Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'தி கேரளா ஸ்டோரி' படம் எப்படி உள்ளது? ஊடக விமர்சனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
கேரளா ஸ்டோரி

பட மூலாதாரம்,TWIITER/SUDIPTOSENTLM

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் வெளியாகியிருக்கிறது. சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் அடா சர்மா பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்தியில் உருவாகி வெளியாகியிருக்கும் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் டிரைலர் வெளியானபோதே, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், அரசுக்கு எதிரான வகையில் உருவாக்கப்பட்டு இருக்கும் வகுப்புவாத திரைப்படம் போல் தெரிகிறது என தனது எதிர்ப்பை பதிவு செய்தார். அதேபோல், இந்தப் படத்திற்கு எதிராக காங்கிரஸ் கட்சியும் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தது.

‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் டிரைலரில் பல்வேறு உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான திரைப்படம் என குறிப்பிடப்பட்டு இருந்தது. அதோடு, 32,000 பெண்கள் இஸ்லாம் மதத்திற்கு மாறி ஐ.எஸ். அமைப்பில் இணைந்ததாக குறிப்பிடப்பட்டு இருந்தது, பெரும் விவாதத்தையும் ஏற்படுத்தியது.

அதனால், கேரளாவின் ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கிலேயே இந்தப் படம் உருவாக்கப்பட்டு இருப்பதாக இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பைச் சேர்ந்த வி.கே. சனோஜ் தெரிவித்திருந்தார். மேலும், கேரளாவின் பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை வெளியிடக் கூடாது என கோரிக்கை விடுத்தன.

இந்நிலையில், கேரளாவின் பன்முகத்தன்மையை எடுத்துரைக்கும் வகையிலான கருத்துகளை கேரளாவைச் சேர்ந்த பலரும் சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். அந்தவகையில், மசூதி ஒன்றுக்குள் இந்து முறைப்படி நடந்த வீடியோ ஒன்று அதிகளவில் பகிரப்பட்டது. அந்த வீடியோவை, பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானும் பகிர்ந்து, மனிதத்தின் மீதான அன்பு அளவிட முடியாதது எனவும் தெரிவித்திருந்தார்.

கடந்தாண்டு வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய ‘காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தைப் போன்றே சங்பரிவார் அமைப்புகளின் பரப்புரை திரைப்படமாக ‘தி கேரளா ஸ்டோரி’ உருவாக்கப்பட்டுள்ளது என தொடர்ந்து எதிர்மறை கருத்துகள் முன்வைக்கப்பட்டன. தமிழ்நாட்டிலும் இந்தப் படத்தை வெளியிடும் திரையரங்குகளில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்கும் வகையில், பாதுகாப்பு வழங்க வேண்டும் என காவல்துறை டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

இந்தியில் உருவான ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், இந்தியில் மட்டுமே தமிழ்நாடு, கேரளாவில் வெளியாகியிருக்கிறது.

‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் மோசமான நடிப்புடன் உருவாக்கப்பட்டுள்ள, மோசமான திரைப்படம் என ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ இதழ் கடுமையாக விமர்சித்துள்ளது.

கேரளா ஸ்டோரி

பட மூலாதாரம்,TWIITER/SUDIPTOSENTLM

பல்வேறு மத, இன அடையாளங்களுடன் பெருமைப்படும் கேரளாவில், அதன் சமூக சிக்கல்களை ஆராய்வதில் ஆர்வம் காட்டாமல், மோசமாக உருவாக்கப்பட்டு இருக்கும் வெற்று கூச்சலே ‘தி கேரளா ஸ்டோரி’ என சாடியுள்ளது. அப்பாவியான இந்து மற்றும் கிறித்துவ பெண்கள் தீய முஸ்லீம் ஆண்களால் அலைக்கழிக்கப்படுவதான காட்சியமைப்புகள் எந்தவித ஆதாரமும் இல்லாமல் வெற்று எழுத்துக்களால் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளதாகவும் அதன் விமர்சனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"கேரளாவில் மிகவும் பரவலாக காணப்படும் இந்து, முஸ்லீம், கிறித்துவ நண்பர்களைப் போலவே, நர்சிங் கல்லூரியில் சேரும் 4 பெண்கள் ஒரு அறையில் தங்குகிறார்கள். அவர்களில் உள்ள ஆசிஃபா எனும் முஸ்லீம் பெண், மற்ற மூவரையும் மூளைச்சலவை செய்கிறாள். ஹிஜாப் அணியும் பெண்கள் மட்டுமே ஆண்களின் தவறான கண்களில் இருந்து தப்ப முடியும் எனவும், மற்ற தெய்வங்கள் எல்லாம் பலவீனமானவை எனவும் குறிப்பிடுகிறார். அதோடு, அல்லாவால் மட்டுமே நரக நெருப்பில் அழிந்தொழிவதை தடுக்க முடியும் எனவும் ஆசிஃபா கூற, அவளது பேச்சில் மற்ற மூவரும் எளிமையாக மயங்கி விடுகின்றனர். ஆனால், இந்திய அளவில் கல்வியறிவு பெற்ற பெண்கள் அதிகமிருக்கும் கேரளாவில் இது எப்படி சாத்தியம் என உறுதியான எந்த காட்சியமைப்புகளும் இன்றி உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும், கேரளா அடுத்த 20 ஆண்டுகளில், முஸ்லீம் மாநிலமாக மாறும் என துணை முதலமைச்சர் தெரிவித்ததாகவும் குறிப்பிடுகிறார்கள். உண்மையில் இதுமாதிரியாக நடந்ததா என்பது பற்றிய எந்தவிதமான உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களும் இல்லை. இதுமாதிரியான நிகழ்வுகள் படத்தின் நம்பகத்தன்மையை குலைக்கிறது" என ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ தெரிவித்துள்ளது.

"படத்தில் வரும் எல்லா முஸ்லிம் கதாபாத்திரங்களும் மிரட்டலான தோரணையில் இருக்கிறார்கள். ‘லவ் ஜிஹாத்’ அவர்கள் அனைவரும் விரும்பக்கூடிய ஒன்றாக இருக்கிறது. அதா ஷர்மா திறமையான நடிகையாக இருந்தும், அவரது காட்சிகள் நகைப்பையே வரவைக்கின்றன. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர, இலங்கை வழியாக பயணம் செய்யும் காட்சிகள் மிகவும் கொடூரமாக சித்தரிக்கப்பட்டு உள்ளன. அங்கு 32000 கேரள பெண்கள் இருப்பதாக குறிப்பிடுவது முற்றிலும் தவறானது" என தங்கள் விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

"ஒரு சிக்கலின் மீது வெளிச்சம் பாய்ச்சி தரமான விவாதத்தை உண்டாக்குவதாக இருக்க வேண்டும். ஆனால், ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் அதற்கு எதிர்மாறாக இருக்கிறது. அதனால், பார்வையாளரே அவர்கள் பார்க்கும் படத்தில் என்ன இருக்க வேண்டும் என முடிவு செய்ய வேண்டும்" எனவும் ’தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ விமர்சனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கேரளா ஸ்டோரி

பட மூலாதாரம்,TWIITER/ADAH_SHARMA

டைம்ஸ் ஆஃப் இந்தியா, ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் இளம் இந்து பெண்களை இஸ்லாம் மதத்திற்கு மாற்றி, அவர்களை தீவிரவாதிகளாக்குவதை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது என விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளது.

"மூன்று பெண்களின் உண்மைக் கதை என குறிப்பிடப்பட்டிருக்கும் இந்தப்படம், அதா ஷர்மாவின் விசாரணை அறை காட்சியுடன் தொடங்குகிறது. அங்கு அவர், கடந்த கால நெருக்கடிகள் குறித்து பகிர்ந்து கொள்கிறார். கல்லூரி காலத்தில் தங்கள் அறைத்தோழியான ஆசிஃபா தீவிரமான மூளைச்சலவையால் தான் உட்பட மூன்று பேரை இஸ்லாம் மதத்திற்கு மாற்றியது குறித்து பதிவு செய்கிறார். அதற்காக போதை மருந்துகளை பயன்படுத்தியது குறித்தும், தனது ஆண் நண்பர்கள் ஒத்துழைப்புடன் ஆசிஃபா அதை நிகழ்த்தியதையும் தெரிவிக்கிறார். அவர்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர நிர்பந்திக்கப்படுவது குறித்தும் அதா ஷர்மா குறிப்பிடுகிறார்." என இந்தப் படத்தின் கதையை விவரிக்கிறது டைம்ஸ் ஆப் இந்தியா.

"சிக்கலான ஒரு விசயத்தை கையிலெடுத்திருக்கும் இயக்குநர், பார்வையாளர்களிடையே பதட்டத்தை உருவாக்கும் தருணங்களை இயல்பாக திரையில் புகுத்தியிருக்கிறார். மேலும், சர்ச்சையான விசயங்களை கையாளும்போது, சமநிலை கடைபிடிப்பதில் இருக்கும் சவாலையும் திறம்பட கையாண்டிருக்கிறார். ஆனால், உரையாடல்கள், காட்சியமைப்புகளால் சிக்கலானதாகவே திரைப்படம் இருக்கிறது. "

"பல்வேறு சமூகங்களை சேர்ந்த பார்வையாளர்களின் அமைதியை நிச்சயம் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் சீர்குலைக்கும் என விமர்சிக்கும் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’, படம் பார்த்தபிறகு தேசத்தின் தற்போதைய நிலைகுறித்த கேள்விகள் எழும்பும்" எனவும் டைம்ஸ் ஆப் இந்தியாவின் விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளது.

"இஸ்லாமிய வெறுப்பையே அடிப்படையாகக் கொண்டிருக்கிறது"

‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் முழுக்க முழுக்க இஸ்லாமிய வெறுப்பையே அடிப்படையாகக் கொண்டிருப்பதாக scroll.in இணையதளம் விமர்சனத்தை வெளியிட்டுள்ளது.

இந்தப் படம் பல்வேறு எதார்த்தங்களை கேள்விக்குள்ளாக்கி, இந்தியாவில் உள்ள முஸ்லீம்கள் எப்படி ‘ஐஎஸ்ஐஎஸ்’ அமைப்பைச் சேர்ந்தவர்களானார்கள் என்பதை விளக்கும் வகையிலான பல காட்சிகளை கொண்டிருக்கின்றன. மேலும், கேரளாவின் காசர்கோடு, மலப்புரம் ஆகிய பகுதிகளை ஆட்சேர்ப்பு முகாங்களாகவும் சித்தரிக்கிறது. ‘ஒட்டுமொத்த கேரளாவும் ஒரு வெடிகுண்டின் மீது அமர்ந்திருப்பதாக’ படத்தில் குறிப்பிட்டுள்ளதாகவும் scroll.in தளம் தனது விமர்சனத்தில் பதிவிட்டு இருக்கிறது.

https://www.bbc.com/tamil/articles/cll1mprqeylo

  • கருத்துக்கள உறவுகள்

விமர்சனம்: தி கேரளா ஸ்டோரி!

KaviMay 06, 2023 18:58PM
ஷேர் செய்ய : 
985454.jpg

பூதத்தைக் கிளப்பும் கதை!

எந்தவித அறிவிப்பும் இல்லாமல் திடீரென்று வெளியான ஒரு ட்ரெய்லரே ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் மீது ரசிகர்களின் ஒட்டுமொத்தக் கவனமும் திரும்பக் காரணமாக இருந்தது. 

அதே சூட்டோடு தற்போது நாடு முழுக்க அப்படம் வெளியாகியிருக்கிறது. நீதிமன்றங்களில் அதன் வெளியீட்டுக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டபோதும், அவற்றை மீறி திரையரங்குகளை வந்தடைந்திருக்கிறது. தனித் திரையரங்குகளில் இப்படம் வெளியாகாத போதும், சென்னையின் குறிப்பிட்ட சில மல்டிஃப்ளெக்ஸ்களில் திரையிடப்பட்டுள்ளது. அதற்கு எதிராகச் சில இஸ்லாமிய இயக்கங்கள் ஆர்ப்பாட்டங்களையும் நிகழ்த்தின. ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படம் போலவே இதுவும் இஸ்லாம் மதத்திற்கு எதிராக இருப்பதாகக் குற்றம்சாட்டின.

ஒரு பெரிய கோடு இருக்கிறது. அதனை அழிக்காமல் சிறிதாக்க வேண்டுமென்றால், அதனை விடப் பெரிதாக ஒரு கோட்டை அருகில் வரைவது ஒரு உத்தி. ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படத்திற்குக் கிளம்பிய எதிர்ப்பைப் பார்த்தபிறகு, அதனை மிகச்சிறிதாக மாற்றும் யோசனையின் விளைவாக, ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தைத் தந்திருக்கிறார் இயக்குனர் சுதீப்தா சென். அந்த அளவுக்கு, படம் முழுக்க இஸ்லாம் எதிர்ப்பு நிறைந்திருக்கிறது.

3SV3VE10-image-1024x576.jpg

காசர்கோட்டில் நடக்கும் கதை!

‘தி கேரளா ஸ்டோரி’ ட்ரெய்லரில் என்னவெல்லாம் சொல்லப்பட்டிருந்ததோ, அதுவே படத்திலும் நிறைந்திருக்கிறது.

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஷாலினி (அடா சர்மா) எனும் பெண் காசர்கோட்டில் இருக்கும் ஒரு நர்சிங் கல்லூரியில் சேர்கிறார். அந்தப் பெண்ணுக்குச் சொந்தம் என்று சொல்லிக்கொள்ள தாய், பாட்டி இருவர் மட்டுமே இருக்கின்றனர். விடுதியில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவரின் மகளான கீதாஞ்சலி (சித்தி இத்னானி), கோட்டயத்தைச் சேர்ந்த நிமா மேத்யூஸ் (யோகிதா பிஹானி) மற்றும் மலப்புரத்தைச் சேர்ந்த ஆசிபா (சோனியா பலானி) ஆகிய மூன்று பெண்களோடு அறையைப் பகிரும் வாய்ப்பு கிடைக்கிறது.

கல்லூரிக் காலத்தில் ஆசிபா தன் மதம் பற்றிக் கூறும் ஒவ்வொரு விஷயமும் ஷாலினியை ஈர்க்கிறது. ஒருமுறை மால் ஒன்றுக்குச் செல்லும்போது ஷாலினி, நிமா, கீதாஞ்சலியை மானபங்கப்படுத்துகிறது ஒரு கும்பல். அதன்பிறகு, ஹிஜாப் அணிவதே பெண்களுக்குப் பாதுகாப்பு தரும் என்று ஆசிபா சொல்வதை கீதாஞ்சலியும் ஷாலினியும் நம்பத் தொடங்குகின்றனர்.

ஆசிபாவின் வழிகாட்டுதலில் மெல்ல இருவரும் இஸ்லாம் மார்க்கத்தைப் பின்பற்ற ஆரம்பிக்கின்றனர். ஆனால், நிமா மட்டும் அவர்களிடம் இருந்து விலகி நிற்கிறார். ஒருகட்டத்தில் ஆசிபாவின் நண்பர்கள் அவர்களுக்கு அறிமுகமாகின்றனர். அவர்களில் ஒருவரான ரமீஸ், ஷாலினி இடையே காதல் முளைக்கிறது. ஒருகட்டத்தில் ஷாலினி கர்ப்பமாகிறார். அதையடுத்து இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்கின்றனர். ஆனால், அது நடைபெறவில்லை.

இரண்டு ஆண்டுகள் கழித்து, ஆப்கானிஸ்தான் சிறையில் அவர் அடைக்கப்பட்டிருக்கிறார் அப்போது, தன் பெயர் பாத்திமா என்று அறிமுகப்படுத்திக்கொண்டு பேசத் தொடங்குகிறார். இடைப்பட்ட காலத்தில் என்ன நடந்தது என்பதை அவர் பகிரும் விதமாக மொத்தக் கதையும் விரிகிறது.

மேலோட்டமாகப் பார்த்தால், இப்படம் மதமாற்றத்தை விமர்சிப்பது போன்று தோன்றலாம். ஆனால், படத்தில் காட்சிமொழிக்கான முக்கியத்துவத்தைக் காட்டிலும் பிரசார நெடியே மேலோங்கி நிற்கிறது.

அடா நடிப்பு!

மொத்தப் படமும் அடா சர்மா ஏற்ற ஷாலினி பாத்திரத்தைச் சுற்றியே நகர்கிறது. அதற்கேற்ப, அவரும் துறுதுறு மாணவியாக, பருவத்திற்கே உரிய குறும்புகள் கொண்ட பெண்ணாக, தத்துவார்த்தமான விளக்கங்களைத் தேடும் மனுஷியாக, தன் நிலையை விளக்கப் போராடுபவராகப் படத்தில் தோன்றியிருக்கிறார். ’அடடா’ என்று அசரும் அளவுக்கு பார்வையாளர்களை எளிதில் வசீகரிக்கிறது அவரது நீண்ட, நெடிய நடிப்பு அனுபவம். படத்தின் மீதான எதிர்மறை விமர்சனங்களுக்கும் அதுவே காரணமாக அமைந்திருக்கிறது.

அடாவுக்கு அடுத்தபடியான இடத்தைப் பிடிக்கிறார் சித்தி இத்னானி. ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் நாயகியாக வந்தவர். இவரைப் போலவே யோகிதா பிஹானி, சோனியா பலானி பாத்திரங்களும் அழுத்தமானதாகப் படைக்கப்பட்டுள்ளன.

நால்வரது நடிப்பே கிட்டத்தட்ட 70 சதவீதக் காட்சிகளை நிறைக்கிறது; அடாவின் தாயாக நம்மூர் தேவதர்ஷினி தோன்றியுள்ளார். இவர்கள் தவிர்த்து அடாவின் கணவராக வருபவர், காதலராக நடித்தவர் உட்பட இரண்டு டஜன் பாத்திரங்கள் திரையில் தோன்றுகின்றன.

நடிப்புக் கலைஞர்கள், படமாக்கப்பட்ட களங்கள் தவிர்த்து இப்படத்தில் பெருஞ்செலவு என்று எதுவும் தென்படவில்லை. ஆனால், முன்பின்னாக நகரும் திரைக்கதைக்கேற்பக் காட்சிகளை செறிவானதாகக் காட்டியிருக்கிறது பிரசாந்தனு மொகபத்ராவின் ஒளிப்பதிவு. சஞ்சய் சர்மாவின் படத்தொகுப்பு மிகக்கூர்மையாகக் கதை சொல்வதிலும் காட்சிகளை முடிப்பதிலும் கவனம் காட்டியிருக்கிறது.

வீரேஷ் ஸ்ரீவல்சாவின் இசையில் வெளியான பாடல்கள் மலையாளத் திரையிசையை நினைவூட்ட, மெலடி மெட்டில் மனம் கவர்கிறார் பிஷாக் ஜோதி. பிஷாக்கின் பின்னணி இசையில் ரஹ்மானின் சாயல் நிறையவே தென்படுகிறது.

என்னதான் பிளாஷ்பேக் உத்தியைப் பயன்படுத்தி கதை சொன்னாலும், இடைவேளைக்குப் பின் திரைக்கதை நகர்வதில் தொய்வு அதிகம்.  அதனால், பெரும்பாலான இடங்களை வசனங்களே நிரப்புகின்றன. அவை சர்ச்சைக்குரிய வகையிலேயே எழுதப்பட்டிருக்கின்றன.

ஆப்கானிஸ்தானின் பஷ்டூன் நகரிலுள்ள ஒரு வீட்டினுள் நுழையும்போது, அங்கு சிதார் போன்ற ஒரு இசைக்கருவியைப் பார்க்கிறார் நாயகி. ‘இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுபவர்கள் இசை போன்ற கலைகளுக்கு முக்கியத்துவம் தரலாமா’ என்று அவர் கேட்க, ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இப்படித்தான் நாங்கள் வாழ்கிறோம் என்று பதில் சொல்கிறார் அந்த வீட்டின் தலைவி. ‘தி கேரளா ஸ்டோரி’ பேசும் விஷயங்கள் எந்த அளவுக்குச் சர்ச்சைக்குரியவை என்பதற்கான குறைந்தபட்சப் பதம் இதுவே. அதேநேரத்தில், நாடகத்தனமான பாத்திரப் படைப்பும் செயல்பாடுகளும் சீரியல் பார்க்கிறோமோ என்ற உணர்வை ஏற்படுத்துவதையும் மறுக்க முடியாது.

கிளம்பும் பூதம்!

fCZAPnyU-image-1024x576.jpg

காஷ்மீரில் வாழ்ந்த பண்டிட் சமூகத்தினர் வெவ்வேறு இடங்களுக்குக் குடிபெயர்ந்ததை, அதன் பின்னணியில் இருந்த அரசியல் சூழலைப் பேசியது ‘தி காஷ்மீர் பைல்ஸ்’. அப்படத்தில் இஸ்லாமிய வெறுப்பு என்பது நேரடியாகக் காட்டப்படவில்லை. சினிமா மொழியை மிகச்சீரிய வகையில்  அப்படம் கைக்கொண்டிருந்ததும் அதற்கொரு காரணம். ஆனாலும், விமர்சகர்களின் நுண்ணிய அவதானிப்பினால் அதற்கெதிரான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

மாறாக, அதைவிடப் பல மடங்கு எதிர்ப்பை நிறைத்தவாறு வெளியாகியிருக்கிறது ‘தி கேரளா ஸ்டோரி’. மிக நேரிடையாக, பிரசாரத் தொனியில் படத்தின் திரைக்கதை வசனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்துத்துவத்தை வெளிப்படுத்துவதாக மட்டுமல்லாமல், பொதுவுடைமைச் சித்தாந்தங்களால் இந்து மதத்தைச் சார்ந்த இளைய தலைமுறையினர் புராண இதிகாசங்களைக் கொஞ்சமும் அறியாதவர்களாக வளர்கின்றனர் என்று குற்றம்சாட்டுகிறது ‘தி கேரளா ஸ்டோரி’.

படத்தின் முடிவில், சம்பந்தப்பட்ட பாத்திரங்கள் கற்பனையல்ல என்று சொல்லும் வகையில், சம்பந்தப்பட்ட மனிதர்களின் கருத்துகளாகச் சில விஷயங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதனாலேயே, இப்படத்தில் கதை சொல்லப்பட்ட விதம் ’அமைதியின்மை’ எனும் பெரும்பூதத்தைத் தட்டியெழுப்பும் வகையில் உள்ளது.

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்க்கும் நோக்கில் கேரளாவில் இளம்பெண்கள் மதமாற்றம் செய்யப்படுவதாக வெளியான செய்திகளைப் பின்னணியாகக் கொண்டுள்ளது இப்படம். வழக்கமான கமர்ஷியல் படங்களில் கையாளப்படுவது போன்று இக்கருவைப் பெரிதாக சர்ச்சைகள் உருவாகாத வகையில் திரைக்கதை ஆக்கியிருக்க முடியும். அதைத் தவிர்த்து, நேரடியாக மத அரசியலை முன்னெடுத்திருப்பதுதான் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. இந்த படத்தை இந்தியச் சமூகம் எப்படி கடந்து செல்லப் போகிறது எனும் கேள்வியைப் பூதாகரமாக்கியிருக்கிறது. 

உதய பாடகலிங்கம்

 

https://minnambalam.com/cinema/the-kerala-story-review/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.