Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1295821.jpg  
 

‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்துக்குப் பிறகு பா.ரஞ்சித்தும், ‘பொன்னியின் செல்வன்’ படத்துக்குப் பிறகு விக்ரமும் இணைந்துள்ள படம் ‘தங்கலான்’. இரண்டு பேருக்குமே ஒரு பேர் சொல்லும் வெற்றி அவசியமாக இருந்த நிலையில், விக்ரமின் கெட்டப், ஜி.வி.பிரகாஷின் பாடல்கள், விறுவிறுப்பான ட்ரெய்லர் என இப்படத்துக்கான எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறியிருந்தது. நீண்ட நாட்களாக இறுதிகட்ட பணிகளில் இருந்த ‘தங்கலான்’ ஒருவழியாக திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

கதை 17-ஆம் நூற்றாண்டில் தொடங்குகிறது. வட ஆற்காட்டில் பண்டைய அரசர்கள் பிடுங்கிக் கொண்ட நிலங்களில் இருந்து எஞ்சிய இடத்தில் விவசாயம் செய்து வரும் ஒரு சிறிய பூர்வக்குடி இனக்குழுவின் தலைவன் தங்கலான் (விக்ரன்). மனைவி கங்கம்மாள் (பார்வதி), குழந்தைகள் என வாழ்ந்து வரும் தங்கலான், பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக இப்போதைய கோலார் பகுதியில் தன்னுடைய மூதாதையர்கள் தங்கம் எடுத்துக் கொண்டிருந்ததையும், சிற்றரசன் ஒருவனின் பேராசையால் அவர்கள் தூண்டப்பட்டு, அப்பகுதியின் காவல் தேவதையாக விளங்கும் ஆரத்தி (மாளவிகா மோகனன்) என்ற பெண்ணால் தடுக்கப்பட்டதையும் கதையாக தன் குழந்தைகளுக்கு சொல்கிறார்.

இன்னொருபுறம் ஜமீன்தார் ஒருவரால் எஞ்சியிருக்கும் நிலமும் அபகரிக்கப்பட்ட நிலையில், தங்கலானின் குழுவினருக்கு உதவ முன்வருகிறார் க்ளெமென்ட் என்ற வெள்ளைக்காரர். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தங்கலானின் மூதாதையர்கள் எடுத்த அதே பகுதியில் தனக்கு தங்கத்தை எடுத்துக் கொடுத்தால், அதில் பங்கு தருவதாக உறுதியளிக்கிறார். இதற்கு ஒப்புக் கொள்ளும் தன்னுடைய கூட்டத்தில் இருந்த சிலரை அழைத்துக் கொண்டு அந்த வெள்ளைக்காரர்களுடன் புறப்படுகிறார். செல்லும் வழியில் அவர்களுக்கு ஏற்படும் இடையூறுகள் என்னென்ன? அவர்களுக்கு தங்கம் கிடைத்ததா என்பதே படத்தின் திரைக்கதை.

தலித் பூர்வக்குடி மக்களின் ரத்தத்திலும் வியர்வையிலும் உருவான கோலார் தங்க வயலின் மறைக்கப்பட்ட வரலாற்றை தொன்மக் கதைகள் வழியே கற்பனை கலந்த ஒரு ஃபேன்டசி படைப்பாக கொடுத்துள்ளார் பா.ரஞ்சித். சாதிய ஒடுக்குமுறையையும், நில அரசியலையும் ரஞ்சித்தின் முந்தைய படங்களை விட ‘தங்கலான்’ ஒருபடி மேலே சென்று மிக அழுத்தமாகவே பதிவு செய்திருக்கிறது.

 

 

வரலாற்றின் பக்கங்களில் இருந்து பவுத்தம் மெல்ல அழிக்கப்பட்டது, அரசர்களுக்கு பின்னால் வந்த ஜமீன்தார்கள் நிலங்களை வஞ்சித்து பிடுங்கியது, தாய் வழிச் சமூகங்கள் பற்றிய குறியீடுகள் கதையின் ஓர் அங்கமாய் தங்கலானின் பயணத்தினூடே வழிநெடுக வந்துகொண்டிருக்கின்றன. முதல் பாதி முழுவதும் ரஞ்சித்தின் நேர்த்தியான திரை மொழி வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது,

 

ஆனால், படத்தின் மிகப் பெரிய பிரச்சினை இரண்டாம் பாதியில் இருந்துதான் தொடங்குகிறது. வெள்ளைக்காரர்களுடன் சேர்ந்து தங்க வேட்டைக்கு புறப்படுவது வரை சுவாரஸ்யமாக செல்லும் படம், அதன் பிறகு தங்கலானின் பயணம் தொடங்கிய பிறகு ஒரு சுழலில் சிக்கிக் கொண்டதைப் போல திரும்ப திரும்ப திரும்ப, எத்தனை முறை என்றே கணிக்க முடியாத அளவுக்கு, காட்சிகள் ரிப்பீட் ஆகிக் கொண்டே இருக்கின்றன.

நடிப்பில் விக்ரம் அசாத்திய உழைப்பைக் கொட்டியிருக்கிறார். அர்ப்பணிப்பு என்ற வார்த்தை கூட குறைவுதான். அந்த அளவுக்கு அபாரமான உடல்மொழியும், உழைப்பும் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு பெரும் பாய்ச்சல். அவருக்கு ஈடுகொடுக்கும் வகையில் அதகளம் செய்திருக்கிறார் பார்வதி. முரட்டுத்தனம் கொண்ட தங்கலானையே மிரட்டும் கங்கம்மா தமிழின் மறக்கமுடியாத பெண் கதாபாத்திரமாக பேசப்படும். பசுபதி, மாளவிகா மோகனன் என அனைவரும் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

படத்தின் இன்னொரு ஹீரோ என்றால் அது சந்தேகமே இன்றி ஜி.வி.பிரகாஷ்தான். படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை மிரட்டியிருக்கிறார். பாடல்கள், பின்னணி இசை இரண்டுமே படத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறது. சலிப்படையச் செய்யும் பல காட்சிகளில் படத்தை காப்பாற்றுவது ஜி.வி.யின் பின்னணி இசைதான். படத்தின் மற்றொரு பலம், கிஷோர் குமாரின் ஒளிப்பதிவு, தங்க வயல், பூர்வக்குடிகளின் வறண்ட பூமி, என ‘ரா’வாக காட்சிப்படுத்தி ஸ்கோர் செய்துள்ளார்.

கலை இயக்கம், ஸ்டன்ட் உள்ளிட்ட அம்சங்களில் படக்குழுவின் அசாத்திய உழைப்பு தெரிகிறது. உதாரணமாக, படத்தின் ஆரம்பத்தில் விக்ரம் - மாளவிகா மோகனன் மோதும் காட்சி சிலிர்ப்பனுபவம்.

17237130221138.jpg

இரண்டாம் பாதியில் தங்கத்தை எடுக்க முயற்சிப்பது, அதனை மாளவிகா மோகனன் தடுக்க முயல்வது, இவை ஏன் திரும்ப திரும்ப வந்து கொண்டே இருக்கின்றன என்று தெரியவில்லை. காட்சிகள் ஒரு முடிவே இல்லாமல் இலக்கின்றி நகர்வது கடும் சலிப்பை தருகிறது. க்ளைமாக்ஸ் இப்போது வரும், இதோ வந்துவிட்டது, இதுதான் க்ளைமாக்ஸ் என ஒவ்வொரு காட்சியிலும் யோசிக்க வேண்டியிருக்கிறது. அந்த அளவுக்கு இழுத்துக் கொண்டே சென்றிருக்க தேவையில்லை.

க்ளைமாக்ஸ் கடைசி 15 நிமிடங்கள் அபாரமாக படமாக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு முந்தையக் காட்சிகள் ஏற்படுத்திய சலிப்பால் அது முற்றிலுமாக எடுபடாமல் போவதை தவிர்க்க முடியவில்லை.

யாரும் இதுவரை பேசத் துணியாத ஒரு வரலாற்றை எடுத்துக் கொண்டு, அதில் தொன்மம், வாய்வழிக் கதைகள் அடிப்படையிலே ஃபேன்டசியாக கொடுக்க முயன்றிருக்கிறது படக்குழு. முதல் பாதியில் இருந்த சுவாரஸ்யம் இரண்டாம் பாதியிலும் இருந்திருந்தால் தமிழின் தவிர்க்க முடியாத ஒரு கிளாசிக் படைப்பாக ஆகியிருக்கும் இந்த ‘தங்கலான்’.

தங்கலான் Review: பா.ரஞ்சித் - விக்ரமின் ‘வரலாற்றுப் புனைவு’ தரும் தாக்கம் என்ன? | Thangalaan Movie review - hindutamil.in

 

  • கருத்துக்கள உறவுகள்

தங்கலான் : விமர்சனம்!

christopherAug 15, 2024 18:27PM
WhatsApp-Image-2024-08-15-at-17.20.39_6e

இயக்குநர் பா.ரஞ்சித் என்றதும் சமூக நீதி அரசியல், ஒடுக்கப்பட்டோரின் குரல், தலித் அரசியல் என அவர் பேசிக்கொண்டிருக்கும் பல்வேறு விஷயங்கள் மனதில் தோன்றும். ஒரு தேர்ந்த அரசியல் தெளிவு கொண்ட இயக்குநர் பா. இரஞ்சித்.

இவர் குறித்து இயக்குநர் வெற்றி மாறன் கூறும்போது “பா. இரஞ்சித் ஒரு தெளிவான அரசியல்வாதி . அதனால் தான் அவரது படங்களில் சிறிதளவும் அரசியல் தவறுகள் தெரிவதில்லை” எனக் கூறியுள்ளார்.

ஆனால், இந்த சித்தாந்தங்கள் எல்லாம் கடந்து பா.இரஞ்சித் எனும் சிறந்த கலைஞனின் படைப்புகள் கலை ரீதியாகவும் மிக முக்கியமானவைகளாக உள்ளன.

குறிப்பாக, பா. இரஞ்சித் இடம் உலகப் புகழ்பெற்ற கலை இலக்கிய கோட்பாடான ‘மாய எதார்த்தவாதம்’ குறித்த மிகுந்த ஆர்வம் இருந்ததை பல்வேறு இடங்களில் பார்த்திருக்க முடியும். ‘குதிரைவால்’ போன்ற படங்களை அவர் தயாரித்ததற்கு காரணமும் அதுவே. தற்போது வெளியாகியுள்ள ‘ தங்கலான் ‘ திரைப்படத்தில் அதன் வெளிப்பாடு மிக அதிகமாகவே தெரிந்ததைக் காண முடிந்தது.

Thangalaan review: Vikram delivers a spellbinding performance in this Pa Ranjith film - Hindustan Times

ஒன்லைன்:

கர்நாடகா எல்லையில் உள்ள கோலார் பகுதியில் இருக்கும் தங்க சுரங்கத்தை தேடிக் கண்டுபிடிக்க விக்ரம் மற்றும் அவரது கிராமத்தினரை நாடுகிறார் ஆங்கிலேயரான டேனியல். சொந்த நிலத்தில், பண்ணை அடிமையாக இருப்பதற்கு வெள்ளைக் காரனிடம் தகுந்த கூலிக்கு வேலை செய்யலாம் என நினைத்து ஊர் மக்களுடன் உதவி செய்ய ஒப்புக் கொள்கிறார் விக்ரம். ஆனால், அந்தப் பகுதியை ‘ ஆரத்தி ‘ என்கிற வனதேவதை காத்து வருகிறாள் என்பது அந்த ஊர் மக்களின் நம்பிக்கை. ஆக, விக்ரம் தன் மக்களின் துணையோடு சுரங்கத்தை கண்டுபிடித்தாரா? யார் அந்த ‘ஆரத்தி’ ? எதற்காக அந்த தேவதை இந்தத் தங்க சுரங்கத்தைக் காக்க வேண்டும் போன்ற விஷயங்களைச் சொல்வதே ‘தங்கலான்’ திரைப்படத்தின் கதை.

அனுபவ பகிர்தல்:

இந்தப் படத்தைப் பார்த்து முடிக்கும் போது, தொழில் நுட்ப ரீதியாக தமிழ் சினிமாவின் ஓர் மிகச் சிறந்த படத்தைப் பார்த்த அனுபவம் நமக்கு கிடைத்தது. அதற்குக் காரணம் ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, படத்தொகுப்பு மற்றும் சரியான நடிகர் தேர்வு. இவை அனைத்தும் அந்த வாழ்வியலை நாம் அப்படியே நேரில் காணும் ஒரு உணர்வை நமக்குள் ஏற்படுத்துகிறது.

படத்தில் வரும் சில அரசியல் மற்றும் வரலாற்று சார்ந்த குறியீடுகள் நமக்கு சுவாரஸ்யம் தந்தது. அவை குறித்து மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வத்தையும் உருவாக்கியது.

தமிழ் சினிமாவிற்கு மிகவும் புதிதான மாய எதார்த்தவாத திரை மொழியில் ஒரு வரலாற்று கதையை பார்க்கும் அனுபவம், படத்தின் பல கூறுகளை ஆழ்ந்து சிந்தித்து, விவாதிக்க தூண்டுகிறது.

ஜீவி பிரகாஷின் பின்னணி இசை மற்றும் படத்தின் ஒலிப்பதிவு சேர்ந்து இயக்குநர் நினைக்கும் உணர்வை நமக்குக் கடத்துகிறது. இந்தப் படத்தை நல்ல ஒலிவசதி உள்ள திரையரங்கில் பார்த்தல் நன்று.

WhatsApp-Image-2024-08-15-at-17.20.10_e5

விரிவான விமர்சனம்:

படத்தின் முதல் காட்சியிலேயே நம்மை அந்தக் கதை உலகிற்குள் அழைத்து செல்கிறார் பா.இரஞ்சித். இதற்கு முக்கியக் காரணம் நேர்த்தியான தொழில் நுட்பம், நடிகர்களின் இயல்பான நடிப்பு. நடிகர் விக்ரம், தான் ஏற்ற கதாபாத்திரத்தை மிக சிறப்பாக நடித்துள்ளார் எனக் கூறுவதோ, எழுதுவதோ புதிதான விஷயம் அல்ல. அந்த அளவிற்கு தனது நடிப்பாற்றலின் உச்சத்தை ஏற்கனவே நிரூபித்துள்ளார் விக்ரம். இந்தப் படத்தின் அவரது உடல்மொழி, பாவனை, வசன உச்சரிப்பு என அனைத்தும் கச்சிதம் என்பதைத் தாண்டி சர்வதேச தரம் என்று தான் சொல்ல வேண்டும்.

அவர் மட்டுமின்றி படத்தில் நடித்த பார்வதி, கணவனிடத்து அதிகாரம் காட்டுவது, பின் கொஞ்சிக் கொள்வது என அந்த வாழ்வியல் சார்ந்த பெண்ணாகவே தன்னை வெளிப்படுத்தியுள்ளார். அதிலும் குறிப்பாக, முதன் முதலாய் ரவிக்கை கட்டும் போது அவர் உடல் எவ்வாறு உணர்ந்தது என்பது வரை நமக்கு பாவனைகளில் கடத்துகிறார்.

படத்தில் நடித்த ஹரி கிருஷ்ணன், பிரீத்தி கரண், அர்ஜுன் போன்ற நடிகர்களின் திறமைக்கு இதையடுத்து நிச்சயம் தகுந்த பாத்திரங்கள் அவர்களை வந்து சேர வேண்டும். படத்தில் பல கதாபாத்திரங்கள் இருந்தாலும், நம்மை பெரிதும் கவர்ந்தது பசுபதியின் கதாபாத்திரம் தான். அந்தக் கதாபாத்திரம் எழுதப்பட்டிருந்த விதம், பசுபதியின் நடிப்பு என அனைத்தும் நம்மால் ரசிக்க முடிந்தது.

இன்னும் சொல்லப் போனால் படத்தின் முதன்மை கதாபாத்திரம் ஒரு விஷயத்தை செய்து முடிக்கும் போது கூட நமக்கு வராத உணர்ச்சி, பசுபதி கதாபாத்திரம் இன்னோரு பாத்திரத்தை அடிக்கும் போது ஏற்படுகிறது.

ஆரத்தியாக வரும் மாளவிகா மோகனன், சண்டைக் காட்சிகளில் மிகவும் கடினமாக உழைத்தது தெரிகிறது.

நடிகர்களின் நடிப்பு இவ்வளவு நேர்த்தியாக வெளிப்பட்டதற்கு மற்றொரு காரணம் கிஷோரின் ஒளிப்பதிவு. குறிப்பாக விக்ரம் – பார்வதி காதல் காட்சி, விக்ரம் கம்பீரமாக வந்து நிற்கும் ஒரு சண்டைக் காட்சி என பல்வேறு காட்சியை மெருகூட்டுவது ஒளிப்பதிவு தான்.

தலை இல்லா புத்தர் சிலை, ஆடை அரசியல், நிலத்தின் அரசியல், சாதி அரசியல் என இரஞ்சித் பேசும் அனைத்து விஷயங்களையும் படத்தின் சின்னச் சின்னக் கூறுகளாக வைத்தது இரஞ்சித்திடம் எப்போதும் இருக்கும் தனிச் சிறப்பே.

ஆனால், படத்தின் முதன்மை கதாபாத்திரம் முதல் பசுபதி பாத்திரம் தவிர்த்து எந்த கதாபாத்திரத்துடனும் நம்மால் ஒட்ட முடியவில்லை. படத்தின் முதல் பாதி வரை எந்த ஒரு ஒட்டுதலும் இல்லாமல் நகரும் திரைக்கதை இரண்டாம் பாதியில் இருந்து விறுவிறுப்பாகிறது.

படத்தில் பேசப்படும் மாய எதார்த்தாவாதம் தமிழ் சினிமாவிற்கு மிகப் புதுமையானது என்பதால் படத்தின் மைய சித்தாந்தத்திற்கே எதிரான சில புரிதலை மக்களுக்குக் கடத்த நேரிடுமோ என்கிற எண்ணம் சற்றுத் தோன்றியது.

எதார்த்தவாதத்தில் இருக்கும் சமூக நீதிக் கோட்பாடு, வரலாற்று கொடுமைகள் போன்ற விஷயத்தை மாய எதார்த்தவாத கதை சொல்லல் முறை கொண்டு சொல்ல வினைந்தது சரியாக ஒன்று சேரவில்லை.

ஆக, படத்தின் பல காட்சிகள் பார்வையாளர்களோடு ஒட்டாமல் நகர்கிறது. அடுத்தடுத்த படத்தின் முக்கிய கதாபாத்திரங்களின் மரணங்களும் நம்மைப் பெரிதாக பாதிக்கவில்லை. படத்தின் பல்வேறு கூறுகள் கலை ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் ஆய்வு செய்து பார்க்கக் கூடிய அளவிற்கு படைத்திருந்தாலும் அதில் இருக்கும் சுவாரஸ்ய குறைவு நம்மை நெருடுகிறது.

மொத்தத்தில் இந்த ‘ தங்கலான் ‘ நமக்குத் தரும் புது அனுபவத்தை கொஞ்சம் சுவாரஸ்யம் சேர்த்து நேர்த்தியான திரைக்கதையோடு தந்திருந்தால் மிகச் சிறந்த திரைப்படமாக இருந்திருக்கும். இருந்தாலும், இந்தத் திரைப்படம் தரும் அனுபவத்திற்காக நிச்சயம் அனைவரும் திரையரங்கில் பார்க்க வேண்டிய ஒரு திரைப்படம் தான்.

 

https://minnambalam.com/cinema/pa-ranjith-and-vikaram-thangalan-movie-review/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.