Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரட்டைத் தந்திரோபாயங்களும் சர்வகட்சி மாநாடும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இரட்டைத் தந்திரோபாயங்களும் சர்வகட்சி மாநாடும்

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த சிந்தனை அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்டிருந்த அரசியல் கூட்டு திரும்பத் திரும்பக் கூறி வந்த ஒரு விடயம் நாம் ஆட்சிக்கு வந்தால் யுத்தத்திற்குச் செல்லமாட்டோம் என்பதாகும். இருப்பினும் புதிய அரசாங்கத்திற்கு அவ்வாக்குறுதியைக் காப்பாற்றிக் கொள்ளக் கூடிய இயலுமை இருக்கவில்லை.

இது நாம் ஏற்கனவே பல தடவைகள் சுட்டிக்காட்டியுள்ளவாறு, கோட்பாட்டு ரீதியான நம்பிக்கைகள், தெற்கு, மற்றும் குறிப்பாக வடக்கில் இருந்து ஏற்பட்டிருந்த அழுத்தங்கள் காரணமாக ஏற்பட்டதொரு நிலையாகும். எனவே, தவிர்க்க முடியாதபடி நாடு மீண்டும் ஒரு தடவை யுத்த சூழ்நிலையினுள் தள்ளப்பட்டுள்ளது. ஆயினும் இவ்வாரக் கட்டுரையின் விடயம் அதுவல்ல.

முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகளுக்குப் புறம்பாக, இனப்பிரச்சினையின் அரசியல் பரிமாணங்களைக் கையாளும் நோக்கில் அல்லது அவ்விதம் கூறப்பட்டு, சர்வகட்சி செயன்முறை ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருந்தது. உன்னிப்பாக நோக்குகையில் புலப்படுகின்ற ஒரு விடயம் என்னவெனில், தமிழ்ச் சமூகத்தினுள் இது தொடர்பில் பாரிய ஒரு அக்கறையோ அல்லது அவதானமோ காணப்படவில்லை. இதற்குப் பல காரணங்கள் காணப்பட்டிருக்கலாம். இருப்பினும் இரண்டு பிரதானமான காரணிகள் சுட்டிக்காட்டப்படலாம், (1) சர்வகட்சி செயன் முறைகள் கடந்த காலத்தில் நம்பிக்கையளிப்பவையாக இருக்கவில்லை, (2) அண்மைக் காலத்தில் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு என்பதிலும் பார்க்க முக்கியமான உடனடிப் பிரச்சினைகள் சமூகத்திற்குக் காணப்பட்டிருந்தது.

இவற்றில் முதலாவது விடயத்தை எடுத்துக் கொள்வோமாயின், கடந்த காலத்தில் இனப்பிரச்சினை தீர்வு நோக்கில் பல சர்வகட்சி செயன்முறைகள் இடம் பெயற்றுள்ள போதிலும் அவை எதுவும் தீர்விற்கு உதவியிருக்கவில்லை. இத்தகைய மிகப் பிரசித்தி வாய்ந்த சர்வகட்சி செயற்குழுவே ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவினால் தோற்றுவிக்கப்பட்ட வட்டமேசை மகாநாடு ஆகும். 1983 ஆம் ஆண்டு இனக் கலவரத்தைத் தொடர்ந்து இந்தியாவினால் விசேட பிரதிநிதியாக அனுப்பப்பட்ட பார்த்தசாரதி முன்மொழிவு ஒன்றை வரைந்திருந்தார். இம் முன்மொழிவு தென்னிலங்கைக் கட்சிகளினால் ஆராயப்பட வேண்டியதவசியம் எனக் கூறி ஜெயவர்தன வட்ட மேசை மகாநாட்டை கூட்டியது மட்டுமன்றி தானும் ஒரு முன்மொழிவை சமர்ப்பித்தார். அத்துடன், தென்னிலங்கை அரசியற் கட்சிகளுக்குப் புறம்பாக பௌத்த சங்கம், இந்து மன்றம் போன்ற அமைப்புகளையும் உட்கொண்டு வந்திருந்தார். இவ்விடயத்தில் தெளிவாக இருந்தது என்னவெனில், இந்திராகாந்தியிடம் இருந்து தோற்றம் பெற்றிருந்த அழுத்தத்தை சமாளிப்பதற்காகவும், ஒரு தாமதப்படுத்தும் தந்திரோபாயமாகவுமே ஜே.ஆர்.வட்டமேசை மகாநாட்டைக் கூட்டியிருந்தார் என்பதாகும். இந்திரா காந்தி 1984 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கொல்லப்பட்டவுடன் வ.மே.மா.இற்கான தேவையும் இல்லாமல் போயிருந்தது. எனவே, அவ்வாண்டு டிசம்பர் மாதம் செயன்முறை காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இதன் கருத்து மகாநாடு கலைக்கப்பட்டிருந்தது என்பதே ஆகும்.

எனவே, இம்முறை சர்வகட்சி மகாநாடு கூட்டப்பட்ட போது, இது ஒரு தாமதப் படுத்தும் தந்திரோபாயம், அது எவ்வித பயனும் அளிக்கப் போவதில்லை எனத் தமிழ்த் தரப்பினர் கருதியிருப்பார்களேயானால் அது புரிந்து கொள்ளக் கூடியதாகும்.

இரண்டாவது, கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்ச் சமூகம் அதன் இருப்புடன் தொடர்புடைய நெருக்கடிகள் பலவற்றை எதிர் கொள்ள வேண்டியிருந்தது. கடத்தல், கப்பம் கேட்டல், கொலைகள், உள்ளூர் இடப்பெயர்வு என பல மிக மோசமான மனிதாபிமானப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியதொரு இக்கட்டான நிலைக்கு சமூகம் தள்ளப்பட்டிருந்தது. எனவே, கவனம் இப்பிரச்சினைகளை எவ்விதம் தீர்த்துக் கொள்வது என்பதில் தங்கியிருந்ததே அன்றி அரசியல் செயன்முறைகளில் அல்ல. எனவேதான் இச் செயன்முறையில் இருந்து வெளிவந்திருந்த சில ஆவணங்கள் கூட போதிய அவதானத்தைப் பெற்றுக் கொண்டிருக்கவில்லை. இதில் எவ்வித தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. இருப்பினும், தேசியப் பிரச்சினையில் கவனம் செலுத்த வேண்டிய தேவை ஏற்படுகின்றபோது இச் செயன்முறை அதன் பக்க விளைவுகள் பற்றிய போதிய தெளிவு இருக்க வேண்டியதவசியம்.

இராணுவ முஸ்தீபுகளுக்குச் சமாந்திரமாக அரசியல் செயன்முறை ஒன்றையும் முன்னெடுத்துச் செல்கின்ற மரபு ஒன்று இலங்கையில் மிக நீண்ட காலமாகவே இருந்து வருகின்றது, அம் மரபுக்கிணங்க ஜனாதிபதி ராஜபக்‌ஷவின் அரசாங்கமும் இராணுவ நடவடிக்கைகளுக்கு சமாந்திரமாக சர்வகட்சி மகாநாடு ஒன்றைக் கூட்டி இருந்தார். இம்முறை காணப்பட்ட ஒரு விசேட அம்சம் என்னவெனில், சர்வகட்சி மகாநாடு, இரண்டாம் தரத்திலான சர்வகட்சி பிரதிநிதிகள் குழு ஒன்றை அமைத்தமை ஆகும். சர்வகட்சி பிரதிநிதிகள் குழு தனக்கு ஆலோசனை கூறுமுகமாக நிபுணர்கள் குழு ஒன்றை மூன்றாவது மட்டத்தில் அமைத்திருந்தது.

17 பேர் அடங்கிய நிபுணர்கள் குழு பிரதிநிதிகள் குழுவின் கவனத்திற்காக ஆலோசனைத் தொகுதி ஒன்றை முன்வைக்க வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது.

இருப்பினும் இக்குழுவினுள் காணப்பட்ட இனரீதியான, கோட்பாட்டு ரீதியான வேறுபாடுகள் காரணமாக மொத்தமாக நான்கு அறிக்கைகளை முன்வைத்தது. இவற்றுள் பெரும்பான்மை அறிக்கை, சிறுபான்மை அறிக்கை என அழைக்கப்பட்ட இரு அறிக்கைகள் முக்கியமானவை. ஏனைய இரண்டும் தனி மனித அபிப்பிராயங்கள் ஆகும்.

பெரும்பான்மை அறிக்கை அதிகாரப் பரவலாக்கல், இனப் பிரச்சினை தீர்வு என்பவற்றில் கூடிய கவனம் செலுத்தியிருந்தது. பொதுவாக முற்போக்கான ஒரு அறிக்கை என வர்ணிக்கப்பட்டிருந்த பெரும்பான்மை அறிக்கை பட்டை தீட்டப்பட்ட மாகாண சபைகள் முறை ஒன்றை முன்மொழிந்திருந்தது. அது ஒற்றை ஆட்சி என்ற பதத்தைத் தவிர்த்துக் கொண்டிருந்த போதிலும் சமஷ்டி முறை ஒன்றை அறிமுகப்படுத்தக் கூடிய அளவிற்கு முன்னேற்றகரமானதாக இருக்கவில்லை. இருப்பினும் ஒற்றை ஆட்சி என்பதைத் தவிர்த்துக் கொண்டதனாலேயே அது பல எதிர்ப்புகளை எதிர்நோக்க வேண்டியிருந்தது.

சிறுபான்மை அறிக்கை பிராந்திய ஒருமைப்பாடு, தேசிய பாதுகாப்பு என்பவற்றில் கூடிய அக்கறையுடையதாய் இருந்தது. இது பெருமளவிற்கு தற்போது காணப்படுகின்ற மாகாண சபை முறைமையிலான அதிகாரப் பரவலாக்கலை ஏற்றுக் கொண்டிருந்தது. இருப்பினும் இதன் முக்கிய கவனம் ஒற்றை ஆட்சி என்பதிலேயே தங்கி இருந்தது.

முன்வைக்கப்பட்ட நான்கு அறிக்கைகளுக்கும் வெவ்வேறு மட்டத்திலான ஆதரவும் எதிர்ப்பும் காணப்பட்டமையினால் இவற்றின் முக்கிய அம்சங்களை உள்ளடக்கி பிரதிநிதிகள் குழுவின் தலைவராகச் செயற்பட்ட திஸ்ஸ விதாரண தனது முன்மொழிவு ஒன்றைச் சமர்ப்பித்தார். இருப்பினும் முக்கியமானது என்னவெனில், திஸ்ஸ விதாரண முன்மொழிவுகள் பெரும்பான்மை அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருந்த பெரும்பான்மையான விடயங்களை உள்ளடக்கி இருந்தமையாகும். முக்கியமாக இவரது அறிக்கையில் ஒற்றையாட்சி என்பது தவிர்க்கப்பட்டிருந்தது.

இதன் காரணமாக அரசாங்கம் இவ்வறிக்கையில் இருந்து தன்னை வேறுபடுத்திக் கொள்ள பாரிய பிரயத்தனங்களை மேற்கொள்ள வேண்டி இருந்தது. உண்மையில் ஒற்றையாட்சி என்கின்ற கட்டமைப்பில் இருந்து சிறிதும் விலகிச் செல்வது இவ்வரசாங்கத்தை பொறுத்தவரை சாத்தியமானதாகவோ அன்றி இலகுவானதாகவோ இருக்கப் போவதில்லை.

இப்போது சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் பெரும்பான்மை இணக்கத்தின் அடிப்படையில் இனப்பிரச்சினைத் தீர்வுக்கான நிகழ்ச்சித் திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

இன்று, நாளை என்று கூறப்பட்ட போதும் இது இன்னும் வெளியிடப்படவில்லை. தகவலறிந்த வட்டாரங்களின் படி இப்புதிய முன்மொழிவு பெருமளவிற்கு திஸ்ஸ விதாரண முன் மொழிவை ஒத்ததாக இருப்பதாகக் கூறப்படுகின்றது. அதன் கருத்து இப்பொழுது தயாரிக்கப்பட்டுள்ள முன்மொழிவும் இலங்கை ஒரு ஒற்றையாட்சி நாடு எனக் கூறாதிருப்பதாகும். இதன் காரணமாகவே ஜாதிக ஹெல உறுமயவும் மகாஜன எக்சத் பெரமுனவும் பிரதிநிதிகள் குழுக் கூட்டத்தில் இருந்து வெளியேறத் தீர்மானித்திருப்பதாகும்.

இதன் பின்னணியிலேயே 1984 ஆம் ஆண்டு ஜனாதிபதி ஜயவர்தன போன்றே ஜனாதிபதி ராஜபக்‌ஷவும் பிரதிநிதிகள் கூட்டத்தை காலவரையறையின்றி ஒத்திவைக்க தீர்மானித்திருப்பதாகும். இந்த ஒத்திவைப்பும் கூட முடிவுக்குக் கொண்டு வருதலா என்பது பொறுத்திருந்து பார்க்கப்பட வேண்டியதாகும்.

ஏனெனில் இப்பொழுதும் கூட இராணுவ நடவடிக்கைகளுக்கு சமாந்திரமாக அரசியல் செயன்முறையொன்றை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் காணப்படவே செய்கின்றது.

அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயின் கருத்தின்படி ஒற்றையாட்சி முறையினுள் தீர்வு என்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது. உண்மையில் இது ஒரு செய்தியே அல்ல. ஏனெனில், ஜனாதிபதித் தேர்தலின் போதே ஒற்றையாட்சிக்குள் தீர்வு என்பது வற்புறுத்திக் கூறப்பட்டிருந்தது.

கிழக்கில் அரசாங்கம் வெற்றி பெற்றுள்ள நிலையில், வடக்கு மீதும் தாக்குதல் மேற்கொள்ளக் கூடிய நம்பிக்கை மட்டம் காணப்படுகின்ற நிலையில் ஒற்றையாட்சி என்பதில் இருந்து மாறிச் செல்ல வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு இல்லை. எனவே, சர்வகட்சி மகாநாட்டு செயன்முறை மீண்டும் புதுப்பிக்கப்பட்டாலும் கூட அது தந்திரோபாயங்களின் ஒரு பகுதியாக மட்டுமே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

http://www.sooriyan.com/index.php?option=c...5&Itemid=30

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.