Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காய்கறிகளே என் தெய்வமான கதை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
10%25%20human.jpg
 



நம்முடைய உடலின் பல செயல்பாடுகளை வழிநடத்தும் மென்பொருள் ஒன்று இருக்கிறது. ஆம் நிஜமாகவே இருக்கிறது. ஆனால் அது நாம் நினைப்பது போல நம் மூளையிலோ, ஹார்மோன்களிலோ, மரபணுக்களிலோ இல்லை. நம் மூளையையும் ஹார்மோன்களையும் வழிநடத்தும், ஒருங்கிணைக்கும் மென்பொருள் அது - அது நமது உடலில் - குடல் பகுதியில் - வாழும் நுண்ணுயிர்கள். இவையே 90% மேல் நமது மரபணுக்களாகவும் உருப்பெற்றிருப்பதால் நாம் 10% மட்டுமே மனிதர்கள் என தனது 10% Human: How Your Body’s Microbes Hold the Key to Health and Happiness எனும் நூலில் ஆலனா கோலன் சொல்கிறார். உடல் நலம் குறித்து, குறிப்பாக ஹார்மோன்களும், மூளையும் நமது விருப்பங்களும், தேர்வுகளும் எப்படி நுண்ணியிர்களால் கட்டுப்படுத்தப்படுத்தப்படுகின்றன என்பது பற்றியும் பேசுகிற மிக முக்கியமான நூல் இது.
கோலன் சொல்வது நம்மை இந்த நுண்ணியிர்கள் முழு கட்டுப்பாட்டில் வைத்துள்ளதால் நமக்கு தேர்வு செய்யும் திறனே இல்லையென்றல்ல. நாம் எடுக்கும் தேர்வுகளை உணர்வளவில் இந்த நுண்ணுயிர்கள் எப்படி வழிநடத்துகின்றன என்பதே கோலன் சொல்லும் முக்கியமான விசயம். அடுத்து, அவர் நவீன நோய்களான நீரிழிவு, மாரடைப்பு, மன அழுத்தம் ஆகியவை இந்த நல்ல நுண்ணியிர்களின் சமநிலை குலையும் போது ஏற்படும் சீரழிவின் விளைவுகளே என்கிறார். அதாவது பலவிதமான நுண்ணுயிர்கள் நமக்குள் வாழுகின்றன. நமது ஆரோக்கியத்தை அவை பேணினாலே அவற்றாலும் வசதியாக இருந்து தொடர்ந்து நாம் உட்கொள்ளும் உணவை பயன்படுத்த முடியும் என்பதால் அவை அப்பணியை ஆற்றுகின்றன. நாம் உண்ணும் ஒவ்வொரு வகை உணவும் உடலுக்குள் நொதித்து அழிக்கப்பட்டு அதில் இருந்து ஆற்றல் உறிஞ்சி எடுக்கப்படும் போது குடலில் வாழ்ந்து வரும் பல்வேறு நுண்ணியிர்களில் சில அந்த வகை உணவால் பயனடைகின்றன. அதாவது நம் உடலை ஒரு பெரும் உணவகம் எனக் கருதினால் அதில் வரிசை வரிசையாக பல ஆயிரம், பல லட்சம் வாடிக்கையாளர்கள் (நுண்ணுயிர்கள்) கையில் தட்டுடன் நிற்கிறார்கள். அதில் சிலருக்கு காய்கறி, மாமிசம் வேண்டும், சிலருக்கு தானியங்கள், கடலை வகைகள், பழங்கள் வேண்டும், சிலருக்கு மைதா மாவு, சர்க்கரை போன்ற நவீன உணவுகள் வேண்டும். நம் உடலின் முக்கியமான பல தேவைகளை நிறைவேற்றும் நுண்ணியிர்கள் நொதித்த உணவு (probiotic), காய்கறி, மாமிசம் கறி, விதைகள், கொட்டை பருப்புகள், மாமிச கொழுப்பு போன்ற சர்க்கரை குறைவான உணவுகளையே நம்பி வாழ்கின்றன. நாம் இன்று அதிகமாக சோறு, மைதா, சர்க்கரை, மாமிசம், பால் சார்ந்த உணவுகளை மட்டுமே உண்கிறோம். அப்போது இவற்றைக் கொண்டு வாழ்கிற ஒருவகை வாடிக்கையாளர்கள் (நுண்ணியிர்கள்) மட்டும் பெருகுகிறார்கள். இது உணவகத்தின் (உடல்) சமநிலையைக் குலைத்து விடுகிறது. நமது ஹார்மோன்களை சரிவர நிர்வகித்தும், வேறு பல நுட்பமான வளர்சிதை மாற்றங்கள், மறுசீரமைப்பு பணிகளை செய்து வரும் நல்ல நுண்ணியிர்கள் இப்போது எண்ணிக்கையில் குறைந்து விடுகின்றன; இன்னொரு பக்கம் எந்த வேலையையும் செய்யாத (பிரியாணி, பர்க்கர், பப்ஸ், சமோசா, சிப்ஸ், பிரெட், கேக், பிஸ்கட், இனிப்பு வகைகளை மட்டும் கேட்கும்) சோம்பேறி நுண்ணியிர்கள் பெருகின்றன. இவை நம்மை மேலும் மேலும் மோசமான உணவுகளை சாப்பிடத் தூண்டுகின்றன. நமது ஆரோக்கியம் சீர்குலைகிறது - ரத்த சர்க்கரை அளவுமீறிப் போய், ரத்தக்கொதிப்பு ஏற்பட்டு, இதய தமனிகள் அடைத்துக்கொண்டு, ஹார்மோன்கள் சரிவர சுரக்காமல், மூளைக்கு கிடைக்க வேண்டிய தூண்டுதல்கள் கிடைக்காமல் போய், நரம்பணுக்கள் நிலைகுலைந்து போய் நாம் நோய்களின் கிடங்காக மாறுகிறோம். இதனாலே இத்தனை நோய்களும் நம்மை ஒரே சமயம் நவீன காலத்திலே தாக்குகின்றன. ஏனென்றால் அப்போதே நமது உணவுப்பழக்கமானது முழுக்க மாறிப்போனது. நாம் நமது நுண்ணியிர்களை அனாதைகளாக்கிவிட்டோம். அவையில்லாமல் நாம் மெல்ல மெல்ல செத்து வருகிறோம்.  

நிக் லேன் எழுதிய Power, Sex, Suicide என்றொரு முக்கியமான நூல் உள்ளது (தலைப்பை பார்த்து ஏமாந்து வீடாதீர்கள். இது முழுக்க முழுக்க அறியவியல் நூல் தான்.) - அதில் நமது செல்களுக்குள் இருக்கும் மைட்டோகோண்டிரியா (ஊன்குருத்து) எனும் சக்தி சொரூபம் நம்முடையது அல்ல, நம்முடன் இணைந்து இந்த உடலை உருவாக்கிய நுண்ணுயிர்கள் உடையது என்கிறார் லேன். அதாவது நமக்குள் இருந்து காலனி ஆதிக்கம் செய்யும் நுண்ணியிர்களின் மென்பொருளே ஒரு செல் உயிருடன், ஆரோக்கியத்துடன் எத்தனைக் காலம் வாழ வேண்டும் எனத் தீர்மானிக்கிறது. இந்த மனித செல்லுக்குள் வாழும் நுண்ணியிரின் ஆன்மா அந்த செல் போதுமான, சரியான உணவும், பிற சௌகர்யங்களும் இல்லாது தளரும் போது அதை அழித்துவிட முனைகிறது, அதுவே ஒரு செல்லின் மரணம் என்கிறார் லேன். அதாவது மைட்டோகாண்டிரியா என்பது ஒரு பண்டத்தை வாங்கும் பயனரைப் போல. உங்கள் போன் சரியாக வேலை செய்யவில்லை, பழசாகிவிட்டது என்றால் அதை சரி செய்வதை விட சுலபம், செலவு குறைவு அதைத் தூக்கிப் போடுவது தானே? அதையே செல்லுக்குள் இருக்கும் மைட்டோகோண்டிரியாவும் செய்கிறது - அதுவே நோய்நொடி, உடல் பலவீனம், வயதாவது, அதன் விளைவான மரணம் என்கிறார் லேன். பலவீனமாகும் ஒரு செல் சிலநேரம் தன்னையே கொல்லும், அல்லது மற்றொரு செல்லுடன் தன்னை இணைத்து புதிய செல்லாகும் என்கிறார் அவர். இதன்படி திறன் இழக்கும் உடலின் தற்கொலையே நமது மரணம்.

 இந்த தன்னைப் பாதுகாக்கும் மைட்டோகாண்டிரியாவின் முயற்சிகளின் போது விளையும் கோளாறே புற்றுநோய் என்கிறார். அவர் புற்றுநோயாளிகள் தம் உணவுப்பழக்கத்தை மாற்றியதும் நல்ல விளைவுகள் ஏற்படுவதாக சொல்கிறார். இதற்கும் நம் குடலில் வாழும் நுண்ணியிர்கள் எனும் மென்பொருளுக்கும் ஏதோ ஒரு தொடர்பு உள்ளது. இந்த நுண்ணுயிர்கள் நினைத்தால் மைட்டோகாண்டிரியாவை செயல்பட வைத்து புற்று செல்களை தற்கொலை பண்ண வைக்க முடியும். அவை நினைத்தால் மன அழுத்தத்தை, தமனிகளின் அடைப்பை சரி செய்ய முடியும்.

இப்போது என் கதைக்கு வருகிறேன். நான் சிறுவயது முதலே காய்கறிகளை வெறுத்து வந்தேன். மிக அண்மையில் தான் தினமும் இரண்டு இரண்டு பெரிய பாத்திரங்களில் - வேளை மசாலா, எண்ணெய் சேர்க்காமல் வெறுமனே வேக வைத்த - காய்கறிகளை சாப்பிடத் தொடங்கினேன். அதன் நல்ல விளைவுகளைக் கண்டு நான் அசந்து போனேன். என்னுடைய நோயெதிர்ப்பு சக்தி பலமடங்கு அதிகரித்தது. என்னைச் சுற்றி பலரும் இருமல், ஜுரம் என அல்லலுற்ற போதும் அவர்களுடன் இருந்த எனக்கு எந்த தொற்றுநோயும் வரவில்லை. அண்மைக்காலத்தில் நான் ஆஸ்பத்திரிக்கு போகவோ மருந்தகங்களில் நிற்கவே தேவை ஏற்படவில்லை. (நான் காய்கறிகளுடன் கூடவே நொதித்த உணவுகளையும் எடுத்துக் கொண்டேன் தான்.) இது என்ன சொல்கிறது என்றால் என் உடலுக்குத் தேவையான நுண்ணியிர்களின் உணவு இந்த காய்கறிகளே. நான் அவற்றை இத்தனைக் காலமும் பட்டினி போட்டுக் கொன்றதால் அவை என்னைப் பழிவாங்கிவிட்டன. இப்போது நான் உணவளித்ததும் அவை மீண்டும் வந்து என்னைப் பாதுகாக்கின்றன. எனக்கு காய்கறிகளாக இருக்கும் உணவு உங்களுக்கு வேறொன்றாக இருக்கலாம். எல்லாருக்கும் இதே போல காய்கறிகளை உண்பது பாரித்த விளைவுகளை ஏற்படுத்தாது. ஒவ்வொரு உடலும் (உணவகமும்) அதிலுள்ள நுண்ணுயிர்களும் (வாடிக்கையாளர்கள்) வேறு, தனித்துவமானது.
 நான் எத்தனையோ மாணவர்கள் தம் சொந்த ஊரில் இருந்து புது ஊருக்கு, நகரத்துக்கு பெயர்ந்து அங்குள்ள உணவை சாப்பிட்டதும் உடல் சுகவீனம் வந்து தளர்ந்து போவதை தொடர்ந்து கவனிக்கிறேன். அவர்களுடைய குடும்பத்தினர் வம்சாவளியாக சாப்பிட்டு வந்த உணவுகளை மாற்றியது அவர்களுடைய நுண்ணுயிர் சமூகத்தை அழித்துவிட்டதே பிரச்சினை எனப் புரிந்து கொண்டேன். நான் 2000இன் துவக்கத்தில் சென்னைக்கு வந்த போது எனக்கும் இப்பிரச்சினை ஏற்பட்டது - மீன் குழம்புக்காக, பழைய சோறுக்காக தவித்தேன். சோறு, சாம்பார், பீட் ரூட் பொரியல் என்பதை என்னால் ஒரு உணவாக ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. எனக்கு உடல் சுகவீனங்கள் ஏற்பட்டது. மெல்ல மெல்ல என் உடல் இந்த மாற்றங்களுக்கு தன்னை (மோசமாக) தகவமைத்துக் கொண்டது. நம் மண்ணில், அதில் இருந்து கிடைக்கும் தண்ணீரில், உணவில் ஏதோ ஒரு மந்திரம் இருக்கிறது, அது இந்த நுண்ணியிர்கள் தாம் அன்றி வேறொன்றும் இல்லை.

ஒவ்வொருவரும் தம் உடலின் மென்பொருளான நுண்ணியிர்கள் எவை எனக் கண்டுபிடித்து, அவற்றுக்கு படையல் போட வேண்டும். அதுவே ஆரோக்கியமாக மகிழ்ச்சியாக வாழ சிறந்த வழி!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.