Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்+

போர் ஓய்வுக் காலப்பகுதியிலும், நான்காம் கட்ட ஈழப்போரிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மருத்துவப் போராளியாகப் பணிபுரிந்தவர் கள மருத்துவர் உயற்சி அவர்கள். 16.05.2009 இரவு வரை இவரது பொறுப்பின் கீழ் முள்ளிவாய்க்காவில் மருத்துவமனை ஒன்று இயங்கியது. இவரது தந்தையாரான மாவீரர் கேணல் எயிற்றர் அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் ஆவார். முள்ளிவாய்க்காலில் இறுதி வரை களமாடி 16.05.2009 அன்று இரவு வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

தற்பொழுது பிரித்தானியாவில் வசித்து வரும் கள மருத்துவர் உயற்சி அவர்களை நேரில் சந்தித்து உரையாடினோம். அப்பொழுது தமிழீழ தேசியத் தலைவர் தொடர்பாகவும், மக்களுக்காகத் தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட பணிகள் குறித்தும் பல அரிய தகவல்களை எம்முடன் பகிர்ந்து கொண்டார்.

 

கலாநிதி ர.சிறீஸ்கந்தராஜா கள மருத்துவர் உயற்சி அவர்கள் வழங்கிய நேர்காணலின் முதலாவது பாகம் இது.

கேள்வி: நீங்கள் தமிழீழ தாயகத்திலே தமிழீழ விடுதலைப் புலிகளின் கள மருத்துவராகப் பணிபுரிந்தவர். யுத்த காலத்தில் நீங்கள் முன்னெடுத்த பணிகளை விபரியுங்கள்.

பதில்: நான் விடுதலைப் புலிகள் அமைப்பில் கள மருத்துவராகக் கடமையாற்றினேன். 2006ஆம் ஆண்டு யுத்தம் தொடங்கும் பொழுது மணலாறு கொக்குத்தொடுவாய் பகுதியில் கள மருத்துவராக நான் பதவியேற்றேன். அங்கிருந்து யுத்தம் முள்ளிவாய்க்கால் வட்டுவாகலில் முடியும் வரைக்கும் அந்தப் பகுதிக்குரிய கள மருத்துவராக வேலை செய்தேன்.

கேள்வி: எவ்வாறான பணிகளை முன்னெடுத்தீர்கள் – கள மருத்துவர் என்ற வகையில்?

பதில்: என்னுடைய பணி என்னவாக இருந்தது என்றால் – கள மருத்துவம் என்பது வித்தியாசமான ஒன்றாக இருந்தது. வித்தியாசமானது என்பதை விட ஒரு கடினமான பணி. அது எப்படியென்றால் யுத்தம் நடக்கும் இடம் அல்லது ஒரு விமானத் தாக்குதல் நடக்கும் இடத்தில் – அந்த இடத்தில் காயப்பட்ட ஆட்களை – அந்த ஸ்பொட்டில் (இடத்தில்) வைத்து என்ன ரிறீற்மன்ற் (சிகிச்சை) செய்ய வேண்டுமோ, அந்த ரிறீற்மன்ரை (சிகிச்சையை) செய்து, பின்னுக்கு மெயின் தியேட்டருக்கு (பிரதான சத்திர சிகிச்சை மையத்திற்கு) கொண்டு வருவதுதான் எங்களுடைய பிரதான பணியாக இருந்தது. அந்தக் கள முனைகளில் உள்ள சப் மெடிசின் (உப மருத்துவப் பிரிவு) என்று சொல்வது – கள முனைகளில் உள்ள சப்பில்தான் (உப மருத்துவப் பிரிவில்) நான் கூட நிற்பேன் அல்லது மெயினில் (பிரதான மையத்தில்) நிற்பேன் – இரண்டு இடங்கள் இருக்கும். அங்கிருந்து காயப்படும் ஆட்களை, அதில் வைத்து காயங்களைக் கட்டி, பின்னர் அவர்களுக்கு ரிறீற்மென்ற் (சிகிச்சை) – அதாவது சேலைனோ அல்லது பிளட்டோ (குருதி), அதே மாதிரி ஐ.சி.ரி – கால், கை முறிந்திருந்தால் அதற்குரியவை – அவருடைய உயிரைக் கொண்டு வந்து பிரதான மருத்துவமனை தியேட்டர் உள்ள – சத்திர சிகிச்சைக் கூடம் உள்ள இடத்திற்கு கொண்டு வரும் வரைக்கும் அந்த உயிரைப் பாதுகாத்துக் கொடுக்க வேண்டிய கடமை என்னிடம் இருந்தது.ex ltte medical unit

கேள்வி: நீங்கள் முன்னெடுத்த இந்தப் பணிகளிலே பொதுமக்களுக்கான பணிகளையும் முன்னெடுத்தீர்களா? அல்லது போராளிகளுக்கு மட்டுமான களப் பணிகளை முன்னெடுத்தீர்களா?

பதில்: தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற அமைப்பே பொதுமக்களுக்காகத்தான் ஆரம்பிக்கப்பட்டது. நாங்கள் போராளிகள் வேறு, பொதுமக்கள் வேறு என்று ஒரு காலமும் வேலை செய்யவில்லை. சுருக்கமாகச் சொல்வதென்றால், ஒரு இடத்தில் விமானத் தாக்குதல் நடந்தால், அந்த இடத்தில் காயப்படும் பாடசாலை மாணவர்களாக இருந்தாலும் சரி, பொதுமக்களாக இருந்தாலும் சரி, யாராக இருந்தால் என்ன, அந்த இடத்திற்கு உடனடியாக நான் நேரே போய், அங்கே உள்ள காயக்காரர்களை எடுத்து, எங்களுடைய மருத்துவமனையில் கொண்டு வந்துதான் நாங்கள் ரிறீற்மன்ட் (சிகிச்சை) செய்வோம். பொதுமக்கள் என்று நாங்கள் ஒரு பொழுதும் பிரித்துப் பார்த்ததும் இல்லை. பொதுமக்கள் காயப்பட்டார்கள் என்று நாங்கள் விட்டதும் இல்லை.

கேள்வி: ஆனால் உங்களுடைய பெரும்பாலான நேரம் களமுனையில்தானே இருந்திருக்கும்?

பதில்: களமுனையில் தான் இருந்தது. எங்களுடைய மெயின் (பிரதான) மருத்துவமனை என்று சொல்வது களமுனையில் இருந்து ஒரு ஆறு கிலோமீற்றர் பின்னால்தான் இருக்கும். அதாவது ஆறு கிலோமீற்றர் பின்னால் இருக்கும். அந்த மெயின் மருத்துவமனை உள்ள இடம் பொதுமக்கள் உள்ள இடங்களாகத்தான் இருக்கும் – ஆறு கிலோமீற்றர் பின்னால். அந்த இடத்தில் எங்களுடைய வாகனங்கள் – காயப்பட்ட ஆட்களை ஏற்றும் வாகனங்கள் இருக்கும். விமானத் தாக்குதல்கள் சரி, செல் (எறிகணை) தாக்குதல்கள் சரி கூடுதலாக மக்கள் இருக்கும் பகுதிகளில் தான் நடந்தது. கள முனையில் ரவைகளோ – ரவுண்ஸ்களோ – வராமல் இருக்கும் – சனத்திற்குப் படாமல் இருக்கும். ஆனால் பின்பகுதியில் உள்ள சனங்களுக்கு செல் தாக்குதல்களுக்கும், விமானத் தாக்குதல்களுக்கும் எந்தக் குறையும் இருக்கவில்லை. இந்த இரண்டும் – செல் தாக்குதல்கள், விமானத் தாக்குதல்கள் – ஒவ்வொரு நாளும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதனால் நிறையப் பொதுமக்கள் – ஒவ்வொரு நாளும் குறைந்தது ஐந்து பொதுமக்களாவது எங்களிடம் வருவார்கள் – யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட காலப் பகுதியில். பின்னர் யுத்தம் முடிவு பெறும் காலத்தில் நூற்றுக்கு நூறு வீதமான காயங்கள் என்று சொல்வதை விட நூற்றுக்குத் தொண்ணூறு வீதமான காயங்கள் பொதுமக்களுடைய காயங்களாகத்தான் எங்களிடம் வந்து கொண்டிருந்தது.

கேள்வி: மக்களுக்கான மருத்துவப் பணிகளை முன்னெடுப்பதற்கு, அல்லது போராளிகளுக்கான மருத்துவப் பணிகளை முன்னெடுப்பதற்கு உங்களுக்கு மருந்துகள் தேவைப்பட்டிருக்கும். இந்தத் தேவைகளை எவ்வாறு பூர்த்தி செய்தீர்கள்?

பதில்: எங்களிடம் ஸ்ரொக் (கையிருப்பு) இருந்தது – விடுதலைப் புலிகளின் மருத்துவ ஸ்ரொக் இருந்தது. அதாவது அரசாங்கம் அனுப்பும் மருந்தை வைத்து பொதுமக்களுக்கு ஒரு பத்து வீதம் கூட பூர்த்தி செய்ய இயலாது. அது உலகறிந்த உண்மை. அதை ஐ.சி.ஆர்.சி (செஞ்சிலுவைச் சங்கம்) அங்கிருக்கும் பொழுது அந்த விபரத்;தை வெளியிட்டிருந்தது – சிறீலங்கன் கவண்மன்ற் (அரசாங்கம்) அனுப்பும் மருந்து காணாது என்று சொல்லி. எங்களுடைய போராளிகளுக்கென்று நாங்கள் பயன்படுத்தும் மருந்துப் பொருட்களைத்தான் நாங்கள் பொதுமக்களுக்கும் பயன்படுத்துவோம். IMG_0470

கேள்வி: மருந்துப் பொருட்களுக்குப் பற்றாக்குறை ஏற்படும் பொழுது என்ன செய்வீர்கள்?

பதில்: எங்களுக்கு மருந்தால் பற்றாக்குறை இருக்கவில்லை. ஏனென்றால் போராளிகள் – எங்களுடைய மேலிடங்களில் இருந்து – மருந்துகள் அனுப்பிக் கொண்டிருந்தார்கள். நாங்கள் ஒரு பொழுதும் இது போராளிக்குரிய மருந்து, இது பொதுமக்களுக்குரிய மருந்து என்று பிரித்துப் பார்க்கவுமில்லை: வேலை செய்யவுமில்லை. சுருக்கமாக சொல்வதென்றால் இந்த யுத்தம் ஆரம்பிக்கும் பொழுது சாதாரணமாக சிறீலங்காவின் கவண்மன்ற் கொஸ்பிட்டல்களில் (அரசாங்க மருத்துவமனைகளில்) – சின்னச் சின்ன கொஸ்பிட்டல்களில் கூட – இருந்த மருத்துவர்களைப் பார்த்தீர்கள் என்றால், அரசாங்க மருத்துவர் ஒருவராக இருந்தால், மிகுதி ஐந்து பேரும் போராளி மருத்துவர்களாகத்தான் இருப்பார்கள். அது போராளி மருத்துவர்கள் என்பது வெளியால் உள்ள யாருக்கும் தெரியாது. நாங்கள் போராளிகள் என்று அவர்கள் இராணுவ உடையை அணிந்து கொண்டு வேலை செய்வதில்லை. அவர்களும் ஒரு சாதாரண மருத்துவராகவும், சாதாரணமாக வேலை செய்யும் ஒரு ஆளாகத்தான் வேலை செய்வார்கள். அது நிறைய மக்களுக்கும் தெரியும். நிறைய மக்களுக்கும் தெரியும். போராளிகள் என்று உடுப்பைப் போட்டுக் கொண்டு நாங்கள் வேலை செய்தால், அது இலங்கை விமானப் படைக்கு இது போராளிகளின் இடம் என்று சொல்லி விமானத் தாக்குதல்களை செய்து விடுவார்கள் என்பதால் சாதாரண பொதுமக்களாகத்தான் வேலை செய்தோம்.Col Eyittar 2

கேள்வி: நீங்கள் அப்படி ஏதாவது மருத்துவமனையில் பணியாற்றியிருக்கிறீர்களா?

பதில்: நான் என்னுடைய போராட்ட வாழ்க்கையில் இரண்டு விடயங்களுக்குத்தான் போராளிகளின் அங்கி – அதாவது இராணுவ உடை – அணிவேன். ஒன்று மாவீரர் தினத்திற்கு. இரண்டாவது என்னுடன் இருந்த யாராவது ஒரு மருத்துவரோ அல்லது என்னுடைய ஒரு நண்பனோ வீரச்சாவடைந்தால் அவருடைய அந்த நிகழ்விற்குத்தான் போராளி உடுப்பு அணிவேன். மற்றும்படி, வெளியால் சனங்களுக்கு எல்லாம் தெரிந்தது இவர் ஒரு கள மருத்துவர் என்றால் கவண்மன்ற் (அரசாங்க) – சிறீலங்கன் கவண்மன்ற் – டொக்டர் என்பதுதான் எல்லாருக்கும் தெரியும். பின்னர் என்னை இராணுவ யூனிபோர்மில் (சீருடையில்) பார்க்கும் பொழுதுதான் கேட்பார்கள் நீங்கள் இயக்கமா? என்று. நான் ஒரு ஆள் அப்படி எனும் பொழுது எல்லா மருத்துவர்களுமே இப்படித்தான் வேலை செய்தார்கள். அங்கு, வன்னியில் உள்ள மக்கள் முழுப் பேருக்குமே தெரியும் எல்லா கொஸ்பிட்டல்களிலுமே (மருத்துவமனைகளிலும்) போராளி மருத்துவர்கள்தான் தங்களுக்கு வேலை செய்கின்றார்கள் என்பது.

கேள்வி: நீங்கள் பணிபுரிந்த ஒரு பொது மருத்துவமனையின் பெயரைக் குறிப்பிட முடியுமா?

பதில்: நான் முல்லைத்தீவு மருத்துவமனையில் வேலை செய்தேன் – சண்டை நடைபெறும் பொழுது. பின்னர் முள்ளிவாய்க்காலுக்குள் இருந்த பிரதான மருத்துவமனையில் வேலை செய்தேன்.

கேள்வி: நீங்கள் பணிபுரிவது அரசாங்கத்திற்குத் தெரியாதா?

பதில்: இல்லை தெரியாது. நாங்கள் பணிபுரிவது தெரிந்திருந்தால், அந்த மருத்துவமனைகளும் தாக்கப்பட்டிருக்கும்.

கேள்வி: நீங்கள் இறுதி யுத்தத்தில் – அதாவது முள்ளிவாய்க்கால் பகுதியிலே – ஒரு மருத்துவமனையைப் பொறுப்பேற்று நடத்தியவர் என்று அறிகின்றோம். அந்தப் பணிகளைப் பற்றிச் சற்று விபரமாகக் கூற முடியுமா?

பதில்: முள்ளிவாய்க்காலில் மருத்துவமனைகளாக இருந்தவற்றில் கடைசியாக இராணுவத்திடம் பிடிபட்ட மருத்துவமனை நான் வைத்து நடத்திய மருத்துவமனை. அந்த மருத்துவமனைக்குப் பெயர் அலன் மருத்துவமனை. யுத்தம் ஆரம்பிக்கப்படும் காலத்திற்கு முன்னரே அந்த மருத்துவமனை எங்களிடம் இருந்தது. அப்பொழுது அது போராளி மருத்துவமனையாக இருந்தது. பின்னர் முள்ளிவாய்க்காலிற்குள் மக்கள் வந்து செறிவாகும் பொழுது அது சாதாரண பொதுமக்கள் மருத்துவமனையாக மாற்றம் பெற்றது. ஏனென்றால் வேறு மருத்துவமனைகள் இருக்கவில்லை. வேறு ஒரு மருத்துவமனையை வைத்துச் செய்யக்கூடிய வசதியும் இருக்கவில்லை. நான் வைத்திருந்த மருத்துவமனையை பொது மருத்துவமனையாக மாற்றினோம். 16ஆம் திகதி நடுச் சாமம் வரையும் அந்த மருத்துவமனை இயங்கியது. 16ஆம் திகதி தான் அந்த மருத்துவமனையை சிறீலங்கா இராணுவம் முற்றுகையிட்டது.

கேள்வி: நீங்கள் என்ன பணிகளைச் செய்தீர்கள்? விபரமாகக் கூற முடியுமா?

பதில்: பெரிய காயங்கள் என்று பார்த்தால் 14ஆம் திகதியும், 15ஆம் திகதியும் மூன்று வயிற்றுக் காயங்கள் செய்தோம் – வயிற்றில் காயப்பட்ட பொதுமக்களுக்கு. 16ஆம் திகதி இரவு – மருத்துவமனை பிடிபடும் இரவு – ஒரு கர்ப்பிணித் தாய்க்கு சிசேரியன் செய்து ஒரு குழந்தையை வெளியில் எடுத்தோம். அதை விட ஐ.சி.ரியூப் – அதாவது நெஞ்சில் காயப்படும் ஆட்களுக்கு ஐ.சி.ரியூப், கால், கை அம்புயூற்றேசன் (அகற்றுதல்) – அதாவது கால், கையில் காயப்பட்டு அவயத் துண்டிப்புகள் பட்டவர்களுக்கு, அவயங்கள் துண்டிப்பு – அதாவது சேர்ஜரி (சத்திர சிகிச்சை) – செய்தோம். மற்றைய காயங்கள் – சாதாரண எல்லாக் காயங்களுமே செய்தோம். பெரிய சில காயங்கள் – கடைசி நாட்களில் பார்த்தீர்கள் என்றால் பெரிய காயங்கள் செய்ய இயலாமல் இருந்தது. என்ன காரணம் என்றால் தாக்குதல்கள் – விமானத் தாக்குதல்கள், செல் தாக்குதல்கள், ரவுண்ட்ஸ் (துப்பாக்கி ரவை) தாக்குதல்கள், கொத்துக் குண்டு, கிளேசர் பொம்ப் (சிதறல் குண்டுகள்) – எல்லாமே நடந்து கொண்டிருந்தது. அதனால் பெரிய காயங்கள் – சில காயங்கள் செய்வதற்கு நான்கு மணித்தியாலம், ஐந்து மணித்தியாலங்கள் எல்லாம் எடுக்கும். சில வயிற்றுக் காயங்கள் செய்வதற்கு குறைந்தது ஆறு மணித்தியாலங்கள்கூட எடுத்திருந்தது. அப்படியான காயங்களைத் தவிர்த்தோம். ஏனென்றால் செய்ய இயலாது. அந்த அளவிற்கு எங்களிடம் வசதிகள் இல்லாமல் போய்விட்டது. இன்ஸ்ருமன்ற்ஸ்களை ஸ்ரெறைல் (உபகரணங்களை தொற்றுநீக்கம் செய்வது) பண்ணும் வசதி இல்லாமல் போய்விட்டது. எங்களின் ஜெனரேட்டரில் (மின்பிறப்பாக்கி) செல் விழுந்ததால் ஜெனரேட்டர் வேலை செய்யவில்லை. இன்ஸ்ருமன்சை (உபகரணங்களை) நாங்கள் தண்ணியை அடுப்பில் வைத்து அவித்துத்தான் ஸ்ரெறைல் (தொற்றுநீக்கி) பண்ணினோம். அப்படியான கட்டம் வரும் பொழுது கடைசி நாட்களில் பெரிய காயங்கள் செய்யவில்லை.

கேள்வி: நீங்கள் எவ்வாறு கள மருத்துவர் ஆகினீர்கள்?

பதில்: நான் இந்தப் போராட்டத்தில் வேறு ஒரு துறையில் படித்துக் கொண்டிருந்தேன். படித்துக் கொண்டிருக்கும் பொழுது அந்தத் துறை சார்ந்து ஒரு மருத்துவர் தேவைப்பட்டிருந்தது. அந்தத் துறைக்காகத்தான் நான் மருத்துவராகப் படித்தேன். அதில் என்னைக் கொஞ்சம் அட்வான்சாக (மேற்படிப்பு) படிப்பித்தார்கள் – அந்தத் துறையில் கொஞ்சம் கூடுதலான அனுபவம் தேவை என்பதால். அப்பொழுது நான் கொஞ்சம் அட்வான்சாக படித்திருந்தேன். கள மருத்துவத்துடன் சேர்ந்து தியேட்டர் (சத்திர சிகிச்சை) வேலைகளும் படித்திருந்தேன். பின்னர் காலப்போக்கில் அந்தப் பணிக்கு என்னால் போக முடியாததால், என்னை மணலாற்றுக்கான கள மருத்துவராக நியமித்தார்கள்.

கேள்வி: எங்கே உங்கள் மருத்துவக் கற்கையை மேற்கொண்டீர்கள்?

பதில்: நான் ஆரம்பத்தில் கற்கையை கிளிநொச்சியில் மேற்கொண்டேன் – கிளிநொச்சியிலும் மேற்கொண்டேன், விசுவமடு என்ற பகுதியிலும் மேற்கொண்டேன். எமது படிப்பு ஒரு வித்தியாசமானது. மற்றைய இடங்கள் மாதிரி அல்ல. ஒரு பக்கத்தில் படிப்பு போய்க் கொண்டிருக்கும். மற்றைய பக்கத்தால் பிறக்டிக்கல் (நடைமுறை) படிப்பு போய்க் கொண்டிருக்கும். அதாவது கொஸ்பிட்டலில் பேசன்டை (மருத்துவமனையில் நோயாளியை) பார்ப்பது எப்படி, காயங்களை எப்படி ரிறீற்மென்ட் (சிகிச்சை) செய்வது, எப்படி அனஸ்தீசீசியா மயக்க மருந்து கொடுப்பது – அப்படித்தான். ஒரு பக்கத்தால் படிப்புப் போய்க் கொண்டிருக்கும். மற்றைய பக்கத்தால் வேலையும் நடந்து கொண்டிருக்கும்.

கேள்வி: எந்த நிறுவனம்? நீங்கள் கல்வி பயின்ற நிறுவனத்தை –நிறுவனங்களைக் குறிப்பிடுங்கள்?

பதில்: அங்கு நிறுவனங்கள் என்று இருக்கவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளின் மருத்துவப் பிரிவின் கொலிஜில் (கல்லூரியில்) – அதாவது மெடிக்கல் கொலிஜில்தான் (மருத்துவக் கல்லூரியில்) – படித்தேன்.

கேள்வி: உங்களுக்கான கற்கைகளை யார், யார் வழங்கினார்கள்?

பதில்: எங்களுக்கான கற்கைகளைத் தமிழீழ விடுதலைப் புலிகளின் முதன்மை மருத்துவர்கள் அஜந்தன் டொக்டர், சுஜந்தன் டொக்டர், டொக்டர் அன்ரி, அடுத்தது கமபிளாஜ் அன்ரி – இவர்கள் தான்.

கேள்வி: நீங்கள் இந்தக் கற்கைகளை மேற்கொள்ளும் பொழுது எவ்வாறான சவால்களை எதிர்கொள்ள வேண்டி வந்தது?

பதில்: இந்தப் போராட்ட வாழ்க்கைக்கு நாங்கள் வரும் பொழுது பூரணமான ஒரு படிப்பை நாங்கள் படித்து வரவில்லை. போராட்டத்திற்குள் வந்த பின்னர்தான் – விடுதலைப் புலிகள் தான் – இன்று நான் படித்து நன்றாக இருப்பதற்குக் காரணம் தமிழீழ விடுதலைப் புலிகள் தான். அது நூற்றுக்கு நூறு வீதம் நான் ஒத்துக் கொள்ள வேண்டிய விடயம். அவர்கள்தான் என்னைப் படிப்பித்து இந்த நிலைமைக்கு ஆளாக்கினார்கள்.

கேள்வி: உங்களை மருத்துவத் துறையில் அவர்கள் படிக்க வைத்ததற்கான காரணம் என்ன? அதாவது உங்களுக்கு ஏதாவது மருத்துவப் பின்னணி அல்லது அந்தத் துறைசார்ந்து ஏதாவது பின்னணி இருந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணங்களா?

பதில்: பின்னணிகள் எதுவும் இருக்கவில்லை எனக்கு – எந்த விதப் பின்னணியும் இருக்கவில்லை. அது எனக்குக் கிடைத்த ஒரு வரம் என்றுதான் சொல்ல வேண்டும் – இந்த மருத்துவப் படிப்பு.

கேள்வி: எவ்வாறு தெரிவு செய்தார்கள் உங்களை?

பதில்: ஆரம்பப் பயிற்சி – அதாவது பேசிக் ரிறெய்னிங்க் (அடிப்படைப் பயிற்சி) – முடிந்த பின்னர் மேலதிகமான வேறொரு படிப்பிற்காக என்னை எடுத்திருந்தார்கள் – படித்து வேறு இடத்திற்கு அனுப்புவதற்காக. அந்த இடத்திற்கு ஒரு மருத்துவர் தேவையாக இருந்தது. அதற்காகத்தான் என்னைப் படிப்பித்தார்கள்.

கேள்வி: சரி, நீங்கள் போர்க் காலத்தில் மேற்கொண்ட மருத்துவ – கள மருத்துவ – பணிகளை விபரித்திருந்தீர்கள். போர் ஓய்வுக் காலம் – அதாவது போர் நடைபெறாத சமாதானக் காலம். அந்தக் காலப் பகுதியிலே நீங்கள் எவ்வாறான பணிகளை முன்னெடுத்திருந்தீர்கள்?

பதில்: சமாதான காலத்தில் எங்களுடைய முற்றுமுழுதானது படிப்புத்தான். முற்று முழுதாகவே படிப்பிடித்துக் கொண்டிருந்தார்கள். ஓய்வில்லாமல் படிப்புத்தான். அந்தக் காலம் – எல்லோருமே சமாதானம் என்றிருக்க அந்தக் காலம்தான் எங்களுக்கு ஒரு கொடிய காலமாக இருந்தது. ஏனென்றால், படிப்பு, படிப்பு, படிப்பு, படிப்பு என்று சொல்லி வெளியுலகம் தெரியாமல் படிப்பில்தான் எங்களின் வாழ்க்கை போனது. பின்னர் சண்டை தொடங்கிய பின்னர்தான் நாங்கள் வெளியால் வேலை செய்யக் கூடிய மாதிரி இருந்தது. ஆனால் அது வரைக்கும் படிப்போடுதான் இருந்தோம்.

கேள்வி: நீங்கள் குறிப்பிட்டீர்கள் பணிகள் எதுவும் செய்யவில்லை என்று. ஆனால் சுனாமி (கடற்கோள்) காலப்பகுதியில் ஏதாவது செய்தீர்களா?

பதில்: சுனாமி காலப்பகுதியில் – அப்பொழுது நாங்கள் கிளிநொச்சியில் படித்துக் கொண்டிருந்தோம். அப்பொழுது நான் மருத்துவம் படித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது சுனாமிக்கு கடற்புலிகளின் தளபதி சூசை அண்ணாவின் ஆட்களுடன் போய் நின்று வேலை செய்தோம் – சுனாமி ரைம் (நேரம்) மக்களுக்காக.

கேள்வி: அதிலே விடுதலைப் புலிகள் செய்த பணிகளை சற்று விபரியுங்கள் – மக்களுக்கான பணிகளை.

பதில்: விடுதலைப் புலிகள் செய்த பணிகள் என்று சொல்வதென்றால், நூற்றுக்கு நூறு வீதமான பணிகளை விடுதலைப் புலிகள்தான் செய்தார்கள். மக்களை – இறந்தவர்களையும் சரி, தண்ணீருக்குள் தாண்டவர்களையும் சரி, அந்த றோட்டு (வீதி) புனரமைப்பு செய்து கொடுத்ததில் இருந்து, மக்களைக் கொண்டு போய் மீள்குடியேற்றம் இருத்தியதில் இருந்து. அதுபோல் அந்தக் குடும்பங்கள் மன அழுத்தங்களால் – சில வேளைகளில் பிள்ளைகள் இறந்து, தாய் இறந்து, தகப்பன் இறந்து – மன ரீதியாகப் பாதிக்கப்பட்ட ஆட்களுக்கு – அவர்களுக்கு உளவியல் ரீதியான பயிற்சிகளைக் கொடுத்ததில் இருந்து. சுனாமியில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை ஒரு நிலைமைக்கு கொண்டு வந்தது நூற்றுக்கு நூறு வீதம் விடுதலைப் புலிகள் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் சொல்ல இயலாது. இப்பொழுதும் அங்குள்ள குடும்பங்கள் – அதாவது அலம்பில், செம்மலை, முல்லைத்தீவு, வலைஞர்மடம், இரட்டைவாய்க்கால் பகுதிகளில் உள்ள அனைத்து மக்களுமே – ஒத்துக் கொள்வார்கள் தாங்கள் சுனாமியால் மீள்வதற்கு – எனக்குக் கூட பொதுமக்கள் சொன்னார்கள் தங்களால் சுனாமி அடித்ததால் மீள மாட்டோம், எல்லோருமே ஒரு மனநோயாளியாகப் போய் விடுவோம் என்ற எண்ணத்தில்தான் தாங்கள் இருந்தோம் என்று. பின்னர் எங்களுடைய மருத்துவ அணிகள் – எல்லோருமே மருத்துவ அணிகள், போராளிகள் எல்லோருமே – மக்களோடு மக்களாக நின்று வேலை செய்ததால் தான் அந்த சுனாமியில் இருந்து மக்களை மீட்டு – அந்த உளவியல் ரீதியிலான தாக்கத்திலிருந்து மீட்கக்கூடிய மாதிரி இருந்தது.

கேள்வி: பொதுவாக, அதுவும் குறிப்பாக சிங்கள மட்டத்தில், அல்லது அனைத்துலக மட்டத்தில் – மேற்குலக மட்டத்தில் – கூறுவார்கள் விடுதலைப் புலிகள் கொடூரமானவர்கள், மக்களை மனிதக் கேடயமாகப் பயன்படுத்தினார்கள், அல்லது போராளிகளை வெறுமனவே இயந்திரமாகப் பயன்படுத்தினார்கள் என்று. நீங்கள் குறிப்பிட்ட விடயங்களைப் பார்க்கும் பொழுது இவை முற்று முழுதாகத் தலைகீழாக இருக்கின்றன. அதாவது இதற்கு முரணாக இருக்கின்றன. இதைப் பற்றிய உங்களின் பார்வையைக் கூறுங்கள்.

பதில்: என்னுடைய பிறந்த காலத்தில் இருந்து நான் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் தான் வளர்ந்தேன் – சிறிய காலத்தில் இருந்து. நான் போராட்டத்திற்கு போக வேண்டி வந்ததன் காரணம் – இதில் உண்மையை நான் ஒத்துக் கொள்ள வேண்டும். என்னுடைய அம்மா 96ஆம் ஆண்டு – நான் சிறியவனாக இருக்கும் பொழுது – சிறீலங்கா இராணுவம் மேற்கொண்ட செல் தாக்குதலில்தான் அம்மா இறந்தார். அம்மா இறக்கும் பொழுது நான் சின்ன ஆள். அந்த நேரமே என்னுடைய மனதில் வடுவாகப் பதிந்தது என்னவென்றால், இலங்கை இராணுவத்தால் தான் என்னுடைய அம்மா இறந்தவர் என்று. பல தடவை நான் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைய முயற்சித்த பொழுது – சின்ன வயதிலேயே நான் வெளிக்கிட்டேன் இயக்கத்திற்குப் போக என்று.

கேள்வி: எத்தனையாவது வயதில்?

பதில்: பதின்மூன்று வயதில் நான் போக வெளிக்கிடும் பொழுது விடுதலைப் புலிகள் ஏற்கவில்லை. கொண்டு வந்து, கொண்டு வந்து வீட்டில் விடுவார்கள். நான் போவேன். அவர்கள் கொண்டு வந்து வீட்டில் விடுவார்கள் ஏற்க முடியாது என்று. அதைவிட என்னுடைய அண்ணா ஒருவர் போராளியாக இருந்தவர். அப்பாவும் போராளியாக இருந்தவர். அதனால் என்னை அவர்கள் எடுக்க மாட்டோம் என்று சொல்லியிருந்தார்கள். கட்டாயத்தின் பேரில்தான் – இனி நீங்கள் வீட்டில் கொண்டு போய் விட்டால், நான் ஏதாவது சுயீசைட் (தற்கொலை) செய்வேன் என்று சொன்ன பின்னர்தான் – இயலாக் கட்டத்தில்தான் என்னைப் பதினாறாவது வயது தாண்டிய பின்னர் கொண்டு போய் படிக்க விட்டார்கள். முதலில் படிக்க விட்டு, பதினெட்டு வயதில்தான் போராட்டத்தில் உள்வாங்கினார்கள்.

கேள்வி: எங்கே கல்வி பயின்றீர்கள்?

பதில்: கிளிநொச்சியில்.

கேள்வி: கிளிநொச்சியில் பாடசாலை ஒன்றிலா? அல்லது விடுதலைப் புலிகளின்…

பதில்: பாடசாலை ஒன்றில்.

கேள்வி: கல்வி முடித்த பின்னர் எப்பொழுது நீங்கள் போராளியாக ஏற்றுக் கொள்ளப்பட்டீர்கள்?

பதில்: பதினெட்டு வயதில்தான் என்னைப் போராளியாக ஏற்றுக் கொண்டார்கள். அப்பொழுது சொன்னார்கள் நீங்கள் போராட்டத்திற்கு வர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. உங்களுடைய குடும்பத்தில் இரண்டு பேர் இருக்கின்றார்கள். என்னைப் புஸ் பண்ணினார்கள் (அழுத்தம் கொடுத்தார்கள்). வீட்டை போகச் சொல்லித்தான் புஸ் பண்ணினார்கள். ஆனால் என்னுடைய மனதில் வடுவாக இருந்தது என்னவென்றால் – சின்ன வயதில் அம்மாவை இழந்தேன். அது எனக்கு வடுவாக இருந்தது – இந்த இலங்கை இராணுவத்தால் தானே என்னுடைய அம்மாவை நான் இழக்க வேண்டி வந்தது என்று. அதனால் எப்படியாவது போராட்டத்திற்குள் போய் எங்களுடைய மக்களுக்காக வேலை செய்ய வேண்டும் என்று.

கேள்வி: சில வெளிநாட்டு நிறுவனங்கள் கூறுவதுண்டு விடுதலைப் புலிகள் சிறுவர் ஆட்சேர்ப்பை மேற்கொண்டார்கள் என்று. நீங்கள் கூறுகின்றீர்கள், உங்களைப் பதினெட்டு வயதுக்குப் பின்னர்தான் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினராக இணைத்தார்கள் என்று. உங்கள் சக தோழர்கள் – உங்கள் வயதை ஒத்தவர்கள் – விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைய முற்பட்ட பொழுது இவ்வாறான அனுபவங்களை எதிர்கொண்டார்களா?

பதில்: ஆம், நிறைய அனுபவங்கள். கன பேர் நாங்கள் இயக்கத்திற்கு வரப் போகிறோம், சின்ன வயதிலேயே இயக்கத்திற்கு வரப்போகிறோம், என்று சொன்னால், தாங்கள் வீட்டிற்கு போக மாட்டோம் என்று சொல்லி ஒரே பிடிவாதமாக நிற்பார்கள் – நான் நின்றது போன்று. அப்படி என்றால் அவர்கள் என்ன செய்வார்கள் என்றால், இயக்கத்தில் காந்தரூபன் அறிவுச்சோலை, அதேபோல் பெண் பிள்ளைகளுக்கு செஞ்சோலை என்றெல்லாம் இருந்தது – மற்றையது தாயகம், புனித பூமி, இப்படியெல்லாம் சில அமைப்புக்களை வைத்திருந்தார்கள் விடுதலைப் புலிகள். அந்த அமைப்புகளில்தான் முதலில் கொண்டு போய் விடுவார்கள். உதாரணத்திற்கு ஒரு பெண் பிள்ளை பதினைந்து வயதில் வந்து நான் வீட்டிற்குப் போக மாட்டேன், வீட்டிற்குப் போனால் நான் செத்து விடுவேன், நான் இயக்கத்திற்குத்தான் வரப் போகின்றேன் என்று சொல்லும் பிள்ளைகளை, சரி நீங்கள் இங்கிருந்து படியுங்கள். உங்களுக்கு வயது வரும் பொழுது – உங்களுக்கு இயக்கத்தில் சேருவதற்குரிய வயது வரும் பொழுது – நீங்கள் போராட்டத்திற்கு – நீங்கள் விரும்பினால் வாருங்கள். அல்லது நீங்கள் வீட்டிற்கு போங்கள் என்றுதான் வைத்திருந்தார்கள். அது உலகம் அறிந்தது. சமாதான காலத்தில்கூட இந்த மேற்குலகம் அங்கு வந்து, செஞ்சோலை, காந்தரூபன் அறிவுச்சோலை, தாயகம், புனிதபூமி என்ற இந்த சிறுவர்களைப் பராமரிக்கும் இடங்களை எல்லோரும் வந்து பார்த்துவிட்டுப் போனார்கள். அப்பொழுது உலகமே வியந்து போனது. விடுதலைப் புலிகள் சிறுவர் ஆட்சேர்ப்பில் ஈடுபடுகிறார்கள் என்றால், எதற்கு சிறுவர்களை வைத்துப் படிப்பிற்கின்றார்கள் என்று. இதில் செஞ்சோலை, காந்தரூபன் அறிவுச்சோலை எல்லாம் அம்மா, அப்பா இல்லாத ஆட்கள் – அனாதைகளாக – அம்மா, அப்பா இல்லை என்பதை விட ஒரு அனாதையாக ஒரு குழந்தை எங்களின் தமிழீழ மண்ணில் இருக்கவில்லை. அப்படி ஒரு அனாதை என்ற பெயரிற்கு இடமிருக்கவில்லை. அப்படி இருந்த ஆட்களை விடுதலைப் புலிகள் கொண்டு வந்து படிப்பித்து – அவர்களில் நிறையப் பேர் டொக்டர் (மருத்துவர்), என்ஜினியர் (எந்திரி) ஆக எல்லாம் இருக்கின்றார்கள்.

கேள்வி: இதேநேரத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஆட்கள் இணையும் பொழுது ஒரு விரக்தியின் அடிப்படையில், அல்லது அவர்களுக்குப் படிக்க விருப்பம் இல்லை, அல்லது அவர்கள் வேறு காரணங்களுக்காகத்தான் இணைகின்றார்கள் – தேசப்பற்று அல்ல – என்றொரு குற்றச்சாட்டு மாற்று இயக்கங்களைச் சேர்ந்தவர்களால் முன்வைக்கப்படுகின்றது. இதைப்பற்றி நீங்கள் என்ன கூறுகின்றீர்கள்?

பதில்: அப்படி அல்ல. முள்ளுக் குத்தியவனுக்குத்தான் அதன் வேதனை தெரியும் என்பது போல் வன்னிக்குள் இருந்த எங்களுக்குத்தான் இலங்கை அரசாங்கம் செய்தவை தெரியும். வெளியால் இருந்து பார்ப்பவர்களுக்குத் தெரியாது. வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அதன் வேதனை தெரியாது. பாடசாலையில் நாங்கள் படித்த காலத்தில் கூட பாடசாலையில் ஒழுங்காகப் படித்திருக்க மாட்டோம் – ஒரு வண் அவர் (ஒரு மணிநேரம்) படித்துக் கொண்டிருக்க சுப்பர் சோனிக், புக்காரா (மிகையொலி விமானங்கள்) என்று வரும். ஓடிப் போய் பங்கருக்குள் (பதுங்கு குழிக்குள்) உள்ளிடுவோம், படுப்போம். இதுதான் மனதை – அங்குள்ள மக்களை, அங்குள்ள பிள்ளைகளை போராட்டத்திற்குப் போக வைத்தது இலங்கை அரசாங்கம் தான். அந்த அளவிற்கு எங்களை இனவழிப்புச் செய்தார்கள். விமானத் தாக்குதல், பள்ளிக்கூடத்திற்கு குண்டு போடுவது. எல்லோருக்குமே மனதில் இலங்கை அரசாங்கத்தால் எங்களுடைய உயிர்கள் பறிக்கப்படுகின்றது, இதனை நிற்பாட்ட வேண்டும் என்றால் நாங்கள் போராட்டத்திற்குப் போக வேண்டும். எல்லோரும் உணர்ந்துதான் போனார்கள்.

கேள்வி: தமிழீழ தேசியத் தலைவர் தொடர்பாக உங்களுடைய பார்வை எவ்வாறாக இருக்கின்றது?

பதில்: நான் அறிந்த மனிதர்களிலும், நான் நேசித்த மனிதர்களிலும் முதலிடத்தில் இருப்பது தமிழீழ தேசியத் தலைவர். எதற்காக நான் சொல்கின்றேன் என்றால், ஒவ்வொரு போராளியினுடைய தனிப்பட்ட பிரச்சினையில் இருந்து, போராளிகளுக்கு என்ன முக்கியத்துவம், என்ன தேவை, என்ன அவசியம், பொதுமக்களுக்கு என்ன அவசியம், பொதுமக்களுக்கு என்ன தேவை என்பதை அணுவணுவாக அவர் புரிந்து கொண்டு செயற்பட்ட ஒரு மாபெரும் தலைவர். எங்களுக்கு இப்படியொரு தலைவர் கிடைத்ததையிட்டு, நான் அந்தத் தலைவருக்குக் கீழ் நின்று பணியாற்றினேன் என்று இன்று நான் சந்தோசமாக இருக்கின்றேன். ஒரு மாபெரும் தலைவருக்குக் கீழ் நின்று பணியாற்றிய ஒரு பெருமை – ஒரு நல்ல விடயம் – கிடைத்திருக்கின்றது என்று சந்தோசமாக இருக்கின்றேன்.

(அடுத்த இதழில் நிறைவு பெறும்)

https://eelamaravar.wordpress.com/2016/04/18/ex-ltte-medical-unit/

Edited by நன்னிச் சோழன்

  • நன்னிச் சோழன் changed the title to வன்னியில் மருத்துவப் போராளியாகப் பணிபுரிந்த உயற்சி | நேர்காணல் | தொடர்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

வதைமுகாம்களில் ஆண்கள் மீதும் படையினர் வன்புணர்ச்சி – களமருத்துவர் உயற்சி

2

 

மக்களை மையப்படுத்தித் தமிழீழ விடுதலைப் புலிகள் முன்னெடுத்த பணிகள் தொடர்பாகவும், தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பற்றியும் கடந்த பாகத்தில் எம்மோடு பகிர்ந்து கொண்ட கள மருத்துவர் உயற்சி அவர்கள், இந்த இரண்டாவது பாகத்திலும் தலைவர் அவர்கள் தொடர்பான மேலும் பல தகவல்களைப் பகிர்ந்து கொள்கின்றார்.

https://youtu.be/ZEijIcSUWAA
அத்தோடு சிங்களப் படைகளால் சிறைப்பிடிக்கப்பட்ட பின்னர் வதைமுகாம்களில் தானும், சக போராளிகளும் எதிர்கொண்ட வதைகளையும் விபரிக்கின்றார் கள மருத்துவர் உயற்சி. ஈழமுரசு பத்திரிகையின் சார்பில் அவரைச் செவ்வி கண்டவர் கலாநிதி ர.சிறீஸ்கந்தராஜா.

கேள்வி: தலைவர் அவர்களை சந்திப்பதற்கு உங்களுக்கு வாய்ப்புக்கள் ஏதும் கிட்டியதா?

பதில்: ஐந்து தடவைகள் சந்தித்திருக்கிறேன்.

கேள்வி: அவரை சந்தித்த பொழுது எவ்வாறான விடயங்களை நீங்கள் உரையாடிக் கொண்டீர்கள்?

பதில்: ஒரு தடவை சந்தித்த பொழுது ஓரிடத்தில் இருந்து சாப்பிட்டோம் – அண்ணையுடன் இருந்து சாப்பிட்டோம். அண்ணை எல்லோரையும் இருக்க விட்டு – நாங்கள் அண்ணை சாப்பாட்டில் கைவைத்த பின்னர் சாப்பிடுவோம் என்று இருக்க – அண்ணை வந்திருந்து சொன்னார் ‘சாப்பிடுங்கடா’ என்று. ‘அண்ணை நீங்கள் சாப்பிடுங்கோ’ என்றோம். ‘நீங்கள் முதலில் சாப்பிடுங்கடா’ என்று நாங்கள் சாப்பிடுவதை – ஒவ்வொரு போராளியும் சாப்பிடுவதை அண்ணை – நான் அண்ணையைப் பார்த்தேன் – ஒவ்வொரு போராளியும் எப்படிச் சாப்பிடுகின்றார்கள், மனசாக, சந்தோசமாகச் சாப்பிடுகின்றார்களா என்று சொல்லி சாப்பிட்டுக் கொண்டு – அண்ணை சொல்வார், ‘சாப்பிடேக்கை புலனை அங்கை இங்கை திருப்பாமல் அமைதியாக சாப்பாட்டை இரசித்துச் சாப்பிடுங்கோ’ என்று.

இரண்டாவது, ஒவ்வொரு போராளியையும் அண்ணை சந்திக்கும் பொழுது தனிப்பட்ட பிரச்சினையில் இருந்து கேட்பார். ‘குடும்பப் பிரச்சினை, நீ எங்கே இருக்கின்றாய்? எந்த ஊர்? எங்கிருந்து வந்தாய்? உனது சகோதரம் எத்தனை?’ என்று.

அப்படியொரு சந்தர்ப்பத்தில் அண்ணை என்னைக் கேட்டார், ‘நீ எந்த ஊர்?’ என்று. நான் என்னுடைய ஊரைச் சொன்னதும் உடனே கேட்டார் அப்பாவின் பெயரை. ‘இந்த ஆள் இந்த இடம் தானே?’ என்று. அப்பொழுது நான் சொன்னேன் அவரது மகன் நான் என்று. முதலாவது கேட்ட வசனம், ‘அப்ப என்னத்துக்கு இயக்கத்துக்கு வந்தாய்? உன் அப்பா போராளி என்றால் நீ எதற்கு இயக்கத்திற்கு வந்தாய்?’ என்று.

அப்பொழுது நான் சொன்னேன், ‘இல்லை, பல தடவைகள் இயக்கத்திற்கு வருவதற்கு நான் முயற்சித்து, திருப்பித் திருப்பிக் கொண்டு போய் வீட்டில் விட்டார்கள். நான் தான் கட்டாயத்தின் பேரில் இல்லை இயக்கத்திற்கு வரப் போகின்றேன் என்று சொல்லித்தான் வந்தேன்’ என்று.

‘யார் உன்னை இயக்கத்தில் சேர்த்தார்கள்?’ என்றார். நான் சொன்னேன் சேர்த்தவர்களில் எந்தப் பிழையும் இல்லை. ‘நானாக உணர்ந்து, நானாக இந்தப் போராட்டத்திற்குக் கடமை ஆற்ற வேண்டும் என்று வந்தேன்’ என்று சொல்ல ‘ஓ.கே.’ (சரி) என்றார்.

கேள்வி: உங்களுடைய தந்தை மற்றும் சகோதரர்கள் – அவர்களைப் பற்றிக் கூறுங்கள்?

பதில்: என்னுடைய தந்தை ஆரம்ப காலத்தில் இருந்து விடுதலைப் புலிகளின் ஒரு உறுப்பினர். போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து வேலை செய்தவர். கடைசியாக முள்ளிவாய்க்காலில் வந்து வீரச்சாவைத் தழுவினார். 16ஆம் திகதி இரவு தான் வீரச்சாவடைந்தார்.

குடும்பப் பின்னணி என்று பார்த்தீர்கள் என்றால் எனது அண்ணாவும் போராளியாக இருந்தார். ஆரம்ப காலத்தில் – பின்னர் நான் போராட்டத்தில் போய் வேலை செய்யும் பொழுது – மூன்று பேர் போராட்டத்தில் இருக்கின்றோம் என்று – யாராவது ஒரு ஆள் வீட்டிற்கு செல்லுங்கள் என்று சொன்ன இடத்தில் நான் போக மறுத்து விட்டேன். அப்பாவும் வீட்டிற்குப் போக மறுத்து விட்டார். அண்ணாவும் போக மறுத்தும் கட்டாயத்தில் ‘இல்லை நீங்கள் போக வேண்டும்தான்’ என்று கூறி வீட்டிற்கு அனுப்பினார்கள்.

கேள்வி: இன்று உங்கள் குடும்பத்தினர் – ஏனையவர்கள் – எங்கே இருக்கின்றார்கள்? நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள்?

பதில்: என்னுடைய அம்மா 1996ஆம் ஆண்டு இறந்து விட்டார். அப்பா முள்ளிவாய்க்காலில் இறந்து விட்டார். சகோதரர்களுடன் நான் எந்த விதமான தொடர்பையும் வைத்திருக்க விரும்பவில்லை. என்னால் அவர்களுக்குப் பிரச்சினை வரும் – வந்தும் இருக்கின்றது. ஏனென்றால் நான் இங்கு வந்து ஐக்கிய நாடுகள் சபைக்குச் சாட்சி சொன்னேன். இங்கு ரி.வி சனல்கள் (தொலைக்காட்சிகள்) கேட்ட பொழுது சிறீலங்கா இராணுவம் எங்களுக்கு என்ன செய்தது, முள்ளிவாய்க்காலில் என்ன நடந்தது, எப்படி காயப்பட்டவர்களை உயிருடன் சுட்டார்கள், என்னுடைய மருத்துவமனையில் வைத்து எப்படிச் சுட்டார்கள் என்பதை நான் வெளியில் சொல்லியிருந்தேன். அதனால் – என்னால் – அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் வரக் கூடாது. ஏனென்றால் அவர்கள் தமது பாட்டில், தமது குடும்பம் என்று இருக்கின்றார்கள். நான்தான் போராட்டத்தில் உள்வாங்கப்பட்ட ஆள். அதனால் நான் அவர்களுடன் எந்த விதமான உறவையும் வைத்திருக்க விரும்பவில்லை.

கேள்வி: நீங்கள் இறுதி யுத்தத்தில் எதிரியிடம் சிறைப்பட்டீர்கள். உங்களுடைய வதைமுகாம் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

பதில்: முள்ளிவாய்க்காலில் – முள்ளிவாய்க்கால் என்பதை விட வட்டுவாகல் எனலாம். முள்ளிவாய்க்கால் முடிவு, வட்டுவாகல் தொடக்கம். அங்கு தான் என்னுடைய மருத்துவமனை இயங்கிக் கொண்டிருந்தது. 16ஆம் திகதி இரவு சரமாரியாக ரவுண்ஸ் (வெடிச்) சத்தம் கேட்க நாங்கள் வெளியில் பார்த்தோம். காயப்பட்டவர்களை இராணுவம் சுட்டுக் கொண்டு வந்தது. எல்லோரும் கத்துவது கேட்டது – காயப்பட்டவர்கள் கத்துவது கேட்டது. என்னுடைய காணிக்குள் மட்டும் கிட்டத்தட்ட ஆயிரத்திற்கு மேற்பட்ட காயக்காரர்கள் இருந்தார்கள் – அந்த மருத்துவமனை காணிக்குள். வந்த இராணுவம் காயப்பட்டவர்கள் என்றுகூட பார்க்கவில்லை – சுட்டுக் கொண்டுதான் வந்தது. சுட்டுக் கொண்டு வரும் பொழுது நாம் வெளியில் வந்த பொழுது ஆமி (இராணுவம்). அப்பொழுது ஒன்றும் செய்ய இயலாது. நாங்கள் கத்தினோம் ‘எழும்பி ஓடக் கூடிய ஆட்கள் எல்லாம் எழும்பி ஓடுங்கோ, ஆமி’ என்று. அப்பொழுது சின்னக் காயங்கள் உள்ளவர்கள் எல்லாம் எழும்பி ஓடி விட்டார்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள். மற்றைய காயக்காரர்களை ஆமி சுட்டு விட்டான். அதில் அவர்கள் எவருமே தப்பவில்லை என்பது உண்மையானது. சுட்டதை நாம் பார்த்தோம் கண்ணால். பின்னர் நாம் 16ஆம் திகதி இரவு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரும் பொழுது ஒரு கட்டத்தில் இரண்டு பக்கத்தில் உள்ள ஆமியும் சேர்ந்து விட்டார்கள். வேறு இடம் கிடைக்கவில்லை – ஒன்றுமே செய்ய இயலவில்லை.

அப்பொழுது நாங்கள் சனமாக சறத்தை மாற்றிக் கொண்டு சனங்களோடு சனங்களாக நிற்கும் பொழுது – காட்டிக் கொடுப்புக்கள் மத்தியில் – காட்டிக் கொடுக்கப்பட்டு அதில் வைத்து பிடித்துக் கையெல்லாம் கட்டி கடுமையான அடி. காட்டிக் கொடுத்தவர் என்னை டொக்டர் என்று சொல்லித்தான் காட்டிக் கொடுத்தார். அதனால் தான் நான் இன்று உயிர் தப்பியிருக்கின்றேன் என்று நினைக்கின்றேன். அடித்தவுடன் கேட்டான் ‘நீ டொக்டரா?’ என்று. ‘ஓம்’ என்று விட்டேன். ‘ஓம்’ என்றவுடன் அவன் அதில் கேட்கவில்லை – ‘இயக்கமா?’ என்ற கேள்வியை அந்த இடத்தில் கேட்கவில்லை. அதில் வைத்து எனக்கு கடுமையான அடி. அடியென்றால் – அதில் டபிளாக நேர்சிங் ஸ்ராவ்விற்கு (மருத்துவப் பணியாளர்களுக்கு) – எல்லோருக்குமே அடிதான் கட்டிப் போட்டு. அடித்து விட்டு அங்கிருந்து கொண்டு வந்து – வட்டுவாகல் பாலத்திற்கு ஊடாக கொண்டு வந்து – முல்லைத்தீவில் உள்ள பழைய டிப்போவிற்கு (தரிப்பிடம்) பின்பக்கம் உள்ள வெட்டையில் கொண்டு வந்து மக்களோடு மக்களாக எம்மை இருத்தி – அவ்விடத்தில் வைத்து இருத்தினார்கள். இருத்தும் பொழுது அதில் உள்ள ஆள் ஒருவர் – இராணுவத்துடன் உள்ள ஒரு ஆள் – என்னைக் காட்டிக் கொடுத்தார் இவர் போராளி மருத்துவர் என்று. அதில் வைத்து என்னைப் போராளியாக இனம் கண்டு என்னை சிறைப்பிடித்தார்கள்.

அதில் வைத்துக் கையைக் கட்டி – அதில் வைத்து அடி – அடிகளுக்குக் குறைவில்லை. அடியென்றால் சூ கால் (காலணி), பனை மட்டை – கிடந்த எல்லாவற்றாலும் அடித்தார்கள். எனக்கு மட்டுமல்ல, என்னோடு பிடிபட்ட அவ்வளவு போராளிகளுக்கும். அங்கிருந்து கையிற்கு ஹான்ட் கவ் (கைவிலங்கு) அடித்து – அங்கிருந்து ஓமந்தைக்குக் கொண்டு வந்து, ஓமந்தையில் வைத்து எம்மைப் படம் எடுத்து விட்டு, அங்கிருந்து இறம்பைக்குளம் கேர்ள்ஸ் (மகளிர்) பள்ளிக்கூடத்தில் கொண்டு போய் விட்டார்கள். அதில் போராளிகள் என்று சொல்லி இரண்டாயிரம் பேரைக் கொண்டு வந்து வைத்திருந்தார்கள். ஆனால் இரண்டாயிரம் பேரும் பொராளிகள் அல்ல. பதினைந்து வருடத்திற்கு முன்னர் இயக்கத்தில் இருந்து விலகியர்களையும் போராளிகள் என்று கொண்டு வந்து வைத்திருந்தார்கள். இரண்டாயிரம் பேரில் இயக்கம் என்று பார்த்தால் ஐநூறு பேரும் இல்லை. ஆனால் அவர்களுக்கு யார் இயக்கம் என்று தோன்றினாலும் அவரை அதில் வைத்துப் பிடித்திருந்தார்கள். அங்கு கொண்டு வந்து வைத்து – இறம்பைக்குளம் பள்ளிக்கூடத்தில் – எல்.ஆர்.ஆர்.பி (ஆழ ஊடுருவும் படையணி) என்ற சிறீலங்காவின் ஆழ ஊடுருவும் அணிதான் இறம்பைக்குளம் பள்ளிக்கூடத்திற்குப் பொறுப்பாக இருந்தது. அங்குதான் சித்திரவதைகள் எங்களுக்கு ஆரம்பம்.

ஒன்றரை லீட்டர் தண்ணீர் போத்தலில் மூன்று தண்ணீர் போத்தல்கள் தருவார்கள் – மூன்று தண்ணீர்ப் போத்தல்களில் தான் தண்ணீர் தருவார்கள். அந்த மூன்று தண்ணீர்ப் போத்தல்களில் தான் குளிக்க வேண்டும் – குளிப்பது மூன்று தண்ணீர்ப் போத்தல்களில் தான். அதில் ஒரு தண்ணீர் போத்தல் ரொய்லட்டிற்கு (கழிவறைக்கு). குளிக்கப் போகும் பொழுது அதில் வைத்து அடிப்பார்கள். நிற்பவன், போகிறவன், வருபவன் எல்லோரும் புட்போல் பந்து (கால்பந்து) மாதிரித்தான் – அந்த இரண்டாயிரம் பேரையும் அங்கு புட்போல் பந்து (கால்பந்து) மாதிரித் தான் வைத்து – நின்றவன், போனவன், வந்தவன் எல்லோரும் அடிதான் – தும்புக் கட்டை. அவர்களுக்குப் பொழுது போகவில்லை என்றால் – என்ன செய்வார்கள் என்றால் ரூமிற்குள் பொடியளை உடுப்பில்லாமல் – உடுப்பைக் கழற்றி விட்டு – அவர்களுக்கு அடிப்பது. தலைகீழாக நிற்க விடுவது. தலைகீழாகக் கட்டித் தூக்குவது. எங்களை ஒரு விளையாட்டுப் பொருளாகத்தான் அங்கு வைத்துப் பயன்படுத்தினார்கள்.

பின்னர் அங்கு ஐ.சி.ஆர்.சிக்கு (செஞ்சிலுவைச் சங்கம்) இவ்வாறு இரண்டாயிரம் பேரைக் கொண்டு வந்து சித்திரவதை செய்கிறார்கள் என்ற விபரம் தெரிய வரும் பொழுது, ஐ.சி.ஆர்.சி உடனடியாக அங்கு வந்தது. ஐ.சி.ஆர்.சி வந்து இரண்டாயிரம் பேரின் விபரத்தை எடுத்தது. அந்த இரண்டாயிரம் பேரின் விபரங்களை எடுப்பதற்கு முன்னரே கிட்டத்தட்ட முன்னூறு பேரை எடுத்து விட்டார்கள் – அங்கிருந்து கொண்டு போய் விட்டார்கள் – சந்தேகப்பட்டு – இவர்கள் பெரிய ஆட்கள் என்று சந்தேகப்பட்டுக் கொண்டு போய் விட்டார்கள். அதன் பின்னர் தான் ஐ.சி.ஆர்.சி வந்தது. அந்த முன்னூறு பேரும் எங்கு என்று தெரியாது.

ஐ.சி.ஆர்.சி அங்கு வந்து எங்களின் பெயர், விபரங்களை எடுத்த பின்னர், அங்கிருந்து என்னை ஐநூறு பேருடன் சேர்த்து வவுனியா பூந்தோட்டம் பள்ளிக்கூடத்தில் விட்டார்கள். பூந்தோட்டம் பள்ளிக்கூடத்தில் ஐநூறு பேருடன் வைத்திருந்து – அங்குதான் ரி.ஐ.டி – சிறீலங்காவின் ரெறறிஸ்ட் இன்ரெலிஜென்ற் டிப்பார்ட்மென்ட் (பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு) என்று சொல்லும் அமைப்பு – என்னை அரஸ்ட் (கைது) பண்ணியது. அரஸ்ட் (கைது) பண்ணி வவுனியா ஜோசப் காம்பில் (முகாமில்) கொண்டு போய் வைத்திருந்தார்கள். வவுனியா ஜோசப் காம்பில் (முகாம்) என்னைக் கேட்டிருந்தார்கள், ‘பிரபாகரன் எங்கே, தளபதிகள் எங்கே, தாட்டு வைத்த ஆயுதங்கள் எங்கே?’ என்று. இதுதான் அவர்களின் மூன்று கேள்விகளும்.

இரண்டாவது நான் தளபதி என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும். நான் சொன்னேன் ‘நான் தளபதி இல்லை. நான் ஒரு கள மருத்துவர். தேசியத் தலைவர் எங்கு என்று எனக்குத் தெரியாது: தளபதிகள் எங்கு என்பதும் எனக்குத் தெரியாது. ஏனென்றால் நான் மருத்துவமனையில் நின்று வேலை செய்தேன்’ என்று சொன்னேன். ‘இல்லை நீ மருத்துவமனையில் வேலை செய்தாய் என்றால் நீ கடைசியாக இருந்த ஹொஸ்பிட்டலில் (மருத்துவமனையில்) தான் நீ பிடிபட்டுள்ளாய். இவர்கள் தப்பியிருந்தால் உன்னிடம் தான் மருந்துகள் எல்லாமே வாங்கி விட்டுப் போயிருக்க வேண்டும். அல்லது இவர்களுக்கு ஏதாவது நடந்திருந்தால் அந்த விடயம் உனக்குத் தெரியும்.’ அவர்கள் எங்கு என்றுதான் கேட்டிருந்தார்கள். நான் சொன்னேன் அது தெரியாது என்று. தெரியாது என்று சொல்லும் பொழுது என்னை அடித்தார்கள் கடுமையாக. தலைகீழாகக் கட்டிப் போட்டு அடித்தார்கள். ரீப்பையால் (பலகை) அடித்தார்கள். காலில் உள்ள பெருவிரல் நகம் இரண்டும் பிடுங்கினார்கள் – கால் பெருவிரல் நகம். நான் சொல்லியிருந்தேன் நான் ஒரு கள மருத்துவர், அதை விட எனக்கு எதுவும் தெரியாது என்று. அவன் சொன்னான், ‘நீ கள மருத்துவர் அல்ல. நீ தளபதி என்பதை ஒத்துக் கொள்’ என்று. ‘நீ கள மருத்துவராய் இருக்கவில்லை. உனது உடல் தோற்றத்தைப் பார்க்கும் பொழுது நீ ஒரு தளபதி: நீ ஒரு சாதாரண போராளியோ அல்லது மருத்துவரோ அல்ல. தளபதி’ என்று. அப்பொழுது நான் சொன்னேன் ‘இல்லை நான் தளபதியாக இருக்கவில்லை: நான் போராளியாகத்தான் இருந்தேன்’ என்று. ஆனால் இந்த இடத்தில் என்னுடைய அப்பா போராளியோ, அல்லது என்னுடைய சகோதரம் போராளியோ என்பதை அதில் நான் சொல்லவில்லை – அங்கு போய் சொல்லவில்லை. திரும்பவும் நான் எதையும் ஒத்துக் கொள்ளவில்லை என்று வவுனியா ஜோசப் காம்பில் (முகாம்) இருந்து பூசாவிற்கு கொண்டு போனார்கள். பூசாவிலும் கொண்டு போய் இதே விசாரணைதான். பெற்றோல் சொப்பிங்க் பாக் (நெகிழப் பை) போட்டார்கள் முகத்தில். தலைகீழாகக் கட்டி வைத்து அடித்தார்கள். உடுப்புகள் இல்லாமல் அடித்தார்கள். காலில் உள்ள மற்றைய நகங்களையும் பிடுங்கினார்கள் – ஒத்துக் கொள்ளச் சொல்லி. மற்றையது வயர்களால் (மின்சாரக் கம்பிகளால்) அடித்தார்கள். செயினால் (சங்கிலிகளால்) அடித்தார்கள். மற்றையது இரண்டு மேசைக்கிடையில் கட்டைகளைப் போட்டுக் கையையும், காலையும் கட்டிப் போட்டுத் தொங்கப் போட்டிருந்தார்கள். என்ன செய்வார்கள் என்றால் நடுச்சாமத்தில் – நாம் நித்திரையாக இருக்கும் ரைமில் – கொண்டு போய் நித்திரை கொள்ள விடாமல்தான் அடிப்பார்கள். அடித்துப் போட்டு, விடியற் காலையில் கொண்டு போய் விடுவார்கள். இது எனக்கு மட்டுமல்ல நிறையப் பேருக்கு – சந்தேகத்தின் பேரில் பிடிப்பட்ட ஆட்களுக்கு. இவர் ஒரு தளபதியாக இருப்பார் அல்லது இவரைக் கொண்டு போய் அடித்தால் விசயங்களை எடுக்கலாம் என்றால். அவர்கள் என்ன கேட்டார்கள் என்றால் ‘தாட்டு வைத்திருக்கும் ஆயுதங்களை எடுத்துத் தா’ – இது ஒன்று.

இரண்டாவது ‘எங்கே – தமிழீழத் தேசியத் தலைவர் எங்கே? அவரோடு இருந்த தளபதிகள் எங்கே? அவையளைச் சொல்லு. அவையளைக் காட்டு. அவர்கள் கடலால் தப்பினார்களா? அல்லது காட்டுக்குள் போனார்களா? அவர்கள் எங்கே?’ இதுதான் அவர்களின் கேள்விகளாக இருந்தது.

அவற்றிற்கு எம்மிடம் பதில் இல்லை என்றால் நீ ஒரு தளபதி என்பதை ஒத்துக் கொள். ரெக்கோர்ட்டை (பதிவு சாதனம்) கொண்டு வந்து வைத்து விட்டு வாய் மூலமாக கேட்பார்கள். நீ தளபதி என்பதை ஒத்துக் கொள் என்று. சில பேர் எல்லாம் – இயக்கத்தில் வந்து மூன்று, நான்கு மாதம் இருந்தவனாக இருப்பான் – அடி தாங்க இயலாமல் – அவன் ஒரு தளபதியாக இருந்திருக்க மாட்டான் – ‘ஓம்’ என்று சொல்லி விடுவான்.

ஆனால் ‘ஓம்’ சொன்னவர்கள் எங்கு என்பது தெரியாது. ‘ஓம்’ என்று சொன்னால் இரண்டு நாட்களுக்கு அடி இருக்காது. அவன் வந்து சொல்லுவான் ‘எனக்கு அடி இல்லை. நான் கேட்ட பொழுது ஓம் என்று சொல்லி விட்டேன்’ என்று. பின்னர் பார்த்தால் ஆள் இருக்காது. எங்கு கொண்டு போனார்கள், அதற்குப் பின்னர் என்ன நடந்தது என்று தெரியாது. என்னைப் பூசாவில் வைத்து அவ்வளவு அடி அடித்தும், நான் ஒன்றுமே ஒத்துக் கொள்ளவில்லை. திரும்பவும் நான்காம் மாடிக்கு கொண்டு போனார்கள். கொண்டு போய் நான்காம் மாடியில் ஏழு நாள் வைத்து கடுமையான அடி. கடைசியில் சொன்னார்கள், நீ ஒத்துக் கொள்ளவில்லை என்றால் உன்னை இல்லாமல் செய்வோம் என்று. ஆனால் எனக்கு ஒரு நம்பிக்கை இருந்தது – ஐ.சி.ஆர்.சி வந்து என்னைப் பார்க்கும் பொழுது சொன்னது உன்னை எங்கு கொண்டு போனாலும் நாங்கள் உன்னைப் பின்தொடருவோம் என்று – உன்னை எங்கு கொண்டு போனாலும் நாங்கள் உன்னை பின்தொடருவோம். உனது உயிருக்கு ஆபத்தில்லை: ஆனால் உனது சித்திரவதைகளை எங்களால் நிற்பாட்ட இயலாது. சித்திரவதை செய்வார்கள்: உனது உயிருக்கு ஆபத்து இல்லாமல் நாங்கள் பாதுகாத்துத் தருவோம் என்று. என்னை ஜோசப் காம்பிற்கு (முகாமிற்கு) கொண்டு வரவும், ஐ.சி.ஆர்.சி ஜோசப் காம்பிற்கு வந்து விட்டது.

மற்றையது ஐ.சி.ஆர்.சிக்கும் சொல்ல இயலாது – அங்கு நடக்கின்ற சித்திரவதைகள். அப்படி நாங்கள் சொல்வோமாக இருந்தால் – இது முக்கியமான விடயம். நான் பதிவு செய்ய விரும்புகிறேன். ஐ.சி.ஆர்.சி வரப் போகின்றது என்றால், அவ்வளவு போராளிகளுக்கும் சொல்லி விடுவார்கள், ஐ.சி.ஆர்.சிக்கு நாங்கள் செய்கிற எந்த விதமான சித்திரவதைகளையும் நீங்கள் சொல்லுவீர்களாக இருந்து, அந்த விடயம் எங்களிடம் பிடிபடுமாக இருந்தால் – நீங்கள் சொல்லிப் பிடிபடுமாக இருந்தால் – நிச்சயமாக உங்களைக் கொல்வோம். அது ஐ.சி.ஆர்.சி – அடுத்த கட்டம் உங்களைக் கொல்வோம். அந்தப் பயத்தில் ஒருத்தரும் இவர்கள் அடிக்கும் அடியில் – ஐ.சி.ஆர்.சி வந்து கேட்கும் ‘அடித்தவர்களா?’ என்று – முதலில் இல்லை என்று சொல்வோம். அவர்கள் கேட்பதற்கு முதலே சொல்வோம் இல்லையென்று. ஐ.சி.ஆர்.சிக்கு தெரியும் இவர்கள் முதலில் அடிவாங்கித்தான் இருக்கிறார்கள், ஆனால் சொல்ல இயலாத நிலைமையில் தான் இருக்கிறார்கள் என்றும் தெரியும். ஒரு ஜெயலிற்குள் (சிறைக்குள்) இருக்கும் ஆட்களுக்கு ஐ.சி.ஆர்.சி சித்தாலெப்பை (தைலம்) கொண்டு வந்து கொடுக்கின்றது என்றால் – ஐ.சி.ஆர்.சிக்கு தெரிந்து சித்தாலெப்பை கொடுக்கின்றது என்றால் – சித்தாலெப்பை ஜெயிலில் இருப்பவர்களுக்குத் தேவையில்லை. அந்த அடி, வேதனை – அதை ஓரளவுக்குப் போட்டால் நோவு குறைந்த மாதிரி இருக்கும். நான்காம் மாடியில் பார்த்தீர்கள் என்றால், இரண்டு நாள் சாப்பாடு தரவில்லை. ஒப்புக் கொள் – வொயிஸ் ரெக்கோர்ட்டைக் கொண்டு வந்து கேட்டார்கள் ஒப்புக் கொள் – நீ தளபதி என்பதை ஒப்புக் கொள். இல்லாவிடின் காட்டித் தா – டம்ப் (பதுக்கி) வைத்திருக்கும் இடத்;தைக் காட்டித் தா, உன்னை விடுகிறோம். இதுதான் அவர்களின் கேள்வியாக இருந்தது. சித்திரவதைகள் என்பதற்குக் குறைவே இல்லை. அவ்வளவு போராளிகளையும் அணுவணுவாகச் சித்திரவதை செய்தார்கள்.

கேள்வி: இவை திட்டமிடப்பட்ட முறையில் நடைபெற்றனவா? அல்லது கண்மூடித்தனமாக முறையில் நடைபெற்றனவா?

பதில்: திட்டமிட்டுத்தான் செய்யப்பட்டது. திட்டமிட்டு – என்னவென்று சொல்வது – எங்களை எப்படியாவது ஒரு மனநோயாளியாக மாற்ற வேண்டும். அவ்வளவு போராளிகளையும் மனநோயாளிகளாக மாற்ற வேண்டும் என்பது – என்னுடைய அபிப்பிராயம் – அப்படித்தான் அவர்களின் சிந்தனை இருந்தது. அப்படித்தான் எங்களைக் கையாண்டார்கள் – ஒவ்வொரு போராளிகளையும்.

கேள்வி: நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள் உங்களையும், ஏனைய ஆண்களையும் நிர்வாணப்படுத்தி விட்டுத் தாக்குவார்கள் என்று. இதேநேரத்திலே ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது பெண்கள் மீது பாலியல் வன்முறைகள் நடைபெற்றது போன்று – பாலியல் வல்லுறவுகள், பாலியல் வன்கொடுமைகள் நடைபெற்றது போன்று – ஆண்கள் மீதும் நடைபெற்றதாகவும் சில குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன. இதைப் பற்றிக் கூற முடியுமா?

பதில்: இந்தச் சம்பவம் நடந்தது வவுனியா இறம்பைக்குளம் பள்ளிக்கூடத்தில். வவுனியா இறம்பைக்குளம் பள்ளிக்கூடத்தில் – அதாவது சில ஆண்களைப் பார்த்தால் பெண்களின் தோற்றங்கள் மாதிரி உடைய ஆண்களை – கொண்டு போய் மிஸ் யூஸ் (முறைகேடு) பண்ணினார்கள். அதாவது அவர்களுடைய செக்ஸிற்கு (பாலுணர்வுக்கு) இவர்களை இச்சையாகப் பயன்படுத்தினார்கள். அவர்கள் அதற்கு ஒத்துக் கொள்ளாத சந்தர்ப்பத்தில் அவர்களைக் கடுமையாக அடித்து சித்திரவதை செய்தார்கள். அதேபோல் வவுனியா ஜோசப் காம்பில் (முகாம்) – ஜோசப் காம்பிற்கு உள்ளேதான் எங்களை வைத்திருந்தார்கள் – அதற்குள் பெண் பிள்ளைகளைக் கொண்டு வந்து வைத்திருந்தார்கள். இரவில் எல்லாம் அந்தப் பெண் பிள்ளைகளைப் பிடித்துக் கொண்டு போய் – நாங்கள் நேரே கண்ணால் பார்ப்பதில்லை. பிள்ளைகளைப் பிடித்துக் கொண்டு போகும் பொழுது நாங்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த இடத்தைத் தாண்டித் தான் பெண்களின் இடத்திற்குப் கொண்டு போக வேண்டும். பிடித்துக் கொண்டு போகும் பொழுதே தெரியும். பெண் பிள்ளைகள் வரும் நிலைமையும் – படுமோசமான நிலைமையில்தான் கொண்டு வருவார்கள்.

கேள்வி: நீங்கள் எதிர்கொண்ட சித்திரவதைகள் எவ்வாறான ஒரு சூழலில், அல்லது எந்தவொரு கட்டத்தில் முடிவுக்கு வந்தன?

பதில்: ஒரு கட்டத்தில் – என்ன நடந்தது என்றால் – எங்களை எல்லா விதத்திலும் விசாரித்துப் பார்த்தும் அது சரிவரவில்லை அவர்களுக்கு. அப்பொழுது தாங்கள் கோர்ட்டிற்கு (நீதிமன்றத்திற்கு) போடப் போவதாகச் சொன்னார்கள். ‘நீங்கள் ஒப்புக் கொள்ளவதாகவில்லை. நாங்கள் கோர்ட்டில் போட்டு உங்களுக்கு கோர்ட்டில் தண்டனை வாங்கித் தரப் போகிறோம்’ என்று. திரும்பவும் எங்களை கொழும்பு ஹை கோர்ட்டிற்கு (உயர் நீதிமன்றத்திற்கு) போட்டார்கள் – நாற்பத்து நான்கு பேரை –நாற்பத்து நான்கு பேரை முதலில் போட்டார்கள். அங்கு நீதிபதி என்னைக் கேட்டார் – ஒரு பெண் நீதிபதி – ‘நீ குற்றவாளியா? சுற்றவாளியா?’ என்று. நான் சொன்னேன் எனக்குத் தெரியாது என்று. அவர் கேட்டார் ஏன் தெரியாது என்று. நான் சொன்னேன் ‘தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு நாட்டில்தான் நான் இருந்தேன். நான் இலங்கையில் இருக்கவில்லை. அங்கு ஒரு தனி அரசாங்கத்தின் கீழ்தான் நான் இருந்தேன். அந்த அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்குள் இருந்ததால் நீங்கள் கேட்பது – குற்றவாளியா? சுற்றவாளியா? என்பது – எனக்குக் கேள்விக்குறியாக இருக்கின்றது. தமிழீழ விடுதலைப் புலிகள் குற்றவாளி என்றால் நானும் ஒரு குற்றம் இழைக்கப்பட்டவனாகவே இருப்பேன்’ என்றேன். அவர் சொன்னார் ‘நீ விசித்திரமான ஒரு பதில் சொல்கிறாய்’ என்று. நான் சொன்னேன் ‘எனக்குத் தெரியாது – இந்த நாட்டின் சட்டம் எனக்குத் தெரியாது. நான் போராட்டத்தில் மருத்துவராக இருந்தது உண்மை – கள மருத்துவராக இருந்தது உண்மை. ஆனால் நான் இருந்ததற்கான காரணம் தொடர்ச்சியான – எங்களின் இடங்களில் – விமானத் தாக்குதல், குண்டுத் தாக்குதல், மக்கள் சாவது, பாடசாலை மாணவர்கள், கோவில்கள் எல்லாமே நாசமானதால் நான் போராட்டத்திற்குப் போனேன். நான் இந்தப் போராட்டத்தில் ஆயுதத்தை விரும்பி எடுக்கவில்லை – நானாக விரும்பிப் போய் ஆயுதத்தை எடுக்கவில்லை. ஆனால் இந்தச் சூழ்நிலைகள் என்னை இந்தப் போராட்டத்திற்குள் திணித்தன. சூழ்நிலையால் தான் நான் இந்தப் போராட்டத்திற்குப் போனேன் என்றேன்.

கேள்வி: எவ்வாறு நீங்கள் இறுதியில் விடுவிக்கப்பட்டீர்கள்?

பதில்: கோர்ட்சிற்கு (நீதிமன்றத்திற்கு) போட்டு, கோர்ட்டால் றிமான்ட்டில் (தடுப்பில்) போட்டார்கள். றிமான்டில் வெலிக்கந்தை என்ற இடத்தில் இருக்கும் பொழுது, அங்குள்ள இராணுவக் கப்டன் ஒருவரைப் பிடித்து, அவரோடு கதைத்துக் ‘காசு தரலாம் வெளியில் விடு’ என்று கேட்டேன். முதலில் மறுத்தார். பின்னர் ஒப்புக் கொண்டார். பின்னர் அவருக்குக் காசு கொடுத்தேன். அவர் நான் காயப்பட்ட ஒரு ஆள், இவரை வைத்திருக்க இயலாது என்று சொல்லி – தலையில் காயமிருப்பதால் தலைக் காயப்பட்டவர், இவரை வைத்திருக்க இயலாது என்று சொல்லி – அவர் உள்ளால் வேலை பார்த்து, ‘ஆறு மாதத்திற்குள் நாட்டை விட்டு வெளியால் போ, இல்லாவிடின் ஆறு மாதத்தால் உன்னைப் பிடித்து விடுவார்கள்’ என்றார். அவர்கள் தந்த கடிதத்தில் ஆறு மாதம் தான் – எக்ஸ்பயரி டேற் (காலவதித் திகதி) ஆறு மாதம் தான் போட்டிருந்தது. அதில் போட்டிருந்தது ‘ஆறு மாதத்தில் இவர் விடுதலைப் புலிகள் சம்பந்தமானது எதிலாவது ஈடுபடுவாராக இருந்தால், இவரை நாங்கள் திருப்பிப் பிடிப்போம்’ என்று.

கேள்வி: இவர்கள் புனர்வாழ்வு அளித்துப் போராளிகளை விடுவித்ததாகக் கூறுவார்கள். உங்களுக்கு அப்படி ஏதாவது நடந்ததா?

பதில்: புனர்வாழ்வு என்று அங்கு ஒன்றுமே இல்லை. சேம் தான் (ஒரே மாதிரித்தான்) – ஜெயில் (சிறை) தான் – அதுவும் ஜெயில் தான். புனர்வாழ்வு என்று சொல்வது ஒருவருக்கு ஒரு தொழிலைக் கற்பித்து, அந்தத் தொழிலை வெளியால் போய் அவர் – அதே தொழிலை – செய்து, அல்லது முன்னுக்கு வர வைப்பதுதான் புனர்வாழ்வு. புனர்வாழ்வு என்ற பெயரில் முன்னுக்கு உள்ள பதாகைகள் – அந்தக் காம்ப்களின் (முகாம்களின்) பதாகைகள் ஒவ்வொன்றும் புனர்வாழ்வு என்று போடப்பட்டிருக்கும். ஆனால் உள்ளுக்குள் அங்கு ஒரு போராளிகளுக்கும் புனர்வாழ்வு என்று இல்லை. அங்கு உள்ளுக்குள்ளும் ஜெயில் (சிறை) தான்.

கேள்வி: புனர்வாழ்வு என்று கூறப்படும் இந்த முகாம்களிலே போராளிகளை சிங்கள தேசிய கீதத்தைப் பாடவேண்டும், சிங்கள தேசிய கொடியின் கீழ் அதற்கு மரியாதை செலுத்த வேண்டும் என்றெல்லாம் கட்டாயப்படுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.

பதில்: கட்டாயப்படுத்தப்பட்டது – திணிக்கப்பட்டது. இது தான் உண்மை – திணிக்கப்பட்டது. தேசிய கீதம் பாட வேண்டும் என்பது திணிக்கப்பட்டது. அப்படிப் பாடாவிட்டால் பணிSமன்ற் (தண்டனை) கொடுப்பது – தேசியக் கொடி இறக்கப்படும் பொழுது தேசியக் கொடிக்கு மரியாதை செய்ய வேண்டும். மரியாதை செய்யாவிடின் திணிக்கப்பட்டது. எல்லாமே திணிக்கப்பட்டது. எதுவுமே விருப்பமாக செய்யவில்லை. எங்களுக்கு விரும்பாத விடயத்தை எல்லாம் திணித்தார்கள் ‘செய்’ என்று.

கேள்வி: உங்களுக்கு அது சம்பந்தமான அனுபவங்கள் இருக்கின்றதா? அதை நீங்கள் மறுத்த பொழுது அல்லது மீறிய பொழுது – அவர்களுடைய விதிமுறைகளை?

பதில்: நான் அடி வாங்கினேன் ஒரு தடவை. ஒரு தடவை விடிகாலையில் அவர்களின் தேசியக் கொடி ஏற்றும் பொழுது நான் போகவில்லை. அதனால் என்னை அடித்தார்கள் – போகததால்.

கேள்வி: இப்பொழுது நீங்கள் பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழ்கின்றீர்கள். இங்கே நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள்?

பதில்: இங்கே நான் இப்பொழுது படித்துக் கொண்டிருக்கிறேன். மற்றையது சரட்டி வேர்க் (அறப்பணி) செய்து கொண்டிருக்கின்றேன். இதுதான் எனது பணி.

கேள்வி: எவ்வாறான அறப்பணிகளை மேற்கொள்கின்றீர்கள்?

பதில்: அறப்பணிகள் – அங்கு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட போராளிகளுடைய பிள்ளைகள் – போராளிகள் என்பதை விட மாவீரர்களுடைய பிள்ளைகள் – இன்று நிர்க்கதியற்ற நிலையில் இருக்கின்றார்கள். எங்களின் போராட்ட காலத்தில் தமிழீழம் என்ற அமைப்பிற்குள் இருக்கும் பொழுது அந்த மாவீரர்களுடைய குழந்தைகள் – பிள்ளைகள் – நல்ல நிலையில் இருந்தார்கள். இப்பொழுது அதே மாவீரர்களின் மனைவி, பிள்ளைகள் மிகவும் கஸ்ரப்பட்ட நிலையில் இருக்கின்றார்கள். அப்படியான குடும்பங்களுக்கு இங்கு அகதியாக இருக்கின்ற ஆட்களிடம் போய் ஒவ்வொரு குடும்பங்களைப் பாருங்கள் என்று சொல்லி அவர்களை லிங்க் (இணைப்பு) பண்ணி விடுவதும். அதேபோல் இந்தப் போராட்டத்தால் ஊனமுற்று, இரண்டு கால்களை இழந்தவர்கள், இரண்டு கைகளை இழந்தவர்கள், இடுப்புக்குக் கீழே, கழுத்துக் கீழே பரலைஸ்டாக (செயலிழந்து) இருப்பவர்களுக்கு இங்கிருந்து உதவி செய்கின்றேன்.

கேள்வி: நல்லது கள மருத்துவர் உயற்சி அவர்களே, உங்களுடைய நேரத்தை ஒதுக்கி இந்தச் செவ்வியைத் தந்தமைக்காக. நன்றி.

பதில்: நன்றி.

நன்றி: ஈழமுரசு

  • நன்னிச் சோழன் changed the title to மருத்துவர் உயற்சியின் வதைமுகாம்கள் & கொலைவலயங்கள் பற்றிய வாக்குமூலம் | நேர்காணல் | தொடர்
  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, நன்னிச் சோழன் said:

சின்னச் சின்ன கொஸ்பிட்டல்களில் கூட – இருந்த மருத்துவர்களைப் பார்த்தீர்கள் என்றால், அரசாங்க மருத்துவர் ஒருவராக இருந்தால், மிகுதி ஐந்து பேரும் போராளி மருத்துவர்களாகத்தான் இருப்பார்கள். அது போராளி மருத்துவர்கள் என்பது வெளியால் உள்ள யாருக்கும் தெரியாது. நாங்கள் போராளிகள் என்று அவர்கள் இராணுவ உடையை அணிந்து கொண்டு வேலை செய்வதில்லை. அவர்களும் ஒரு சாதாரண மருத்துவராகவும், சாதாரணமாக வேலை செய்யும் ஒரு ஆளாகத்தான் வேலை செய்வார்கள். அது நிறைய மக்களுக்கும் தெரியும். நிறைய மக்களுக்கும் தெரியும். போராளிகள் என்று உடுப்பைப் போட்டுக் கொண்டு நாங்கள் வேலை செய்தால், அது இலங்கை விமானப் படைக்கு இது போராளிகளின் இடம் என்று சொல்லி விமானத் தாக்குதல்களை செய்து விடுவார்கள் என்பதால் சாதாரண பொதுமக்களாகத்தான் வேலை செய்தோம்.C

மேலே குறிப்பிட்ட இந்தத் தகவலால்  போரின் பொழுது மருத்துவ மனை மீது தாக்குதல் நடத்தியது சரி தான் என்று வாதிட இலங்கை அரசுக்கு வாய்ப்பாகி விடப் போகின்றது 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+
1 minute ago, பகிடி said:

மேலே குறிப்பிட்ட இந்தத் தகவலால்  போரின் பொழுது மருத்துவ மனை மீது தாக்குதல் நடத்தியது சரி தான் என்று வாதிட இலங்கை அரசுக்கு வாய்ப்பாகி விடப் போகின்றது 

எது எவ்வாறாக இருந்தாலும் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தக் கூடாது. 

அது போர் விதி மீறல்.

  • நன்னிச் சோழன் changed the title to வதைமுகாம்கள் & கொலைவலயங்கள் பற்றிய மருத்துவர் உயற்சியின் வாக்குமூலம் | நேர்காணல் | தொடர்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.