Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

571766733d9cb505f3892ae9fafb0963cb4ff7ae

ஊடகத்துறையில் முத்திரை பதித்த... ஆற்றல் மிகு இலக்கியவாதி, நாட்டுப்பற்றாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி.

-வீரகேசரி-

கொழும்பில் இருந்து வெளிவரும்

வீரகேசரி வாரவெளியீட்டில் 19.10.2025இல் பதிவாகி வெளிவந்திருப்பது…..

அரசியல் ஆய்வாளரும், இலக்கியவாதியும், விமர்சகரும், நிகழ்ச்சி நெறியாளரும்….

20வருடங்களுக்கு மேலாக ஊடகப்பணியாற்றி

வன்னி மண்ணில் 12.02.2009 அன்று எறிகணை வீச்சுக்கு இலக்காகி கொடிய போரின் சாட்சியாக மக்கள் மனங்களிலில் வாழும்

நாட்டுப்பற்றாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி அவர்கள் பற்றிய பார்வை..…….

பேரன்பும்,நன்றியும்

திரு.ச.சிறிகஜன் அவர்கள்,

பிரதம ஆசிரியர்,

வீரகேசரி,

மற்றும் இணை ஆசிரியர்கள்,

நிர்வாகக் குழுமத்தினர்க்கு.

நன்றி

மூத்த படைப்பாளி

திருமதி ஆதிலட்சுமி சிவகுமார் அவர்களுக்கு.

யாழ்.உரும்பையூர் து.திலக்(கிரி)

சுவிற்சர்லாந்திலிருந்து எழுதும்…

வாரம் ஒரு படைப்பாளி…

*************************

(பார்வை - 65)

ஈழத்துப் பத்திரிகைத்துறை என்பது அன்றுதொட்டு இன்றுவரை மிகச் சவால் நிறைந்த ஒன்றாகவே காணப்படுகின்றது. அதிலும் ஓர் ஊடகருடைய நேர்த்திய பணி என்பது உள்ளதை உள்ளபடி எழுதுதல், பக்கச்சார்பற்ற நிலையைக் கொண்டிருத்தல், நேரிடைக் களத்தில் நின்று எழுதுதல் இவ்வாறாக இன்னும் பல நெறிமுறைகளை ஊடகதர்மம் கொண்டிருக்கிறது.

அவ்வாறான வலியும் சவாலும் நிறைந்த உணர்வுமிகு பயணம் ஒன்றில்தான் ஈழநாடு, ஈழநாதம், ஈழமுரசு ஆகிய பத்திரிகைகளின் அரசியல் களநிலவரம், விமர்சனம், வெளிச்சம் சஞ்சிகையின் கவிதை, சிறுகதைகள் போன்ற படைப்புகளை பு.சிந்துஜன், பு.சத்தியமூர்த்தி, விவேகானந்தன், கதிர்காமத்தம்பி, ஹம்சத்வனி எனும் புனைபெயர்களில் ஆக்கங்களை படைத்து வந்தவரும் ரி.ரி.என் தொலைக்காட்சியின் நாள்நோக்கு, அரசியல்களம் மற்றும் பல நிகழ்ச்சிகளை வழங்கியவர் மறைந்தும் மறையாது ஊடகத்துறையில் முத்திரை பதித்து வாழும் ஒரு நேர்த்திய வெளிப்படைத் தன்மைகொண்ட துணிச்சலான ஊடகவியலாளரும், அரசியல் ஆய்வாளரும், இலக்கியவாதியும், விமர்சகரும், நிகழ்ச்சி நெறியாளரும் ஊடக நண்பர்கள், மக்கள் மத்தியில் நன்மதிப்பைப் பெற்றவரும் 20வருடங்களுக்கு மேலாக ஊடகப்பணியாற்றி இறைபதமடைந்த நாட்டுப்பற்றாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி அவர்களது பார்வையோடு இவ்வாரம் இணைவோம்.

தாயகத்தின் சிரமென விளங்கும் யாழ்ப்பாணத்தில் கல்வியாளர்களும், கலைப் பேராளர்களும் நிறைந்திருக்கும் இணுவில் கிராமத்தில் திரு.திருமதி.புண்ணியமூர்த்தி பற்குணமலர் மண இணையருக்கு 30.10.1972ஆம் ஆண்டு மகனாகப் பிறந்த சத்தியமூர்த்தி அவர்கள் மன்னம்பிட்டி எனும் தமிழ் கிராமத்தில் எட்டு வயது வரை வளர்ந்தார். கிராம உத்தியோகஸ்தரான இவரது தந்தை, தாய், சகோதரி, மற்றும் இரண்டு சகோதர்ர்கள் என அழகான குடும்ப ஓட்டத்தில் சத்தியமூர்த்தி தன் கல்வியை மன்னம்பிட்டி மகா வித்தியாலயத்தில் கற்கும் காலத்தில் முதலாம் ஆண்டில் மிகுந்த ஈடுபட்டுடன் காட்டிய அதிதீவிர கல்வி அறிவால் பள்ளிச் சமூகத்தின் கவனத்தை ஈர்த்தார். எட்டாவது வயதில் யாழ் மண்டைதீவில் தனது அம்மம்மாவுடன் வாழ்ந்த காலத்தில் தொடர்நிலைக் கல்வியை யா/மண்டைதீவு மகா வித்தியாலத்தில் கற்ற இவர் ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் சித்திபெற்று யா/இந்துக் கல்லூரியில் உயர்தரம் வரை தனது கல்வியைத் கற்று யாழ் பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவக் கல்வியை தொடர்ந்தார். தனது பட்டப் படிப்பில் அரசியலை ஒரு பாடமாக எடுத்துக் கொண்ட இவர் தனது பள்ளிக்காலம் முதல் கவிதை, சிறுகதை, பேச்சு, கட்டுரை என தன் சிந்தனைகளில் எதிர்படும் காட்சிகளை எழுதத் தொடங்கினார். இவ்வாறாக சத்தியமூர்த்தியின் பயணம் கல்வியோடும் இலக்கியப் படைப்புகளோடும் சிறந்துகொண்டிருக்கையில் 1995ஆம் ஆண்டு இவரது சகோதரன் தாய் மண்ணில் சிந்துஐன் எனும் வீர நாமத்துடன் மண்ணுள் விதையானான். உடன் பிறந்தவனின் தாய்மண்மீதான ஆளமான நேசத்தை இவரால் புரிந்துகொள்ள முடிந்தாலும் உடன்பிறப்பு என்ற வகையில் சற்றுத் துவண்டுபோன சத்தியமூர்த்தி அவர்கள்

“ இன்று நீ சென்றுவிட்டாய் நாளை நான் உன்னை தொடர்ந்து வருவேன் நீ நிம்மதியாய் உறங்கு”

என்று தன் சகோதரனின் நினைவாக அன்று குறிப்பொன்றைப் பதிந்துள்ளார்.

இளமைக் காலத்தில் சத்தியமூர்த்தி அவர்கள் இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன் அவர்களால் யாழ்ப்பாணம் பொருண்மிய மேம்பாட்டுக் கழகத்தில் வேலைக்குச் சேர்க்கப்பட்டு “ஆதாரம்” எனும் சஞ்சிகையை அவருடன் இணைந்து வெளியிட்டுக்கொண்டிருந்தார். அதில் இவரது எழுத்துகள் ஊடாக தொடர்ந்து கருத்துகள் பதிவேற்றப்பட்டதோடு பல பத்திரிகைகளில் பல்வேறு புனை பெயர்களில் தன் படைப்பான்றலை வெளிப்படுத்தி நின்றார்.

1995ஆம் ஆண்டு யாழ் இடம்பெயர்வினால் பல்கலைக்கழக கல்வியை தொடரமுடியாத சத்தியமூர்த்தி வன்னிமண்ணில் கால் பதித்து தாயக சட்டக்கல்லூரியில் சட்டக்கற்கையை முடித்து சான்றிதழைப் பெற்றுக்கொண்டார். பின்னர் சட்டக்கல்லூரியின் அதிபர் பொறுப்பினை ஏற்று பணிபுரிந்தார். தன் ஆளுமைத் திறனாலும் தூரநோக்குச் சிந்தனையாலும் தன் பணிகளை செவ்வனே ஆற்றிய சத்தியமூர்த்தி வன்னிப் பெருநிலப் பரப்பில் போர்மேகங்கள் சூழ்ந்தவேளை எல்லைகாப்புப் பணியில் சுழற்சிமுறையில் பகுதிநேரமாக தன்னை இணைத்துக் கொண்டார். தவணைமுறை தவறாது மாதத்திற்கு ஒருவாரம் தாய்மண்ணுக்கான தன் பணியை விருப்போடு ஆற்றினார். இயற்கையின் மீதும் தாய்மண்மீதும் குடும்பத்தின் மீதும் ஆழமான பற்றுறுதிகொண்ட இவர் பிறரது கண்ணீரை எந்தவகையிலாவது யாருடைய உதவியை நாடியும் துடைத்தே ஆகவேண்டுமென்று உறுதியாய் நிற்பார்.

முகாமைத்துவ உதவிப் பரீட்சையில் சித்திபெற்று முல்லைத்தீவு கல்வித் திணைக்களத்தில் முகாமையாளராகப் பணியாற்றிய இவர் தனது பணிக்காலங்களில் பல்வேறு பணிகளை ஆற்றி கல்விச் சமூகத்தின் நன்மதிப்பைப் பெற்றார். முல்லைத்தீவுக் கல்வித் திணைக்களத்தால் நடாத்தப்பட்ட முறைசாரா கல்விப் பிரிவினரால் “இதழியல்” கற்கை நெறியை ஏழு கலை இலக்கியப் பேரவையுடன் இணைந்து நடாத்தி பல

ஊடகவியலாளர்களை உருவாக்கி வெளிக்கொணர்ந்தார். பின்னர் ஈழநாடு பத்திரிகையின் ஆசிரிய பீடத்தில் பணியாற்றிய சத்தியமூர்த்தி பல ஊடகர்கள், எழுத்தாளர்களின் மனங்களில் தன் நற்பண்புகளாலும், நேர்த்தியான கடமை உணர்வுகளாலும் பலராலும் நேசிக்கப்படும் ஓர் ஊடகரானார்.

ஈழநாடு பத்திரிகையின் இயங்குநிலை தடைப்பட தொடர்ந்தும் ஈழநாதம் பத்திரிகையில் இணைந்து செய்தி, கட்டுரை, களநிலவரங்கள் என்பவற்றை எழுதினார். புலிகளின் குரல் வானொலியிலும், கனேடியத் தமிழ் வானொலியிலும், ஐ.பி.சி வானொலியிலும் பலரது நேர்காணல்களை, களமுனை நிலைமைகளை, பொறுப்புநிலை சார்ந்தோரின் நேர்காணல்கள் ஊடாக வெளிக்கொணர்ந்த இவர் நிதர்சனம் தொலைக்காட்சிச் சேவையூடாக அரசியல்களம் நிகழ்ச்சியையும் வழங்கி வந்தார்.

போர் ஓய்ந்து சமாதானம் நிலவிய காலத்தில் சத்தியமூர்த்தி அவர்கள் மட்டக்களப்பு கல்குடா வலையக்கல்வி பணிபனைக்கு சென்றார். சமாதானம் முடிவுற்று மீண்டும் தாயகப் பகுதியில் போர்மேகங்கள் சூழ கிளிநொச்சி சுகாதார திணைக்களத்திற்கு இடமாற்றம் பெற்று வந்துசேர்ந்த சத்தியமூர்த்தி அவர்கள் 2004ஆம் ஆண்டு் மார்கழி மாதத்தில் ஆழிப்பேரலையின் கோரத்தாண்டவத்தால் உடமைகளை இழந்த மக்களின் தேவைகளை இரவுபகல் பாராமல் பொது அமைப்புகள், களச்சேவையாளர்களுடன் இணைந்து தன் பணியையும் ஆற்றிநின்றார்.

ரி.ரி.என் தொலைக்காட்சி ஊடாக நாள்நோக்கு, அரசியல்களம் ஆகிய நிகழ்ச்சிகளை வழங்கியதன் மூலம் பும்பெயர் வாழ் மக்களிடையே நாட்டு நிலைமைகளை அறியும் வாய்ப்பை ஏற்படுத்தினார். இதனூடாக உலகெங்கும் பரந்து வாழும் தமிழ்மக்கள் மனங்களிலும் நீங்காது நிலைத்தார்.

நிதர்சனம் தொலைக்காட்சி் (த.தே.தொ) சேவையில் கு.வீரா தொகுத்து வழங்கிய “நிலவரம்” நிகழ்ச்சியில் பலமுறை அழைக்கப்பட்டார். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இத் தொலைக்காட்சி மூலம் அறியப்பட்ட இவர் 16.06.2005 அன்று ஊடகப் பணியில் இருந்த நந்தினி அவர்களுடன் திருமண பந்தத்தில் இணைந்து கிளிநொச்சியில் வாழ்ந்து வந்தார்.

2006ஆம் ஆண்டுபெண் குழந்தையைப் பெற்றெடுத்தனர் தனது மகள் பிறந்து இரண்டாவது நாளில் 550 பக்கங்களைக் கொண்ட பஞ்சதந்திரக் கதைகள் என்ற புத்தகத்தை வாங்கி வந்து

“ மகளே இதிலுள்ளது கதைகள் மட்டுமல்ல வாழ்க்கையின் தத்துவங்களும்தான் அடங்கி இருக்கிறது இதைப் பின்பற்றி வாழவேண்டும்”

என எழுதி தன்னுடைய கையொப்பத்தையும் மனைவியின் கையொப்பத்தையும் இட்டு மகளிடம் கையளித்தார்.

ஒரு பண்பான, தாய்மண்ணையும் தாய் மொழியையும் நேசிக்கின்ற நெறிமுறை தவறாத ஒரு தந்தையாக ஊடகவியலாளர் சத்தியமூர்த்தி வாழ்ந்தார் என்பதை இன்னும் பல சம்பவங்கள் உணர்த்தி நிற்கின்றது.

கிளிநொச்சி நகர் போர்ச்சூழல்களால் மெல்ல மெல்ல இயல்பு நிலையை இழக்கத் தொடங்கியது சத்தியமூர்த்தி குடும்பம் மூங்கிலாறிற்கு இடம்பெயர்ந்தது. உயிரிழப்பு, நில ஆக்கிரமிப்புச் செய்திகள் காட்டாற்று வெள்ளமாய் மெல்ல மெல்ல ஊர்மனைகள்தோறும் பரவுகிறது. உண்மைச் செய்திகள் வெளியே செல்வதில் ஊடகத் தணிக்கை முட்டுக்கட்டை போட்டு நிற்கிறது. தொடர் இழப்புகள் இடப்பெயர்வுகள். வைத்தியசாலைகள், பாடசாலைகள், பொதுமக்கள் கூடும் இடங்கள் அத்தனையும் இலக்குவைத்து துவம்சம் செய்யப்படுகிறது. சத்தியமூர்த்தியின் கால்களும் எழுதுகோலும் அவலங்களை உண்மை நிலைகளை பதிப்பாக்கத் துடிக்கின்றது. விசுவமடுப் பகுதியில் பரவலாக எறிகணைகள் வீழ்ந்து வெடித்தவண்ணம் இருக்கிறது. சத்தியமூர்த்தி அவர்கள் செல்மழைக்குள் நின்றுகொண்டு வானலையூடாக உலகம்வாழ் மக்களுக்கு

“சுற்றிவரக் குண்டுமழை பொழிகிறது. மக்கள் செத்துக்கொண்டிருக்கிறார்கள் இன்று உங்களோடு கதைக்கும் நான்கூட இந்தக் குண்டுக்குப் பலியாகலாம்” என அந்த அவலச் சூழலை எடுத்தியம்பிக்கொண்டிருந்தார்.

இவரது குடும்பம் மு/தேவிபுரம் வந்தடைந்தது. அங்கும் இருக்கமுடியாத சூழல் வர மக்கள் பெருமளவில் இடம்பெயர சத்தியமூர்த்தி குடும்பமும்

புது/இரணைப்பாலையை வந்தடைந்தது. அங்கும் இருக்கமுடியாத சூழல் வர புதுக்குடியிருப்பு கோம்பாவிலுள்ள திம்பிலி வெட்டையில் பல இலட்சம் மக்கள் ஆங்காங்கே சிதறிக் குடிலமைக்க இவரது குடும்பமும் குடிலமைத்தது.

ஊடகர்கள் தாம் கண்ணும் கருத்துமாகய் நேசித்த ஊடகப் பணியில் சிறிதளவேனும் பின்வாங்கலையோ,தாமதத்தையோ உண்டுபண்ணாது தம்சேவை நேரங்கள் தாண்டியும் இரவு பகலாக ஓடியோடி மக்களின் துயர துன்பங்களை கட்டவிழ்த்துவிடப்படும் போர்ப் பூதத்தையும் ஒவ்வொரு மணித்துளியும் கடந்தவர்களாய் கடமையாற்றிய பல்வேறு ஊடகவியலாளர்களுள் சத்தியமூர்த்தியும் ஒருவராகிறார். அந்தச் சூழலில் இணையத்தள வசதிகள், தொலைபேசி வசதிகள் இருந்ததே இல்லை. செய்தி ஊடகங்கள் நாளுக்கு நாள் ஒவ்வொரு இடமாக தற்காலிக கொட்டகைகள் அமைத்து இடம்மாறிக்கொண்டிருந்தது. இவ்வாறாக ஓடியோடி இழப்புகளை, அழிவுகளை தாள்களிலே எழுதி எழுதி ஊடகங்களில் சமர்ப்பித்து இயன்றவரை வெளி உலகிற்கு தெரியப்படுத்திக்கொண்டிந்த ஊடகர், ஆய்வாளர், நாட்டுப்பற்றாளர் சத்தியமூர்த்தி அவர்கள் 12.02.2009 அன்று எறிகணை வீச்சில் காயமடைந்து கொடிய போரின் சாட்சிகளுள் ஒருவராய் ஏதுமே அறியா இரண்டரைவயது நிரம்பிய தனது மகளின் இறுதி முத்தத்தோடு இவ்வுலக வாழ்வு துறந்தார்.

இறுதியான அந்தப் புகைப்படம் ஐக்கியநாடுகள் சபை மனித உரிமை கூட்டத் தொடரின்போது பேச மொழியற்ற உணர்வுப் படமாய் நீதி கேட்டு நிற்கிறது. ஊடக தர்மத்தையே தங்கள் உயிரிலும் மேலாக நேசித்த ஊடகவியலாளர்கள் பலரை ஈழமண் சந்தித்திருக்கிறது.

ஊடகவியலாளர் சத்தியமூர்த்தி நினைவாக யா/இந்துக்கல்லூரி 1991ஆம் ஆண்டு சக மாணவர்கள் இணைந்து “பு.சத்தியமூர்த்தி நினைவுகளுடன் பேசுதல்” எனும் நூலினை. 12.02.2019இல் திருமதி.நத்தினி சத்தியமூர்த்தி, செல்வி. சிந்து சத்தியமூர்த்தி ஆகியோரின் பதிப்புரிமையோடு ராதையன், வேலணையூர் சுரேஸ், பு.கமலநந்தினி, கை.சரவணன், ஜெ.கோகுலவாசன் ஆகியோரின் மலர்த் தொகுப்புடன் யாழ்ப்பாணம் எவகிறீன் அச்சுப் பதிப்புடன் இந்நினைவு மலர் வெளிவந்துள்ளது. இந்நூலினை……

“பு.சத்தியமூர்த்திக்கும்

உலகெங்கும்

அடக்குமுறைக்கு எதிராகவும்

மானுட உரிமைகளுக்காகவும்

எழுதுகோல் ஏந்திப் போராடிய

சக

ஊடகப் போராளிகள்

அனைவருக்கும்… “

படையல் செய்யப்பட்டிருக்கிறது.

ஊடகவியலாளர் சத்தியமூர்த்தி அவர்களுடனான நெஞ்சகலா நினைவுகளை யா/இந்துக் கல்லூரி 1991ஆம் ஆண்டு பிரிவு மாணவர்கள், யாழ்ப்பாணம் எழுகலை இலக்கியப் பேரவை, முன்னாள் வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, ஓவியர் புகழேந்தி, பண்டிதர் ச.வே.பஞ்சாட்சரம், வலம்புரி நாளிதழ் பிரதம ஆசிரியர் நல்லையா விஜயசுந்தரம், மூத்த ஊடகவியலாளர் ராதேயன், மூத்த ஊடகவியலாளர் காக்கா அண்ணை, யாழ் பல்கலைக்கழக அரசறிவியல் துறைத் தலைவர் கலாநிதி கே.ரி.கணேசலிங்கம், கலாநிதி சி.ரகுராம், நண்பன் சி.செவ்வேள், கவிஞர் வேலணையூர் சுரேஸ், கவிஞர் கு.வீரா, வைத்திய கலாநிதி செல்வலிங்கம் தெய்வகுமார், பன்னாட்டு விவகார அரசறிவியலாளர் கலாநிதி ரஞ்சித் ஶ்ரீறீஸ்கந்தராஜா, உடுவில் அரவிந்தன், திருமதி. சத்தியமூர்த்தி நந்தினி, சிந்து சத்தியமூர்த்தி, நீலன் கீலன், ஆதிலட்சுமி சிவகுமார், ஊடகவியலாளர் இளங்கீரன், கவிஞர் முல்லைக் கமல், நரேஸ், ரேணுகா உதயகுமார், த.தே.தொலைக்காட்சி சிவா (புவியரசன்), ந.லோகதயாளன், சிதம்பர பாரதி, ந.மயூரரூபன், செ.சதீஸ்குமார் (விவேகானந்தனூர் சதீஸ்), கண்ணதாசன் மோகனகுமாரி, இரா.ராஜன், ஈழமுரசு பொறுப்பாசிரியர் கி.ஜெயசுந்தர், ஊடகவியலாளர் இதயச்சந்திரன், திருமதி.ப்ரியம்வதா பயஸ் (காயத்திரி பயஸ் ராஜா), கார்த்தி ஜனனி, தர்மலிங்கம் சிவா, கை.சரவணன், நா.எழில், ஆனந்தி சகோதரி, ஊடகவியலாளர் உமா, யாழ் இந்துவின் மைந்தன் ஊடக மையம் பிரான்ஸ் பொறுப்பாளர் க.ஆதித்தன், ஊடகவியலாளர் பரா பிரபா, சிவப்பிரகாசம் றாஜ், நேரு குணரட்ணம், கனேடிய தமிழ் வானொலி செந்தமிழினி பிரபாகரன், சத்தி பரமலிங்கம், அ.யோ.கொலின் (அன்பழகன்), முன்னாள் ஈழநாதன் (வெள்ளிநாதம்) வார இதழ் ஆசிரியர் ஶ்ரீ.இந்திரகுமார், தமிழன்பன் அருள்திலா, காவலூர் இ.விஜேந்திரன், பிறேமினி அற்புதராசா, ஊடகவியலாளர் எஸ்.வி.ஆர்.கஜன், வட்டு சுப்பிரமணிய வித்தியாசாலை அதிபர் ஜெ.கோகுலவாசன், ந.நவராஜன், பு.சிந்துஜன், சுதர்சன், வலி வடக்கு பிரதேச்சபை உறுப்பினர் ச.சஜீவன், சி.நிசாகரன் ஆகியோரின் நினைவுக் குறிப்புகளோடு இந்நூல் சத்தியமூர்த்தி அவர்களின் நினைவு சுமந்து நிற்கிறது.

உயிரிழப்புகளையும், உடலக்குவியல்களையும், வாழ்வியலில் மனித இனம் அனுபவிக்கமுடியாத வலிகளையும், சொல்லிலடங்கா வேதனைகளையும், அர்ப்பணிப்புமிகுந்த தியாக உணர்வு கலந்த வாழ்வியலையும் எழுதிய, வாசித்த, நிகழ்ச்சிகளாய்த் தொகுத்த மிக அற்புதமான ஊடகவியலாளர்களை, ஆய்வாளர்களை ஈழமண் தாங்கி நின்றிருக்கின்றது, நிற்கிறது

என்ற ஊடக தர்மம்மிகு

ஊடக நாயகர்களை நெஞ்சார நினைந்துருகுவதோடு நலிவுற்றுப் போகும் ஊடக தர்மம் தம்முயிர் கொடுத்தும் ஊடகதர்மம் காத்த உன்னத ஊடகர்களை நெஞ்சிருத்தி நெறிமுறை காத்து ஊடகப்பணியாற்ற வேண்டுமென்று உரிமையுடன் வேண்டுகிறோம்.

து.திலக்(கிரி),

19.10.2025.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.