Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீதியோரம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

                                                                வீதியோரம் 



                                                  ( சாம்பலில் பூத்த மலர்கள் )

arial-view-of-a-road-with-in-jungle-ranc



                                அந்தத் தார் வீதியில் மிக வேகமாய் வந்த ஜீப் வண்டி வீதியோரத்தில் இருந்த வாகன தரிப்பிட தார் பொட்டலில் அரை வட்டமடித்து நிக்கிறது. அதில் இருந்து ஒரு இளைஞனைத் தள்ளி விட்டுவிட்டு தொடர்ந்து ஒரு பெண்ணையும் இரண்டு பிள்ளைகளையும் சப்பாத்து காலால் உதைத்து தள்ளி விழுத்தி விட்டு நிக்காமல் வந்தவழியே செல்கின்றது.அப்போது அதிகாலை நான்கு மணி இருக்கும் கருக்கல்  கலைந்து  பறவைகளின் ஒலியோடு விடியல் தொடங்குகின்றது. அந்த இளைஞன் எழும்பத் திராணியின்றி வீதியில் கிடக்கிறான். பகல்பொழுதில் காய்ந்த தார் வீதியின் வெப்பம் அவனது வெற்றுடலுக்கு ஒத்தடம் கொடுப்பது போல் தேகத்தின் வலிகளைக் குறைக்கின்றது. அது அவனது உடம்புக்கு தேவையாய் இருப்பதால் அப்படியே கிடக்கிறான்.


                                                                         சற்று தூரத்தில் அந்தப் பெண்ணும் சுயநினைவின்றிக் கிடக்கிறாள். தோசைக்கல்லில் இருந்து வராமல் அடம்பிடிக்கும் தோசை தோசைக் கரண்டியால் நிறைய குத்து வாங்கி உருண்டு பிரண்டு வந்து சட்டியில் விழுந்ததுபோல் கிடக்கிறாள் . கால்கள்வழியே ஒழுகிய ரத்தம் ஆடைகளில் சிந்தி உறைந்துபோய் இருக்கு. சிறுவர்களின் நிலைமையும் கவலைக்கிடமாய் இருக்கு. இருந்தும் அவர்கள் பசிமயக்கத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நிக்கின்றனர் . அப்போது தூரத்தே ஒரு வண்டி வருவதை அதன் வெளிச்சம் தெரிவிக்கின்றது.அது மிக நெருங்கி  அவர்களின் அருகில் வந்து நிக்கின்றது. அது ஒரு பாரவூர்தி.அதிலிருந்து இறங்கிய சாரதியும் உதவியாளரும் கிட்ட வந்து இவர்களின் நிலமையைக் கண்டு நடந்திருக்கும் சம்பவத்தை ஒருவாறு ஊகித்துக் கொள்கிறார்கள்.பின் இருவரும் சேர்ந்து இவர்களைக் கரையோரமாய் தூக்கி வந்து பெரிய கல்லுகளின் அருகில் சாய்த்து இருத்திவிட்டு தண்ணீரால் முகத்தில் அடித்து முதலுதவிகள் செய்து அவர்களின் மயக்க நிலைமையைப் போக்கி விடுகின்றனர்.


                                          அண்ணை இப்ப எங்களைக் கடந்துபோன ஜீப்பில் இருந்தவங்கள்தான் இந்த அநியாயத்தை செய்திட்டுப் போறாங்கள் போலக் கிடக்கு என்று கிளீனர் ரமேஷ் சொல்கிறான்.அதை சாரதி அண்ணாத்துரையும் ஆமோதித்தபடி இரண்டு பிள்ளைகளுக்கும் தங்களிடம் இருந்த சாப்பாட்டில் பாதியை பகிர்ந்து குடுத்துவிட்டு மீதியை அவனுக்கும் அவளுக்கும் பிரித்துத் தருகிறார்.அவள் சிறிது தண்ணீரைக் குடித்து ஒருவாய் உணவை சாப்பிடுகிறாள். அவன் அதுவும் சாப்பிடவில்லை. இப்ப இருக்கும் நாட்டு நிலைமையில் யாரையும் மட்டுக்கட்ட முடியவில்லை. இயக்கங்களா , இராணுவமா என்று தெரியாது.

ஓமண்ணை அவர்கள் எல்லோரும் ஒரேமாதிரியான உடுப்புகள் போடுகினம் அப்படியே ஜீப்புகள், ட்ரக்குகளில் வருகினம்.

சரி விடு ரமேஷ் , விடியுது நேரத்துக்கு மார்கெட்டுக்கு போகாவிடில் மீன் நாறிடும்.இனி நிறைய வாகனங்கள் வந்து விடும் அவர்களும்கூட இவர்களுக்கு உதவிசெய்யலாம் என்று சொல்லி தம்மிடம் இருந்த சில உடுப்புகள் மற்றும் கையில் கொஞ்சம் பணம் எல்லாம் எடுத்து குடுத்துவிட்டு வரும்போது பார்க்கலாம் என்று சொல்லிப்  போகிறார்கள். விடியலின் பனிப்புகை மூட்டத்தில் தூரத்தே ஒரு பௌத்த விகாரையின் விமானமும் கோபுரமும் தெரிகின்றன.......!

மலர் .......1.🌻


  • கருத்துக்கள உறவுகள்

வெயிட்டிங் மலர் 2.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வீதியோரம்.

stupa-buddhist-temple-sri-lanka-260nw-26

மலர் ...........2.

அந்தப் பெண் கொஞ்சம் தெம்பு வந்து எழுந்து தன் நிலையைப் பார்க்கிறாள். நேற்று மாலை நடந்ததெல்லாம் மனதில் நிழலாடுகின்றது. கிழிந்த ஆடைகளோடு உடலெல்லாம் இரத்தம் வழிந்து உறைந்து இருக்கு. திரும்பி அந்த இளைஞனைப் பார்க்க அவனுக்கு நினைவுகள் வருவதும் போவதுமாய் புசத்திக் கொண்டு இருக்கிறான். அந்நேரம் ஏதோ ஸ்லோகங்கள் சொல்லியபடி  காவியுடை தரித்து  தலை மழித்த சாதுக்களும்  சிறுவர்களும் அவ்வழியே நடந்து வருகின்றனர். அவர்கள் இவர்களின் நிலையைக் கண்டு விசாரித்து விட்டு இவர்களுக்கு உடனடியாக சிகிச்சை தேவை என்பதை உணர்ந்து கொள்கின்றனர். அப்போது அவ்வழியே வந்த ஒரு வாகனத்தை மறித்து அவர்களை பன்சாலையில் சேர்க்கும்படி சொல்லி கொஞ்சம் பெரிய சிறுவர்களை அவர்களுடன் அனுப்பிவிட்டு தாங்களும் விகாரையை நோக்கி விரைந்து நடக்கின்றனர்.


                                                              பௌத்த விகாரையில் அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை பிக்குமாரும் ஓரிரு வயதான பிக்குணிகளுமாய் சிரத்தையுடன் செய்கிறார்கள்.அவர்களின் காயங்களைக் கழுவி நீராட்டி மூலிகை தைலங்களால் வலிகுறையும் பொருட்டு நன்றாகத் தேய்த்து அமைதியாகத் தூங்க வைத்து விடுகிறார்கள். அப்படி மாலை ஐந்து மணிவரை நன்றாக உறங்கியவர்கள் பின் ஒவ்வொருவராய் எழுந்து வெளியே வருகிறார்கள்.அவர்களை வராந்தாவில் இருந்த பிக்குமார் அங்கன வந்து அமரும்படி கூறுகிறார்கள். அப்போது அங்கு வந்த தலைமைப் பிட்சுவானவர் பொதுவாய் அவர்களின் நலன்களை விசாரித்துக் கொண்டே பெயர் விபரங்களையும் கேட்டுக் கொள்கிறார். அதில்  அந்த வாலிபனின் பெயர் விநோதன் என்றும், பெண்ணின் பெயர் மணிமேகலை என்றும், சிறுவன் யுகேந்திரன்,மற்றும் சிறுமி சுஜிதா என்றும் தெரிந்து கொள்கிறார்கள். அதிலும் அவர்கள் முன்பின் ஒருத்தரை ஒருத்தர் சந்தித்திருக்கவில்லை.நேற்று அந்த ஜீப்பில் கிடந்து வந்து வீதியில் விழுந்ததுவரை எதுவும் தெரியாது.


                                                 நால்வரும் வெவ்வேறு இடங்களில் இருந்து பிடித்து வரப்பட்டு வாரங்கள் மாதங்களாய் எங்கெங்கோ காம்புகளில் ஆளாளாய் கைமாறி சொல்லொனா  சித்திரவதைகள் அனுபவித்துக் கொண்டு வந்த நிலையில் ஏதோ அவங்களுக்கு ஏற்பட்ட தவிர்க்கமுடியாத காரணத்தால் எல்லோரையும் கொண்டுவந்து வீதியில் வீசி விட்டுப் போய் விட்டார்கள்.இவர்களின் கதையைக் கேட்ட பிக்கு பிக்குணிகள் எல்லோரும் மிகவும் பச்சாதாபப்பட்டு வார்த்தைகளால் இவர்களை ஆறுதல் படுத்துகிறார்கள்.சிலநாளில் அவர்கள் அந்த வளாகங்களில் நடக்கவும் மடத்துக்கு தேவையான சில சில வேலைகள் செய்யவும் தயாராகி விடடார்கள்.

 

                                                                      சில வாரங்களின்பின் சாதுக்களின் முறையான சிகிச்சையாலும் கவனிப்பாலும் உடல் தேறி நன்றாகக் குணமடைந்து விட்டனர். அன்று நல்ல பௌர்ணமி நாள். காலை நேரம் தலைமைப் பிக்குவானவரும் மற்றும் சிலரும் அவர்களைக் கூட்டிக் கொண்டு நடந்து வந்து அன்று  எந்த வீதியோரத்தில் அவர்கள் விழுந்து கிடந்தார்களோ அங்கே வந்து சேர்ந்தார்கள். அங்கு கிடுகுகளால் ஒரு நீண்ட கொட்டில் போடப்பட்டு தரையில் பலதரப்பட்ட காய்கறிகள்,பழவகைகள், வாழைக்குலைகள் எல்லாம் ஓலைப் பெட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. பின்னால் ஒரு மூலையில் களிமண்ணால் பிடித்த அடுப்பும்,சில சமையல் பாத்திரங்களும், ரெண்டு வாளிகளும் இருக்கின்றன. அடுத்த மூலையில் சில பாய்கள், தலையணைகள், போர்வைகளுடன் அவரவர்களுக்கேற்ற ஆடைகள் துவாய்கள் என்று எல்லாம் இருக்கின்றன. 

                                             பிக்குவானவர் அவர்களிடம் இப்போதைக்கு நாங்கள் உங்களுக்கு வாழ்வாதாரத்துக்கு தேவையான சில பொருட்கள் தந்திருக்கின்றோம். பின்னாலே ஒரு பெரிய குளமும் இருக்கின்றது. அங்கு முதலைகளும் கபரகொய்யாக்களும் பெரிய பெரிய மீன்கள் பாம்புகள்  இருப்பதால் பிள்ளைகளுடன் நீங்களும் கவனமாக இருக்க வேண்டும். தண்ணீர் எடுக்கும் போதும், இரவுகளில் அவ்வழியே செல்வதையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இங்கு யானைகளும் வந்து போகும். முக்கியமாய் பிள்ளைகள் கவனம். ஒருநாளும் தனியே விடவேண்டாம். நரி, ஓநாய்,பாம்புகள் போன்றவையும் நிறைய இருக்கின்றன. இந்த பொருட்கள் யாவும் உங்களுக்காக நாங்கள் மக்களிடம் யாசகம் பெற்றுக் கொண்டு வந்தவையே. நீங்கள் விகாரையில் தங்கியிருந்த நாட்களில் உங்களுக்குத் தெரிந்திருக்கும் நாங்களும் எங்களுக்குத் தேவையான அளவு மட்டுமான சொற்ப சாமான்களே  வைத்திருக்கிறோம். நாளைக்கு என்று எதையும் நாங்கள் சேர்த்து சேமித்தோ  வைத்திருப்பதில்லை.நாம் அணியும் ஆடைகள் கூட சனங்களிடம் யாசகமாய் பெற்று ஊசி நூல் கொண்டு கைகளால் தைத்து அணிகிறோம்.கூடியவரை பகவான் புத்தமுனி போதித்த நெறிகளில் இருந்து சிறிதும் வழுவாமல் வாழ்ந்து வருகின்றோம்.இனி நீங்கள் இவைகளைக் கொண்டு வீண் ஆடம்பரங்களை நாடாமல் உங்களின் தேவைகளை சுருக்கி வாழ்ந்து வரவும்.


                                           பிள்ளைகளைப் பார்த்து  நீங்கள் இருவரும் தினமும் காலையில் சிலமணி நேரம் பன்சாலைக்கு வந்து பாடங்கள், பாஷைகள், உடற்பயிற்சிகள், கலைகள், கைவினை வேலைகள் என்று  கற்றுக் கொள்ள வேண்டும். இவற்றுக்காக அங்கு பாடசாலையும் ஆசிரியர்களும்  இருக்கிறார்கள்.பின் மாலையில் நீங்கள் இங்கு வந்து இவர்களுக்கு உதவியாய் இருக்கலாம் என்று சொல்ல அவர்களும் அவர் பாதத்தில் விழுந்து வணங்கி அப்படியே செய்கிறோம் சாமி என்கிறார்கள். பின் சாதுக்களும் அவர்களை ஆசீர்வதித்து விட்டு தம் வழியே செல்கின்றார்கள்.....!

மலர் . ........ 2. 🌼🌼

2022-01-31_03-41-515404007656390331444.j


  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

santa-rita-ma-brazil-august-260nw-250322

மலர் ......... 3.

                                                        விநோதன், மணிமேகலை  சிறுவர்கள் சுஜிதா மற்றும் யுகேந்திரன் எல்லோரும் கொஞ்சம் கொஞ்சமாக தத்தமது துன்பங்களை மறந்து சாதுக்கள் அமைத்துக் கொடுத்த கடை சாமான்களை விற்று வாழ ஆரம்பிக்கின்றனர்…….. அவ்வழியே செல்லும் வாகனங்கள் அங்கே தரித்து நின்று செல்ல ஆரம்பிக்கின்றன . அப்போது அங்கு அண்ணாதுரையின் லொறி வந்து கடையின் முன்னால் நிற்கின்றது.  அண்ணாதுரையை கண்டதும் எல்லோருக்கும் மகிழ்ச்சி. பிள்ளைகள் ஓடிச்சென்று அவரைக் கட்டிப் பிடித்துக் கொள்ள விநோதனும் மணிமேகலையும் அவருக்கும் ரமேஷ்சுக்கும் முகமன் கூறி கடைக்குள் அழைத்து செல்கின்றனர்…… அவரும் அங்கிருந்த வாங்கில் அமர்ந்து அவர்களது சுகதுக்கங்களை விசாரித்து அறிந்து கொள்கின்றார்…… அப்போது அங்கு பல வாகனங்களும் வந்து நின்று கடையில் பலவிதமான பழங்கள் மரக்கறி வகைகளை வாங்கி செல்கின்றனர். அவை எல்லாவற்றையும் கவனித்த அண்ணாத்துரையும் அவர்களிடம் இங்கு நிறைய வாகனங்கள் வந்து தரித்து நின்று செல்வதால், நீங்கள் ஏன் தேநீர் வியாபாரம் செய்யக்கூடாது என்று சொல்கிறார்…..!


                                              அதுக்கு மணிமேகலையும் எங்கை அண்ணை இப்ப இந்தப் பிள்ளைகளும் வினோத்தும் ஊருக்குள் நடந்து போய்த்தான் பழங்கள், மரக்கறிகள் என்று வாங்கி கைகளிலும் தோளிலும் சுமந்து வருகின்றார்கள் என்று சொல்கிறாள். அவரும் சரி நீங்கள் ஒன்றுக்கும் யோசிக்காதையுங்கோ, நாங்கள் இந்த வழியால் போகும் போதும் வரும் போதும் உங்களுக்குத் தேவையான சாமான்களை வாங்கி வந்து தருகிறோம். இப்போதைக்கு நீங்கள் காசு ஒன்றும் தரவேண்டாம். இந்தப்  பிக்குகள் மிகவும் நல்லவர்கள் போல் இருக்கிறார்கள். கையில் இருக்கிறதையும் பிடுங்கி தூசண வார்த்தைகள் பேசி அடாவடி செய்யும் காவி உடையில் இருக்கும் போலிப் பிக்குகளையும் நான் பத்திரிகைகளிலும் செய்திகளிலும்  பார்த்திருக்கிறேன். ஆனால் இவர்கள் போன்ற தூய்மையான சாதுக்களால்தான் இந்த நாட்டில் கொஞ்சமாவது காருண்யமும் அன்பும் நிலைத்திருக்கின்றது என்று சொல்லி அவரும் ரமேசும் சிற்சில பழங்களை வாங்கிக் கொண்டு அவர்களின் மறுப்பையும் பொருட்படுத்தாது அதிகமாகவே பணத்தைக் கொடுத்து விட்டு செல்கின்றனர். 


                                          நாளடைவில் அவர்கள் கடையையும் பெருப்பித்து தேநீர், பலகாரங்கள், சாப்பாடு என்று விற்கத் தொடங்கி விட்டனர். அதற்கான பாய்லர்,பாத்திரங்களை அண்ணாத்துரையே கொண்டுவந்து குடுத்ததுடன் தன்னிடமிருந்த பெரிய கேரியர் கொண்ட சைக்கிளையும் வினோதனிடம் குடுத்திருந்தார். அது ஊருக்குள்ளும் பக்கத்து நகரங்களுக்குள்ளும் சென்று சாமான்கள் வாங்கிவர ரொம்ப உதவியாய் இருக்குது. கடை வேலை முடிந்ததும் அவர்கள் பின்னால் உள்ள குளத்தை அண்மித்த இடத்தில் வருபவர்கள் இயற்கை உபாதையை கழிக்கக் கூடியதாக கழிவறையும் கட்டி விட்டு அதற்கு அப்பாலும் காடழித்து  தமக்காக ஒரு சிறிய வீடும் கட்டி பயிர்செய்கைக்கு ஏற்றவாறு காணியும் வைத்திருந்தனர். 


                                               இரவில் மணிமேகலையும் சுஜிதாவும் வீட்டில் தங்கிக் கொள்வார்கள். வியாபாரத்தை விநோதனும் யுகேந்திரனும் பார்த்துக் கொள்வார்கள். கால ஒட்டத்தில் சுஜிதாவும் பெரியவளாக வளர்ந்து நிக்கிறாள்.யுகேந்திரனுக்கும் பூனை மீசை அரும்பியிருக்கு. சாதுக்களும் அவ்வழியே வரும்போது இவர்களின் வளர்ச்சியைப் பார்த்து மனநிறைவுடன் இவர்களிடமும் பிக்ஷை ஏற்று ஆசி வழங்கிச் செல்கின்றனர். யுகேந்திரனும் சுஜிதாவும் இப்பவும் தொடர்ந்து விகாரைக்கு சென்று கழுவுதல், துடைத்தல் போன்ற உதவிகளை செய்வதுடன் அங்குள்ள பாடசாலையில்  பெரிய வகுப்பில் படிக்கின்றனர் கூடவே பிக்குகளுடன் சேர்ந்து தியானப்பயிற்சி, யோகா, சிலம்பம் போன்ற பல கலைகள் கற்பதும் சிறுவர்களுக்கு கற்பிப்பதுமாக இருக்கின்றனர். 


                                                     இவர்களது கடையும் விளம்பரம் இல்லாமலே “வீதியோரக்கடை” என்று பிரபலமாகி இருந்தது. அதற்கு மணிமேகலையின் கைப்பக்குவத்தில் செய்யப்படும் சுவையான சுத்தமான உணவு வகைகளும் மலிவான விலைகளுமே காரணம். வருபவர்கள் தாங்களும் சாப்பிட்டுவிட்டு பார்சலும் கட்டிக்கொண்டு போகிறார்கள். முன்பு ஐந்தாறு லாந்தர் விளக்குகள் இருந்த இடத்தில் இப்பொழுது சில பெற்றோல்மாக்ஸ் விளக்குகள் வெளிச்சம் தருகின்றன.

அடர்ந்த காட்டின் நடுவே வீதியோரத்தில் இப்படியொரு பிரபலமான கடை இருந்தால் கூடவே சில தவறான வியாபாரங்களும் அங்கு உருவாகி விடுவது இயல்புதானே. முதலில் சில சாரதிகளும் கிளீனர்களும் சாராயம் போன்ற குடிவகைகளை தெரிந்தும் தெரியாமலும் கடைக்கு அருகில் வைத்து குடிக்க ஆரம்பித்தனர். பின் சில நாளில் கஞ்சா போன்ற போதைவஸ்துகள் சிலரால் சில்லறை வியாபாரமாகவும் புழக்கத்துக்கு வந்தன. அவர்களின் தேவைக்காக இவர்களும் உறைப்பான மாமிச கறிவகைகள், முட்டை பரோட்டாக்கள், கொத்து ரொட்டி போன்றவையும் தயாரித்து விற்பனை செய்ய ஆரம்பித்தனர். தொடர்ந்து எங்கோ தூரத்தில் இரவுகளில் தொழில் செய்யும் சில பெண்கள் இப்பொழுது கடைக்கு அண்மையில் தமது வாடிக்கையாளர்களுடன் காட்டுக்குள் செல்வதும் வருவதுமாய் தொழில் செய்து வருகின்றனர். தாங்கள் தங்குவதற்கு முன்பு யாரோ பழுதாகி விட்டுப் போன ஒரு லொறியை பாவிக்கின்றார்கள். சாராயம் மற்றும் போதைவஸ்துகள் விற்பவன் லொறியின் முன்பக்கத்தில் தனது சாமான்களுடன் தங்கிக் கொள்கிறான். அவர்களும் கடை வாடிக்கையாளர்களாய் இருப்பதாலும் அதனாலும் கடைக்கு வருமானம் பெருகி வருவதாலும் எல்லாமே ஒரு தொடர் சங்கிலியாய் மாறிவிட்டிருந்தன. ஒரு கட்டத்தில் இவர்களால் கூட இங்கு நடக்கும் தப்புகளைக் கட்டுப்படுத்த முடியாமல் போய் விட்டது......!

vibrant-local-bus-covered-graphic-street

மலர் ..............🌸 🌸 🌸


Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.