Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறம் கூற்றாகட்டும் - சோம.அழகு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சோம.அழகுவின் சமீபத்திய கட்டுரை :

அறம் கூற்றாகட்டும்

- சோம.அழகு

[சங்கிகள், சொங்கிகள், சிங்கி மங்கிகள் ஆகியோர் தயை கூர்ந்து இக்கட்டுரையை வாசிக்க வேண்டாம் எனத் தாழ்மையு…. அப்படி எல்லாம் கேக்க முடியாது. வேண்ணா வாசிச்சுக்குங்க!

சொங்கி : சங்கி அல்லாவிடினும் ‘திராவிடம்’, ‘பெரியார்’ என்ற சொற்களைக் கேட்டவுடன் ஒவ்வாமையுடன் ஓங்கரிக்கும் ஒ(ஓ)ட்டுண்ணி

சிங்கி மங்கி : தகுதியே இல்லாத தானைத் தலைவன்(!) என்ன உளறிக் கொட்டினாலும் சீழ்க்கை அடிக்கும் ஜெல்லி மீன்கள்]

***************************************

‘அரசியல் ஒரு சாக்கடை’, ‘இந்த அரசியல் செய்திகளில் எல்லாம் ஆர்வம் இல்லை’ - வழமையான இவ்வரிகளை ஒருவிதப் பெருமையுடன் தூக்கிக் கொண்டு திரிபவர்களின் ஆழ்மனங்களில் சென்று யாரோ அவர்களை மேதாவிகள் என நம்ப வைத்திருக்கின்றனர். அதன் கொடும் விளைவாக, “யார் ஆண்டால் எனக்கென்ன? நான் சம்பாதிக்குறது எனக்கு!” என்று பினாற்றுபவர்களுக்கு, தமக்கான ஊதியம் மொத்தமாக அல்லது பகுதியாகக் கூட தமது கைக்கு வருவதே ஆட்சியாளர்களின் கைங்கர்யம்தான் என்ற தெருட்சியெல்லாம் இருக்கும் என்று எதிர்பார்ப்பதே மடமை!

ஒரு தனி நபரது அரசியல் சார்பு என்பது கருத்துகளால் மட்டும் ஆனவை அல்ல. கருத்தியல் சார்ந்தது. ஒருவரது விழுமியங்கள்(ஒழுக்கம், நேர்மை…), மதிப்பீடுகள், கண்ணோட்டம், மனிதம் என உள் உறைந்திருக்கும் பலவற்றையும் ஒன்றாகக் கட்டி அவரது ஆளுமையை எடுத்துரைப்பதே அவ்வரசியல் நிலைப்பாடுதான்! அரசியலில் அற நெறிமுறைகள் மற்றும் உய்யச் சிந்தனைகளின்(critical thinking) நுட்பமான பகுப்பாய்வில் உருவாகும் விருப்பு வெறுப்புகள்தாம் சரியான நிலைப்பாட்டை எடுக்க உதவும். யாரை ஆதரிக்கிறோம் என்பதை விட முக்கியமானது யாரை எதிர்க்கிறோம் என்பது. நண்பனை வைத்து நம்மை எடை போடுவதை விட எதிரியை வைத்து நம்மைக் கணிப்பது இன்னும் துல்லியமாக இருக்கும் அல்லவோ?

இடப்பக்கம் நிற்பார்க்கு உய்வுண்டாம்; உய்வில்லை வலப்பக்கம் நிற்கும் மாக்களுக்கு. இக்கட்டுரையை நடுவில் நின்று எழுதும் அளவிற்கு நான் பக்குவப்படவில்லை. அவ்வளவு பக்குவப்பட(!) விரும்பவும் இல்லை. வலதுசாரிகளில் தங்களது அடையாளத்தை வெளிக்காட்டத் துணிவில்லாதவர்கள் பூசிக் கொள்ளும் அரிதாரமே ‘நடுநிலையாளர்’. Annoying agnostics! இந்த நடுநிலை நக்கிகள் ஏதோ பண்பட்டவர்களாகவும் அறிவுநிலையில் மேம்பட்டவர்களாகவும் தங்களைத் தாங்களே புரிந்து வைத்திருப்பதுதான் அந்தோ பரிதாபம்! மனிதகுலத்திற்கு எதிரானது எனினும் ‘கொள்கை’ என்ற ஒன்றைக் கொண்ட வலது சாரிகள், “நீங்கள் தவறு” என்று நாம் வாதம் வைப்பதற்காகவாவது வழி வைத்துக் கொடுக்கிறார்கள். இந்தக் ‘கொள்கை அநாதை’களான நடுநிலையாளர்களிடம் என்னவென்று (அரசியல்) பேச முடியும்? இவ்வாறானவர்களைச் சந்திக்க நேரும் போதெல்லாம் “ஏதாவது ஒரு பக்கமா நில்லு பக்கி. நடுவால நின்னு வண்டி ஏறி செத்துராத மூதேவி” என்று வடிவேலுவின் தொனியில் இவ்வரிகள்தாம் மனதினுள் ஓடும்.

ஆராய்ந்து தெளிந்து ஒரு பக்கத்தைத் தேர்வு செய்ய ரொம்பவெல்லாம் மெனெக்கெட வேண்டியதில்லை. மனிதத்தையும் சமத்துவத்தையும் அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ‘இட’த்தைதான் ஆறாம் அறிவு மிக இயல்பாகத் தெரிவு செய்யும். எனவே கடைந்தெடுத்த கயமைத்தனத்தை மட்டுமே பின்பற்றும் வலப்பக்கத்தில் தற்காலத்திலும் கரை ஒதுங்கி, இடப்பக்கத்தை ஏறெடுத்தும் பார்க்க மறுப்பவர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள் என்ற வாதத்தைக் கடுமையாக எதிர்க்கிறேன். மூளைச்சலவை என்பதெல்லாம் ரொம்ப பூசி மெழுகப்பட்ட மென்மையான சொல். சிலருள் இயல்பாகவே ஊறிப் போயிருக்கும் வன்மத்திற்கு ஏற்ற தளம் அமைத்துத் தருவதால்தான் வலப்புறத்தை ஆரத் தழுவிக் கொள்கின்றனர். எந்த மனிதனிடமும் சென்று ‘நீ அடக்கி ஆளவும் ஏறி அடிக்கவும் உனக்குக் கீழேயும் ஒரு அடுக்கு இருக்கிறது’ என அவனுக்கு அதிகார ருசியைக் காட்டுவதையே தொழிலாகக் கொண்டுள்ள அந்த வன்மத்திற்குப் பல முகங்கள் - சாதி வெறி, மத வெறி, இன வெறி, இன்னும் எத்தனையோ. இந்த வெறிகளையெல்லாம் கொண்டு எழுப்பப்பட்ட ஒரு கட்டமைப்பை நோக்கிச் சாய்ந்து நிற்பதற்கு ஒரு தனித்துவமான மானமின்மை வேண்டும்.

பெரியார், அண்ணல் அம்பேகர், கார்ல் மார்க்ஸ் – cliché என இவர்களை எப்படி புறந்தள்ள முடியும்? கருப்பு, நீலம், சிவப்பு – ஒரு மனிதனிடமிருந்து இம்மூன்று நிறங்களையும் அழித்துவிட்டால் என்னதான் மிஞ்சும்? வெற்றிடத்தைக் காற்று நிரப்புவதைப் போல் காவி வந்து குடியமர்ந்து கொள்ளும். இயற்கையாய் ஒரு மனிதனுள் பூசப்பட்டிருக்க வேண்டிய அம்மூன்று நிறங்களையும் அழித்தொழிக்கும் உயிரிகளிடம் ஒரே ஒரு கேள்வி - “ஏன்?”

************************************

தமிழ்நாட்டில் பெரியார், அண்ணா ஆகிய மாபெரும் ஆளுமைகளையெல்லாம் கழுத்து வலிக்க அண்ணாந்து பார்த்து மெய்சிலிர்த்த காலம் போய் இப்போது அதல பாதாளத்தில் எவ்வளவு எட்டி எட்டிப் பார்த்தாலும் இன்னும் இன்னும் கீழே போய்க் கொண்டிருக்கின்ற அரசியல் அப்பிரசண்டிகளின் பின்னால் ஒரு தலைமுறையே போதமில்லாமல் கூத்தடித்துக் கொண்டிருப்பதையும் காண நேர்வது தமிழ் நிலத்தின் சாபக்கேடு. ட்ரம்ப், பெஞ்சமின் நெதென்யாகு…. எனத் துவங்கி மோடி வரை ஒட்டுமொத்தமாக உலக அளவிலேயே அரசியல் தரங்கெட்டுப் போயிருக்கிறது எனினும் தமிழ்நாடு அதில் தற்போது கொஞ்சம் தப்பித்துவிட்டதாகப் பெருமூச்சு விட்டு ஆசுவாசம் கொள்ளும் முன்னரே, ‘தலைகீழாகத்தான் குதிப்பேன்’ என்று திடீரென சிலர் எம்பிக் குதித்து அநாகரிக அரசியலின் ஆழத்தைப் படம் போட்டுக் காட்டிக் கொண்டிருக்கின்றனர்.

என்னத்தப் போட்டு சூசகமா கொச கொசன்னு?

தற்போதுள்ள அரசியல் சூழலில் பா.ஜ.க ஒன்றிய அரசின் எதேச்சதிகாரப் போக்கையும் அதை இயக்கும் ஆர்.எஸ்.எஸ்ஸையும் மிகத் தைரியமாக எல்லா வகைகளிலும் எதிர்க்கும் கட்சிகள் தமிழ்நாட்டில் மிகச் சில. அவ்வாறாக, தண்டு வடம் வாய்க்கப் பெற்ற கட்சிகளில் மிக முக்கியமான மாநிலக் கட்சிகள் தி.மு.கவும் வி.சி.கவும். நிற்க! உடனே ‘காவடி எடுக்கிறேன்’, ‘கூஜா தூக்குகிறேன்’ என்றெல்லாம் பாசத்தோடு பாராட்டு மழை பொழியும் முன் இதையும் வாசித்து விடுங்கள்.

எல்லாவாற்றிற்கும் அப்பாற்பட்ட புனிதர் பட்டத்தை இவர்களுக்குச் சாற்றவில்லை. ஈழத் தமிழர் பிரச்சனையில் தி.மு.க மீதான கோபம் இன்னும் அப்படியேதான் இருக்கிறது. ஆனால் அதைப் பிடித்துக் கொண்டு இப்போது அவர்களை நிராகரித்தால் பேராபத்தான சக்திகளின் பிடியில் மாட்டி நமது அடையாளத்தையே இழந்து சின்னா பின்னமாகிவிடுவோம்.

மேலும் திராவிட முன்னேற்ற கழகத்திற்கென்று ஒரு தனித்துவம் இருக்கிறது. ஓரளவு வாசிப்பும் பேச்சுத் திறமையும் கொண்ட வல்லுநர்களை உடையது அக்கட்சி. தி.மு.க.வின் ஆதரவாளர்கள் பலர் அக்கட்சியில் இல்லாதவர்கள். மேலும், தலைமையிடம் ஒரு தவறு இழைக்கும் போது முதன்முதலில் இடித்துரைப்பது கட்சிக்காரர்களும் ஆதரவாளர்களுமாகத்தான் இருப்பர். சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம், தூய்மை பணித் தொழிலாளர்கள் போராட்டம் ஆகியவையே எடுத்துக்காட்டுகள். தலைமையைக் கேள்வி கேட்பதற்கான வெளியும் கேள்விகளுக்குச் செவி மடுக்கும் தலைமைப் பண்பும் அக்கட்சிக்கு உண்டு. அப்புறம் அநியாயத்திற்கு நாகரிக அரசியலால் ஓர் உயரிய செந்தரத்தை இப்போது நிலைநாட்டி வருகிறார்கள். பிழையை இடித்துரைப்பது போலவே நல்லதைப் பாராட்டவும் செய்யலாம்தானே?

அ.தி.மு.க பா.ஜ.க.விடம் என்றோ விலை போய் விட்டாயிற்று. ‘அந்தம்மா இருந்திருந்தா நடக்குறதே வேற’ என தயவு செய்து தூக்கிக் கொண்டு வராதீர்கள். அவரே ஒரு சர்வாதிகாரிதான். தே.மு.தி.க, பா.ம.க – பொட்டியைக் கண்டால் எங்கும் யாருக்கும் குட்டிக்கரணம் அடிப்பார்கள். அதிலும் இரண்டாவது, கடைந்தெடுத்த சாதிக் கட்சி. நா.த.க – கட்டுக்கதைகளிலேயே கட்சியை வளர்த்த பெருமை இவர்களுடையது. தமிழ்த் தேசியம் வழியாக வந்தாலும் சமீபமாக பெரியாரை எதிர்த்ததன் மூலம் தங்களது கூட்டாளிகளை அம்பலப்படுத்தி விட்டார்கள். நிலைமை இப்போது இவ்வாறாக இருக்க பா.ஜ.க.வை விரட்ட இவர்களை எல்லாம் எதிர்க்கத்தான் வேண்டும். கணிசமான வாக்கு வங்கி உடைய கட்சிகளில் இக்கட்சிகளைக் கழித்து விட்டுப் பார்த்தால் தி.மு.க மட்டுமே மிஞ்சுகிறது.

என்னுடைய இந்த நிலைப்பாடு என்றென்றைக்குமானது அல்ல. மாணவர்களுக்கு, பெண்களுக்கு எனப் பார்த்துப் பார்த்து நலத்திட்டங்களைச் செயல்படுத்தும் தி.மு.க., நாளை மக்கள் விரோத செயல்பாடுகளில் ஈடுபடுமாயின் நிச்சயம் என் நிலைப்பாடும் மாறுபடும். வேறு யாரேனும் மக்கள் பக்கம் நின்று நல்லது செய்வார்களாயின் அவர்களை ஆதரிப்பேன். எனவே இப்போது ‘தி.மு.க வேண்டாம்’, ‘திராவிடத்தால்தான் வீழ்ந்தோம்’ என்றெல்லாம் கொக்கரிப்பவர்கள் இன்றைய சூழலில் தி.மு.கவுக்கு யார் சரியான மாற்று என்று மட்டும் கூறிவிடுங்கள். சமரசமாகப் போய் விடலாம். ‘கொள்கை எதிரி; அரசியல் எதிரி’ என்றெல்லாம் பண்ணையார்த்தனமாக உருட்டக் கூடாது.

தி.மு.க.வைத் தூற்றுபவர்கள் பெரும்பாலும் முன் வைக்கும் காரணிகள் : வாரிசு அரசியல், ஊழல் – இவை அறவே இல்லாத கட்சிகளைக் கூறினால் அடியேன் அறிந்து புரிந்து தெளிந்து கொள்வேன். அனைத்துக் கட்சிகளுக்கும் பொதுவான குற்றச்சாட்டுகளை விடுத்து வேற வேற…?. தி.மு.க. ஒரு நலத்திட்டம் கொண்டு வந்தால் கூட ‘அது எந்த அளவிற்கு மக்களுக்குச் சென்றடைகிறது? வழியில் எவ்வளவு வழிப்பறி நடக்கிறது?’ என்று ஆராய்ச்சியில் இறங்குவது தவறல்ல. அதே ஆர்வ மிகுதி அ.தி.மு.க. ஆட்சியின் போது சோவார போயிற்றா? விமர்சனம் செய்யலாம். ஆனால் தி.மு.க. என்பதால் மட்டுமே தேவையற்ற காழ்ப்புணர்வுடனேயே எல்லா நல்லனவற்றையும் அணுகினால் இறுதியில் “இலவச காலை உணவு; நிரம்பி வழிகிறது கழிவறை”யில்தான் என்று 'தினமலம்' போல் வந்து நிற்பீர்கள்.

என் மனதிற்கு நெருக்கமான கம்யூனிஸ்ட் கட்சிகளை நான் குறிப்பிடாததற்குக் காரணம் அவர்கள் இன்னும் மாநிலமயமாக்கப்படாததுதான். நான் அரசியலை கவனிக்கத் துவங்கிய காலத்தில் கூடங்குளம் அணுமின் நிலையம் அமைவதை முழுவதுமாக ஆதரித்த அவர்களின் உறுதிப்பாடு பெரும் அதிர்ச்சியைத் தந்தது. அது குறித்து இப்போது கூட தோழர்களின் மீது உரிமையுடனான கோபம் உண்டு எனக்கு. அது நிச்சயமாக அவர்களை விட்டுக் கொடுக்கும் தொனியில் அல்ல. “என்ன இது? நீங்களே இப்படி நிலைப்பாடு எடுக்கலாமா?’ என்று ஓர் ஆசானின் மீதான கதமாகவே வெளிப்படும். “பிற கட்சிகளும்தாம் ஆதரித்தன?” என கேட்பீர்களானால் எனது பதில் “ஒப்பற்றதும் அப்பழுக்கற்றதுமான செவ்விய ஓர் இடத்தைத் தோழர்களுக்குக் கொடுத்திருக்கிறேன். கருத்து வேறுபாட்டிற்கே வழியில்லை என்ற அதீத நம்பிக்கை சற்றே பிசகியதில் வெளிப்பட்ட திகைப்புதான் அது”.

இவ்விடத்தில் என்னுள் எழும் இரண்டக மனநிலை(dilemma) பற்றியும் கூற விழைகிறேன். எனது ஊர் இலங்கையும் அல்ல, கூடங்குளமும் அல்ல. அவ்வூர்க்காரர்கள் இன்றைக்கும் முறையே தி.மு.க. மீதும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் மீதும் கோபத்தில் இருந்தால் அதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. உடனே இதுவும் தோன்றும் – “அப்போ உனக்கு அடி விழுந்தாதான் வலிக்குமா?”. இக்கேள்வி என்மீது ஏளனப் பார்வை ஒன்றை வீசி நக்கலாகச் சிரிக்கும். ஆனால் நான் கூறியது போல், “கோபம்தான். ஆனால் இக்காரணங்களுக்காக மட்டும் இப்போது இவர்களைப் புறக்கணிப்பது விவேகமல்ல; பெருஞ்சேதத்திற்கு வழிவகுக்கும்”.

திராவிடக் கட்சிகளின் புண்ணியத்தில் பிற தேசியக் கட்சிகள் தமிழ்நாட்டில் தனிப்பெரும்பான்மையாகக் காலூன்ற இயலாமல் போனதில் பெரு மகிழ்ச்சியே! எப்படியாவது உள்ளே நுழைந்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு தமது ஏவல்களாகப் பல விளியறி ஞமலிகளை அவிழ்த்து விட்டுக் கொண்டே இருக்கிறது பா.ஜ.க அரசு. பெரியார், அண்ணல் அம்பேத்கர், அண்ணா ஆகியோரைத் தவிர்த்துவிட்டு தமிழ் மண்ணில் யாரும் அரசியல் செய்யவே முடியாது. ஆகையால் இப்பெருந்தகைகளின் பதாகைகளை ஏந்திக் கொண்டே நமது புறவாசல், வடவாசல், மேற்கு வாசல், கிழக்கு வாசல் என எல்லா வழிகளிலும் நுழைய முற்படுகின்றன பா.ஜ.க.வின் ‘ஆ’, ‘இ’, ‘ஈ’, ‘உ’….. பிரிவுகள்.

*********************************************

அதிலும் சமீபமாக இறங்கியிருக்கும் அல்லது இறக்கி விடப்பட்டிருக்கும் பனையூர் பண்ணையாரெல்லாம்….. எழுதப் பெறும் தகுதி உடையவரல்லதான். இடி அமீன், முசோலினி, ராஜபக்க்ஷ,… போன்றோருக்கும்தான் அத்தகுதி இல்லை. ஆனால் இவர்கள் வரலாற்றின் கருப்புப் பக்கங்களில் பதிவு செய்யப்பட வேண்டியவர்கள் அல்லவா? ‘யார் வேண்டுமானாலும் கட்சி துவங்கலாம்’ என்பது இந்நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் அளித்திருக்கும் உரிமை. அதையே தகுதியாகப் புரிந்து கொண்டால் எப்படி?

சமூக நிகழ்வுகள் குறித்த அவதானிப்பு, மிதமான வாசிப்பு, மக்கள் மீதான அக்கறை, குறைந்தபட்ச உள்ளுணர்வு ஆகியவை வாய்க்கப் பெற்ற…. இந்தப் பண்புகளெல்லாம் கூட வேண்டாம். எந்த ஒரு ‘மனித’னாலும் கரூரில் கோரத் தாண்டவம் ஆடி விட்டுச் சற்றும் வெட்கமே இல்லாமல் ஓடிப் போய் ஒளிந்து கொண்டு பிறன்பழி கூற இயலாது. ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்து விட்டது; அல்லது நிகழ்த்தப்பட்டு விட்டது. அதன் பிறகான அந்த ‘சொகுசு அரசியல்வாதி’யின் அணுகுமுறைதான் இன்னும் ஆத்திரமூட்டக் கூடியதாக இருந்தது. அரசாங்கம் மீது தவறே இல்லை என்று கூறவில்லை. ஆணைய விசாரணையில் தெரிய வரும். வரட்டும். ஆனால் தெள்ளிதின் விளங்கி நிற்கும் தனது பொறுப்பற்றதனத்தை மூடி மறைக்க ஏகப்பட்ட சதிக் கோட்பாடுகளை(conspiracy theories) சமூக வலைதளங்களின் உதவியுடன் கிளப்பி விட்ட வில்லத்தனம் எல்லாம் திரைப்படங்களில் கூட பார்த்திராதது. ‘இந்த அரசாங்கம் ஏன் சரியாகப் பணியாற்றவில்லை?’ என்பதிலிருந்து ‘இந்த அரசாங்கம் ஏன் இவ்வளவு வேகமாகப் பணியாற்றுகிறது?’ என்னும் சாட்டையடி(!) கேள்விக்குக் கொண்டு வந்து நிறுத்தி, அரசியல் தளத்தில் தனி முத்திரை பதித்திருக்கிறது இந்த தவக்கா கட்சி.

கொள்கை ரீதியாக ஒருவரை எதிரி எனக் கை காண்பித்து விட்டு அந்த எதிரியின் எதிரியும் எனக்கு எதிரியே என்பதெல்லாம் என்ன மாதிரியான பம்மாத்து அரசியல்? தி.மு.க எதிர்ப்பு/வெறுப்பு அரசியல் என அறிவித்துவிட்டுப் போவதுதானே? ஒரு தனி நபராக அந்நடிகர் என்ன வேண்டுமானாலும் பிதற்றிவிட்டுப் போகட்டும். யார் இழுப்புக்கும் போகட்டும். கருத்துச் சுதந்திரம், உரிமை என்று விட்டுத் தொலைக்கலாம். ஆனால் தன்னைப் பின் தொடரும் ஒரு கூட்டத்திடம் தாக்கத்தை ஏற்படுத்தவல்ல ஒருவர் என்ற வகையில் சமூகத்திற்கு மாபெரும் அச்சுறுத்தல் இந்தப் பெரிய அணில். மற்ற எல்லா கட்சிகளும் கொள்கையை முன்னிறுத்தி அரசியல் செய்ய, இவர்கள் மட்டும்தான் தனி நபர் வழிபாட்டில் கட்டுண்டு கிடக்கின்றனர். மேலும் அரசியல் மேடையின் தரத்தை வெகுவாகக் குறைத்து, பா.ஜ.க.வே பரவாயில்லை என்று மக்களைச் சொல்ல வைத்ததில் இவர்கள் தங்களைத் தாங்களே மெச்சிக் கொள்ளலாம். தன்பழி, ஊழ்வினையாக மாற்றம் அடையப் போகும் காலம் வெகு தூரத்தில் இல்லை. இவ்வளவு நடத்தியது போதாது என்பது போல் ‘அதுக்கும் மேல…’ என்று அடுத்தடுத்து அசிங்கங்கள் அரங்கேறின.

இவ்வளவு தரம் தாழ்ந்து போனதில்லை தமிழ்நாடு. ‘குழந்தையை இழந்தவர்கள்’ என நாம் பாவப்பட்டு வருத்தப்பட, அவர்கள் அனைவரும் சில நாட்கள் கழித்து அதற்கு முக்கிய காரணமானவர் மீது தவறே இல்லை என்று ஒரே குரலில் ஓங்கிப் பேசினார்கள். ‘அவரைப் பார்க்கும் ஆசை நிறைவேறிவிட்டது. என்ன ஒன்று? அதற்குப் பதிலாக எங்கள் பிள்ளைகளைத் தூக்கிக் கொடுக்க வேண்டியதாகப் போயிற்று’ என்று சிரித்துக் கொண்டே ஒரு தாயால் பேச முடிந்ததை எங்ஙனம் ஏற்றுக் கொள்வது? ‘பாதிக்கப்பட்டவர்கள்’ மீது உண்டான இவ்வளவு வெறுப்பும் அருவருப்பும் இதுவரை எங்கும் காணாதது.

தாமாகவே இப்படிப் பேசியிருந்தால் ரொம்ப குரூரம். பணம் பெற்றுக் கொண்டு பேசினார்களாயின் அது கேடு கெட்ட கேவலம். எப்படிப் பார்த்தாலும் சமூகம் போகிற போக்கைப் பார்த்தால் பதறுகிறது. பேச வைத்தவர்களுக்கும் பேசியவர்களுக்கும் என்ன பெரிய வித்தியாசம்? ‘இன்னும் ரெண்டு பிள்ளையையும் கூட்டிட்டுப் போகாம போய்ட்டேனே’, ‘இதுக்காகவாவது இன்னும் ரெண்டு புள்ளைய பெத்தேன் இல்லையே?” – நல்லவேளை இப்படியெல்லாம் ஆதங்கப்படவில்லை. ‘உங்கள் பரிதாபத்திற்கும் அனுதாபத்திற்கும் எங்களுக்குக் கொஞ்சமும் தகுதி கிடையாது’ என பாதிக்கப்பட்டோர் நமது முகத்திலறைந்து சொன்ன விதம்; பேருந்து ஏறிச் சென்று நட்சத்திர விடுதியில் தங்கியிருந்து ‘பண்ணையார் சவரம் செய்யவில்லை, ஷவர்மா சாப்பிடவில்லை, ஷாம்பூ போடவில்லை, ரொம்ப வருத்தத்தில் இருக்கார்’ என ஆறுதல் பெறச் சென்றவர்கள் ஆறுதல் அளித்து வந்தது….. தமிழ்நாட்டில் அரங்கேறிய இந்நாணக்கேடான நிகழ்வுகள் அழிக்க முடியாத கரும்புள்ளிகள்.

இது இப்போது பழைய செய்தி ஆகிவிட்டது. இப்போது அல்ல. சம்பவம் முடிந்த ஒரு மாதத்திலேயே ‘பிண நாயகன்’ திரைப்படம் குறித்த மேலதிகத் தகவல்கள் கேட்டு அனத்த ஆரம்பித்துவிட்டன அணில்கள். மாநாடு என்னும் பெயரில் நடத்தப்படும் ஒவ்வொரு வைபவத்திலும் அவர் பேசுவதை…. மன்னிக்கவும்! வாசிப்பதைக் கேட்கும் போது “ச்சே! இப்படி நல்லா நடிப்பு வர ஆரம்பிக்குற நேரத்துல முழுக்கு போடுறாரே!” என்று மட்டும் கொஞ்சம் கவலை(!) மேலிடுகிறது. நம்மால் யாரோ ஒருவருக்குக் காயம் பட்டுவிட்டது என்றாலே தூங்க முடியாமல் குற்றவுணர்வில் உழன்று கொண்டிருப்போம். கரூர் அட்டூழியத்திற்குப் பிறகும்… சரி, அந்த உத்தமர்ர்ர் மீது தவறே இல்லை என்றே கொள்வோம். தன்னைப் பார்க்க வந்துதானே மடிந்தார்கள் என்ற உணர்வு கூட இல்லாமல் மூன்று மாதம் கழித்து மலேசியாவுக்குச் சென்று ஒருவனால் ஆட்டம் போட முடிகிறது எனில் இவ்வகை உயிரினத்தைப் புறந்தள்ளுதலே சாலச் சிறந்தது. போதாக்குறைக்கு அத்திரைப்படத்தின் வரவுக்காக வாலை ஆட்டியபடியே காத்திருப்பவர்களின் நடுவில்தான் நாமும் வாழ்கிறோம் என்று உணரும் கணம் உடல் கொஞ்சம் அதிர்ந்து அடங்குகிறது. அவரை வைத்துப் படம் என்ற பெயரில் என்ன கருமத்தைக் கிண்டி வைத்திருந்தாலும் விசில் பறக்கத்தான் போகிறது. வழக்கம் போல ஐந்நூறு கோடி, ஆயிரம் கோடி என வடை சுடத்தான் போகிறார்கள்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து திமிராகப் பேசிய பிறகும் திருவாளர் கெய்க்வாட் படங்கள் நன்றாகவே ஓடின. ‘கலை வேறு; கொலை வேறு’ என்று நம் மக்கள் பிரித்தறியும் உயரிய(!) பண்பைப் பெற்றவர்கள் என்று ஏற்கெனவே வெளிச்சம் போட்டுக் காண்பித்திருக்கிறார். எவ்வளவு விஷத்தை வேண்டுமானாலும் உமிழலாம்; எத்தனை கொலைகள் வேண்டுமானாலும் நிகழ்த்தலாம். மக்கள் சீக்கிரமே மறந்து விட்டுக் கொண்டாட்ட மனநிலையுடன் கூத்து பார்க்கக் கிளம்பிவிடுவார்கள் என்ற அரிய உண்மையை மீண்டும் மீண்டும் பரிசோதித்துப் பார்த்து அதில் வெற்றியும் அடைந்து கொண்டிருக்கின்றனர். நாம்தான் செப்டம்பரிலேயே தேங்கி விட்டோம் போல.

இதில் “இவர்களைத் ‘தற்குறி’ என்றழைக்கக் கூடாது. இவர்களைச் சரியாக அரசியல் படுத்தத் தவறிவிட்டோம்” என்றெல்லாம் உண்மையான அக்கறையுடனும் குற்றவுணர்வுடனும் திராவிட கழகத்தினர் சிலர் பேசுவதைக் கேட்டால்….. மன்னிக்கவும்! சிரிப்புதான் வருகிறது. அணில்களைப் போன்ற தனி மனித ஒழுக்கமற்ற கட்டுப்படுத்த முடியாத கூட்டம் வேறு எந்தக் கட்சியிலும் இல்லை. உலகமே கையில் சுருங்கி விட்ட இந்த யுகத்தில் எல்லா செய்திகளையும் வாசிக்கிறார்கள் அல்லது பார்க்கிறார்கள். எது சரி எது தவறு என்று பிரித்தறியும் திறனை வளர்த்துக் கொள்ளாதது அவரவர் குற்றம் மட்டுமே. அறியாப் பருவத்தில் இருக்கும் மழலையரைப் போல் இவர்களைக் கொஞ்ச வேண்டியதில்லை. அடிப்படை அறிவை அடிமாட்டு விலைக்குக் கூட வாங்கத் துப்பில்லாத இவர்கள் சமூக வலைத்தளங்களில் நான்கு கால் பாய்ச்சலில் ஒன்றிய அரசின் தவறுகளுக்குக் கூட வீறு கொண்டு மாநில அரசை மட்டுமே துவைத்து வெளுப்பதைப் பார்க்கும் போதெல்லாம் தோன்றும்… “உங்களை எல்லாம் வச்சுகிட்டு இந்தியா ஏன் இன்னும் வல்லரசா ஆகாம இருக்கு?”

உலக வரலாற்றில் முதன் முறையாக இவரைப் பேட்டி எடுக்க வந்தவர்கள் பேட்டி எடுத்ததைப் பேட்டியாகக் கொடுத்த கேலிக்கூத்துப் பெருமையும் இப்பெரிய அணிலையே சாரும். “பொது வாழ்க்கைக்கு வந்து விட்டு மக்களையும் சந்திக்க மறுக்கிறார். பத்திரிக்கையையும் எதிர்கொள்ள மருள்கிறார். ஆனால் இவருக்கு முதலமைச்சர் நாற்காலியைத் தூக்கித் தந்திட வேண்டுமாம்” என்று இவரைப் பின் தொடரும் ஆச்சரியக் குறிகள் கொஞ்சம் சிந்திக்க ஆரம்பித்தாலே போதும். அவர்களை மட்டும் சொல்லித்தான் என்ன? படித்து மண்ணள்ளிப் போட்ட பலரும் கூட கரூர் சம்பவத்தைக் காணுற்ற பிறகும் “எப்போ பாரு… தி.மு.க., அ.தி.மு.கன்னே போய்ட்டுருக்கு. ஒரு மாற்றம் வரட்டும். இவருக்குத்தான் ஒரு வாய்ப்பு குடுத்துப் பார்க்கலாமே?” என்று, ‘இன்றைக்கு வேண்டுமானால் இந்தப் புதிய உணவகத்தில் சாப்பிட்டுப் பார்ப்போமா?’ என்ற தொனியில் பேசுவதைப் பார்த்தால் “நீங்கள்லாம் எப்படி இன்னும் வெளிய நடமாடிட்டு இருக்கீங்க? யாரு சங்கிலியைக் கழட்டி விட்டது? எப்போ தப்பிச்சீங்க?” எனக் கேட்கத் தோன்றுகிறது.

‘எது சரி?’ என்பதைப் புரிந்து கொள்ளவும் ‘யார் பக்கம் நிற்பது?’ என்று தேர்ந்து தெளியவுமாவது கொஞ்சம் வாசிப்புப் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுதல் நலம். எதை வாசிக்கிறோம் என்பதும் இங்கு முக்கியம் அமைச்சரே!

*****************************************

கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் இன்னும் என்னென்ன கண்றாவியையெல்லாம்தான் கேட்பது? அறத்தோடு கூடியவற்றைப் பேசுதல் மட்டுமே கருத்துச் சுதந்திரம் என வரையறையை மாற்றுங்கள் ஐயா!

தம்மை அரசன் என்று சொல்லிக் கொள்(ல்)பவர்களால் அன்றே நிகழ்த்தப்படும் கொலைகள் யாவும் பிரிவினைவாதத்தையும் சர்வாதிகாரத்தையும் பறைசாற்றுவதற்காகவும் சுய ஆதாயத்திற்காகவும் அரங்கேறுகின்றன. தெய்வமோ தெண்டத்திற்கு நின்று கொண்டே இருக்கிறது. அநீதியையும் தீமையையும் கொல்வதற்கான நோக்கம் சற்றும் இருப்பதாகத் தெரியவில்லை. கொல்வதெல்லாம் கூட இருக்கட்டும்; உணர்ச்சி மேலீட்டில் கோபத்தில் பொங்குவது கூடக் கிடையாது.

(supposed)அரசர்கள் மற்றும் (so called)தெய்வங்களின் (அவ)லட்சணம் இவ்வாறாக இருக்க யாரை அல்லது எதை நம்புவது? எவ்வகையான நம்பிக்கையில் பிடிப்புக் கொள்வது? நியாயத் தராசுகள் எல்லாம் பொருளற்றுப் போன தற்காலத்தில், “வாழ்க்கை அப்படித்தான்; நடப்பது நடந்துகொண்டே இருக்கும். அது அநீதி என்றாலும் கூட” என்ற எதார்த்தம் புரியாமல் இல்லை. மனதில் ‘ஊழ்’ என்றொரு பிரிவை உருவாக்கி எல்லா அநியாயங்களையும் அதில் இருத்தி வைக்க வெகு கடினமாக இருக்கிறது. பகுத்தறிவாளராக இருந்து கொண்டு வாழ்க்கைச் சக்கரத்திற்கான நம்பிக்கை அச்சாணியை எதில் தேடுவது?

போகிற போக்கில் எல்லாவற்றையும் வெறுமனே கவனித்து மட்டும் கடந்து செல்வதற்கு நாம் ஒன்றும் கடவுள் இல்லையே! கடவுளே இல்லை என்பது ஒரு புறம் இருக்கட்டும். சமூக விடயங்களில் அறம் சார்ந்த கோபத்தை இல்லாத இறைகளின் மீது கொட்டி நேரத்தை வீணடிப்பதை விடுத்து, இருக்கும் தலைவர்கள்/தளபதிகள்/சிப்பாய்கள் ஆகியோரில் சரியானவர்கள் (அதாவது தவறானவர்கள்) மீது முறையாக வெளிப்படுத்துதல் மனதிற்கான ஒரு தற்காலிக வடிகால் மட்டுமே. ஒருமா அளவு மனிதத்தைத் தன்னுள் இடுக்கி வைத்திருக்கும் மனிதனுக்குக் கூட அத்துமீறிய அநீதிகளின் போதும் நீதி தேவதையின் கண்கள் இறுகக் கட்டப்பட்டு இருப்பது மனச்சோர்வைத் தந்து விரக்தியைப் படரச் செய்யும் அல்லவா? இக்கையறு நிலையில்தான் “அறம் கூற்றாகும்!” என்பதை நம்பச் சொல்லி ஆறுதல் அடைய முனைகிறது மனம். அதுவே “அறம் கூற்றாகட்டும்!” என ஆங்காரமாக மனதினுள் ஒலிக்கும்போது உத்வேகத்துடன் கூடிய ஏதோ ஒரு வகையான சமாதானத்தையும் அழைத்து வருகிறது. எனவே….

அறம் கூற்றாகட்டும்! ஆகியே தீர வேண்டும்! அப்படியே ஆகக் கடவதாக! ஆமென்!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.