Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பயங்கரவாத சுலோகத்தைப் பயன்படுத்தி ஐ.நா.வில் உரிமை மீறல்கள் நியாயப்படுத்தப்படப் போகிறதா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாத சுலோகத்தைப் பயன்படுத்தி ஐ.நா.வில் உரிமை மீறல்கள் நியாயப்படுத்தப்படப் போகிறதா?

-பீஷ்மர்-

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஐ.நா.வின் 62 ஆவது கூட்டத் தொடர் ஆரம்பமாகும் பொழுது (இலங்கை தமிழ் வானொலி சேவைப் பணிப்பாளரின் சாத்திரீய மொழியில் கூறினால் கௌரவ அதிமேதகு) ஜனாதிபதி அவர்கள் 7 நிமிடங்களுக்கு உரையாற்றவுள்ளார். இந்த வாய்ப்பு இதற்கு முன்னிருந்த எந்த ஜனாதிபதிக்கும் கிடைக்காததொன்று என இலங்கை வெளிநாட்டு அமைச்சு கூறுவதை பலர் குறிப்பிட்டு காட்டியுள்ளனர்.

உரையாற்றப் போகும் 7 நிமிடங்களில் எந்த விடயத்தைப் பற்றி பேசப் போகின்றார் என்பது பற்றி தனது ஊகத்தை முன்வைத்துள்ள ராய்ட்டர் செய்தி நிறுவனம் இது பற்றிய செய்தி குறிப்புரையில் ஜனாதிபதி அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு தன்பக்கத்து நியாயத்தை எடுத்துக் கூறும் வகையில் இலங்கையில் நடப்பது மனித உரிமை மீறல்கள் அல்லவென கூறுவார் என்றும் அதனை அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் சுலபமாக ஏற்றுக்கொள்ளப் போவது இல்லையென்று கூறியுள்ளது.

இலங்கையில் நடப்பவை பெரும்பகுதி படையினராலும் விடுதலைப் புலிகளாலும் மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்களே என்பதில் எவ்வித சந்தேகமுமற்ற வகையில் அமெரிக்கா, ஐரோப்பாவைச் சார்ந்த மனித உரிமை நிறுவனங்கள் அறிக்கைகள் வெளியிட்டுள்ளன. கிழக்கின் வெற்றியைத் தொடர்ந்து வடக்கில் இராணுவ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டாம் என்பதில் இந்தியா கூட சிரத்தை காட்டுவதாக கூறப்படுகின்றது.

ஜனாதிபதி ஐ.நா.வில் உரையாற்றும் பொழுது அமெரிக்கா பிரிட்டனில் முதன்மைப்படுத்தி கூறப்படும் பயங்கரவாதத்தையே தனது கேடயமாக பயன்படுத்த போகிறார் என்பது நிச்சயம். அமெரிக்காவில் 9/11 ஐயும் அல் - ஹைடா பிரகடனங்களையும் சர்வதேசிய பயங்கரவாதம் என்று கண்டிப்பதன் மூலம் உலகில் எங்கெல்லாம் ஆயுதம் தாங்கிய பலாத்கார எதிர்ப்பு காணப்படுகின்றதோ அவற்றை பயங்கரவாதம் என்று சொல்வது ஓர் வாய்ப்பாடாகிவிட்டது.

பயங்கரவாதம் என்பது யாது அதன் நடைமுறைகள் யாவை பயங்கரவாதம் ஏன் தோன்றுகின்றது என்பது போன்ற பின்புல விடயங்களை பற்றியெல்லாம் கவனிக்காது பயங்கரவாதம் என்னும் தொடர் இன்று உலக அரங்கிலே பயன்படுத்தப்படுகின்றது என்பதையும் மறந்துவிடமுடியாது.

இலங்கையைப் பொறுத்தவரையில் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட பல நடவடிக்கைகள் உலகப் பொதுவான நிலையில் கண்டனக் குரல்களை கிளப்பியுள்ளன என்பதையும் மறந்துவிடமுடியாது.

இலங்கை தமிழர்கள் எதிர்நோக்கியுள்ள பிரதான பிரச்சினை. விடுதலைப் புலிகளை கண்டிக்கும் தோரணையில் விடுதலைப் புலிகளின் தோற்றத்துக்கான உரிமை பிரச்சினை கவனிக்காமல் விடப்படுவதேயாகும். இந்த நிலையிலே தான் சர்வதேச மட்டத்திலே கிளப்பப்பெறும் கண்டன குரல்களுக்கும் இலங்கையில் அக்கண்டன விடயப் பொருள் பயன்படுத்தப்படுவதற்குமுள்ள சிக்கல்பாட்டைக் காணலாம்.

சென்ற வாரம் ஜனாதிபதியின் சகோதரரான பாதுகாப்பு செயலாளர் கூறியுள்ள கூற்றுக் கவனிக்கப்பட வேண்டியது ஒன்றாகும். கிழக்கில் நடந்ததைப் போன்று வடக்கிலும் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னரே அரசியல் தீர்வு முன்வைக்கப்படும் என்ற கருத்துப்பட அவர் கூறியுள்ளமையை சற்று நிதானமாக ஆராய வேண்டியது அவசியமாகும்.

வன்னி மீது படையெடுப்பு என்று இதன் மூலம் கூறியுள்ளாரா என்ற வினா எதிரொலித்துக் கொண்டிருக்கின்றது. முல்லைத்தீவின் மீது நடத்தப்படுகின்ற விமானத் தாக்குதல்கள், நாகர் கோவிலில் சண்டைகள் ஆகியன இன்னொரு நிலையில் பார்க்கின்ற பொழுது யுத்தம் தொடங்கிவிட்டது என்பதையே காட்டுகின்றதென்று கொள்ளவேண்டியுள்ளது.

சிங்கள ஊடகங்களில் இத்தாக்குதல்கள் எடுத்துக் கூறப்படும் முறையினை பார்க்கும்பொழுதும் கேட்கும்பொழுதும் அதில் பிரதானப்பட்டு இருப்பது விடுதலைப்புலிகளின் பலம் படிப்படியாக அழிக்கப்படுவது என்பதேயாகும்.

இப்பொழுது ஜே.வி.பி. ஒளிவு மறைவின்றி பயங்கரவாதத்தை அழித்ததன்பின்னரே அரசியல் தீர்வு பற்றி பேசவேண்டும் என்று கூறுவதன் மூலம் இத் தாக்குதல்களை நியாயப்படுத்தியுள்ளது. (ஜே.வி.பி. சந்திரசேகரனின் குரல் அண்மையில் ஒலிப்பது இல்லையே). அது எக்காலத்திலும் `ரணவிரு'க்களின் புகழை எடுத்துக் கூறுவதேயாகும்.

உண்மையில் அரசாங்கத்தைப் பொறுத்த வரையில் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. அதனைப் பற்றி திரும்பத் திரும்ப பேசுவதில் பயனில்லை. இப்பொழுது தமிழ் மக்கள் முன்னுள்ள கேள்வி யாதெனில் இந்த நிலைமை பற்றி தமிழ் மக்கள் செய்ய வேண்டியது என்ன என்பதாகும். துரதிர்ஷ்டவசமாக இந்த விடயம் பேசப்படாமலே இருக்கின்றது.

யார் யார் இதைப் பேசலாம் என்பது முக்கியமான விடயமாகும். இந்த விடயத்தில் இரண்டு முக்கிய சக்திகளின் சேவை அவசியம் மாத்திரமல்ல இன்றியமையாததாகும். ஒன்று, புகலிடத் தமிழர்களின் குரல். இரண்டாவது நமது தமிழ் எம்.பி.க்களின் குரல்.

இரண்டாவதை முதலில் எடுத்துக் கொள்வோம். சம்பந்தன் முதல் ஷ்ரீகாந்தா வரை சிவாஜிலிங்கம் முதல் ஜெயானந்தமூர்த்தி வரை இதுவரை மிகவும் சிறப்பாகவே தொழில்பட்டுள்ளனர். குறிப்பாக தமிழகத்துக்கு எமது பிரச்சினை எடுத்துச் சென்ற வகையில் ஸ்ரிகாந்தா, சிவாஜிலிங்கம் ஆகியோர் பெரிதும் நன்றி உடையவர்கள்.

ஆனால், இப்பொழுது அவர்களின் குரல் மேலும் மேலும் மேலதிக அழுத்தத்துடன் ஒலிக்க வேண்டிய தேவையுள்ளது. உண்மையில் பாராளுமன்றம் மூலம் சிங்கள மக்களுக்கு, தமிழ் மக்களுக்கு இடம்பெறும் விடயங்களை எடுத்துக்கூற வேண்டியுள்ளது.

சாதாரண சிங்கள ஊடகங்களைப் பார்க்கின்ற பொழுது மூச்சே விடுவதில்லை. முன்னர் ராவய ஓரளவு பேசியது. ஆனால், ராவயவும் தற்போது பேசுவது இல்லை. இத்தகைய சூழலில் இடது சாரி ஊடகங்களை பயன்படுத்துவது தவிர்க்க முடியாததாகின்றது.

தமிழ் எம்.பி.க்கள் இந்த வேண்டுகோளை தவறாக விளங்கக் கூடாது. ஏனெனில் இது காலத்தின் தேவையாகும்.அப்பொழுது தான் சேவை நிறைவுபெறும்.புகழிடத் தமிழர்கள் இந்த விடயம் பற்றி மிகுந்த செயற்றிறனுடன் செயற்படவேண்டும்.

மேற்குலக ஊடகங்களுக்கு அவ்வவற்றின் உள்ளூர் நிலையில் புகலிட மக்களின் ஊக்கம் பல செய்திகளைக் கொண்டு செல்ல உதவும். சென்ற இடங்களில் எல்லாம் நம்மவர் நடத்தும் தமிழ் வானொலிகளிலும் பத்திரிகைகளிலும் எழுதுவதால் பெரிதும் இலாபம் ஏற்படப்போவதில்லை.

அந்த நாட்டு வானொலி மற்றும் பத்திரிகைகளிலும் செய்திகள் வரவேண்டும். அவற்றுக்கான ஒழுங்கமைப்பு இன்று வரை ஏற்பட்டதாக தெரியவில்லை. இவையாவற்றுக்கும் மேலாக அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை பற்றி உண்மைகளை இலங்கைத் தமிழ் மக்களுக்கு சரியான வகையில் எடுத்துக் கூறுவதற்கான ஒழுங்கு முறை அவசியம்.

இலங்கை தமிழ் மக்களின் பதிற்குறிகள் சரிவர தெரியாத வகையில் ஐ.நா.வில் மாத்திரம் அல்ல எங்குமே தமிழர் பற்றிய உண்மைக்குப் புறம்பான விடயங்களை எடுத்துக் கூறலாம். கேட்பவர்களும் நம்பிவிடுவார்கள்.

-தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.