Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராக், லிபியா, ஆப்கன் உள்பட அமெரிக்க ராணுவம் தலையிட்ட 5 நாடுகளில் என்ன நடந்தது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இராக், லிபியா, ஆப்கன் உள்பட அமெரிக்க ராணுவம் தலையிட்ட 5 நாடுகளில் என்ன நடந்தது?

அமெரிக்க ராணுவ தலையீடு, மத்திய கிழக்கு, வடக்கு ஆப்ரிக்கா

பட மூலாதாரம்,Getty Images

கட்டுரை தகவல்

  • பவுலா ரோசாஸ்

  • பிபிசி செய்தியாளர்

  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

மத்திய கிழக்கில் அமெரிக்கா மீண்டும் ஒரு போரைத் தொடங்கியுள்ளது. அந்தப் பிராந்தியம், நீண்டகாலமாக அமெரிக்காவின் ராணுவ தலையீடுகளை எதிர்கொண்டுள்ளது. ஆனால், அமெரிக்காவின் தலையீடு எதிர்பார்த்த முடிவைக் கொடுத்ததா என்ற கேள்விக்கு இல்லை என்பதே பதில்.

இந்த ஆண்டு (2026) பிப்ரவரி 28 அன்று இரான் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், அந்நாட்டின் அதிஉயர் தலைவர் அலி காமனெயி கொல்லப்பட்டார். இரானின் அணுசக்தி திட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரவும், அங்கு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தப் போவதாகவும் கூறும் அதிபர் டொனால்ட் டிரம்பின் முக்கிய இலக்குகளில் ஒருவராக அவரும் இருந்தார்.

இந்தப் பிராந்தியத்தில் இதற்கு முன்னரும் பல அமெரிக்க அதிபர்கள் தலையிட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் டிரம்புக்கு முன்னோடியாக இருப்பவர்கள், அமெரிக்காவின் அதிபராக இருந்த சீனியர் புஷ் மற்றும் ஜூனியர் புஷ், ஒபாமா ஆகியோர். இராக்கில் சதாம் உசேன், லிபியாவில் முஅம்மர் அல் கடாஃபி ஆகியோருக்கு எதிராக ஏற்கெனவே நடவடிக்கை எடுத்து அவர்களை வீழ வைத்தது, அந்த நாடுகளுக்கு ஜனநாயகத்தையோ அல்லது சுதந்திரத்தையோ மீட்டுத் தரவில்லை. அதுமட்டுமின்றி, இன்று வரை நீடிக்கும் உள்நாட்டுப் போர் மற்றும் நிலையற்றத் தன்மையையே அது ஏற்படுத்தியுள்ளது.

சிரியாவில், ஐ.எஸ்.ஐ.எஸ் எனும் அமைப்பை ஒழிக்க அமெரிக்கா உதவியது. ஆனால் 2024இல் அசத் வீழ்ச்சிக்குப் பிறகு, பிற இஸ்லாமிய குழுக்கள் அங்கு அதிகாரத்தை கைப்பற்றின. ஆப்கானிஸ்தானில் சுமார் இரண்டு தசாப்த அமெரிக்க தலையீட்டிற்குப் பிறகு, 2021இல் தாலிபன் மீண்டும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது.

ஒபாமா காலத்தில் ராஜ்ஜீய தூதராகவும் பாதுகாப்பு ஆலோசகராகவும் பணிபுரிந்த ஃபிலிப் கோர்டன், 2015ஆம் ஆண்டு எழுதிய பிரபலமான ஒரு கட்டுரையில், மத்திய கிழக்கில் அமெரிக்காவின் தலையீடுகளை பின்வருமாறு சுருக்கமாக விவரிக்கிறார்:

"இராக்கில், அமெரிக்கா தலையிட்டு அந்நாட்டை ஆக்கிரமித்தது; அதன் முடிவு பெரும் இழப்பை ஏற்படுத்திய பேரழிவு. லிபியாவில், அமெரிக்கா தலையிட்டாலும் ஆக்கிரமிக்கவில்லை. இருப்பினும் இந்தத் தலையீடு பெரும் இழப்பை ஏற்படுத்திய ஒரு பேரழிவாகவே இருந்தது. சிரியாவில், அமெரிக்கா தலையிடவும் இல்லை ஆக்கிரமிக்கவும் இல்லை என்றாலும் அதன் முடிவும் பெரும் இழப்பை ஏற்படுத்திய ஒரு பேரழிவே."

இந்த இழப்பு அமெரிக்காவுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த பிராந்தியத்திற்குமானது என நிபுணர்கள் கருதுகின்றனர். கெய்ரோவில் உள்ள அமெரிக்க பல்கலைக்கழகத்தின் பேராசிரியராகப் பணிபுரியும் இப்ராஹிம் அவாத்திடம் பிபிசி பேசியது. அவர், "இந்தப் பிராந்தியத்தின் நிலையற்ற தன்மைக்கு வெளிநாட்டுத் தலையீடுகளே முக்கியக் காரணம்" என்று விளக்குகிறார்.

இராக், ஆப்கானிஸ்தான், லிபியா, சிரியா அல்லது ஏமன் போன்ற நாடுகள் மோசமான ஆட்சி நிர்வாகம் அல்லது சர்வாதிகார ஆட்சிகளைக் கொண்டிருந்தாலும், இவை "வெளிநாட்டுத் தலையீட்டின் மூலம் தீர்க்கப்பட வேண்டிய விஷயங்கள் அல்ல" என அவாத் கருதுகிறார்.

கடந்த தசாப்தங்களில், மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவின் பல நாடுகளில் அமெரிக்கா ராணுவ ரீதியாகத் தலையிட்டுள்ளது. சிலவற்றில் பிரதான பங்கு வகித்த வேளையில், சிலவற்றில் கூட்டணியின் ஓர் அங்கமாகவும் அமெரிக்கா செயல்பட்டுள்ளது. அவற்றில் முக்கியமானவற்றை இங்கு பார்ப்போம்.

இராக் (1991 மற்றும் 2003-2011)

கடந்த சில தசாப்தங்களில், இராக்கிற்கு எதிராக அமெரிக்கா பலமுறை ராணுவ ரீதியாகத் தலையிட்டுள்ளது.

கடந்த 1990ஆம் ஆண்டு, சதாம் உசேன் தலைமையிலான இராக், குவைத்தின் எண்ணெய் வளங்களைக் கைப்பற்றவும், தனது பிராந்திய ஆதிக்கத்தை வலுப்படுத்தவும் அந்த நாட்டின் மீது படையெடுத்தது. அப்போது, அமெரிக்காவின் தலைமையில் ஐநா-வின் ஆதரவுடன் அமைக்கப்பட்ட ராணுவ கூட்டணி, 'ஆபரேஷன் டெசர்ட் ஸ்டார்ம்' எனப் பெயரிடப்பட்ட போரின் மூலம் தனது மாபெரும் ராணுவ மேலாதிக்கத்தை வெளிப்படுத்தியது.

தீவிரமான வான்வழித் தாக்குதல்கள் மற்றும் துரிதமான தரைவழித் தலையீடுகள் மூலம், அந்தக் கூட்டணி சில வாரங்களிலேயே குவைத்தை விடுவித்து இராக்கியர்களை வெளியேற்றி வெற்றி பெற்றது. இருப்பினும், சதாம் உசேன் தொடர்ந்து அதிகாரத்தில் இருந்த நிலையில், சர்வதேச தடைகளை எதிர்கொண்ட இராக், பிரிவினைவாத மோதல்கள் மற்றும் உள்நாட்டில் நிலையற்ற தன்மையையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

இந்த நடவடிக்கை, சர்வதேச சட்டத்தை மீட்டெடுக்கும் வெற்றிகரமான ஒரு ராணுவ செயல்பாடாகக் கருதப்பட்டது. பெர்லின் சுவர் வீழ்ச்சி மற்றும் பனிப்போரின் முடிவுக்குப் பிறகு நடந்த முதல் போர் என்பதால், இந்த வளைகுடா போர் அமெரிக்க ராணுவ தலையீடுகளின் புதிய சகாப்தத்தைத் தொடங்கி வைத்தது. இது அமெரிக்காவுக்கு நிகர் யாரும் இல்லாத ஒரு 'புதிய உலக ஒழுங்கை' நிலைநாட்டியது.

பின்னர் 2003ஆம் ஆண்டில், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் தலைமையிலான கூட்டணி இராக் மீது படையெடுத்தது. சதாம் உசேன் அரசிடம் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாகவும், பயங்கரவாதத்துடன் அவருக்குத் தொடர்பு இருப்பதாகவும் கூறி இந்தப் படையெடுப்பு நடத்தப்பட்டது.

ஒரு சில வாரங்களிலேயே அந்தக் கூட்டணி பாக்தாத் நகரைச் சென்றடைந்தது; சதாம் உசேன் கைது செய்யப்பட்டு, பின்னர் தூக்கிலிடப்பட்டார். ஆனால், தேடப்பட்ட அந்த ஆயுதங்கள் ஒருபோதும் கண்டறியப்படவில்லை.

அமெரிக்க ராணுவ தலையீடு, மத்திய கிழக்கு, வடக்கு ஆப்ரிக்கா

பட மூலாதாரம்,Scott Nelson/Getty Images

படக்குறிப்பு,இராக் போருக்குப் பின் அந்நாட்டுக் கொடியுடன் அமெரிக்க வீரர்கள்

அதற்குப் பிறகு சன்னி, ஷியா மற்றும் குர்துகளுக்கு இடையிலான மோதல்கள், கிளர்ச்சிகள், தீவிரவாதக் குழுக்களின் எழுச்சி என நாடே நெருக்கடியில் மூழ்கியது. இதன் உச்சகட்டமாக ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு உருவானது. இந்த அமைப்பு 2014 மற்றும் 2015க்கு இடைப்பட்ட காலத்தில் இராக்கின் மூன்றில் ஒரு பங்கு நிலப் பரப்பையும், சிரியாவின் பாதி நிலப் பரப்பையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.

படையெடுப்பிற்குப் பிறகு என்ன செய்வது என்பது குறித்த முறையான திட்டம் இல்லாததும், இராக் ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படைகளைக் கலைத்தது போன்ற மூலோபாய தவறுகள் இராக்கில் ஏற்பட்ட நிலையற்ற நிலைக்கு முக்கியக் காரணங்களாக மாறின. ஆயுதம் ஏந்திய ஆயிரக்கணக்கான வீரர்கள் வேலையிழந்த நிலையில், அவர்களில் பலர் கிளர்ச்சிக் குழுக்களில் இணைந்தனர். இது இன்றும் அந்த நாட்டை உலுக்கி வரும் சீர்குலைவுக்கு வழிவகுத்தது.

கடந்த 2003 முதல் இராக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு வரும் 'இராக் பாடி கவுன்ட்' என்ற திட்டத்தின்படி, கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையின் நேரடி விளைவாக பொதுமக்கள் மற்றும் போராளிகள் எனக் குறைந்தது 3,00,000 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும் என பிற அமைப்புகள் கருதுகின்றன.

அமெரிக்காவின் இந்தத் தலையீடு பற்றிப் பேசிய இப்ராஹிம் அவாத், "இது இராக்கை சமூக ரீதியாகத் துண்டுதுண்டாகச் சிதறடித்தது. இது ஒரு ஜனநாயக, நவீன மற்றும் மதச்சார்பற்ற அரசியல் அமைப்புக்கு முற்றிலும் எதிரானது. இதன் விளைவாக ஏற்பட்ட உள்நாட்டுப் போரில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற அமைப்புகள் உருவாவதற்கும் இதுவே காரணமாக அமைந்தது" என்று தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தான்

அமெரிக்க ராணுவ தலையீடு, மத்திய கிழக்கு, வடக்கு ஆப்ரிக்கா

பட மூலாதாரம்,Universal History Archive/Universal Images Group via Getty Images

படக்குறிப்பு,2021ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் தலைநகர் தாலிபன்களால் கைப்பற்றப்பட்டபோது, ஆயிரக்கணக்கான மக்கள் காபூலை விட்டு வெளியேற முயன்றனர்

2001ஆம் ஆண்டு, அமெரிக்கா மற்ற நேட்டோ உறுப்பு நாடுகளுடன் இணைந்து, ஆப்கானிஸ்தானில் தாலிபன் ஆட்சிக்கு எதிராக 'ஆபரேஷன் என்டியூரிங் ஃப்ரீடம்' என்ற ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது.

கடந்த 1996இல் அந்நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அடிப்படைவாத இஸ்லாமிய இயக்கம், 2001 செப்டம்பர் 11 அன்று நியூயார்க் இரட்டைக் கோபுரங்கள் மற்றும் பென்டகன் மீது தாக்குதல் நடத்திய அல்-கொய்தா குழுவின் தலைவர் ஒசாமா பின் லேடனை ஒப்படைக்க மறுத்துவிட்டது. இதன் காரணமாகவே ஆப்கானிஸ்தான் மீது படையெடுக்க அமெரிக்கா முடிவு செய்தது.

இந்தத் தலையீடு சில வாரங்களிலேயே தாலிபன் ஆட்சியை வீழ்த்துவதிலும், சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் ஒரு புதிய அரசாங்கத்தை நிறுவுவதிலும் வெற்றி பெற்றது. ஆனால் இது போரை முடிவுக்குக் கொண்டு வரவில்லை.

அமெரிக்காவின் தலையீட்டால் தாலிபன்கள் பின்னடவைச் சந்தித்தாலும், அவர்கள் மீண்டும் ஒன்றிணைந்து அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளுக்கு எதிராகத் தொடர்ந்து போரிட்டதால், இந்த மோதல் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தது.

2020ஆம் ஆண்டு, ஆப்கானிஸ்தானின் பெரும்பான்மையான பகுதிகளை தாலிபன்களிடம் இழந்த அமெரிக்கா அந்நாட்டில் இருந்து தனது படைகளைத் திரும்பப் பெறுவது குறித்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. அடுத்த ஆண்டு மே மாதம் தொடங்கிய அமெரிக்கப் படைகள் வெளியேற்றம், 2021 ஆகஸ்ட் மாதத்தில் தாலிபன்கள் காபூலை கைப்பற்றிய பிறகு துரிதப்படுத்தப்பட்டது.

2003இல் தொடங்கிய இராக் போர், அமெரிக்காவின் கவனத்தையும் ராணுவ வளங்களையும் ஆப்கானிஸ்தானில் இருந்து திசை திருப்பியது.

மேலும், அமெரிக்காவின் முதன்மை நோக்கம் அல்-கொய்தாவை அழிப்பதில் இருந்து "தேசக் கட்டமைப்பு" என்ற திட்டத்திற்கு மாறியது. ஆனால் இராக்கை போலவே, இங்கும் அந்த இலக்கை எவ்வாறு அடைவது என்பது குறித்த தெளிவான உத்தியோ அல்லது ஒருமித்த கருத்தோ திட்டமிடப்படவில்லை.

தாலிபன்களின் வீழ்ச்சிக்குப் பிறகு உருவாக்கப்பட்ட புதிய ராணுவம் மற்றும் காவல் படைகள் மிகவும் பலவீனமாக இருந்தன. அவை முற்றிலும் மேற்கத்திய நாடுகளின் நிதி மற்றும் ஆதரவையே நம்பியிருந்தன. இதன் விளைவாக, மேற்கத்திய படைகள் வெளியேறியவுடன் அவை விரைவாகச் சரிந்தன; மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற முன்னேறி வந்த தாலிபன்களின் முன்னேற்றத்தை எதிர்கொள்ளத் தவறியபோது அவை விரைவாகச் சரிந்தன, இறுதியில் அடிப்படைவாதிகள் அதிகாரத்தைக் கைப்பற்றினர்.

அமெரிக்காவின் பிரௌன் பல்கலைக்கழகத்தின் போர் செலவுகள் திட்டத்தின் தரவுகள்படி, ஆப்கானிஸ்தானில் நடந்த 20 ஆண்டுக்கால அமெரிக்க தலையீடு மற்றும் அந்த மோதலுடன் தொடர்புடைய வன்முறைகளின் நேரடி விளைவாக, பொதுமக்கள், ஆப்கானிய வீரர்கள், தாலிபன்கள், மேற்கத்தியப் படைகள் என 1,76,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்தக் கணக்கீடு, போரினால் ஏற்பட்ட உறுதியற்ற தன்மையால் ஏற்படும் நோய் அல்லது பஞ்சத்தால் ஏற்படும் இறப்புகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. பிற அளவுகோல்களின்படி பார்த்தால், உயிரிழப்பு எண்ணிக்கை இதைவிடப் பல மடங்கு அதிகமாக இருக்கும்.

லிபியா

அமெரிக்க ராணுவ தலையீடு, மத்திய கிழக்கு, வடக்கு ஆப்ரிக்கா

பட மூலாதாரம்,Mario Tama/Getty Images

படக்குறிப்பு,2011 அக்டோபரில் கடாஃபி கிளர்ச்சியாளர்களால் பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டார்

2011ஆம் ஆண்டு அமெரிக்காவின் ராணுவ தலையீட்டிற்குப் பிறகு பதவியிறக்கப்பட்ட மற்றொரு சர்வாதிகாரி லிபிய தலைவர் முஅம்மர் அல் கடாஃபி ஆவார்.

அவரது வீழ்ச்சி அரபு வசந்தம் போராட்டங்களின் ஒரு பகுதியாகும். 1969 முதல் இரும்புக்கரம் கொண்டு கடாஃபி நடத்தி வந்த ஆட்சிக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டங்கள் ஒடுக்குமுறையை சந்தித்தன. இதைத் தொடர்ந்து, அரசாங்கப் படைகளுக்கும் கிளர்ச்சிக் குழுக்களுக்கும் இடையே வெடித்த மோதல் நாடு முழுவதும் பரவியது.

இதற்குப் பதிலடியாக, ஐநா பாதுகாப்பு கவுன்சில் லிபிய வான்பரப்பை 'பறக்கத் தடை செய்யப்பட்ட மண்டலமாக' அறிவித்தது. கிளர்ச்சியாளர்களுக்கு உதவவும், பொது மக்களைப் பாதுகாக்கவும், அரசாங்கப் படைகளின் மீது குண்டுவீச்சு நடத்தவும் பிரான்ஸ், பிரிட்டன் போன்ற நேட்டோ கூட்டாளிகளுடன் அமெரிக்காவும் இணைந்தது. உண்மையில் இந்த ராணுவ நடவடிக்கைக்கான முயற்சியை பிரான்ஸ்தான் முன்னெடுத்தது.

கிளர்ச்சியாளர்கள் திரிபோலி நகரைக் கைப்பற்றி, 2011 அக்டோபரில் கடாஃபியை பிடித்துக் கொன்றனர். ஆப்கானிஸ்தான் மற்றும் இராக்கில் நடந்தது போலவே, லிபியாவிலும் மோதல் முடிவுக்கு வரவில்லை.

கடாஃபியின் வீழ்ச்சி மாபெரும் அதிகார வெற்றிடத்தை ஏற்படுத்தியது. இந்த வெற்றிடத்தை நிரப்ப கூட்டணி நாடுகளிடம் எந்தத் தீர்வும் இல்லை. இது பல்வேறு ஆயுதமேந்திய குழுக்கள் மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற அமைப்புகளின் எழுச்சிக்கு வழிவகுத்தது.

இராக் அல்லது ஆப்கானிஸ்தானை போல மற்றுமொரு நீண்டகால மற்றும் செலவு மிகுந்த போரில் ஈடுபட விரும்பாத சர்வதேச படைகள், கடாஃபியின் மரணத்திற்குப் பிறகு தங்களது நேரடிப் போர் நடவடிக்கைகளை நிறுத்திக் கொண்டன. அதற்குப் பதிலாக, ஆலோசனை மற்றும் பயிற்சிகளை வழங்குவதோடு, ஆயுதக் குழுக்களுக்கு எதிராக அவ்வப்போது வான்வழித் தாக்குதல்களை நடத்துவதுடன் தங்கள் நடவடிக்கைகளை நிறுத்திக்கொண்டன.

கெய்ரோவிலுள்ள அமெரிக்க பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக பணிபுரியும் இப்ராஹிம் அவாத் கூறுகையில், "அமெரிக்காவின் லிபிய தலையீடு நாட்டை நிர்வகிப்பதற்கான எந்தத் திட்டமும் இன்றி செய்யப்பட்டது; இது உள்நாட்டுப் போருக்கே வழிவகுத்தது" என்றார். லிபியா ஒரு எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடாகவும், புலம்பெயர்ந்தோரை ஏற்கும் நாடாகவும் இருந்ததால், இது கடுமையான பொருளாதார பாதிப்புகளையும் ஏற்படுத்தியது.

இன்று வரை லிபியா பிளவுபட்டும், ஸ்திரமற்ற நிலையிலுமே உள்ளது. திரிபோலியில் தேசிய ஒற்றுமை அரசாங்கம் நிறுவப்பட்டு சர்வதேச அங்கீகாரத்துடன் செயல்படுகிறது, ஆனால் அது முழு நாட்டையும் கட்டுப்படுத்தவில்லை, அதிகாரம் பல்வேறு குழுக்களிடையே சிதறிக் கிடக்கிறது.

சிரியா

அமெரிக்க ராணுவ தலையீடு, மத்திய கிழக்கு, வடக்கு ஆப்ரிக்கா

பட மூலாதாரம்,DELIL SOULEIMAN/AFP via Getty Images

கடந்த 2011இல் சர்வாதிகார ஆட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரி பல அரபு நாடுகளில் மக்கள் மேற்கொண்ட போராட்டங்களான அரபு வசந்தத்தால் பாதிக்கப்பட்ட மற்றொரு நாடு சிரியா. பஷர் அல்-அசத்தின் அரசாங்கம் அமைதியான முறையில் நடந்த போராட்டங்களை ஒடுக்கியது. இது 15 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த உள்நாட்டுப் போருக்கு வழிவகுத்தது. இன்று அசத் ஆட்சி வீழ்ந்த போதிலும், அந்தப் போர் இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை.

சிரியாவின் போரானது, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகள் கலந்த ஒரு பன்முக மோதலாக மாறியது. அரசாங்க ஆதரவுப் படைகள், மிதவாத கிளர்ச்சியாளர்கள், குர்துப் படைகள், அல்-கொய்தா, ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற அடிப்படைவாதக் குழுக்கள் எனப் பல தரப்பினர் நிலப்பரப்பைக் கைப்பற்றப் போட்டியிட்டனர். இது நாட்டின் அதிகார வரைபடத்தைத் தொடர்ந்து மாற்றியமைத்தது.

ரஷ்யாவும் இரானும் அசத் அரசாங்கத்திற்கு ராணுவ ரீதியாக ஆதரவளித்தன. அதே நேரம், அரசாங்கப் படைகளுக்கு எதிராகப் போராடிய சன்னி கிளர்ச்சிக் குழுக்களுக்கு ஆயுதங்கள், பயிற்சி மற்றும் நிதி உதவியை துருக்கி வழங்கியது.

2014ஆம் ஆண்டில், அமெரிக்காவும் இந்த மோதலில் இணைந்தது. சிரியாவின் பாதி நிலப்பரப்பையும், இராக்கின் மூன்றில் ஒரு பங்கையும் கட்டுப்படுத்திய ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை எதிர்ப்பதே அதன் முதன்மை நோக்கமாக இருந்தது.

அமெரிக்காவின் வான்வழித் தாக்குதல்கள், ஆயுதக் குழுக்களை பலவீனப்படுத்துவதில் வெற்றி பெற்றன, அவர்கள் சிரியாவின் பிராந்திய கட்டுப்பாட்டை இழந்தனர். அவர்களின் படை பலம் முழுமையாக அழிக்கப்படாவிட்டாலும், கணிசமாகக் குறைக்கப்பட்டன.

டொனால்ட் டிரம்பின் முதல் ஆட்சிக் காலத்தில், 2017-ஆம் ஆண்டில் பொது மக்கள் மீது நடத்தப்பட்ட ரசாயன தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகக் கூறி பஷர் அல்-அசத் அரசின் மீது அமெரிக்கா டொமாஹாக் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.

2013இல் அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி அசத் அரசாங்கம் தனது சொந்த மக்கள் மீதே ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்திய போது, ஒபாமா வலுவான நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது.

ரஷ்யாவின் உதவியால் அசத் ஆட்சியில் நீடித்தார். ஆனால் 2024இன் இறுதியில், அகமது ஷாரா தலைமையிலான 'ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம்' என்ற கிளர்ச்சிக் குழு டமாஸ்கஸை அடைந்தபோது, அசத் ஆட்சி சீட்டுக்கட்டு போலச் சரிந்தது.

அல்-கொய்தாவின் ஒரு கிளையாக இருந்து பின்னர் அதிலிருந்து பிரிந்த அல்-நுஸ்ரா முன்னணியின் முன்னாள் தலைவரான அல்-ஷாரா தலைமையிலான புதிய இடைக்கால அரசாங்கத்துடன் அமெரிக்கா தற்போது உறவுகளை ஏற்படுத்தியுள்ளது. ஒரு காலத்தில் இவரைப் பிடித்துக் கொடுப்பவர்களுக்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர் வெகுமதியை அமெரிக்கா அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வன்முறையின் அளவு குறைந்திருந்தாலும், அந்த நாடு இன்னும் பல பிரிவுகளாகப் பிளவுபட்டு, நிலையற்றதாகவே இருக்கிறது.

ஏமன்

அமெரிக்க ராணுவ தலையீடு, மத்திய கிழக்கு, வடக்கு ஆப்ரிக்கா

பட மூலாதாரம்,Getty Images

செப்டம்பர் 11 தாக்குதல்களுக்குப் பிறகு, அரேபிய தீபகற்பத்திலுள்ள அல்-கொய்தா கிளைக்கு எதிரான பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக அமெரிக்கா பலமுறை ஏமனிலும் தலையிட்டுள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டில், இரானின் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்கள் தலைநகர் சனாவை கைப்பற்றிய பிறகு, ஏமன் உள்நாட்டுப் போரில் மூழ்கியது. 2015இல் செளதி அரேபியா தலைமையிலான அரபு நாடுகளின் கூட்டணி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகத் தலையிட்ட போது, அமெரிக்கா அவர்களுக்கு ஆயுதங்களை விற்பனை செய்ததோடு, தளவாடம் மற்றும் உளவுத் தகவல்களையும் வழங்கியது. இருப்பினும், அது தரையில் தனது படைகளை நிலைநிறுத்தவில்லை.

ஹூதி கிளர்ச்சிக் குழு என்பது தற்போது ஏமனின் சுமார் 30% நிலப்பரப்பைக் கட்டுப்படுத்தும் ஷியா பிரிவைச் சார்ந்த ஓர் இயக்கமாகும். ஏமனில் அடிப்படைவாத மற்றும் அடக்குமுறை ஆட்சியை நிறுவியுள்ள இந்த இயக்கத்தின் மீது கடுமையான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன.

காஸா போரின் பின்னணியில், இந்தக் குழு செங்கடலில் கப்பல்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தியது. இதைத் தொடர்ந்து, கடல்வழிப் போக்குவரத்தைப் பாதுகாப்பதற்காக, அமெரிக்கா தனது கூட்டாளியான பிரிட்டனுடன் இணைந்து ஹூதி கிளர்ச்சியாளர்களின் நிலைகள் மற்றும் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியது.

மத்திய கிழக்கிலேயே மிகவும் ஏழ்மையான நாடான ஏமன், பல ஆண்டுகளாக நீடிக்கும் ஸ்திரமற்ற தன்மையால் மனிதாபிமான நெருக்கடியில் சிக்கியுள்ளது. ஆயுத வர்த்தகத்திற்கு எதிரான பிரசாரம் என்ற அமைப்பின் தகவல்படி, 2023 வரை 3,77,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலான உயிரிழப்புகள், மோதலின் மறைமுக விளைவுகளான பசி, நோய் மற்றும் அடிப்படை சேவைகளுக்கான அணுகல் இல்லாமையால் ஏற்பட்டவை.

ஐநா தரவுகளின்படி, அந்நாட்டு மக்கள் தொகையில் சுமார் 80% பேர் உயிர் வாழ மனிதாபிமான உதவியையே நம்பியுள்ளனர். 40 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலையில் உள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

இராக், லிபியா, ஆப்கன் உள்பட அமெரிக்க ராணுவம் தலையிட்ட 5 நாடுகளில் என்ன நடந்தது?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.