Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் கண்ட பகல் கனவு!

சுமந்திரன் கண்ட பகல் கனவு!

  — அழகு குணசீலன் —

பொதுத்தேர்தல் களநிலவரங்களின்படி ஜனாதிபதி திசாநாயக்கவுக்கு பாராளுமன்றத்தில் எதிரணியின் ஆதரவு தேவைப்படும் என்பது வெளிச்சமாகிறது. இதற்கு சிங்கள, சோனக தரப்பில் இருந்து ஆதரவைப்பெறுவதற்கு அவர்  முன்னுரிமை வழங்கவில்லை. மாறாக தமிழ்தரப்பின் தமிழ்த்தேசிய, இணக்க அரசியல் பலவீனத்தை பயன்படுத்தி ஆதரவைப் பெறுவது இலகுவானது என்று கருதி இருக்கக்கூடும். அதேவேளை ஒரு தரப்பில் மட்டும் தங்கியிருக்காமல் இரண்டு தரப்புக்களுக்கும் நம்பிக்கையை கொடுத்து வீடு இல்லையென்றால் வீணை என்ற நிலையில் தான் அநுரவின் நகர்வுகள் அமைந்திருக்கின்றன.

    தன்னை வந்து சந்தித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மதியாபரணம் சுமந்திரனுடனும், முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடனும் ஜனாதிபதி என்ன பேசினார் என்பது அவர்களுக்குத்தான் வெளிச்சம். ஆனால் தெற்கில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் தான் வடக்கு தமிழ்தலைவர்களுடன் பேசுகிறேன், தொடர்பில் இருக்கிறேன் என்று ஜனாதிபதி அநுரகுமார பேசியிருந்தார். அவரின் இந்த பேச்சை அல்லது ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து படம் எடுத்துக்கொண்ட போது இடம்பெற்ற கருத்துப் பரிமாற்றத்தை தமிழ் அரசியல் வாதிகள் அரைகுறையாக விளங்கிக்கொண்டு அல்லது தங்கள் விருப்பத்திற்கு அதற்கு அர்த்தம் கற்பித்து பூனையை ஆனையாக்கி  தங்களை அமைச்சராக கனவு கண்டிருக்கிறார்கள் என்றே கொள்ளவேண்டி உள்ளது. 

அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கிறோம் என்று இவர்கள் சொன்னதன் அர்த்தம் அநுரவுக்கு இப்போதுதான் புரிந்திருக்கிறது. 

இதுவும் ஆதரவுக்கு சாராயத்தவறணை கேட்டதுபோல் அமைச்சர் பதவி கேட்டல். 

இது ஊழலா? இல்லையா? என்.பி.பி.யிடம் தான் கேட்கவேண்டும்.

சுமந்திரன், டக்ளஸை அநுர நம்புவதற்கு வெறுமனே பாராளுமன்ற இடைவேளை இலைக்கஞ்சி  மற்றும் தனிப்பட்ட சந்திப்பும் -உரையாடலும் மட்டும் காரணமல்ல. அதற்கும் மேலாக காரணங்கள் உண்டு.

என்.பி.பி.யின் அல்லது ஜே.வி.பி.யின் ஈழப்போர் குறித்த நிலைப்பாட்டிற்கும்,  இவர்கள் இருவரின் நிலைப்பாட்டிற்கும், அநுரகுமார திசாநாயக்கவின் நிலைப்பாட்டிற்கும் முக்கிய அம்சங்களில் வேறுபாடு இல்லை. விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டத்தை சுமந்திரனும், டக்ளசும் பயங்கரவாதப்போராட்டம் என்பவர்கள். புலிகள் பயங்கரவாதிகள் என்பவர்கள். இறுதியுத்தத்தில் நடந்தது இனவழிப்பு அல்ல என்பவர்கள். சர்வதேச போர்க்குற்ற விசாரணை தேவையற்றது அல்லது அதை சர்வதேச நீதிமன்றத்தில் நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை என்பவர்கள். இதன் மூலம் மறைமுகமாக இராணுவம் தண்டிக்கப்படாத உள்ளக பொறிமுறைக்கு ஆதரவு வழங்குபவர்கள். ஒட்டு மொத்தத்தில் அநுரகுமாரவின் கடந்த காலத்தை  மறைக்க அவர் இனவாதியல்ல என்றும் வெள்ளையடிப்பவர்கள். 

மறு பக்கத்தில் அமைச்சரவையில் ஒரு தமிழரையாவது வைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் பிராந்திய, சர்வதேச பூகோள அரசியலில் ஜனாதிபதிக்கு உள்ளது. அண்மைக்காலமாக தேர்தல் பிரச்சார கூட்டங்களில் சுமந்திரன் அமைச்சர் பதவி பற்றி வெளிப்படையாக பிரஸ்தாபிக்கிறார். அமைச்சர் பதவியையிட்டு பரிசீலிக்க தயாராக இருப்பதாக பல தடவைகள் அறிவித்துள்ளார். அது பற்றி ஊடகவியலாளர்கள் கேட்கும் போது புளகாங்கிதம் அடைகிறார். ஜே.வி.பி. யாழ்.மாவட்ட அமைப்பாளர் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவரை அழைத்து வந்து யாழில் ஊடகச்சந்திப்பு நடாத்தி  இவர்களின் பிரச்சார யுக்தியை மறுத்திருந்தபோதும் சுமந்திரன் அமைச்சர் பதவி குறித்து தொடர்ந்தும் பேசி வந்தார். சிலவேளை அது தனக்கல்ல டக்ளஸ்க்கு என்று நினைத்தார் போலும்.

இதனால் தான் அமைச்சராவதை நியாயப்படுத்தும் வகையில் சில நகர்வுகளை  தொடர்ந்தும் மேற்கொண்டு வந்தார். தேர்தலின் பின்னர் இது குறித்து மக்கள் அறிந்திருந்தார்கள் என்றும் தமிழரசுக்குக்கிடைத்த தேர்தல் வெற்றி அமைச்சர் பதவியை ஏற்றுக்கொள்வதற்கான தமிழ்மக்களின் அங்கீகாரம் என்றும் சுமந்திரன் அறிவிக்கக்காத்திருந்தார். இதே பாணியில் தான் சுமந்திரன் சம்பந்தரை பதவி விலக கோரியபோதும்  திருகோணமலை மக்கள் எனது முதுமையை அறிந்துதான் தனக்கு வாக்களித்ததாகவும் அது மக்களின் அங்கீகாரம் என்றும் கூறி சம்பந்தர் பதவிவிலக மறுத்திருந்தார்.

 அண்மையில்  ஒரு கூட்டத்தில் செல்லையா குமாரசூரியர், கதிர்காமர் ஆகியோருடன் மு.திருச்செல்வத்தை ஒப்பிட்டு சுமந்திரன் பேசியிருந்ததும் மற்றொரு காய்நகர்வு. இதன் மூலம் மக்களால் தெரிவு செய்யப்படாத, நியமிக்கப்பட்ட கடந்தகால தமிழ் அமைச்சர்கள் போன்று தான் செயற்பட மாட்டேன் மக்களால் தெரிவு செய்யப்பட்ட திருச்செல்வம் போல் செயற்படுவேன் என்பதாகும். தேவை ஏற்பட்டால் அமைச்சர் பதவியை திருச்செல்வம் போன்று இராஜினாமாச் செய்வேன் என்பதையும் சொல்லாமல் சொல்லியிருந்தார். நல்லையா, கே.டபிள்யு.தேவநாயகம், செ.இராசதுரை ஆகியோரை சுமந்திரன் பெயர் குறிப்பிடாதற்கும், ஏன்? டக்ளஸ் தேவானந்தாவை பெயர் குறிப்பிடாததற்கும் அவர்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் என்று தனது நிலைப்பாட்டிற்கு நியாயம் கற்பிக்க முயற்சித்ததே காரணம்.

1965 இல் இருந்த அரசியல் சூழ்நிலை வேறு இன்றைய அரசியல் சூழ்நிலை வேறு. அன்றைய பாராளுமன்ற ஜனநாயகத்திலே தமிழரசுக்கட்சி தொடர்ச்சியாக கொழும்பு அரசியலில் தோல்வியடைந்து வந்துள்ளது. அந்த  தோல்வியின் இடத்திற்கு தமிழரசை கொண்டு வந்து சேர்த்திருப்பவர் சுமந்திரன். இன்றைய நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சியில் நிலைமை இன்னும் மோசமானது. திருகோணமலையை புனிதநகராக பிரகடனம் செய்வதிலும், திருகோணமலையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒன்றை அமைப்பதிலும்  திருச்செல்வம் தோற்றுப் போனார். 

திருகோணமலையில் தமிழ் பல்கலைக்கழகம் அல்ல இந்து பல்கலைக்கழகம் அமையவேண்டும் என்ற ஜீ.ஜீ. பொன்னம்பலத்திடம் தமிழரசு தோற்றுப்போனது.  கிழக்கு மாகாணத்தில் முதல் பல்கலைக்கழகம் அமைந்துவிடும் என்பதை தடுக்க மேற்கொள்ளப்பட்ட வைக்கோற்பட்டறை நாய் அரசியல் இது. 

அது மட்டுமா ? மன்னம்பிட்டி பாலம்வரை இருந்த மட்டக்களப்பு மாவட்ட எல்லையை தீர்க்கதரிசனமற்ற அரசியலால் பொலனறுவை மாவட்டத்திற்கு பிரித்துக் கொடுத்தவர்  அன்றைய  உள்ளூராட்சி அமைச்சராக இருந்த  சுமந்திரன் முன் உதாரணம் காட்டும் இந்த திருச்செல்வம்.

இந்த நிலையில் சுமந்திரனின் அமைச்சர்பதவி “ஆதரவு” கருத்துக்கு எதிராக தமிழரசுக்கட்சியின் தீவிர தமிழ்த்தேசிய பிரிவினரிடம் இருந்து எதிர்ப்பு குரல் எழும்பியது. சுமந்திரனின் சகா சாணக்கியனும் அமைச்சர் பதவி பற்றி மட்டக்களப்பு சந்திப்புக்களில் பேசி வந்தார். இந்த நிலையில் சிறிதரன் தரப்பும், மட்டக்களப்பில் சிறிநேசன், அரியநேத்திரன் ஆகியோரும் அமைச்சர் பதவி “பரிசீலிப்புக்கு” எதிராக கடும் கண்டனங்களை வெளியிட்டனர். 

“அமைச்சர் பதவிக்காக தமிழரசுக்கட்சியை தந்தை செல்வா உருவாக்கவில்லை. அமைச்சு பதவிக்காக எனில் தமிழரசுக்கு எவரும் வாக்களிக்கத் தேவையில்லை” என்று சுமந்திரன், சாணக்கியன் தலையில் ஒரு குண்டை தூக்கிப்போட்டார் ஜனாதிபதி பொதுவேட்பாளர் அரியம்.  

மறுபக்கத்தில் முல்லைத்தீவு பிரச்சார கூட்டத்தில் பிரதமர் ஹரிணி அபயசேகரவும் அரசாங்கத்தின் திட்டவட்டமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.”  வேறு எந்த கட்சியில் இருந்தும் அமைச்சர்களை நியமிக்க மாட்டோம். இருபத்தைந்து அமைச்சர்களும் என்.பி.பி. உறுப்பினர்களாக இருப்பார்கள் என்று  அறிவித்தார். அப்போது தான் சுமந்திரன்”ஞானம்” பெற்றவராக பரிசீலிப்பது என்றுதான் கூறினேன் என்றும், அது அமைச்சர் பதவியை ஏற்பதாகாது, அதைக்கட்சியே தீர்மானிக்கும் என்றும்   வழமையான சுத்துமாத்து அப்புக்காத்துதன வாதத்தை முன் வைத்து மறுதலித்துள்ளார். கட்சியே தானாக இருக்கையில் கட்சி எப்படி தீர்மானிப்பது.

சுமந்திரனின் கருத்துக்கள் தொடர்பாக யாழ், கொழும்பு ஊடகங்கள் பலவும் செய்திகளை வெளியிட்டு இருந்தன. வாரத்திற்கு இருமுறை முன்னாள் அமைச்சர் உதய கம்பவெல  சுமந்திரனுக்கு வெளிநாட்டு அல்லது நிதி அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாகவும், அதற்கான உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும், சமஷ்டி தீர்வு வழங்கப்படபோகிறது என்றெல்லாம் இனவாத தொனியில் கருத்துக்களை வெளியிட்டுவந்தார். அவற்றை எல்லாம் கேட்டும், படித்தும் வந்த சுமந்திரன் கடந்த ஒரு மாதகாலமாக எந்த மறுப்பையும் தெரிவிக்கவில்லை. அல்லது “பரிசீலனை” க்கு வியாக்கியானமும் கொடுக்கவில்லை. அவர் கனவுலகில் அமைச்சராகவே பவனிவந்தார்.  பிரதமர் ஹரிணி அபயசேகர வடக்கு தமிழ்மக்களை ஏமாற்று பேர்வழிகளில் இருந்து காப்பாற்றியிருக்கிறார். அதற்கு யாழ்ப்பாண மக்கள் ஒரு எம்.பி.யை என்.பி.பி.க்கு வழங்கி நன்றி செலுத்தினாலும் தகும். இல்லாவிட்டாலும் என்.பி.பி.யின் தேசிய பட்டியல் ஊடாக இராமலிங்கம் சந்திரசேகர் புதிய அமைச்சரவையில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது அமைச்சர் கனவு என்றால் …..,  பாராளுமன்றத்தில் பெரும்பான்மை  குறித்த இரகசியம் ஒன்றும் வெளியாகி இருக்கிறது. உண்மையில் அநுரகுமார திசாநாயக்க ஆட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை விரும்பவில்லை என்று புகலிட ஜே.வி.பி.வட்டாரங்களில் கசிகிறது.  அதற்காகத்தான் பிரச்சாரங்களின்போது 113 அல்லது 120  பற்றி அவர்கள் பேசுகிகிறார்களாம். இந்த இலக்கில் தமிழரசு,ஈ.பி.டி.பி. போன்ற பலவீனமான கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை கொண்டு நடாத்த முடியும் என்று நம்புவதாக தெரிகிறது. 

மூன்றில் இரண்டு பெரும்பான்மையான 150 ஆசனங்களை பெற்றால் இனப்பிரச்சினைக்கான தீர்வு, அதிகார பகிர்வு, புதிய அரசியலமைப்பு போன்றவற்றை தட்டிக்கழிப்பது கஷ்டம் என்று உள்ளுக்குள் கதையடிபடுகிறது.  இன்னொரு புறத்தில் வாக்குறுதியளித்தபடி  நிறைவேற்று அதிகார முறையை. ஒழிக்கவும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை. இவற்றை தவிர்ப்பதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாமல் இருப்பதே மேல் என்றும், இதன் மூலம் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்த பிராந்திய, சர்வதேச அழுத்தத்தை எதிர்க்கட்சிகளின் தலையில் கட்டிவிடலாம் என்ற வியூகம் வகுக்கப்படுகிறது என்று அந்த வட்டாரங்களில் இருந்து அறியக் கிடைக்கிறது.

இந்த அரசியல் வியுகத்திலேயே தென்னிலங்கையில் பலமான எதிர்த்தரப்பை தவிர்த்து பலவீனமான, நிபந்தனைகளை விதிக்க முடியாத அல்லது  அழுத்தம் தரும் சக்தியற்ற சிறுபான்மை கட்சிகளின் குறைந்த அளவான உறுப்பினர்களின் ஆதரவுடன் சாதாரண பெரும்பான்மையுடன் ஆட்சியை நகர்த்த திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இந்த அரசியலுக்கு  ஆதரவளிக்க வடக்கில் நான் முந்தி நீ முந்தி என்று போட்டி நடக்கிறது.

சந்தர்ப்பத்திற்கு  ஏற்ப தந்திரோபாயங்களை வகுத்து பொறுப்புக்கூறலில் இருந்து தப்பிக்கொள்வதும்  ஒரு மாற்றம் தானே….?

இதுதான் சுமந்திரனின்  தேர்தல் விளம்பரம் சொல்லும் அடையாளம்மாறாத மாற்றம்……!

ஆனால் போகிறபோக்கில்  தமிழின அடையாளமே  அழியப்போகிறது….!
 

https://arangamnews.com/?p=11415

  • கருத்துக்கள உறவுகள்
On 8/11/2024 at 17:51, கிருபன் said:

தமிழின அடையாளமே  அழியப்போகிறது….!
 

அதனால் சுமந்திரனுக்கு எந்த பாதிப்புமில்லை பதவி முக்கியம். 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.