Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்+

  • முகவுரை:

தமிழர் வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட கடைசி வலிதாக்குதல் (offensive) நடவடிக்கையான "கேப்பாப்பிலவு ஊடறுப்புச் சமர்" இற்காக எழுதப்படும் கட்டுரை இதுவாகும். இவ்வூடறுப்புச் சமரானது தரையிறங்கி செய்யப்பட்டதால் ஈழப்போர் வரலாற்றில் தமிழர்களால் மேற்கொள்ளப்பட்ட கடைசி தரையிறக்கமாகவும் பதியப்படுகிறது.

வீரச்சாவடைந்துவிட்ட தேசியத் தலைவர் உயிருடன் உள்ளார் என்று கூறி நம்பவைக்கும் கபட நாடகத்திற்கு பாவிக்கும் முக்கிய கதையும் இதுதான். எனவே அன்று நடந்த அத்தரையிறக்கம் தொடர்பில் மக்களுக்கு அறிவூட்டுவதற்காக இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

இக்கட்டுரையினை எழுதுவதற்கு இச்சமர்க்களத்தில் நேரடியாக களம்கண்ட கட்டளையாளர்களான திரு வீரமணி, திரு ஜெயாத்தன் மற்றும் பெயர் குறிப்பிட விரும்பா சில போராளிகள், மற்றும் நேரில்லாமல் பங்கெடுத்த திரு சங்கீதன் எ தயாபரன் போன்றவர்களிடமிருந்து பல்வேறு மூலங்கள்கொண்டு பெறப்பட்ட தகவலானது பாவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் திரு வீரமணி மற்றும் திரு ஜெயாத்தன் ஆகியோரின் தகவலாக பதியப்பட்டுள்ளது அவ்விருவரும் ஊடகவியலாளர் திரு. நிராஜ் டேவிட் அவர்கட்கு 2023 மற்றும் 2024ம் ஆண்டுகளில் வழங்கிய நேர்காணலிலிருந்து பெறப்பட்ட தகவலாகும். மேலும் வேறு விடயங்களை எழுதுகையில் இச்சமர் தொடர்பில் தொட்டுச்சென்ற தொடர் கட்டுரையான போராளி அபிராம் அவர்களால் எழுதப்பட்ட “ஒரு போராளியின் அம்மா” உம் கட்டுரையாக்கத்திற்கு பாவிக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக மே 15ம் திகதி நடைபெற்ற மக்கள் சரணடைதலின் சில நிகழ்வுகளும் தரைத்தோற்றமும் தேவை கருதி இதனுள் சேர்க்கப்பட்டுள்ளது. அவை கட்டுரையாசிரியரான நன்னிச் சோழனின் தனிப்பட்ட அனுபவங்களாகும்.

மொத்தத்தில், இக்கட்டுரையானது இச்சமர் தொடர்பிலான ஆவணங்களில் ஒன்றாக எதிர்கால தலைமுறைகளுக்கு விளங்கும் என்று கட்டுரையாசிரியர் எதிர்பார்க்கிறார்.

  • முன்னுரை:

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களை எப்படியேனும் பாதுகாப்பாக வெளியேற்றி தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்ட நகர்வுகளை மேற்கொள்ளும் முதன்மை நோக்கத்துடன் ஒரு முற்றுகை உடைப்புச் சமர் மேற்கொள்ளப்பட்டது. அது இறுதித் தருவாயில் மேற்கொள்ளப்பட்ட கடைசி முயற்சியாகும். இவ்விறுதி முயற்சியே இவ்வெஞ்சமர் ஆகும்.

இச்சமரானது எவ்வடிவிலான வழங்கலுமில்லாமல் புலிகளின் மனத்திடத்தையும் நம்பிக்கையையும் பெரும் வலுவாகக்கொண்டு சூட்டாதரவுகூடயின்றி மேற்கொள்ளப்பட்டது. இதில் கரும்புலிகள் கூட முன்னின்று தரைப்புலிகளாக பொருதி வெடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடையமாகும்.

இம்முயற்சி இரண்டு தடவைகள் முயலப்பட்டு இரு தடவையும் தோல்வியிலேயே முடிந்தது. இவ்விரு முயற்சியிலுமாக சில மூத்த கட்டளையாளர்களுட்பட மொத்தமாக நூற்றிற்கும் மேற்பட்ட போராளிகள் வீரச்சாவடைந்தனர்.

  • சமர்க்களச் சூழ்நிலை:

நான்காம் ஈழப்போரின் இறுதி நாட்களில் கணைகள், ஆளணி, மருத்துகள் என்பன முற்றிலும் வரத்தின்றி அனைத்திலும் வறிய நிலையிலேயே தமிழர் சேனை பொருதிக்கொண்டிருந்தது.

இறுதியாக நிலைகொண்டிருந்த ஆட்புலமான வெள்ளா முள்ளிவாய்க்காலின் ("முள்ளிவாய்க்கால் ஆ பகுதி" என்று இதற்கு அக்காலத்தில் புலிகள் பெயர்சூட்டியிருந்தனர்) புவியியலும் பெரும் படையொன்று நிலைகொண்டிருந்து பொருதுவதற்கான தரைத்தோற்றத்தைக் கொண்டிருக்கவில்லை. அத்துடன் காப்புமறைப்புகளுக்கு ஏதுவான இயற்கை தரைத்தோற்றம் அங்கு காணப்படவில்லை. பரந்தன்-முல்லை வீதியின் கோவில் பக்கத்திய ஆகக்கூடிய இயற்கை மறைப்பாக வடலிக்காடுகள், பனைகள், பற்றைகள் மற்றும் இன்னபிற மரங்கள் போன்றனவே இருந்தன. நந்திக்கடலையொட்டிய பக்கம் காய்ந்த பற்றைகளும் பெரும்பாலும் தரவை வெளியுமாக இருந்தது. மேலும் எல்லா இடத்திலும் மக்களின் தரப்பாள் கொட்டில்களும் சிங்கள எறிகணை வீச்சிலிருந்து தம்முயிர் காக்க பதுங்ககழிகளும் அமைக்கப்பட்டிருந்தன. விரல் விட்டு எண்ணக்கூடியளவில் கல் வீடுகள் காணப்பட்டன.

large.terrainmap.jpg.8e551615c83d766050a

2025ம் ஆண்டு கால வெள்ளா முள்ளிவாய்க்கால் பரப்பின் தரைத்தோற்றத்தைக் காட்டும் படிமம். விடத்தலடி பிள்ளையார் கோவிலுக்கு கீழுள்ள பரப்பிற்குள்தான் கடைசி சமர் நடைபெற்றதாக சிங்களம் கூறுகிறது | படிமப்புரவு: கூகிள் மப்

மொத்தமாக அந்த சின்னஞ்சிறு பரப்பே சமர்க்களமாக விளங்கியது.

மேற்கூறிய காரணங்களுடன் சிங்களச் சேனையும் தமிழரின் ஆளுகைக்குட்பட்டிருந்த இறுதி ஆட்புலம் மீதான தனது முற்றுகையினை இறுக்கிவிட்டிருந்தது. அதிலும் மே மாதத்தின் இரண்டாவது கிழமையிலிருந்து சிங்கள முன்னரங்க வலுவெதிர்ப்பு நிலையின் (FDL/ Forward Defence Lines) முதல் படைவேலியானது நெருக்கமாக காவலரண்கள் அமைக்கப்பட்டு ஆளிடப்பட்டிருந்தது. அத்துடன் நெருக்கமாக கனவகை படைக்கலன்களாலும் வலுப்படுத்தப்பட்டிருந்தது. குறிப்பாக, மே மாதம் 15ம் திகதி வட்டுவாகல் பாலத்திற்கு செல்லும் வீதியின் இரு மருங்கிலும் சிற்சில அடி இடைவெளியில் சீனத் தயாரிப்பு விஃவ்ரி கலிபர் சுடுகலன்கள் நிறுத்தப்பட்டு அந்த முன்னரங்க நிலை வலுப்பட்டிருந்ததை தனது கண்களால் கட்டுரையாசிரியரான நன்னிச் சோழன் கண்டார். இவற்றிற்குப் பின்னால் தகரிகள் கொண்டு அமைக்கப்பட்ட இரும்புச்சுவர் போன்ற இரண்டாவது படைவேலி அமையப்பெற்றிருந்தது. அதற்குப் பின்னால் மற்றொரு படைவேலியும் அமைத்திருந்தார்கள்.

  • திட்டம் (மேலோட்டமானது):

மேலே சுருங்க கூறியுள்ள சிங்களத்தின் வலுவுடன் புலிகளின் மட்டுப்படுத்தப்பட்ட வளங்களைக் கொண்டு பெரும் படையொன்று உடைத்து ஊடறுத்து வெளியேற முடியாத நிலையிருந்தது. ஏனெனில் பெரும் படையொன்று வெளியேறும் சமயத்தில் அவர்களில் ஏற்படும் காயக்காரர்களிற்கு மருந்திடவும் வெளியேறும் ஆளணியை பராமரிக்கவும் (உணவுகள் மற்றும் ஏனைய பராமரிப்புகள்) இயலாத நெருக்கடியான சூழ்நிலை அங்குநிலவியது. மேலும் பெரும் படை வெளியேறும் போது நகர்வுப் பாதைகளிலுள்ள தடயங்களைக்கொண்டும் இலகுவாக பகைவரால் பாதைகளை கண்டறிய முடியும்.

அதுவே சிறிய படையெனில் அதற்கேற்படும் மேற்கூறிய நெருக்கடிகள் யாவற்றையும் தணிக்கமுடியும்.

எனவே இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டே உடைத்து ஊடறுக்கும் பொழுதில் எத்தனை பேர் அந்த ஊடறுப்புக்குள்ளால் வெளியேறுவது என்பது தொடர்பிலான திட்டம் தீட்டப்பட்டது. அதாவது மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான போராளிகளே வெளியேறுவது திட்டமாகயிருந்தது.

திட்டத்தின் படி புலிகளின் பல்வேறு சண்டை உருவாக்கங்களிருந்து (combat formations) களமுனை பட்டறிவு கொண்ட தலைமைக்கு விசுவாசமிக்கவரென்ற 450 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

→ எ.கா. ராதா வான்காப்புப் படையணியின் படைக்கலன் பாதுகாப்பு அணியிலிருந்து மொத்தம் 12 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர்.

இவர்கள் யாவரும் 18 பேர்கொண்ட 25 அணிகளாக பிரிக்கப்பட்டனர். ஒவ்வொரு அணிக்கும் ஒரு மூத்த கட்டளையாளர் தலைமை தாங்கினார். அவரின் வழிநடத்தலிலேயே இவர்கள் இயங்குவர், உடைத்து வெளியேறிய பின்னராயினும்.

தரையிறக்கமானது பகைவரின் கரையிலிருந்து 1200 மீட்டர் தொலைவில் நடத்தப்படும். பின்னர் அங்கிருந்து இவர்கள் நீருக்குள்ளால் ஓசையின்றி விரைவாக நடந்து சென்று பகைவர் மீது தாக்குதல் தொடங்க வேண்டும்.

சமரைத் தொடங்குகையில் நீர்ப்பரப்புக்குள் நின்று சுட்டபடி தான் தொடங்க வேண்டும். அவ்வாறு சுட்டு முன்னேறி தடைகளை உடைத்தபடி தான் நிலப்பரப்பினை அடையவேண்டும். இதில் கடினமான விடையம் என்னவென்றால் நீர்ப்பரப்பிற்குள்ளும் சிங்களவர் கொட்டன் ஊன்றி இரண்டு அ மூன்று அடுக்கிற்கு சுருட்கம்பி வேலி அடித்திருந்தனர். இவற்றை தடைவெடிகள் (torpedo) கொண்டு தகர்த்தபின்னரே கரையேற முடியும்.

large.endofthe2ndattempt1.jpg.cc4f4d5e4b

கேப்பாப்பிலவு நீர்ப்பரப்பு பக்கமிருந்த பகைவரின் முட்கம்பிகள் கொண்ட படைவேலி | படிமப்புரவு: ரூபபாகினி

களமுனையில் ஊடறுத்து உடைத்த பின்னர் ஒவ்வொரு அணியும் உட்சென்று நகரவேண்டிய பாதை ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது. அவ்வழியில் குறித்த சில இடங்களில் புவிநிலைகாண் தொகுதி (GPS) மூலம் குறிக்கப்பட்ட இடங்களில் புலிகளால் உணவுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இவ்வுணவுப்பொருட்கள் மிகக் குறைந்தளவிலான போராளிகளுக்கே போதுமாகயிருந்தது. இப்பணியினை தமிழீழப் புலனாய்வுத்துறையைச் சேர்ந்த கட்டளையாளர்களான பேரின்பம் (மாவீரர்) மற்றும் ஜூட் எ முகுந்தன் (மாவீரர்) ஆகியோரின் கட்டளைபெறும் அணிகள் முன்கூட்டியே உட்சென்று செவ்வன செய்துமுடித்திருந்தன.

உடைப்பு சரிப்பட்டு வருமாயின் தேசியத் தலைவருடன் நிற்கும் அணியும் வெளியேறும் என்பது திட்டமாகயிருந்தது. தலைவருடன் வெளியேறிச் செல்வோரை பெற்றுக்கொள்ள விடுதலைப் புலிகளின் வான்புலிகளைச் சேர்ந்த "நீலப்புலி" வானோடி தெய்வீகன் (பின்னாளில் புலம்பெயர் தமிழ் வஞ்சகர்களின் நயவஞ்சகத்தால் சிங்களப்படையிடம் அகப்பட்டு சாக்கொல்லப்பட்டார்.) அவர்கள் தலைமையிலான அணியொன்று கேப்பாப்பிலவு பகுதிக்குள் ஊடுருவி நின்றனர்.

  • பகைவரின் விழிப்பும் எம்மவரின் நம்பிக்கையும்:

இந்த திட்டமானது மிகவும் தீர்க்கமாக புலிகளின் கட்டளையாளர்களால் வகுக்கப்பட்டிருந்தது. இந்நகர்வு மூலம் மிகக் குறைந்த அளவிலான போராளிகளே வெளியேற முடியும் என்பதால்தான் ஏனையை போராளிகளுக்கு தத்தமது சொந்த முடிவுகளை எடுக்குமாறு பணிப்புரையிட்டனர்.

கட்டளையாளர்கள் யாவரும் பகைவரின் கரையோர படைவேலியின் வலுவினை நன்றாக அறிந்திருந்தும் இம்முயற்சியில் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையிலேயே இவ்வாறு செய்தனர். கடைசி வரையும் தமக்கேயுரித்தான மனத்திடத்தோடு புலிகள் இருந்தனர். அதுமட்டுமின்றி புலிகள் தாம் உடைத்து ஊடறுக்கப்போகும் இடத்தினை பகைவர் அறிந்திருந்ததையும் நன்கறிந்திருந்தனர்.

பகைவரும் அதற்கேற்ப நந்திக்கடலை முழுக் கண்காணிப்புக்குள் வைத்திருந்தனர். நீர்ப்பரப்பில் தமிழர் சேனையின் நடமாட்டத்தை நோக்க கதுவீ (RADAR) முதற்கொண்டு பூட்டி ஆயத்தமாக கரையிலிருந்தான்.

ஆகவே கெடுவேளையாக முயற்சி தோல்வியில் முடியுமட்டில் இறுதிவரை சிங்களப்படையுடன் பொருதி அதால் வரும் விளைவுகளை ஏற்பது, அது வீரச்சாவாக இருந்தாலும், என்பதில் உறுதியாக இருந்தனர்.

தமிழீழத்தின் கடைசி சொட்டு ஆட்புலத்தையும் சிங்களப்படை குருதி சிந்தியே தமிழரிடத்திலிருந்து வன்வளைக்கவேண்டும் என்று புலிவீரர்களும் அவர்தம் கட்டளையாளர்களும் ஒடுவிலில் (கடைசியின் இறுதி) உறுதிபூண்டிருந்தனர்.

  • பயணத் திசை:

இத்தாக்குதலிற்காக புலிவீரர்கள் வெள்ளா முள்ளிவாய்க்கால் கரையிலிருந்து (விடத்தலடிப் பரப்பு) வெளிக்கிட்டு நந்திக்கடல் களப்பூடாக பயணித்து கேப்பாப்பிலவு பரப்பை அடைய வேண்டும். அடைந்து தரையிறங்கிய பின்னர் சிங்களப் படையினரின் கரையோரக் காவலரண்களையும் சிறு முகாம்களையும் தாக்கியழித்து அவற்றிற்கு பின்னாலுள்ள கவச வேலியை ஊடறுத்துத்தான் கேப்பாப்பிலவு காட்டுக்குள் ஊடுருவ வேண்டும்.

  • பாவிக்கப்பட்ட கடற்கல வகை:

முதலாம் முயற்சியில் தரையிறக்கத்திற்கு வகுப்புப் பெயர் அறியில்லா ஓரிரு கட்டைப்படகுகள் (fishing boats) பாவிக்கப்பட்டன.

முதல் முயற்சியிலிருந்து கிட்டிய பட்டறிவின் மூலம் இரண்டாம் முயற்சியிற்கு மேலதிக கடற்கலங்கள் தேவையென அறிந்துகொண்டனர். அதற்காக வகுப்புப் பெயர் அறியில்லா 3 கட்டைப் படகுகளும் (சிறிய வகை மீன்பிடிப்படகு) அவற்றோடு இணைக்க 2 தெப்பங்களும் ஒரு பாதைப்படகும் பாவிக்கப்பட்டிருந்தன. அதாவது ஒரு படகிற்கு ஒரு இணைப்பு வீதம் மொத்தம் 3 இணைப்புகள் இணைக்கப்பட்டிருந்தன. ஒரு கட்டைப்படகும் ஒரு தெப்பத்தில்/ஒரு பாதையில் உம் ஒரே நேரத்தில் 30 (15+15) பேரை ஏற்றிப்பறிக்க இயலும். இந்த மிதவையானது ஒரே நாளில் உருவாக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

  • பயிற்சி:

பயிற்சி மே மதம் 3ம் திகதி மட்டில் தொடங்கி பத்து நாட்கள் நடந்தது. பயிற்சிகளை அன்பு மாஸ்டர் அவர்கள் வழங்கினார்.

உடைத்து வெளியேறும் போதில் ஏறத்தாழ 60 கிமீ தொலைவு நடந்து கடக்கவேண்டி வரும் என்று கணிப்பிடப்பட்டிருந்ததால் அதற்கேற்பவே பயிற்சிகளும் வடிவமைக்கப்பட்டன. அதற்கான நடை பயிற்சியை முள்ளிவாய்க்கால் கடற்கரையில் போராளிகள் மேற்கொண்டனர். இறுதியாக புலிகளின் ஆட்புலத்திலிருந்த 6 கிலோமீட்டர் நீளமான கடற்கரையில் குறிப்பிட்ட 3 கிலோமீட்டர் நீளத்திற்கு 20 தடவைகள் இவர்கள் நடந்தனர். அதாவது 60 கிலோமீட்டர் தொலைவு நடைபயிற்சி செய்தனர்.

நடப்பதற்கு இலகுவற்ற மணல் பாங்கான தரையில் 50 கிலோ எடையுள்ள படையப்பொருட்களையும் சுமந்தபடியேதான் 450 போராளிகளும் பயிற்சி செய்தனர். இடையிடையே சூட்டுப்பயிற்சிகளையும் மேற்கொண்டனர்.

பயிற்சியின் போது இவர்கள் உட்கொள்வதற்கு தேவையான சத்தான உணவுகள் கூட இல்லாமல் தான் பயிற்சிகள் செய்தனர். முதல் இரு நாட்களும் எவ்வித உணவுமின்றி பயிற்சிகள் போய்க்கொண்டிருந்தன. இதில் நடைபயிற்சியின் போது நீர் அருந்தக் கூட தடை விதிக்கப்பட்டது. காட்டிலே நீர் கிடைக்காது என்பதால் ஒரு கலன் நீருடன் மட்டுமே இவ்வளவு பயிற்சியையும் செய்ய அறிவுறுத்தப்பட்டது. மூன்றாம் நாள் பின்னேரம் மூவருக்கு ஒரு பொதியென்று உணவு வந்திருந்தது. அதை அவர்கள் பகிர்ந்துண்டனர். இவ்வாறாக சில நாட்களில் உணவுகள் இன்றியும் சில வேளைகளில் அரிதாக கிடைத்தும் பத்து நாட்கள் பயிற்சிகள் நடந்தன.

  • இறுதித் திட்டம்:

13ம் திகதி பொட்டம்மான் அவர்களின் பதுங்ககழிக்குள் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அப்பதுங்ககழியானது முள்ளிவாய்க்கால் துயிலுமில்லத்திற்கு அருகிலிருந்த பிட்டியிலிருந்தது (வீதிக்கு பெருங்கடல் பக்கம்). அது தேக்கங்குத்திகளால் ஆனதாகும். அக்கூட்டதிற்கு பிரிகேடியர் ஜெயம், பிரிகேடியர் சொர்ணம், கேணல் தரநிலை கொண்ட வேலவன் (போர்க்கைதியாகி தடுப்பில் படுகொலையானார்), ரட்ணம் மாஸ்டர் (மாவீரர்), சாள்ஸ் (மாவீரர்), திரு வீரமணி உள்ளிட்ட பல கட்டளையாளர்கள் கலந்துகொண்டனர்.

அக்கூட்டத்தில் தான் தலைவரை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான திட்டமிடலும் முடிவும் எடுக்கப்பட்டது. இம்முடிவானது கட்டளையாளர்களால் எடுக்கப்பட்டதாகும். தலைவரை எவ்வாறு ஆனந்தபுரம் முற்றுகைச் சமரில் வெளியேற்றினரோ அதையொத்த நடவடிக்கை மூலம் இங்கிருந்தும் தலைவரை வெளியேற்ற முடிவெடுக்கப்பட்டது.

வெளியேற்ற நடவடிக்கைக்கான வலிதாக்குதல் மே மாதம் 15ம் திகதி இரவு நடத்துவதாக அக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

மேற்கொண்டு ஏனைய நகர்வுத் திட்டங்களும் தீட்டப்பட்டன. திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளபடியான சமர் தொடங்குகையில் அதற்கேற்ப சிங்களப் படையினை திசைதிருப்ப ஓர் போலி சமர் இரட்டைவாய்க்கால் பரப்பில் செய்வதென்றும் முடிவானது.

திட்டமிடல் முடிந்த பின்னர் வீரமணி அவர்கள் ரட்ணம் மாஸ்டருடன் உரையாடுகையில் தலைவரை கொண்டு செல்லும் படகில் தலைவரின் முன்னை நாள் மெய்க்காவல் அணி பொறுப்பாளர் திரு வீரமணி அவர்களையும் செல்லும்படி ரட்ணம் மாஸ்டர் கேட்டுக்கொண்டார். அப்போது வீரமணி அவர்கள் தன்னுடன் நிற்கும் போராளிகளை என்ன செய்ய என்று ரட்ணம் மாஸ்டரிடம் கேட்டதிற்கு அவர்களை கரைக்கு வரச்சொல்லுமாறு பணித்தார்.

அதே நாள் அரசியல்துறையினர் செஞ்சிலுவைச்சங்கத்தோடு மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் பலனாக மே 15ம் திகதி நண்பகல் 2 மணிக்கு பொதுமக்களை சிங்களக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு அனுப்புவதாக முடிவு செய்யப்பட்டது. அரசியல்துறைப் போராளிகள் முதற்கட்டமாகவும், அவர்களுக்குப் பின்னால் காயப்பட்டவர்களும் அதன் பின்னால் பொதுமக்களும் வெளியேறுவர். அவர்களைத் தொடர்ந்து ஏனைய போராளிகள் வெளியேறுவர். மக்கள் சென்ற பின்னர் - மக்கள் தொகை குறைவாக இருப்பதை பாவித்து - மக்களின் இழப்புகளை குறைத்து தாக்குதல் செய்ய தலைமை முடிவு செய்தது.

  • முன்னேற்பாடுகள்:

சமர் தொடங்கும் தகவலானது சிறப்புப் பயிற்சியிலிருந்த 450 போராளிகளுக்கும் மே தாம் 14ம் திகதி அறிவிக்கப்படுகிறது. எனவே அடுத்த நாள் இரவில் களப்பைக் கடந்து மேற்கொள்ளப்போகும் தாக்குதலிற்கான ஆயத்தப்பணிகளில் புலிகளின் போராளிகள் ஈடுபட்டனர்.

உலர் உணவுகள், பழக்கலன்கள் மற்றும் இறைச்சி துண்டு கலன்களை போராளிகள் பொதி செய்தார்கள். மூன்று மாதத்திற்கு தேவையான பொதி செய்யவேண்டிய உணவுகள் என்று கொடுக்கப்பட்டிருந்த உணவுகள் கூட சொற்ப உணவுகளாகவே இருந்தன.

large.endofthe2ndattemptfoodspackedbythe

போராளிகள் பொதிசெய்த உணவுகளின் ஒரு பகுதி | படிமப்புரவு: ரூபபாகினி

போராளிகள் ஆயுதங்களையும் நன்றாக தூய்மைப்படுத்தி நீர்க்காப்பிட்டனர்.

அதே நேரம் ஏனைய போராளிகளை தத்தமது உற்றார் உறவினர்களின் வீடுகளிற்குச் செல்லுமாறும் அவரசரத்தில் முடிவுகள் எடுக்க வேண்டாம் என்றும் சுற்றறிவிப்பு முறைப்படியாக அனுப்பப்பட்டது. இதனை கட்டுரையாசிரியரின் குடும்பத்தினரிருந்த பதுங்ககழிக்குள் அவரின் சுற்றத்தினராக இருந்த மகளிர் போராளியொருவர் நேரில் வந்து தெரிவித்துவிட்டு தனது பெற்றாரின் இருப்பிடத்தையும் அறிந்துகொண்டு சென்றார்.

(அன்று சாமம் முள்ளிவாய்க்கால் கிழக்கின் மேற்குப் பரப்பில் நிலமே அதிர வெடித்து வானில் பெரும் தீப்பிழம்பொன்று எழும்பியதை கட்டுரையாசிரியர் கண்டுள்ளார். அவர் அப்போது வட்டுவாகல் பாலத்திற்கு அருகாமையாக வீதியில் நின்றுகொண்டிருந்தார்.)

  • சமர் தொடங்குதல்:

மே மாதம் 15ம் திகதி விடிந்தது. அன்று இரவு ஓர் நகர்விற்கான ஏற்பாடுகள் தொடர்ந்து நடந்துகொண்டிருந்தன.

நண்பகல் ஒரு மணியளவில் வெள்ளா முள்ளிவாய்க்கால் குருந்தடி பிள்ளையார் கோவிலின் கருவறைக்கு அருகில் புலிகளின் மூத்த கட்டளையாளர் ஒருவர் தலைமையில் சந்திப்பு ஒன்று நடந்தது. இக்கோவிலானது முள்ளி. உண்டியல் சந்திக்கு அருகாமையில் அமைந்திருந்தது.

சந்திப்பின் போது போராளிகளுக்கு கட்டளையாளர் அறிவுரையினை வழங்கினார். அவர் வழங்கிய அறிவுரை கீழ்க்கண்டவாறு இருந்ததாக யாழ் கள எழுத்தாளர் @அபிராம் அவர்கள் தனது தொடர் கட்டுரையான "ஒரு போராளியின் அம்மா" என்பதின் பாகம்- 17 இல் எழுதியுள்ளார்:

"நாங்கள் நாளை இரவு ஒரு பாரிய தாக்குதலை தொடங்க போகிறோம். அந்த வேளையில் இங்கே எந்த மக்களும் இருக்க மாட்டார்கள். எல்லாருமே செஞ்சிலுவைச்சங்க பாதுகாப்பில் இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு போயிருப்பார்கள். இந்த இடத்தை சூசை அண்ணை தலைமையிலான போராளிகள் தக்க வைக்க போராடி கொண்டிருப்பார்கள். அவர்கள் இராணுவத்துக்கு இறுதிநேர இழப்பை கொடுத்து கொண்டு எங்கள் ஊடறுப்பு தாக்குதலுக்கு அவனது முழு பலத்தையும் ஒருங்கிணைக்க விடாமல் பார்ப்பார்கள்."

"நீங்கள் எல்லாரும் பதினெட்டு பேர் கொண்ட இருபத்தைந்து அணிகளாக பிரிக்கபட்டு இருக்கிறீர்கள். உங்கள் ஒவ்வொரு அணிக்கும் ஒரு மூத்த தளபதி தலைமை தாங்குவார். தொடர்பாடல் பிரச்சனை காரணமாக இந்த சண்டை முடியும் மட்டும் அவரது கட்டளை தான் உங்களுக்கான இறுதிக்கட்டளை."

"உங்களின் பிரதான இலக்கு, எவ்வளவு கெதியாக முன்னணி நிலைகளை உடைத்து, உங்களை நிலைநிறுத்தி, ஒரு மனித பாதுகாப்பு அரணாக தலைவர் வெளியேறுவதற்கான ஒரு பாதுகாப்பான பாதையை ஏற்படுத்தி கொடுப்பது தான்".

"உங்கள் எல்லாருக்கும் தெரியும், எங்கள் விடுதலை போராட்டத்தின் உயிர் மூச்சு தலைவர் தான், அவரை நாங்கள் பாதுகாப்பாக நகர்த்தினால் தான் எங்கள் போராட்டம் அடுத்த கட்டத்துக்கு நகரும், மக்களுக்கு ஒரு விடிவை நாங்கள் பெற்று கொடுக்கலாம்"

"எனவே உங்களின் கைகளில் தான் தங்கியுள்ளது, எங்கள் போராட்டத்தின் அடுத்த கட்டம், அதற்காக தான் விசுவாசமான உங்களை தெரிவு செய்து இந்த தாக்குதலுக்கு தயார்படுத்தி இருக்கிறோம்"

"இந்த சண்டை எங்கள் வழக்கமான சண்டைகள் போல இருக்காது. உங்களுக்கான பின்கள வழங்கல்களோ, சூட்டாதரவோ கிடைக்காது. உங்களின் வீரமும் தியாகமும் தான் காவலரண்களை உடைத்து வழி ஏற்படுத்தும். எதிரி எங்களின் வருவுக்காக அங்கே காத்துகொண்டிருப்பான். தடங்கல் ஏற்படும் இடங்களில் கரும்புலிகள் அதை உடைத்து கொடுப்பார்கள்"

"இன்னொரு முக்கியமான விடயம், இந்த தாக்குதலில் எதிரியிடம் நாங்கள் எக்காரணம் கொண்டும் பிடிபடக்கூடாது, உங்களுக்கு வெடிகுண்டு அங்கிகள் (ஜாக்கெட்) வழங்கப்படும், உங்கள் ஆயுதங்கள் தீர்ந்தாலோ, எதிரியிடம் அகப்படும் நிலை தோன்றினாலோ அதை பாவியுங்கள்"

"இன்னும் கொஞ்ச நேரத்தில் உங்களை அண்ணை சந்திப்பார்.."

இவர் இவ்வாறு கதைத்துக்கொண்டிருக்க இவர்களுக்கு அருகிலிருந்த கட்டாய ஆட்சேர்ப்பு மூலம் சேர்த்திருந்த புதிய போராளிகளால் காக்கப்பட்ட இரட்டைவாய்க்கால் முன்னரங்க வலுவெதிர்ப்பு நிலையானது சிங்களப் படைகளால் உடைக்கப்பட்டது. இவர்கள் இருந்த இடத்திற்கு மிக நெருக்கமாக பகைவர் நெருங்குகிவருவதை நடைபேசி மூலம் இளநிலை கட்டளையாளரொருவர் அறியத்தந்தார். மேலும் பகைவர் மக்களுடன் மக்களாக மக்களை மனிதக் கேடயமாக பாவித்தபடி வரிப்புலியில் வருவதாகவும் தகவல் வந்தது.

அத்துடன் அவர் இந்த முற்றுகை உடைப்பிற்கு தயாராகிவரும் போராளிகளை பின்னகருமாறும் கேட்டுக்கொண்டார். அதற்கு மறுப்புத் தெரிவித்த மூத்த கட்டளையாளர் தனக்கு அறிவிக்கப்பட்ட நிலைமையை அங்கிருந்த போராளிகளுக்கு விளக்கிக் கூறினார். அதை செவிமடுத்த அகிலன் என்ற இளநிலை கட்டளையாளர் தன்னுடைய 18 போராளிகளையும் அழைத்துக்கொண்டு மூத்த கட்டளையாளரிடம் இசைவுபெற்ற பின்னர் பகைவர் உடைத்த முன்னரங்க நிலை நோக்கி வேகமாக ஓடினான். அவர்களிற்கான சண்டை பொறுப்பை அன்பு மாஸ்ரர் நெறிப்படுத்தினார்.

அங்கு சென்ற அகிலனின் அணியினர் தம்மால் இயலுமட்டும் பகைவருடன் பொருதினர். தம்மால் நெடிய நேரம் தாக்குப்பிடிக்க இயலாது என்பதை அன்பு மாஸ்டரிற்கு நடைபேசியில் அகிலன் அவர்கள் அறிவித்தார். மேலும் தமக்கு கரும்புலி ஒன்று வேண்டும் என்றும் கிடைத்தால் கொஞ்ச நேரம் தாக்குப்பிடிக்கலாம் என்றார்.

அவ்விக்கட்டான சூழ்நிலையில் பின்னகர்த்தப்பட்ட கரும்புலிகளை முன்னகர்த்துவது கூட்ட நெரிசலில் கடினம் என்று அம்மூத்த கட்டளையாளர் அன்பு மாஸ்டரிற்கு எடுத்துரைத்தார்.

அப்போது ஊடறுப்புத் தாக்குதலிற்கு ஆயத்தமாகயிருந்த போராளிகளிலிருந்து ஒரு போராளி கரும்புலியாக செல்ல முன்வந்தார். அவரை இரட்டைவாய்க்கால் சிங்களத் தரைப்படையின் 58 வது படைப்பிரிவின் முன்னரங்க முன்னணி கட்டளை மையத்தின் 30 மீட்டருக்குள் கரும்புலித் தாக்குதல் மேற்கொள்ள கட்டளை பிறப்பித்தனர். இதற்காக வெடிமருந்து கட்டிய உந்துருளியில் கரும்புலியை தயார்படுத்தினர்.

கரும்புலி தாக்குதலிற்கு செல்கையில் அவருக்கு காப்புச் சூடு வழங்க இன்னும் இரு போராளிகள் அனுப்பப்பட்டனர்; எழில்வண்ணன் என்பான் கரும்புலியுடன் உந்துருளியில் பின்னிற்கு எழும்பி நின்று காப்புச் சூடு கொடுக்க வேண்டும், கனிவாளன் என்பான் வீடொன்றின் மேலிருந்து காப்புச் சூடு வழங்க வேண்டும்.

இவர்கள் புறப்பட்டுச் செல்ல எல்லையில் நின்ற அகிலனின் அணியினர் வெடிப்பிலிருந்து ஏற்படப் போகும் பாதிப்பிலிருந்து தம்மை காக்க பின்னுக்கு நகர்ந்தனர். சம நேரத்தில் உந்துருளியை முல்லை-பரந்தன் வீதி வழியே ஓட்டிச் சென்ற கரும்புலி வீரன், இலக்கை நெருங்கியதும், எழில்வண்ணன் கீழே குதித்திட்டான். தொடர்ந்து சென்ற கரும்புலி இலக்கை அடைந்து வெடித்தார். இதனால் அங்கிருந்தான பகைவரின் முன்னகர்வு தடைப்பட்டது.

மேற்கூறிய கரும்புலித்தாக்குதலுட்பட மொத்தம் மூன்று சக்கை தாக்குதல்கள் அற்றை நாளில் மேற்கொள்ளப்பட்டன. சக்கை உந்துருளி தாக்குதலிற்கு முன்னர் நண்பகல் வேளையில் ஒரு கரும்புலித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அது வெள்ளாமுள்ளிவாய்க்காலின் இரட்டைவாய்க்கால் பரப்பில் நின்றிருந்த 58வது படைப்பிரிவினரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டது. இத்தாக்குதலை சக்கை நிரப்பிய சிவப்பு நிற சாகாடு (Double cab/ Pickup) ஒன்றில் சென்ற இரு கரும்புலி மறவர்கள் மேற்கொண்டனர். இலக்கை நெருங்குகையில் பகைவரின் ஆர்.பி.ஜி உந்துகணை தாக்குதலிற்கு சாகாடு இலக்காகி வெடித்துச் சிதறியதால் அத்தாக்குதல் கைகூடவில்லை.

மூன்றாவதாக 58வது படைப்பிரிவினர் மீது மீளவும் ஒரு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. எம்மவர் முன்னரங்க நிலை மீது தாக்க ஆயத்தமாகிகொண்டிருந்த படையினர் மீது சக்கை நிரப்பிய உழுபொறி ஒன்றில் சென்ற கரும்புலிகள் இடித்து வெடித்தனர். எனினும் இத்தாக்குதலின் பெறுபேறுகள் தெரியவில்லை.

  • பங்கெடுத்த போராளிகளோடான தனிப்பட்ட தொடர்பாடல்:

சமரில் பங்கெடுக்கப் போகும் முன்னர் கட்டளையாளரான கடற்புலி லெப். கேணல் சிறிராம் அவர்கள் தன் உற்ற நண்பனான திரைப்பட இயக்குநரும் ஊடகவியலாளருமான திரு. அன்பரசனை கண்டு கதைத்தார். அப்போது அன்பரசனிடம்,

“நாளை இரவுக்கு இறங்கப்போறம். நான் தான் கொமாண்டர் மச்சான். ஒரு கை பாப்பம். இரும்புக் கோட்டைக்குள்ள போகப்போறம். வெற்றியெண்டா சந்திப்பம். இல்லாட்டி அலுவல் முடிந்தது மச்சான்”.

“நீ, இசைப்பிரியாவை கூட்டிக்கொண்டு போ,”

என்றார் லெப். கேணல் சிறிராம். பின்னர் மேலும் சில கதைத்துவிட்டு அங்கிருந்து விடைபெற்றார். எனினும் இசைப்பிரியாவை தம்முடன் வர அழைத்த போது,

“அண்ணை, உங்களோட இன்னொரு போராளியும் வாறா, நானும் வந்தால் உங்களையும் பிடிப்பான். வந்தால் சிறிராமுடன் தான் வருவன். இல்லாட்டில் வரமாட்டன்.”

என்று கூறி மறுத்தாக திரு அன்பரசன் அவர்கள் கூறியுள்ளார் (ஆதாரம்: இயக்குநரும் ஊடகவியலாளருமான அன்பரசனின் கடைசி நேர அனுபவங்கள்).

  • மக்கள் சரணடைதல்:

பொதுமக்களின் சரணடைவானது வட்டுவாய்க்கால் பக்கமாக நடந்தது.

இரண்டு மணிக்கு சரணடைய வேண்டிய மக்களை உள்ளெடுக்காமல் தொடர்ந்து காலம் தாழ்த்தியது சிங்களப் படைத்துறை. ஏறத்தாழ 3:15 மணியளவில் மக்கள் மேல் சிங்களப் படையினர் சுடுகலன்களால் சுட்டனர். அப்போது நன்னிச் சோழன் கிரவில் வீதிக்கு அண்மையில் நின்றிருந்தார். சிங்களப் படைத்துறையிடம் செல்ல கிரவல் வீதிக்கு ஏறிய அவரது சுற்றத்தினன் ஒருவர் தனது ஓர் கைக்குழந்தியினை கையில் ஏந்தியபடி அவரின் கண்முன்னே நிலத்தில் வீழ்ந்திறந்தார். பின்னர் மீளவும் மாலை 4 மணிக்கு முயற்சித்து சிங்களத்திடம் சரணடைந்தனர் மக்கள். சரணடையும் போதிலும் சிறு சண்டை வெடித்து இரு மூதாளர்கள் படையினரால் அவ்விடத்திலேயே கொல்லப்பட்டதை கட்டுரையாசிரியர் தன் கண்களால் கண்ணுற்றார். (இது தொடர்பான வரலாற்றை பின்னாளில் எழுதுகிறேன்)

large.lttesinhalafdlvellamullivaikkaal.j

வெள்ளா முள்ளிவாய்க்காலின் சர்வாறுத்தோட்டப் பரப்பையும் வட்டுவாகல் பரப்பையும் காட்டும் வரைப்படம். மேலும் சிறிலங்காப் படையினரின் முன்னரங்க வலுவெதிர்ப்பு நிலைகள் (Forward Defense Lines) 12ம் திகதி மட்டில் எங்கிருந்தது என்பதையும் இவ்வரைப்படம் காட்டுகிறது. இதில் தெரியும் முல்லை-பரந்த வீதியூடாகவே கட்டுரையாசிரியரும் குடும்பத்தினரும் சிங்களப் படையினரிடத்தில் 15ம் திகதி பின்னேரம் சரணடைந்தனர் | வரைபட விளைவிப்பு மற்றும் முன்னரங்க வலுவெதிர்ப்பு நிலை குறியிட்டது: சிறிலங்கா படைத்துறை | படிமப்புரவு: அமல் சமந்த, ரூபபாகினி | படிம விளக்கம்: நன்னிச் சோழன்

large.finalbund2.jpg.00160f1b57623196a98

வெள்ளா முள்ளிவாய்க்காலின் வட்டுவாய்க்கால் எ வெட்டுவாய்க்கால் கரையோரமாக புலிகள் அமைத்துள்ள 5 அடி உயர மண்ணரண் | படிமப்புரவு: அமல் சமந்த, ரூபபாகினி

large.finalbund.jpg.5947cae0ce4a39d6a97f

வெள்ளா முள்ளிவாய்க்காலின் வட்டுவாய்க்கால் எ வெட்டுவாய்க்கால் முகத்துவாரப் பக்கம் புலிகள் அமைத்துள்ள 5 அடி உயர மண்ணரண் | படிமப்புரவு: அமல் சமந்த, ரூபபாகினி

  • முதல் முயற்சி:

சாமம் நெருங்கிய வேளை நந்திக்கடலின் களப்பு ஊடாக முதல் முயற்சி புலிகளால் எடுக்கப்பட்டது. அப்போது முதல் உடைப்பு அணி ஆயத்தமாகி நின்றது. இரண்டாவது அணி கேணல் ரமேஸ் அவர்கள் தலைமையிலும் மூன்றாவது அணி ஜெயாத்தன் அவர்களைக் கொண்ட அணியாகவும் நின்றது. இவர்களிற்குப் பின்னால் ஏனைய அணியினர் ஆயத்தமாக நின்றனர்.

அப்போராளிகள் களப்பை நோக்கி மக்கள் பார்த்திருக்க நகர்கையில் இறுக்கமான முகத்துடன் யாருடனும் எதுவும் பேசாமல் நகர்ந்தனர். நகர்ந்து சென்றவர்கள் நீரினுள் இறங்கி அங்கால் நின்ற படகுகளில் ஏறினர்.

அங்கால் (கேப்பாப்பிலவு) பகைவர் தம் முன்னரங்க நிலைகளில் மின்வெளிச்சம் பாச்சி திருவிழா போல வைத்திருந்தான்.

ஊடறுப்புக்கு தயாரான கரும்புலிகள் உள்ளிட்ட போராளிகள் கடற்புலிகளின் படகுகள் துணைகொண்டு தரையிறங்கித் தாக்க முயற்சித்தனர். இவர்களின் நகர்வை கண்ட சிங்களப் படையினர் இவர்கள் மேல் கடும் தாக்குதல் தொடுத்தனர்.

எவ்வித சூட்டாதரவுமின்று தமிழர் சேனை பொருதியது. மே மாதம் 16ம் திகதி விடியப்புறம் 5 மணிவரை மேற்கொண்ட ஊடறுப்பு முயற்சி சிறிய இழப்புகளுடன் தோல்வியில் முடிந்தது. முன்சென்றவர்களின் தொடர்புகள் இல்லாமல் போகின.

அற்றை நாள் திரும்பி வந்தோரை ஓம்பமாக (safe) வேறு இடங்களில் இருக்குமாறு பணிக்கப்பட்டது.

→ எ.கா: அதன் படியே படைக்கலப் பாதுகாப்பு அணியில் இருந்தோரை வட்டுவாகல் பாலத்திற்கு அருகாமையில் வீதியோரமாக பாதுகாப்பாக இருக்கும்படி கட்டளை கொடுக்கப்பட்டிருந்தது. எனினும் அன்று நடைபெற்ற இரண்டாம் கட்ட மக்கள் வெளியேற்றத்தின் போது மக்களை கேடயமாக பாவித்தனர் படையினர். மக்களோடு மக்களாக புலிகளின் முன்னரங்க வலுவெதிர்ப்பை உடைத்துகொண்டு இவர்கள் இருந்த இடத்தை நெருங்கிவந்தனர். எனவே படையினரை தடுக்கும் நோக்கோடு இவ் அணி கடும் எதிர்தாக்குதலை மேற்கொண்டனர். அம்முயற்சியில் இப்படைக்கலப் பாதுகாப்பு அணியின் கணக்காளரான சுகுமார் என்ற போராளி 16/05/2009 அன்று மாலைப்பொழுதில் சிங்களப்படையின் தாக்குதலில் வீரச்சாவடைந்தார் (ஆதாரம்: படைக்கல பாதுகாப்பு அணியின் கணக்காளர் சுகுமார்).

  • இரண்டாம் முயற்சி:

முதல் முயற்சி தோல்வியில் முடிந்த பின்னர் மே மாதம் 16ம் திகதி இரவில் மற்றொரு முயற்சி மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் அன்று அதிகாலையே தொடங்கின.

அந்நடவடிக்கையில் தலைவரை மறுகரைக்கு கொண்டு செல்லும் பொறுப்பு கடற்புலிகளின் கட்டளையாளர்களில் ஒருவரான லெப். கேணல் சிறிராம் அவர்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டது.

நந்திக்கடல் கரையிலிருந்த ஓர் மரத்தின் கீழ் அமைக்கப்பட்டிருந்த பதுங்ககழிக்குள் லெப். கேணல் சிறிராம், பொட்டம்மான் (மாவீரர்) மற்றும் ரட்ணம் மாஸ்டர் ஆகியோர் இருந்த படி திரு வீரமணி அவர்களை அவ்விடத்திற்கு வருமாறு அழைத்தனர். முதல்நாள் தாக்குதலிற்கு சென்றோரின் தொடர்புகள் இல்லாமல் போனதால் இம்முறை தாக்குதலிற்கு இவரை தலைமை தாங்கும்படி பணித்தார், ரட்ணம் மாஸ்டர்.

தாக்குதலிற்கான ஆயத்தங்களை உடனே தொடங்கினார் திரு வீரமணி அவர்கள். அவ்விடத்திலிருந்த இரு கட்டைப்படகுகளையும் எடுத்துக்கொண்டனர்.

நடவடிக்கைக்கு மேலும் படகுகள் தேவைப்பட்டதால் கடற்புலிகளின் தர்மேந்திரா படைத்தளத்திற்கு அருகிலிருந்த கடற்புலிகளால் பாவிக்கப்பட்ட செம்மைப்படுத்தப்பட்ட ஓர் புளு ஸ்ரார் வகுப்பைச் சேர்ந்த கட்டைப்படகொன்றையும் எடுத்துக்கொண்டனர். அது பரந்தன் - முல்லை வீதிக்கு அந்தப் பக்கம் இருந்ததால் அப்படகினை எடுத்துத் தருமாறு ஜெயந்தன் படையணியின் கட்டளையாளர் திரு. ஜெயாத்தன் அவர்களிடத்தில் லெப். கேணல் சிறிராம் அவர்கள் கோரினார். அவரும் தன்னிடத்திலிருந்த 10 போராளிகளை அனுப்பி அப்படகினை தூக்க உதவி செய்தார். படகினை தோளில் தூக்கி நந்திக்கடலின் கரை வரை கொண்டுவந்து வைத்தனர்.

பின்னர் பன்னிரண்டு (2x6) மண்ணெண்ணை உருள்கலன்களை ஒன்றாக்க கட்டி ஓர் தெப்பம் போல உருவாக்கி அதை படகுடன் இணைத்தனர். இவ்வாறு இரண்டு படகில் இணைத்தனர். இதன் மூலம் படகு பயணிக்கும் போது அதனுடன் சேர்ந்து இச்செம்மைப்படுத்தப்பட்ட தெப்பமும் இழுவிண்டுகொண்டு செல்லும் வகையில் உருவாக்கினர். படகில் 15 பேரும் தெப்பத்தில் 15 பேருமாக மொத்தம் 30 பேர் ஒரே நேரத்தில் பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டது.

மூன்றாவது படகுடன் இணைப்பதற்கு அங்கிருந்த ஒரு பாதை வகை படகு பாவிக்கப்பட்டது. (இப்பாதை வகைப் படகுகளை 'ஆஞ்செல்கை' என்றும் பண்டைய தமிழில் அழைப்பர். இவை இத்தீவிற்கே உரித்தான படகுகளாகும். பண்டைய காலங்களில் களப்புகளையும் ஆறுகளையும் கடக்க பாவிக்கப்பட்டன.)

large.kullaa-usedfortrooptransportationd

புலிகளால் பாவிக்கப்பட்ட 'பாதை' வகை படகு சிங்களப்படைகளால் கைப்பற்றப்பட்ட பின்னர் | படிமப்புரவு: ரூபபாகினி

முதல் அலையில் கரும்புலிகள் மற்றும் தடையுடைப்பு அணிகளை இறக்கியபின்னர் ஒரு 300 முதல் 400 போராளிகள் வரை கொண்டு சென்று இறக்கி நிலைமை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்ததென்றால் தேசியத் தலைவரை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்பது இதில் திட்டமாகயிருந்தது.

17 ம் திகதி விடிசாமம் 12 மணி சொச்சத்திற்கு புலிகளின் இறுதி வலிதாக்குதலிற்காக அணிகள் மெல்லப் புறப்பட்டன.

ஓர் படகில் வீரமணியுடன் 30 போராளிகளும் மற்றொரு படகில் அவருடனிருந்த பங்கையனுடன் 30 போராளிகளும் மூன்றாவது படகில் தூயமணி எ அற்புதன் மற்றும் கணனிப் பிரிவைச் சேர்ந்த நரேஸ் ஆகியோருடன் 30 போராளிகள் என ஒட்டு மொத்தமாக 90 பேர் முதலில் புறப்பட்டுச் சென்றனர்.

இவர்களை சிங்களப் படையினரின் கண்ணில் படாதவாறு கொண்டு சென்று கேப்பாப்பிலவு நோக்கியவாறு தரையிறக்க வேண்டும். தரையிறக்கமானது சிங்களக் கரையிலிருந்து 1200 மீட்டர்கள் தொலைவில், சிங்களவர் நோக்காதவாறு நிகழ்த்தல் வேண்டும். அதன்படியே கடற்புலிகளும் தம் பணியினை செவ்வனே முடித்திருந்தனர். கழுத்தளவு நீர் நிரம்பிய நீர்ப்பரப்புக்குள் ஓசைபடாதவாறு போராளிகள் தரையிறக்கப்பட்டனர். தரையிறங்கியோர் தத்தம் இலக்குகள் நோக்கி மெள்ளமாக நகரத் தொடங்கினர்.

சம நேரத்தில் புலிகளின் ஆட்புல நந்திக்கடல் கரையோரமாக நந்திக்கடல் நீரிற்குள் செயலாற்றக்கூடியளவு ஆழம்வரை போராளிகள் இறங்கி நின்றனர். அவர்கள் மீது வெள்ளா முள்ளிவாய்க்காலின் இரு பக்கத்தின் கரையிலுமிருந்து தெறுவேயங்கள் (Cannon) கொண்டு சிங்களப் படையினர் சுட்டபடியே இருந்தனர் (வாக்குமூலம்: புலனாவுத்துறைப் போராளி அரவிந்தன், 2018, Tiktok காணொளி)

அதே நேரம் முதல் அலை தரையிறக்கப்பட்ட பின்னர் இரண்டாவது அலையை ஏற்ற படகுகள் தளம் திரும்பின. அவையும் 90 போராளிகளை ஏற்றியபடி இறக்கியயிடத்திற்கு சென்று காத்திருந்தனர்.

நேரம் அதிகாலை 2.40 ஐ கடந்துகொண்டிருந்தது. முதலில் இறக்கிய 90 பேரும் இன்னும் சண்டையைத் தொடங்காததால் என்ன செய்யவென்று வீரமணி அவர்கள் லெப். கேணல் சிறிராம் அவர்களிடத்தில் வினவினார். சிறிராம் அவர்களும் வீரமணியிடம் உள்ள 90 பேரையும் நேரே கொண்டு சென்று இடித்திறக்குமாறு கட்டளையிட்டார். அதன் படி வீரமணி அவர்களும் ஒழுகினார்.

ஏறத்தாழ கரையிலிருந்து 400- 500 மீட்டர் தொலைவில் கொண்டு செல்ல புலிகளை கண்ட சிங்களவர் தாக்குதலை தொடங்கினர். 50 கலிபர் சுடுகலன் சன்னங்கள் மழைபோல வரத் தொடங்கின. இருப்பினும் இயலுமட்டும் படகுகளை முன்கொண்டு சென்ற கடற்புலிகள் கரையிலிருந்து 200 - 300 மீட்டர் தொலைவில் போராளிகளை தரையிறக்கினர். அப்போது எதிர்ப்பட்ட சன்னங்களால் வீரமணி அவர்களின் படகிலிருந்த போராளி ஒருவர் வீரச்சாவடைய இன்னும் இருவர் காயமடைந்தனர்.

புலிகளும் படகுகளிலிருந்து குதித்திறங்கி சுடத் தொடங்கினர். சமரும் வெடித்தது.

அதே சமயம் இவர்களுக்கு முன்னர் மெள்ளமாக நகர்ந்து சென்று கரையை அண்மித்த முதல் அலையினரும் சண்டையைத் தொடங்கினர்.

சமரெனில் பெருஞ்சமராகும். கரும்புலிகளும் தடையுடைப்பு அணிகளுமாக மாறி மாறி வெடித்துக்கொண்டிருந்தனர்.

large.endofthe2ndattempt4-destroyedbarbe

புலிகளால் அறுக்கப்பட்ட கம்பிவேலிகளும் அதில் சிதறிக்கிடக்கும் முதுகுப்பைகளும் | படிமப்புரவு: ரூபபாகினி

போதாக்குறைக்கு சிங்களப் படைகளும் எறிகணை மழை பொழிந்துகொண்டிருந்தனர். சிங்கள முப்படைகளும் நாலா புறமுமிருந்து புலிகளை நோக்கி சரமாரியாக சுட்டுக்கொண்டிருந்தனர். வானே வெளிச்சாமகுமளவிற்கு சிங்களவர் வெளிச்சக்குண்டுகளை ஏவியபடியிருந்தனர். அதில் தெரியும் தலைகளை நோக்கி சன்னங்கள் கூவியபடி வந்துகொண்டிருந்தன. களப்பினுள் காப்பு மறைப்புகள் ஏதுமின்றி அந்த இறுதி ஊடறுப்பு முயற்சிக்கான போராளிகள் அடிபட்டுக்கொண்டிருந்தனர் (ஆதாரம்: ‘நந்திக்கடலில் மரணத்தை கடந்த நிமிடங்கள்.......’, த .கதிரவன்).

சமர் இவ்வாறு அங்கே களப்புக்குள் நடந்துகொண்டிருக்க மீண்டும் மூன்றாவது அலையினை ஏற்ற புலிகளின் படகுகள் திரும்பின. அப்போது நேரம் ஏற்கனவே அதிகாலை 5 மணியைத் நெருங்குவதால் நிலமும் வெளிக்கத்தொடங்கியது. அதே நேரம் பங்கயன் அவர்கள் சென்ற படகும் சிங்களவரின் நேரடி தகரிச் சூட்டிற்கு இலக்காகி மூழக்கத் தொடங்கியது. ஆகவே மேற்கொண்டு கொண்டு செல்லவேண்டாம் என்று கட்டளைப்பீடம் கட்டளை பிறப்பித்தது. சண்டையையும் நிறுத்த பணித்தனர்.

இயன்றவரை முயன்ற புலிகளின் அணிகள் முற்றாக ஏலாத கட்டத்தில் பலர் வீரச்சாவடைந்தனர். எஞ்சியவர்கள் நீரினுள் மூச்சை அமுக்கிப் பிடித்தவாறு தாழ்வதும் பின்னர் மூச்சுவிட மெள்ள தலையைத் தூக்குவதுமாக கரை நோக்கி நடந்தனர். கையில் பட்ட காயக்காரர்களையும் வீரச்சாவுகளையும் இறுகப்பற்றி இழுத்துக்கொண்டு ஏனைய போராளிகள் புலிகளின் கட்டுப்பாட்டு நந்திக்கடல் கரையை (வெள்ளா முள்ளிவாய்க்கால் விடத்தலடி) அடைந்தனர்.

large.endofthe2ndattempt.jpg.511d9903bc5

களப்பின் கேப்பாப்பிலவு பக்க கரையிலிருந்து பார்க்கும் போது மறுகரையிலிருந்து பெரும் புகை எழுவதை காணலாம் | படிமப்புரவு: ரூபபாகினி

large.endofthe2ndattempt3.jpg.3095e9724d

சமர் முடிந்த கையோடு சிங்களப் படையினர் கரையில் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர் | படிமப்புரவு: ரூபபாகினி

large.endofthe2ndattemptothersidesinhala

புலிகளின் தாக்குதலிற்குள்ளான கரையோரக் காவலரண்களிலொன்றில் நின்று சிங்கள அதிகாரிகள் கதைவளிப்படும் காட்சி | படிமப்புரவு: ரூபபாகினி

இச்சமரில் புலனாய்வுத்துறையைச் சேர்ந்த கட்டளையாளர்களான முகுந்தன் எ ஜூட், முத்தப்பன், ஆதித்தன் எ பிரதீப் மாஸ்டர், பாலகுமார் உள்ளிட்ட தரநிலை அறியில்லாத 80இற்கும் மேற்பட்ட போராளிகள் வீரச்சாவடைந்தனர். இவர்களில் 9 மகளிர் போராளிகள் உட்பட 70இற்கும் மேற்பட்ட மாவீரர்களின் வித்துடல்கள் சிங்களவரால் கைப்பற்றப்பட்டன. இத்தகவலானது சமர் முடிந்த பின்னர் சிங்களப் படைகளால் களப்பிலிருந்து எடுக்கப்பட்ட போராளிகளின் வித்துடல் எண்ணிக்கையினைக் கொண்டு அறியப்பட்டுள்ளது. புலிகளின் நீல நிற செம்மைப்படுத்தப்பட்ட படகொன்று உட்பட பல படைக்கலன்களும் சிங்களவரால் கைப்பற்றப்பட்டன.

  • முடிவுரை:

இவ்வாறாக தலைவரை வெளியேற்ற புலிகள் எடுத்த இறுதி முயற்சி வெஞ்சமரிற்கிப் பின்னர் தோல்வியில் முடிந்து போனது. இவ்விரண்டாவது முயற்சிதான் தமிழீழ வரலாற்றில் தமிழர் சேனையால் மேற்கொள்ளப்பட்ட கடைசி தரையிறக்கமாகும்.

“உங்கள் கனவே

எங்கள் நினைவாய்

எழுந்து நிற்கின்றோம்!”

ஆக்கம் & வெளியீடு:

நன்னிச் சோழன்

Edited by நன்னிச் சோழன்

  • நன்னிச் சோழன் changed the title to கேப்பாப்பிலவு ஊடறுப்புச் சமர் : தலைவரை வெளியேற்ற எடுத்த முயற்சி | நன்னிச் சோழன்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

large.lastmap.jpg.e1d7d29835a2c1b4829bb9

நான்காம் ஈழப்போரின் கடைசிக்கட்டம் நடைபெற்ற பகுதிகளை காட்டும் வரைபடம். என்னால் அறியமுடியா பகுதிகளை நான் தனியாக குறித்துள்ளேன். | படிமப்புரவு: அறியில்லை

Edited by நன்னிச் சோழன்

  • நன்னிச் சோழன் changed the title to கேப்பாப்பிலவு ஊடறுப்புச் சமர் : தலைவரை வெளியேற்ற எடுத்த கடைசி முயற்சி
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

இச்சமரில் பாவிக்கப்பட்ட பாதை வகைப் படகின் படிமம் இணைக்கப்பட்டுள்ளது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.