Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2024-ல் தகுதி கூட பெறாத ஜிம்பாப்வே இன்று சாம்பியன்களை வீழ்த்திய கதை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

2024-ல் தகுதி கூட பெறாத ஜிம்பாப்வே இன்று சாம்பியன்களை வீழ்த்திய கதை

ஜிம்பாப்வே கிரிக்கெட்டின் வீழ்ச்சியும் எழுச்சியும் - டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம்,Getty Images

கட்டுரை தகவல்

  • பிரதீப் கிருஷ்ணா

  • பிபிசி தமிழ்

  • 20 பிப்ரவரி 2026, 11:21 GMT

    புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

நடந்து கொண்டிருக்கும் டி20 உலகக் கோப்பையில் அநேக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கும் அணி ஜிம்பாப்வே.

யாரும் எதிர்பாராத வகையில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய அந்த அணி, பின்னர் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.

வியாழக்கிழமை நடந்த கடைசி லீக் சுற்றுப் போட்டியில் இலங்கையையும் வீழ்த்தி பி பிரிவில் முதலிடம் பெற்று அசத்தியிருக்கிறது அந்த அணி.

2024 டி20 உலகக் கோப்பையில் 20 அணிகள் பங்கேற்றபோதும் ஜிம்பாப்வே அணியால் அதற்குத் தகுதி பெற முடியவில்லை. அப்படி தடுமாறிக்கொண்டிருந்த அந்த அணி, அடுத்தடுத்து இரு முன்னாள் உலக சாம்பியன்களை வீழ்த்தியிருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் தற்போது பெரும் பேசுபொருளாகியிருக்கிறது.

இதை வெறும் எழுச்சிக் கதையாக மட்டுமே பார்த்திட முடியாது. ஏனெனில், அவர்கள் இப்படியான வெற்றிகள் பெறுவதோ, பெரிய அணிகளாகக் கருதப்படுபவர்களுக்கு அதிர்ச்சியளிப்பதோ, உலகக் கோப்பையின் அடுத்து சுற்றுக்கு முன்னேறுவதோ இது முதல் முறை அல்ல.

1983 உலகக் கோப்பையில் முதல் முறையாக ஜிம்பாப்வே சர்வதேச அரங்கில் பங்கேற்றது. முதல் போட்டியிலேயே ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது அந்த அணி. இந்தியாவையும் உலகக் கோப்பையில் வீழ்த்தியிருக்கிறார்கள். இரண்டு முறை இந்திய அணியை டெஸ்ட் போட்டிகளிலும் தோற்கடித்திருக்கிறார்கள்.

அடுத்தடுத்து இரு உலகக் கோப்பைகளில் சூப்பர் 6 சுற்றுக்குள் நுழைந்த அணி ஜிம்பாப்வே.

இருந்தபோதிலும் அவர்கள் 20 அணிகள் பங்கேற்ற உலகக் கோப்பைக்குத் தகுதி பெறாமல் போனதுமே பெரும் செய்திதான்.

இவ்வளவு ஏன், அந்த அணிக்கு ஐசிசி தடையே விதித்திருந்தது.

இப்படி ஏற்றமும், முன்னேற்றமும் நிறைந்ததுதான் ஜிம்பாப்வே கிரிக்கெட்டின் கதை.

கடந்த 3 தசாப்தங்களில் அவர்கள் சிகரத்துக்கு அருகேயும் சென்றிருக்கிறார்கள், பாதாளத்துக்குள்ளும் குதித்திருக்கிறார்கள்.

ஜிம்பாப்வே கிரிக்கெட்டின் வீழ்ச்சியும் எழுச்சியும் - டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம்,Getty Images

தொடக்க காலமும், பெரும் எழுச்சியும்

1980-ல் சுதந்திரம் பெற்ற ஜிம்பாப்வே, 1983-ம் ஆண்டுக்கான உலகக் கோப்பைக்குள் தகுதிச் சுற்றை வென்றதன் மூலம் நுழைந்தது.

முதல் போட்டியிலேயே அந்த அணி பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அதிர்ச்சி ஏற்படுத்தியது. இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த டங்கன் ஃபிளெட்சர்தான் அப்போது ஜிம்பாப்வே அணியின் கேப்டன். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அந்த வெற்றியின் காரணகர்த்தாவும் இவர்தான்.

அந்த வெற்றியோடு தொடங்கியிருந்தாலும், ஜிம்பாப்வேவால் மற்ற அணிகளுக்கு இணையாக செயல்பட முடியவில்லை. அந்தத் தொடரின் மற்ற ஐந்து போட்டிகளிலும் தோற்றார்கள். 1987 உலகக் கோப்பையில் அனைத்து போட்டிகளிலும் தோற்றார்கள். 1992-ல் இங்கிலாந்தை மட்டும் வென்றார்கள். அடுத்த உலகக் கோப்பையில் அவர்களை விடப் பலம் குறைந்த அணியாகக் கருதப்பட்ட கென்யாவை மட்டும் வீழ்த்தினார்கள்.

இப்படித்தான் ஜிம்பாப்வே கிரிக்கெட் தொடக்க காலம் இருந்தது. இதற்கிடையே அவர்கள் 1992-ல் டெஸ்ட் அந்தஸ்து பெற்றிருந்தார்கள்.

1990-களின் பிற்பகுதியில் ஜிம்பாப்வே கிரிக்கெட்டின் பொற்காலம் தொடங்கியது. 1995-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது ஜிம்பாப்வே. அதன்பிறகு தொடர்ச்சியாக பல குறிப்பிடத்தகுந்த வெற்றிகளை அந்த அணி ஈட்டியது.

ஜிம்பாப்வே கிரிக்கெட்டின் வீழ்ச்சியும் எழுச்சியும் - டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,1999 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஜிம்பாப்வே

இந்தியாவுக்கு சவால்

ஏண்டி ஃப்ளார், கிரான்ட் ஃப்ளார், ஹீத் ஸ்ட்ரீக், ஏண்டி பிளிக்னாட், டேவ் ஹூடன், அலிஸ்டர் கேம்பெல், ஹென்றி ஒலாங்கா போன்ற வீரர்கள் உலகத்தர செயல்பாடுகளைக் கொடுக்கத் தொடங்கினார்கள்.

பாகிஸ்தானுக்கு எதிரான அந்த டெஸ்ட் வெற்றியில் ஃப்ளார் சகோதரர்கள் இருவருமே சதமடித்தார்கள். ஆண்டி ஃப்ளார் சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்துக்கே முன்னேறினார். அப்படிப்பட்ட திறமையான இந்த வீரர்களின் சீரான செயல்பாடுகள் ஜிம்பாப்வே அணியை முன்னணி அணிகளோடு போட்டியிட வைத்தது.

1998-ல் இந்தியாவுக்கு எதிராக நடந்த ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தங்களின் சிறந்த செயல்பாட்டைத் தொடர்ந்தது ஜிம்பாப்வே. ஹராரேவில் நடந்த அந்தப் போட்டியை 61 ரன்களில் வென்ற அந்த அணி, அடுத்த மாதம் பாகிஸ்தானுக்குச் சென்று 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என வென்றது.

அதற்கடுத்து, 1999 உலகக் கோப்பையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது ஜிம்பாப்வே. குரூப் சுற்றில் இந்தியாவை 3 ரன்களில் வீழ்த்தியது அந்த அணி. தங்கள் கடைசி குரூப் சுற்றுப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. விளைவாக இங்கிலாந்தும், நடப்பு சாம்பியன் இலங்கையும் முதல் சுற்றோடு வெளியேறின.

2001-ல் இந்தியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டியை வென்று, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை சமன் செய்தது ஜிம்பாப்வே. இது, பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிராகப் பெற்ற புகழ்பெற்ற தொடர் வெற்றிக்குப் பிறகு கங்குலி தலைமையிலான இந்திய அணி கலந்துகொண்ட அடுத்த டெஸ்ட் தொடர். அப்படியொரு ஃபார்மில் இருந்த இந்தியாவுக்கு சரிசமமாக சவால் கொடுத்தது ஜிம்பாப்வே.

ஜிம்பாப்வே கிரிக்கெட்டின் வீழ்ச்சியும் எழுச்சியும் - டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,2001-ம் ஆண்டு ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1 இடத்தைப் பிடித்தார் ஏண்டி ஃப்ளார்

தேசத்தின் வீழ்ச்சி... கிரிக்கெட்டின் வீழ்ச்சி

ஜிம்பாப்வே கிரிக்கெட் மெல்ல எழுச்சி பெற்றுக்கொண்டிருந்த காலகட்டத்தில் அந்த தேசத்தின் நிலை மோசமாகிக்கொண்டிருந்ததது. அந்நாட்டின் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை சந்திக்க, பல்வேறு பிரச்னைகள் அரங்கேறின. அந்தக் காலகட்டத்தில் கிரிக்கெட் அணியின் தேர்வில் அரசியல் தலையீடு இருப்பதாகவும் வீரர்கள் குற்றம் சாட்டியிருந்தார்கள்.

இந்நிலையில் தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் கென்யாவில் 2003 உலகக் கோப்பை நடந்தது.

அப்போது அதிபர் ராபர்ட் முகாபேவின் ஜிம்பாப்வே மீது பலரின் பார்வையும் பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக இங்கிலாந்து அணி ஜிம்பாப்வே செல்ல மறுத்தது. போட்டிகளின்போது ஜிம்பாப்வே வீரர்கள் ஆண்டி ஃப்ளார் மற்றும் ஹென்றி ஒலாங்கா ஆகியோர் கறுப்புப் பட்டை அணிந்து விளையாடியது மேலும் அந்நாட்டின் சூழ்நிலை மீது வெளிச்சம் பாய்ச்சியது. ஜனநாயகத்தின் மரணத்தை உணர்த்துவதற்காக அவர்கள் அதைச் செய்ததாகக் கூறினார்கள்.

"வறுமை, வேலையின்மை, எச்ஐவி தொற்று என பல்வேறு விஷயங்களால் நாடு பாதிக்கப்பட்டிருக்கிறது. அடுத்த சில மாதங்களில் லட்சக்கணக்கான ஜிம்பாப்வே மக்கள் மரணமடையலாம். இனவெறி வெறுப்பு பேச்சுகளைக் கேட்க முடிகிறது. இதை கண்டுகொள்ளாமல் இருப்பது கடினம்" என்று அவர்கள் இருவரும் இணைந்து அப்போது அறிக்கை வெளியிட்டிருந்தார்கள்.

இதன் காரணமாக அவர்கள் இருவரும் கிரிக்கெட்டை விட்டும் நாட்டை விட்டும் வெளியேறவேண்டிய நிலையே ஏற்பட்டது.

இதன்பிறகு ஜிம்பாப்வே அணியில் இட ஒதுக்கீடு குறித்து பல ஆண்டுகளாக நடந்துவந்த விவாதம் 2004-ல் உச்சம் அடைந்தது. அதன் விளைவாக கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக் பதவி நீக்கம் செய்யப்பட, அது வீரர்களிடைய எதிர்மறையான வரவேற்பைப் பெற்றது. பத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் போட்டியில் விளையாட மறுத்தார்கள்.

புதிய கேப்டனான தைபுவும் அவர் தலைமையிலான இரண்டாம் கட்ட அணியும் நெருக்கடியான சூழ்நிலையை சமாளிக்கத் தடுமாறினார்கள்.

தொடர் தடுமாற்றங்கள் காரணமாக அந்த அணி டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்காமல் விலகிக்கொண்டது. அதேசமயம் ஜிம்பாப்வேவின் உள்ளூர் கிரிக்கெட்டும் பாதிக்கத் தொடங்கியது. அவர்களின் முதல் தரத் தொடரான லோகன் கப் 2005/06 சீசனில் நடக்கவேயில்லை. இதற்கு மத்தியில் பங்கேற்ற தொடர்களிலெல்லாம் பெரும்பாலும் தோல்வியே சந்தித்தது ஜிம்பாப்வே.

அரசியல் தலையீடும், ஐசிசி தடையும்

அடுத்த சில ஆண்டுகள் ஜிம்பாப்வே கிரிக்கெட் எழுச்சி பெறத் தடுமாறவே செய்தது. அவ்வப்போது குறிப்பிடத்தக்க சில வெற்றிகளை அந்த அணி பெற்றது. ஆனால், அதை அவர்களால் தொடர்ச்சியாகப் பெற முடியவில்லை. 2007 டி20 உலகக் கோப்பையில் அந்த அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. ஆனாலும், அவர்களால் அடுத்த சுற்றுக்குக் கூட முன்னேற முடியவில்லை.

2005-ம் ஆண்டுக்குப் பிறகு 2011-ல் தான் அவர்கள் டெஸ்ட் போட்டியில் விளையாடினார்கள். 2019 ஒருநாள் உலகக் கோப்பைக்குத் தகுதி பெறவும் அந்த அணி தவறியது.

இந்நிலையில் 2019-ல் அந்த அணியின் கிரிக்கெட் இன்னொரு பெரும் பிரச்னையை சந்தித்தது. அந்த அணியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சஸ்பெண்ட் செய்தது.

கிரிக்கெட் நிர்வாகத்தில் அரசின் தலையீடு இருக்கக்கூடாது என்ற விதிமுறையை ஜிம்பாப்வே உறுதி செய்யத் தவறியதாக கூறி இத்தடை விதிக்கப்பட்டது

அந்தத் தடை விரைவில் நீக்கப்பட்டிருந்தாலும், அந்தக் காலகட்டத்தில் நடந்த 2021 டி20 உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றில் அந்த அணியால் பங்கேற்க முடியவில்லை.

நம்பிக்கை தந்திருக்கும் 2026 உலகக் கோப்பை

இப்படியாக பல ஆண்டு காலப் போராட்டத்துக்குப் பிறகு மறுபடியும் ஜிம்பாப்வே அணி குறிப்பிடத்தக்க ஒரு செயல்பாட்டைத் தற்போது கொடுத்துக்கொண்டிருக்கிறது.

சிகந்தர் ராஸா, கிரீம் கிரெமெர் போன்ற சீனியர்கள் முன்நின்று வழிநடத்த பிரயன் பென்னட், தடிவானஷே மருமானி போன்ற வீரர்கள் தைரியமான ஆட்டத்தை வெளிப்படுத்த ஜிம்பாப்வே தற்போது பெரிய அணிகளுக்கு சவாலளிக்கிறது.

அவர்களின் வெற்றி பற்றி இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ நிகழ்ச்சியில் பேசிய இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர், "அவர்கள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறவேண்டும் என்பதை மட்டும் இலக்காகக் கொண்டிருக்கவில்லை. அவர்கள் இன்னும் பெரிய இலக்கு வைத்திருக்கிறார்கள். பெரிய தாக்கம் ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கில் வந்திருக்கிறார்கள்" என்றார்.

கேப்டன் சிகந்தர் ராஸா தன்னுடைய போராட்ட குணத்தை அணி வீரர்களுக்கும் செலுத்தியிருப்பதாக அவர் கூறினார்.

தங்கள் போட்டிகள் அனைத்தையும் இலங்கையில் ஆடியது ஜிம்பாப்வே அணி. அங்கு சுழற்பந்துவீச்சுக்கே ஒத்துழைப்பு அதிகமாக இருக்கும். ஆனால், அந்த ஆடுகளங்களில் தங்கள் வேகப்பந்துவீச்சாளர்கள் மூலம் பெரும் தாக்கம் ஏற்படுத்தியிருக்கிறது ஜிம்பாப்வே. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில், ஜிம்பாப்வே வேகப்பந்துவீச்சாளர் பிளெஸிங் முசர்பானி 17 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

ஜிம்பாப்வே கிரிக்கெட்டின் வீழ்ச்சியும் எழுச்சியும் - டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,ஜிம்பாப்வே அணியின் செயல்பாடு அந்நாட்டு ரசிகர்களுக்கு பெரும் நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது

ஜிம்பாப்வே அணி சூழ்நிலையைப் பற்றி யோசித்து அதில் சறுக்கிவிடாமல், தங்கள் பலத்தை உணர்ந்து விளையாடியிருப்பதாகக் கூறினார் சஞ்சய் பங்கர்.

"என்னைப் பொறுத்தவரை எந்தவொரு ஆடுகளத்திலும் எல்லா விதமான திறமைக்கும் இடம் இருக்கிறது. ஜிம்பாப்வே அதைத்தான் செய்திருக்கிறது. அவர்கள் இலங்கை ஆடுகளத்தை நினைத்து அதற்கேற்று செயல்படாதது நல்ல விஷயம்" என்று கூறினார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஜிம்பாப்வேவின் வெற்றி பற்றி பிபிசி தமிழிடம் பேசிய வர்ணனையாளர் பகவதி பிரசாத், "ஜிம்பாப்வே அணிக்கு சரியான திட்டம் இருந்தது. அவர்கள் பெரிய பவுண்டரிகளில் ஆஸ்திரேலிய பேட்டர்களுக்குப் பொறிவைத்தனர். 'ஹார்ட் லென்த்'களில் சரியாகப் பந்துவீசினார்கள். அந்த சரியான திட்டமிடல் தான் அவர்களுக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தது" என்று கூறினார்.

ஜிம்பாப்வே கிரிக்கெட்டின் வீழ்ச்சியும் எழுச்சியும் - டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,இந்த உலகக் கோப்பையில் 3 இன்னிங்ஸ்களில் 9 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார் பிளெஸிங் முசர்பானி

சூப்பர் 8 சுற்றில் என்ன எதிர்பார்க்கலாம்?

பி பிரிவில் முதலிடம் பிடித்த ஜிம்பாப்வே அணி தற்போது சூப்பர் 8 சுற்றில் முதல் பிரிவில் இடம்பெற்றுள்ளது. இதில் மேற்கிந்திய தீவுகள், இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் இடம்பெற்றிருக்கின்றன.

மேலும், இந்த உலகக் கோப்பையில் இதுவரை இலங்கையில் மட்டுமே விளையாடியிருந்த ஜிம்பாப்வே, இந்த 3 போட்டிகளையும் இந்தியாவில் விளையாடவேண்டும். அதனால், இந்திய ஆடுகளங்களுக்கு அந்த அணி எப்படி தகவமைத்துக்கொள்கிறது என்பது முக்கியம் என்றும் சஞ்சய் பங்கர் கூறியிருந்தார்.

பொதுவாக ஓர் அணி இரண்டு பெரிய அணிகளை அடுத்தடுத்து வீழ்த்துகிறது என்றால் அதை அதிர்ஷ்டமாகவோ, அதிர்ச்சியாகவோ பார்க்க முடியாது. அதுவும், கடைசி வரை பரபரப்பாகவெல்லாம் செல்லாமல் நிதானமாக ஆடி வென்றிருக்கிறார்கள். இதற்கு மேலும் தாங்கள் இலக்கு வைத்திருப்பதாகக் கூறுகிறார்கள். அதனால், ஜிம்பாப்வே சூப்பர் 8 சுற்றிலும் பெரும் தாக்கம் ஏற்படுத்துமா என்பதை பார்க்க வேண்டும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cpd84xd6w91o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.