Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எட்டாத பழத்தின் புளிப்பு?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எட்டாத பழத்தின் புளிப்பு?

[22 - December - 2007] [Font Size - A - A - A]

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையை அடிப்படையாகக் கொண்ட தற்போதைய அரசியலமைப்பில் மாற்றங்களைச் செய்ய வேண்டுமென்ற யோசனை எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இப்போது பிறந்திருக்கிறது. நல்லாட்சிக்கான அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் அண்மையில் யோசனைகளை முன்வைத்திருக்கும் அவர் இன்னும் இரு வார காலத்தில் சகல அரசியல் கட்சிகளுடனும் சிவில் சமூகக் குழுக்களுடனும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவிருப்பதாக அறிவித்திருக்கிறார். நேற்று முன்தினம் வியாழக்கிழமை கொழும்பில் தனது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் மதத் தலைவர்களையும் தொழில்சார் நிபுணர்களையும் சந்தித்துப் பேசிய விக்கிரமசிங்க தனது ஐக்கிய தேசியக் கட்சியினால் முன்வைக்கப்பட்டிருக்கும் யோசனைகளுக்கு எவரும் திருத்தங்களை முன்மொழிவதை வரவேற்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்து பாராளுமன்ற முறையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டவையாகவே எதிர்க் கட்சித் தலைவரின் யோசனைகள் அமைந்திருக்கின்றன. தற்போதைய அரசியலமைப்பை முழுமையாக மாற்ற வேண்டிய தேவை என்பது விக்கிரமசிங்கவின் நிலைப்பாடாக இருக்கிறது. மக்களினால் நேரடியாக ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவதற்கான ஏற்பாடு உட்பட பல்வேறு நல்ல அம்சங்களை அரசியலமைப்பு கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டிருக்கும் அவர் தேசிய தோற்றப்பாட்டுடனான பாராளுமன்றமொன்றை அமைப்பதே தனது யோசனைகளின் அடிப்படை நோக்கம் என்று மதத் தலைவர்களுக்கும் புத்திஜீவிகளுக்கும் விளக்கமளித்திருக்கிறார். `முக்கியமான தீர்மானங்களை மேற்கொள்ளும்போது தற்போதைய அரசாங்கம் பாராளுமன்றத்தை மீறிச் செயற்படுகிறது. ஜனாதிபதி தனது மனம்போன போக்கில் ஒருதலைப்பட்சமான தீர்மானங்களை எடுத்து அமைச்சர்களையும் ஆலோசகர்களையும் நியமிக்கிறார். அரசாங்க நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்றக் குழுவையும் பொதுக் கணக்கு குழுவையும் முடக்குவதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்வதாக பேசப்படுகிறது. எனது புதிய யோசனைகள் அறிமுகப்படுத்தப்படுமானால் அத்தகைய தவறான நோக்குடனான முயற்சிகளைத் தடுக்கக்கூடியதாக இருக்கும்' என்று விக்கிரமசிங்க தெரிவித்திருக்கிறார். கடந்த வாரம் பாராளுமன்றத்தில் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) உறுப்பினர்கள் மத்தியில் தனது யோசனைகளின் பிரதிகளை விநியோகித்த அவர் அபிப்பிராயங்களைத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்பதற்கும் பாராளுமன்றத்தின் அதிகாரங்களை வலுப்படுத்துவதற்கும் யோசனைகள் முன்வைக்கப்படுவதென்பது இலங்கையில் ஒன்றும் புதுமையான விடயம் அல்ல. சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் தற்போதைய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தி நாட்டின் முதல் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகப் பதவியேற்றவர் காலஞ்சென்ற ஜே.ஆர்.ஜெயவர்தன. அவரின் காலத்தில் அந்த அரசியலமைப்பை முற்றுமுழுதாக நியாயப்படுத்திய முன்னாள் அமைச்சர்களான லலித் அத்துலத் முதலி, காமினி திசாநாயகா போன்றவர்கள் தான் பின்னர் ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதியாகியதையடுத்து அவருடன் முரண்பட்டுக் கொண்டு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்க வேண்டுமென்று குரலெழுப்பினர். அப்போது விக்கிரமசிங்க பிரேமதாசவின் பக்கத்திலேயே நின்றார். பிரேமதாசவின் மறைவுக்குப் பிறகு மீண்டும் ஐ.தே.க.விற்குள் புகுந்து தலைமைப் பீடத்தைக் கைப்பற்றிக் கொண்ட காமினி திசாநாயகா ஜனாதிபதி ஆட்சி முறை ஒழிப்புக் கோஷத்தையெல்லாம் கைவிட்டு ஜனாதிபதித் தேர்தலிலும் போட்டியிட முன்வந்தார். தேர்தல் பிரசாரங்களின்போதே தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒருவருட காலத்தில் ஒழிப்பதாக நாட்டு மக்களுக்கு வாக்குறுதியளித்து 1994 ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற திருமதி குமாரதுங்க அந்தப் பதவியில் 11 வருடங்கள் இருந்து நிறைவேற்று அதிகாரத்தை ருசித்தார். மேலும், ஒரு வருட காலத்துக்கு தன்னால் அந்தப் பதவியில் இருக்க முடியவில்லையே என்ற மனக் கவலையுடனும் புழுக்கத்துடனும்தான் திருமதி குமாரதுங்க அதிகாரத்திலிருந்து இறங்கினார் என்பதை மக்கள் மறந்திருக்கமாட்டார்கள். 1999 இல் திருமதி குமாரதுங்கவை எதிர்த்து ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட விக்கிரமசிங்க அன்று ஜனாதிபதிக்கு இருக்கின்ற நிறைவேற்று அதிகாரங்களில் குறைப்புச் செய்ய வேண்டுமென்றோ பாராளுமன்ற முறையை வலுப்படுத்த வேண்டுமென்றோ பேசியதில்லை. ஜனாதிபதிப் பதவியை அடைய வேண்டுமென்பதை தனது குறிக்கோளாகக் கொண்டிருந்த விக்கிரமசிங்கவை அப்பதவியின் அதிகாரங்களில் குறைப்புச் செய்ய வேண்டுமென்று இற்றைவரை குரல் கொடுக்காத ஒருவராக வர்ணிக்க முடியும்.

இரண்டாவது தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை எதிர்த்து இருவருடங்களுக்கு முன்னர் போட்டியிட்ட வேளையிலும் தற்போதைய அரசியலமைப்பில் அடிப்படை மாற்றங்களைச் செய்ய வேண்டுமென்று விக்கிரமசிங்க பேசியதில்லை. ஜனாதிபதி ராஜபக்ஷ தேர்தலுக்கு முன்னதாக ஜே.வி.பி.யுடன் செய்து கொண்ட புரிந்துணர்வு உடன்படிக்கையில் அவரது முதல் 6 வருட பதவிக்காலத்தின் முடிவில் நிறைவேற்று ஜனாதிபதியை ஒழிப்பதற்கு இணங்கிக் கொண்டார் என்பதை மக்கள் நினைவில் வைத்திருக்கிறார்களோ தெரியவில்லை. ஜனாதிபதிப் பதவிக் குரிய அதிகாரங்களை முழுமையாக தன் எண்ணப்படி பயன்படுத்துகின்ற ராஜபக்ஷ கூட 6 மாதங்களுக்கு முன்னர் பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் ஜே.ஆர். ஜெயவர்தனவின் உருவப் படத்தை திரை நீக்கம் செய்த வைபவத்தில் உரையாற்றிய போது நாட்டின் சமகாலத் தேவைகளுக்கு இசைவாக ஜனாதிபதி ஆட்சி முறையிலும் மாறுதல்களைச் செய்ய வேண்டுமென்று கூறியிருந்தார். எந்தளவுக்கு இதயசுத்தியுடன் அவர் அதைச் சொன்னார் என்பது யாருக்கும் தெரியாது.

நிறைவேற்று அதிகாரம் பாராளுமன்றத்துக்கு வெளியே இருக்கும் ஒருவரிடம் முற்று முழுதாகச் சென்றதன் பின்னர் பாராளுமன்றம் இயல்பாகவே மதிப்பிறக்கம் செய்யப்பட்டு விட்டது. அதற்குப் பிறகு ஆட்சி முறையில் எதேச்சாதிகாரமே தொடர்ச்சியாக வளர்ச்சி கண்டு வந்திருக்கிறது. அந்த நாகரிகமற்ற வளர்ச்சிக்கு ஒவ்வொரு ஜனாதிபதியுமே தங்களது பாணியில் பங்களிப்பைச் செய்து வந்திருக்கிறார்கள். இந்த ஜனாதிபதிகள் தங்களுக்கு முன்னர் அதிகாரத்தில் இருந்தவர்களை விடவும் கூடுதலான அளவுக்கு அதிகாரங்களைப் பயன்படுத்தி ஆட்சிமுறையில் குழப்பகரமான நிலையைத் தோற்றுவித்து அராஜகப் போக்கிற்கு வழிவகுத்து வந்திருக்கிறார்கள். எதேச்சாதிகாரத்தின் தொடர்ச்சியான வளர்ச்சியின் விளை பயன்களை நாமெல்லோரும் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

பாராளுமன்றத்துக்கு மீண்டும் அதிகாரங்களை வழங்க வேண்டும் என்று தென்னிலங்கை அரசியல்வாதிகள் பலர் கூச்சலிட்டு வந்திருக்கிறார்களே தவிர அதற்காக மானசீகமாக, உருப்படியான போராட்டமெதையும் செய்யத் தயாராயிருந்ததில்லை. இத்தகையதொரு பின்புலத்திலேயே விக்கிரமசிங்கவினால் தற்போது முன்வைக்கப்பட்டிருக்கும் அரசியலமைப்பு மாற்றத்துக்கான யோசனைகளை நோக்கவேண்டியிருக்கிறது. ஜனாதிபதிப் பதவிகுறித்து இதுகாலவரை விக்கிரமசிங்க கொண்டிருந்த நிலைப்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு பார்க்கின்றபோது ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்கள் மீது அவருக்கு இப்போது வந்திருக்கும் வெறுப்பு எட்டாத பழத்தின் புளிப்போ ?

http://www.thinakkural.com/news/2007/12/22...l_page42789.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.