியும் நடுநிலை என்றதொரு நிலைப்பாட்டை எடுக்க முடியாதென தமிழ் மக்களுக்கு வகுப்பெடுத்த சுமந்திரன் நடுநிலை என்ற தீர்மானத்தை எடுத்திருக்கின்றார். 

கட்சியென ஒன்றும் கூட்டணியென இன்னொன்றும் இருந்த போதும் எப்போதும் தனித்தே தீர்மானம் எடுக்கும் விக்கினேஸ்வரனும் ஆதரவாக வாக்களித்துள்ளார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நடுநிலை என்ற நிலைப்பாட்டை எடுத்து வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

22ஆவது திருத்தம் சர்வதேசநாணய நிதியத்தின் அழுத்தம் காரணமாகவே கொண்டுவரப்பட்டது. அதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவும் பல தடவைகள் கூறியுள்ளன. இதுவிடயத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுச்சூத்திரத்தையே வெளிப்படுத்தியிருக்கின்றார். வரிக்கொள்கை உருவாக்கத்திலும், 22ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதிலும் அதனையே பயன்படுத்தியிருந்தார்.

அந்தப் பொதுச் சூத்திரம் இதுதான் “22ஆவது திருத்தம் சர்வதேச நாணய நிதியத்தின் வேண்டுகோளின் அடிப்படையிலேயே கொண்டுவரப்படுகின்றது. இதனை நிறைவேற்றாவிட்டால் சர்வதேச நாணய நிதியம் இலங்கையுடன் ஒத்துழைக்காது. அது ஒத்துழைக்காவிட்டால் கடன்மறுசீரமைப்பு முயற்சி வெற்றிபெறாது. 

சர்வதேச நிதி நிறுவனங்களான உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி என்பன உதவிகளை வழங்கமாட்டாது. ஜி.எஸ்.பி வரிச்சலுகை கிடைக்காது. 

சர்வதேச நாடுகள் உதவிகள் எவற்றையும் வழங்காது. இறுதியில் மீண்டும்; வரிசை யுகத்திற்கு செல்லவேண்டி ஏற்படும்”; என்பதே அதுவாகும். இந்தப் பொதுச்சூத்திரமே அரசாங்கத்தை எதிர்க்கும் கட்சிகள், தொழிற்சங்கங்கள் என்பவற்றின் போராட்டங்களை ஒடுக்குவதற்கான கருவியாகவும் பயன்படுத்தப்படுகின்றது. 

22ஆவது திருத்தத்திற்கு பிரதானமாக இரண்டு நோக்கங்கள் இருந்தன. ஒன்றுசிங்கள தேசத்தை ஜனநாயகமயப்படுத்துவது. இரண்டாவது ராஜபக்ஷக்களை தனிமைப்படுத்துவது. முதலாவது நோக்கத்திற்கு சர்வதேச தாராண்மை ஒழுங்குக்குள் இலங்கையைக் கொண்டுவராமல் இலங்கை மீது மேலாதிக்கம் செலுத்த முடியாது என்பது காரணமாகும். 

இரண்டாவது நோக்கத்திற்கு ராஜபக்ஷக்களை தனிமைப்படுத்தி அரசியல் அரங்கத்திலிருந்து அகற்றாமல் சீனாவின் இலங்கை மீதான செல்வாக்கை அகற்ற முடியாது என்பது காரணமாகும்.

  இங்கு சிங்கள தேசத்தை ஜனநாயக மயப்படுத்துவது என்பது முழுஇலங்கைத் தீவையும் ஜனநாயகமயப்படுத்துவதாக அர்த்தப்படாது. முழுஇலங்கைத் தீவையும் ஜனநாயகமயப்படுத்த வேண்டுமாயின் அனைத்து தேசிய இனங்களின் அபிலாஷைகளையும் அரசியல் யாப்பு ரீதியாக உள்வாங்க வேண்டும்.

இந்தச் செயற்பாடு பெருந்தேசியவாதத்தை உசுப்பிவிடும் என்பதற்காக அழுத்தங்களை கொடுப்பதற்கு அமெரிக்கா தலைமையிலான மேற்குலகமும் தயங்கியே நிற்கின்றது. ஒரு வகையில் 22ஆவது திருத்தத்தை மேற்குலகத்தின் விருப்பங்களை நிறைவேற்ற வந்ததொன்று என்றே கூறலாம்.

தமிழ் மக்கள் நிலைநின்று பார்ப்போமாக இருந்தால் 22ஆவது திருத்தம் தமிழ் மக்களின் அபிலாஷைகளை எந்த வகையிலும் பிரதிபலிக்கவில்லை மாறாக வலுவான ஆபத்துக்களையே கொண்டிருக்கின்றது. இத்திருத்தம் தொடர்பான உரையாடல்கள்; இடம்பெற்றிருந்தபோது மனித உரிமைச் செயற்பாட்டாளர்களான அம்பிகா சற்குணநாதனும், நிமல்கா பெர்ணான்டோவும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவரிடம் “தமிழ் மக்கள் 21ஆவது திருத்தத்தினால் தங்களுக்கு என்ன பயன்” எனக் கேட்கின்றனர் எனத்தெரிவித்திருந்தனர். சுமந்திரன் “21ஆவது திருத்தம் தமிழ்த் தேசிய அக்கறைகளை கொஞ்சம்கூட பிரதிபலிக்வில்லை” எனக்கூறியிருந்தார். தமிழ் மக்களுக்கு எந்தவித பயனுமில்லாத அதேவேளை ஆபத்துக்களைத் தரக்கூடிய திருத்தத்திற்கே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெரும்பான்மை ஆதரவாக வாக்களித்துள்ளது. 

21ஆவது திருத்தம் பிரதானமாக அரசியலமைப்புப் பேரவை, சுயாதீன ஆணைக்குழுக்கள், இரட்டைப்பிரஜாவுரிமை, 2½ வருடங்களின் பின்னர் பாராளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்தல், பிரதமரை ஜனாதிபதி பதவிநீக்க முடியாமை என்பவற்றை கொண்டிருந்தது. இதில் முதல் மூன்றும் தமிழ் மக்களின் அக்கறைக்குரியன. ஏனைய இரண்டும் சிங்கள தேசத்துடன அதிகம் தொடர்புடையன. தமிழ் மக்களின் நலன்கள் அங்கு பெரிதாக இல்லை. 

அதேநேரம், அரசியலமைப்புப் பேரவையிலும், சுயாதீன ஆணைக்குழுக்களிலும் தமிழ் மக்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் வழங்கப்படல் வேண்டும். இரண்டாவது இரண்டு அமைப்புக்களிலும் தமிழ் மக்களுடன் தொடர்புடைய விவகாரங்களில் தீர்மானிக்கும் அதிகாரம் தமிழ் மக்களிடம் இருத்தல் வேண்டும். இந்த இரண்டு கோரிக்கைள் தொடர்பாக திருத்தத்தை ஆதரித்தவர்களும், நடுநிலை வகித்தவர்களும் கொஞ்சம்கூட கவனத்தை செலுத்தவில்லை. ஏதோ தமது சொந்த வீட்டு விவகாரம் போல தீர்மானங்களை எடுத்துள்ளனர்.

இங்கேகோரிக்கைகளை அரசாங்கம் கவனத்தில் எடுக்காது என்ற வாதங்களை தமிழ்த் தேசியக் கட்சிகள் முன்வைக்கலாம். அதில் உண்மை இருக்கிறது என்பதை மறுக்கவில்லை. ஆனால் தமிழ் மக்களுக்கு என்ன தேவை என்பதை வலிமையாக எடுத்துரைக்கும் பொறுப்பும், தமிழ் மக்களின் நிலை நின்று திருத்தத்தின் சாதக, பாதக ஆய்வுசெய்கின்ற பொறுப்பும் தமிழ்ப் பிதிநிதிகளுக்கு உண்டு என்பதை எவரும் நிராகரிக்க முடியாது. அரசாங்கம் ஏற்காவிட்டால் வரலாற்றுப் பதிவாகவாவது அது இருந்திருக்கும்.

இரட்டைப் பிரஜாவுரிமை விடயம் தமிழ் மக்களைப் பொறுத்தவரை மிகவும் முக்கியமானது. தமிழ் மக்களில் 10இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் புலம்பெயர்நாடுகளில் வாழ்கின்றனர். அவர்கள் தாயகத்தின் நீட்சியாக இருப்பதனால் தமிழ்த்தேசிய அரசியலின் அடிப்படைச் சக்திகளில் ஒருபிரிவினராவர். அரசியல், சட்ட, பொருளாதரா விடயங்களில் நிபுணத்துவம் பெற்ற புதிய தலைமுறை அங்கு உருவாகி வருகின்றது. அந்த தலைமுறை தமிழ் மக்களுக்கான தேர்தல் அரசியலில் பங்குபற்றுவதற்கு வாய்ப்புக்கள் இருத்தல் வேண்டும். 

அதன் மூலம் அறிவார்ந்த அரசியலை பின்பற்றுவதோடு தாயக - புலம்பெயர் உறவுகள் வளர்ச்சியடைவதற்கும் வாய்ப்புக்கள் உருவாகும். தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த விடயத்தில் கொஞ்சம் கூட கவனத்தைச் செலுத்தவில்லை. 

அதேவேளை, தமிழ்த் தேசியக் கட்சிகளின் 21ஆவது திருத்தம் தொடர்பான நடத்தைகளை முழுமையாக பார்ப்போமாயின் பல தவறுகளை அவை விட்டிருக்கின்றன. 

அதில் முதலாவது, துறைசார் நிபுணர்களுடன் திருத்தம் தொடர்பாக கலந்துரையாடுவதாகும். பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் சட்ட விடயங்களை முழுமையாக தெரிந்தவர்கள்; என்று கூறிவிட முடியாது. இது தொடர்பாக ஆய்வு உத்தியோகத்தர் ஒருவரை வைத்திருக்க அரசாங்கம் வசதிகள் செய்து கொடுத்துள்ள போதும் தகைமை உடையவர்கள் ஒருவரையும் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கவில்லை. 

தமிழ் மக்களைப் பொறுத்தவரை உள்நாட்டிலும் புலம்பெயர் நாடுகளிலும் பலதுறைசார் நிபுணர்கள் உள்ளனர். அவர்கள் எவருடனும் இது தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெறவில்லை. குறைந்தபட்சம் யாழ்.பல்கலைக்கழக சட்டபீடத்துடனும், அரசறிவியல் பீடத்துடனும் வலுவான கலந்துரையாடல்களை நடாத்தியிருக்கலாம். தமிழ்த் தேசியக் கட்சிகள் இதுவிடயத்தில் எந்த முயற்சிகளையும் எடுக்கவில்லை.

இரண்டாவது, குறைந்தபட்சம் கட்சி மட்டத்திலோ அல்லது கூட்டணி மட்டத்திலோ கலந்துரையாடல்களை நடாத்தியிருக்கலாம். எந்தக்கட்சியும் அவ்வாறானதொரு கலந்துரையாடலை நடத்தியதாகத் தெரியவில்லை. கூட்டமைப்பு சட்டம் நிறைவேறும் தினத்தன்று தான்; கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டத்தில் இதுதொடர்பாக பேசியதாக கூறப்படுகின்றது. அங்கும்கூட ஆழமான கலந்துரையாடல் எதுவும் நடாத்தப்படவில்லை. சுமந்திரன் மீண்டும் ஓர் கலந்துரையாடலுக்கு ஒழுங்கு செய்ததாகவும் ஆனால் பாராளுமன்ற உறுப்பினர் எவரும் வரவில்லை எனவும் குற்றம் சாட்டுகின்றார். ஒரு முக்கிய யாப்பு திருத்தம் தொடர்பாக கடைசி நேரத்திலா? கலந்துரையாடுவது என்ற கேள்வியும் இங்கு எழுகின்றது. 

மூன்றாவது, முக்கிய விடயங்களில் மக்கள் பங்கேற்பு என்பது அவசியமாகின்றது. ஜனநாயக அரசியலில் மக்களின் பங்கேற்பு வாக்களிப்பதில் மட்டும் நின்றுவிடுவதில்லை. இங்கு தமிழ்த் தேசியக் கட்சிகள் இதுவிடயத்தில் மக்களுடன் ஒருதிறந்த கலந்துரையாடலை நடாத்தியிருக்க வேண்டும். மக்களின் கருத்துக்களை கேட்டபின் தீர்மானங்களை எடுத்திருக்கலாம் குறைந்தபட்சம்  தீர்மானங்களை எடுத்து செயற்படுத்திய பின்பாவது அதற்கான விளக்கங்களையும் மக்களுக்கு தெரிவித்திருக்கலாம் அதுவும் இடம்பெறவில்லை.

நான்காவது, ஒருங்கிணைந்த அணுகுமுறையை பின்பற்றாமையாகும். இலங்கை அரசினை கையாள்கின்றபோதும், சர்வதேச விவகாரங்களை கையாள்கின்றபோதும் ஒருங்கிணைந்த அணுகுமுறை தேவையாகும். ஒருங்கிணைந்த அணுகுமுறை இல்லாவிட்டால் கூட்டுக்குரல் வெளிவராது. இக்கூட்டுக்குரல் இல்லாவிட்டால் எவருமே தமிழ் மக்களை கணக்கெடுக்க மாட்டார்கள். நிறுவன ரீதியாக ஒருங்கிணைந்த அணுகுமுறையை பின்பற்றாவிட்டாலும் குறைந்தபட்சம் இலக்கிலாவது ஒருங்கிணைந்த அணுகுமுறையை பின்பற்றியிருக்கலாம். 

ஆதரவோ, எதிர்ப்போ, நடுநிலையோ எந்தத் தீர்மானமாக இருந்தாலும் இலக்கிலாவது ஒருங்கிணைந்திருந்தால் கூட்டுக்குரல் வெளிவந்திருக்கும். அது தமிழ் மக்களின் பலத்தைப் பறைசாற்றுவதாக அமைந்திருக்கும். தமிழ்த் தேசியக் கட்சிகள் இந்தச் செயற்பாட்டிலும் கோட்டைவிட்டிருக்கின்றன. பிடிவாதமாக ஒற்றுமையின் சீத்துவத்தை உலகமயப்படுத்தியுள்ளன. தமிழ்த் தேசியக் கட்சிகளின் இந்தப் பொறுப்பற்ற செயற்பாட்டை வலிமையாக கண்டிப்பதற்கு தமிழ் மக்கள் தயங்கக்கூடாது. 
 

 

https://www.virakesari.lk/article/139281

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.