Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்க ராணுவ தளங்கள் மீதான இரான் தாக்குதலால் ஏற்பட்ட சேதம் எவ்வளவு?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க ராணுவ தளங்கள் மீதான இரான் தாக்குதலால் ஏற்பட்ட சேதம் எவ்வளவு?

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், மத்திய கிழக்கு, வளைகுடா நாடுகள்

பட மூலாதாரம்,Planet labs PBC and Airbus

படக்குறிப்பு,அல் சாதர் மற்றும் அல் ருவைஸ் (ஐக்கிய அரபு அமீரகம்) ஆகிய இடங்களில் உள்ள ரேடார் தளங்களுக்கு ஏற்பட்ட சேதம்

கட்டுரை தகவல்

  • டேனியல் புஷ், வாஷிங்டன் செய்தியாளர் மற்றும் பால் பிரௌன் & அலெக்ஸ் முர்ரே, பிபிசி வெரிஃபை

  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா பயன்படுத்தும் ராணுவ தளங்கள் மீது நடத்தப்பட்ட இரானிய தாக்குதல்களால், போரின் முதல் இரண்டு வாரங்களில் 800 மில்லியன் டாலர் மதிப்புக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டதாக புதிய பகுப்பாய்வு கூறுகிறது.

இதில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போரை தொடங்கிய ஒரு வாரத்திற்கு பிறகு இரான் நடத்திய ஆரம்பகட்ட பதிலடி தாக்குதல்களில் பெரும் சேதம் ஏற்படுத்தப்பட்டதாக, வியூகம் மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையத்தின் (CSIS) ஆய்வறிக்கை மற்றும் பிபிசி மேற்கொண்ட பகுப்பாய்வின்படி தெரியவந்துள்ளது.

அப்பிராந்தியத்தில் அமெரிக்க சொத்துகள் மீது நடத்தப்பட்ட இரானிய தாக்குதல்களால் ஏற்படுத்தப்பட்ட முழு சேதத்தின் அளவு இன்னும் தெளிவாக தெரியவில்லை.

ஆனால் அமெரிக்க ராணுவ உள்கட்டமைப்பின்மீது 800 மில்லியன் டாலர் அளவுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது, முன்பு வெளியான தகவலைவிட அதிகமாக உள்ளது, இது இந்த மோதல் நீடிக்கும் நிலையில் அமெரிக்காவுக்கு அதிக செலவு ஏற்பட்டுள்ளதை காட்டுகிறது.

"அப்பிராந்தியத்தில் அமெரிக்க தளங்களுக்கு ஏற்பட்டுள்ள சேதம் அவ்வளவாக பதிவு செய்யப்படவில்லை," என சிஎஸ்ஐஎஸ்-ன் மூத்த ஆலோசகரும் அந்த ஆய்வறிக்கையின் இணையாசிரியருமான மார்க் கேன்சியன் கூறுகிறார். "இது அதிகமானதாக தோன்றினாலும், மேலதிக தகவல்கள் கிடைக்கும் வரை முழு தொகை குறித்து தெரியவராது."

இதுகுறித்த கருத்தை பெற பிபிசி அமெரிக்க பாதுகாப்பு துறையை தொடர்புகொண்டது. அத்துறை இந்த போரை வழிநடத்தும் அமெரிக்க மத்திய கட்டளை பிரிவிடம் கேட்குமாறு கூறியது. ஆனால், அங்குள்ள அதிகாரிகள் இதுகுறித்து கருத்து கூற மறுத்துவிட்டனர்.

ஜோர்டான், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள மற்ற நாடுகள் முழுவதிலும் உள்ள அமெரிக்காவின் வான் பாதுகாப்பு மற்றும் செயற்கைக்கோள் - தொடர்பு அமைப்புகள் உள்ளிட்ட மற்ற சொத்துகள் மீது இரான் குறிவைத்து பதிலடி தாக்குதலை நடத்திவருகிறது.

ஜோர்டானில் உள்ள வான் பாதுகாப்பு தளத்தின் தாட் (Thaad) ஏவுகணை பாதுகாப்பு அமைப்புக்கான அமெரிக்க ரேடார் மீது குறிப்பிடத்தக்க அளவில் சேதம் ஏற்படுத்தப்பட்டது.

அமெரிக்க பாதுகாப்பு துறையின் பட்ஜெட் ஆவணங்களை சிஎஸ்ஐஎஸ் மதிப்பாய்வு செய்ததன்படி, இந்த ரேடார் அமைப்பு சுமார் 485 மில்லியன் டாலர் மதிப்புடையது. நீண்ட தொலைவு பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறிப்பதற்கு இத்தகைய வான் பாதுகாப்பு அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன.

அப்பிராந்தியத்தில் அமெரிக்க படைகளால் பயன்படுத்தப்படும் அமெரிக்க தளங்கள் மற்றும் ராணுவ தளங்களின் கட்டடங்கள், வசதிகள் மற்றும் மற்ற உள்கட்டமைப்புகள் மீது இரான் நடத்திய தாக்குதல்களால் மேலும் கூடுதலாக 310 மில்லியன் டாலர் அளவுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

பிபிசி வெரிஃபையால் ஆய்வு செய்யப்பட்ட செயற்கைக்கோள் படங்களின்படி, குறைந்தது மூன்று வான் பாதுகாப்பு தளங்களை ஒன்றுக்கும் மேற்பட்ட முறை இரான் தாக்கியுள்ளது. குறிப்பிட்ட அமெரிக்க சொத்துகளை குறிவைக்கும் இரானின் முயற்சிகளை இந்த தொடர்ச்சியான தாக்குதல்கள் சுட்டிக்காட்டுகின்றன. அப்பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் குறித்து டெஹ்ரானுக்கு ரஷ்யா உளவுத்தகவலை வழங்கியதாக கூறப்படுகிறது.

குவைத்தில் உள்ள அலி அல்-சலீம், கத்தாரில் உள்ள அல்-உதெய்த் மற்றும் சௌதி அரேபியாவில் உள்ள பிரின்ஸ் சுல்தான் ஆகிய மூன்று வான் பாதுகாப்பு தளங்கள் மீது இந்த மோதலின் வெவ்வேறு கட்டங்களில் புதிய சேதங்கள் ஏற்படுத்தப்பட்டதை செயற்கைக்கோள் படங்கள் காட்டுகின்றன.

பிப்ரவரி 28 அன்று இரான் மீது தாக்குதல்களை தொடங்குவதில் இஸ்ரேலுடன் அதிபர் டொனால் டிரம்ப் இணைந்ததிலிருந்து, அமெரிக்கா ராணுவ சேவை உறுப்பினர்கள் 13 பேரையும் இழந்துள்ளது.

அமெரிக்காவை தளமாக கொண்டு செயல்பட்டுவரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் செய்தி முகமை (Hrana) ஒட்டுமொத்தமாக கிட்டத்தட்ட 1,400 குடிமக்கள் உட்பட 3,200 பேர் உயிரிழந்துள்ளதாக மதிப்பிட்டுள்ளது.

இரானின் அணுசக்தி திட்டத்தை அழித்தல், அதன் ராணுவ வலிமையை சிதைத்தல் மற்றும் பிராந்தியத்தில் இரான் ஆட்சிக்கு ஆதரவாக உள்ள குழுக்களை முடிவுக்குக் கொண்டு வருதல் எனும் தன்னுடைய இலக்குகளை அடைவதில் அமெரிக்கா தொடர்ந்து பயணிக்கிறது என டிரம்ப் தெரிவித்தார்.

"நாங்கள் இரானில் மிகவும் சிறப்பாக செயல்பட்டுவருகிறோம்," என வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டிரம்ப் தெரிவித்தார்.

ஆனால், கிட்டத்தட்ட மூடப்பட்ட ஹோர்மூஸ் நீரிணை, மோதல் எவ்வளவு காலம் நீடிக்கும் மற்றும் மோதலுக்காக டிரம்ப் துருப்புகளை தரையில் களமிறக்குவாரா என்பதில் நிலவும் நிச்சயமற்ற தன்மையால் உலக பொருளாதாரம் மீது தாக்கம் ஏற்பட்டது.

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், மத்திய கிழக்கு, வளைகுடா நாடுகள்

பட மூலாதாரம்,Source: Planet Labs PBC, 2026

படக்குறிப்பு,தாக்குதலுக்கு முன்பு

இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், மத்திய கிழக்கு, வளைகுடா நாடுகள்

பட மூலாதாரம்,Source: Planet Labs PBC, 2026

படக்குறிப்பு,தாக்குதலுக்கு பின்

அமெரிக்காவைச் சேர்ந்த முக்கிய சேவை வழங்குநர்கள் செயற்கைக்கோள் படங்களை வெளியிடுவதற்கு விதித்துள்ள கட்டுப்பாடுகளால், அப்படங்களின் பகுப்பாய்வு தடைபட்டுள்ளது.

ஆனால், அப்பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவ நலன்களுக்கு எதிரான இரானின் பதிலடி நடவடிக்கைகளில் சில குறிப்பிட்ட போக்குகளைக் கண்டறிய இயலும்.

பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை தளம் மீது இரான் தாக்குதல் நடத்தியதிலிருந்தே, ரேடார் மற்றும் செயற்கைக்கோள் அமைப்புகள் மீது கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. நவீன ராணுவ நடவடிக்கைகளின் மிகவும் முக்கிய மையமாக அவை திகழ்கின்றன.

குறிப்பாக, செயற்கைக்கோள் படங்கள் இரு ரேடார் குவிமாடங்கள் மீது ஏற்படுத்தப்பட்ட சேதங்களை காட்டின - அவை மிகவும் முக்கியமான உபகரணங்களை பாதுகாப்பதற்கான அமைப்புகளாக உள்ளன. சேதத்தின் அளவைக் கணிக்க இயலாவிட்டாலும், அந்த அமைப்புகளே சேதமடைந்திருக்க அதிக வாய்ப்புள்ளது.

குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளமான அரிஃப்ஜான் முகாம் மற்றும் சௌதி அரேபியாவில் அமெரிக்க விமானங்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ள பிரின்ஸ் சுல்தான் வான் பாதுகாப்பு தளத்தில் உள்ள ரேடார் தளங்கள் தாக்கப்பட்டன. பிரின்ஸ் சுல்தான் வான் பாதுகாப்பு தளம் குறித்த படங்கள், தாட் வான் பாதுகாப்பு அமைப்பின் ரேடார் பாகம் ஒன்றிலிருந்து புகை எழுவதைக் காட்டுகின்றன.

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஜோர்டானில் உள்ள அமெரிக்கத் தளங்களில், தாட் அமைப்புகளுக்கு மேலும் அதிகமான சேதம் ஏற்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. அந்த சேதத்தின் மதிப்பு குறித்து தெளிவாக தெரியவில்லை. இந்த சேதங்களால், தாட் அமைப்புகளை தென் கொரியாவிலிருந்து மத்திய கிழக்குக்கு அமெரிக்கா இடமாற்றம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இரானின் பதிலடித் தாக்குதல்களால் ஏற்பட்ட சேதங்கள், போருக்காக அமெரிக்காவுக்கு ஏற்பட்ட மொத்தச் செலவுகளில் ஒரு சிறு பகுதியாகும்.

போரின் முதல் ஆறு நாட்களுக்கு 11.3 பில்லியன் டாலர் செலவானதாக பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளித்ததாகக் கூறப்படுகிறது. சிஎஸ்ஐஎஸ் (CSIS) தகவலின்படி, முதல் 12 நாட்களுக்கு 16.5 பில்லியன் டாலர் செலவானது.

போருக்கு நிதியளிக்க மேலும் 200 பில்லியன் டாலரை அமெரிக்க பாதுகாப்பு துறை கோரியுள்ளது. பாதுகாப்பு துறை செயலாளர் பீட் ஹெக்சேத் அத்தொகை "மாறக்கூடும்" என தெரிவித்தார்.

"கெட்டவர்களை கொல்வதற்கு பணம் தேவைப்படுகிறது," என ஹெக்சேத் கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cvg45g7jqlro

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.